- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
26
“இன்னைக்கு இவன் உயிரோட இருக்கிறான்னா அதுக்கு என் மகனோட உயிரிழப்பும் ஒரு காரணம்.” மகன் என்றதுமே கண்கள் கலங்கியது அவருக்கு. மற்றவர்களின் ஆச்சர்ய விழிப்பில் தன் கலக்கத்தை மறைத்து, “புரியலல்ல? புரியுற மாதிரியே சொல்றேன். அந்தச் சம்பவம் நடந்தப்ப நான் அங்கதான் இருந்தேன். ஆனா எதையும் கவனிச்சிப் பார்க்கிற நிலையிலில்லை.”
“இளங்கதிர்! என் மகன்! பத்து வருடங்கழித்து எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம். சந்தோஷத்தோட உச்சியிலிருந்த நேரம். அத்தனை வருஷத்து ஏக்கங்களையும் தீர்த்து வச்சவன். அவன் மட்டுமே எங்க வாரிசுன்னும் ஆனப்ப அவனோட தாத்தா பாட்டியில ஆரம்பிச்சி எல்லாருக்கும் செல்லம். அதுவே சிலநேரம் பிடிவாதம் பிடிக்க வச்சிருச்சி. முன்கோபமும் பிடிவாதமும் இருந்தாலும் தப்பான வழிக்குப் போகமாட்டான். அம்மான்னா அவனுக்கு உயிர். ஃப்ரண்ட்லி கேரக்டர் கூட. என் மகன் வந்த பிறகு, பைக் ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனியை அப்பாவுடைய சில இடங்கள் வித்து பெருசாக்கினேன்.”
“கதிர் ரொம்ப ஜாலி டைப். அப்பப்ப சின்னதா பிரச்சனைகளை இழுத்துட்டு வருவான். அவனுக்கு சாதகமா தீர்ப்பை எதிர்பார்த்தாலும், எல்லாரும் போனதும் தப்பைச் சுட்டிக்காட்டினா புரிஞ்சி இன்னொரு டைம் செய்யமாட்டான். அதேநேரம் ஏற்கனவே பண்ணினதுக்கு மன்னிப்பும் கேட்கமாட்டான். கொஞ்சம் சண்டியர்தான் என் பையன். சிவாவுக்கு சொல்லவே வேண்டாம். அவளையே அடிக்கடி எடுத்தெறிஞ்சி பேசி அடுத்ததா அவனே சமாதானப்படுத்திருவான். அந்த சண்டியர் மண்ணைக் கவ்வுற ஒரே இடம் அவன் அம்மா மட்டுமே!”
அவரின் அந்த ரசனையில் மற்றவர்களும் ஆழ்ந்து போக, அவ்விடத்தில் இயற்கை சப்தங்களைத் தவிர ஒரே அமைதி.
“கதிர் ப்ளஸ் டூ படிச்ச சமயம், சிவாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போக, மகன் மேல கொஞ்சம் கவனம் வைக்க மறந்துட்டா. சிவா ஓரளவு குணமானப்ப பனிரெண்டாவது எக்ஸாம் முடிஞ்சிருச்சி. அவன் ஒருவித மன இறுக்கத்தோட இருந்ததைப் பார்த்து என்னன்னு கேட்டும் பதில் இல்ல. எப்பவும் ஜாலியாயிருக்கிற பையன் ஒரேடியா அமைதியானதும் எங்களுக்கு வருத்தம்தான். அப்பதான் ஊருக்கு போகலாம்னு அம்மா சொல்ல, எல்லாரும் கிளம்பி கதிர் ரிசல்ட்கு இரண்டு நாட்கள் முன்னாடி மதுரை வந்தோம்.”
“ஊருக்கு வந்த மறுநாள் கோவிலுக்குப் போகலாம்னு ப்ளான் பண்ண சிவாவால வரமுடியாத சூழ்நிலை. அப்பாவும் அம்மாவும் இருக்கப்போறது பத்து நாள்தான். சொந்த ஊருக்கு எப்பவும் வர்றதில்ல. இருக்கிற நாள்ல உறவுக்காரங்க வீட்டுக்குப் போயிட்டு வந்திருறோம். கோவிலுக்கு கிளம்பிட்டு போகாமல் இருக்கக்கூடாது. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க.”
“நாங்க கோவிலுக்கு போனப்ப முன்னாடி உள்ள அம்மன் சந்நிதியிலதான், காமாட்சியையும் மாமாவையும் பார்த்தோம். அடையாளம் தெரிஞ்சி ஒரு பத்து நிமிஷம் பேசிட்டிருந்து வீட்டிக்கு வர்றேன்னு சொல்லிட்டு, உள்ள மலை நோக்கி நடக்க ஆரம்பிச்சிட்டோம். கோவில்ல சாமி கும்பிட்டிட்டு இருந்தப்பதான் கார்மேகத்தைப் பார்த்தேன். அவன் பக்கத்துல நாலஞ்சு பேர் நின்னுட்டிருந்தாங்க. அவனோட அம்மா வழி சொந்தம் நான். தற்செயலான சந்திப்புதான். கதிர் ரிசல்ட் எதிர்பார்த்து ஒரு டென்சன்லயே இருந்ததால அவன்கிட்டயும் அதிகம் பேச முடியல.”
“இன்னொரு காரணம் அவனைப்பற்றி எதுவும் நல்லதா கேள்விப்பட்டது கிடையாது. அவன் விருப்பப்பட்டு கேட்ட பொண்ணை, அவனோட அண்ணன் முறையில் உள்ளவருக்குக் குடுத்த ஆத்திரத்துல, அந்தப் பொண்ணோட தங்கச்சியை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கிட்டதா அப்பா சொல்வாங்க. அவன் கூடயிருந்தது யாருன்னு கேட்டப்ப ரெண்டு பேரை பையன்னு சொல்லி இன்னும் ரெண்டு பேரைக் காண்பித்து, வியாபார ஒப்பந்தம் போடுறதுக்கு முன்ன அம்மனை வேண்டிக்க வந்ததா சொன்னாங்க.”
“அவங்க போனதும் பையன் போனை வெறிச்சி பார்த்திட்டிருந்தான். என்னடான்னு கேட்டதுக்கு ஒரே அழுகை. அவன் பிறந்ததிலிருந்து எதுக்காகவும் அழுதது கிடையாது. முதல்முறை என் கண்முன்னால கதறி அழுதப்ப நான் துடிச்சிப் போயிட்டேன். பத்து வருஷம் தவமிருந்து பெத்த புள்ள, அந்த அழுகை அழுதப்ப என்னால ஆறுதல் சொல்ல முடியல. முடிஞ்சளவு சமாதானப்படுத்தி தேத்தி கேட்டப்பதான் தெரிஞ்சது, அவன் மனசளவுல எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கான்னு.”
“ஸ்கூல்ல ஒரு பொண்ணு அவன்கிட்ட லவ் ப்ரபோஸ் பண்ண, இவன் அவளை அடிச்சி திட்டியிருக்கான். இவன் க்ளாஸ் பசங்க அவள்கிட்ட கதிர் பொண்ணுங்ககிட்ட பேசவோ சுத்தவோ மாட்டான்னு விளையாட்டா சொல்ல, அவள் இவனை லவ் பண்ணவைக்கிறேன்னு பெட் கட்டி கதிர்கிட்ட பேச ஆரம்பிச்சிருக்கா. ஒரே க்ளாஸ் பொண்ணு அடிக்கடி பாடத்தில் டௌட் கேட்க இவன் க்ளியர் பண்ணினதால, கதிர் அவளை லவ் பண்றதா தப்பா நினைச்சி அந்தப் பசங்களுக்கு முன்னாடி சொல்லிட்டா. அவங்க அவளை கேலி பண்ணி கதிரை உயர்த்திப் பேச நடந்த அவமானத்தைத் தாங்க முடியாம கதிரைப் பழிவாங்கக் காத்திருந்திருக்கா.”
“சின்னச்சின்னதா அவனைச் சீண்டி நீ ஆம்பளையில்லன்றதாலதான் என்னை லவ் பண்ணலன்னு காயப்படுத்துற வார்த்தைகளை யூஸ் செய்திருக்கா. நிறைய டைம் மத்த பசங்க முன்னாடியும் இது நடக்க, அதனால படிப்புல கவனம் சிதறிருச்சி. எப்பவும் சிவாகிட்ட ஓபனா பேசுறவன் தன்னோட அவமானத்தை சொல்லாம மறைச்சிட்டான். எக்ஸாம் முடிச்சி வெளியில் வந்தும் மாறல. சிவா.. பையன் என்ன படிச்சா நல்லாயிருப்பான்னு நிறைய கனவு கண்டு அதைப் பையனிடமும் பகிர்ந்துக்க... முதல்முறையா குற்றவுணர்வு அவனுக்கு. அதுவரை யாரோ ஒருத்தி சொன்னதை நினைச்சி உழன்றவன், தாயின் எதிர்பார்ப்பைக் குழைச்சிட்டோம்னு மனசளவுல இன்னும் அடிவாங்கிட்டான்.”
“எல்லாம் சொல்லி முடிச்சி நான் பரீட்சையில பெயிலாகிட்டேன்ப்பான்னு அழுதான். நான் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் சமாதானமாகல. சாரிப்பா நான் தப்புப் பண்ணிட்டேன். சாரிம்மான்னு அருவி நோக்கி ஓட ஆரம்பிக்கவும், எனக்கு ஏதோ விபரீதமா பட அவனைப் பின்தொடர்ந்து எங்க போற கதிர்? இதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது. எல்லாத்தையும் அப்பா பார்த்துக்கறேன்னு சொல்லி அவன் பின்னாடி போனேன். அந்த நேரம் அங்க நிறைய அலறல் சத்தம் கேட்டது. அது இன்னும் என்னை அச்சத்திற்குள்ளாக்க, என் கவனம் என் பையன்கிட்ட இருந்ததால வேறெதையும் கவனிக்கல. அதுக்குள்ள தப்பு பண்ணிட்டேன்மா. என்னை மன்னிச்சிருங்கம்மா. நான் உங்களுக்கு வேண்டாம்மான்னு என் கண்ணு முன்னால...” சொல்லக்கூட முடியாமல் தேம்பி அழுதுவிட்டார் குருமூர்த்தி.
பார்த்திருந்தவர்கள் மனமும் கலங்க, கயல்விழியின் கண்களில் கண்ணீர். சிறிது நேரம் அழுதவர் கண் துடைத்து, “பத்து வருஷம் பிள்ளையில்லாம தவமாய் தவமிருந்த பெத்த பையன். உணர்ச்சி வேகத்துல எடுத்த முடிவுனால ஒரே நிமிஷத்துல... என் உயிரான மகன் என் எதிர்லயே... செத்துட்டேன் நான்.”
“என் பையன் விழுந்த அதே நேரம் இன்னொரு பையன் கத்தியபடி விழுந்தது கண்ணில்பட்டாலும், என் மூளை எதையும் யோசிக்கிற நிலையிலில்லை. வேகமா அந்தப் பள்ளத்துல பார்த்தா வெறும் இருட்டு. கண்ணைப் பறிக்கிற இடி மின்னல். செல்போன் சிக்னல் இல்ல. அங்கயிங்க அலைபாய்ந்து கிடைச்ச சிக்னல்ல அப்பாவை கான்டாக்ட் பண்ணி, அவர் தெரிஞ்சவங்க சிலரோட சேர்த்து டாக்டரையும் கூட்டிட்டு வந்தார். மழை இருட்டு அந்தப் பள்ளத்துல சில மணிநேரமா சல்லடை போட்டுத் தேடின பிறகு கிடைச்சது இரண்டு உடல்கள்.”
மற்றவர்கள் அனைவரும் அப்படியே அசையாது அமர்ந்திருக்க...
“இருட்டுல எது என் பையன்னு தெரியல. ஹாஸ்பிடல் கொண்டு போயி சேர்த்ததுல இரண்டு பேருமே சீரியஸாயிருந்தாங்க. அந்த இன்னொரு பையன், உடல் முழுக்க கீறி முகத்துல நிறைய காயமாகி அடையாளம் தெரியாம இருந்தான். ரெண்டு பேருமே பிழைக்குறது கஷ்டம். நீங்க நினைச்சா அந்த இன்னொரு பையனைக் காப்பாத்தலாம்னு டாக்டர்ஸ் சொன்னாங்க.”
“அந்தப் பையன்கிட்ட போனேன். அத்தனை அடிகளையும் வலிகளையும் மீறி துடிச்சிட்டிருந்தான். என் குடும்பத்தைக் அழிச்சவங்களைப் பழிவாங்கணும். என்னைக் காப்பாத்துங்கன்னு ஒரே அரற்றல். மயக்க மருந்து போட்டும் அவனோட உடல்ல மாற்றமில்லை. ஏதோ ஒரு சக்திதான் அவனைப் பேச வச்சதோன்னு இப்பவும் எனக்குத் தோணும். அவன்கிட்ட சாதாரணமா விசாரிச்சப்பதான் தெரிஞ்சது நல்ல வசதியான வீட்டுப்பையன். பெயர் இளநாதன்னு. தனக்கு எதுவும் ஆகுறதுக்குள்ள எல்லாத்தையும் சொல்லிடணும்ன்ற வெறியில, ரெண்டே நிமிஷத்துல அவன் மொத்த குடும்பத்தைப் பற்றியும் சொல்லி தன்னையும் காப்பாத்தச் சொல்லி மயங்கிட்டான்.”