- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
25
சரத்தின் முன் கோபமாக அமர்ந்தவர் “என் பேத்திக்கு என்னாகிற்று சரத்?” என்றார் நேரடியாக.
அதில் சற்று தடுமாறியவன், “லோஜிம்மா! ராசிக்கா? அவளுக்கு ஒண்ணுமில்லையே. ஏன் கேட்குறீங்க?”
“நான் கேட்டது நேரடிக் கேள்வி. அதுக்கு சரியான பதில் சொல்லு. மழுப்பல் வேண்டாம்” என்றார் அழுத்தமாக.
“லோஜிம்மா ப்ளீஸ் வேண்டாம். அவ என் ஒய்ஃப். அப்படியே அவளுக்கு பிரச்சனைனாலும், நான் பார்த்துக்கிட்டு சும்மாயிருப்பேன்னு நினைக்கிறீங்களா?”
“அந்த நம்பிக்கை இருந்ததால தான், அவளை உனக்கு கல்யாணம் பண்ணினேன். இப்ப சொல்லு என்ன பிரச்சனை?”
அவரின் உடல்நிலை கருதி அவன் அமைதியடைய, “நீ என்ன நினைச்சிட்டிருக்க? ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்ததால, நீ சொல்றதைக் கேட்டு மண்டையைப் போட்டுருவேன்னா?”
“லோஜிம்மா!” என அதிர்ந்து எழுந்தவனை நோக்கி,
“ஆமா நான்தான். வீடு பால்காய்ச்சின அன்னையிலிருந்து என் பேத்தி எப்படியிருந்தா தெரியுமா உனக்கு? எதையும் வெளியில சொல்லாம தனக்குள்ளேயே அழுதிட்டு, ஒரு வாரம் கழிச்சி பொறுக்க முடியாம நான் கேட்டப்ப சொல்றா. சரத்கு என்னைப் பிடிக்கல ஆச்சி. ஏன் என்னைப் பிடிக்கல. சின்ன வயசுல நடந்த கல்யாணத்தாலயா? அதை கேட்டப்ப எனக்கு செத்திரலாம் போலிருக்குன்னு சொன்னா.”
“சொல்லு இந்த வார்த்தையைக் கேட்கவா அவளை கண்ணுக்குள்ள வச்சி காப்பாத்துறேன்? மூணுமாசம் பழகின உனக்காக தன்னுடைய உயிரைக்கூட துச்சமா நினைச்சா. அப்படி என்னடா காதல் உன்னோடது. ஒரே வார்த்தையில அவளை சாகடிச்சிட்டியேடா! பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்குன்னு சொல்லு. இல்லையா விடு. எதுக்கு ஒரு பொண்ணோட மனசைக் கலைச்சி அவளைக் காயப்படுத்தணும். அன்னைக்கே வீட்ல நீ பேசினதையும், ஹாஸ்பிடல்ல அவகிட்ட உருகுனதையும் பார்த்து தான் வம்படியா இந்த கல்யாணத்தை முடிச்சேன். கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரியாகிரும்னு நினைச்சேன். ஆனா, அவளுக்குள்ள எதோ ப்ராப்ளம் இருக்குன்னு புரியுது. இப்ப சொல்லு என்ன பிரச்சனை?”
தன்னால் அவள் எந்தளவிற்கு மனதில் காயப்பட்டிருக்கிறாள் என்பது தெரியத் தெரிய, மனைவியின் கஷ்டங்களை மனம் உணர கண்கலங்க நின்றிருந்தான் சரத்.
“இன்னுமா சொல்ல மனசு வரல?” என்று அவனை திட்ட ஆரம்பிக்க,
“நான் சொல்றேன் ஆச்சி” என்று உள்ளே வந்தாள் விஜி. டாக்டரைப் பார்த்ததும் ராசியை அனுப்பிவிட்டு சரத்திடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்று வந்தவள், லோஜியின் வார்த்தைகளில் உள்ளே நுழைந்தாள்.
“ஆச்சி முதல் தப்பு சரத் அண்ணா, என் ஹஸ்பண்டோடதுனா. இரண்டாவது தப்பு உங்களோடது” என்று அவர் மேலேயே குற்றத்தை திருப்பி, தனக்குத் தெரிந்தது அனைத்தையும் சொல்ல, அதைக் கேட்டிருந்தவர் முகம் இறுகி வியர்க்க ஆரம்பித்தது.
அதைப் பார்த்திருந்தவன், “லோஜிம்மா! இப்ப பிரச்சனையை சரிபண்ணியாச்சி. நீங்க கவலைப்படாதீங்க. நீங்க எப்பவும் எங்களுக்கு வேணும்.”
“கடைசியா இப்ப நடக்கிற பிரச்சனைக்கு காரணம் என்மேல் உள்ள அன்பா?”
“ஆமா. எனக்காக செத்திரலாம் தோணுது சொன்னதா சொன்னீங்க. இதே உங்களுக்குன்னா, யோசிக்கக்கூட மாட்டா செத்திருவா. அப்படிப்பட்டவ உங்களை எதுக்காகவும் ஏமாற்றவோ, கஷ்டப்படுத்தவோ விரும்பலை. அதான் தன்னையே கஷ்டப்படுத்திக்கிட்டா. இனி நான் பார்த்துக்கறேன் லோஜிம்மா. சீக்கிரமே என்னைப் புரிஞ்சிக்குவா.”
திருமணத்தன்று தான் செய்த அறிவுரைகளுக்கு, “நீங்க சொல்லி நான் என்னைக்கு மறுத்திருக்கேன்” என்ற பேத்தியின் வார்த்தைகள் காதில் கேட்டது. “அவகிட்ட என் பாசத்தைக் காண்பிச்சி கஷ்டப்படுத்திட்டேனா சரத். என்னாலதான் இன்னும் கஷ்டப்பட்டாளா?” அழுகையில் தேம்பியவரிடம்...
“இல்ல லோஜிம்மா. அது உங்க நியாயமான ஆசைதான். இன்னும் ஒன் மன்த்ல கம்ளீட்டா குணமாகிருவா. நாங்க நல்லா வாழ்றதையும் பார்ப்பீங்க. உங்க பேத்தியோட குழந்தைகளை நீங்க நல்லபடியா வளர்க்க வேண்டாமா.”
‘இதெல்லாம் நடக்குமா?’ என பார்வையால் வினவியவரின் கண்ணீர் துடைத்து, “கண்டிப்பா நடக்கும். மனசுல எதையும் போட்டு குழப்பிக்காம ப்ரீயா இருங்க. நான் இருக்கிறதுவரை என் ராசாத்திக்கு எதுவும் வரவிடமாட்டேன். நான் ஏற்கனவே சொன்னதுதான், அவ எனக்கு ரொம்ப முக்கியம்! என்னை விட!”
“அந்த நம்பிக்கை என் பையன்மேல இப்பவும் இருக்குபா.”
“இனிமேலும் இருக்கும். சரி வாங்க. உங்களை வீட்டுல விட்டுட்டுப் போறேன். விஜிமா நீயும் கிளம்பு” என்றவன் “ரொம்ப நன்றிமா. நீ இருக்கிற சூழ்நிலையில உன்னை ரொம்பபே அலைக்கழிக்கிறேன்” என்றான்.
“விடுங்கண்ணா. அத்தைக்காக இதைக்கூட என் குழந்தை பொறுத்துக்காதா. அப்புறம் விவரம் தெரிஞ்சி, எங்கத்தைக்கு ஏன் ஹெல்ப் பண்ணலைன்னு கேட்டா நான் என்ன சொல்றது.”
“விஜிமா மாசமாயிருக்கியா?”
“டூ லேட் ஆச்சி. இவ்ளோ நேரம் அதைத்தான் சொன்னேன்.”
“உனக்கு வாய் ஜாஸ்தி” என்று கர்ப்பிணிகளுக்கான சின்னச்சின்ன அறிவுரைகள் சொல்லியபடி வர கிளம்பினார்கள்.
ராசியிடம் கொஞ்சம் தெளிவு வந்திருந்தது. தனக்குத்தான் சிகிச்சை என்றதும் டாக்டரிடம் தன் மனக்குழப்பங்களைக் கேட்டு தானே தெளிவுபடுத்திக் கொண்டாள். ஒரே அறையில் இருந்தால் மனைவிக்கு தன்னைக் காணும் பொழுது குற்றவுணர்ச்சி வருமென்று லோஜியுடன் தங்க வைத்தான் சரத்.
டிடெக்டிவ் வேலை உயிருக்கு ஆபத்தானது என்பது மூளையில் பதிந்த நாள் முதல் நேரடியாக கேட்காவிட்டாலும், மெசேஜ் மூலமாக எப்பொழுது, எங்கிருக்கிறான் என்று கேட்டு அக்கறை காண்பிக்க ஆரம்பித்து, கணவனே அறியாமல் சின்னச்சின்ன உதவிகள் செய்து வைத்தாள். அதில் காதல் இருந்ததா என்றால் தெரியாது? ஆனால், கண்டிப்பாக கடமை கிடையாது. ஒரு மனைவிக்கான தேடல், தவிப்பு அக்கறை, அன்பு இருந்தது எனலாம். சரத் சொன்னதுபோல் திருமணத்திற்குப் பின் காதல் செய்வது சிறந்தது, நிலையானது என்றே தோன்றியது.
இரவில் கணவனின் ஐ லவ் யூவை ராசாத்தி மிஸ் செய்தாள். தன்னிடம் ஐ லவ் யூ சொல்லமாட்டேன் என்றவன் தினமும் உறக்கத்தில் சொல்கிறான். அதன் மாயம் என்ன என்பது புரியாத புதிராகவே இருந்தது. நாளாக நாளாக புதிதாக ஒருவித ஏக்கம் மனதினுள் புகுந்து அவளை இம்சித்தது.
சரத்தோ அவளை அவளே உணர்ந்து வரும் நாளுக்காகக் காத்திருந்தான். தான் எதாவது அதிரடி செய்யப்போய் அது எதிர்ப்புறமாக பாய்ந்து விட்டால் என்ன செய்வதென்ற குழப்பம் அவனுக்கு. அவளின் உதவிகள் தெரிந்த போதும் தெரியாதது போல் காட்டிக் கொள்வதே பெரும்பாடாக இருக்க, மனைவியின் மாமா ப்ளீஸையும், உணர்ச்சிவசப்பட்ட நேரங்களில் உரிமையாக அழைக்கும் ஹரியையும் மிஸ் செய்தான்.
இப்பொழுதுமே மணியிடம் பேசிய வார்த்தைகளுக்கு விளக்கமளிக்க முடியாமல் திணறினான் அது வேறுமாதிரியான பிரச்சனைகளை இழுத்துவிடக் கூடாதென்று. மனைவியின் மெசேஜிற்காக, அவள் தன்னைத் தேடவேண்டும் என்பதற்காக சற்று நேரம் கழித்தே வருவான். ஏனென்றால், அவனின் பாசக்கார டாம் அரை மணிநேரத்திற்குள் ஐம்பது மெசேஜ் தட்டிவிடுவாளே அதை ரசிக்கத்தான். சரத் பதில் மெசேஜ் அனுப்பாவிட்டால் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பும், மனைவியின் தவிப்பு அவனுக்கு பூஸ்ட் குடித்த மாதிரி.