- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
24
கார்த்திக்கின் குரலிலிருந்த வித்தியாசத்தை உணர்ந்த ஈஸ்வரி, மருமகளின் முகம் பார்க்க, அவளின் சோகமுகம் கண்டு, என்னவென்று விசாரித்தார்.
“ப்ச்... ஒண்ணுமில்லை அத்தை” என்றாள் சலிப்புடன்.
“அப்புறம் ஏன் முகம் ஒருமாதிரி இருக்கு? குரல்ல ஒரு சலிப்புத்தன்மை வேற. நீ இப்படி இருக்கிற ஆள் கிடையாதே? அழுதியா அவந்தி?” பதில் இல்லாது மருமகளின் அமைதி தொடர, “ப்ச்... அழுதியா கேட்குறேன்ல? பதில் சொல்லமாட்டியா?” என குரலை உயர்த்தி கேட்டதும், மௌனமாகத் தலையை ஆட்டினாள்.
“வாயைத்திறந்து சொல்லு. பெரியவங்ககிட்ட இப்படியா பிஹேவ் பண்றது. உனக்கு வாய் இருக்குதான? ஒண்ணும் ஊமை இல்லையே? கேட்டா கேட்டதற்கு பதில் வரணும்” என்று சத்தம் குறைக்காமல் கேட்டார்.
நீண்டநாள் கழித்து அதிர்ந்த குரலைக் கேட்டு, மிரண்ட அவந்திகாவுக்கு, முதன் முதலாகத் தன்னை உரிமையுடன் அதட்டிய கார்த்திக்கின் நினைவு வந்தது. அதை எண்ணி அழுகையும் வர, ஈஸ்வரியிடம் திரும்பவும் திட்டுவாங்க வேண்டாமென்று அழுகையை அடக்கினாள்.
“புவி! ஏன் அவளைக் கத்துற? அதிக சத்தம் கேட்டா பயப்படுவான்னு உனக்குத் தெரியாதா? எதுவா இருந்தாலும் அமைதியா கேளு பதில் சொல்வா” என்றபடி அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்தார் சந்திரன்.
“ஆமா பதில் சொல்றா. நீங்க வேற நான் அமைதியாதான் கேட்டேன்” என்று முடிப்பதற்குள்,
“ஆமா. நான் அழுதேன் தான். உங்க பையன் மட்டும் இப்படிப் பண்ணலாமா? த்ரீ இயர்ஸா, யாரோ ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு என்கிட்டேயே சொல்றாங்க? எனக்கு எப்படி இருந்திருக்கும். நீங்க போங்க. நான் எங்க மாமாகிட்டேயே போறேன்” என்று அழுதபடி எழுந்து செல்லபோக,
‘என்னது மாமாகிட்டேயா? சுந்தரேசன் ஏற்கனவே மனக்கஷ்டத்தில் இருப்பவர். இவள் வேற அவர்கிட்ட போயி, எதாவது ஏடாகூடமாச்சின்னா? கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ?’ என்றெண்ணி, “ஐயோ! அவந்திமா வேண்டாம்” என்று தடுக்க வாயைத் திறந்தவர், கப்பென்று வாய் மூடி அவர்கள் இருவரையும் முறைத்தார்.
அவந்தி தன் மாமா சந்திரன் அருகில் அமர்ந்து, தோள் சாய்ந்திருந்தாள். முதலில் முறைத்த ஈஸ்வரி, அவந்திகாவின் இந்தப் பாசப்பிணைப்பில் நெகிழ்ந்து, தன் குரலை இறக்கி, தெரிந்தாலும் தெரியாததுபோல், “யாரை லவ் பண்றேன்னு சொன்னானா அவந்தி” என்றார்.
“ப்ச்... போங்கத்தை. எனக்கு அழுகை அழுகையா வருது தெரியுமா?” என்றவள் உதடுகள் துடிக்க, அழக்கூடாதென்று அழுகையை கட்டுப்படுத்தினாலும் தன்னை மீறி கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
அதைப் பொறுக்க முடியாத ஈஸ்வரி, எழுந்து மருமகள் அருகில் வந்தமர்ந்து, அவள் கண்ணீர் துடைத்துத் தோள் சாய்த்து, “ஸ்... பைத்தியம். இதுக்கெல்லாமா அழுவாங்க.”
“வேறெதுக்கு அழுவாங்க? இது என்னோட வாழ்க்கைப் பிரச்சனையில்லையா?” என்பதுபோல் தலைநிமிர்த்தி பார்த்தாள்.
“அழாம என்ன நடந்ததுன்னு சொல்லு?” என்று மருமகளிடம் விஷயத்தை வாங்கியதும் சிரித்தவர், “சரி. அந்த நியூஸ் பேப்பர்ல, அவங்க நேம் மட்டும்தான் இருந்ததா?”
“ப்ச்... ஆமா அத்தை. என்னோட நேம் தவிர, அவங்க நேம்தான் இருந்தது.”
“யாரோட நேம் தவிர அவந்திமா?” என மருமகளைத் தூண்ட,
“அதான் சொல்றேனே அத்தை. என்னோட நேம் தவி...” என்றவளுக்கு சட்டென்று ஏதோ தோன்றி, மாமியாரின் முகம் பார்க்க, அதிலிருந்த மாயப்புன்னகை விஷயம் சொல்ல, “நானா?” என்றாள் ஆச்சர்யமும் வியப்புமாக.
புவனேஸ்வரி கண்மூடி “ஆம்” என்றார்.
“ஈஸூமா நிஜமாவா? நிஜமாவே அது நான்தானா? நானே தானா?” கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, ஈஸ்வரியின் கன்னத்தில் முத்தமிட்டு “தேங்க்யூ ஈஸூமா. தேங்க்யூ” என சந்தோஷக் கூச்சலிட்டபடி அவர்கள் அறை நோக்கி ஓட,
“ஹேய்! பார்த்தும்மா. ம்.. கல்யாணம் முடிஞ்ச அன்னையில் இருந்து, உன் வாயில ஈஸூமான்ற வார்த்தை, எப்ப வரும்னு எதிர்பார்த்திட்டே இருந்தேன். எவ்வளவு லேட்டா வருது பாரு” என குறைபட்டார்.
“சாரி ஈஸூமா. அது அதிர்ச்சி ப்ளஸ் கோவத்துல அப்படி இருந்துட்டேன். இனி பாருங்க, எப்படி வருதுன்னு” என்று சத்தமாக சொல்லியபடி அறைக்குள் சென்று அந்த பேப்பர்களைப் பார்த்தாள்.
கார்த்திக் வட்டமிட்டிருந்த ‘அவந்திகா அழகப்பன்’ பெயரைப் பார்த்ததும், “கண்டிப்பா என்னை லூசுன்னு நினைச்சிருப்பாங்க. அவங்களை லூசன்னு திட்டிட்டு, நான்தான் லூசா இருந்திருக்கேன். ம்... என்ன பண்ணலாம்?” என்ற யோசனையில் இருக்க, மாமியாரிடம் இருந்து தன் கைபேசிக்கு வந்த தகவலைக் வந்த கண்டு, குதூகலித்தபடி கீழே வந்தவள் அது சம்பந்தமாக, சந்தோஷ் மற்றும் மாமனார், மாமியாரிடமும் பேசி அதன்பின்னே அலுவலகம் கிளம்பினாள்.
அவந்தி சென்ற ஐந்து நிமிடத்திற்குள், சந்தோஷிற்கு நேத்ராவிடமிருந்து அழைப்பு வர, ஒரு ரகசியப் புன்னகை பூத்தவன் “என்ன நேத்தி ரிசல்ட் வந்திருச்சா? நான் எப்ப வரணும். இப்பவே வரவா?” என கேட்டான்.
“ம்... ரிசல்ட் வந்திருச்சி சந்தோஷ். நீங்க வந்து வாங்கிக்கோங்க.”
“நேத்தி! இதுக்குத்தான் போன் போட்டியா? ஏன் கேட்கிறேன்னா, நீ வேற எதாவது பேச வந்து, நான் மாத்தியிருந்தா, அதான் கேட்கிறேன்.”
“ம்ஹூம்.. இல்ல சந்தோஷ்” என்றவளுக்குத்தானே தெரியும், இப்படிவாவது அவனிடம் பேசிவிட வேண்டும் என்று, மருத்துவ அறிக்கைக்காகக் காத்திருந்தது.
“சரிமா. முதல்ல அங்க வந்து ரிசல்ட் வாங்கிட்டு, அப்புறம் ஆஃபீஸ் போறேன்” என்று போனை வைத்து, “அப்பா நான் வர கொஞ்சம் லேட்டாகும். ஃப்ரண்டைப் பார்த்துட்டு வர்றேன்” என்றான்.
“எந்த ஃப்ரண்டைடா சொல்ற? இரண்டு நாள் முன்னாடி மதியம் பார்க்கப் போனியே அந்த ஃப்ரண்டா?”
‘ம்...’ என முறைத்தபடி, “உங்க சந்தேகம் சரியாகவும் இருக்கலாம். இருந்தாலும், இப்ப நோ பதில். பை” என்றபடி வெளியேறி, மருத்துவமனை சென்று நேத்ராவை சந்தித்தான்.
சந்தோஷித் தன் எதிரில் அமரவைத்த நேத்ரா, “என்ன சந்தோஷ், உங்களுக்கு கொஞ்சம் கூட ரிசல்ட் பற்றிய பயமே இல்லையா? கூலா இருக்கீங்க” என கிண்டலடிக்க,
அவளின் கண்களை நேருக்குநேர் சந்தித்து, “வேற எப்படி இருப்பேன்னு நினைச்ச நேத்தி? இங்க வந்து உன்னைச் சந்திக்கிறது வரை, ஹை டென்சன்ல இருந்ததென்னவோ உண்மைதான். உன் முகத்தைப் பார்த்ததும் தெரிஞ்சிருச்சி, உன் கையில் இருக்கிற ரிசல்ட் பேப்பர்ல நெகடிவ் போட்டிருக்குன்னு” என நிதானமாக சொன்னான்.
அவன் கண்களின் நேரடி சந்திப்பில், வந்த மயக்கத்தை மறைத்து, “ஆமா சந்தோஷ். எல்லாமே நெகடிவ்னு தான் வந்திருக்கு” என்றாள் சந்தோஷக் குரலில்.
“என்னுடைய பிரச்சனை சால்வ் ஆனதுல, என்னைவிட நீதான் அதிக சந்தோஷமாயிருக்க போல?”
“இருக்காதா பின்ன. நீங்க என்ன வேற யாரோவா?” என வாய்விட்ட பின்னே அதை உணர்ந்தவள், வெளியிட்ட வார்த்தையை அழிக்கவா முடியும். தான் பேசிய வார்த்தையை, அவன் கவனித்தானா என பார்த்தவள், அவன் கவனம் தன்னிடம் இல்லாமல், ஏதோ யோசனையில் இருப்பதை எண்ணி சற்று ஆசுவாசமாகி, “எ..என்ன யோசனை சந்தோஷ்?” என்றாள் மெதுவாக.
அவளின் உளறலை கண்டுகொண்டாலும், சற்று நேரம் விளையாட எண்ணி கவனியாதது போல் இருந்தவன், “ஓகே நேத்தி. அப்ப எங்க வீட்ல பார்த்திருக்கிற பொண்ணுக்கு ஓகே சொல்லிருறேன்” என எழுந்தான்.
அவனின் உடனடி பதிலில், தன் முகத்திலுள்ள அதிர்ச்சியை அப்பட்டமாக காட்டியபடி பார்த்தாள். ஏற்கனவே தெரிந்ததுதான். இருந்தாலும், மனம் மரண வலியை அனுபவித்தது. மெல்ல அதிர்ச்சியிலிருந்து விலகி, மரியாதை நிமித்தமாக எழுந்து, “ஓகே சந்தோஷ். ஆல் தி பெஸ்ட்” என்று மருத்துவ அறிக்கையை அவன் கையில் கொடுத்து கலங்கிய கண்களை மறைத்து, மனதால் அடக்கி, வாழ்த்துச் சொன்னாள்.
அவளின் ஒவ்வொரு உணர்ச்சிகளையும், கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு, எகிறிக்குதித்து வானம் தொடும் அளவு ஆசை. இதுவரை நேத்ராவை வேறுமாதிரி எண்ணாததால், அவளுக்குத் தன்னைப் பிடிக்குமா? தன்னுள் இருக்கும் அதே உணர்வு அவளுள் இருக்குமா? என்னதான் அண்ணி அவளுக்கு உங்களைப் பிடிக்குமென்று சொல்லியிருந்தாலும், அவளிடம் பேசும் முன் ரிசல்ட் தனக்குப் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்ற பயத்தில் வந்தான்.
மருத்துவமனை வாசலிலேயே சின்ன தவிப்புடன் ,ஸ்டெதஸ்கோப்பை வாயில் வைப்பதும், எடுப்பதுமாக குழந்தையின் தவிப்பில் இருந்தவளைப் பார்த்ததும் புரிந்தது அவளின் மனம். பெண் பார்த்தாயிற்று என்றதும் அதிர்ந்த முகமும், கலங்கிய கண்களும், அவளின் நிலையை சொல்ல, சந்தோஷ் சந்தோஷத்தின் உச்சியில் இருந்தான்.
விடைபெற்று வாசல்வரை சென்றவன் திரும்பி அவளிடமே வர, மனதின் சோகம் முகத்திற்கு வராமல், “என்ன சந்தோஷ்?” என்றாள்.
“நேத்தி என்னால ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியும்தான?”
“இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு. வசதி இருந்து உங்க ஒய்ஃப் சம்மதிச்சா, பதினாறு பெத்துக்கலாம். அதேமாதிரி, பதினாறு செல்வமும் உங்களுக்கு கிடைக்கணும்னு, எப்பவும் கடவுளை வேண்டிக்குவேன்” என்றாள் உள்ளார்ந்த குரலில்.
அதில் வசீகரிக்கப்பட்டவன், அவளருகில் வந்து, “எனக்கு பதினாறு வேண்டாம். ரெண்டு இல்ல மூணு குழந்தைபோதும் நேத்தி. அதுவும் நீ பெத்துக் கொடுக்கிறதா இருந்தா” என்றான் மெல்லிய குரலில்.
அவன் கல்யாண செய்யப்போவதாகச் சொன்னதில் இருந்தே, இன்னும் வெளிவராதவள், குழந்தை பற்றிக் கேட்டதும், தன் மனதிற்கு சரியென்று பட்டதை வெளிப்படையாக சொன்னாள். பதிலுக்கு அவன் சொன்னதை அரைகுறையாகக் கேட்டவள், அவனின் கேள்வியை தன் மூளையில் முழுமையாகப் பதித்து அதன் அர்த்தம் புரிந்ததும், “சந்தோஷ்ஷ்!” என்றாள் ஆச்சர்யமாக.
சிரித்தபடியே, “சொல்லு நேத்தி? எனக்கு பெத்துக் கொடுப்பியா? எனக்கு மனைவியா, நமக்கு பிறக்கப்போற குழந்தைகளுக்கு, அம்மாவா இருக்க உனக்கு சம்மதமா?” என்று மலர்ந்த முகத்துடன் இருகையையும் நீட்ட, சற்றும் யோசிக்காமல் அவனின் கைகளில் கட்டுண்டவள், கண்கள் கண்ணீரைப் பொழிந்தது. சும்மாவா! கனவில் மட்டுமே முடியும் என நினைத்த வாழ்க்கையாயிற்றே நேத்ராவிற்கு!
“ஸ்ஸ்... நேத்தி ஹேப்பி என்டிங்ல நோ அழுகை.”
“போங்க சந்தோஷ். இது சந்தோஷ கண்ணீர்.”
“என்னது சந்தோஷைக் கண்ணீர் விடவைக்கப் போறியா? அப்ப நீதான் என் ஒய்ஃப்” என அதிரடி கலாட்டாவில் இறங்கினான்.
“ச்சோ... சந்தோஷ கண்ணீர் சொன்னேன்.” பின் தான் இருக்கும் இடமறிந்து அவனை விட்டுவிலகி, “நீங்க கிளம்புங்க” என்றாள்.
“ஓகே ரைட். அதுக்கு முன்னாடி, நம்ம மேரேஜை இன்னும் ஒன் ஆர் டூ இயர்ஸ் கழிச்சி வச்சிக்கலாமா?”
“எனக்கு நீங்க கிடைச்சதே போதும் சந்தோஷ். எத்தனை வருஷம் ஆனாலும் காத்திருக்க நான் தயார்.”
“அடிப்பாவி! எத்தனை வருஷம் ஆனாலுமா? அத்தனை வருஷம் காத்திருக்கிற பொறுமை எனக்கில்லமா. அப்புறம் நாளைக்கு ஈவ்னிங் ட்யூட்டி முடிஞ்சதும் நேரே வீட்டிற்கு வந்திரு.”
“ஏன்? எதாவது விசேஷமா?”
“ம்... அப்படித்தான் வச்சிக்கோயேன்” என்றதும் நேத்ரா சம்மதிக்க சந்தோஷ் கிளம்பினான்.