- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
24
குழந்தையுடன் வீட்டிற்குள் வந்தவன் லோஜியிடம் கொடுத்துவிட்டு அறைக்குள் வர ஜன்னலோரம் நின்று தெருவையே வெறித்திருந்தாள் ராசி. அடுக்குமாடிக் குடியிறுப்புப் பகுதியில் தோட்டங்களா நம் கண்ணுக்குத் தெரியப்போகிறது. அடுத்த வீட்டு சுவரும் தெருவோர மரங்கள் மட்டுமேயல்லவா!
அவள் முன் வந்தவன் அவளையே பார்த்திருக்க சிலபல நிமிடங்களுக்கு மேல் கணவனின் அந்த பார்வை வீச்சினைத் தாங்க முடியாமல் வெளியே செல்லப் போனவளைத் தன்புறம் இழுத்தான் சிரிப்போடு.
இருக்காதா பின்ன! அவனின் பார்வை அவளை சலனமடையச் செய்கிறதல்லவா!
அவனைப்பற்றி தெரிந்திருந்ததால் அவனின் இழுப்பிற்கு தடுமாறாமல் நிற்க, “ஆஹா! உஷாராகிட்டாயா, என் பொண்டாட்டி” என்றான் சத்தமாகவே.
“ஆமா உஷாராயிருக்காங்க. அப்படியெல்லாம் இருந்திருந்தா நீங்க அந்த வார்த்தையை சொல்லியிருக்க மாட்டீங்கள்ல.”
“என்னமா கோவம் என்மேல?”
“உங்க மேல கோவமா? உங்க மேல கோவப்பட நான் யாரு சார்?”
“ராசீ...” என அதட்டியதும், அவள் சட்டென்று நாக்கைக் கடிக்க... “என்ன பேசுறன்னு புரிஞ்சிதான் பேசுறியா? எனக்கு நீ யாருன்னு உனக்குத் தெரியலைல்ல. தெரிய வச்சிருக்கணும் தப்பு பண்ணிட்டேன். முதல்ல நீ நம்ம வீட்டுக்கு வா போகலாம்” என்றான் கோவமாக.
“என்னது!” என்று அவள் அதிர...
அந்த கோவம் குறையாமலேயே, “ஆமா நான் யாருன்னு உனக்கு புரியவைக்க வேண்டாமா?”
அதிர்ந்தவள் மூளை அதிவிரைவில் முடிவெடுத்து அவனை கவிழ்ப்பதாக எண்ணி, “மாமா ப்ளீஸ்! நான் இனி அந்த மாதிரி பேசமாட்டேன். நீங்க என் ஹஸ்பண்ட் தான். ப்ளீஸ் எனக்காக. அம்மாஆச்சிக்காக!” என்று கெஞ்சியவாறு அவனை கட்டியணைக்க... அவளின் உடல் அதிர்வை உணர்ந்தவனோ, ‘இப்பக்கூட அம்மாஆச்சிக்காகன்னு சொல்றியேடி. உன் மனசைக் கொன்னு ஏன்டி என்கிட்ட இறங்கி வர்ற. உன் உடலோ, மனசோ ஏத்துக்காத ஒண்ணைச் செஞ்சி உன்னையே நீ ஏமாத்திட்டிருக்கியே’ என்று கண்கள் கலங்க அவள் முதுகைத் தட்டிக்கொடுத்தவன், “சும்மா சொன்னேன்மா. நம்ம வீட்டுக்குப் போனாலும் லோஜிம்மாவோட தான் போவோம்” என்றான்.
கண்களில் சந்தேகத்துடன் பார்த்தவளை, “உண்மைடா. எனக்கும் உங்களை விட்டா யார் இருக்காங்க சொல்லு” எனும்போது அவன் குரலில் உள்ள வருத்தத்தை உணர்ந்து, ‘ஏன் நானில்லை’ என சொல்ல வந்தவள் எதையோ நினைத்து அதை விட்டாள். “சரி போய் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வா” என்றான்.
இரவு உணவு முடித்து படுக்க வந்தவளை தன்புறம் அமரவைத்து அவளுக்குத் தெரியாமல் பூஸ்டில் தூக்க மாத்திரை போட்டுக் கொடுக்க, ‘வேண்டாம்’ என்றவளை மிரட்டி குடிக்க வைத்து அவள் தினமும் செய்வதை தடுத்து தன்மேலேயே படுக்க வைத்து தட்டிக்கொடுக்க, சில நிமிடங்களில் அசந்து உறங்கினாள்.
கிட்டத்தட்ட இரண்டு மாதகாலமாக தூக்கம் இல்லாமலிருந்ததால், மாத்திரையையும் மீறி நடுவில் விழித்தவளை தட்டிக் கொடுத்தபடி விழித்திருந்தான்.
அதிகாலையில் கண்களைத் தழுவிய நித்திராதேவி, அதே வேகத்தில் காலையிலேயே சென்றுவிட, சரத் எழுந்து மணியைத் தொடர்பு கொண்டு பேச... சற்று நேரத்திற்கெல்லாம் விஜியை இறக்கிவிட்டு, “லோஜிம்மாவுக்கு எதுவும் தெரியக்கூடாது. ராசிக்கு ஒண்ணுன்னா அவங்க நொறுங்கிருவாங்க. ஸோ, கேர்புல்லா பேசணும்” என்று சரத்தும் மணியும் வெளியே சென்றார்கள்.
“ஹாய் ஆச்சி! எங்க உங்க வீட்டு ஜான்சிராணி.”
“இன்னும் எழுந்திருக்கலைமா. எப்பவும் இவ்வளவு நேரம் தூங்கமாட்டா. என்னன்னு தெரியலையே” என்று கவலைப்பட...
“அட ஆச்சி! நீங்க ஏன் பீல் பண்றீங்க? நல்லா தூங்கி எழுந்து வரட்டும்” என்று லோஜியிடம் வளவளத்துக் கொண்டிருக்க, எட்டுமணியளவில் எழுந்து வந்தவள் தலையைப் பிடித்தபடி வந்து ஹாலில் அமர்ந்தாள்.
பூஸ்ட் கொடுத்தவாறு என்னவென்று விசாரித்த லோஜியிடம், “தெரியலை அம்மாஆச்சி. தலையை வலிக்குது” என்றபடி பூஸ்ட் குடிக்க, சூடான பானம் உள்ளே செல்ல வலி குறைந்தது போலிருந்தது. அதன் பிறகே விஜியைக் கவனித்தவள், “வாங்க அண்ணி. சாரி வந்து ரொம்ப நேரமாச்சா?”
“சே..சே.. ஜஸ்ட் ஒரு மணி நேரம்தான் ஆச்சிது” என்றவள் குரலில் சுரத்தே இல்லை.
“என்னண்ணி டல்லா தெரியுறீங்க?”
“ப்ச்.. ஒண்ணுமில்லமா.”
“அண்ணி எதுவோ இருக்கு. என்னன்னு சொல்லுங்க?”
“உன்கிட்ட தனியா பேசணும் ராசி. எனக்கும் என் பிரச்சனையை சொல்ல உன்னை விட்டா வேற வழி தெரியல. மனசுக்குள்ளேயே போட்டு எவ்வளவுதான் குமையுறது. அவங்க வேலையிருக்குன்னதால என்னை இங்க விட்டுட்டுப் போகச் சொன்னேன்.”
“சரி அண்ணி. வாங்க ரூம்கு போகலாம். அம்மாஆச்சி நான் அண்ணியோட டூயட் பாடிட்டு வர்றேன். அதுவரை எங்க ரூம் பக்கம் வந்திராதீங்க” என்றாள்.
“ஆமாமா. உங்க டூயட்ட பார்த்துட்டாலும். போ போ வேலையைப் பாரு” என்றார்.
சிரித்தபடி இருவரும் மாடியிலுள்ள ராசியின் அறைக்குள் சென்றதும், “சொல்லுங்க அண்ணி” என்ற ராசியைக் கட்டியணைத்து அழ ஆரம்பித்தாள்.
விஜியின் அழுகைக்குக் காரணம் தன்னுடைய கணவனின் விளையாட்டுத்தனத்தால் தான் இந்தப் பெண்ணின் வாழ்க்கை சிக்கலாகிவிட்டது என்றெண்ணி.
விஜியின் அழுகையில் பதறி தன்னிடமிருந்து விலக்கி, “என்னாச்சி? அண்ணாவுக்கும் உங்களுக்கும் சண்டையா என்ன?” இல்லையென்று விஜி தலையசைக்க... “என்னாச்சின்னு சொன்னால்தான தெரியும். தலையாட்டலை வச்சி சொல்ல நான் என்ன சித்தியா.”
‘பே’ என விழித்து “சித்தினா” என கேட்டாள்.
“பாய்னா சித்தன். நான் கேர்ள் சித்தனுடைய பெண்பால் சித்தி. அதான் சித்தி சொன்னேன்” என்று தன்னருகில் அமரவைத்து “இப்ப சொல்லுங்க அண்ணி உங்க மனசுல என்னயிருக்கு?”
‘நீயும் சொல்லியிருக்கலாம் ராசி’ என மனதினில் நினைத்து, “எங்களுக்கு மேரேஜாகி நாலு வருஷமாகுதுன்னு உனக்கே தெரியும்.”
“ம் தெரியும்.”
“எங்களுக்கு இன்னும் குழந்தையில்லை ராசி. ஊர்லயிருந்து போன் வந்தாலோ, தெரிஞ்சவங்க பார்த்தாலோ கேட்கிற ஒரே வார்த்தை என்னமா விசேஷம் எதுவுமில்லையா. சும்மாவா இருக்கன்னு தான். நான் என்ன செய்யட்டும் சொல்லு. அதென்ன பொம்மையா நம்ம கையால செஞ்சி உயிர் கொடுத்து வளர்க்க. அதெல்லாம் தானா வரணும் ராசி. நானும் உங்க அண்ணாகிட்ட எதுவும் சொல்றதில்லை. அவங்க பார்க்கிற வேலைக்கு கவனம் சிதறினா உயிர் பிரச்சனை வரக்கூட சான்ஸ் இருக்குன்னு உனக்கே தெரியும்தான?”
“அண்ணீ” என பதறியபடி ராசி எழுந்து பின் அமர்ந்தவள் உடல் நடுங்கியது. “இதை நான் இதுவரை நினைக்கவே இல்லண்ணி.” ‘என் கணவனின் தொழில் ஆபத்தான ஒன்று என்பதை எப்படி மறந்தேன்? எங்கே அவனைக் கவனித்தால் தானே. என்னுடைய சுழற்சியிலேயே இருந்தால், அவனுக்கு எதாவது என்றால் கடவுளே!’ நினைவே அவளைக் கொன்றது. அவன்தானே பொய் என் நேசம் நிஜம் தானே!
“ராசி என்னாச்சிமா?” என்ற விஜியிடம்...
“நான் இதுவரை இதை யோசிக்கவே இல்லண்ணி.”
“எதைமா?” என்றபடி அவளை ஆராய்ச்சியோடு பார்த்தாள்.
“சரத், மணியண்ணா வேலைபற்றி.”
“ப்ச்.. அதுவா? அது அவங்களோட தொழில்மா. ஒருத்தருக்கு சாவு வரணும்னா எப்படி எந்த பொந்துக்குள்ள இருந்தாலும் வரும். நான் சொன்னது அவங்களுக்கு மனசளவுல ப்ரஷர் கொடுக்கக்கூடாதுன்னு.”
“கண்டிப்பா அண்ணி. நானும் இதை ஃபாலோ பண்றேன்.”
‘ஷப்பா! வந்ததுக்கு நானே தனியா ஒரு நல்லது பண்ணிட்டேன்’ என உள்ளுக்குள் தட்டிக்கொடுத்து, பின் அவளிடம், “அதான் ராசி என்னோட தனிமையில் குழந்தை ஏக்கம் அதிகமா வந்து மெணடலி டிஸ்டர்ப் ஆகுறேன். காரணமே இல்லாம அவங்க மேல கோவப்படுறேன். எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கலாம்னும் தோணுது. வெட்கத்தை விட்டு சொல்லணும்னா நைட் அவங்க வேண்டாம்னு சொன்னாலும் குழந்தைக்காக வலிய போய் டிஸ்டர்ப் பண்றேன். எங்களது லவ் மேரேஜ் இருந்தாலும் நானே போய்ன்றது.. நிறுத்தி நிதானமாக கொஞ்சம் அசிங்கமா இருக்கு ராசி” என்று தலைகவிழ்ந்தபடி சொல்லி ராசியின் முகமாறுதலை அளவிட்டாள்.
“அண்ணி உங்களுக்குமா!!” என அதிர்ந்தாள்.
அதில் அதிர்ந்த விஜி, “உங்களுக்குமான்னா? வேற யாருக்கு ராசி இந்த பிரச்சனை?” கண்ணைத் துடைத்தபடி நிமிர்ந்து கேள்வி கேட்க...
“அ..அது ஒரு ப்ளோல வந்திருச்சி” என்றாள் சமாளிப்பாக.
விஜியிடம் மணி முழுவதும் ராசியைப் பற்றி சொல்லவில்லை. இருந்தாலும் இரவு விஷயம் ராசியின் பல்ஸ் பார்க்க சொன்னது. அது அதிகமாகவே பார்த்தது. “சே.. அண்ணி அப்படி யாராவது பண்ணுவாங்களா?” என்ற பதிலை எதிர்பார்த்திருக்க, ‘அண்ணி உங்களுக்குமா’வில் அதிர்ந்து போனாலும் ராசிக்கு பதில் சொல்லவென்று “ஓ.. இதுக்கு என்ன சொல்யூஷன் தெரியல ராசி. அதான் உன்கிட்ட மனசுவிட்டுப் பேசினா கொஞ்சம் ரிலீஃபா இருக்கும்னு தோணிச்சிது” என்றாள்.
சில வினாடிகள் யோசித்த ராசியின் முகம் பிரகாசமாக, “அண்ணி நான் சொன்னா தப்பா எடுத்துக்ககூடாது. “நீங்க படிச்சிருக்கீங்க புரிஞ்சி பதில் சொல்லுங்க. நாம ஏன் சைக்யாட்ரிஸ்ட் பார்க்கக்கூடாது?”
‘ஆஹா! ஆடு வகையா வந்து மாட்டுதே’ என மனதினுள் சிரித்து, “நானும் அதை யோசிப்பேன் ராசி. தனியா போறதுக்கு ஒரு மாதிரியிருக்கு. இதுமாதிரி விஷயத்தை டாக்டர்கிட்ட பேசவும் சங்கடமாயிருக்கு. உங்க அண்ணாகிட்ட சொன்னா ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னு சொல்லல. ஸோ எல்லாத்தையும் மனசுல போட்டுப்போட்டு புழுங்குறேன் ராசி” என்று புளுகி வராத கண்ணீரை துடைத்து அவள் தோள் சாய்ந்தாள்.
விஜியின் தோளை ஆதரவாக தடவிக்கொடுத்து, “நாம போகலாம் அண்ணி” என்றாள். அவளுக்குமே தனக்கும் பார்த்தால் என்னவென்று தோன்றியது. தான் படும் சித்ரவதையும் கொஞ்சநஞ்சம் அல்லவே!
“தேங்க்ஸ் ராசி. நீதான் ஒர்க் பண்றியே. இன்னைக்கு நாளைக்கு விட்டா உனக்கு ஃபுல் ஒர்க்கிங் டே ஆச்சே. என்ன செய்யலாம்?” என்று புலம்ப...
“இன்னைக்கே போகலாம் அண்ணி.”
‘நிஜமா?’ என்பதுபோல் பார்த்தவளிடம்... “நிச்சயமா போறோம். பேங்குக்கு போற வழியில ஒரு சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் பார்த்திருக்கேன். ஆனா, அது நம்ம ஆஃபீஸ்கிட்ட இருக்கே” என யோசித்தாள்.
“இன்னைக்கு ரெண்டு பேருமே வெளிய போறாங்க ராசி. நைட் கூட வர லேட்டாகும் சொன்னாங்க.”
“அப்ப சரி. நான் பத்து நிமிஷத்துல கிளம்பி வர்றேன் சாப்பிட்டு கிளம்பலாம்.”
“சரிமா. நான் ஹால்ல வெய்ட் பண்றேன்” என்று வெளியே வந்தவள் மணிக்கு மெசேஜ் தட்டிவிட்டு ஷோபாவில் அமர்ந்தாள்.