- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
23
அவந்திகாவை அழைத்துப்போக சந்தோஷ் வர, கணவன் வராதது சின்ன வருத்தத்தைக் கொடுத்தது. வீடு வந்ததும் தன்னை சுத்தம் செய்து, நைட்டியில் வந்தவளுக்கு, வரவேற்பறையில் வைத்துச் சென்ற கைப்பை நினைவு வந்தது. அதில் இருந்த புகைப்படத்துடனான தகுதிக் குறிப்பை எடுத்து, ஒவ்வொன்றாகப் பார்த்து, அதன் பின்புறம் பெயர் எழுதி, அவர்களின் தகுதிக் குறிப்பைத் தனியே வைத்தாள். அதை கைபேசியில் புகைப்படம் எடுத்து, மடிக்கணிணியில் பதிவேற்ற என்று. பின் தகுதிக் குறிப்பை அந்த உறைக்குள் வைத்து, புகைப்படத்தை வைக்க உரை தேடினாள்.
“அண்ணி” என்று வந்த சந்தோஷ் கண்களில் புகைப்படம் பட, “அதுக்குள்ளயா அண்ணி பொண்ணு பார்த்துட்டீங்க? செம ஸ்பீட்தான் போங்க. ஆனா, ஏன் எல்லாம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவா இருக்கு?”
‘அதுக்குள்ளேயா பொண்ணு பார்த்திட்டீங்க’ என்றதும் மறுத்து, ‘இல்லை வேலைக்கு’ என சொல்ல வாயெடுத்து அப்படியே நிறுத்தியவள், ‘பார்றா புள்ள வான்டடா வந்து வம்புல மாட்டுது என நினைத்ததும் முறுவல் தோன்றியது.
“அது சந்தோஷ், ஜாதகம் அது இதுன்னு அலைக்கழிக்கிறதால, பொண்ணுங்கள்லாம் ஷார்ப்பாகிட்டாங்க. போட்டோஸ் எடுக்கறதே இல்ல. பேரண்ட்ஸ் சும்மாயிருப்பாங்களா சொல்லுங்க? வீட்டுக்குத் தெரியாம அபிஷியல் தேவைக்கு வச்சிருக்கிற போட்டோஸைத்தான் அனுப்புறாங்க.
“ஓ... இதுல இவ்வளவு விஷயமிருக்கா” என்றவன் கண்கள் போட்டோக்களை பார்த்தபடி “எல்லாருமே டாக்டர்ஸா?” என்றான் கேள்வியாக.
“ஆமா சந்தோஷ்.”
“அப்ப நேத்தி போட்டோ மட்டும் ஏன் இல்லை” என்று தன்னையறியாமல் சொல்லியபடியே புகைப்படத்தைப் பார்த்தான்.
சட்டென்று அவந்திகாவின் முகம் பளீரிட, அதே நேரம் வேலை முடிந்து, களைப்புடன் வீட்டினுள் நுழைந்தபொழுது, அண்ணி கொழுந்தனின் வார்த்தைகளைக் கேட்டபடி வந்த புவனேஸ்வரியின் மனமும் முகமும் ஒருசேர மலர்ந்தது.
“ஏன் சந்தோஷ் நேத்தி யாரு? அவங்க போட்டோ இதுல இருக்கணும்னு ஏன் நினைக்கிறீங்க?” என கொக்கிபோட்டாள்.
அண்ணியின் உள்குத்தை அறியாமல், “என்னண்ணி நீங்க. நம்ம நேத்தியைத் தெரியாதா? நேத்ராதான் அது.”
“ஓஹ்ஹோ! நேத்ரா எப்ப சந்தோஷ், எனக்குத் தெரியாம நேத்தின்னு பெயர் மாத்தினா?” என்று உதட்டில் கேலிப் புன்னகையுடனும், அவனை ஆராய்தலுடனும் பார்க்க,
ஈஸ்வரி மருமகளுக்கு மனதினுள் சபாஷ்போட்டார்.
சட்டென்று நிமிர்ந்தவன் தான் என்ன உளறிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, “அ..அது அண்ணி. எப்படின்னு சொல்லத் தெரியல. ஆரம்பத்துல இருந்து அப்படித்தான் கூப்பிடணும்னு தோணிச்சி. அவளைக் கடத்தப்போறதைக் கேட்டதும், சாரி அண்ணி. உங்களைவிட அவளைக் காப்பாத்துறதுதான் முக்கியம்னு தோணிச்சி” என்றான்.
“அதான் ஏன் சந்தோஷ்?” என தன் பிடியிலேயே நிற்க,
“அதைத்தான் அண்ணி சொல்றேன். தெரியலன்னு” என்றான் பாவம்போல.
“சந்தோஷ் இத்தனை பொண்ணுங்க போட்டோ பார்த்தீங்களே, அதுல எந்தப்பொண்ணு முகமாவது உங்க மனசுல பதிஞ்சிதா?”
“இல்ல அண்ணி.”
“இல்லை இல்ல. அதுக்குப் பதிலா நேத்ரா நியாபகம் வர்றாள்னா, உங்க மனசு, மனைவியா அவளைத்தான் அங்கீகரிக்குதுன்னு அர்த்தம். நாங்க எத்தனை பொண்ணு பார்த்தாலும், உங்களுக்கு திருப்தியிருக்காது. உங்களுக்குத் தெரியாமலேயே அவளை லவ் பண்றீங்க. அதை நீங்க உணரலைன்றதுதான் உண்மை” என்றாள்.
“நேத்ராகிட்ட கைபிடிச்சி உரிமையா நீங்க பேசுறதை, நானே சில டைம் கவனிச்சிருக்கேன். சொல்லப்போனா, ஹாஸ்பிடல்ல ரெண்டு டைம் மீட் பண்ணியிருக்கீங்க. அப்பக்கூட பேசிக்கலை சின்ன அறிமுகம்தான் உங்களுக்குள்ள. ஹாஸ்பிடல்ல இருந்து எங்க வீட்டுக்கு போனப்ப, அவளை நேத்தின்னு அழைச்சி, காரணம் இருந்தாலும், ஒரு பொண்ணோட கையை அவ்வளவு நேரம் பிடிச்சிருந்தது வித்தியாசமாதான் இருந்தது. அப்புறம் உங்க ப்ளாஷ்பேக் சொல்லும்போது, அவளை வெளியே போகவிடாமல் தடுத்து, நல்லா கேளுங்க கைபிடிச்சித் தடுத்து, உங்க பக்கத்துல, கிட்டத்தட்ட இழுத்து உட்கார வச்சிக்கிட்டீங்க. இப்ப சொல்லுங்க? நான் சொன்ன பாய்ண்ட்ஸ்லாம் சரிதான?” என்றாள் சிரிப்போடு.
“ஓ... இதையெல்லாம் கவனிச்சீங்களா. ஆனா, எனக்கெதுவும் தெரியலையே?”
“அதைத்தான் சந்தோஷ் நானும் சொல்றேன். நேத்ராகூட பழகுறதுல உங்களுக்கு உறுத்தல் இல்ல. ஒருவித உரிமையுணர்வுதான் தெரிஞ்சது. ம்... சொல்லுங்க நேத்ரா ஓகேவா!” என்றாள் எதிர்பார்ப்போடு.
“ம்... டபுள் ஓகே. பட் ஒன் கண்டிஷன்?”
“என்ன நாங்க யாரும் அவகிட்ட இந்த விஷயத்தைப்பற்றி பேசக்கூடாதுன்னு சொல்றீங்களா?”
“சூப்பர் அண்ணி! இவ்வளவு புத்திசாலி ஒய்ஃபா எங்கண்ணனுக்கு?” என்றவன், “அதே காரணம்தான் இப்பவும். மேரேஜ் ஒன் ஆர் டூ இயர்ஸ் கழிச்சித்தான்.”
“ஏன்டா அவ்ளோ கேப்?” மகனருகில் அமர்ந்து ஈஸ்வரி கைவிரித்து கேட்க,
“புவன்ஸ் அவ்ளோ கேப்லாம் இல்ல. இவ்ளோதான்” என்றான் விரித்த கையை சுருக்கி.
கார்த்திக் மனைவிக்கு அழைத்து, “இன்னைக்கு நைட் நான் வரமாட்டேன். நீ உள்ள பூட்டிட்டுப் படு” என்றதும், ஏன் எதற்கென்ற மனைவிக்கேயான கேள்விகளுடன் போனை வைத்தாள் அவந்திகா. இரவில் கணவன் சொன்னாற்போல், உள் தாழ்ப்பாள் போட்டு படுத்தவளுக்கோ, கணவன் அருகில் இல்லாதது எதையோ இழந்தாற் போலிருந்தது. அறையை சுற்றி வட்டமிட்டவள், அங்கிருந்த அனைத்தும் பூட்டி இருக்க, பார்க்கவோ, தொடவோ எதுவுமில்லை. நீண்ட நேரம் கழித்து யோசனையுடனேயே உறங்கினாள்.
இரவு சரியாக இரண்டு மணியளவில் பால்கனி வழியாக ஒரு உருவம் வந்தது. மெல்ல மனைவியை நெருங்கி அவளையே பார்த்தவாறு, அன்றுபோல் இடது கையை அவளின் மறுபுறம் ஊன்றி, வலது கையால் கலைந்து போயிருந்த நெற்றி முடி வருடி, “ஹேய் அழகி! உன்னோட கார்த்திக் வந்திருக்கேன். நீ தூங்கிட்டிருக்க” என்று கனிவோடு அழைத்தான்.
ஏதோ கனவுபோல் எண்ணி உறக்கத்தில் உதட்டைச் சுழித்துச் சிரித்து, வலது பக்கம் திரும்பிப் படுத்தவளின், உதட்டைத் தொட்டு, “தூக்கத்துல கூட உன் உதடு சிரிக்குது பாரு” என்று குனிந்து முத்தமிட்டான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள், சட்டென்று விழித்துப் பார்த்தாள். யாரோ தன்னை முத்தமிடுவது தெரிய, அதிர்ச்சியில், எதிரில் இருப்பவன் யாரென்று அறிய முயற்சிக்காமலேயே, “கார்த்திக்க்க்” என அவனை பிடித்துத்தள்ளி, அலறியடித்துக்கொண்டு எழப்போனாள்.
எழவிடாமல் இருபக்கமும் தடுத்து, “உனக்கு இதே வேலையா போச்சி” என்றான் குறும்பாக.
“கார்த்திக்! நீங்களா? ஷப்பா! ஒரு நிமிஷம் பயந்தே போய்ட்டேன்” என்று எழுந்து சாய்ந்த வாக்கில் அமர்ந்தவாறு வாசல் பார்த்தவளுக்கு, உள்ளே பூட்டியது நியாபகம் வர, கணவனை முறைத்து, “திருடா திருந்தவே மாட்டீங்களா?” என்றாள்.
“ஏன்டா திருந்தணும்? என்னைத் தவிர, யார் உன்கிட்ட உரிமையா நடந்துப்பாங்க. நீதானம்மா கார்த்திக்கைப் பார்க்கணும்னு ஆசைப்பட்ட. அதான் வேலைக்கு நடுவுல ஒரு என்ட்ரி கொடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.”
“நான் ஒண்ணும் ஆசைப்படல.”
“ஓ... சரிவிடு. கார்த்திக் தான் உன்னைப் பார்க்கணும்னு ஆசையில வந்துட்டான். அதனால, அந்த முதல் முத்தம் கொடுத்து அனுப்பு.”
“கொடுக்கலாமே! முதுகுலதான கொடுத்துட்டா போச்சி.”
“ஹம்... என்னோட வாலிபம் எல்லாம் இப்படி வாடி வதங்கணுமா அவந்தி. அதை வனப்பாகவும், செழிப்பாகவும் மாத்தலாமே!” என்றான் சோகமான குரலில்.
“அது உங்க தலையெழுத்து. நானென்ன பண்ணமுடியும்?” என்றாள் அலட்டலாக.
“ஏன்டி, புருஷன் பக்கத்துல வந்தா, இந்த ஹார்மோன்லாம் சேஞ்சாகி, எதோ ரசவாதம் நடக்கும்னு சொல்வாங்களே. அப்படி எதுவுமில்லையா?”
வந்த சிரிப்பை அடக்கினாலும், அவளுள்ளும் நடக்கத்தான் செய்தது அந்த ரச(னையான)வாதம். அதை மறைத்து, “எனக்கு எந்த வாதமும் வரல. இப்படியே பேசுனீங்கன்னா, நமக்குள்ள வாக்குவாதம் வரும்னு கன்பார்மா தெரியுது.”
சட்டென்று கார்த்திக் வெளியேற, நாராயணன் வந்து, “ஏய் என்ன கொழுப்பா? உடம்பு சரியில்லாத பொண்ணு, பொண்டாட்டியா இருந்தாலும் தொடக்கூடாதுன்னு பார்த்தா, ஓவரா பண்ற? முதல் நாள் சான்ஸ் கிடைச்சப்பவே முடிச்சிருக்கணும். விட்டேன் பாரு. ஏன் சொல்லமாட்ட” என எகிறினான்.
‘சீன் பார்ட்டி. ஏன் முடிச்சிருக்க வேண்டியதுதான? வெட்டி ஜம்பம்ன்றது ரொம்ப சரி’ என்றெண்ணி, அமைதியாக கணவனின் கண்களையே அழுத்தமாகப் பார்க்க,
“ஏன் அப்படிப் பார்க்கிற?” என்றான் இறங்கிய குரலில்.
“ம்... கல்யாணத்தன்னைக்கு நைட் எங்க அத்தை சொன்னது சரிதான்னு பார்க்கிறேன்.”
“என்ன சொன்னாங்க? என்ன சரி?”
“அதை அவங்ககிட்டேயே கேட்டுக்கோங்க.”
“ப்ச்... போ அவந்தி. நான் என்ன செஞ்சா என்னை ஏத்துக்குவ? நீ ஏன் என்மேல கோவமா இருக்கிறன்னு கூட தெரியல. அக்யூஸ்டா இருந்தா, முகம் பார்த்தே கண்டுபிடிச்சிருவேன். இது நம்ம வாழ்க்கை. இதுல கார்த்திக்கும், நீயும்தான் இருக்கணும். போலீஸ்லாம் என்ட்ரியாகக் கூடாது” என குரல் கம்ம சொல்லியவனை,
அமைதியாக பார்த்திருந்தவள், “எனக்கு ரொமாண்டிக் சி.என் தான் பிடிச்சிருக்கு” என்றாள் தோளைக்குலுக்கி அலட்சியமாக.
“ஏன்?”
“ஏன்னா? அவங்கதான் லவர்பாய். நீங்க சீட்டர். என்னை இதுவரை நம்பலதான. நம்பி இருந்தா, யார், என்னன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி இருப்பீங்கள்ல. நான் முழுக்க முழுக்க உங்களை நம்பினேனே கார்த்திக். நீங்க யாருன்னு தெரியாமலேயே, மேரேஜ் பண்ற லெவலுக்கு. அப்பவாவது சொல்லியிருக்கலாம். உங்களுக்கு மட்டும் ஏன் என்மேல நம்பிக்கை இல்லாமல் போச்சிது. அந்தளவுக்கு நான் நடந்ததா நினைவில்லையே கார்த்திக்.”
“அதில்லைடா” என்றவனை கையமர்த்தி, “உங்க தொழில் ரகசியம், மத்தவங்களுக்கு தெரியக்கூடாதுதான். நான் இல்லைன்னு சொல்லமாட்டேன். ஆனா, மத்தவங்களும் நானும் ஒண்ணா கார்த்திக்? உங்களுக்கு நான் ஒண்ணுமே இல்லையா? இவ்வளவுதானா, நீங்க என்மேல வச்சிருக்கிற நம்பிக்கை? உங்களைப்பற்றி ஒண்ணுமே தெரியாம இருந்திருக்கோமேன்னு நினைக்கும்போது, எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? ப்ச்... போங்க கார்த்திக்” என தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.