- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
23
சமையல் முடித்து சாப்பிட்டு படுக்கப் போகும்போது “மொழி அவங்களை என்ன பண்ணலாம்?” எனக்கேட்டான்.
“எவங்களை?”
“உன் எதிரிகளை.”
“அவங்களை நீங்க ஏன்?”
“உனக்காகத்தான்மா. பழிவாங்குறது லட்சியம்னு சொல்ற? அதுக்கான ப்ளான் பண்ணியிருக்கியா? ப்ளான்னா எந்த மாதிரி? உன்னைச் சார்ந்தவங்களைக் கொன்ன மாதிரி வெட்டியா? இல்ல துப்பாக்கியாலா? இல்ல அடிச்சேவா? எதுனாலும் சொல்லு செய்திரலாம்.”
“அவங்களைக் கொன்னுட்டு நீங்க ஜெயிலுக்குப் போகவா? அவங்க அளவுக்கு நாம மிருகமில்லை.”
“பழிவாங்குறதுதான உன்னோட லட்சியம். அதுக்காகத்தான புருஷனையே வேண்டாம்னு வந்து உட்கார்ந்திருக்க? எப்படி செய்யுறதுன்னு சொல்ல வேண்டியதுதான?” என்றதும் அடிபட்ட பார்வை பார்க்க... அவனோ, “ஆமா இப்படிப் பார்த்துட்டேயிரு” என முனகினான்,
“நான்தான் சொன்னேனே இளா அத்தான் வருவாங்க. அவங்க எது செஞ்சாலும் எனக்குச் சம்மதம்னு.”
“ஏன் அவன் ஜெயிலுக்குப் போகமாட்டானா? யாராயிருந்தாலும் கொலை செய்தா களி திங்க வேண்டியதுதான்.”
“ஒருத்தனைக் கொலை செய்தா மட்டும்தான் சாகடிக்க முடியுமா? உயிரோட இருக்கணும். ஆனா, இருக்கக்கூடாது. செஞ்ச துரோகத்தை நினைச்சி காலத்துக்கும் கண்ணீர் விடணும். எனக்கும் கொலைவெறி இருந்ததுதான். இப்ப குறைச்சிக்கிட்டேன்.”
“அப்ப போலீஸ்ல பிடிச்சிக் குடுத்திரலாமா?”
“அடுத்த நாளே வெளியில் வந்திருவாங்க பரவாயில்லையா?”
“அப்ப மிஸ்டர்.இளநாதன் வந்தாதான் சரியாகும்னு நம்புற?”
“நிச்சயமா. அதுல எப்பவும் சந்தேகம் வந்ததில்ல.”
“சரி நீ போய்ப்படு டைமாகுது.”
“நீ... நீங்க...” கோவித்துக் கொண்டானோ என்ற தவிப்பு அவளிடம்.
“மங்கை உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றான் கண்ணடித்து.
“யாருங்க?”
“காத்திரு ஏர்போர்ட்!”
“இளா அத்தான் கிடைச்சிட்டாங்களா?” என்றாள் ஆர்வமாய்.
“ஏய் கற்பனை பண்ணாத. அவர் கிடைச்சா நீ என்னோட வர்றேன்ன பிறகு, நான் எப்படி கூட்டிட்டு வராமல் ஆட்டம் காட்டுவேன். நிம்மதியா தூங்கு போ.”
“ம்... நீங்க?”
அவளின் தயக்கம் உணர்ந்து, “நான் இங்கயே படுத்துக்கறேன். நான் இல்லாத நாள்ல எப்படி படுத்தியோ அதையே பாலோ பண்ணு.”
“தனியா படுத்தாலும் நான் தூங்கினேன்னு பார்த்தீங்களா?”
“பார்க்கலைதான்மா. தேவையில்லாத கற்பனைகளை ஏன் வளர்க்கணும். எப்படியும் இளநாதன் வந்தால்தான் வருவேன்னுட்ட. இப்ப சூழ்நிலையில நான் வெளியில காத்திருக்கலாம். உள்ள வந்தா என்னோட ஒய்ஃப் தானேன்னு மனசு சஞ்சலப்படும். அதிரடியா எதாவது பண்ணிட்டேன்னா!”
“ஐயோ! ஏன் இப்படிப் பேசுறீங்க?”
“உண்மையைச் சொன்னேன்மா. நீ உள்ள போ. சித்தி வெளியில படுத்துக்க பாய் தலகாணி குடுங்க” என்றான் சத்தமாக.
“அத்தை தேவதானம்பட்டி போயிருக்காங்க.”
“எப்ப? சாப்பிடும்போது நம்மளோடதான இருந்தாங்க?”
“நீங்க பாத்ரூம்ல இருந்த சமயம் பிரஷாந்த் வந்து கூட்டிட்டுப் போயிட்டான். காலையில வர்றதா உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க. நான்தான் மறந்துட்டேன்.”
“ஹ்ம்.. அவங்க ப்ளான்லாம் நல்லாதான் போடுறாங்க. இங்கதான் எந்த மாற்றமும் இல்லையே. சரி பாய் இல்லன்னா பெட்ஷீட் குடு?”
“உள்ள ஹால்ல படுக்கலாம்ல?”
“வேணாம் இதுவே பெஸ்ட். சப்போஸ் உன் கனவுல நான் வநதால் கூட அடிச்சி வெளில அனுப்பிரு. அட பாய் இங்கயிருக்குதா. பார்றா எல்லாம் செட்டா எடுத்து வச்சிருக்காங்க. கதவை உள்ள பூட்டிக்கோ. குட் நைட்” என்று பாயைப்போட்டு பெட்ஷீட் விரித்து, தலையணை போட்டு அப்படியே கால்மேல் கால்போட்டவன் வாயாலே மியூசிக் போட்டு...
காற்றுக்குத் தூதுவிட்டு கவிதைகள் பாடச்சொல்லு
நிலவுக்குத் தூதுவிட்டு தீபங்கள் ஏற்றச்சொல்லு
யாரும் இல்லாத ஆள் என்று பூமியில் யாருமில்லை
கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை
மெல்ல கதவடைத்து உள்ளே வந்தமர்ந்து நகம் கடித்தபடி கதவையே பார்த்திருந்தாள் திருமொழி.
மார்புக்குத் திரையிட்டு
மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே.
என் வயதையும்
வதைக்காதே.
எல்லா மொழிக்கும்
கண்ணீர் புரியும்
உனக்கேன் புரியவில்லை!
பாடலின் வரிகளும் இடையிலான வரிகளைக் கேட்ட மங்கையவளோ சடாரென கதவைத் திறக்க, இளங்கதிர் அவளைக் காண, அவளோ கண்களால் ‘ஏன்?’ என்பதாய்ப் பார்த்தாள்.
கண்ணால சொல்லுற
கையால சொல்லுற
ஓகேன்னு மட்டும்
சொல்ல மாட்டேன்னுற
நீ ஓகேன்னு மட்டும்
சொல்ல மாட்டேன்னுற
“என்ன மேடம் தூக்கம் வரலையா? ஐயாவோட பாட்டைக் கேட்க ஆவலாய் வந்திருக்கீங்க போல?”
“ஆமா பாட்டைக் கேட்டு வர்றாங்க. இப்படிக் கத்திக்கிட்டிருந்தா எப்படி தூங்குறதாம்?”
“என் பாட்டைக் குறை சொல்கிறாயா?” என் திறமையைக் காட்டுகிறேன் பார்.
பாட்டும் நானே..
பாடும் இளங்கதிரும் நானே
தூங்கும் உனை நான்
வெளியே வரவைத்தேனே!
பாட்... ‘ம்..ம்..’ வாய் திறக்க முடியாமல் திணற...
“அடுத்த லைன் வெளியில வந்தது குரல்வளையைக் கடிச்சிக் குதறிருவேன் ஜாக்கிரதை. பக்கத்துல உள்ளவங்க என்னமோ ஏதோன்னு பார்த்துட்டு பயந்து போறாங்க. முதல்ல உள்ள வாங்க.”
“ம்கூம்.. நான் மாட்டேன்” என வீம்பு செய்ய...
“ப்ச்... அடம்பிடிக்காம வாங்க. உங்களை நான் எதுவும் செய்யமாட்டேன்.”
“நீ எதுவும் செய்யமாட்ட. நான் எதாவது செய்துட்டா?”
“நீங்க அவ்வளவு நல்லவன் கிடையாது. சோ, ப்ளீஸ் கம்.”
“அப்ப நான் நல்லவனாகுறேன்” எனவும், மனைவியின் முறைப்பில் “எல்லா பெண்களுக்கும் நல்லவனைத்தான் பிடிக்குமாம்.”
திடீரென்று திருமொழி சுற்றுமுற்றும் பார்த்தாள்.
“என்ன தேடுற ஏர்போர்ட்?”
“இல்ல. அவசரத்தேவைக்கு வேணும்னு இங்க ஒரு கம்பு வச்சிருந்தேங்க. எங்க போச்சிது தெரியல.”
அவள் சொன்னதற்கான அர்த்தம் புரியாமல் தானும் தேடியபடி, “இரு நான் பார்க்கிறேன். ஆமா. ஏன் இப்பக் கேட்கிற? இதோ இருக்கே” என்று எடுத்து அவளிடம் நீட்டினான்.
“ஒரு நல்லவனை அடிக்கிறதுக்கு” என்றதில் நீட்டிய கம்பை தூக்கி விட்டெறிய, “அதைவிட்டா கையில்லையா” என விரட்ட... அவளைத் தாண்டி வீட்டினுள் நுழைந்தவன் அவளிடமிருந்து தப்பித்தபடியே கதவைப் பூட்டி அப்படியே நின்றான். சிரிப்புடனேயே அடிக்கக் கை ஓங்கியவள் கணவன் பார்வைதனில் உறைந்து போக... “ஹேய் மங்கை அடிக்கலையா?” ஹஸ்கியாகக் கேட்ட குரலில், ‘ஹான்’ என விழித்தபடி நின்றாளவள்.
அவள் கையைப் பிடித்து, “இப்படி அந்தரத்துல நிற்காம அப்படியே அடிக்கணும்” என்று தன் கன்னத்தில் வைத்தான்.
“நா..நான் தூங்கப்போறேன்” என்று கையை உருவிச்செல்ல, தன்னிடமிருந்து விலகிய கையை பிடித்து நிறுத்த முயற்சித்ததில் அவளின் கால்கள் தடுமாற, மற்றொரு கையையும் பிடித்து நிறுத்தி, “என்ன அவசரம் மங்கை? நான் உன் புருஷன்தான்.”
‘அதான பயமாயிருக்கு. மத்தவனாயிருந்தா தொட்டா வெட்டிரலாம். தாலி கட்டினவனை...’ தன்னை மீறிய பயம் அவளுக்குள். தன் காதலை உணர்ந்ததால் வந்த தடுமாற்றமோ! “கொஞ்சம் விடுறீங்களா? எனக்கு ஒரு மாதிரியிருக்கு.”
“அடிப்பாவி! எங்கெங்கயோ கை வச்ச மாதிரி இத்தனை சீனா? கையைத்தானடி பிடிச்சேன். இப்படி இடுப்பைப் பிடிச்சேனா?” என்று அவளின் இடது கையைவிட்டு, தன் வலக்கையால் அவளின் இடுப்பை வளைத்து, “இப்படிக் கட்டிப்பிடிச்சேனா?” முடியு முன் அவளை மொத்தமாய் அள்ளியணைத்து, “இல்ல இப்படிக் கிஸ்தான் பண்ணினேனா?” நெற்றி கன்னம் என்று முத்தமிட்டு, “இந்த நல்லவனைப் பிடிச்சிருக்கா?” என்றான் கிசுகிசுப்பாய்.
அந்த அணைப்பில் திணறியவள் பலம் கொண்ட மட்டும் அவனை விலக்கி தன்னறைக்குள் சென்று கதவைத் தாழிட்டாள்.
“ஹேய் ஏர்போர்ட்! விடு நான் கெட்டவனாகவே இருந்திருறேன்” என சத்தமாகச் சொல்ல, அவளிடமிருந்து பதிலில்லை என்றதும் அங்கு ஓரமாகயிருந்த மடக்குக் கட்டிலை எடுத்துப்போட்டுப் படுத்தவனின் கால்கள், முட்டிக்குக் கீழ் பாதி வெளியே தொங்கியது.
“மொழி கட்டில் ஏன் சின்னதாயிருக்கு? உன் ஹைட்டுக்கு ஏத்த மாதிரி வாங்குனியா? ஏன் பதில் பேசமாட்டேன்ற? இங்க பார் மொழி என் கால் வலிச்சா நீதான் அமுக்கிவிடணும். மொழி இந்தக் கட்டில் குத்துது பாரேன். மொழி சிங்கிள் காட்தான். அதுக்காக திரும்பிப் படுக்க முடியாத அளவாவா இருக்கணும். வீட்டுக்கு வந்த மருமகனை இப்படி டார்ச்சர் பண்ணக்கூடாது. இந்தியத் தொல்லைக்காட்சியில் முதல்முறையாக கணவனை டார்ச்சர் செய்த மனைவின்ற புகழ் உனக்குத்தான் போ. மொழி ஹையோ கால் வலிக்குதுடி. என்னன்னு பார்க்கமாட்டியா? போடி புருஷன் மேல கொஞ்சமும் கோவம் வரல உனக்கு” என்றான் சலிப்பாக.
உள்ளே அவளோ விழுந்து விழுந்து சிரித்தாள். ‘காமெடி பண்ணினா கோவம் வருமா கதிர் அத்தான். இது தெரியாமல் போச்சே.’ அவள் கணவனின் அலம்பல்கள் அதிகமாகிக் கொண்டே போனது.
“மொழி போ நான் கார்லயே படுத்துக்கறேன். உன் கனவுல பேய் பிசாசோட கொசுவும் வந்து பிடுங்கட்டும். அப்ப என்னைக் கூப்பிடுவதான அப்ப இருக்கு உனக்கு. போ நான் போயிட்டேன்” என்று கதவருகில் சென்றவன் வருகிறாளா என்று திரும்பிப் பார்த்தான்.
அறை வாயிலில் இரு கைகளையும் குறுக்கே கட்டி, சின்னப் புன்னகையுடன் பார்வையைத் தன்மேல் பதித்து கண்களும் சேர்ந்து கேலிப்புன்னகை செய்தபடி நிற்கக்கண்டு, மங்கையின் மணாளவன் மயங்கித்தான் போனானோ! ‘என்ன பொண்ணுடா! சே இது நிறைய சினிமாவுல சொல்லிட்டாங்க. நாம வேற யோசிக்கலாம்’ என்று அவசரமாக யோசித்தவனுக்கு மனைவியின் பெயருக்கான அர்த்தம் விளங்க ‘என்ன மங்கைடா!’ என்றான் மனதினுள்.
இமைக்காமல் அவன் பார்த்த பார்வைதனில் மங்கையவளோ நாணம் வந்து தலைகுனிந்து, “உள்ள வந்து படுங்க” என்று மென்குரலில் அழைத்தாள்..
ஆச்சர்யத்தில் கதிரின் பார்வை விரிய மனதிற்குள் ஒரு அசத்தலான புன்னகை. “உனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே? உள்ள இருக்கிறது பெரிய கட்டில் கிடையாது. ரொம்ப அட்ஜஸ்ட் பண்ணனும்?”
“பரவாயில்லை நான் இந்த சிங்கிள் கட்டில்ல படுத்துக்கறேன்” என்றதில் கதிரின் ஆர்வம் வடிய, கணவன் முகம் பார்த்தவளுக்கோ அளவிட முடியாத சிரிப்பு. அடக்கியும் அடங்காமல் அடம்பிடித்து வெளியே வந்தது.
“இதுக்கு நான் வெளியவே படுத்துப்பேன்” என்று கதவைத் திறக்கப் போனவனை ஓடிப்போய் தடுத்தவள், “எனக்குப் பயமாயிருக்கு. உங்க கையைப் பிடிச்சிக்கிட்டுத் தூங்கவா?” என தலைசாய்த்துக் கேட்க.,
மனைவியின் அச்செய்கையில் மயங்கி ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ மனமதில் சந்தோஷ சிறகு விரித்தாட, ‘ரொம்ப வீம்பு செய்தா வேலைக்காகாது.’ நினைத்த நொடி “ம்.. நீ பயப்படுவியேன்னு வர்றேன்” என்றான் கெத்தாய்.