- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
22
திருமண வரவேற்பு இனிதே நிறைவடைய வந்தவர்கள் விடைபெற்று கிளம்ப, சந்திரன் குடும்பத்தினர் வீடு வர, இரவு பதினொன்றைத் தாண்டியது.
சற்று நேரத்திற்கெல்லாம் அவந்திகா பால் எடுத்து வர, கட்டிலில் அமர்ந்து மடிக்கணிணியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவனை, எப்படி அழைப்பது என தெரியாமல் விழித்தாள். வார்த்தைக்கு வார்த்தை வாயில் விளையாடிய, “கார்த்திக்” என்ற பெயரை சொல்லி அழைப்பது கடினமாகப்பட்டது இப்பொழுது.
மனைவியின் வரவை அறிந்தவனும் கவனியாதது போலிருந்தான்.
“ம்க்கும்... என தொண்டை செரும, அப்பொழுதும் அவன் அசையாதிருக்கவும், அவன் முன் பாலை நீட்டி, “பாலை குடிங்க” என்றாள். அதையும் கார்த்திக் கவனியாததுபோல் காற்றோடு பறக்கவிட, பல்லைக்கடித்தபடி, “எக்ஸ்க்யூஸ்மி .மிஸ்டர் நாராயணன்” என்றழைத்தும் அவன் திரும்பாததால், அதில் கோவமாகி, ‘சரியான லூசன். பால் குடிச்சா குடி. இல்லன்னா போ’ என மனதினுள் திட்டி பாலை தனியே மூடிவைத்து, குளியலறை சென்று சேலையை கழைந்து, நைட்டி மாற்றி வந்தும் பால் அதே இடத்திலிருக்க, பாலையும், கணவனையும் மாறிமாறி அப்பாவியாக பார்த்தாள் அவந்தி.
ஓரக்கண்ணால் இதைப் பார்த்தவன் மடிக்கணிணியை அணைத்து அதனிடத்தில் வைத்து வந்தான்.
“ப்ளீஸ் இந்த பாலைக் குடிச்சிருங்களேன்” என்று முகத்திற்கு நேரே பாலை நீட்டி கெஞ்சல் குரலில் கேட்டாள்.
“பாலா! நான் நைட் பீர் மட்டும்தான குடி.. சாரி அடிப்பேன். பால் குடிக்கிற அளவிற்கு நான் குழந்தை இல்லையேடா” என்றான் பொங்கி வந்த சிரிப்பை மறைத்து.
“வாட் பீரா?” என அதிர்ந்தவள் அவனின் உதட்டோரப் புன்னகையை கண்டுகொண்டு, குறும்புடன் “ப்ச்... வெறும் பீர்தானா இந்த விஸ்கி, பிராந்தி, ரம், ஜின், பட்டை, சாராயம் இதெல்லாம் கிடையாதா? வெரி பேட் நான்லாம் ஜின்னுதான் ஜில்லுன்னு அடிக்கிறது. நீங்கதான் இன்னும் பாப்பா மாதிரி பீர்லயே இருக்கீங்களே. இன்னும் வளரணும் பாஸ் நீங்க” என்று ஒரு கையால் அவன் தோள்தட்டினாள்.
மனைவியின் பாவனையில், அதைச் சொன்னவிதத்தில் கவரப்பட்டு, “இவ்வளவு ஐடம்ஸ் தெரிஞ்சி வச்சிருக்கியா?” என்று வாய்விட்டுச் சிரித்தவனையே கண்ணகலாமல் பார்த்துக் கொண்டிருக்க, அவளை நெருங்கி வந்து, “இன்னும் வளர்ந்தா பார்க்க சகிக்காதுடா அழகி. உன்னோட 5.6க்கு, இந்த சிக்ஸ்கு ஒன் இஞ்ச் அதிகமே போதும்டா” என்றவன் பார்வை மாறியிருந்தது.
அதுவரை தன்னை தைரியசாலியாக காட்டியவளால் அதைத் தொடர முடியாமல் போனது. “இ...இப்படிலாம் பார்க்கக்கூடாது சொல்லியிருக்கேன்ல.”
“எப்படி பார்க்கக்கூடாது? நீ சொன்னா கேட்கிறதுக்கு அந்த திருட்டுப்பயல் கார்த்திக் இல்லையே! நான் உன்னோட லவர்பாய் சி.என்னாச்சே.”
சின்னதாக அவனிடம் சாய்ந்த மனம் தெளிய, “அதான் தெரியுதுல்ல. அப்புறம் ஏன் என்கிட்ட வர்றீங்க” என்றாள். சி.என்னாக அவளிடம் பேசாமல், கார்த்திக்காக பேசியிருந்தால், நன்றாக இருந்திருக்குமோ என்னவோ!
தான் உளறியதை மறந்து, “ஏன்டா அவந்தி சம்பந்தமில்லாமல் பேசுற? ப்ச்... அதைவிடு. நீதான என்னோட ஒய்ஃப் உன்கிட்ட வராம மத்தவங்ககிட்ட போனால்தான் தப்பு.”
“ம்... அதான் உங்க பழைய காதலி இருக்காளே அப்புறமென்ன, அவகிட்ட போங்க” என முகம் சுழித்தாள்.
‘அதெப்படிடா முடியும்? அது நீயாயிருக்கும் போது’ என மனதினில் நினைத்து, “எனக்கு நீ நீ மட்டும்தான் வேணும்” என்றான் அழுத்தமாக மனதினுள் சிரித்தபடி.
“வெரி சாரி. அதுக்கு சான்ஸேயில்ல.”
“கண்டிப்பா இருக்குடா அழகி.”
“இங்க பாருங்க என்னை அழகின்னு கூப்பிடுறதெல்லாம் வேண்டாம்.”
“ஏன் அந்த அழுக்கன்தான் கூப்பிடணுமா?”
“ம்க்கும்... அவனையும்தான் கூப்பிட வேண்டாம்னு சொன்னேன்.”
“கார்த்திக் பெயரை மூச்சிக்கு முன்னூறு டைம் சொல்வ. இப்ப என்ன?”
“ம்... அதெல்லாம் அப்படித்தான். நீங்க மூணுபேரும் ப்ராடுங்க.”
“ப்ச்... இப்ப ஏன் கண்டதையும் பேசி மூடை ஸ்பாயில் பண்ற?” என்றதும்,
“எ..என்ன மூடு?” வார்த்தைக்கு வார்த்தை பதிலடித்துக் கொண்டிருந்தவள் திணற,
“அதான்டா அழகி நம்ம ஃபர்ஸ்ட் நைட் அன்ட் லவ்மூட்.”
“என்னது?” என வாய் திறந்தவளை இழுத்தணைத்து தன்னுள் சிறை செய்தான்.
வேண்டாமென்று தடுக்கவும் இயலாமல், வேண்டுமென்று உருகவும் முடியாமல், இருதலைக் கொள்ளியாய் மனம் தவிக்க நின்றிருந்தளுக்கு, ‘தன் கணவன்தானே, இவனுடன் சேர்ந்து வாழ்ந்தால் என்ன?’ என்ற எண்ணம் ஒருகணம் தோன்ற, அவளின் மனமோ, ‘உன்னை நம்பாதவனிடம் உன்னை ஒப்படைக்கப் போகிறாயா?’ என கிண்டலாக கேட்டது.
அவளின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை படிக்க முடியாமல், “என்ன அவந்தி உனக்குப் பிடிக்கலையா?” என்றவனின் குரல் உள்ளே போனது.
“எனக்கு குழப்பமாயிருக்கு. இப்ப வேண்டாமே ப்ளீஸ்” என கெஞ்சல் பார்வை பார்த்தாள்.
அவளின் ப்ளீஸில் கரைந்து, மெல்ல கட்டிலில் அமரவைத்து “நீ தூங்கு அவந்தி. நான் சும்மா வம்பிழுக்கத்தான் அப்படிப் பண்ணினேன். நீயா என்னைப் புரிஞ்சி எப்ப ஏத்துக்கறியோ, அன்னைக்கு உன் முத்தத்துக்காகவும், மொத்தத்துக்காகவும் வெய்ட் பண்றேன்.”
“ஐம் சாரி” என்றவளுக்கும் தெரியும், அவன் தன்னிடம் விளையாடத்தான் செய்தான், தன் கணவன் தரம் தாழ்ந்தவன் கிடையாதென்று.
“சாரி எதுக்கு?” என்று படுக்கவைத்து மூடிவிட்டு தலைகோதி, “குட்நைட்” அழகி என அவளருகில் படுத்தான்.
அந்த கரிசனையில் கார்த்திக்கை கண்களுள் நிறைத்து ஆறுதலாக சேர்த்தணைத்துப் படுக்க, மெல்ல தட்டிக்கொடுத்து தூங்கவைத்தான். மனைவியின் அண்மையில் மனம் சஞ்சலம் அடைந்தாலும், அதை புறந்தள்ளி, அவளின் பாதுகாவலனாய் ஆனான் அந்த காவலதிகாரி.
மறுநாளைய விடியல் இனிமையாய் விடிய, தான் பாதுகாப்பாய் எதனுள்ளோ இருப்பதை உணர்ந்து இன்னுமே ஒண்டினாள். தூக்கத்திலேயே கார்த்திக் அவளை இறுக்கியணைக்க, அப்பொழுதுதான் கணவனின் பிடியில் இருப்பதை உணர்ந்து, சட்டென்று கண்விழித்து பார்க்க, கண்ணுக்கு நேரே தெரிந்தது அந்தத் தழும்பு. தன் தம்பியைக் காப்பாற்ற, அந்தப் பதினேழு வயதில் தன்னைவிடப் பெரியவர்கள், அதுவும் ரவுடிகளிடம் போராடியதில் ஏற்பட்ட தழும்பு. அவனில் இருந்து ஒரு கையை விடுவித்து, மெல்ல அந்தத் தழும்பை வருடினாள். கை மெல்ல அவன் மீசைக்குச் சென்று சாதாரணமாக இருந்த மீசையை மேலே பார்க்குமாறு திருகிவிட்டாள்.
“ப்ச்... அழகி கையை எடு. தூங்கும்போது டிஸ்டர்ப் பண்ணக்கூடாது சொல்லியிருக்கேன்ல” என்று அவளை அணைத்து விழி திறவாமலே பிதற்றியபடி தூங்கினான்.
ஒரு நிமிடம் உடலிலுள்ள உணர்வுகள் ததிங்கினத்தோம் போட, சட்டென்று கையை உருவி, தன் தலையில் ஒரு கொட்டு வைத்தாள். ‘தூங்கும்போது டிஸ்டர்ப் பண்ணக்கூடாதா? இன்னைக்கு என்ன பண்ணலாம்?’ மூளையைக் கசக்க, ‘சே... நேத்து வாங்கினதே போதும். இன்னைக்கு வேண்டாம்’ என்று மெல்ல விலகி எழுந்து குளியலறை சென்று தயாராகி வந்தவள் கட்டிலைப் பார்த்தாள்.
கணவனின் பார்வையோ பாவையவளை வட்டமிட, ‘என்ன இப்படிப் பார்க்கிறாங்க? ஒருவேளை நான் பண்ணினதை உணர்ந்திருப்பாங்களோ!” மனதில் தோன்றிய சமயம் சின்ன அதிர்வு வந்தாலும், அதை மறைத்து “குட்மார்னிங்” என்றாள்.
சட்டென்று அவசரமாக எழுந்து, கண்ணாடி முன் வந்து பார்த்து, அதன்பின்னே ஆசுவாசமாக, “குட்மார்னிங்” என்றான். அவனின் செய்கையில் ஒன்றும் புரியாமல், ஏனென்று விழிகளால் வினவினாள்.
“நீயா குட்மார்னிங் சொன்னதும், நேத்து மாதிரி என் முகத்துல கோலம் போட்டிருந்தா? அதான் ஒரு முன்னெச்செரிக்கை.”
கணவனின் ஆராய்ச்சியில் வாய்விட்டு சிரித்து, “பெயர் பெற்ற சிஐடி ஆபீஸர். இதுக்கெல்லாமா பயப்படுறது?”
“பயம்லாம் இல்லம்மா. ஒரு முன் ஜாக்கிரதைதான்” என்றான் சற்று அசடுவழிய,
“ரொம்ப வழியிது” என்றாள்.
“அவந்தி தப்பா எடுத்துக்கக்கூடாது. என்னை ஒரு டாக்டரா நினைச்சிக்கோ. ப்ளீஸ். நான் பார்க்கணும்” என்று அவள் வயிற்றைக் காட்டினான்.
‘அடப்பாவி! மச்சத்தைப் பார்க்கக் கேட்கிறானோ?’ என நினைத்தவள், ‘சே.. இருக்காது. அதுக்கு டாக்டர்னு ஏன் சொல்லணும். வெட்டுபட்ட காயத்தைத்தான் சொல்கிறான்’ என்றுணர்ந்தவள், “அதெல்லாம் எதுக்கு? வேண்டாம்” என மறுத்தாள்.
“ஏய் அழகி! ப்ளீஸ்யா. குணமாகிருச்சான்னு பார்த்தா, கொஞ்சம் நிம்மதியாயிருக்கும்.”
“காயம்தானங்க அதெல்லாம் எப்பவோ சரியாகிருச்சி” என்றவள் கணவனின் கெஞ்சல் பார்வையில், இடுப்பைக் காட்ட வெட்கப்பட்டு, “எனக்கு ஒருமாதிரியா இருக்குங்க. வேண்டாமே” என கண்களால் கெஞ்சினான்.
கார்த்திக்கோ, “ப்ளீஸ் ப்ளீஸ்” என்று அதிகம் ப்ளீஸ் போட,
அவனின் கெஞ்சல் பொறுக்காமல், “சரி பாருங்க. ஆனா, என்னைத் தொடாம பார்க்கணும். சரியா?” கணவனின் சம்மதமான தலையாட்டலை உணர்ந்தவள் கட்டிலில் படுத்தாள்.
அவளருகில் அமர்ந்து சுடிதாரை மெல்ல ஏற்றி தழும்பைக் காண கண்கள் கசிந்தது. “வலிக்குதாடா? நான் கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கணும்தான. சாரிடா” என்றான்.
கணவனின் செய்கையில் கூச்சமேற்பட்ட போதும், கண்கள் கலங்கி ‘வலிக்குதாடா’ என்ற கேள்வியில் மனம் உருக, “ம்... எப்பவாவது லைட்டா. புடவை கட்டினா கொஞ்சம் வலி இருக்கும்.
“ஓ... இது தெரியாம ரிசப்ஷனுக்கு புடவை எடுத்துட்...” வார்த்தைகள் முற்றுப்பெறும் முன், கண்கள் அருகிலேயே பளிச்சென்று பார்வையைக் கவ்வியிழுத்த மச்சத்தில் பதிந்தது. ‘அதைப் பார்க்காதே’ என தடைகள் பலபோட்டும் கண் அங்கேயே சென்றது. வேகமாக சுடிதாரை இழுத்துவிட்டு, “நீ.. நீ கீழே போ அவந்தி” என்றான் எங்கோ பார்த்தபடி.
பேச்சை பாதியில் நிறுத்தியதிலிருந்து, கீழே போ என்பதுவரை ஒருவித ஆர்வத்தையும், அதனுடன் சேர்ந்த தடுமாற்றத்தையும், அதிசயமும், ஆச்சர்யமுமாகப் பார்த்தவளுக்கு புரிந்தது, கணவனின் கவனம் சிதறிய இடம் எதுவென்று. மெல்லிய புன்னகை இதழில் தோன்ற, அவளின் உள்ளும் ஏதோ ஒரு பரபரப்பு. மெல்ல எழுந்தவள் அவனை பார்த்தபடியே கீழே சென்றாள்.