• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
22



“அம்மாவா? யாரைச் சொல்றீங்க எம்.எல்.ஏ சார்? அந்த வார்த்தை தவறி வந்திருச்சி நினைக்கிறேன். சீக்கிரம் வாயைக் கழுவிருங்க. அது அசிங்கமான வார்த்தை” என்றார் கேலியாக.

வந்த கோபத்தை அடக்கி, “அம்மா ஏன் இப்படிப் பேசுறீங்க? எனக்கு ஒரு விஷயம் தெரியணும். அதை க்ளியர் பண்ண உங்களாலதான் முடியும்” என்றான்.

“ம்... கேளுங்க சார். தெரிஞ்ச வரை சொல்றேன்.”

கைபேசியிலுள்ள புகைப்படத்தைக் காண்பித்து, “இது மங்கைதான?” என்றான்.

உள்ளுக்குள் தோன்றிய அதிர்வை மகனறியாமல் மறைத்து, “யார் சொன்னது இது மங்கைன்னு? அவங்களைத்தான் குடும்பத்தோட...” குரலில் சின்ன தடுமாற்றம் அவருக்கு.

“நாங்க எதுவும் செய்யலன்னு எத்தனை தடவை சொல்றது.”

“இதே வாய்தான் நாங்கதான் செஞ்சோம்னு சொல்லிச்சி.”

“ப்ச்... மத்த கதை எதுக்கு. இவள் மங்கைதான? நீங்க கூட இவகிட்ட பேசிட்டிருந்தீங்களாமே பொண்ணுங்க சொன்னாங்க?”

“நீ இப்ப என்கிட்டக் கேட்டியே அதே மாதிரிதான் சந்தேகம் வந்து இந்தப் பொண்ணுகிட்ட விசாரிச்சேன். அவ அவளோட அப்பா அம்மாகிட்டக் கூட்டிப்போயி நிறுத்தி இவங்ககிட்ட கேளுங்கன்னு சொல்லிட்டா. எனக்குத்தான் ஒரு மாதிரியாகிருச்சி.”

தாயை நம்பாமல், “பொய் சொல்லலையே? என்கிட்டயிருந்து அவளைக் காப்பாத்த நடிக்கிறீங்களா? அப்படித்தான்னு தெரிஞ்சது அவ்வளவுதான்” என எச்சரித்தான்.

“உங்ககிட்ட பொய் சொல்ல முடியுமா சார். நீங்கதான் ரொம்பப் பெரிய அரசியல்வாதியாச்சே” என்றாவர் குரலில் ஏளனம் மட்டுமே.

மேலும் பேசப் போனவரைக் கைநீட்டி தடுத்து, “இவளை எங்க பார்த்தீங்கன்னு சொல்லுங்க?”

உள்ளுக்குள் பயம் பரவ ‘விடமாட்டான் போலவே’ என நினைத்து “தெரியாது மறந்திருச்சி. அப்படியேத் தெரிஞ்சாலும் சொல்லமாட்டேன். மங்கை மாதிரியிருக்கிறதால இந்தப்பொண்ணை நீ கொன்னுட்டன்னா?”

“வேண்டாம் பெத்தவளாச்சேன்னு பார்க்கிறேன். நான் என்ன கொலை பண்றதைக் குலத்தொழிலாவா வச்சிட்டிருக்கேன். மங்கை இல்லன்னு தெரிஞ்சா விட்டுரப்போறேன்.”

“டேய் ஜெய்! எங்கம்மா எனக்குச் சின்ன வயசுலயே காது குத்திட்டாங்க. நீ இவளை விட்டுருவியா? கொலை பண்றத குலத்தொழில் இல்லதான். அந்தக் கொலையை மூலதனமா வச்சிதான் இவ்வளவு பேரோடயும் புகழோடயும் நிற்கிற. என் அக்கா முக ஜாடையில் யாரைப் பார்த்தாலும் உனக்கு மங்கையாகத்தான் தோணும். அதே மாதிரி எத்தனை பெண்களைக் கொன்னு புதைச்சியோ யார் கண்டா?”

சிறு அதிர்வு அவனுக்குள் வந்துபோகத்தான் செய்தது.

“நீயெல்லாம் நல்ல மகனாகவும் இல்ல. நல்ல சகோதரனாகவும் இல்ல. நல்ல புருஷனாகவும் இல்ல. நல்ல தகப்பனும் இல்ல. சுயநலம் பிடிச்ச ஈவு இரக்கமற்ற மருகம் நீ” என்றார் ஆவேசமாக.

“ஏய்” என தாயின் கழுத்தைப்பிடித்த சில வினாடிகளில் ‘ஆ’ என்ற அலறல் ஜெயராமிடமிருந்து. தாயின் கழுத்திலிருந்து கையை உதறியபடி தன்முன் நின்றிருந்த தம்பியை முறைத்தான்.

“என்னடா வலிக்குதா? அதெப்படிடா வலிக்கும்? எருமை மாடுங்களுக்கு என்ன அடிச்சாலும் வலிக்காதாமே!”

“டேய்ய்ய்...”

“ஏய் சும்மா கத்தாத. பெத்த தாயை அழ வைக்கிற நீயெல்லாம் ஆம்பளைன்னு வெளில சொல்லிராத. இன்னொரு டைம் என் அம்மா மேல கைபட்டுச்சி உயிரோட உன்னைக் கொளுத்திருவேன். உன் தம்பிதான் நான். உன்னோட ரவுடித்தனத்துல கொஞ்சமாவது என்கிட்டயிருக்கும்ன்றதை மறந்திராத. நீங்க வாங்கம்மா” என செல்லும்போதே...

“தம்பி மங்கை போட்டோ இந்தப் பயல்கிட்ட மாட்டியிருக்குடா” என்றார் சின்ன பயத்துடன்.

சடனாக நின்றவன், “எப்படிமா?” என்றான்.

“தெரியலப்பா. அது மங்கை இல்லன்னு சொல்லியிருக்கேன். அதையெல்லாம் உன் அண்ணன் நம்பமாட்டான். அவளைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ள எப்படியாவது காப்பாத்துபா?”

“நான் இருக்கேன்மா. என் தங்கச்சி மேல எவனும் கைவைக்க முடியாதுமா. அதுக்கு அவன் உயிரோடிருக்கமாட்டான்.”

மகனின் முகம் வருடி, “தப்பிப் பிறந்துட்டடா தம்பி” என்றார் நெகிழ்வுடன்.

“உங்க பையன்மா. எப்படி தப்பா போவேன்? யூ டோண்ட் ஒர்றிமா. வரப்போற மருமகளை நினைச்சி கனவு கண்டுட்டே தூங்குங்க.”

“படவா! அதை நீ அதைச் செய்.”

தங்களுக்குள் ரகசியம் பேசிச் செல்லும், தாயையும், தம்பியையும் பார்த்திருந்த ஜெயராம் மங்கையின் புகைப்படம் பார்த்து ‘நீ மங்கையா இல்லாட்டியும் உயிரோடிருக்கக்கூடாது.’ ஒருவித வன்மம் தலைதூக்க... ‘நீங்க சொல்லலன்னா அவளைக் கண்டபிடிக்க முடியாதா? ரெண்டே நாள்ல கண்டு பிடிக்கிறேன்.’

எந்தெந்தத் திருமணத்திற்குச் சென்றானோ அங்குள்ள கல்யாண வீடியோ போட்டோ அனைத்தையும் பார்க்க ஏற்பாடு செய்தான்.

இரவு தனியே படுத்த திருவிற்கு தூக்கம் என்பது தூரம் போய் கேலி செய்ய... ஏதோ ஒரு பாதுகாப்பு வளையத்திலிருந்து தனித்திருக்கும் எண்ணம் அவளுள். கணவனின் கைபிடித்து தூங்கிய தினங்கள் கண்முன் வந்து ஆட்டம் காட்ட, மனதிலோ நிம்மதியில்லாமல் போனது. அத்தையுடனும் படுக்க யோசித்தவளுக்கோ தேவையில்லாத நினைவுகள் பல.

“இளா அத்தான் சீக்கிரம் வந்திருங்க. அப்பதான் என் வாழ்வுக்கு விமோசனம் கிடைக்கும். என்னோட வாழ்க்கையே உங்க வரவுலதான் இருக்கு. ப்ளீஸ் வந்திருங்க.” விடாத வேண்டுதல் இளநாதனின் செவிகளில் விழுந்திருக்குமா!

மறுநாள் காலை தன்முன் நின்றிருந்தவனை கோபத்துடனும் வெறுப்புடனும் பார்த்த பிரஷாந்த், “என்ன முடிவு பண்ணிட்டீங்க போல. டேட்லாம் ஃபிக்ஸ் பண்ணியாச்சா?” நிதானமாகக் கேட்க...

“என்ன முடிவு பண்ணி என்ன டேட் பிக்ஸ் பண்ணனும்ன்ற அன்பு?”

“ம்.. என் சாவுக்குதான்.”

“ஓ... டேட் பிக்ஸ் பண்ணிக் கொல்ற அளவுக்கு பெரிய அப்பாடக்கரா நீ?” என்றான் கேலியாய்.

“அப்பாடக்கர்தானாம். அதுவும் இந்த அப்பாடக்கருக்காக பதினைந்து வருஷமா உன் அப்பனும் அண்ணனும் காத்திருக்கானுங்க.”

“மரியாதை பெயருக்குக் கூட இல்லையே அன்பு.”

“அருணாச்சலம் பையனுக்கு யார் யாரை எப்படி நடத்தணும்னு தெரியும்.”

“ஹ்ம்... ஓகே. என்னைக் கூட தெரிஞ்சி வச்சிருக்க போல?”

“துரோகியை தெரிஞ்சி வச்சிருக்கலாம். ஒட்டி உறவாடத்தான் கூடாது.”

“ம்...குட். நல்லா பேசுற அன்பு. ஆனா, பழிவாங்குறேன்னு இப்படியே இருந்தா என்ன அர்த்தம்? உன் அக்காவும் சொல்றாளே தவிர எதுவும் செஞ்ச மாதிரி தெரியலையே?”

“எ..என் அக்கா... ஏய் உனக்கெப்படித் தெரியும்?” என்றவனுக்குள் பயம் முளைவிட்டது. தன்னை மட்டுமே தெரியும் என்ற தைரியமாக இருந்தவனுக்கு அக்கா பற்றி தெரிந்துவிட்டதில் அவளுக்கு எதுவும் ஆகிடுமோ என்ற பயமே!

“என்னடா முழிக்கிற? மங்கை மட்டுமில்ல.. உன் அம்மா, கயல், இளா எல்லாரையும் தெரியும்.”

“என்ன இளா அத்தான் உயிரோட இருக்காங்களா?”

“ஹேய் ரியாக்ஷனைக் குறைடா அன்பு. இப்ப சொல்லு எப்படி உன்னை மட்டும் சாகடிக்கிறது? மொத்தமா முடிச்சரலாமா?”

“ஏய் யார் மேலயாவது கை வச்ச கொன்னுருவேன்.”

“டேய் அடங்குடா. சின்னப்பையன்றதை அடிக்கடி நிரூபிக்கிற. ஒண்ணு பண்ணலாம்டா தம்பி... பேசாம என்னோட கூட்டு சேர்ந்திறேன்.”

“எதுக்கு நானே எல்லாரையும் பழிகொடுக்கக் கூட்டிட்டு வரணுமா? முதல்ல இளா அத்தான் எங்கன்னு சொல்லு?”

“இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே! அவர் ஏதும் அறியாறடி ஞானத்தங்கமே!”

“ஐயோ முதல்ல பாடுறதை நிறுத்துறியா? எரிச்சலா வருது.”

“ஓகே. அப்ப நாம ஃப்ரண்ட்ஸ்” என்று புன்னகைத்தான்.

“இப்ப உனக்கு என்ன வேணும்? என் குடும்பத்தை விட்ரு ப்ளீஸ்” என்றான் கெஞ்சலாக.

“ஏன்டா குடும்பத்தை விட்ரு விட்ருனா எப்படி விட முடியும்? கொலை பண்றவனாயிருந்தா இப்படியா சாவகாசமா வந்து பேசிட்டிருப்பான். தெரிஞ்ச உடனே யாருமறியாம போட்டுத் தள்ளிட்டுப் போயிரமாட்டான்.” அன்புவின் குழப்ப முகம் பார்த்து... “என்ன அன்பு ரொம்பக் குழப்புறேனா? என்னைக் கார்மேகம் பையனா பார்க்காம செல்வரசி பையனா பாருடா. உன் கூடப்பிறந்தவனா பாரு. அறிவுக்கும் எனக்கும் ஒரு வயசுதான்டா வித்தியாசம்.”

அறிவு என்ற பெயர் கேட்டதுமே, “அவனைத்தான் வெட்டி வீசிட்டிங்களேடா. சொத்து வேணும்னு கேட்டிருந்தா என் தாத்தாவும் அப்பாவுமே குடுத்திருப்பாங்களே. அத்தனை பேரையும்... உங்க யாரையும் சும்மாவிடமாட்டேன்” என்று ஆத்திரத்தில் பிரகாஷின் சட்டையைப் பிடித்தான்.

கலங்கிய கண்களுடன், “சேற்றில்கூட செந்தாமரை பூக்கும் அன்பு. அதை பூஜைக்கும் பயன்படுத்துவாங்க. இப்பவும் சொல்றேன் என்னை உன் சித்தி பையனா பாருடா. உங்களைக் கொல்லணும்னு நினைச்சிருந்தா, முதல்ல உன்னையும், போன வருஷமே என் கண்ணுல சிக்கின பெரியம்மாவையும், கயலையும், உன் அண்ணன் கல்யாணத்துல பார்த்த மங்கையையும், என்னால எதுவும் செய்ய முடியாது நினைச்சியா?”

சட்டென்று அவன் சட்டையிலிருந்து அன்பு கையை எடுக்க...

“அவங்களை வளர்த்தது கார்மேகம். என்னை வளர்த்தது என் அம்மா குடும்பம். அது உன் குடும்பமும் கூட அன்பு. தப்புன்றதை கனவுல கூட நினைக்கமாட்டேன். நீங்க என்ன ப்ளான்ல இருக்கீங்க தெரியாது. ஆனா, பெரியம்மா கயல் இந்த ஒரு வருஷமா என்னோட பாதுகாப்புலதான் இருக்காங்க. இது அவங்களுக்கே தெரியாது. இப்ப உள்ள பிரச்சனை வேறடா. மங்கை ஜெயராம் கண்ணுல பட்டுட்டா.”

“எ..எப்படி? இருக்காது?” என்றான் தடுமாற்றமாக.

“மங்கை யார் என்னன்றதைத் தீவிரமா தேடிட்டிருப்பான். ஏன் இப்ப கண்டுபிடிச்சிருக்கவும் செய்யலாம்.”

“எ..என்ன சொல்றீங்க?”

“கவனம் தேவை சொல்றேன். இந்நேரம் நீங்க அலார்ட் ஆகியிருக்கலாம். ஆனா, சின்ன வயசுலயே கொலைக்கு அஞ்சாதவன். இப்ப பவரும் இருக்கு. முதல்ல அவள் புருஷனை வரச்சொல்லு?”

“அவளுக்குக் கல்யாண...”

“தெரியும் நான் அங்கதான் இருந்தேன்.”

“நம்பமுடியல!”

“கஷ்டம்தான் அன்பு. என்னை நம்பினா கெட்டுப்போகமாட்ட. என்னடா.. உங்க குடும்பத்தை நம்பினதாலதான கெட்டுப்போயிட்டோம்னு நினைக்கிறது புரியுது. என்னை நம்பலாம் அன்பு. எந்த நேரம் எந்த உதவினாலும் கேட்கலாம். இன்னும் ஒரு மாசம் இங்கதான் இருப்பேன். அப்புறமா அம்மா ஒய்ஃப் கூட்டிட்டு யு.எஸ் போயிருவேன்.”

“உங்களுக்குக் கல்யாணமாகல கேள்விப்பட்டேன்?”

“இதுவரையில்ல. இனிமேல் உங்க எல்லார் சம்மதத்தோட உங்க முன்னாடிதான் நடக்கும். நீங்க ஓகே சொன்னால்தான் கல்யாணம். நிறைய குழப்புறேன்ல சீக்கிரமே புரியும் அன்பு. ஓகே நான் கிளம்புறேன். என் அண்ணன் ஆளுங்க பார்த்தா எனக்குதான் முதல்ல சங்கு. இது என் நம்பர்... இவனை எதுக்கு கூப்பிடணும் நினைக்காத அன்பு. அறிவு இடத்துல என்னை வச்சிப்பாரு. துரோகம் பண்ணமாட்டேன்.”

“அண்ணா!”

“தேங்க்ஸ்டா. உன் நம்பிக்கையை எப்பவும் காப்பாத்துவேன்.”

“இளா அத்தான் எங்க?”

“உன் அண்ணி கயல்கிட்டக் கேளு தெரியும். எனக்கும் சின்னதா சந்தேகம் இருக்கு க்ளியர் பண்ணிட்டு சொல்றேன்.”

“கயல் மதினி எப்ப அண்ணியானாங்க?” என்றான் யோசனையாய்.

“என் கல்யாணத்தோட தெரியும். நெக்ஸ்ட் மீட் பண்ணவோம்” என்று வேகமாக செல்ல, ஏதோ புரிவதுபோல் தெரிந்தாலும் செல்பவனையே புதிராய் பார்த்திருந்தான் அன்பு.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
ஆயிற்று இரண்டு பகல்! இரண்டு இரவு! கதிரும் போன் செய்யவில்லை. இவளும் அவன் செய்வானென்று எதிர்பார்ப்பிலேயே விட்டுவிட்டாள். மனதினுள் நிறைய தயக்கங்கள். தன்னுடன் வாழ கூப்பிட்டவனிடம் வம்படியாக சண்டையிட்டு வந்த பிறகு எந்த முகத்துடன் பேசுவது.

“ஏன் அவங்க போன் செய்யக்கூடாதா? விடமாட்டேன் சொன்னாங்க. நான் அவங்களைத் தேடுவேன்னு தெரியாதா?”

‘நீ தேடுறியா மங்கை?’ மனம் கேட்டது.

இதயம் சில நொடிகள் அதன் துடிப்பை அதிகப்படுத்த “ஆமா தேடத்தான் செய்கிறேன்” என்றதில் இதயம் துடிக்க, “காதலா! எப்படி? மனதின் துடிப்பு உள்ளும் புறமும். இத்தனை ஆண்டுகளாக இளா அத்தான் என்று உருகியதென்ன... இன்று கணவன் மேல் காதலாம்! நம்பத்தான் முடியவில்லை தன்னால். அதனால்தான் போன் வரவில்லையென்றதும் இத்தனை கோபப்படுகிறேனோ? உரிமையுள்ள இடத்தில் கோபங்கள் வருமெனில் என்மேல் அவங்களுக்கு வரும் கோபமும் சாத்தியம்தானே! அந்தக் கோபம்தான் இரண்டு நாளாக போன் செய்யவிடாமல் தடுக்கிறதா? என்ன செய்றது? ம்.. தோட்டத்துல வச்சிப் பேசிக்கலாம்” என முடிவெடுத்தாள்.

மாலை நான்கு மணியளவில் தோட்டத்தில் சிலர் பூக்களைப் பறித்துக் கொண்டிருக்க சற்று தள்ளி வந்தவள் கணவனை அழைத்தாள். முழு அழைப்பு சென்று கட்டானது. மறுபடி மறுபடி முயற்சிக்க அம்முயற்சிகள் யாவும் தோல்வியைத் தழுவ ‘ஏன்?’ என்ற கேள்வி மனதினுள். ‘கோபம் வெறுப்பாகிருச்சா. இல்ல அப்படியிருக்காது. என் மேலுள்ள காதல் அத்தனை சீக்கிரம் போய்விடுமா?’ மனதினுள் ஏதேதோ தவிப்புகள் எழுந்தது.

அத்தையிடம் சொல்லி வீட்டிற்குக் கிளம்ப, தன்னை யாரோ தொடரும் உணர்வு வர திரும்பிப் பார்த்தவள் யாருமில்லையென்றதும் நடக்கலானாள். தினமும் அந்த உணர்வு வருகிறது ஏனென்று புரியவில்லை திருமொழிக்கு.

சற்று தூரத்தில் வரும்பொழுதே வாசலில் இருந்த உருவம் கணவன்போல் தோன்ற முகம் முழுவதும் சந்தோஷம் மலர கால்களில் புது தெம்பு வர, வேக நடையிட்டு வந்தவள் மனம் நடைக்குத் தடை உத்தரவு போட்டது.

‘ஒரு போன் கூட பண்ணாம எப்படி வருவாங்க? லவ்னு கன்பார்ம் பண்ணினதால பார்க்கிற இடமெல்லாம் அவங்களேத் தெரியுறாங்களா? இல்லையே வரும் வழியெல்லாம் பார்க்கலையே! ஒருவேளை அந்தளவு நமக்கு பைத்தியம் முத்தலையோ! ஹா..ஹா..’ மனதிற்குள் சத்தமாக சிரித்து ‘ஹையோ திரு! உன் பொழப்பு இப்படியா ஆகணும்.’ உதட்டோரப் புன்னகையுடன் வீட்டைத் திறந்து நுழைந்தவளுக்கு அப்பொழுதும் அந்த உருவம் மறையாதிருக்க, உள்ளே நுழைந்தவள் வேகமாக வெளியே வந்து பார்த்தாள்.

புன்னகை மாறாது மனைவியைப் பார்த்திருந்தான் இளங்கதிரானவன்.

“அச்சோ! நிஜமாவே நீங்களா?” என்று நம்பமுடியா பார்வையை கணவனிடம் செலுத்தி லேசாகக் கிள்ள, ஸ்ஸ்.. என்ற சத்தத்தில் “எப்ப வந்தீங்க? என்மேல் கோபம் குறைஞ்சிருச்சா? இப்ப எத்தனை டைம் போன் பண்ணினேன். ஏன் எடுக்கல?”

‘ஸ்ஸ்..’ என அவள் வாயில் விரல்வைத்து “உள்ள போய் பேசலாம் மங்கை.”

“சாரி. உள்ள வாங்க. அத்தை மாமா எப்படியிருக்காங்க? அவங்ககிட்டக்கூடப் பேசல நான். எதாவது தப்பா நினைச்சிருப்பாங்களா?”

“எல்லாரும் நல்லாயிருக்காங்க. எதுவும் நினைக்கமாட்டாங்க. ஏன்னா நீதான் டெய்லி போன் பண்றதா சொல்லியிருக்கேனே!”

சட்டென அவள் நிற்க, “மங்கை என்னைப் பார்த்துட்டு ஏன் பார்க்காத மாதிரி வந்த?” என்றான்.

“அ..அது நீங்கன்னு யோசிக்கல. ஏதோ உங்க நினைவால வந்ததுல உள்ள பிரமைனு...” பேசியபடியே அவன்புறம் திரும்ப, கணவன்மேல் மோதி நின்றாள்.

“ஹேய் பார்த்துமா!”

“பார்த்திருந்தா எப்படி மோதுவாங்களாம்? பார்க்காததாலதான் மோதினேன்.”

“நான் பார்த்து கூட மோதுவேன்” என்று அவளை நெருங்க...

தொண்டைக்குள் எச்சிலை விழுங்கியபடி “நா..நான் காஃபி போட்டுத்தர்றேன்” என நகரப் போனவளைத் தன்னருகே இழுக்க, “ஓய் மங்கை பூந்தோட்டத்திலிருந்து வர்றியா? பூவாசம் அப்படியே ஆளைத்தூக்குது. ம்...” என மூச்சை உள்ளிழுக்க...

“தூக்கும் தூக்கும்...” கணவனின் கையை உதறி அடுக்களையில் நுழைந்தவளுக்கு நெஞ்சத்துடிப்பு அடங்கவே நேரமானது. காபி குடித்ததும் திரும்பவும் தன்னிடம் வம்பு செய்யக்கூடாதே என்று தோட்டத்திற்கு கூப்பிட்டு நடந்து செல்கையில், அவர்கள் முன் கோபமாக வந்தாள் அவள்!

தன் முன் கோபமாக நின்ற தோழியைப் பார்த்து, “எப்படியிருக்க கோகி?” என்று நலம் விசாரிக்க...

“நான் எப்படியிருந்தா உனக்கென்ன? ஏன்டி அன்னைக்குக் கேட்டதுக்கு இவர் உன் புருஷன் இல்லைன்னு சொன்ன? இன்னைக்கு என்னடான்னா கழுத்துல தாலி நெத்தியில குங்குமம்னு ஜோடி போட்டுட்டுப் போற. என்னைப் பார்த்தா லூசு மாதிரித் தெரியுதா?”

“ஹேய் கோகி கோபப்படாத. அன்னைக்கு சொன்னது நிஜம்தான். அப்ப எங்களுக்கு கல்யாணமாகல. இப்பதான் முடிஞ்சது.”

“அப்புறம் ஏன்டி என்னை விரட்டின? ஆமா நான் கட்டிக்கப் போறவர்னு சொல்லியிருக்கலாம்ல. நான் என்ன செய்யப்போறேன்? உனக்காக எத்தனை நாள் கடவுள்கிட்ட வேண்டியிருக்கேன் தெரியுமா? நீ என்னன்னா...” கோவித்துக் கொண்டு அவள் நடக்க...

“கோகி... ஏய்.. நில்லு சொன்னாக் கேளுமா. நிஜமா அப்ப அந்தப் பேச்சி கிடையாது. எனக்கே தெரியாத திடீர்க் கல்யாணம். யார்கிட்டயும் சொல்லக்கூட இல்ல.”

“ஹ்ம்.. ஏதோ சரியில்லையே!”

“எல்லாம் சரியாத்தான் இருக்கு. வீட்லதான இருப்ப நாளைக்கு உன் வீட்டுக்கு வர்றோம்.”

“மறக்காம அண்ணாவையும் கூட்டிட்டு வந்திரு திரு. அண்ணா நீங்களும் வாங்க.”

“கண்டிப்பா வர்றோம்ங்க” என்றதும் திருவை தனியே அழைத்துச் சென்று ரகசியமாய் ஏதோ கேட்க,

அவளுக்கு இரண்டு அடிகள் போட்டு “சுத்த விவஸ்தை கெட்டவள்டி நீ. எப்படியெல்லாம் பேசுற?”

“அதான் கல்யாணம் முடிஞ்சருச்சில்ல. அப்புறம் என்னத்துக்கு மறைக்கிற. கேட்டதுக்கு ஆமா இல்ல சொல்வியா? அதை விட்டுட்டு...”

“கொன்னுருவேன்டி உன்னை. கொஞ்சமாவது டீசன்டா பேசுறியா? நீ கிளம்பு நாளைக்குப் பார்க்கலாம்” என்று அவளைத் தள்ளிவிட்டு கணவனிடம் வந்தாள்.

“ஏய் திரு நாளைக்காவது பதில் சொல்லிரு. நான் காத்திருக்கேன்” என்று ஓடிவிட்டாள்.

‘அச்சோ மானத்தை ஏலம் போடுறாளே!’ கோகிலாவின் கேள்வியில் பல்லைக்கடித்து வந்த வெட்கத்தை மறைக்க...

“ஹேய் மங்கை! என்ன திடீர்னு வெட்கப்படுற? அப்படி என்ன கேட்டாங்க உன் ஃப்ரண்ட்?”

“அ..அவ லூசு மாதிரி உளறிட்டுப் போறா. நீங்க வாங்க.” முகத்தை வேறுபுறம் திருப்பி நடக்க...

“லூசு உளறினா உன் முகத்துல எதுக்கு இவ்வளவு வெட்கம் ஏர்போர்ட்? ஃபர்ஸ்ட் நைட் பற்றிக் கேட்டாங்களா என்ன?”

“அச்சோ! அவளுக்குத்தான் அறிவில்லைன்னா உங்களுக்கென்ன. பேசாம வாயை மூடிட்டு வர்றீங்களா?” என்று எதையெதையோ சொல்லி கவனத்தைத் திருப்ப முயற்சித்தாள்.

“அப்ப உண்மை அதுதான்ல” என்றதில் மங்கையவள் மதிமுகம் மாறி வெட்கக் கோலமிட, உண்மையும் அதுதானோ!

“கடலை எடுத்தாச்சா? இடமெல்லாம் ஃப்ரீயாகிருச்சி” என்றான் பேச்சை மாற்ற.

“ஆமாங்க போன வாரம்தான் எடுத்தாங்க.”

“என்னயிருந்தாலும் இந்த மண்வாசமே தனிதான்ல. சுத்தமான காற்று. ம்... ஐ லவ்ட் இட்.”

கணவனின் ரசனையான முகத்தையே பார்த்திருக்க, அதை உணர்ந்தாற்போல் கதிர் திரும்ப, சட்டென்று முகபாவத்தை மாற்றிக்கொண்டாள்.

“பூவாசம் அள்ளுது போ. சித்தி இங்கதான் இருக்காங்களா?”

அதற்குள் காமாட்சி அவர்களை நோக்கி வந்து, “கதிர் எப்ப வந்த?” என்றார்.

“இப்பதான் சித்தி. வந்ததும் உங்களைப் பார்க்கணும்னு, உங்க மருமகளோட ஜோடியா வந்துட்டேன் பாருங்க” என்று மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான்.

“என்னைப் பார்க்கத்தான் நீ வந்தன்றதை நானும் நம்பிட்டேன். கொஞ்சம் வெய்ட் பண்ணு கதிர். எல்லாரையும் அனுப்பிட்டு வர்றேன். இல்லன்னா அப்படியே ரெண்டு பேரும் காலாற நடந்துட்டு வாங்க.”

அவர் நகர்ந்ததும், “ஹேய் ஏர்போர்ட்! இங்க நிற்கிறேன் என்னை போட்டோ எடேன்?” என்று கேமரா ஆன் செய்து போனைக் கொடுக்க, அவன் நிற்பது. சாய்வது. பூக்களைக் கன்னம் தொடவைத்து ரசிப்பது. தன்னிடம் பூவை நீட்டி கண்ணடிப்பது. முத்தமிட்டு ப்ளைன் கிஸ் அனுப்புவதென்று கணவன் செய்த லீலைகளை எல்லாம் வெட்கப் புன்னகையுடன் க்ளிக் செய்தாள்.

மனைவியைத் தன்னுடன் நிறுத்தி செல்பி எடுக்க, அப்படியே நகர்ந்து மாந்தோப்பு பக்கம் செல்ல, மாலை நேரத்து பறவைகளின் சத்தத்திலும் வெயில் குறைந்து குளுகுளுவென்றிருந்த இதத்தில் மெய்மறந்து நின்றிருந்தவனிடம், “உங்களுக்குப் பாம்புனா பயம்தானங்க” என்றாள்.

‘ஏன் திடீரென்று கேட்கிறாள்?’ என்பதை யோசிக்காமல் “ஆமா. ஏன் உனக்கு பயமில்லையா?” என்றான்.

“பாம்புனா படையே நடுங்குமாம். நான் மட்டும் எம்மாத்திரம். இப்ப நம்ம பக்கத்துல எங்கேயோ நல்லபாம்பு சுத்துது” என்றாள் சாதாரணமாக.

“என்ன பாம்பா? ஏய் என்னடி இவ்வளவு அசால்டா சொல்ற? அது பாம்புடி” என அலறி அங்குமிங்கும் திரும்பியவன் மனைவியின் இடையைப் பார்த்தான்.

“ஹலோ! என்ன இடுப்புல ஏறிக்கணும்னு தோணுதா? தொலைச்சிருவேன்.”

“தொலைச்சாலும் பரவாயில்ல ஏர்போர்ட். ப்ளீஸ் நான் ஏறிக்கிறேன். எனக்கு பாம்புனா ரொம்ப பயம்.”

“அது தெரிஞ்ச ஊரறிஞ்ச விஷயமாச்சே. கயிறைப்பார்த்து பாம்புன்னு கத்தின ஆள்தான நீங்க” என்றாள் கேலியாக.

“அதான் ஒத்துக்கிட்டேனேமா. நீ மட்டும் எப்படி கூலா நிற்கிற? பாம்பு இங்க இருக்குன்னு எப்படிக் கண்டுபிடிச்ச?”

“சிம்பிள். அதோட வாசனை வைத்துதான்.”

“என்னது வாசனையா? பாம்புக்கு வாசனையிருக்கா?” என்றான் ஆச்சர்யமாய்.

“மத்ததுக்குத் தெரியல. ஆனா, நல்லபாம்புக்கு ஒரு வாசமிருக்குது. நிதானமா கண்மூடி ஸ்மெல் பண்ணிப்பாருங்க. கண்டிப்பா வித்தியாசமான வாசம் வரும். கொஞ்ச தூரம் போறதுவரை அந்த ஸ்மெல் இருக்கும். இதுவரை இருந்த காற்றுல வித்தியாசமா இன்னொரு ஸ்மெல் வருதா பாருங்க?”

“ஆமா எதோ பேட் ஸ்மெல்.”

“எனக்கு சில டைம்ஸ் வாந்தி வந்திருக்கு. பாம்பு கொஞ்சம் தள்ளிப் போயிருச்சி வாங்க போகலாம்.”

“ஓ... அப்ப பூந்தோட்டத்துல இருந்ததுன்னா? வா வேற வழியில போகலாம்.”

“ப்ச்... இவ்வளவு நேரம் எல்லாரும் அங்கதான பூப்பறிச்சிட்டிருந்தாங்க. ஆள் நடமாட்டம் உள்ள இடத்துல இருக்காது.”

“இப்பதான் இல்லையே. ஹேய் அதென்ன பூ வித்தியாசமாயிருக்கு.”

“ஓ... அதுவா சேவல் பூ. சேவலோட கொண்டை மாதிரியிருக்கிறதால அந்த நேம். சைன்ஸ் நேம் செலோசியா அர்ஜென்டியா. மாலையில் வச்சிக் கட்டுவாங்க. இந்தப் பூவுக்குன்னு தனி வாசம் இருக்காது.”

ஒரு புருவத்தூக்கலுடன் அங்கிருந்த பூ ஒன்றை எடுத்து சுவாசிக்கப்போக, அவசரமாக தட்டிவிட்டு, “பூவை நுகராதீங்க” என்றாள்.

“நுகர்... புரியலை?”

“நுகர்னா சுவாசித்தல்னு அர்த்தம். ஸ்மெல் பண்றது. பூவை ஸ்மெல் பண்ணும்போது அதிலிருக்கிற புழு இல்ல கண்ணுக்குத் தெரியாத பூநாகம் மூக்கு வழியா நம்ம உடம்புக்குள்ள போயிரும். ஆள் சீக்கிரமே அவுட்டாகிருவாங்க.”

“ஓ... இதுல இப்படி ஒண்ணு இருக்கா.”

“ஒண்ணு இல்ல ஓராயிரம் இருக்கு” என்கையில் காமாட்சி அவர்களை வீட்டிற்கு அழைக்க வீட்டை நோக்கி நடக்கலானார்கள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top