• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
916
21



சற்று நேரத்திற்கெல்லாம் அவளைத் தேடி வந்த தாண்டவ் “உங்களை எங்கல்லாம் தேடுறது? விவேக் சார் உங்களை கூப்பிட்டுவரச் சொன்னார் பாப்பா” என்றதும் கண்ணீர் துடைத்து அவனுடன் கிளம்பி மருத்துவமனை வந்து மாமனார் இருந்த அறைக்குள் நுழைய, அங்கே அனைவரும் நின்றிருந்தார்கள்.

அவர்களின் பார்வை தன்னைத் துளைத்தபோதும் மாமனாரின் அருகில் சென்றவள், “சாரி மாமா” என்றாள்.

“முதலில் உட்காரு” என்று தன்னருகில் அமரவைத்தவர், “ஏன்மா சாரி கேட்கிற? சாரி கேட்கிற அளவுக்கு நீயென்ன தப்பு பண்ணின?”

“தெரிஞ்சி எந்த தப்பும் பண்ணினதில்ல மாமா. தெரியாமல் பண்ணின தப்புக்குத்தான் இந்த மன்னிப்பு.” கண்களில் நீருடன் பேசியவள், “மாமா...” என்றழைத்து எதோ சொல்லவர... அவளை கையமர்த்தி “நான் ஒண்ணு சொன்னா சம்மதிப்பியாமா?” என்றார்.

‘எங்கே ஜீவாவுடன் சேர்ந்து வாழச்சொல்வாரோ’ என மனதில் துடிப்புடன் விழித்தாள். அவளின் பயத்தை உணர்ந்தவர், “உனக்குப் பிடிக்காததை கேட்கமாட்டேன்மா” என்று அவளுக்கு நிம்மதியளித்து, “நீ எப்பவும் போல என்னோடவே இருக்கணும். என் பொண்டாட்டி, பிள்ளைன்னு என்னோட இருந்தாலும், எனக்கு நீ ரொம்ப முக்கியம்” என்று நிறுத்தி, பின், “என்னை விட்டு நீ வேறெங்கேயும் போகணும்னு முடிவெடுக்கக்கூடாது. இது என்னோட வேண்டுகோள்தான் கட்டளையில்லை. இதை நீ மறுக்கிறதும், ஏத்துக்கிறதும் உன்னிஷ்டம் பாப்பா. நீ என்னோட இருந்தா நான் சந்தோஷப்படுவேன். யோசிச்சி பதில் சொல்லுமா?” பேசிமுடித்து அசதியில் கண்மூடினார்.

சேர்ந்திருந்தால் பிரச்சனை என்றுதானே விலக முடிவெடுத்தது. இதென்ன புதுக்குழப்பம். தன்னுடைய சூழ்நிலையைக் காரணம் காண்பித்து வலுக்கட்டாயமாக என்னை அவரின் மகனுடன் வாழச் சொல்லவில்லைதான். அப்படிக் கேட்டிருந்தாலும் இந்த சூழ்நிலையில் என்னால் மறுக்க முடியாது என்பது அவருக்கே தெரியும். தெரிந்தும் கேட்கவில்லை என்னை முன்னிறுத்தி யோசிக்கும் நல்ல ஆத்மா. என்னோட நீயிருந்தா சந்தோஷப்படுவேன்மா. ‘எப்படி மாமா நான் இப்படி ஒரு முடிவெடுப்பேன்னு முன்னக்கூட்டியே யோசிச்சி பேசுறீங்க? உங்க சந்தோஷம்தான் மாமா எனக்கும் முக்கியம். மற்றதெல்லாம் பின்னாடி பார்த்துக்கலாம்’ என்று மனதினுள் நினைத்து மாமனாரைப் பார்க்க... அவரின் மூடிய விழிகளுள் ஒருவித அலைப்புறுதல் இருப்பதை உணர்ந்தாள். மெல்ல அவர் கைபிடித்து “எனக்கும் உங்க சந்தோஷம்தான் முக்கியம் மாமா. நான் உங்களோடவே இருக்கிறேன்” என்றாள் ஒரு மனதாக.

“ரொம்ப சந்தோஷம் தேவிமா. நீ நல்லாயிருப்பமா” என மருமகளை வாழ்த்தி மனைவியிடம் திரும்பி, “வந்து டார்லிங். மருமகளை நல்லா கவனிச்சிக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. சரியா?”

“உங்க குசும்பு இருக்கே. அவ என்னோட மருமகளும்தான். நான் பார்த்துக்காம யார் பார்த்துப்பாங்க” என்றபடி சுபாவின் தலைகோத... இத்தனை நாளிருந்த தனிமைக்கு துணை வந்ததை எண்ணி வந்தனாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு “ஐம் சாரி அத்தை” என்றாள்.

“சாரி கேட்கிற அளவுக்கு நீயென்னடா தப்பு பண்ணின?” படக்கென்று சிரித்தாள் சுபா. என்னவென்று கேள்வியாய் மற்றவர்கள் பார்க்க... “அதென்ன புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒரே மாதிரி நீ என்ன தப்பு பண்ணின கேட்குறீங்க?” கிண்டலாகக் கேட்டவள் சட்டென்று குரல் இறுகி, “நான் தப்பு பண்ணியிருக்கேன் அத்தை” என்றாள் ஜீவாவைப் பார்த்தபடி.

அவள் எதற்காக அப்படி சொல்கிறாள் என்று உணர்ந்தவன் அவளையே பார்த்திருக்க, இருவரின் பார்வைகளும் பல கதைகள் பேச... அங்கு மனங்கள் பேச மறுத்தது. மனங்கள் பேசியிருந்தால் அவர்களுக்கு மருந்து கிடைத்திருக்குமோ?

சில நிமிடங்களுக்குமேல் கணவனின் பார்வையை தாங்க முடியாமல் பாவையவள் பார்வையைத் தழைக்க உதட்டோரம் ஒரு முறுவல் தோன்றி மறைந்தது ஜீவாவிற்குள்.

“நாளையிலிருந்து எப்போதும்போல ஸ்கூல் போமா. எதாவது காரணம் சொல்ல வேண்டாம். அது உனக்கான ஜாப். நீதான் பார்த்துக்கணும். நாளைக்கே புது ஹரஸ்பான்டண்ட் வரப்போறாங்கன்றதை இன்னைக்கே அனோன்ஸ் பண்ணிடச் சொல்லிரு” என்றார் விவேக்.

“யார் மாமா அது?” என்று கேட்டு சட்டென்று நாக்கைக் கடித்தாள். ‘சே... லூசு அவங்க பையன் இருக்கிறான்னு யோசிக்காம வாயை விடுற’ என தன்னையே கடிந்தாள்.

“என் பையன்தான்மா. பெங்களுர் வேலையை ரிசைன் பண்ணிட்டு வர்றான். ஏற்கனவே சொன்ன மாதிரி எனக்கு வயசானாலோ, இல்லை உடல்நிலை சரியில்லாமல் போனாலோ வந்து ஸ்கூல் பொறுப்பேத்துக்கறேன்னு சொல்லியிருந்தான். சொன்னமாதிரியே வந்துட்டான். உனக்கு அதனால ப்ராப்ளம் இல்லையேமா? ஏன்னா, ஸ்கூல்னு வந்தா நீங்க ரெண்டுபேரும் சந்திச்சி டிஸ்கஸ் பண்ண வேண்டியிருக்கும். வீட்லயும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். உனக்கு ஓகேன்னா சொல்லு. இல்லன்னா வேறெதாவது முடிவு பண்ணிடலாம்.”

என் மகன். மறந்தும் கூட உன் புருஷன் என்று சொல்லவில்லை. தேர்ந்தெடுத்த வார்த்தைகள். ‘ஏன் மாமா என்மேல இப்படியொரு பாசம். பையனைக்கூட எனக்காக விட்டுக்கொடுக்க தயாராயிருக்கீங்க. ஆனால், நான் நூலறுந்த காத்தாடியா மேலே பறக்கவும் முடியாம, கீழே விழவும் முடியாம, விண்ணுக்கும் மண்ணுக்குமா தவிச்சிட்டிருக்கேன்.”

சுபாவின் அமைதியைப் பார்த்த ராஜன், “நான் மாப்பிள்ளைய எங்க வீட்டுக்கு கூப்பிட்டுப்போறேன். உங்க மருமகளுக்கு என் மருமகன் அங்கயிருக்கிறது பிடிக்கலைபோல” என்றார் சற்று கோபத்துடன்.

“இல்ல மாமா. உங்க பையன் உங்களோடதான் இருக்கணும். எனக்கெந்த ப்ராப்ளமும் இல்லை” என்று வேகமாக சொன்னாள் சுபா.

‘பாருங்கப்பா! மாமனும், மருமகளுமா சேர்ந்து என்னை வீட்டுக்கும், வீதிக்குமா விரட்டுறாங்க. இப்படியே போச்சின்னா ஜீவா உன்னுடைய வாழ்க்கை, ஹோகயாவா! ஹ்ம்... நல்லா வருவீங்க எல்லாரும்’ என்று மனம் நொந்து புலம்பிக்கொண்டிருந்தான்.



மறுநாள் இரண்டு பள்ளிகளும் பரபரப்பாக காணப்பட்டது. சுபா வழக்கம்போல் அகிலாவை அநதப்பள்ளியில் விட்டு வந்த தாண்டவுடன் முன்னக்கூட்டியே வந்து ஜீவாவை வரவேற்க சக ஆசிரியர்களுடன் தயாராகயிருந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் அந்த கருப்பு நிற இன்னோவா கார் பள்ளிக்குள் நுழைய, ஜீவாவை வரவேற்கவென்று நின்று கொண்டிருந்த சுபா காரிலிருந்து இறங்கியவனை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். உதடுகள் தன்னாலேயே “அழகன்டா” என முணுமுணுத்தது. கண்தெரிந்த பிறகு அவனை நெருக்கத்தில் கூட பார்த்திருக்கிறாள் தான். அந்த நேரங்களில் ஒருவித அழுத்தமும், அளவுக்கதிகமான கோபமும் அவள் கண்ணை மறைத்திருந்தது. இன்று அவன் காரைவிட்டு இறங்கியதிலிருந்து நிதானமாக மனதில் எந்தவித கோபமும் இல்லாமல் பார்க்கிறாள்.

மாநிறத்தையும் தாண்டிய நிறத்தில் பளிச்சென்று சிரித்த முகத்துடன், நல்ல உயரத்துடன், எவ்வளவு அழகான பெண்ணும் வேண்டாமென்று மறுக்கத் தோன்றாத முக அழகு. ‘அழகன்! ஆம் “அழகன்தான். என்ன இல்லை இவனிடத்தில். அழகு, அறிவு, படிப்பு, பண்பு, பணம், இதோ பள்ளிப்பொறுப்பு. ஏன் என்னை அப்படி ஒரு சூழ்நிலையில் மணம் புரிந்தான். வேறொரு பெண்ணை மணந்திருந்தாள் அவன் வாழ்வாவது நன்றாக அமைந்திருக்குமே. கணவனின் வாழ்வையும் கெடுத்து... ம்...’ என்ற பெருமூச்சுடன் ‘விடை காண முடியா விடுகதைதான் தன் திருமணம்’ என்றாள் மனதினுள்.

ஜீவாவும் அவளைக் காண அவனின் பார்வையினால் ஏற்பட்ட கூச்சத்தில் சுபா தலைகவிழ... அவனின் பார்வை மெல்லிய சிரிப்புடன் மனைவியின் மேல் பதிந்தபடியே வர, சுபா தன்னை நிதானித்து தன் பொறுப்பை எண்ணி சக ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்த தயாராகினாள்.

திருமணமாகாத ஒன்றிரெண்டு ஆசிரியைகளின் பார்வை ஜீவாவை விழுங்குவதுபோல் பார்ப்பதை கவனித்தவளுக்கு அதை எண்ணி உள்ளுர சிரிப்பு வந்தது. அவன் தன்னருகில் வருவதற்குள் அந்தப்பெண்கள் ‘ஜீவாவிற்கு திருமணமாகிற்றா? இல்லையா?’ என்று பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்திருன்தனர். அதில் ஒருசிலர் “நாம ட்ரை பண்ணித்தான் பார்க்கலாமே!” என்றனர்.

அதில் வந்த சிரிப்பு அதிகமாக, எங்கே தன்னையறியாமல் சத்தமாக சிரித்துவிடுவோமோ என்று தன்னைத்தானே அடக்கிக் கொண்டாள். அவளையே கவனித்துக்கொண்டு வந்தவன் மனைவியின் சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல் விழிக்க, சுபாவும் புன்னகையுடனேயே அனைவருக்கும் ஜீவாவை அறிமுகப்படுத்தினாள்.

பள்ளியின் தற்போதைய நிலவரங்களை சுபா எடுத்துச் சொல்ல, அதை கவனமாக கேட்டவன் பின், ஆசிரியர்களின் எண்ணங்களையும் கேட்டு தேவையானவற்றைக் குறித்துக்கொண்டு, தேவையில்லாதவற்றை விட்டான். பள்ளியின் முன்னேற்றத்திற்கு அவர்களின் உதவியும் தேவையென்று சொல்லி மற்றவர்களை அனுப்பியவன், தன் தந்தையைக் காப்பாற்றிய பி.ட்டி வாத்தியாரை மட்டும் நிற்க வைத்து நன்றிகள் பல சொன்னான்.

பின்னர் தான் படித்த தங்கள் பள்ளிக்குச் செல்ல அந்த வரவேற்பறையிலேயே சிறுவயது சுப்புவின் நினைவுவர, மனைவியை திரும்ப்பார்த்து சின்னதாக புன்னகைத்தான்.

அவனின் திடீர் புன்னகையின் அர்த்தம் புரியாமல் குழம்பியவள், குழப்பத்துடனேயே அங்கிருந்தவர்களிடமும் ஜீவாவின் அறிமுகம் நடத்தி, கடைசியாக அகிலாவைக் காண்பித்து, “இவங்கதான் நியூ அப்பாய்ண்ட்மெண்ட். அன்ட் தாண்டவ்ணா ஒய்ஃப்” என்றாள்.

“ஓ... சமீபத்திய புதுமண ஜோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்ககிட்ட ஒரு டௌட் கேட்கணுமே?” என்றதும் அவனுக்கு நன்றி சொன்ன அகிலா “என்ன டௌட் சார்?” என்றாள்.

“இவங்களோட எப்படி ப்ரண்டா இருக்கீங்க? சரியான காரசார பார்ட்டி” என்று சுபாவைக் காட்டினான்.

ஒரு நிமிடம் குழம்பியவள் சுபாவிடம் திரும்ப, அவளோ ஜீவாவை காதலாக பார்த்துக்கொண்டிருக்க அவளின் முகம் திருப்பி “உன் ஹஸ்பண்டா?” என்று ஜீவாவிற்கு கேட்காத குரலில் கேட்க... ‘ஆம்’ என்று சம்மதமாக தலையசைத்தாள்.

அதன்பின் சற்று தைரியம் வந்த அகிலா, “சார் சாப்பாட்டுல காரசாரம் இருந்தால்தான் வாய் ருசிக்கும். வயிறு நிறையும். அதுமாதிரிதான் நட்புக்குள்ள எல்லாமே இருந்தாதான் நட்பு அழகாகும்.”

“வாவ்! நீங்க ரொம்ப புத்திசாலிங்க. ப்ரண்டை விட்டுக்குடுக்க மாட்டேன்றீங்க குட்” என்றபடி நடந்தான்.

“உங்காளு சூப்பர்டி. உங்க ஜோடி பொருத்தம் அதைவிட சூப்பர்” என்று சுபாவின் காதருகில் சொல்லி, “செம ஹேண்ட்சமா இருக்காங்க. எப்படிடி இவரை விட்டுட்டு இருக்கிற?”

“ப்ச்... அகி ப்ளீஸ் தெரிஞ்சே கேட்கிற பார்த்தியா?” என்றதும் “ஆமா பெரிய புடலங்கா பிரச்சனை. போடி லூசு” என்ற தோழியை முறைத்து, ஜீவாவை அலுவலக அறைக்குக் கூட்டிச்சென்றாள். என்ன இங்கேயும் அந்த பள்ளியில் நடந்த பட்டிமன்ற தொல்லை இருந்தது.

வேலை சம்பந்தமாக இருவரும் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் இருந்தும், ஜீவா மனைவியிடம் உருகி வழியவில்லை அந்த பதவிக்கேயான பொறுப்புடன் வேலை செய்தான்.

கணவனின் அந்த உதாசீனப்படுத்துதல் கூட ஒருவகையில் வலிக்கத்தான் செய்தது. அதேபோல் அன்று மருத்துவமனையில் வைத்து பேசிய பிறகு தங்களது சொந்த வாழ்வைப்பற்றி இருவருமே பேசவில்லை. அதிலும் குழந்தையைப் பற்றிப் பேசி சூழ்நிலையை இன்னும் சிக்கலாக்கவில்லை. ஒருவேளை அன்று சொன்னதை மறந்துவிட்டானா? இல்லை அது மாயையா? என்ற நினைப்பு வந்தது சுபாவிற்கு. அவனுக்குத்தானே தெரியும் அப்படி சொன்னாலாவது மனம் மாறி தன்னுடன் வரமாட்டாளா என்றது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
916
மாலை வீடு திரும்பியதும் முகம் கைகால் கழுவி வந்து நேரே மாமனாரைப்போய் பார்த்து பின் மாமியாருக்கு உதவ வருபவள் இரவு உணவுவேளை முடிவது வரை வந்தனாவுடனே திரிந்து, ஜீவாவிற்கு எந்த வகையிலும் தன்னிடம் பேச சந்தர்ப்பமே கொடுக்காமல் தன்னறைக்குச் சென்றுவிடுவாள். கர்ப்பிணிப் பெண் என்பதால், எப்பொழுது என்ன நடக்குமென்று தெரியாது. அதனால், கதவை உட்புறம் பூட்டக்கூடாது என்ற வந்தனாவின் ஆணையில் சாத்தி வைத்தே தூங்குவாள்.

கர்ப்பமான நேரத்தில் மனைவிக்கு என்ன தேவையோ அதை ஜீவா தாயின் மூலமாகவே செய்தான். மாமியாரின் மூலம் கணவன்தான் செய்கிறான் என்பதை சுபாவும் உணர்ந்தே இருந்தாள். அவனால் தன்னை எப்படியோ போ என்று விடமுடியாதென்று தெரியும். அதனால் அதை உரிமையாகவே ஏற்றுக்கொண்டாள்.



அன்று பள்ளிநேரம் முடிந்து வீட்டிற்கு செல்லக் கிளம்புகையில், யோகலட்சுமி என்ற ஆசிரியை இன்னொரு ஆசிரியையிடம் பேசிக் கொண்டிருந்ததை தற்செயலாக கேட்க நேர்ந்தவளுக்கு சிறிதுநேரம் முகமெல்லாம் வியர்த்து ஒன்றும் ஓடாமல், தன்னை நிதானப்படுத்த அருகிலிருந்த பெஞ்சிலமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னரே கிளம்பினாள். செல்லும் வழியெல்லாம் யோகலட்சுமியின் பேச்சிக்களே எதிரொலித்தது.

“என்ன யோகா மிஸ் ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க? எதாவது விசேஷமா?” என்ற சக ஆசிரியைக்கு... “ஆமா. ஹேப்பி நியூஸ்தான். நம்ம ஜீவானந்த் சாரை மாப்பிள்ளை கேட்க போறேன்.”

“ஹேய்! நிஜமாகவா? கங்க்ராட்ஸ். நல்ல குணமுள்ள அழகானவர் கூட. உன் வசதிக்கும், அவங்க வசதிக்கும் மேட்ச் ஆகும். பேசி முடிச்சிட்டு சொல்லு” என்று அந்த ஆசிரியை வாழ்த்திச் செல்ல... கண்களில் கனவுகளுடன் சென்ற யோகாவிடம் சென்று ‘என் புருஷனை நீ மாப்பிள்ளை கேட்க போறியா?’ என்று கேட்கத் தோன்றிய எண்ணத்தை கைவிட்டு, ஒருவித கையாலாகாத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சுபா.

அந்த ஞாயிறன்று விடியற்காலையிலேயே ஒரு விசேஷம் என்று விவேக்கும், வந்தனாவும் வெளியூர் சென்றுவிட, கணவனுக்கு காஃபி கொடுத்து தனக்கும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தமர்ந்து செடிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சுபா. அப்பொழுது கேட்டைத்தள்ளி உள்ளே நுழைந்தவர்களைப் பார்த்தவளுக்கு ‘இவள் எப்படி இங்கே?’ என்று மனதிற்குள் கிலி வந்தது.

சுபாவைப் பார்த்ததும், “மேம் நீங்க எப்படி இங்க?” என்றபடி வந்தாள் யோகா.

“ஏன் இது எங்க வீடுதான். ஆமா என்ன திடீர்னு எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க? எதாவது விசேஷமா” என்று எங்க வீடு என்பதை அழுத்தி தெரியாததுபோல் கேட்டாள்.

“நோ மேம். இது ஜீவா சார் வீடு சொன்னாங்க. அட்ரஸ் மாறிடுச்சிபோல.”

“இல்ல மிஸ். அட்ரஸ் கரெக்ட்தான். இது ஜீவா வீடுதான்.”

“அப்ப நீங்க எப்படி இங்க?”

“ஏங்க எங்க வீட்ல நானில்லாம வேற எங்கேயிருப்பேன்னு நினைக்கிறீங்க?”

“ஹையோ! குழப்புறாங்களே. மேம் இது எங்கப்பா கருணாகரன். ஜீவா சாரை எனக்கு மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கோம்” பட்டென்று சொல்ல...

“வாட்!” என அதிர்ந்தவள், சட்டென்று சிரித்து, “உள்ளதான் இருக்காங்க போய் பாருங்க” என்று அனுப்பினாள்.

“தேங்க்ஸ் மேம்” என்று உள்ளே ஹாலுக்கு செல்ல காஃபியில் கவனத்தை வைத்திருந்தவன் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, யாரென்று தெரியாமல் விழித்து, சிலவினாடிகளில் “மிஸ்.யோகலட்சுமி. சாரி சட்டுன்னு அடையாளம் தெரியல” என்றான்.

“நீங்கதான் யாரையும் முகம் நிமிர்ந்து பார்க்கிறதில்லையே சார். நாங்களும் கொஞ்சம் பார்க்கிறார் போல்தான் இருப்போம்” என்று அவன் தன்னை இதுவரை கவனிக்காததை சிரிப்புடன் சொல்வதுபோல் குறை சொன்னவள், “சார் இது எங்க அப்பா” என்றதும் மரியாதை நிமித்தம் வணக்கம் சொல்லி இருவரும் அறிமுகமாக...

“தம்பி நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன். இந்த இழுத்துக்கோ, பறிச்சிக்கோ விஷயமெல்லாம் நமக்கு செட்டாகாது. நான்லாம்” என பேசிக்கொண்டே போனவரை...

‘ஷப்பா! இதுதான் நேரடியா விஷயத்துக்கு வர்றதா’ என்று பாவமாகப் பார்க்க... தன்னறையிலுள்ள கதவருகில் சாய்ந்தவாக்கில் நின்று கொண்டிருந்த சுபா அதை ஒருவித ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“தம்பி என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று ஒரு அணுகுண்டை விட்டெறிந்து, “சொத்து முழுக்க என் பொண்ணு யோகாவிற்குதான். அவ பிறந்த பிறகுதான் எங்களுக்கு யோகம் வந்தது. அதான் அதையே பெயரா வச்சிட்டேன். சீர் செனத்தி பத்தி கவலைப்பட வேண்டாம். கல்யாணத்தை தூள் கிளப்பிடலாம்” என்று விடாமல் பேசிக்கொண்டே போனவரை தடுக்க வழியில்லாமல் விழித்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து, வந்த சிரிப்பை அடக்க வாய்பொத்தி படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள் சுபா.

அதைப்பார்த்த ஜீவா ‘இங்க ஒருத்தன் சிக்கிக்கிட்டு அவஸ்தைப்படுறேன் உனக்கு சிரிப்பாவா இருக்கு. இருடி உனக்கு வைக்கிறேன் ஆப்பு’ என்றவனுக்குத் தெரியாது அந்த ஆப்பு அவனுக்கே என்று. “மிஸ்.யோகா சாரி இன்னைக்கு அப்பா, அம்மா வெளியூர் போயிருக்காங்க. நெக்ஸ்ட் சண்டே இதுபற்றி பேசலாமா?”

“ஓ... ஷ்யூர் சார்” என்று கிளம்ப யத்தனிக்க, திடீரென்று “சார் சுபா மேம் இங்கெப்படி?” என தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டாள்.

கதவோரம் சாய்ந்திருந்தவள் அவளின் கேள்விக்கு கணவனின் பதில் என்னவாக இருக்குமென்று நிமிர்ந்து ஆர்வத்துடன் அவனைப் பார்த்தாள். மனைவியின் எதிர்பார்ப்பு முகம் பார்த்து, அவளை கொஞ்சம் அரள வைக்க, என்ன சொல்வதென்று யோசித்தவன், மாமனாரை மனதில் வைத்து “என்னோட மாமா பொண்ணு” என்றான்.

சட்டென்று ஒரு வலி மனதின் ஓரத்தில் வலித்தாலும் தன்னைக் காயப்படுத்தத்தான் சொல்கிறான் என நினைத்தவள், ‘டேக் இட் ஈஸி சுபா.’ தன்னைத்தானே தேற்றிக்கொண்டு அவர்களை சிரித்த முகமாகவே வழியனுப்பி தன்னறைக்குள் சென்று நுழைந்தாள்.

அவன் மனைவி என்று சொல்லாததற்கு சண்டைக்கு வருவாள் என்று ஜீவா எதிர்பார்க்க, அவளோ அறைக்குள் சென்று கதவைப் பூட்டியது இன்னும் கடுப்பைக்கிளப்ப, “உன்னைத் திருத்தவே முடியாது” என்று திட்டியபடி தன்னறைக்குள் நுழைந்தான்.

மறுநாள் அவன் பள்ளிக்குச் செல்லும்போதே யோகா மாப்பிள்ளை பார்க்கச்சென்ற விஷயம் காட்டுத்தீயாக பரவியிருக்க, செய்வதறியாது திகைத்தான் ஜீவா. ‘சே... இப்போதைக்கு யார்கிட்டேயும் சொல்லாதீங்கன்னு சொல்லியனுப்பியிருக்கணும். இந்த சுப்புவ வம்பிழுக்கிறதா நினைச்சி எனக்கு நானே செல்ஃப் ஆப்பு வச்சிக்கிட்டேன் போலவே!’

யோகா, ஜீவாவைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு வெட்கத்தை ஜீவாவிற்கு பரிசளிக்க, அந்த பரிசை தட்டிவிட்டு, ‘அம்மாடியோவ்!’ என அலற ஆரம்பித்தான். இங்கிருந்தால்தானே பிரச்சனை என்று சுபா இருக்கும் பள்ளிக்குச் செல்ல, அங்கும் இதே அமளிதுமளிதான் ஆசிரியர்கள் மத்தியில்.

அதிலும் ஒரு சிலர், ‘எப்படி அவ வசதியா இருக்கிறதால சம்மதிச்சிருப்பாரோ. ஹ்ம்... பணம் பணத்தோடதான் சேருது பாரேன். நாமளும்தான் வந்த நாள்லயிருந்து சைட் அடிக்கிறோம். அவபாரு வீட்டுக்கே போயிட்டாளாம்” என்று ஒருசில ஏக்கப் பெருமூச்சிகளும் எழுந்தது.

அதையும் கேட்டு சிரித்தபடியே நகர்ந்த சுபாவைக் கண்டு, “ஏன்டி அறிவிருக்கா. உன் புருஷனை ஆளாளுக்கு ஏலம் போடுறாங்க. நீ என்னடான்னா சிரிச்சிட்டிருக்க? என்னதான் நினைச்சிட்டிருக்க மனசுல?”

“சத்தியமா எனக்கே புரியலடி. ஆனா ஒண்ணு மட்டும் புரியுது. ஜீவா என்னை வெறுப்பேத்துறதா நினைச்சி தனக்குத்தானே வினையை இழுத்து வச்சிக்கிட்டாங்கன்னு. முடிஞ்ச வரை சமாளிக்கட்டும், முடியாத பட்சத்துல நான் என்ட்ரியாகுறேன்.”

“ஹ்ம்... நீ இப்படியே லூசு மாதிரி பேசிகிட்டேயிரு, சே... என்ன பொண்ணுங்கடி இவங்கள்லாம். ஒருத்தனுக்கு கல்யாணம் ஆகிருச்சா, இல்லையான்னு கூடவா பார்க்கமாட்டாங்க!”

“ஜீவா மாதிரி ஒரு பையன் கிடைச்சா கல்யாணத்துக்கு முன்னாடி நான் கூட இவங்கள்ல ஒருத்தியா இருந்திருப்பேன் அகி. இப்பப்பாரு அவங்களே எனக்குக் கிடைச்சும் எட்டுற தூரத்திலிருந்தும் தொட முடியாத சூழ்நிலையில இருக்கேன்” என தன்னையே நொந்தபடி தோழியுடன் நடந்தாள்.

இரண்டு நாட்கள் பொறுத்த ஜீவாவினால் மூன்றாம் நாள் யோகாவின் தொல்லை அளவு மீறுவதுபோல் தோன்றியது. அவன் செல்லுமிடமெல்லாம் எதாவது ஒரு சாக்கு சொல்லி அடிக்கடி அவன் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தாள். அவனை நேருக்குநேர் பார்க்க நேரிட்டால் வெட்கத்தை வெளிப்படையாக காட்டினாள்.

அதில் காண்டானவன் மதியம் உணவு வேளையில் அவளை தன்னறைக்கு வரவழைத்து பேச ஆரம்பிக்க... அதுவும் கைகால் முளைத்து வெளியே சுற்றியது. அவளை அமரச்சொன்னவன் “ஏன் இப்படி பண்ணுனீங்க மிஸ். நான் பேசிக்கலாம்னுதான சொன்னேன். மேரேஜ் பண்ணிக்கிறேன்னு சொல்லலையே?”

“எல்லாம் ஒரு நம்பிக்கைதான் சார். இல்லன்னா அன்னைக்கே முடியாது சொல்லியிருப்பீங்கள்ல. என்னைப்பற்றி விசாரிக்கத்தான இந்த ஒன்வீக் டைம் கூட. ஐ நோ சார். நான் நல்ல பொண்ணுதான் சார். என்னால உங்க குடும்பத்துக்குள்ள எந்த குழப்பமும் வராது. தாராளமா என்னை நம்பலாம். நான் நல்ல ஒய்ஃபா இருப்பேன்” என்று அவனைப் பேசவிடாமல் அவளே பேசிக்கொண்டிருந்தாள்.

ஐயோவென்றிருந்தது ஜீவாவிற்கு. வான்டடா போயி வம்பை விலைகுடுத்து வாங்கிட்டேனே.’ மனதில் நினைத்து, “மிஸ் ஒரு நிமிஷம் நீங்க நினைக்கிற மாதிரி நான் கல்யாணமாகாதவன் கிடையாது. எனக்குன்னு குடும்பம் இருக்கு” என்றான்.

“அதான் தெரியுமே சார்” என்று அவனை அதிரவைத்து, “அதையும் அப்பா விசாரிச்சிட்டாங்க. உங்க ஒய்ஃப் உங்களோட வாழமாட்டேன்னு பிரிஞ்சிட்டாங்களாம். எனக்கு உங்க பாஸ்ட் வேண்டாம் சார். அவங்களுக்கு ஒரு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிடுங்க போதும்” என்றாள் அசால்ட்டாக.

“வாட்!” என்று அதிர்ச்சியில் எழுந்தவன், சில வினாடிகள் கைமூடி தன்னை அடக்கி, “ப்ளீஸ் நீங்க கிளம்புங்க நான் கொஞ்சம் யோசிக்கணும்” என்று அவளை வெளியே அனுப்ப முயல...

“ஓகே சார். சீக்கிரம் முடிச்சிட்டு சொல்லுங்க. நாம தொடரலாம் நம்ம ப்யூச்சர் லைஃபை” என்றபடி வெளியே சென்றாள்.

மாலையில் வீட்டிற்குள் நுழைந்தவனை சுபா ஆராய்ச்சிப் பார்வை பார்க்க... ஜீவாவோ தலைகவிழ்ந்தபடி உள்ளே சென்று, ரெப்ரெஷாகி, மனதையும் ப்ரஷாக்கி ஹாலிற்கு வந்தான். கணவனுக்கு காஃபி கொடுத்து அவன் குடுத்து முடித்ததும்... “என்ன சார் உங்களுக்கு கல்யாணமாமே. கங்க்ராஜுலேஷன்ஸ்” என்றாள்.

“யார் சொன்னா?” என இறுகிய குரலில் கேட்க...

“ஊரே சொல்லுது. ஒரே வீட்ல இருக்கோம் நீங்க சொல்லலை பார்த்தீங்களா?” கிண்டலாக கேட்டாள்.

அவளின் குரலின் பரிகாசம் உணர்ந்து, “என்னடி நக்கலா?”

“நக்கல் இல்ல சார். அன்னைக்கே எனக்கான வாழ்க்கை வாழப்போறேன்னு சொன்னீங்களே. ஒருவேளை அது இதுதானோன்னு நினைச்சேன்” என்று நக்கலை நாசூக்காக வெளியிட்டாள்.

அதில் தன் பொறுமையை இழந்தவன், ஏற்கனவே இருந்த எரிச்சலில்... “ஆமாடி. நான் சொன்ன எனக்கான வாழ்க்கை இதுதான். இதுதான நீ எதிர்பார்த்த பதில். போ... இந்த சண்டே வருவாங்க அதுக்குள்ள டைவர்ஸ்கு அப்ளை பண்ணனுமாம். நாளைக்கே ரெடி பண்றேன் கையெழுத்து போட ரெடியாகிடு. அவ கட்டுனா என்னைத்தான் கட்டுவாளாம். வேண்டாம்னு போன முதல் பொண்டாட்டியை நினைச்சி உங்க வாழ்க்கையை வீணாக்காதீங்க. உங்களுக்கு நான் இருக்கேன்னு சொன்னா. போதுமா நீ தேடின நியூஸ்” என தன் ஒட்டுமொத்த கோபத்தையெல்லாம் வார்த்தைகளாக்கி அனலாய் எறிந்து எழுந்து சென்றான்.

இதை எதிர்பார்த்திராத சுபா விக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள். சும்மா அவனை வம்பிழுக்கவே பேச்சி கொடுத்தாள். அது இப்படி விபரீதத்தில் முடியுமென்று நினைக்கவில்லை. ஏன் இந்த கோபம்? விளையாட்டு வினையாகும்போல் தோன்றியது. இதை எப்படி நிறுத்துவதென்று தெரியவில்லை. ‘சே... வரவர நீ என்ன செய்யுறன்னு உனக்கே தெரியலை சுபா’ என தன்னையே நொந்தாள்.”

இருவரின் இரத்தத்தையும் எகிற வைத்த ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. ‘சே... இந்த அத்தை, மாமா வேற இந்த நேரம்தான் ஊருக்குப் போகணுமா. நேத்தே வர்றேன்னு சொன்னவங்க இன்னும் வரலை. உடம்பு சரியில்லாத மனிதனை அலைக்கழிக்கிறோம்னு தெரிய வேண்டாமா’ என்று தனக்கு சாதகமாக யோசித்தபடி மனம் அலைபாய்ந்தது. ‘நான் எதுக்கு இப்படி தவிக்கிறேன்? புருஷனை வேண்டாமென்று சொல்லி அவனை விடவும் செய்யாமல் நான் என்னதான் செஞ்சிட்டிருக்கேன். பேசாம அந்தப் பொண்ணை ஜீவாவுக்கு கட்டிவச்சிரலாமா?’ யோசனைகள் பலவாறாக விரிந்தது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top