• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
21


ராசி உள்ளே நுழையும் போதே அவனும் பின்னாலேயே வந்தான். அவன் வந்ததை கவனிக்காத, இல்லை உணரவே செய்யாத ராசி லோஜினியிடம் பேச ஆரம்பித்தாள். குழந்தையாக மாறி சண்டையிட்டுக் கொண்டிருந்தவள், அவனுள் இன்னும் இன்னும் ஆழப்பதிந்து கொண்டிருந்தாள். “எனக்குன்னு யார் இருக்காங்க” எனும்போது ‘ஏன் நானில்லையா?’ என சத்தமாக சொல்ல விழைந்த மனம் அடுத்தடுத்து வந்த, ‘சரத்னு ஒருத்தரை சந்திக்கவே இல்லன்னு நினைச்சுக்கறேன்’ என்றது... அவனை வெட்டி கூறு போட்டது. ‘வெறுத்திட்டியா ராசாத்தி! நான் உனக்கு அவ்வளவுதானா!” என்ன முயன்றும் தன் கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இப்ப எழுந்து வர்றீங்களா? இல்லையா?” என சத்தமாக அதட்டியவள், பின் குரலில் ஸ்ருதி இறக்கி, “நான் சின்னப் பொண்ணுதான அம்மாஆச்சி. நான் பாவம்லயா. எனக்கு பயமா இருக்கு லோஜி. எனக்காக உங்க ராசாத்திக்காக சீக்கிரம் வந்திருங்க. என்னோட லைஃப் உங்களைச் சார்ந்துதான்னு தெரியும் தான. ப்ளீஸ் லோஜி உங்க ராசாத்திக்காக இந்த ஒருமுறை வந்திருங்க. நெக்ஸ்ட் உங்களை கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்கறேன். நான் அழுறேன் தான? ஏன் அழுறேன்னு கேட்கமாட்டீங்களா? கேளுங்க அம்மாஆச்சி” என அழுதவள்...

“அம்மாஆச்சி மாமா சாகக்கிடக்கும் போது எனக்கு எல்லாமே நீங்கதான்னு சொன்னாங்க தான? அதே மாதிரி உங்களுக்கும் எல்லாமே நான்தான்னும் சொன்னாங்கள்ல. நீங்க மட்டும் எப்படி என்னை தனியா விட்டுட்டு இப்படி வந்து படுத்துக்கலாம். உங்களை நல்லா பார்த்துப்பேன்னு ப்ராமிஸ் பண்ணின நானே உங்களை ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிட்டேன்ல. மாமா என்னை மன்னிக்கவே மாட்டாங்க தெரியுமா. முதல் முறையா மாமா பேச்சை மீறியிருக்கேன். மனசு வலிக்குது அம்மாஆச்சி. இந்த குற்றவுணர்ச்சியோட ரொம்ப நாள் இருக்க முடியாது. நீங்க முழிக்கல நா...நான்” என்றவள் பார்வை நர்ஸிங்கிற்காக இருந்த பாக்ஸில் விழுந்து அதிலிருந்த சிறிய கத்தியை எடுத்தாள்.

அவளின் வேதனையை தன்னுள் வாங்க முடியாமல், அவளின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொல்ல முடியாமல் இயலாமையில் நின்றிருந்தவன் அவள் பார்வை சென்ற இடத்தைப் பார்த்து விஷயத்தை ஓரளவு ஊகித்து, அந்த விபரீதத்தை தடுக்க வேகமாக வர...

அதற்குள் “நீங்க எழுந்து வரலன்னா, நான் என்னையே வெட்டிக்குவேன் அம்மாஆச்சி. எழுந்திருச்சி என்னைப் பாருங்க. பார்க்க மாட்டீங்கள்ல” என்று கத்தியை கைக்கு நேரே உயர்த்தி கத்தியை வைத்து கண்மூடி ஓங்கினாள்.

அவளின் கைபிடித்து கத்தியைப் பறிக்க முயற்சித்தபடி, “என்ன காரியம் செய்யப்போற? கத்தியை விடு” என்றான் சத்தமாக.

யார் தன்னை பிடித்தது என்பதை உணராமலேயே, “முடியாது. என்னை தடுக்காதீங்க. என்னை விடுங்க என்னால தான் எல்லாமே. நானே இல்லாம போயிட்டா...” சொல்லி முடியுமுன் கத்தியைப் பறித்து ஓங்கி ஒரு அறைவிட்டான் சரத்.

இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்த்திராத ராசிக்கு, ஏற்கனவே இருந்த மனச்சுமைகள், கடந்த ஒரு வாரமாக சரிவர சாப்பிடாமல் இருந்தது என எல்லாமாக சேர்ந்து மயங்கிச் சரிந்தாள்.

இதை எதிர்பார்க்காத சரத் அவளை ஆதரவாகப் பிடித்து தோளில் சாய்த்து, “ராசாத்தி என்னைப் பாரு. ஏன்டி என்னை இம்சைபடுத்துற” என்றவன் அவளை கீழே கிடத்தி தண்ணீர் எடுத்து வந்து அவளை தன் மடிமீது தாங்கி தண்ணீர் தெளிக்க, மெல்ல முணகியவளை தன்னுடன் சேர்த்தணைத்தான். “என்ன நடந்ததுன்னு முழுசா தெரியாம, என்னை விட்டுட்டுப் போக எப்படி மனசு வந்தது உனக்கு. நேர்ல சொல்லலன்னா உன்மேல் எதுவும் இல்லன்னு அர்த்தமா! ராசாத்தி என்னைப் பாருடி” என்று அவளின் கன்னம் தட்டியதும்... அவள் மெல்ல கண்திறந்தாள்.

“ஏன் இப்படி?” என்றவன் கண்களும் கண்ணீருக்குள் தத்தளித்தது. “மாமா நீ.. நீ என்னை ஏமாத்திட்ட. என்னை வேண்டாம்னு தூக்கி போட்டுட்ட தான. நீ எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம் போ” என்று கத்தி மறுபடியும் உணர்விழந்து விழுந்தாள்.

அதில் இன்னுமே துடித்தவன், “ஏய் ராசாத்தி! நான் உன்னை ஏமாத்தலடா. நான் போய் உன்னை ஏமாத்துறதா. நீ தான்டா நான். நானே என்னை எப்படி ஏமாத்திக்கிறது. என்னைப் பாருமா. எனக்குன்னு நீதான இருக்க. நீயில்லன்னா நான் எப்படிமா. எழுந்திருமா” என்று புலம்பிக் கொண்டிருக்க...

அந்த நேரம் உள்ளே வந்த நர்ஸ் பதற்றத்துடன் விசாரித்து, அவனையும் திட்ட, அவளைத் தூக்கியபடி வெளியே வந்த சரத்தைப் பார்த்த அனைவரும் அதிர்ந்து விசாரிக்க மேலோட்டமாக, “கொஞ்சம் எமோஷனலாகிட்டா” என்ற மட்டும் சொல்லி வேறு பெட்டில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டது.

ராசி அழுதபடி தன்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே நினைவு திரும்பியது மீனலோஜினிக்கு. ராசி பேசப்பேச அவள் தன்மேல் வைத்திருக்கும் அளவுக்கு அதிகமான அன்பில் மெய்சிலிர்த்தது லோஜிக்கு. கண்களை திறக்க முயற்சித்தும் முடியாமல் போக அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ராசியும் வேதனையில் உழன்றதால் லோஜி எழுந்ததை உணரவில்லை என்றால், சரத் அவளையே பார்த்திருந்ததால் லோஜியை கவனிக்கவில்லை. கடைசியாக அவள் பேசியதில் எதோ விபரீதம் என்று உணர மெல்ல கண்ணைத் திறக்க சரத் ஓடி வருவது தெரிந்தது. அந்த நிமிடம் தன்னையுமறியாமல் ஒரு நிம்மதிப் பெருமூச்சி எழுந்தது மீனலோஜினிக்கு. ராசியைத் திட்டி அவளை கட்டுப்படுத்த அடிக்க, அதை தடுக்க முடியவில்லை லோஜியால். அதில் மயங்கியவளை மடியில் தாங்கி அவன் பேசியதைக் கேட்டு ஒரு முடிவுக்கு வந்தவராய், அதற்கான நேரம் பார்த்திருந்தார்.

மறுநாள் காலை வெகு நேரம் வரை ராசி எழவில்லை. மீனலோஜினியை அதற்குள் தனி வார்டுக்கு மாற்ற, ராசியைப் பற்றிய கவலையுடன் இரவே டாக்டரிடம் சரத் கேட்டிருந்தான். “ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல. ஸ்லீப்பிங் இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். நல்லா தூங்கி எழுந்தா மைண்ட் டென்ஷன் கொஞ்சம் குறைந்திருக்கும்” என்றார்.

டாக்டர் சொன்னது போல் மறுநாள்தான் கண் விழித்தாள். எழுந்ததும் லோஜியைத் தேடி ஐசியூ ஓட, அங்கில்லை என்றதும் “ஆச்சீ ஆச்சீ” என்று கத்த ஆரம்பித்தாள்.

அவள் எழவில்லை என்பதால் ரோகிணியும், கிரியும் சாப்பாடு எடுத்து வரச்செல்ல... சரத் முந்தின தினமே சாந்திக்கு போன் செய்ததால், அதிகாலையிலேயே அவர்கள் வர, மஞ்சுவால் வரமுடியாத சூழ்நிலை. சாந்தி ராசியைப் பார்த்துவிட்டு லோஜியினருகில் இருந்ததால் ராசியைக் கவனிக்கவில்லை. பாபுவோ அதிகபேர் கூடாதென்றதால் இரவே வீட்டிற்கு சென்றிருந்தான்.

ராசியின் அலறல் கேட்டு ஒருசிலர் அங்கு வர, காலையில் விசிட்டர் டைம் பார்த்து அங்கு வந்த சரத்திற்கு அறையில் அவளில்லை என்றதும் ஒன்றும் புரியவில்லை. நேரே லோஜி இருக்குமிடம் செல்ல அங்கேயும் இல்லை. உடனே நினைவு வந்தவன் ஐசியூ ஓட, அவளோ பைத்தியம் போல் “அம்மாஆச்சி” என்று கத்திக் கொண்டிருந்தாள். வேகமாக வந்தவன் அவளைப் பிடித்து, “இங்க என்ன பண்ற ராசி? ஏன் கத்தி கலாட்டா பண்ற? எல்லாரும் பார்க்கிறாங்க பாரு?” என்றான் அவளுக்கு மட்டுமே கேட்கும் விதமாக.

அவன் சொன்னது எதையும் காதில் வாங்கும் நிலையில் அவளில்லை. “மனலோஜினி ஐசியூவில் இல்லை என்றதும், அவர் உயிரோடு இல்லையென்று மனதில் விழுந்த அதிர்ச்சி அவளை யோசிக்க விடவில்லை. அவனைக் கண்டதும் “ஹரி நீங்க சொல்லுங்க. அம்மாஆச்சி எங்க? அவங்களுக்கு என்னாச்சி? ஏன் ஐசியூல இல்ல? ப்ளீஸ் சொல்லுங்க ஹரி. ப்ளீஸ் என் லோஜிக்கு என்ன ஆச்சின்னு சொல்லுங்க. என் லோஜியை என்ன பண்ணுனீங்க?” என கதற...

அவள் தவறாக புரிந்திருக்கிறாள் என்பதை யூகித்து அவளை தன்னோடு அணைத்தவனின் கண்கள் கலங்கியது அவளை அந்த நிலையில் பார்க்கையில். எப்படி இருந்தவள் இப்பொழுது அதிக நாள் நோயில் இருந்தாற்போல். அவனால் அவளை இந்த நிலையில் பார்க்க முடியவில்லை. அவளின் கோவப்பார்வை, குழந்தைத்தனம், சண்டைக்காரியாய் சிலிர்ப்பது, தன் அழகிய கண்களால் காதலாய் பார்த்தது என்று வேறு வேறு கோணங்களில் பார்த்தவனுக்கு தன் பாட்டிக்காக உயிரைக்கூட விடத் தயாராயிருக்கும், எப்பொழுதும் கண்களில் கண்ணீருடனிருக்கும் ராசியின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று எண்ணும்போதே தன் மேலேயே கோவம் வந்தது.

“லோஜிம்மாவுக்கு ஒண்ணும் இல்லடா. வார்டுக்கு மாத்தியாச்சி. இந்த ஹரி எப்பவும் உண்மையைத்தான் பேசுவான். அவங்க ஷேஃபாதான் இருக்காங்க” என்றான் அவளுக்கு புரியும் விதமாக.

எது அவள் மூளையை சென்றடைந்ததோ இல்லையோ, “ஹரி எப்பவும் உண்மைதான் பேசுவான்” என்ற வார்த்தை அவளின் தூங்கிய உணர்வுகளைத் தட்டியெழுப்ப, சட்டென்று அவனிடமிருந்து விலகி, “அப்ப அம்மாஆச்சி ஷேஃப்தான?” அவனின் சம்மதமான தலையாட்டலில், “அப்ப அன்னைக்கு நீங்க பேசினதும் உண்மைதான?” என்ற கேள்வியில் அயர்ந்து தான் போனான். எதற்கு எதை முடிச்சிடுகிறாள் என்று.

“ராசிமா! நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு” என்று அவளைத் தொட வர...

“டோண்ட்... டோண்ட் டச் மீ மிஸ்டர்.சரத்” பற்களைக் கடித்தபடி ஆத்திரத்துடன் சொல்லி ஆங்காரமாய் நின்றிருந்தாள்.

“சரி சரி நான் தொடலை. எதுவாயிருந்தாலும் லோஜிமா வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம்.”

“வேண்டாம். இனி நான் உங்களை பார்க்க விரும்பல. லீவ் மை ஹோல் லைஃப் மிஸ்டர்.சரத்” என்றாள் ஸ்திரமாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அவளின் வார்த்தைகளில் அடிவாங்கியவன், இப்போதைக்கு ராசிதான் முக்கியமென்று தன் மனதைத் தேற்றி, “சரி நான் வரல. இப்ப வா நான் உன்னை ரூம்ல விட்டுட்டு போறேன். ஓரேயடியாய்” என்று நடக்க ஆரம்பித்தான்.

‘ஓரேயடியாய்’ என்ற வார்த்தையில் மனம் துடித்தாலும், அவனைப் பின் தொடர்ந்தாள் ராசி. அறைக்குள் அவளை விட்டு வெளியேறப் போனவனை... சாந்தி அழைத்து “ஏன்டா ஒருமாதிரி இருக்க?” என்று விசாரித்தார்.

“ப்ச்... ஒண்ணுமில்லக்கா. லைஃப்ல நான் நினைச்சது எதுவுமே நடக்கமாட்டேன்னுது. நான் வாங்கி வந்த வரம்போல” என சலித்தபடி சொல்லியவனை...

சாந்தி கேள்வியாய் பார்த்து “என்னடா பிரச்சனை?” என கேட்டார்.

“ப்ச்... சும்மா நானும் தத்துவம் சொல்லலாம்னு தான்” என்றவன் மனதினுள் எழுந்த வலியை உணர்ந்தே இருந்தார் சாந்தி. சாந்தி வந்ததுமே லோஜி அனைத்தையும் சொல்லி தன் முடிவையும் சொல்ல... “உங்க இஷ்டம்” என்று சாந்தி முடித்துவிட்டார்.

“சரிக்கா நான் கிளம்பறேன்” என்றவனை தடுத்து “உன்கிட்ட எதோ பேசணுமாம்” என்று லோஜியைக் காண்பித்தார்.

லோஜி உள்ளே நுழைந்தவர்களையே பார்த்திருக்க, தன்னருகில் வந்து நின்ற பேத்தியைப் பார்த்திருந்தாலும் சரத்திற்கும், சாந்திக்கும் உண்டான பேச்சிகளையும் கவனித்தார்.

ராசியோ தன் பாட்டியை கண்களுள் நிறைத்து கண்ணீருடன் நிற்க, அவளை தலையசைத்து தன்னருகே லோஜி அழைக்க, அருகில் அமர்ந்தவள், “என்ன அம்மாஆச்சி இப்படிப் பண்ணிட்டீங்க? என் உயிரே என்கிட்ட இல்ல தெரியுமா? என்னைப்பற்றி கொஞ்சம்கூட யோசிக்கலைல்ல” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தாள்.

“பாப்பா அதான் எதுவும் ஆகலைல்ல. அப்புறமென்ன?”

“ஆகலைன்னு ஃபீலிங் வேறயா.. கொன்னுருவேன். நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா. அசால்ட்டா எதுவும் ஆகலைலன்னு சொல்றீங்க. இனி இந்த மாதிரி உடம்பை ஸ்ட்ரெய்ன் பண்ணக்கூடாது சரியா. மனசுல எது இருந்தாலும் வெளிப்படையா பேசி மைண்ட் ப்ரீ பண்ணிக்கனும் புரிஞ்சிதா?”

“அதுக்கு நான் சொல்றதை நீ கேட்கணும் கேட்பியா?” என்றார் பூடகமாய்.

அதையறியாத ராசி “கண்டிப்பா. என் லோஜிக்காக எது வேணும்னாலும் செய்வேன்” என்றாள் அழுத்தமாய்.

“சரி கண்ணைத் துடை” என.. அவள் துடைத்ததும், “நான் சொல்ற பையனை மறுக்காம நீ கல்யாணம் பண்ணிக்கனும்” என்றார் திடமாக.

“ஆச்சீஈஈ!” என அதிர்ந்து எழுந்தவள் சரத்தை திரும்பிப் பார்க்க, இவளின் அதிர்ச்சிக்கு குறையாத அதிர்ச்சி அங்கிருந்தது.

“பாப்பா உட்காரு” என்று அதட்டி அவள் அமர்ந்ததும், “நீ எங்க கல்யாணமே பண்ணிக்காம இப்படியே இருந்திருவியோன்ற பயம்தான் எனக்கு. அதையே யோசிச்சிட்டிருந்தேனா, அப்ப தான் நெஞ்சி வலி வந்தது.”

“அம்மாஆச்சி” என கெஞ்சலாய் பார்த்தவளை முறைத்து, “கல்யாணம் பண்ணிப்பியா? மாட்டியா?”

சில வினாடிகள் கண்மூடி தன்னை நிதானப்படுத்தியவள், மீனலோஜினியை நேருக்கு நேர் பார்த்து, “நான் பண்ணிக்கிறேன். மாப்பிள்ளைனு யாரைக் கை காட்டினாலும் எதுவும் கேட்காம பண்ணிக்கிறேன்.”

“பேச்சு மாறமாட்டியே?”

“என் அம்மாஆச்சி என்னை அந்தளவுக்கு வளர்க்கல. உங்களைவிட வேற எதுவும் எனக்கு பெருசில்லை. நிஜமாகத்தான் சொல்றேன். நான் மேரேஜ் பண்ணிக்கிறேன்” என்றவளுக்கு இனி செய்வதற்கு ஒன்றுமில்லை கடவுள் விட்டவழி என்பது மட்டும் தெரிந்தது. லோஜியின் மேலுள்ள பாசம் அவளின் காதலை மொத்தமும் வென்றது.

சரத்தோ மொத்தமும் நொறுங்கிக் கொண்டிருந்தான் ராசியின் வார்த்தையில். இதை அவன் சர்வ நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அவளின் கோபத்தை குறைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், இந்த திருப்பம் முற்றிலும் எதிர்பாராதது. எப்படி உன்னால் முடிந்தது நிமிடத்தில் என்னை தூக்கிப்போட? என்னை விட உன்னை யார் பார்த்துப்பாங்கன்னு சம்மதிச்ச ராசாத்தி?’ என்றபடி அவளையே பார்த்திருக்க...

அவளோ அவனின் பார்வை தன்னைத் துளைத்த போதும் லோஜியையே பார்த்தபடி இருந்தாள். உள்ளுக்குள் வலிக்கத்தான் செய்தது. ஆனால், தன் வலியை விட தன்னை உயிராய் வளர்த்த ஜீவன் முக்கியமல்லவா! அதனாலேயே மன வேதனையை மறைத்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“மாப்பிள்ளை என் பையன் தான் ராசிமா” என்றதும், தன் நிலைமையும் மீறி, ‘எனக்குத் தெரியாமல் பையனா?’ என நினைத்து புரியாமல் விழித்தவள், “மாமாவுக்கு தம்பி இருக்கிறதா சொல்லவே இல்லையே அம்மாஆச்சி?” என்றாள்.

“மண்டு மண்டு” என்று அவளைப் போலவே திட்டி, “கூடப்பிறந்தால் தான் தம்பியா? எங்க அக்கா பையன் கூட என் பையன்தான்” எனவும் ராசி அமைதியாக,

“என்ன சித்தி புள்ளைய குழப்புறீங்க” என்று சாந்தி சொல்ல,

“சித்தியா! இது எப்போ?” என லோஜியையும் சாந்தியையும் பார்த்தாள்.

“ஆமா ராசிமா. அவங்களுக்கு நான் சித்தி தான். அன்னைக்கு பால்காய்ச்ச போயிருந்தப்ப தான் எனக்கு தெரிஞ்சது. எனக்கு சாந்தியை அடையாளம் தெரியல. ஏன்னா சின்னப்பொண்ணுல பார்த்தது பாரு. அவ என்னைத் தெரிஞ்சி கேட்டப்ப என்னோட ஆச்சர்யத்துக்கு அளவே இல்லை. எங்க அக்கா அத்தான் இறந்தப்ப போயிருந்தேன். உங்க தாத்தா இறந்த பிறகு எங்கேயும் போறதில்ல. சொந்தங்களையே மறந்துட்டேன்னு கூட சொல்லலாம். நானும் உன் மாமாவும்தான்னு வாழ்ந்துட்டோம்.”

ராசிக்கு அவர் சொல்லும் போதே ஏதோ புரிகிறார்போல இருந்தது.

“என்ன ராசிமா அப்படிப் பார்க்கிற? சரத் என் பையன்தான். அதான் என் செல்ல பேத்தியை அவளோட மாமனுக்கே கல்யாணம் பண்ணித்தரலாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

ஆச்சர்யமா! சந்தோஷமா! அதிர்ச்சியா! என்று பிரிக்க முடியாமல் சரத்தை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவனின் அதிர்ச்சி முகம் தெரிய, அது தன்னைப் பிடிக்காததால் வந்த அதிர்ச்சி என நினைத்து, ‘வேண்டாமே!’ என்பது போல் தலையசைத்தாள்.

அதில் இன்னமும் அதிர்ந்தான் சரத். ‘லோஜிமாவின் அக்கா பையனா நான்! இந்த ட்விஸ்ட் தான் எதிர்பார்க்கவில்லையே’ என்றிருந்தவன், அவர் சொன்ன ‘உன் மாமனுக்கே கல்யாணம் பண்ணித்தரப் போறேன்’ என்றதில் ஆனந்தமாக அதிர்ச்சியடைய, அவளோ தன்னைப் பார்த்து வேண்டாமென்றதும், ‘வீட்டில் பார்க்கிற மாப்பிள்ளை யாரென்றாலும் திருமணம் செய்கிறேன் என்றவள், என்னை மட்டும் மறுக்கிறாளா? ஏன்? எனக்கென்ன குறை?’ ராசி அவனை மறுத்த வலி ஆழமாய் அவனின் நேச நெஞ்சிக்குள் இறங்கியது. மனம் தன்னையே கேள்வி கேட்க பதிலில்லாமல் நின்றிருந்தான் சரத்.

“சொல்லு ராசி என் பையனை கட்டிக்க சம்மதமா?”

அவரின் உடல்நிலையை கருதி, “எனக்கு சம்மதம் ஆச்சி” என்றாள் தலைகவிழ்ந்து.

அவளின் ஆச்சியிலேயே அவளின் விருப்பமின்மை தெரிய, ‘எல்லாம் உங்க நல்லதுக்குத் தான்’ என மனதில் நினைத்து, “அடுத்த வாரம் உங்களுக்கு கல்யாணம். கோவில்ல முடிச்சி அங்கேயே ரிஜிஸ்டரும் பண்ணிக்கலாம். ரெண்டு பேரும் எதாவது சொல்லணுமா? நீ என்னப்பா சொல்ற?”

“உங்க இஷ்டம் லோஜிம்மா” என்றான் சரத். ‘கல்யாணம் வேண்டாம். உங்க பேத்திக்கு என்னைப் பிடிக்கலை. பிடிக்காத என்னோடு விருப்பமில்லாமல் வாழவேண்டாம்’ என்று சொல்ல நினைத்தாலும் ஏதோ ஒன்று அதை வார்த்தையாக்காமல் தடுத்து வெளியே சம்மதிக்க வைத்தது.

லோஜி ராசியைப் பார்க்க, “உங்க இஷ்டம் தான் என்னோடதும். என்னை நம்பலாம் அம்மாஆச்சி” என்றாள் முடிவாக.

ஒரு வாரமே திருமணத்திற்கு என்பதால் திருமண வேலைகள் வேகவேகமாக நடைபெற, திடீர் திருமணத்திற்கு தீபாவால் வரமுடியவில்லை. ஆனாலும், தன் மகிழ்ச்சியை இருவருக்கும் போன் செய்து தீர்த்துக் கொண்டாள். மஞ்சுவிற்கும் அழைப்பு சென்றது. அவர்களின் நலம் நாடும் நல்ல உறவாயிற்றே.

இந்த ஒரு வாரத்தில் இருவரும் பேசவும் இல்லை. பேச முயற்சிக்கவும் இல்லை. அவர்களை பேச வைக்க மற்றவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வேஸ்டானதுதான் மிச்சம். தன்னைப் பிடிக்கவில்லையென்ற கோபம் ராசிக்கு என்றால், தன்னைத் தாண்டி வேறு யாராகிலும் திருமணம் செய்வேனென்ற கோபம் சரத்திற்கு.

சோகமாக இருந்த நண்பனிடம் மணி விசாரணை நடத்த தன் மனதின் வேதனையை அவனிடம் கொட்டியதில் மணிக்குத் தான் குற்றவுணர்வானது. முதலிலும் தன்னால்தான் தன் காதலை மறைத்தான் என்றால், இப்போதும் தேவையில்லாமல் அந்த பேச்சை தான் எடுக்கப் போய்தானே பதில் பேசினான். ராசியும் கேட்டாள். என்ன செய்வதென்றே தெரியவில்லை மணிக்கு.

“சாரிடா என்னால்தான் எல்லாம். உன் லைஃப்ல நடக்கிற நல்ல விஷயத்துல நானே நந்தி மாதிரி இருக்கேன். என் வாயால நான் கெட்டா பரவாயில்ல. ஆனா, உன்னைக் கெடுத்துட்டேனே. மனசுக்கு சங்கடமா இருக்குடா” என்றான் வருத்தமாக.

“விடுடா பார்த்துக்கலாம். இது வெறும் கோவம்தான சீக்கிரத்திலேயே சரியாகிரும்” என்று நண்பனைத் தேற்றினான். ‘எப்படியிருந்தாலும் உங்களை மனதளவில் திரும்பவும் ஒன்று சேர்ப்பது என் பொறுப்பு’ என்று நினைத்துக் கொண்டான் மணி.

மணியிடம் சொன்னது போல் சரத்தின் கோவம் திருமணத்திற்கு முந்தின நாள் இரவு அந்த கடிதத்தைப் பார்க்கும் வரைதான் நீடித்தது. வேண்டாமென்று இல்லை அதை படிக்க மனமில்லாமல் தான் தூக்கி ஓரம் கட்டியிருந்தான். ஏனோ மனம் அதை படிக்கச் சொல்ல, முழுவதும் படித்தவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. அந்த நிமிடம் தோன்றிய தன் உணர்வுகளை எப்படி வர்ணிப்பதென்றே தெரியவில்லை.

நம்ப முடியாத விசித்திரங்கள் நடப்பதுதான் மனித வாழ்க்கையோ!
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top