- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
21
ராசி உள்ளே நுழையும் போதே அவனும் பின்னாலேயே வந்தான். அவன் வந்ததை கவனிக்காத, இல்லை உணரவே செய்யாத ராசி லோஜினியிடம் பேச ஆரம்பித்தாள். குழந்தையாக மாறி சண்டையிட்டுக் கொண்டிருந்தவள், அவனுள் இன்னும் இன்னும் ஆழப்பதிந்து கொண்டிருந்தாள். “எனக்குன்னு யார் இருக்காங்க” எனும்போது ‘ஏன் நானில்லையா?’ என சத்தமாக சொல்ல விழைந்த மனம் அடுத்தடுத்து வந்த, ‘சரத்னு ஒருத்தரை சந்திக்கவே இல்லன்னு நினைச்சுக்கறேன்’ என்றது... அவனை வெட்டி கூறு போட்டது. ‘வெறுத்திட்டியா ராசாத்தி! நான் உனக்கு அவ்வளவுதானா!” என்ன முயன்றும் தன் கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.
“இப்ப எழுந்து வர்றீங்களா? இல்லையா?” என சத்தமாக அதட்டியவள், பின் குரலில் ஸ்ருதி இறக்கி, “நான் சின்னப் பொண்ணுதான அம்மாஆச்சி. நான் பாவம்லயா. எனக்கு பயமா இருக்கு லோஜி. எனக்காக உங்க ராசாத்திக்காக சீக்கிரம் வந்திருங்க. என்னோட லைஃப் உங்களைச் சார்ந்துதான்னு தெரியும் தான. ப்ளீஸ் லோஜி உங்க ராசாத்திக்காக இந்த ஒருமுறை வந்திருங்க. நெக்ஸ்ட் உங்களை கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்கறேன். நான் அழுறேன் தான? ஏன் அழுறேன்னு கேட்கமாட்டீங்களா? கேளுங்க அம்மாஆச்சி” என அழுதவள்...
“அம்மாஆச்சி மாமா சாகக்கிடக்கும் போது எனக்கு எல்லாமே நீங்கதான்னு சொன்னாங்க தான? அதே மாதிரி உங்களுக்கும் எல்லாமே நான்தான்னும் சொன்னாங்கள்ல. நீங்க மட்டும் எப்படி என்னை தனியா விட்டுட்டு இப்படி வந்து படுத்துக்கலாம். உங்களை நல்லா பார்த்துப்பேன்னு ப்ராமிஸ் பண்ணின நானே உங்களை ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிட்டேன்ல. மாமா என்னை மன்னிக்கவே மாட்டாங்க தெரியுமா. முதல் முறையா மாமா பேச்சை மீறியிருக்கேன். மனசு வலிக்குது அம்மாஆச்சி. இந்த குற்றவுணர்ச்சியோட ரொம்ப நாள் இருக்க முடியாது. நீங்க முழிக்கல நா...நான்” என்றவள் பார்வை நர்ஸிங்கிற்காக இருந்த பாக்ஸில் விழுந்து அதிலிருந்த சிறிய கத்தியை எடுத்தாள்.
அவளின் வேதனையை தன்னுள் வாங்க முடியாமல், அவளின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொல்ல முடியாமல் இயலாமையில் நின்றிருந்தவன் அவள் பார்வை சென்ற இடத்தைப் பார்த்து விஷயத்தை ஓரளவு ஊகித்து, அந்த விபரீதத்தை தடுக்க வேகமாக வர...
அதற்குள் “நீங்க எழுந்து வரலன்னா, நான் என்னையே வெட்டிக்குவேன் அம்மாஆச்சி. எழுந்திருச்சி என்னைப் பாருங்க. பார்க்க மாட்டீங்கள்ல” என்று கத்தியை கைக்கு நேரே உயர்த்தி கத்தியை வைத்து கண்மூடி ஓங்கினாள்.
அவளின் கைபிடித்து கத்தியைப் பறிக்க முயற்சித்தபடி, “என்ன காரியம் செய்யப்போற? கத்தியை விடு” என்றான் சத்தமாக.
யார் தன்னை பிடித்தது என்பதை உணராமலேயே, “முடியாது. என்னை தடுக்காதீங்க. என்னை விடுங்க என்னால தான் எல்லாமே. நானே இல்லாம போயிட்டா...” சொல்லி முடியுமுன் கத்தியைப் பறித்து ஓங்கி ஒரு அறைவிட்டான் சரத்.
இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்த்திராத ராசிக்கு, ஏற்கனவே இருந்த மனச்சுமைகள், கடந்த ஒரு வாரமாக சரிவர சாப்பிடாமல் இருந்தது என எல்லாமாக சேர்ந்து மயங்கிச் சரிந்தாள்.
இதை எதிர்பார்க்காத சரத் அவளை ஆதரவாகப் பிடித்து தோளில் சாய்த்து, “ராசாத்தி என்னைப் பாரு. ஏன்டி என்னை இம்சைபடுத்துற” என்றவன் அவளை கீழே கிடத்தி தண்ணீர் எடுத்து வந்து அவளை தன் மடிமீது தாங்கி தண்ணீர் தெளிக்க, மெல்ல முணகியவளை தன்னுடன் சேர்த்தணைத்தான். “என்ன நடந்ததுன்னு முழுசா தெரியாம, என்னை விட்டுட்டுப் போக எப்படி மனசு வந்தது உனக்கு. நேர்ல சொல்லலன்னா உன்மேல் எதுவும் இல்லன்னு அர்த்தமா! ராசாத்தி என்னைப் பாருடி” என்று அவளின் கன்னம் தட்டியதும்... அவள் மெல்ல கண்திறந்தாள்.
“ஏன் இப்படி?” என்றவன் கண்களும் கண்ணீருக்குள் தத்தளித்தது. “மாமா நீ.. நீ என்னை ஏமாத்திட்ட. என்னை வேண்டாம்னு தூக்கி போட்டுட்ட தான. நீ எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம் போ” என்று கத்தி மறுபடியும் உணர்விழந்து விழுந்தாள்.
அதில் இன்னுமே துடித்தவன், “ஏய் ராசாத்தி! நான் உன்னை ஏமாத்தலடா. நான் போய் உன்னை ஏமாத்துறதா. நீ தான்டா நான். நானே என்னை எப்படி ஏமாத்திக்கிறது. என்னைப் பாருமா. எனக்குன்னு நீதான இருக்க. நீயில்லன்னா நான் எப்படிமா. எழுந்திருமா” என்று புலம்பிக் கொண்டிருக்க...
அந்த நேரம் உள்ளே வந்த நர்ஸ் பதற்றத்துடன் விசாரித்து, அவனையும் திட்ட, அவளைத் தூக்கியபடி வெளியே வந்த சரத்தைப் பார்த்த அனைவரும் அதிர்ந்து விசாரிக்க மேலோட்டமாக, “கொஞ்சம் எமோஷனலாகிட்டா” என்ற மட்டும் சொல்லி வேறு பெட்டில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டது.
ராசி அழுதபடி தன்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே நினைவு திரும்பியது மீனலோஜினிக்கு. ராசி பேசப்பேச அவள் தன்மேல் வைத்திருக்கும் அளவுக்கு அதிகமான அன்பில் மெய்சிலிர்த்தது லோஜிக்கு. கண்களை திறக்க முயற்சித்தும் முடியாமல் போக அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ராசியும் வேதனையில் உழன்றதால் லோஜி எழுந்ததை உணரவில்லை என்றால், சரத் அவளையே பார்த்திருந்ததால் லோஜியை கவனிக்கவில்லை. கடைசியாக அவள் பேசியதில் எதோ விபரீதம் என்று உணர மெல்ல கண்ணைத் திறக்க சரத் ஓடி வருவது தெரிந்தது. அந்த நிமிடம் தன்னையுமறியாமல் ஒரு நிம்மதிப் பெருமூச்சி எழுந்தது மீனலோஜினிக்கு. ராசியைத் திட்டி அவளை கட்டுப்படுத்த அடிக்க, அதை தடுக்க முடியவில்லை லோஜியால். அதில் மயங்கியவளை மடியில் தாங்கி அவன் பேசியதைக் கேட்டு ஒரு முடிவுக்கு வந்தவராய், அதற்கான நேரம் பார்த்திருந்தார்.
மறுநாள் காலை வெகு நேரம் வரை ராசி எழவில்லை. மீனலோஜினியை அதற்குள் தனி வார்டுக்கு மாற்ற, ராசியைப் பற்றிய கவலையுடன் இரவே டாக்டரிடம் சரத் கேட்டிருந்தான். “ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல. ஸ்லீப்பிங் இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். நல்லா தூங்கி எழுந்தா மைண்ட் டென்ஷன் கொஞ்சம் குறைந்திருக்கும்” என்றார்.
டாக்டர் சொன்னது போல் மறுநாள்தான் கண் விழித்தாள். எழுந்ததும் லோஜியைத் தேடி ஐசியூ ஓட, அங்கில்லை என்றதும் “ஆச்சீ ஆச்சீ” என்று கத்த ஆரம்பித்தாள்.
அவள் எழவில்லை என்பதால் ரோகிணியும், கிரியும் சாப்பாடு எடுத்து வரச்செல்ல... சரத் முந்தின தினமே சாந்திக்கு போன் செய்ததால், அதிகாலையிலேயே அவர்கள் வர, மஞ்சுவால் வரமுடியாத சூழ்நிலை. சாந்தி ராசியைப் பார்த்துவிட்டு லோஜியினருகில் இருந்ததால் ராசியைக் கவனிக்கவில்லை. பாபுவோ அதிகபேர் கூடாதென்றதால் இரவே வீட்டிற்கு சென்றிருந்தான்.
ராசியின் அலறல் கேட்டு ஒருசிலர் அங்கு வர, காலையில் விசிட்டர் டைம் பார்த்து அங்கு வந்த சரத்திற்கு அறையில் அவளில்லை என்றதும் ஒன்றும் புரியவில்லை. நேரே லோஜி இருக்குமிடம் செல்ல அங்கேயும் இல்லை. உடனே நினைவு வந்தவன் ஐசியூ ஓட, அவளோ பைத்தியம் போல் “அம்மாஆச்சி” என்று கத்திக் கொண்டிருந்தாள். வேகமாக வந்தவன் அவளைப் பிடித்து, “இங்க என்ன பண்ற ராசி? ஏன் கத்தி கலாட்டா பண்ற? எல்லாரும் பார்க்கிறாங்க பாரு?” என்றான் அவளுக்கு மட்டுமே கேட்கும் விதமாக.
அவன் சொன்னது எதையும் காதில் வாங்கும் நிலையில் அவளில்லை. “மனலோஜினி ஐசியூவில் இல்லை என்றதும், அவர் உயிரோடு இல்லையென்று மனதில் விழுந்த அதிர்ச்சி அவளை யோசிக்க விடவில்லை. அவனைக் கண்டதும் “ஹரி நீங்க சொல்லுங்க. அம்மாஆச்சி எங்க? அவங்களுக்கு என்னாச்சி? ஏன் ஐசியூல இல்ல? ப்ளீஸ் சொல்லுங்க ஹரி. ப்ளீஸ் என் லோஜிக்கு என்ன ஆச்சின்னு சொல்லுங்க. என் லோஜியை என்ன பண்ணுனீங்க?” என கதற...
அவள் தவறாக புரிந்திருக்கிறாள் என்பதை யூகித்து அவளை தன்னோடு அணைத்தவனின் கண்கள் கலங்கியது அவளை அந்த நிலையில் பார்க்கையில். எப்படி இருந்தவள் இப்பொழுது அதிக நாள் நோயில் இருந்தாற்போல். அவனால் அவளை இந்த நிலையில் பார்க்க முடியவில்லை. அவளின் கோவப்பார்வை, குழந்தைத்தனம், சண்டைக்காரியாய் சிலிர்ப்பது, தன் அழகிய கண்களால் காதலாய் பார்த்தது என்று வேறு வேறு கோணங்களில் பார்த்தவனுக்கு தன் பாட்டிக்காக உயிரைக்கூட விடத் தயாராயிருக்கும், எப்பொழுதும் கண்களில் கண்ணீருடனிருக்கும் ராசியின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று எண்ணும்போதே தன் மேலேயே கோவம் வந்தது.
“லோஜிம்மாவுக்கு ஒண்ணும் இல்லடா. வார்டுக்கு மாத்தியாச்சி. இந்த ஹரி எப்பவும் உண்மையைத்தான் பேசுவான். அவங்க ஷேஃபாதான் இருக்காங்க” என்றான் அவளுக்கு புரியும் விதமாக.
எது அவள் மூளையை சென்றடைந்ததோ இல்லையோ, “ஹரி எப்பவும் உண்மைதான் பேசுவான்” என்ற வார்த்தை அவளின் தூங்கிய உணர்வுகளைத் தட்டியெழுப்ப, சட்டென்று அவனிடமிருந்து விலகி, “அப்ப அம்மாஆச்சி ஷேஃப்தான?” அவனின் சம்மதமான தலையாட்டலில், “அப்ப அன்னைக்கு நீங்க பேசினதும் உண்மைதான?” என்ற கேள்வியில் அயர்ந்து தான் போனான். எதற்கு எதை முடிச்சிடுகிறாள் என்று.
“ராசிமா! நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு” என்று அவளைத் தொட வர...
“டோண்ட்... டோண்ட் டச் மீ மிஸ்டர்.சரத்” பற்களைக் கடித்தபடி ஆத்திரத்துடன் சொல்லி ஆங்காரமாய் நின்றிருந்தாள்.
“சரி சரி நான் தொடலை. எதுவாயிருந்தாலும் லோஜிமா வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம்.”
“வேண்டாம். இனி நான் உங்களை பார்க்க விரும்பல. லீவ் மை ஹோல் லைஃப் மிஸ்டர்.சரத்” என்றாள் ஸ்திரமாக.