- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
20
மறுநாள் அலுவலகம் நுழைந்தவனை எதிர்கொண்டாள் ஆராதனா. வெளியே நின்று மற்றவர் கவனத்தை ஈர்க்காமல், கோப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு அவன் அறைக்குச் செல்ல, அவளை கட்டியணைத்து, “நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் தனு. குட்டிமா பேசுறா. இன்னும் இரண்டு மாசத்துல சரளமா பேசுவான்னு சொல்றாங்க. இத்தனை வருஷ வேண்டுதல் இன்னைக்கு நிறைவேறியிருக்கு. வீட்டுல எல்லாருக்கும் அவ்வளவு சந்தோசம். பட்டாசு வெடிச்சிக் கொண்டாடாதது ஒண்ணு தான் குறை” என்றான்.
“நீங்க ஹேப்பியா இருக்கீங்கள்ல. அது போதும் எனக்கு.”
“தனு ஒண்ணு சொல்லட்டுமா?”
“ஒண்ணு என்ன ஆயிரம் சொல்லுங்க. கேட்டுக்குறேன்” என்றாள் புன்னகையுடன்.
“ஹேய்! என்னடி இப்படி ஆகிட்ட. எதுக்கெடுத்தாலும் வாக்குவாதம் பண்ணுவ?”
“இன்னைக்கு மட்டும் அப்படித்தான். தொடர்ந்து இதை எதிர்பார்க்கக்கூடாது.”
அவளை விடுவித்து, “அது ஏன்னு தெரியும். திருமண நாள் வாழ்த்துகள் தனு” என்று மல்லிகைப்பூ கொடுத்து, “என்னோட சின்ன கிஃப்ட்” என்றான்.
அவள் கண்கலங்க, “இந்த கிஃப்ட் மனசுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று பூவை தலையில் வைத்து, “ஹேப்பி மேரேஜ் டே மச்சான்” என்றாள்.
“ஹேய்! என்ன சொன்ன.?
கண்ணீருடன் சிரித்துக்கொண்டே, “கோல்டன் வேர்ட்ஸ். நாட் ரிபீடட்.”
“நல்லா வேர்ட்ஸ் போடுற. ஏன் அதுக்கு அழுத?”
“ப்ச்... ஒண்ணுமில்லை”
“சொல்லுமா. சொன்னா தான தெரியும்.?”
“இல்ல உங்களுக்கு இருந்த டென்சன்ல, கல்யாண நாளை மறந்திருப்பீங்கன்னு நினைச்சேன். நீங்க சொன்னதைக் கேட்டதும் சந்தோஷத்துல கண்ணீர் வந்திருச்சி.”
“எப்படிமா மறப்பேன்? என்னோட தேவதையை எனக்கானவளா ஆக்கிய நாளாச்சே. அதுவும் அவளுக்கேத் தெரியாம” என்று கண்சிமிட்டினான்.
“தெரிஞ்சே எப்ப ஆக்கிக்கப் போறீங்க?” கேட்டு முடித்ததும் விட்ட வார்த்தையை உணர்ந்தவள், ‘ஸ்...’ என் நாக்கைக் கடித்தாள்.
மனைவியின் செய்கையை ரசித்து சிரித்தபடியே, “தனு! ரொம்பத் தேறிட்ட நீ. இன்னும் இரண்டு மாசம்தான்மா” என்று அவள் கண்களைப் பார்த்து, “எனக்கே எனக்கானவளா, எனக்கு மட்டுமானவளா, உரிமை உள்ளவளா ஆக்குறேன்.”
அவனின் பாவனையிலும், அவன் சொன்ன சொல்லின் அர்த்தம் புரிய குப்பென்று சிவந்த முகத்தை அவன் மார்பில் சாய்ந்து மறைத்தாள். பின், அது அலுவலகம் என்பது நினைவு வந்து விலகியவள், “வேதா காலையிலேயே விஷ் பண்ணிட்டா. ஒரு குட் நியூஸ் தெரியுமா? வேதா பிரக்னன்ட்டா இருக்கா. அதனால, வேதா இரண்டு நாள் லீவ்” என்றாள்.
“ஓ... உண்மையிலேயே குட் நியூஸ் தான்” என்றவன் அங்கிருந்த இருக்கையில் அமர வைத்து, எதிரிலுள்ள மேஜையின் மேல் அமர்ந்து மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவள் உடலில் வித்தியாசம் தெரிய, “என்னாச்சி தனு? ரொம்ப டல்லா தெரியுற? உடம்பு சரியில்லயா?” என்று அவளைத் தொட்டு பார்த்தான்.
அதே நேரம் உள்ளே நுழைந்த வசந்தி அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தவள் அதிர்ந்து, “சரண் என்ன பண்ற?” என்றாள் சத்தமாக.
“என்னக்கா பண்றேன். ஒண்ணும் பண்ணலையே. பண்ணலையேன்றதை விட, பண்ண முடியலையே” என்றான் மனைவியைப் பார்த்துக்கொண்டே.
“என்ன பேச்செல்லாம் வித்தியாசமா இருக்கு. நான் நீ அவ மேல கையை வச்சிருக்கிறதைச் சொன்னேன். அவளும் அமைதியா இருக்கிறா? என்ன நடக்குது இங்க?” என்றாள் கோவமாக.
“வேற என்னக்கா அவளால பண்ண முடியும். ஒரு மேனேஜர் கூப்பிட்டா வரலன்னா சொல்ல முடியும்” என்று வசந்தியை சீண்டி விட்டான்.
“நீயாடா பேசுற? உன்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சேன்டா. நீயுமா மத்தவங்க மாதிரி இப்படி?”
கணவனை முழங்கையால் இடித்து, “விளையாடாம பேசுங்க. அவங்க ரொம்ப பயப்படுறாங்கள்ல” என்றாள் ஆராதனா.
“என்னடா நடக்குது இங்க? ஹையோ! யாராவது நிஜத்தைச் சொல்லுங்களேன்?”
“அக்கா நான் இவளோட...”
“ஹேய்! நான் சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் லவர்ஸா?” என்றாள் வசந்தி முந்திக்கொண்டு.
அவளை முறைத்து, “லவர் தான். ஆனா, லவ் மட்டும்னா இப்படிக் கைபோட மாட்டேன்கா. இவ என்னோட மனைவி. இன்னைக்கு எங்க முதல் கல்யாண நாள்.”
“ஹேய்! சொல்லாம பண்ணிக்கிட்டியா?”
“சொல்லிட்டு இன்னொரு டைம் பண்ணிக்கிறேன்” என்று சிரித்தான்.
நீயா இப்படின்னு ஒரு நிமிஷத்துல பயந்துட்டேன் சரண். இப்பதான் நிம்மதியா இருக்கு. ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம். சீக்கிரமே எல்லாருக்கும் சொல்லிரு.”
“கூடிய சீக்கிரம் சொல்றேன். தனு நீ கிளம்பு போய் வேலையைப் பாரு” என்றனுப்பினான்.
மதிய உணவு இடைவேளைக்கு கணவனுக்கு அழைத்து சாப்பிடச் சொல்ல, அந்த நேரம் அங்கு வந்த சக்தி, ஆராதனாவை சாப்பிடக் கூப்பிட, “இல்ல பசிக்கலை. நீங்க பொய் சாப்பிடுங்க” என்றதும் அவள் செல்ல, தலைசுற்றுவது போல் தோன்ற கணிணி மேஜையில் படுத்தாள்.
உணவு முடித்து அனைவரும் வந்து, வேலை நேரம் சுறுசுறுப்பாக ஓட, கோப்பு ஒன்றை சரியா என்று காண்பிக்க வசந்தியைப் பார்க்கக் கிளம்பிய ஆராதனா அப்படியே மயங்கி விழுந்தாள்.
அருகில் இருந்த சக்தி பதறிப் போய் அவள் கன்னம் தட்டி எழுப்ப, அதற்குள் அங்கு வந்த வசந்தி சரணுக்கு தொலைபேசியில்தகவல் சொன்னாள்.
கேட்ட நிமிடம் கிளம்பி புயல் என வந்தவன், வந்த வேகத்தில் அவளை தூக்கி மடியில் கிடத்தி, “தனு எழுந்திரு. தனு என்னமா பண்ணுது?” என அவள் கன்னத்தைத் தட்டி எழுப்ப, சுற்றியிருந்த அனைவரின் முகமும் ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, சக்தியோ உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்தாள். ‘அப்ப இவளுக்கு வைத்த அந்த லெட்டர் உண்மையா?’
“எந்தப் பெண்ணிடமும் நெருங்காமல் நெருப்பாக இருந்தவன், எப்படி? என்று சிலர் பேச.
தண்ணீர் ஒருவர் கொடுக்க அதை மனைவியின் முகத்தில் அடித்தவன், மயக்கம் தெளியவில்லை என்றதும் பயந்தான். “தனு! தனு! ஏய் என்னடி பண்ணுது? செல்லம் எழுந்திரு. எனக்குப் பயமாயிருக்கு. எழுந்திருமா. என்னை விட்டுட்டுப் போயிராதமா. ஏற்கனவே நடந்த ஒரு இழப்பையே என்னால தாங்க முடியல. நீயும் என்னை ஏமாத்திறாதமா” என்று அழுது அரட்டியபடி, திரும்பவும் தண்ணீர் தெளித்தும் அவள் எழவில்லை. கண்களில் கண்ணீர் வர அவளைத் தன்னோடு சேர்த்தணைத்து, “கண்ணைத் திறந்து என்னைப் பாரு தனு” என்று புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு அடுத்து என்ன என்று யோசிக்கக்கூட முடியாத நிலை.
சிவகுமார் அருகில் வந்து, “சரண் அவங்களை ஹாஸ்பிடல் கூப்பிட்டுப் போகலாம். சக்தி நீயும் வா. ஒரு பொண்ணு துணை இருந்தா நல்லாயிருக்கும். வசந்தி மேடம் நீங்க ஆபீஸ் பார்த்துக்கோங்க “என்று ஆளாளுக்கு ஒன்றைச் செய்யச் சொல்லி அந்த நேரத்து சூழ்நிலையை பக்குவமாக கையாண்டான்.
பிறகு தான் நினைவு வந்தவன் போல், சரண் தன் பேண்ட் பாக்கெட்டில் பதற்றத்துடன் சாவியைத் தேடி எடுத்து, அவன் கையில் கொடுத்தான்.
ஆராதனாவைத் தூக்க உதவி பண்ண வந்தவர்களை, “வேண்டாம்” என தடுத்து, தன் மனைவியைப் பூமாலையாகத் தூக்கி காருக்கு கொண்டு சென்றான். அவளைப் படுக்க வைத்து தலையை தன் மடி மீது வைத்துக்கொண்டு அவளிடம் பேசியபடி, பேசியபடி என்பதை விட புலம்பியபடி வந்தான்.
அவர்களையே பார்த்துக் கொண்டு வந்த சக்தியிடம் முதன் முதலாகப் பேசும் சந்தர்ப்பத்தை விடாமல், “என்ன சக்தி பார்க்கிற?” என்றான்.
“இல்ல எப்படி ரெண்டு பேரும்...” என பாதியில் நிறுத்தவும்
“அதான் சக்தி ட்ரூ லவ். அந்தப் பொண்ணுக்கு ஒண்ணுன்னதும் பதறினது. துடிச்ச துடிப்பு, கம்பீரமா மத்தவங்களுக்கு கனவு நாயகனா சுத்துன மனுசன், கண்ணீர் விட்டு அழுறார். அந்தப் பொண்ணு ரொம்பக் கொடுத்து வச்சவ.”
“நீ ஏன் சக்தி, என் லெட்டருக்கு இதுவரை ரிப்ளை பண்ணதில்லை” என்று இனி மறைக்கக் கூடாதென்று படக்கென்று கேட்டான்.
“வாட்? அது நீங்களா?” என்றாள் அடுத்த அதிர்ச்சியை உள்வாங்கியபடி.
“ஏன் சக்தி? இதுவரை நான்தான்னு தெரியாமலா இருந்த?” என்றவன் முகம் கசங்கியது. “நான் இதை எதிர்பார்க்கல சக்தி. நீ புத்திசாலி. கடைசியா நான் எழுதினதை வச்சிக் கண்டுபிடிச்சிருவன்னு நினைச்சேன்.”
‘நானும் தான் எதிர்பார்க்கலை இந்த திடீர் திருப்பத்தை.’ வருடக்கணக்காக மனதினுள் பூட்டியிருந்த காதல் மண்மேடாய் சரிய செய்வதறியாது திகைத்தாள்.
“உன்னில் பாதியானவன்னு போட்டிருந்தேனே அப்பவே கெஸ் பண்ணியிருக்கலாமே?” என்றவன் குரலில் அத்தனை ஏக்கம்.
திரும்பி அவன் முகம் பார்த்தவள், அவனின் சோக முகம் தெரிய, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலைகுனிந்தாள். ‘உன்னில் பாதியானவன். சிவனில் பாதி சக்தி. அவன் கரெக்டா தான் தன் காதலைச் சொல்லியிருக்கான். ப்ச்... நான்தான் முட்டாளா இருந்துட்டேன்.” அவளை அவளே தேற்ற வழியறியாமல், கண்ணில் வந்த நீரை வெளியே தெரியாமல் மறைக்க பெரும்பாடு பட்டு, பார்வையை வெளியே செலுத்தினாள்.
மருத்துவமனை வந்ததும், “சக்தி நீ போயி டாக்டர் இருந்தா சீக்கிரம் வரச்சொல்லு” என்று அனுப்ப, சரண் மனைவியைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல, தற்செயலாக அங்கு வந்திருந்த அபிஷேக், சரணைப் பார்த்து “சரண் யாரு இந்தப் பொண்ணு? என்னாச்சி இவங்களுக்கு?” என்று கேட்க,
“சொல்ல டைம் இல்லை. டாக்டர் யாராவது சீக்கிரம் ரெடி பண்ணு” என்றதும் அவசர அவசரமாக மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
வெளியே வந்த மருத்துவரிடம் பதற்றத்துடன், “என்னாச்சி டாக்டர்? தண்ணி தெளிச்சிக் கூட எழுந்திருக்கலை. ஏதாவது பிரச்சனையா?” என்றான் தவிப்புடன்.
“அமைதியா இருங்க மிஸ்டர். அவங்களுக்கு சாப்பாடு தான் ப்ராப்ளம்” என்றார்.
“என்னது? சாப்பாடா? என்ன டாக்டர் சொல்றீங்க?”
“ஆமா. அவங்க எதாவது விரதம் இருந்திருக்கலாம். இல்ல ஒர்க் டென்சன்ல சாப்பாட்டுக்கு இம்பார்டன்ட் கொடுக்காம இருந்திருக்கலாம்.”
“ஆமா டாக்டர். நாலு நாளா மதியம் லஞ்ச்கு கூப்பிட்டா வரலை” என்றாள் சக்தி.
“ட்ரிப்ஸ் ஏறுது கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிருவாங்க. போய் பாருங்க” என்று சொன்ன மருத்துவரிடம் நன்றி சொல்லி, “தேங்க்ஸ்டாக்...டர் மச்சான்” என்றான் அபிஷேக்கிடம்.
“இந்த ரணகளத்துளயும் என்னைப் பிரிச்சி மேயுறியேடா. சரி பொண்ணு யாரு? உரிமை இல்லாம அந்தப் பொண்ணைத் தொட்டுத் தூக்கியிருக்கமாட்ட. உன்னோட காதலியா?” என்று தெரிந்துகொள்ளக் கேட்டான்.
“ஆமா. அதுவும்தான். ஆனா, அவ என்னோட காதலி மட்டுமில்லை. என்னோட மனைவியும் கூட. ஆமா. இன்னைக்கு சரண்-ஆராதனா முதல் திருமண நாள்” என்றான்.
அவனுடன் இருந்த மூவரும் அதிர, அதிர்ச்சியிலிருந்து வெளி வந்த சிவகுமார், “வாழ்த்துகள் சரண். உங்களோட ஜோடிப்பொருத்தம் சூப்பர்” என்றான்.
அவனைத் தொடர்ந்து மற்ற இருவரும் வாழ்த்துச் சொல்ல,
“சரண் இந்த விஷயம் வீட்ல எப்ப சொல்லப் போற?”
“உங்க கல்யாணம் முடிஞ்சதும்.”
“அதெல்லாம் இல்லை. எங்க கல்யாணத்தன்னைக்கு உனக்கு ரிசப்ஷன் வச்சிரலாம்.”
“இல்ல அசோக். அதெப்படி சரியா இருக்கும். இதுவரை வீட்ல யாருக்கும் தெரியாது. அப்படியிருக்கும் போது எப்படி எடுத்துச் சொல்றதுன்னு தெரியலை” என்றான்.