• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 2௦

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
20

மறுநாள் அலுவலகம் நுழைந்தவனை எதிர்கொண்டாள் ஆராதனா. வெளியே நின்று மற்றவர் கவனத்தை ஈர்க்காமல், கோப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு அவன் அறைக்குச் செல்ல, அவளை கட்டியணைத்து, “நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் தனு. குட்டிமா பேசுறா. இன்னும் இரண்டு மாசத்துல சரளமா பேசுவான்னு சொல்றாங்க. இத்தனை வருஷ வேண்டுதல் இன்னைக்கு நிறைவேறியிருக்கு. வீட்டுல எல்லாருக்கும் அவ்வளவு சந்தோசம். பட்டாசு வெடிச்சிக் கொண்டாடாதது ஒண்ணு தான் குறை” என்றான்.

“நீங்க ஹேப்பியா இருக்கீங்கள்ல. அது போதும் எனக்கு.”

“தனு ஒண்ணு சொல்லட்டுமா?”

“ஒண்ணு என்ன ஆயிரம் சொல்லுங்க. கேட்டுக்குறேன்” என்றாள் புன்னகையுடன்.

“ஹேய்! என்னடி இப்படி ஆகிட்ட. எதுக்கெடுத்தாலும் வாக்குவாதம் பண்ணுவ?”

“இன்னைக்கு மட்டும் அப்படித்தான். தொடர்ந்து இதை எதிர்பார்க்கக்கூடாது.”

அவளை விடுவித்து, “அது ஏன்னு தெரியும். திருமண நாள் வாழ்த்துகள் தனு” என்று மல்லிகைப்பூ கொடுத்து, “என்னோட சின்ன கிஃப்ட்” என்றான்.

அவள் கண்கலங்க, “இந்த கிஃப்ட் மனசுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று பூவை தலையில் வைத்து, “ஹேப்பி மேரேஜ் டே மச்சான்” என்றாள்.

“ஹேய்! என்ன சொன்ன.?

கண்ணீருடன் சிரித்துக்கொண்டே, “கோல்டன் வேர்ட்ஸ். நாட் ரிபீடட்.”

“நல்லா வேர்ட்ஸ் போடுற. ஏன் அதுக்கு அழுத?”

“ப்ச்... ஒண்ணுமில்லை”

“சொல்லுமா. சொன்னா தான தெரியும்.?”

“இல்ல உங்களுக்கு இருந்த டென்சன்ல, கல்யாண நாளை மறந்திருப்பீங்கன்னு நினைச்சேன். நீங்க சொன்னதைக் கேட்டதும் சந்தோஷத்துல கண்ணீர் வந்திருச்சி.”

“எப்படிமா மறப்பேன்? என்னோட தேவதையை எனக்கானவளா ஆக்கிய நாளாச்சே. அதுவும் அவளுக்கேத் தெரியாம” என்று கண்சிமிட்டினான்.

“தெரிஞ்சே எப்ப ஆக்கிக்கப் போறீங்க?” கேட்டு முடித்ததும் விட்ட வார்த்தையை உணர்ந்தவள், ‘ஸ்...’ என் நாக்கைக் கடித்தாள்.

மனைவியின் செய்கையை ரசித்து சிரித்தபடியே, “தனு! ரொம்பத் தேறிட்ட நீ. இன்னும் இரண்டு மாசம்தான்மா” என்று அவள் கண்களைப் பார்த்து, “எனக்கே எனக்கானவளா, எனக்கு மட்டுமானவளா, உரிமை உள்ளவளா ஆக்குறேன்.”

அவனின் பாவனையிலும், அவன் சொன்ன சொல்லின் அர்த்தம் புரிய குப்பென்று சிவந்த முகத்தை அவன் மார்பில் சாய்ந்து மறைத்தாள். பின், அது அலுவலகம் என்பது நினைவு வந்து விலகியவள், “வேதா காலையிலேயே விஷ் பண்ணிட்டா. ஒரு குட் நியூஸ் தெரியுமா? வேதா பிரக்னன்ட்டா இருக்கா. அதனால, வேதா இரண்டு நாள் லீவ்” என்றாள்.

“ஓ... உண்மையிலேயே குட் நியூஸ் தான்” என்றவன் அங்கிருந்த இருக்கையில் அமர வைத்து, எதிரிலுள்ள மேஜையின் மேல் அமர்ந்து மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவள் உடலில் வித்தியாசம் தெரிய, “என்னாச்சி தனு? ரொம்ப டல்லா தெரியுற? உடம்பு சரியில்லயா?” என்று அவளைத் தொட்டு பார்த்தான்.

அதே நேரம் உள்ளே நுழைந்த வசந்தி அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்தவள் அதிர்ந்து, “சரண் என்ன பண்ற?” என்றாள் சத்தமாக.

“என்னக்கா பண்றேன். ஒண்ணும் பண்ணலையே. பண்ணலையேன்றதை விட, பண்ண முடியலையே” என்றான் மனைவியைப் பார்த்துக்கொண்டே.

“என்ன பேச்செல்லாம் வித்தியாசமா இருக்கு. நான் நீ அவ மேல கையை வச்சிருக்கிறதைச் சொன்னேன். அவளும் அமைதியா இருக்கிறா? என்ன நடக்குது இங்க?” என்றாள் கோவமாக.

“வேற என்னக்கா அவளால பண்ண முடியும். ஒரு மேனேஜர் கூப்பிட்டா வரலன்னா சொல்ல முடியும்” என்று வசந்தியை சீண்டி விட்டான்.

“நீயாடா பேசுற? உன்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சேன்டா. நீயுமா மத்தவங்க மாதிரி இப்படி?”

கணவனை முழங்கையால் இடித்து, “விளையாடாம பேசுங்க. அவங்க ரொம்ப பயப்படுறாங்கள்ல” என்றாள் ஆராதனா.

“என்னடா நடக்குது இங்க? ஹையோ! யாராவது நிஜத்தைச் சொல்லுங்களேன்?”

“அக்கா நான் இவளோட...”

“ஹேய்! நான் சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் லவர்ஸா?” என்றாள் வசந்தி முந்திக்கொண்டு.

அவளை முறைத்து, “லவர் தான். ஆனா, லவ் மட்டும்னா இப்படிக் கைபோட மாட்டேன்கா. இவ என்னோட மனைவி. இன்னைக்கு எங்க முதல் கல்யாண நாள்.”

“ஹேய்! சொல்லாம பண்ணிக்கிட்டியா?”

“சொல்லிட்டு இன்னொரு டைம் பண்ணிக்கிறேன்” என்று சிரித்தான்.

நீயா இப்படின்னு ஒரு நிமிஷத்துல பயந்துட்டேன் சரண். இப்பதான் நிம்மதியா இருக்கு. ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம். சீக்கிரமே எல்லாருக்கும் சொல்லிரு.”

“கூடிய சீக்கிரம் சொல்றேன். தனு நீ கிளம்பு போய் வேலையைப் பாரு” என்றனுப்பினான்.

மதிய உணவு இடைவேளைக்கு கணவனுக்கு அழைத்து சாப்பிடச் சொல்ல, அந்த நேரம் அங்கு வந்த சக்தி, ஆராதனாவை சாப்பிடக் கூப்பிட, “இல்ல பசிக்கலை. நீங்க பொய் சாப்பிடுங்க” என்றதும் அவள் செல்ல, தலைசுற்றுவது போல் தோன்ற கணிணி மேஜையில் படுத்தாள்.

உணவு முடித்து அனைவரும் வந்து, வேலை நேரம் சுறுசுறுப்பாக ஓட, கோப்பு ஒன்றை சரியா என்று காண்பிக்க வசந்தியைப் பார்க்கக் கிளம்பிய ஆராதனா அப்படியே மயங்கி விழுந்தாள்.

அருகில் இருந்த சக்தி பதறிப் போய் அவள் கன்னம் தட்டி எழுப்ப, அதற்குள் அங்கு வந்த வசந்தி சரணுக்கு தொலைபேசியில்தகவல் சொன்னாள்.

கேட்ட நிமிடம் கிளம்பி புயல் என வந்தவன், வந்த வேகத்தில் அவளை தூக்கி மடியில் கிடத்தி, “தனு எழுந்திரு. தனு என்னமா பண்ணுது?” என அவள் கன்னத்தைத் தட்டி எழுப்ப, சுற்றியிருந்த அனைவரின் முகமும் ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, சக்தியோ உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருந்தாள். ‘அப்ப இவளுக்கு வைத்த அந்த லெட்டர் உண்மையா?’

“எந்தப் பெண்ணிடமும் நெருங்காமல் நெருப்பாக இருந்தவன், எப்படி? என்று சிலர் பேச.

தண்ணீர் ஒருவர் கொடுக்க அதை மனைவியின் முகத்தில் அடித்தவன், மயக்கம் தெளியவில்லை என்றதும் பயந்தான். “தனு! தனு! ஏய் என்னடி பண்ணுது? செல்லம் எழுந்திரு. எனக்குப் பயமாயிருக்கு. எழுந்திருமா. என்னை விட்டுட்டுப் போயிராதமா. ஏற்கனவே நடந்த ஒரு இழப்பையே என்னால தாங்க முடியல. நீயும் என்னை ஏமாத்திறாதமா” என்று அழுது அரட்டியபடி, திரும்பவும் தண்ணீர் தெளித்தும் அவள் எழவில்லை. கண்களில் கண்ணீர் வர அவளைத் தன்னோடு சேர்த்தணைத்து, “கண்ணைத் திறந்து என்னைப் பாரு தனு” என்று புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு அடுத்து என்ன என்று யோசிக்கக்கூட முடியாத நிலை.

சிவகுமார் அருகில் வந்து, “சரண் அவங்களை ஹாஸ்பிடல் கூப்பிட்டுப் போகலாம். சக்தி நீயும் வா. ஒரு பொண்ணு துணை இருந்தா நல்லாயிருக்கும். வசந்தி மேடம் நீங்க ஆபீஸ் பார்த்துக்கோங்க “என்று ஆளாளுக்கு ஒன்றைச் செய்யச் சொல்லி அந்த நேரத்து சூழ்நிலையை பக்குவமாக கையாண்டான்.

பிறகு தான் நினைவு வந்தவன் போல், சரண் தன் பேண்ட் பாக்கெட்டில் பதற்றத்துடன் சாவியைத் தேடி எடுத்து, அவன் கையில் கொடுத்தான்.

ஆராதனாவைத் தூக்க உதவி பண்ண வந்தவர்களை, “வேண்டாம்” என தடுத்து, தன் மனைவியைப் பூமாலையாகத் தூக்கி காருக்கு கொண்டு சென்றான். அவளைப் படுக்க வைத்து தலையை தன் மடி மீது வைத்துக்கொண்டு அவளிடம் பேசியபடி, பேசியபடி என்பதை விட புலம்பியபடி வந்தான்.

அவர்களையே பார்த்துக் கொண்டு வந்த சக்தியிடம் முதன் முதலாகப் பேசும் சந்தர்ப்பத்தை விடாமல், “என்ன சக்தி பார்க்கிற?” என்றான்.

“இல்ல எப்படி ரெண்டு பேரும்...” என பாதியில் நிறுத்தவும்

“அதான் சக்தி ட்ரூ லவ். அந்தப் பொண்ணுக்கு ஒண்ணுன்னதும் பதறினது. துடிச்ச துடிப்பு, கம்பீரமா மத்தவங்களுக்கு கனவு நாயகனா சுத்துன மனுசன், கண்ணீர் விட்டு அழுறார். அந்தப் பொண்ணு ரொம்பக் கொடுத்து வச்சவ.”

“நீ ஏன் சக்தி, என் லெட்டருக்கு இதுவரை ரிப்ளை பண்ணதில்லை” என்று இனி மறைக்கக் கூடாதென்று படக்கென்று கேட்டான்.

“வாட்? அது நீங்களா?” என்றாள் அடுத்த அதிர்ச்சியை உள்வாங்கியபடி.

“ஏன் சக்தி? இதுவரை நான்தான்னு தெரியாமலா இருந்த?” என்றவன் முகம் கசங்கியது. “நான் இதை எதிர்பார்க்கல சக்தி. நீ புத்திசாலி. கடைசியா நான் எழுதினதை வச்சிக் கண்டுபிடிச்சிருவன்னு நினைச்சேன்.”

‘நானும் தான் எதிர்பார்க்கலை இந்த திடீர் திருப்பத்தை.’ வருடக்கணக்காக மனதினுள் பூட்டியிருந்த காதல் மண்மேடாய் சரிய செய்வதறியாது திகைத்தாள்.

“உன்னில் பாதியானவன்னு போட்டிருந்தேனே அப்பவே கெஸ் பண்ணியிருக்கலாமே?” என்றவன் குரலில் அத்தனை ஏக்கம்.

திரும்பி அவன் முகம் பார்த்தவள், அவனின் சோக முகம் தெரிய, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலைகுனிந்தாள். ‘உன்னில் பாதியானவன். சிவனில் பாதி சக்தி. அவன் கரெக்டா தான் தன் காதலைச் சொல்லியிருக்கான். ப்ச்... நான்தான் முட்டாளா இருந்துட்டேன்.” அவளை அவளே தேற்ற வழியறியாமல், கண்ணில் வந்த நீரை வெளியே தெரியாமல் மறைக்க பெரும்பாடு பட்டு, பார்வையை வெளியே செலுத்தினாள்.

மருத்துவமனை வந்ததும், “சக்தி நீ போயி டாக்டர் இருந்தா சீக்கிரம் வரச்சொல்லு” என்று அனுப்ப, சரண் மனைவியைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல, தற்செயலாக அங்கு வந்திருந்த அபிஷேக், சரணைப் பார்த்து “சரண் யாரு இந்தப் பொண்ணு? என்னாச்சி இவங்களுக்கு?” என்று கேட்க,

“சொல்ல டைம் இல்லை. டாக்டர் யாராவது சீக்கிரம் ரெடி பண்ணு” என்றதும் அவசர அவசரமாக மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

வெளியே வந்த மருத்துவரிடம் பதற்றத்துடன், “என்னாச்சி டாக்டர்? தண்ணி தெளிச்சிக் கூட எழுந்திருக்கலை. ஏதாவது பிரச்சனையா?” என்றான் தவிப்புடன்.

“அமைதியா இருங்க மிஸ்டர். அவங்களுக்கு சாப்பாடு தான் ப்ராப்ளம்” என்றார்.

“என்னது? சாப்பாடா? என்ன டாக்டர் சொல்றீங்க?”

“ஆமா. அவங்க எதாவது விரதம் இருந்திருக்கலாம். இல்ல ஒர்க் டென்சன்ல சாப்பாட்டுக்கு இம்பார்டன்ட் கொடுக்காம இருந்திருக்கலாம்.”

“ஆமா டாக்டர். நாலு நாளா மதியம் லஞ்ச்கு கூப்பிட்டா வரலை” என்றாள் சக்தி.

“ட்ரிப்ஸ் ஏறுது கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிருவாங்க. போய் பாருங்க” என்று சொன்ன மருத்துவரிடம் நன்றி சொல்லி, “தேங்க்ஸ்டாக்...டர் மச்சான்” என்றான் அபிஷேக்கிடம்.

“இந்த ரணகளத்துளயும் என்னைப் பிரிச்சி மேயுறியேடா. சரி பொண்ணு யாரு? உரிமை இல்லாம அந்தப் பொண்ணைத் தொட்டுத் தூக்கியிருக்கமாட்ட. உன்னோட காதலியா?” என்று தெரிந்துகொள்ளக் கேட்டான்.

“ஆமா. அதுவும்தான். ஆனா, அவ என்னோட காதலி மட்டுமில்லை. என்னோட மனைவியும் கூட. ஆமா. இன்னைக்கு சரண்-ஆராதனா முதல் திருமண நாள்” என்றான்.

அவனுடன் இருந்த மூவரும் அதிர, அதிர்ச்சியிலிருந்து வெளி வந்த சிவகுமார், “வாழ்த்துகள் சரண். உங்களோட ஜோடிப்பொருத்தம் சூப்பர்” என்றான்.

அவனைத் தொடர்ந்து மற்ற இருவரும் வாழ்த்துச் சொல்ல,

“சரண் இந்த விஷயம் வீட்ல எப்ப சொல்லப் போற?”

“உங்க கல்யாணம் முடிஞ்சதும்.”

“அதெல்லாம் இல்லை. எங்க கல்யாணத்தன்னைக்கு உனக்கு ரிசப்ஷன் வச்சிரலாம்.”

“இல்ல அசோக். அதெப்படி சரியா இருக்கும். இதுவரை வீட்ல யாருக்கும் தெரியாது. அப்படியிருக்கும் போது எப்படி எடுத்துச் சொல்றதுன்னு தெரியலை” என்றான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“யார் யாருக்கு உன் கல்யாணத்தைப் பத்தி தெரியும்னு சொல்லு. நான் மத்த விஷயத்தைக் கவனிச்சிக்கறேன். நீ இப்ப போயி தங்கச்சிய கவனி. நான் கொஞ்ச நேரம் கழிச்சி வர்றேன்” என்று சென்றான் அபிஷேக்.

மெல்ல அறைக்குள் வந்தவன், மயக்கம் தெளியாத மனைவியையே பார்த்திருக்க, ஒரு கையால் அவள் தலையைத் தடவிக் கொடுத்தபடி, ட்ரிப்ஸ் ஏறாத கை விரல்களைத் தன் விரல்களுள் கோர்த்து, அவளருகில் அமர்ந்து நெற்றியில் முத்தமிட்டு, “கொஞ்ச நேரத்துல என்னைப் பயமுறுத்திட்டியேடா” என்றான்.

கணவனின் ஸ்பரிசத்தில் கண்விழித்தவள், தன் முகம் நெருங்கி தன்னையே பார்த்திருந்த கலங்கிய கண்களைப் பார்த்தாள். பார்த்துக் கொண்டே இருந்தாள். ‘இது எனக்கான கண்ணீர்! இவன் என்னவன்! எத்தனை இடர் வந்தாலும் அவனைப் பிரிவதில்லை’ என்று நினைத்தவள் முகத்தில் மெல்லிய புன்னகை பரவ, மனைவியின் புன்னகையில் நிம்மதி அடைந்தான்.

“ரொம்ப பயந்துட்டீங்களா?”

“அப்படி எதுவும் இல்லையே. இங்க யாரும் பயப்படலை. உனக்காக வருத்தப்படலை. உனக்காக அழலை. உனக்காகத் துடிக்கலை” என்றான்.

“ஸ்...ஸப்பா எத்தனை உனக்காக. அப்ப இவ்வளவும் நீங்க பண்ணியிருக்கீங்க. அதுவும் எனக்காக” என்று காதலுடன் சொன்னவளை முறைத்து திரும்பி அமர்ந்தான். அவனைத் தொட்டு, “மேனேஜர் சாருக்கு கோவமா? என்ன கோவம்னு சொன்னா தீர்த்து வைப்போம்ல?”

“போடி” என கையைத் தட்டி விட்டான்.

“என்னைக் கொஞ்சம் சாஞ்ச மாதிரி உட்கார வைங்களேன்” என்று சொல்ல, அவனின் அமைதி தொடரவும், “அப்ப நானே எழுந்துக்கறேன்” என்று எழப்போக,

“ஏய்! நானே உட்கார வைக்கிறேன்” என பதறியவனைப் பார்த்து சிரித்தாள். “ஆமா. இந்த சிரிப்புக்கொண்ணும் குறைவில்லை. மயக்கம் வர்ற அளவு என்ன பண்ணின? இந்த விரதம் எத்தனை நாளா இருக்கிற? அதுக்கான அவசியமென்ன? உடம்பு கெட்டுப் போற அளவு எதுக்காக? யாருக்காக?”

“நியா” என்று அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்துச் சொன்னாள்.

“குட்டிமாவுக்காகவா?”

சம்மதமாக தலையசைத்தவளிடம், “தனு அதுக்காக உன் உடம்பைக் கெடுத்துகுவியா? தண்ணீர் தெளிச்சும் நீ எழாததால, என் உயிரே என்கிட்ட இல்ல தெரியுமா? எங்க நீயும் அம்மா மாதிரி விட்டுட்டுப் போயிருவியோன்னு பயந்தது எனக்குத்தான் தெரியும்” என்றான் குரல் கம்ம.

“என்னது உங்கம்மா உயிரோட இல்லையா? எ..எப்ப இறந்தாங்க?” என்று அதிர்வாகக் கேட்டாள்.

“என்னமா இப்படிக் கேட்கிற? அம்மா தாலியைத் தான உனக்குக் கட்டியிருக்கேன். அப்புறம் என்ன சந்தேகம்? நான் சின்ன வயசா இருக்கும் போதே அம்மா இறந்துட்டாங்க.”

“சாரிங்க.”

“எதுக்கு சாரி?”

“நீங்க என்னைத் தப்பா எடுத்துக்கக் கூடாது. முதல் நாள் பார்த்தப்ப என்னைப் பற்றி உங்க அம்மாகிட்ட சொன்னேன். அம்மா சரி சொன்னாங்கன்னு சொன்னீங்களா. அதான் அம்மா தாலின்னதும் உங்களுக்கு அப்... சாரிங்க” என்றாள் திரும்பவும்.

அவள் விட்ட இடத்தை தெரிந்து கொண்டவன், “ஓ நீ அப்படி நினைச்சியா. விடுமா. நான் முன்னாடியே தெளிவா சொல்லியிருக்கணும். என்னைப் பொருத்தவரை அம்மாகிட்ட டெய்லி நடக்கிறதைச் சொல்லிருவேன். என்னோட ஒவ்வொரு செயலும் அம்மாவுக்கு ஷேர் பண்ணினா தான் எனக்குத் தூக்கமே வரும். அதுக்காக நான் மனநோயாளி கிடையாது” என்றான் வேகமாக.

“ப்ச்...ப்ச்... இல்லங்க. உங்க பாசத்தை நினைச்சி பெருமைப்படுறேன். அத்தையோட நீங்க பேசி உங்க மனசுல உள்ளதைக் சொல்றதாலதான், மனசளவுல பாதிக்கப்படாம, எந்த கெட்ட வழிக்கும் போகாம, நல்லவனா, பக்குவமானவனா நடந்துக்கிறீங்க. உயிரோட இருக்கிற அம்மாவையே இப்பல்லாம் நிறைய பிள்ளைங்க கண்டுக்கறது இல்லை. ஆனா, உங்க பாசம்தான் உங்களை மனிதனா வச்சிருக்கு. நான் நம்ம வீட்டுக்கு வந்ததும், உங்களை அத்தைகிட்ட போட்டுக் கொடுக்குறதுதான் வேலையே” என்றாள்.

அவளின் பதிலில் ‘அத்தை’ என்ற உரிமைப் பேச்சில் சந்தோஷத்தில் அவளைக் கட்டிப்பிடித்து, “தேங்க்யூ தனு. என்னைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு” என்று முத்தமிட வந்தவனைத் தடுத்து, “இன்னொரு விஷயம்” என்றாள்.

‘என்ன?’ என்பது போல் பார்த்தவனிடம்,

“இல்லங்க அத்தைகிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிருவீங்களா?”

“ஆமா. ஏன் கேட்கிற?”

“அச்சச்சோ! அப்ப என்னைக் கிஸ் பண்ணது, கட்டிப்பிடிச்சது எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா?” என்று அலறினாள்.

வாய்விட்டுச் சிரித்தவன், “நீ அப்படி நினைச்சிட்டியா?” என மெல்லிதாக அவள் தலையில் முட்டி, “அம்மாவே ஆனாலும், புருஷன், பொண்டாட்டி அந்தரங்கத்தை சொல்லக்கூடாதுன்னு தெரியும்டா தனு” என்றவனைக் கட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை கையில் குத்தப்பட்டிருந்த ஊசி தடை செய்தது.

“இங்க என்னை எப்படிக் கொண்டு வந்தீங்க?”

“ஓ... அதை மறந்துட்டேன் பாரேன். சிவகுமார் தான் டென்சனா இருந்த என்னை இங்க கூப்பிட்டு வந்தது. உன் பக்கத்து டேபிள்னு நினைக்கிறேன். அந்தப் பொண்ணும் உனக்குத் துணையா வந்தாங்க” என்று சிவாவிற்கு அழைத்து உள்ளே வரச்சொன்னான்.

“யாரு சக்தியா?” என்று கணவனிடம் கேட்கும் பொழுது உள்ளே நுழைந்தாள் சக்தி.

“ஓ... அவங்க பேரு சக்தியா? தெரியலமா. அவங்கதான் உன்னை முதல்ல பார்த்தது” என்று சொன்னான்.

சக்தி அங்கு முழுவதும் உடைந்தாள். ‘என்னோட பேர் கூடத் தெரியாத ஒருத்தனையா ரெண்டு வருஷமா லவ் பண்ணேன். சே... இதைவிடக் கேவலம் வேற எதுவுமில்லை. இந்த அளவு முட்டாளா நான்.” தன் மேலேயே சக்திக்கு வெறுப்பு வந்தது. அதை வெளியே காட்டாமல் உதட்டில் புன்னகை பூசிக்கொண்டாள்.

“ஏங்க இப்படி இருக்கீங்க? உங்களைச் சுத்தி என்ன நடக்குது? யார் என்ன பண்றாங்கன்னு பார்க்க மாட்டீங்களா? உங்களுக்கெல்லாம் மேனேஜர் போஸ்டிங் கொடுத்தாரே எம்டி, அவரைச் சொல்லணும். எங்க சொல்ல. உங்க மேல செம க்ரஸ்ஸா இருக்காரே மனுஷன்.”

முதலில் முழித்தவன் முதலாளியின் கிரஸ்ஸில் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டு, “அது ஐயாவோட சின்சியாரிட்டிக்கு கிடைச்ச பரிசுடா செல்லம்” என்றான்.

“ஐயோடா! ரொம்பத்தான்” என்று உதடு சுழிக்க.

“நாங்க உள்ள வந்து ரொம்ப நேரமாச்சி. உங்க ரொமான்சைக் கொஞ்சம் கம்மி பண்ணினா நல்லாயிருக்கும்” என்றதும் திரும்பியவர்கள் அவர்களைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரிக்க,

“பார்த்து ரொம்ப வழியிது. நல்ல ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்டா. ஹவ் ஆர் யூ நவ் ஆராதனா?” என்று அவளிடம் நலம் விசாரித்தான் சிவகுமார்.

“பைன் சிவகுமார் சார்” என்று திரும்பி, “வாங்க சக்தி” என்றழைத்தாள்.

“தனு நான் எம்டிக்கு போன் பண்ணி சொல்லிட்டு வர்றேன்” என்று வெளியே கிளம்பினான் சரண்.

“சாரிங்க ஆராதனா.”

“எதுக்கு சாரி? ஓ... அவங்க சொல்லிட்டாங்கள?”

“ம்... நானும் நேரடியாவே பார்த்தேன்.”

“சாரி சக்தி மறைக்கணும்னு நினைக்கலை. ஆனா, சூழ்நிலை அப்படி அமைஞ்சிருச்சி.”

“யூ ஆர் ரியலி லக்கி ஆராதனா” என்றான் சிவா.

“என்ன சார் திடீர்னு? என் லக்கை நீங்க எப்ப பார்த்தீங்க?” என்றாள் சற்று கேலியாகவே.

“பார்த்தேனா? அனுபவிச்சேன். சரண் உங்க மேல வச்சிருந்த லவ்வைப் பார்த்து பிரமிச்சிட்டேன். பட், நான் அந்த அளவு இருப்பேனா தெரியாது. முயற்சி பண்றேன்” என்று சக்தியைப் பார்த்தபடி சொன்னான்.

“அதுக்காக ரெண்டு வருஷமெல்லாம் டூ மச் சார்.”

“ஆராதனா உங்களுக்குத் தெரியுமா? லெட்டர் வச்சது இவங்கதான்னு.”

“தெரியும். உங்களை வாட்ச் பண்ணப்பவே. அந்த வாக்கியம் என்ன? ஹான்! உன்னில் பாதியானவன். அப்பவே தெரியும்.”

“புத்திசாலி ஆராதனா நீங்க. இங்க ஒருத்தருக்கு நான் சொன்ன பிறகு தான் தெரிஞ்சிருக்கு” என்றான் சடைப்பாக.

“ஹா...ஹா ஒரு வழியா சொல்லியாச்சா?”

“ம்... இன்னும் ரிப்ளை வரலை” என்றான் சோகமாக.

“இப்பத்தான போஸ்ட் பண்ணிருக்கீங்க. கொஞ்சம் நிதானமா தான் ரிப்ளை வரும்.” பேச்சின் நடுவில் கைபேசியில் அழைப்பு வர சிவா வெளியே சென்றான்.

“உங்களுக்கு என்மேல கோவம் வரலயா ஆராதனா?”

“எதுக்கு கோபம் வரணும்னு நினைக்கிறீங்க?”

“இல்ல உங்க ஹஸ்பண்ட் பத்தி உங்ககிட்டயே பேசினேனே” என்று தலைகுனிய,

“ஹேய்! இதுக்கா பீல் பண்றீங்க? உண்மையைச் சொல்லணும்னா நானே நினைச்சிருக்கேன். என்னடா என்னைவிட இந்தப் பொண்ணு சூப்பரா இருக்கே. இதையெல்லாம் விட்டு எப்படி என்கிட்ட வந்து மாட்டினாங்கன்னு. நீங்க அவங்களைத் தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்கன்னும் தெரியும். ஏன்னா அவங்களைப் பற்றி எனக்குத் தெரியும். அதுக்காக நாங்க பழகினதெல்லாம் கிடையாது. பர்ஸ்ட் டைம் பார்த்தப்ப தோணிச்சி.”

“நான் சொல்றத வெளியில சொல்லிராதீங்க? அவங்களை நான் அடிக்கக் கூட செஞ்சிருக்கேன். பட், ரியலி ரியலி க்ரேட்” என்று தன் கணவனைப் பற்றி பேசும் பொழுது அவள் கண்களில் கண்ட காதலில், ‘அவனின் காதலுக்கு இவள் எந்த வகையிலும் குறைந்தவள் அல்ல’ என்று தோன்றியதை வெளியே சொன்னாள் சக்தி.

ஆராதனா முகம் சிவக்க, அவளின் வெட்கத்தை ரசித்து, “நல்ல வேளை உங்க ஹஸ்பண்ட் இங்க இல்லை. இருந்தா நீங்க வெட்கப்படுற அழகைப் பார்த்து ப்ரீஸ் ஆகிருப்பாரு. ஆல் த பெஸ்ட் ஆராதனா. உங்க கல்யாணம் ப்ளஸ் காதல் வாழ்வு சிறக்க” என்று வாழ்த்தினாள்.

நன்றி சொல்லி, “சிவாவைக் கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே சக்தி. சிவா ரொம்ப நல்ல ஜாலி டைப். எங்க நீங்க மறுத்துருவீங்களோன்னு இத்தனை நாளா மறைச்சிட்டார்.”

“புரியுது ஆராதனா. இப்பத்தான லெட்டர் வந்திருக்கு. ரிப்ளை பண்ண கொஞ்ச நாள் ஆகும். அதுவரை, ஆளைக் கொஞ்சம் கதறடிச்சிக்கிறேனே.”

பதிலுக்கு சிரித்த ஆராதனா, “தேங்க்ஸ் உங்க மனமாற்றத்துக்கு” என்றாள்.

“தேங்க்ஸ் தேவையில்லை” என்றதும் விழித்தவளிடம் கைநீட்டி, “நோ வாங்க போங்க. இப்ப இருந்து ப்ரண்ட்ஸ். ஒன்லி வா போ” என்றாள்.

“அடிப்பாவி சக்தி! நீ என் நண்பிடி.”

“ஹேய் ஆரா! நீ ரொம்ப ஸ்பீடுடி” என்றாள் இவள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top