- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
20
‘திரும்பவும் முதல்லயிருந்தா’ என்ற மனைவியின் அதிர்ச்சியில், “ஹேய்! ஸ்டாப் ஸ்டாப். ஏன் இப்படி வாயைத் திறக்கிற? என்ன முதல்ல இருந்தான்னு யோசிக்கிறியா? இன்னைக்கு முதல் நாள் தான்டா அழகி. நீயும் நானும் கணவன் மனைவியா, ஒரே வீட்ல, ஒரே அறையில், நான் உன்னோட கார்த்திக் தான்டா அழகி. என்கிட்ட வரமாட்டியா?” என மிருதுவான குரலில் இருகைநீட்டி அழைத்தான்.
அவனையே பார்த்திருந்தவள் மனம் ஒருகணம், அந்த கைகளுள் சரணடைந்திட எண்ணியது. ஆனால், வெளியே “இல்ல நீங்க என்னோட கார்த்திக் இல்ல. கார்த்திக்கு இந்தமாதிரி என்னை காயப்படுத்தி பேசுறதுக்கு வராது. எனக்கு உங்களைப் பிடிக்கல?” என்றாள் முகம் சுழித்தபடி.
“ஆனா, எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கேடா.”
“ம்கூம்... எனக்கு நீங்க வேண்டாம்.”
“எனக்கு நீ வேணுமேடா” என்று திரும்பவும் அவளை நெருங்க,
“ப்ச்... இப்படியே பேசுனீங்க, இந்த வீட்டுல இருக்கிறதா, வேண்டாமான்னு யோசிக்க வேண்டி வரும்.”
சட்டென்று வந்த கோவத்தில் “இதான் அவந்தி உன் வீடு. இங்கதான் நீ இருக்கிற. இருக்கணும். இட்ஸ் மை ஆர்டர்!” என கண்டிப்புடன் சொன்னான்.
“உன்னோட மிரட்டலுக்கெல்லாம், நான் அடங்கமாட்டேன் போ!”
“ஓ... அடங்கமாட்டியா? உன்னோட பாஷையில சொல்லணும்னா, இந்த லூசன்தான் உன்னோட புருஷன். உன்னை அடக்குறதுதான் என்னோட வேலைன்னா, அதையும்தான் செய்யுறேனே!” அலட்டலாக சொன்னவன் பார்வை மாறி மனைவியின் அழகை ரசிக்க ஆரம்பித்தது.
அந்த பார்வையின் வீரியம் தாங்காமல், வந்த வெட்கத்தை தடுத்து, “வே..வேண்டாம் இப்படிப் பார்க்காதீங்க? எனக்கு இதெல்லாம் பிடிக்கல?” என வாய் தந்தியடிக்க,
“அப்படியா?” என்றவன் இரண்டே எட்டில் மனைவியை வளைத்துப் பிடித்து, தன்னைவிட்டு போக திமிறியவளின் காதருகில், “ஏன்டா நான் பார்த்தா பிடிக்கலை?” என்றான்.
தன்னையும் மீறிய ஒரு கிறக்கம், அவன் குரலிலும், அணைப்பிலும் வர தலையை உதறி, ‘சே... ஒரே நாள்ல என்னை கவுத்திருவாங்க போல. இன்னும் அவங்க பண்ணின எதுக்கும் சாரி கூட கேட்கல. வேண்டாம் அவந்தி மயங்காதே’ என மனம் அதட்ட, “ப்ச்... விடுறீங்களா?” என அவனைத் தள்ளிவிட்டு, வேகமாக கட்டிலின் மறுபுறம் படுத்துப் போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள்.
மனைவியின் வேகம் பார்த்து மௌனமாக புன்னகைத்தவன், ‘டேய்.. கார்த்திக்! விளையாட்டு வினையாகிரப் போகுது. பார்த்து பக்குவமா நடந்துக்க’ என்று மனம் சொன்னது.
கட்டிலின் மறுபுறம் படுத்தவன், மெல்ல மனைவியிடம் செல்ல, அவனின் நெருக்கத்தை உணர்ந்தவள் இதயம் தாறுமாறாக எகிறிக்குதிக்க, கண்மூடி கடவுளை வேண்ட ஆரம்பித்தாள். மனைவியின் நிலையை ரசித்து அவளை அதிகம் சோதிக்காது தன்னிடத்தில் படுத்து உறங்கினான்.
கணவன் தூங்கியதை உறுதி செய்ய போர்வையை விலக்கியவள், அவன் உறக்கம் உண்மையென்பதை அறிந்த பின்னே சாய்வாக எழுந்தமர்ந்து, தன் மூச்சை சீராக்கி கார்த்திக்கையே பார்த்திருந்தாள். அடர்த்தியான மீசையின் கீழ், அவளை எண்ணியபடியே படுத்தவன் இதழ்கள் புன்னகையை தாங்கியிருக்க, மீசையைத் திருக வேண்டும்போல் ஒரு உந்துதல் தோன்றியது. சி.என்னாக அவன் எழுதிய கவிதைகள், கண்முன் தோன்றி மறைந்தது. இதுவரை சாதாரணமாகத் தெரிந்த கவிதைகள் தனக்கானது என்றதும், இனம் புரியாத சந்தோஷம் தோன்றியது.
‘ஆறு மாதத்திற்கு முன், அவந்திகாவைப் பார்த்துவிட்டு வா என்று தாய் சொன்னதற்கு, என் வேலை முடிந்ததும்தான் பார்ப்பேன் என்றவன், எப்படி தினமும் ஒரு கவிதை எனக்கு அனுப்பினான்? ஆக, முதலில் பார்க்க முடியாவிட்டாலும், நாராயணனாக அறிமுகமாகி என்னைக் காப்பாற்றி, அதன்பின் சி.என்னாக என்னைக் கவர முயற்சித்திருக்கிறாங்க. கடைசியில்தான் கார்த்திக்கின் அறிமுகம் எனக்கு. கார்த்திக்காகவே என்னை வசீகரித்திருக்கிறாங்க. நான் திருமணத்திற்கு கேட்கவில்லை என்றாலும் என்னைத்தேடி வந்திருப்பாங்களோ?’
தன் நினைப்பு நிஜமா? பொய்யா? என மீண்டும் குழம்ப, ‘சே... எதுவானாலும் அவங்களே ஆரம்பிக்கட்டும். இதுல எனக்கு பர்ஸ்ட் நைட் மிரட்டல் வேற.’ ‘அப்பா பிள்ளைகள்லாம் வெட்டி ஜம்பம்தான் அவந்தி. செயல்ல ஒண்ணுமிருக்காது’ என்ற மாமியாரின் வார்த்தைகள் நினைவுவர, “அதென்னவோ உண்மைதான்” என்று சிரித்தபடி உறங்கிப்போனாள்.
மறுநாள் காலை கண்விழித்தவள் எழுந்து குளியலறை செல்லப்போக அவளருகே இருந்த வாழ்த்து அட்டையுடன் கூடிய ரோஜாப்பூ ஒன்று கண்ணில்பட எடுத்துத் திறந்து பார்த்தாள்.
“ஹாய் டபுள் எ! ஓ...சாரி இப்ப ‘என்.எ’ அதாவது என்னுடைய ‘எ’ இல்ல. குட்மார்னிங்டா அழகி. திருமணத்திற்கு பின் உனக்கான கவிதை. அப்ப முதல்ல மேரேஜ் பண்ணினப்ப அனுப்பினது எந்த கணக்குலன்னு கேட்குறியா? அது திருட்டுப்பய கார்த்திக் கணக்கு” என்றதும் அவந்திக்கு சற்று கோபம் ஏற்பட, “என்னடா கோவம் வருதா? தொடர்ந்து படிமா” என அவளின் மனதைப் படிக்க, சின்ன சிரிப்பு வந்தது அவந்திகாவுக்கு.
“இது உன் சி.என்னோட ஸ்பெஷல்.”
‘அதிரடியான என் வாழ்வில்
அழகா(கிய)ய் நுழைந்தவளே!
ஓடிக்கொண்டேயிருந்த எனை
உன் வார்த்தையெனும்
ஆயுதத்தால் ஓரிடத்தில்
தேங்க வைத்தாயடி!
உன் உள்ளமதில் –
எனக்கொரு இடம் கேட்க
நான் எண்ண
கேட்குமுன்னே
என்றுள் சரண் புகுந்து,
எனை அடியோடு சாய்த்தவளே!
கவிதையை ரசித்தவள், “ஆமா. புகுந்து இவங்களை அடியோடு சாய்க்கிறாங்க. ஆளைப்பாரு லூசன். கவிதையா எழுதினா நாங்க மயங்கிருவோமா என்ன?” உறக்கத்தில் இருந்தவனை முறைத்து இல்லை ரசித்து சிரித்தபடி குளியலறை சென்றாள்.
கீழே இறங்கி வந்தவளுக்கு நித்யா காஃபி கொடுக்க, நன்றி சொல்லி வாங்கி நித்யாவுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்ததில், முக்கிய இடம் பிடித்தது கார்த்திக் மட்டுமே.
“அண்ணி! நான் இங்க இவ்வளவு ஃப்ரீயா எந்த தொல்லையும் இல்லாமல் இருக்கிறேன்னா அண்ணன்தான் அண்ணி காரணம்” என்றதும் அவந்திகா கேள்வியாய் பார்த்தாள்.
“நாலு வருஷத்துக்கு முன்னாடி காதல்ன்ற பேர்ல, ஒரு அயோக்கியனை நம்பி நாமக்கல்ல இருந்து சென்னை வந்துட்டேன். வந்த பிறகுதான் தெரிஞ்சது அவன் தப்பானவன்னு. அவன்கிட்ட இருந்து தப்பிக்கணும்னு நினைக்கையில், அண்ணா போதை கேஸ்ல அவனை அரஸ்ட் செய்ய, அவனோட சேர்த்து நானும் மாட்டிக்கிட்டேன். விசாரணையில நான் நடந்ததைச் சொன்னேன். எங்க வீட்டுக்கு தகவல் சொல்ல எனக்கு அப்படி ஒரு பொண்ணே இல்லைன்னு தலை முழுகிட்டோம்னு சொல்லிட்டாங்க. வேற வழியில்லாம, அண்ணா அம்மாகிட்ட என்னை ஒப்படைச்சிட்டாங்க. இந்த நாலு வருஷத்துல இந்த வீட்டுல நானும் ஒருத்தி. அப்படியே படிக்கவும் செய்றேன்” என நன்றி மறவாது பேசினாள்.
“ஊருவிட்டு வரும்போது உங்க வயசென்ன?”
“பதினேழு அண்ணி. இப்ப இருபத்தோரு வயசு” சொல்லும்போதே ஸ்ருதி குறைந்தது.
“மை காட்! அவ்வளவு சின்ன வயசுலயேவா?” என்றதும் நித்யா தலைகவிழ்ந்தாள்.
“என்ன அவந்தி நித்யாவோட ப்ளாஷ்பேக் கேட்டு முடிச்சாச்சா? என்ன தலை சுத்துதா?”
“அதெல்லாம் இல்லத்தை படிக்கும்போது, ஆர்டிகிள் விஷயமா போகும்போது ரொம்ப சின்ன பொண்ணுங்க காதல்ன்ற பெயர்ல சுத்துறதைப் பார்த்திருக்கேன். அதோட கம்பேர் பண்ணினா, இதெல்லாம் ஒண்ணுமேயில்ல. கடைசி நேரத்துல உஷாராகி எந்தவித சேதாரமும் இல்லாம வந்திருக்காங்களே அதுவே போதும்.”
“அதென்னவோ உண்மைதான்மா” என்றவர், “அவந்தி நாளைக்கு உங்களுக்கு ரிசப்ஷன் ரெடி பண்ணியிருக்கோம். உனக்கு ஆட்சேபணை எதுவுமில்லையே?”
மாமியாரின் குரலில், நான் சம்மதிப்பேனோ? இல்லையோ? என்ற சிறு பதற்றம் இருப்பதை அறிந்தவள், “நாளைக்கேவா எப்படி முடியும்?” என கேட்டாள்.
“அப்ப உனக்கு ஓகேவா” என்று மனம் சற்று அமைதியாகி, “அதெல்லாம் ஏற்கனவே ரெடி பண்ணியாச்சி. எல்லாரையும் அழைக்காம முக்கியமான கொஞ்ச பேருக்கு மட்டும்தான். உன் சைடுல சுந்தரேசன் சார் எல்லாத்தையும் செஞ்சிட்டாங்க.”
“மாமாவா?” என ஆச்சர்யப்பட,
“ஆமாடா” என்றவர், “நித்யா என்னோட ரூம்ல ஒரு ட்ரஸ்பேக் இருக்கும். எடுத்துட்டு வா” எனவும்,
“இதோம்மா” என்று ஒரே நிமிடத்தில் திரும்பியவள் கையிலுள்ள பையை வாங்கி ஆடையைக் காண்பித்தார் புவனேஸ்வரி.
“வாவ்! அத்தை சேலை சூப்பராயிருக்கு!” என்று ஈஸ்வரியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.“
“இதை ஏன் எனக்குக் கொடுக்கிற? எடுத்தவங்களுக்குக் கொடுத்தா, நானும் சந்தோஷப்படுவேன். அவங்களும் சந்தோஷப்படுவாங்க” என்றார்.
“புரியலத்தை?” என கேள்வியாய் வினவியவளிடம்,
“புரியலன்னா விடு. உனக்கு சேலை பிடிச்சிருக்குதான?”
“ஆமா பிடிச்சிருக்கு.”
“அதெப்படி அண்ணி பிடிக்காமல் போகும். எங்கண்ணாவோட செலக்ஷனாச்சே” என்ற நித்யாவின் குரலில்.,
“என்னது அவங்க செலக்ட் பண்ணினாங்களா?” என்றவள் கண்களில் மாடியிலிருந்து இறங்கி வரும் கணவன் பட, “இந்த சேலை பிடிக்கலை நித்யா” என்றாள் அவந்திகா பட்டென்று.
புவனேஸ்வரி மருமகளின் பார்வை, மகனிடம் போய் வந்ததைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன், “இப்பதான் பிடிச்சிருக்கு சொன்ன?” என எதிர்கேள்வி கேட்டார்.
“அ...அது அப்ப பிடிச்சது. இப்ப பிடிக்கல” என்றாள் அலட்சியமாக.
முகம் இறுகியபடி கீழே வந்த மகனை கவனித்த ஈஸ்வரி, “ஹ்ம்... நடத்து நடத்து” என மருமகளிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
“நித்யா காஃபி” என்று மனைவியின் அருகில் உரசியபடி வந்தமர்ந்தான் அவளின் காத(வ)ல் கணவன்.
நித்யா உள்ளே செல்வதை உறுதி செய்து, “ஏன் இப்படி உரசிட்டு உட்கார்றீங்க? தள்ளிப்போங்க” என கணவனின் காதைக் கடிக்க,
“ஹான்! நீ சொன்னா சரிதான்” என்று இன்னும் உரசினான்.
“ப்ச்... தள்ளிப்போகச் சொன்னதா நியாபகம்.”
“அதான்டா தள்ளி வந்தேன்” என்று நகர்ந்து நகர்ந்து ஷோஃபாவின் ஓரம் வந்து, ஒருவர் இருக்கையில் இருவர் அமர்ந்திருக்க,
தலையில் அடித்தபடி “உங்களைத் திருத்தவே முடியாது” என்று எழப்போனவளை கைபிடித்து இழுத்து தன் மடியில் அமர்த்தி, “ஏன்டி அழகி நம்ம பர்ஸ்ட் நைட் என்னைக்கு வச்சிக்கலாம்னு சொல்லவேயில்ல? நானும் மூணு வருஷமா வெய்ட் பண்ணிட்டிருக்கேன் இன்னும் வெய்ட் பண்ணவைக்கப் போறியா? உன் கார்த்திக் பாவமில்லையா?” என காதோரம் கிசுகிசுக்க,
கணவனின் கிசுகிசு குரலில், தன் எதிர்ப்புகள் செயலிழந்து போக பேச மறந்து பார்த்திருந்தவள் பின் சுதாரித்து, “எ...என்ன மூணுவருஷம்?”
“இது தெரியாதா? மூணுவருஷத்துக்கு முன்னாடியில இருந்து கல்யாண பேச்சை ஆரம்பிச்சேன். அது அப்படியே கிணத்துல போட்ட கல்லுமாதிரி கிடந்தது. சரி நமக்கு பிடிச்ச பொண்ணை கட்டித்தருவாங்கன்னு பார்த்தேன் கண்டுக்கவேயில்லடா. அட.. நம்மளை பிடிச்சிருக்குன்னு சொன்ன பொண்ணையாவது கல்யாணம் பண்ணிக்கலாம்னா, இவ்வளவு தடங்கல்” என்று சோகமாக சொல்லி முடிக்க, விருட்டென்று அவனைவிட்டு விலகியவள் கணவனை ஒரு பார்வை பார்த்து உள்ளே சென்றாள்.
‘மனைவியின் விலகல் எதனால், ஏன் அந்த பார்வை பார்த்தாள்?’ என்பது புரியாமலேயே பார்த்திருந்தான், தனக்குப் பிடித்த பெண் அவள்தான் என சொல்லாமல் போனதை மறந்து.
காஃபி வந்ததும் அருந்திவிட்டு உள்ளே வர, கைபேசியை எடுத்து பேசுவதுபோல் ஓரம் கட்டியிருந்தாள் அவனின் அழகி. ‘ஷப்பா! காரணமேயில்லாமல் என்ன கோபமோ போ. இப்ப பேசுறதுக்கு டைம் இல்லை வந்து பார்த்துக்கலாம்’ என்று அவளருகில் வந்து கையிலுள்ள போனை பிடுங்கி ஓரம்வைத்து, “ரொம்ப கஷ்டப்படலாம் வேண்டாம் அவந்தி. நான் கிளம்பறேன்” என்று நகர்ந்தவன்,
‘சே... கண்டுபிடிச்சிட்டாங்களே’ என அவந்தி எண்ணிக் கொண்டிருக்கையில், திரும்பி அவள் எதிரில் வந்து, மனைவியின் அதிர்வை ரசித்து, மென்மையாக கன்னத்தில் முத்தமிட்டு, “உன்னோட முதல் முத்தத்திற்காக வெய்ட்டிங்டா அழகி!” என்று நிற்காமல் ஓடியேவிட்டான்.