• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
20


‘திரும்பவும் முதல்லயிருந்தா’ என்ற மனைவியின் அதிர்ச்சியில், “ஹேய்! ஸ்டாப் ஸ்டாப். ஏன் இப்படி வாயைத் திறக்கிற? என்ன முதல்ல இருந்தான்னு யோசிக்கிறியா? இன்னைக்கு முதல் நாள் தான்டா அழகி. நீயும் நானும் கணவன் மனைவியா, ஒரே வீட்ல, ஒரே அறையில், நான் உன்னோட கார்த்திக் தான்டா அழகி. என்கிட்ட வரமாட்டியா?” என மிருதுவான குரலில் இருகைநீட்டி அழைத்தான்.

அவனையே பார்த்திருந்தவள் மனம் ஒருகணம், அந்த கைகளுள் சரணடைந்திட எண்ணியது. ஆனால், வெளியே “இல்ல நீங்க என்னோட கார்த்திக் இல்ல. கார்த்திக்கு இந்தமாதிரி என்னை காயப்படுத்தி பேசுறதுக்கு வராது. எனக்கு உங்களைப் பிடிக்கல?” என்றாள் முகம் சுழித்தபடி.

“ஆனா, எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கேடா.”

“ம்கூம்... எனக்கு நீங்க வேண்டாம்.”

“எனக்கு நீ வேணுமேடா” என்று திரும்பவும் அவளை நெருங்க,

“ப்ச்... இப்படியே பேசுனீங்க, இந்த வீட்டுல இருக்கிறதா, வேண்டாமான்னு யோசிக்க வேண்டி வரும்.”

சட்டென்று வந்த கோவத்தில் “இதான் அவந்தி உன் வீடு. இங்கதான் நீ இருக்கிற. இருக்கணும். இட்ஸ் மை ஆர்டர்!” என கண்டிப்புடன் சொன்னான்.

“உன்னோட மிரட்டலுக்கெல்லாம், நான் அடங்கமாட்டேன் போ!”

“ஓ... அடங்கமாட்டியா? உன்னோட பாஷையில சொல்லணும்னா, இந்த லூசன்தான் உன்னோட புருஷன். உன்னை அடக்குறதுதான் என்னோட வேலைன்னா, அதையும்தான் செய்யுறேனே!” அலட்டலாக சொன்னவன் பார்வை மாறி மனைவியின் அழகை ரசிக்க ஆரம்பித்தது.

அந்த பார்வையின் வீரியம் தாங்காமல், வந்த வெட்கத்தை தடுத்து, “வே..வேண்டாம் இப்படிப் பார்க்காதீங்க? எனக்கு இதெல்லாம் பிடிக்கல?” என வாய் தந்தியடிக்க,

“அப்படியா?” என்றவன் இரண்டே எட்டில் மனைவியை வளைத்துப் பிடித்து, தன்னைவிட்டு போக திமிறியவளின் காதருகில், “ஏன்டா நான் பார்த்தா பிடிக்கலை?” என்றான்.

தன்னையும் மீறிய ஒரு கிறக்கம், அவன் குரலிலும், அணைப்பிலும் வர தலையை உதறி, ‘சே... ஒரே நாள்ல என்னை கவுத்திருவாங்க போல. இன்னும் அவங்க பண்ணின எதுக்கும் சாரி கூட கேட்கல. வேண்டாம் அவந்தி மயங்காதே’ என மனம் அதட்ட, “ப்ச்... விடுறீங்களா?” என அவனைத் தள்ளிவிட்டு, வேகமாக கட்டிலின் மறுபுறம் படுத்துப் போர்வையை இழுத்து மூடிக்கொண்டாள்.

மனைவியின் வேகம் பார்த்து மௌனமாக புன்னகைத்தவன், ‘டேய்.. கார்த்திக்! விளையாட்டு வினையாகிரப் போகுது. பார்த்து பக்குவமா நடந்துக்க’ என்று மனம் சொன்னது.

கட்டிலின் மறுபுறம் படுத்தவன், மெல்ல மனைவியிடம் செல்ல, அவனின் நெருக்கத்தை உணர்ந்தவள் இதயம் தாறுமாறாக எகிறிக்குதிக்க, கண்மூடி கடவுளை வேண்ட ஆரம்பித்தாள். மனைவியின் நிலையை ரசித்து அவளை அதிகம் சோதிக்காது தன்னிடத்தில் படுத்து உறங்கினான்.

கணவன் தூங்கியதை உறுதி செய்ய போர்வையை விலக்கியவள், அவன் உறக்கம் உண்மையென்பதை அறிந்த பின்னே சாய்வாக எழுந்தமர்ந்து, தன் மூச்சை சீராக்கி கார்த்திக்கையே பார்த்திருந்தாள். அடர்த்தியான மீசையின் கீழ், அவளை எண்ணியபடியே படுத்தவன் இதழ்கள் புன்னகையை தாங்கியிருக்க, மீசையைத் திருக வேண்டும்போல் ஒரு உந்துதல் தோன்றியது. சி.என்னாக அவன் எழுதிய கவிதைகள், கண்முன் தோன்றி மறைந்தது. இதுவரை சாதாரணமாகத் தெரிந்த கவிதைகள் தனக்கானது என்றதும், இனம் புரியாத சந்தோஷம் தோன்றியது.

‘ஆறு மாதத்திற்கு முன், அவந்திகாவைப் பார்த்துவிட்டு வா என்று தாய் சொன்னதற்கு, என் வேலை முடிந்ததும்தான் பார்ப்பேன் என்றவன், எப்படி தினமும் ஒரு கவிதை எனக்கு அனுப்பினான்? ஆக, முதலில் பார்க்க முடியாவிட்டாலும், நாராயணனாக அறிமுகமாகி என்னைக் காப்பாற்றி, அதன்பின் சி.என்னாக என்னைக் கவர முயற்சித்திருக்கிறாங்க. கடைசியில்தான் கார்த்திக்கின் அறிமுகம் எனக்கு. கார்த்திக்காகவே என்னை வசீகரித்திருக்கிறாங்க. நான் திருமணத்திற்கு கேட்கவில்லை என்றாலும் என்னைத்தேடி வந்திருப்பாங்களோ?’

தன் நினைப்பு நிஜமா? பொய்யா? என மீண்டும் குழம்ப, ‘சே... எதுவானாலும் அவங்களே ஆரம்பிக்கட்டும். இதுல எனக்கு பர்ஸ்ட் நைட் மிரட்டல் வேற.’ ‘அப்பா பிள்ளைகள்லாம் வெட்டி ஜம்பம்தான் அவந்தி. செயல்ல ஒண்ணுமிருக்காது’ என்ற மாமியாரின் வார்த்தைகள் நினைவுவர, “அதென்னவோ உண்மைதான்” என்று சிரித்தபடி உறங்கிப்போனாள்.

மறுநாள் காலை கண்விழித்தவள் எழுந்து குளியலறை செல்லப்போக அவளருகே இருந்த வாழ்த்து அட்டையுடன் கூடிய ரோஜாப்பூ ஒன்று கண்ணில்பட எடுத்துத் திறந்து பார்த்தாள்.

“ஹாய் டபுள் எ! ஓ...சாரி இப்ப ‘என்.எ’ அதாவது என்னுடைய ‘எ’ இல்ல. குட்மார்னிங்டா அழகி. திருமணத்திற்கு பின் உனக்கான கவிதை. அப்ப முதல்ல மேரேஜ் பண்ணினப்ப அனுப்பினது எந்த கணக்குலன்னு கேட்குறியா? அது திருட்டுப்பய கார்த்திக் கணக்கு” என்றதும் அவந்திக்கு சற்று கோபம் ஏற்பட, “என்னடா கோவம் வருதா? தொடர்ந்து படிமா” என அவளின் மனதைப் படிக்க, சின்ன சிரிப்பு வந்தது அவந்திகாவுக்கு.

“இது உன் சி.என்னோட ஸ்பெஷல்.”

‘அதிரடியான என் வாழ்வில்

அழகா(கிய)ய் நுழைந்தவளே!

ஓடிக்கொண்டேயிருந்த எனை

உன் வார்த்தையெனும்

ஆயுதத்தால் ஓரிடத்தில்

தேங்க வைத்தாயடி!

உன் உள்ளமதில் –

எனக்கொரு இடம் கேட்க

நான் எண்ண

கேட்குமுன்னே

என்றுள் சரண் புகுந்து,

எனை அடியோடு சாய்த்தவளே!

கவிதையை ரசித்தவள், “ஆமா. புகுந்து இவங்களை அடியோடு சாய்க்கிறாங்க. ஆளைப்பாரு லூசன். கவிதையா எழுதினா நாங்க மயங்கிருவோமா என்ன?” உறக்கத்தில் இருந்தவனை முறைத்து இல்லை ரசித்து சிரித்தபடி குளியலறை சென்றாள்.

கீழே இறங்கி வந்தவளுக்கு நித்யா காஃபி கொடுக்க, நன்றி சொல்லி வாங்கி நித்யாவுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்ததில், முக்கிய இடம் பிடித்தது கார்த்திக் மட்டுமே.

“அண்ணி! நான் இங்க இவ்வளவு ஃப்ரீயா எந்த தொல்லையும் இல்லாமல் இருக்கிறேன்னா அண்ணன்தான் அண்ணி காரணம்” என்றதும் அவந்திகா கேள்வியாய் பார்த்தாள்.

“நாலு வருஷத்துக்கு முன்னாடி காதல்ன்ற பேர்ல, ஒரு அயோக்கியனை நம்பி நாமக்கல்ல இருந்து சென்னை வந்துட்டேன். வந்த பிறகுதான் தெரிஞ்சது அவன் தப்பானவன்னு. அவன்கிட்ட இருந்து தப்பிக்கணும்னு நினைக்கையில், அண்ணா போதை கேஸ்ல அவனை அரஸ்ட் செய்ய, அவனோட சேர்த்து நானும் மாட்டிக்கிட்டேன். விசாரணையில நான் நடந்ததைச் சொன்னேன். எங்க வீட்டுக்கு தகவல் சொல்ல எனக்கு அப்படி ஒரு பொண்ணே இல்லைன்னு தலை முழுகிட்டோம்னு சொல்லிட்டாங்க. வேற வழியில்லாம, அண்ணா அம்மாகிட்ட என்னை ஒப்படைச்சிட்டாங்க. இந்த நாலு வருஷத்துல இந்த வீட்டுல நானும் ஒருத்தி. அப்படியே படிக்கவும் செய்றேன்” என நன்றி மறவாது பேசினாள்.

“ஊருவிட்டு வரும்போது உங்க வயசென்ன?”

“பதினேழு அண்ணி. இப்ப இருபத்தோரு வயசு” சொல்லும்போதே ஸ்ருதி குறைந்தது.

“மை காட்! அவ்வளவு சின்ன வயசுலயேவா?” என்றதும் நித்யா தலைகவிழ்ந்தாள்.

“என்ன அவந்தி நித்யாவோட ப்ளாஷ்பேக் கேட்டு முடிச்சாச்சா? என்ன தலை சுத்துதா?”

“அதெல்லாம் இல்லத்தை படிக்கும்போது, ஆர்டிகிள் விஷயமா போகும்போது ரொம்ப சின்ன பொண்ணுங்க காதல்ன்ற பெயர்ல சுத்துறதைப் பார்த்திருக்கேன். அதோட கம்பேர் பண்ணினா, இதெல்லாம் ஒண்ணுமேயில்ல. கடைசி நேரத்துல உஷாராகி எந்தவித சேதாரமும் இல்லாம வந்திருக்காங்களே அதுவே போதும்.”

“அதென்னவோ உண்மைதான்மா” என்றவர், “அவந்தி நாளைக்கு உங்களுக்கு ரிசப்ஷன் ரெடி பண்ணியிருக்கோம். உனக்கு ஆட்சேபணை எதுவுமில்லையே?”

மாமியாரின் குரலில், நான் சம்மதிப்பேனோ? இல்லையோ? என்ற சிறு பதற்றம் இருப்பதை அறிந்தவள், “நாளைக்கேவா எப்படி முடியும்?” என கேட்டாள்.

“அப்ப உனக்கு ஓகேவா” என்று மனம் சற்று அமைதியாகி, “அதெல்லாம் ஏற்கனவே ரெடி பண்ணியாச்சி. எல்லாரையும் அழைக்காம முக்கியமான கொஞ்ச பேருக்கு மட்டும்தான். உன் சைடுல சுந்தரேசன் சார் எல்லாத்தையும் செஞ்சிட்டாங்க.”

“மாமாவா?” என ஆச்சர்யப்பட,

“ஆமாடா” என்றவர், “நித்யா என்னோட ரூம்ல ஒரு ட்ரஸ்பேக் இருக்கும். எடுத்துட்டு வா” எனவும்,

“இதோம்மா” என்று ஒரே நிமிடத்தில் திரும்பியவள் கையிலுள்ள பையை வாங்கி ஆடையைக் காண்பித்தார் புவனேஸ்வரி.

“வாவ்! அத்தை சேலை சூப்பராயிருக்கு!” என்று ஈஸ்வரியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.“

“இதை ஏன் எனக்குக் கொடுக்கிற? எடுத்தவங்களுக்குக் கொடுத்தா, நானும் சந்தோஷப்படுவேன். அவங்களும் சந்தோஷப்படுவாங்க” என்றார்.

“புரியலத்தை?” என கேள்வியாய் வினவியவளிடம்,

“புரியலன்னா விடு. உனக்கு சேலை பிடிச்சிருக்குதான?”

“ஆமா பிடிச்சிருக்கு.”

“அதெப்படி அண்ணி பிடிக்காமல் போகும். எங்கண்ணாவோட செலக்ஷனாச்சே” என்ற நித்யாவின் குரலில்.,

“என்னது அவங்க செலக்ட் பண்ணினாங்களா?” என்றவள் கண்களில் மாடியிலிருந்து இறங்கி வரும் கணவன் பட, “இந்த சேலை பிடிக்கலை நித்யா” என்றாள் அவந்திகா பட்டென்று.

புவனேஸ்வரி மருமகளின் பார்வை, மகனிடம் போய் வந்ததைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன், “இப்பதான் பிடிச்சிருக்கு சொன்ன?” என எதிர்கேள்வி கேட்டார்.

“அ...அது அப்ப பிடிச்சது. இப்ப பிடிக்கல” என்றாள் அலட்சியமாக.

முகம் இறுகியபடி கீழே வந்த மகனை கவனித்த ஈஸ்வரி, “ஹ்ம்... நடத்து நடத்து” என மருமகளிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

“நித்யா காஃபி” என்று மனைவியின் அருகில் உரசியபடி வந்தமர்ந்தான் அவளின் காத(வ)ல் கணவன்.

நித்யா உள்ளே செல்வதை உறுதி செய்து, “ஏன் இப்படி உரசிட்டு உட்கார்றீங்க? தள்ளிப்போங்க” என கணவனின் காதைக் கடிக்க,

“ஹான்! நீ சொன்னா சரிதான்” என்று இன்னும் உரசினான்.

“ப்ச்... தள்ளிப்போகச் சொன்னதா நியாபகம்.”

“அதான்டா தள்ளி வந்தேன்” என்று நகர்ந்து நகர்ந்து ஷோஃபாவின் ஓரம் வந்து, ஒருவர் இருக்கையில் இருவர் அமர்ந்திருக்க,

தலையில் அடித்தபடி “உங்களைத் திருத்தவே முடியாது” என்று எழப்போனவளை கைபிடித்து இழுத்து தன் மடியில் அமர்த்தி, “ஏன்டி அழகி நம்ம பர்ஸ்ட் நைட் என்னைக்கு வச்சிக்கலாம்னு சொல்லவேயில்ல? நானும் மூணு வருஷமா வெய்ட் பண்ணிட்டிருக்கேன் இன்னும் வெய்ட் பண்ணவைக்கப் போறியா? உன் கார்த்திக் பாவமில்லையா?” என காதோரம் கிசுகிசுக்க,

கணவனின் கிசுகிசு குரலில், தன் எதிர்ப்புகள் செயலிழந்து போக பேச மறந்து பார்த்திருந்தவள் பின் சுதாரித்து, “எ...என்ன மூணுவருஷம்?”

“இது தெரியாதா? மூணுவருஷத்துக்கு முன்னாடியில இருந்து கல்யாண பேச்சை ஆரம்பிச்சேன். அது அப்படியே கிணத்துல போட்ட கல்லுமாதிரி கிடந்தது. சரி நமக்கு பிடிச்ச பொண்ணை கட்டித்தருவாங்கன்னு பார்த்தேன் கண்டுக்கவேயில்லடா. அட.. நம்மளை பிடிச்சிருக்குன்னு சொன்ன பொண்ணையாவது கல்யாணம் பண்ணிக்கலாம்னா, இவ்வளவு தடங்கல்” என்று சோகமாக சொல்லி முடிக்க, விருட்டென்று அவனைவிட்டு விலகியவள் கணவனை ஒரு பார்வை பார்த்து உள்ளே சென்றாள்.

‘மனைவியின் விலகல் எதனால், ஏன் அந்த பார்வை பார்த்தாள்?’ என்பது புரியாமலேயே பார்த்திருந்தான், தனக்குப் பிடித்த பெண் அவள்தான் என சொல்லாமல் போனதை மறந்து.

காஃபி வந்ததும் அருந்திவிட்டு உள்ளே வர, கைபேசியை எடுத்து பேசுவதுபோல் ஓரம் கட்டியிருந்தாள் அவனின் அழகி. ‘ஷப்பா! காரணமேயில்லாமல் என்ன கோபமோ போ. இப்ப பேசுறதுக்கு டைம் இல்லை வந்து பார்த்துக்கலாம்’ என்று அவளருகில் வந்து கையிலுள்ள போனை பிடுங்கி ஓரம்வைத்து, “ரொம்ப கஷ்டப்படலாம் வேண்டாம் அவந்தி. நான் கிளம்பறேன்” என்று நகர்ந்தவன்,

‘சே... கண்டுபிடிச்சிட்டாங்களே’ என அவந்தி எண்ணிக் கொண்டிருக்கையில், திரும்பி அவள் எதிரில் வந்து, மனைவியின் அதிர்வை ரசித்து, மென்மையாக கன்னத்தில் முத்தமிட்டு, “உன்னோட முதல் முத்தத்திற்காக வெய்ட்டிங்டா அழகி!” என்று நிற்காமல் ஓடியேவிட்டான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
கன்னத்திலிட்ட கணவனின் இதழ் ஸ்பரிசத்தை ரசிக்க முடியாமல், ‘இந்த முத்தத்திற்கு என்ன அர்த்தம்?’ என சிந்தனைகள் சிதறி தறிகெட்டோடியது அர்த்தம் தேடி.

‘இவங்க மூணுவருஷத்துக்கு முன்னாடி லவ் பண்ணினது யாரை? ஏன் வீட்ல அவளை கல்யாணம் பண்ணிவைக்கல? லவ் பண்ணின பெண்ணை விட்டுட்டு, நான் கேட்டதும் ஏன் சம்மதிச்சாங்க? யார் அந்த பொண்ணு? ரொம்ப லவ்வோ!’ பொறாமை என்றால் என்னவென்றே தெரியாதவளுக்கு உள்ளும், பொறாமையுணர்வு எட்டிப் பார்த்தது. அந்தப்பெண் தான்தான் என அறியாமலேயே, அதை யாரிடமும் கேட்கவும் மனமில்லாமலேயே, தனக்குள் பொறாமையில் வெந்து நொந்து கொண்டிருந்தாள் அவந்திகா.

அவந்திக்கு ஞாயிறு காலை சுறுசுறுப்புடனும் கணவனின் காதல் கவிதையுடனும் விடிந்தது.

என்(னை)எ தந்து

உன்னையே கேட்கிறேன்!

சத்தமில்லாதொரு

முத்தமிட ஆசை.

சம்மதம் சொல்வாயா

மச்சக் கன்னியே!

எப்பொழுது எழுந்தான்? எப்பொழுது எழுதினான்? என்றே தெரியவில்லை. “ச்சோ! இதெல்லாமா கவிதை. இவங்க தொல்லை தாங்க முடியலையே!” என தலையிலடித்து குளியலறை சென்று குளியல் வேலைகள் முடித்து வர, அதுவரை கார்த்திக் எழவில்லை என்றதும், ‘சார் இன்னைக்கு லீவ் போல’ என நினைக்கையில், தன்னுள் ஒரு குறும்பு தோன்ற, ‘ம்... இந்த சி.என்ன எப்படி லூசனாக்கலாம்?’ என அங்குமிங்கும் நடந்து மூளையைப் போட்டுக் கசக்கி, ‘ஹையா! ஐடியா கிடைச்சிருச்சி’ மனதில் குதூகலித்துத் தன்னுடைய கண்மை எடுத்து, அவளுக்கு பிடித்த அந்த அடர்ந்த மீசையோடு சேர்த்து, கிடா மீசையாக இருபக்கமும் இழுத்து, நெற்றியில், “லூசன் ஒன்லி மீ” என ஆங்கிலத்தில் எழுதி, கண்மையை ஓரம் வைத்து வந்து பார்த்தவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘ஹா..ஹா ஹையோ!’ என விழுந்து விழுந்து சிரித்தாள்.

மனைவியின் சிரிப்பில் கண்விழித்தவன் சோம்பல் முறித்து, “ஹாய், அழகி குட்மார்னிங்” என்றான்.

பதிலுக்கு அவளும் குறும்புச் சிரிப்புடனே காலை வணக்கம் சொல்ல, அவளின் தன்மையான பேச்சிலேயே கார்த்திக் உஷாராக இருந்திருக்க வேண்டும். மனைவியின் மலர்ந்த முகத்தைப் பார்த்தவன் எதையும் பகுத்தறியாமல், அவளின் சந்தோஷத்தைத் தனதாக்கி குளியலறை செல்லப்போக,

‘அச்சோ! அதுக்குள்ளேயா? உள்ள போனா கண்ணாடியில் முகம் பார்த்து எல்லாம் தெரிஞ்சிருமே’ என நினைத்தவள், “உ...உங்களை அத்தை இப்பவே வரச்சொன்னாங்க”

“சரிமா. கொஞ்சம் ப்ரஷாவது பண்ணிக்கிறேனே?”

தன் பதற்றத்தை மறைத்து, “நோ நோ. அத்தை நீங்க எழுந்த செகண்ட் வரச்சொன்னாங்க. வேணும்னா கீழ வாஷ்பேஷின்ல போயி ஃப்ரஷ்ஷாகிக்கோங்க. சாரி ப்ரஷ் பண்ணிக்கோங்க. நான் எடுத்துட்டு வர்றேன்” என்று பாத்ரூம் சென்று எடுத்து வந்தாள்.

‘ஏதோ சரியில்லையே’ என யோசிக்க ஆரம்பித்தவனைத் தொடரவிடாமல், “எல்லாம் சரியாகத்தான் இருக்கு, உங்க மொக்கை கவிதையையே வாசிக்கிறோம். கிளம்புங்க பாஸ்” என்றவளிடம் ஒரு வித்தியாசமான பார்வையை செலுத்தி கீழே இறங்கினான்.

கீழிறங்கி வந்தவனை முதலில் பார்த்த நித்யா, வந்த சிரிப்பையடக்கி தன் அண்ணனிடம் சொல்லவர, அவன் பின்னாடியே வந்த அவந்திகா, “சொன்ன மவளே கொன்னுருவேன்” என சத்தம் வராமல் சொல்லி விரல்நீட்டி மிரட்ட, நித்யாவின் வாய் மூடியது.

பின்னர் ஈஸ்வரி வர, மகனைப் பார்த்து சத்தமாகச் சிரித்தபடி, “என்னங்க இங்க வந்து இந்த சி.என்ன பாருங்களேன். ஹையோ! என்னால முடியலடா சாமி” என்று வாய்விட்டு சிரித்து, “டேய் சந்தோஷ்!” என்று சின்ன மகனையும் அழைத்தார்.

குழம்பிப் போனான் கார்த்திக். “புவன்ஸ் என்ன ப்ராப்ளம் உங்களுக்கு? எதுக்கு என்னைப் பார்த்து இப்படிச் சிரிக்கிறீங்க? சொல்லிட்டுச் சிரிங்க?”

அதேநேரம் சந்தோஷும் அவ்விடத்தில் வந்து நிற்க, அண்ணனுக்கு கையால் திருஷ்டி சுத்தி, “அழகுண்ணா நீ!” என்று வயிற்றைப் பிடித்து சிரித்தான். அப்பொழுதே மற்றவர்களுக்கு தெரிந்தது காரணம் யாரென்று. அனைவரும் அவந்திகாவைப் பார்க்க, அவர்களுக்கு ஒரு அசட்டுச் சிரிப்பையே வெளியிட்டாள்.

“டேய்! என்னைப் பார்த்தா லூசுமாதிரி தெரியுதா? காரணம் சொல்லாம சிரிக்கிறீங்க?” என கடுப்புடன் சொல்ல,

“ஹையோ! ஹையோ! அதான் நெத்தியிலேயே எழுதி ஒட்டியிருக்கே.”

‘ஸ்ஸ்ஸ்..’ என்று சத்தம் எழுப்பி, சந்தோஷிடம் சொல்ல வேண்டாமென்று அவந்திகா சைகை காண்பிக்க, அவனோ அதைக் கவனியாமல், வடிவேலு பாணியில் கலாய்த்து, அங்கிருந்த வாஷ்பேஷின் கண்ணாடி முன் நிறுத்தினான்.

அதைப் பார்த்ததும் “மை காட்” என அழிக்கப்போக, அந்த மை முகமெங்கும் பரவியது, அனைவரின் சிரிப்பையும் தாண்டி மனைவியின் இந்த செய்கை, உள்ளுர சிரிப்பையும், வெளியே கடுப்பையும் கிளப்ப, கோவமாக அவளருகில் வந்தவன், “இது உன்னோட வேலைதானா?” என்று அதட்டவும், உதடு கடித்து தலைகவிழ்ந்தாள்.

“உன்னை! வா” என கைபிடித்து மேலே தங்களறைக்கு அழைத்துச் சென்றவனிடம்,

“டேய்! புள்ள பாவம்” என்றார் சந்திரன்.

“ஆமா. ரொம்பத்தான் பச்சப்புள்ள. ஏன் என்னைப் பார்த்தா பாவமா தெரியலையா? இருங்க வந்து பேசிக்கிறேன்” என்று மனைவியை இழுத்துச் சென்று அறைக்குள் தள்ளி கதவு மூடினான்.

“எ..எதுக்கு இப்ப கதவை மூடுறீங்க?” என்றாள் வேகமாக.

“ம்... உன்னை ரேப் பண்ணலாம்னுதான்.”

“ஐயோ! ரேப்பா?” என விழிபிதுங்க பார்த்தவள் பின், “யாராவது ஒ...ஒய்ஃபை ரேப் பண்ணுவாங்களா? சும்மா விளையாடாதீங்க. கதவைத் திறங்க.” உள்ளுக்குள் பயத்தில் உதறலெடுத்த போதும் வெளியே தைரியமாக கதவைத் திறக்கச் சென்றாள்.

“ஏய் நில்லு!” என்ற அதட்டலில் அவந்திகா நிற்க, தன் முகத்தைக் காண்பித்து, “என்னதிது?” என்றான்.

“அது.. சாரி. சும்மா விளையாட்டுக்கு” என்றாள் எச்சிலை தொண்டைக்குள் விழுங்கியபடி.

“ஓ... விளையாட்டு?”

“ம்... விளையாட்டு” என்ற மனைவியின் மருண்ட கண்களை ரசித்தபடி, முகத்தின் கடுமையை மாற்றாமல் அவளருகில் வந்து, “நீ வச்சதை நீயே எடுத்துக்கோ.”

“எப்படி முடியும்? அ..அதெல்லாம் நீங்க குளிக்கும்போது தேய்ச்சிக் கழுவிக்கோங்க.”

“குளிக்கும்போது கழுவ எனக்குத் தெரியாதா. எப்படி முடியும் கேட்டல்ல இப்படித்தான்” என்று அவள் முகம் நோக்கி குனிய, தன்னைவிட்டு விலக நினைத்தவளைத் தன்னுள் அடக்கி, முகம் நிமிர்த்தி கன்னத்தோடு கன்னம் உரசினான். மெல்லிய தாடியின் குறுகுறுப்பு அவளின் உடலை இன்பமாய் அதிரச்செய்த்தது.

நெற்றியோடு நெற்றி வைத்து அவளிட்ட பெயரை அவளுக்கே அளித்து முகமெங்கும் பூசி, கண்மை இல்லா இடங்களுக்கு சின்னச் சின்னதாக முத்தமிட, தன் உணர்வுகளின் உந்துதலில் கண்மூடி கைகளை இறுக்கி நின்றிருந்தவளை ரசனையாக பார்த்து, தன்னுடன் சேர்த்தணைத்து இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான். மனைவியிடமிருந்து மறுப்பில்லை என்றதும், அதில் இன்னும் சற்று அழுத்தம் கூட்ட, உச்சிமுதல் பாதம்வரை பாய்ந்த மின்சாரத்தினால், சட்டென்று கண்திறந்தவளுக்கு, கணவனின் அருகாமை ஏதோ செய்தது.

இது தவறென்று மூளை அறிவுறுத்த உணர்வுகள் அனைத்தையும் தன்னுள் கட்டுப்படுத்தியவள், அவனைப் பிடித்துத்தள்ளி, “எ...என்ன பண்றீங்க?” என்றாள் திணறியபடி வெளியே வராத வார்த்தைகளில்.

“என்ன பண்ணினேன்? எதுவுமே பண்ணல? எதாவது பண்ணலாமா?” இரண்டு கைகளையும் தேய்த்து குறுகுறுவென்று பார்த்தபடி சரசமாய் கேட்க,

கணவனின் பார்வையில் வந்த வெட்கத்தை முகம் திருப்பி மறைத்து, “எதுவும் பண்ணத் தேவையில்லை. எனக்கு வழி விடுங்க நான் போகணும்.”

“ப்ச்... அவந்தி என்னை ஏன் அவாய்ட் பண்ற?”

“நான் ஒண்ணும் அவாய்ட் பண்ணல. நீங்கதான் என்னை அவாய்ட் பண்ணிட்டீங்க. உங்களுக்கு நான் முக்கியமானவளா இருந்திருந்தா, எல்லாத்தையும் சொல்லியிருப்பீங்க தான. யார் முக்கியமோ அவகிட்டேயே போங்க. எனக்கு ஒண்ணுன்னதும் பதறித்துடிச்ச, அந்த பழைய கார்த்திக்தான் வேணும். எதுக்கெடுத்தாலும் கோவப்படுற இந்த நாராயணன் வேண்டாம். ஐ லவ் ஹிம் அந்த கார்த்திக் நீங்க இல்ல” என்றாள் சத்தமாக ஆரம்பித்து விசும்பலோடு.

“ஓ... அப்ப என்னைப் பிடிக்கலன்றியா?”

“ம்...ஆமா” என்றாள் விரைப்பாக.

“அதுக்கு ஏன் அழுற அவந்தி? நீ அழுதா எனக்குப் பிடிக்காது தெரியும்ல. அந்த கார்த்திக் வரணும்னா, எதாவது ஒரு பெரிய கேஸ் கிடைக்கணும்.”

கண்கள் துடைத்து, “பரவாயில்லை நான் வெய்ட் பண்றேன்” என்றாள்.

‘இவளை என்ன செய்யலாம்’ என்பதுபோல் கார்த்திக் பார்த்தான்.

அவளோ, ‘சரிதான் போ!’ என பதில் பார்வை பார்த்தாள்,

நேரமாவதை உணர்ந்து குளியலறை நுழைந்து, “மூணுவருஷமா உன்னையே சுத்துற என் மனசு வேண்டாம். உனக்கு கார்த்திக் வேணுமா? இருடி அதுக்கொரு நேரம் குறிச்சி, அவனை வரச்சொல்லி, அவனை நீ எப்படி சமாளிக்கிற என்பதையும் பார்க்கிறேன்.” குளித்து வெளியே வந்தவன் மனைவியைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தான்.

கணவனின் சிரிப்புக்கு அர்த்தம் புரியாமல், முறைத்து இடித்துத் தள்ளியபடி கண்மையை சுத்தப்படுத்திச் செல்ல, அவளின் கைபிடித்து மனைவியின் பிகுவையும் மீறி பெட்டில் அமரவைத்து, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் மென்மையான குரலில்.

அந்த மென்மையில் மனம் இளக, என்னவென்ற ஆவல் இருப்பினும் வேண்டா வெறுப்பாக முகம் வைத்து “சொல்லுங்க” என்றாள்.

“நீ எப்ப வேலையில் ஜாய்ண்ட் பண்ணப்போற அவந்தி? உங்கப்பா ஆசையை நிறைவேற்றத்தான ஜர்னலிஸம் படிச்ச? கிட்டத்தட்ட ஒன் மன்த்தா வேலைக்குப் போகல. புரியுது சூழ்நிலைதான் போக முடியலன்னு. இருந்தாலும், ஏற்கனவே தன்னோட மனைவி, மகனால மனக்கஷ்டத்துல இருக்கிற உங்க மாமாவால, தனியா எப்படிப் பார்த்துக்க முடியும் சொல்லு?”

கணவனின் வார்த்தையில் இருந்த உண்மையை உணர்ந்ததால், “நான் நாளையிலிருந்து போகட்டுமா?” சங்கடமான குரலில் கேட்டாள்.

“ம்... தாராளமா போயிட்டுவா. உடம்புக்கு எதாவது பண்ணினா வீட்டுக்கு வந்திரணும். கொஞ்ச நாளைக்கு ம்கூம்... இனிமேல் எப்பவுமே கார்ல போ. ஏன்னா என்னோட வேலை அப்படி. என்னோட எதிரிங்க என் பலவீனம் எதுன்னு தெரிஞ்சி, அடிக்கக்கூடாதில்லையா?”

‘ஓ...’ தன்னைக் கடத்தி அவனை பழிவாங்குவாங்க என்பதை உணரும்போதே ‘என் பலவீனம் நீ’ என்ற அர்த்தத்தில் பேசியது பிடிக்க, தன்னை மறந்து “தேங்க்ஸ்” என்றாள்.

அவள் தலையில் கைவைத்து “எனக்கு தேங்க்ஸா? போ போய் முகம் கழுவிட்டு வா. சாயங்காலம் பங்ஷனுக்கு தேவையானது வாங்கணும்னா, சந்தோஷை கூப்பிட்டுக்கோ” என்று அக்கறையாய் அவளை அனுப்பினான். நாராயணனை அறியாமல் வெளி வந்த கார்த்திக்கையே பார்த்தபடி சென்றவளை, “போமா” என்று கீழே வந்தவன், மனம் ஏனோ, ‘நீங்கதான் என்னை அவாய்ட் பண்ணிட்டீங்க’ என்று சொன்னதையே நினைத்தது. ‘நான் என்ன அவாய்ட் பண்ணினேன்? எதை வைத்து அப்படி பேசினாள்?’ என்பது புரியவில்லை அந்த சிஐடிக்கு.

“என்னண்ணா அண்ணிகிட்ட செமத்தியா வாங்கினியா? எதோ சித்தம் கலங்கினமாதிரி வர்ற?” கிண்டல் செய்தவன் அண்ணனின் குழப்ப முகம் பார்த்து “என்னாச்சிண்ணா?” என்றான் தவிப்புடன்.

“ஒண்ணுமில்லடா.”

“எதாவது ப்ராப்ளமா?” என்றதும் முறைத்து, “அதான் ஒண்ணுமில்லன்னு சொல்றேன்ல. எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கணுமா?” என்றதும் முகம்வாட திரும்பிய சந்தோஷைப் பார்த்து தன்மேலேயே கோபம் வர, “சாரிடா. அது ஏதோ குழப்பம்” என்றான் வருத்தமாக.

அதற்குள் சகஜ நிலைக்கு வந்திருந்த சந்தோஷ், “குடும்பஸ்தன்னா குழப்பம் வரத்தான் செய்யும். அதுக்குத்தான என்னை மாதிரி பிரம்மச்சார்யா இருக்கணும்ன்றது.”

“பார்க்கலாம்டா. உன்னுடைய பிரம்மச்சர்யம் எவ்வளவு தூரம் போகுதுன்னு” என்று கிண்டலடித்துப் புன்னகையுடன் தம்பியைத் தாண்டிச் சென்றான்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top