• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
20


“ஹரி என்னடா பிடிவாதம் இது. இது ஈகோ பார்க்கிற நேரம் இல்லை. அந்த பொண்ணுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. அப்புறம் என்ன தயக்கம்? ராசிகிட்ட ஐ லவ் யூ சொல்லிரு. அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிரலாம்.”

“நோ என்னால ராசிகிட்ட ஐ லவ் யூன்னு சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டேன். என் உயிரே போனாலும் மாட்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் சத்தமாகவே சொன்னான்.

“ஹரி என்னடா நீ?”

“விடுடா. என்னைக்கு இருந்தாலும் அவள்தான் என்னோட ஒய்ஃப். இப்ப சொல்லலன்னா என்ன, அவளை சொல்ல வச்சி, அவ சொன்ன அடுத்த நிமிஷமே நான் சொல்லிரப் போறேன்” என்று சிரித்தான்.

ராசிக்கோ, அவனின் வார்த்தைகள் ஈட்டியாய் பாய்ந்து இதயம் நுழைய துடித்துப் போனவள் கண்களிலிருந்து கண்ணீர் ப்ரவாகமெடுத்தது. என் உயிரே போனாலும் மாட்டேனென்ற பிறகு அவர்கள் பேசிய எதுவும் காதில் விழவில்லை. மனம் மரத்து போனாற்போல் ஆனது ராசிக்கு.

‘என்னைப் பிடிக்கலையா ஏன்? இத்தனை நாள் காட்டிய அன்பு அக்கறை, அந்த கண்கள்ல பார்த்த காதல் எல்லாமே பொய்யா? பொய்யே தானா! உயிரே போனாலும் காதலைச் சொல்ல மாட்டேன்னு சொன்னது சரத் தானா? ஏன் என்னைப் பிடிக்கலை? என் சின்ன வயசுல நடந்த அந்த பொம்மைக் கல்யாணத்திற்காகவா? இல்ல இருக்காது சரத் அந்தளவு தரம் தாழ்ந்த ஆள் கிடையாது’ என தன்னைத்தானே சமாதானப்படுத்தினாலும் அவனின் வார்த்தைகள் தந்த வலி நெஞ்சைப் பிசைந்து, மனம் உடைய உடல் தளர்ந்தது.

இந்த விழாவுக்காகவே தன்னை பார்த்துப் பார்த்து அலங்கரித்திருந்தாலும், அதற்கு அதிகம் மெனக்கெடவில்லை. சந்தோஷத்தில் முகப்பொலிவுடன் வர, அவள் காரில் வந்து இறங்கியதிலிருந்து, அந்த அதிகாலை நேரத்திலும் சரத்தின் பார்வை அவளைவிட்டு எங்குமே நகரவில்லை. அதை ராசியும் உணர்ந்தே இருந்தாள். அப்படிப் பார்த்தவன் அதன்பின்னும் தன்னையே சுற்றிச்சுற்றி வந்தவன் ஏன் இப்படி பேசுகிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை. அதை காதல் என்று தான் நினைக்க, அதை பிரதிபலிக்க வேண்டியவனோ காதல் என்ற வார்த்தையையே சொல்ல பிடிக்கவில்லை என்கிறான். யாரும் காணும் முன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தவள் சமையலறை சென்று அங்கிருந்த குழாயில் தண்ணீர் பிடித்து முகத்திலடித்தாள்.

அங்கு வந்த சாந்தி, “என்னமா தூசி எதாவது விழுந்திருச்சா? கண்ணு கலங்கியிருக்கு” என கேட்டார்.

“ம்... ஆமாம்மா தூசிதான். கொஞ்சம் வேகமாகவே விழுந்திருச்சி. அதான் முகத்தை கழுவிட்டிருக்கேன். அப்படியிருந்தும் கண்ணுல இருந்து தண்ணியா ஊத்துது” என்றாள் அழுகையைக் கட்டுப்படுத்தி குரலை சாதாரணமாக வைத்தபடி.

“சரிமா. நீ ரூம்ல போயி ஓய்வெடு சரியாகிரும்.”

“அம்மா இங்க வேண்டாம். நான் வீட்டுக்குப் போறேன். இன்னைக்குத்தான் வீடு பால்காய்ச்சிருக்கு இங்க கண்ணீர் அது தூசியினாலே என்றாலும் வேண்டாம்” என்றவள் ‘சரத் எப்பவும் சந்தோஷமா இருக்கணும் என்னோட கண்ணீர் அவங்களைக் காயப்படுத்தக்கூடாது’ என நினைத்து, தன் முகத்தை கைக்குட்டையால் அழுந்தத் துடைத்து, “அம்மாஆச்சிக்கு ஆட்டோ பிடிச்சி அனுப்பிடுறீங்களா?” என்றாள் சாந்தியிடம்.

“என்ன கேள்வி ப்ரியா இது? நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு. காரை ஓட்டிருவதான?”

“ஓட்டிருவேன்ம்மா” என்று வெளியே வர... அதே சமயம் ரோகிணியும், கிரியும் எதிரில் வந்து, “பங்ஷன் முடிஞ்சிருச்சா? கொஞ்சம் லேட்டாகிருச்சி” என்றனர்.

“இப்பத்தான் முடிஞ்சிது. ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை” என்ற ராசியிடம்... “ஆமா எங்க கிளம்பிட்டீங்க? ஏன் ஒருமாதிரியா கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?” கிருபா கேட்க,

“என்ன ராசிமா எதாவது பிரச்சனையா?” என்று ரோகிணியும் கேட்டார்.

“எதுவுமில்லைம்மா. தலைவலிச்சது வீடு குடிவர்ற அன்னைக்கு இங்க எதுக்குன்னு தான் கிளம்பிட்டேன். ஆமா நீங்க ஏன் லேட்?”

“அ..அது” என தடுமாறி, “காலையில எழுந்துக்க டைமாகிருச்சி.” அவர்களின் தடுமாற்றம் எதனால் என்பதை அறியும் மனநிலையில் ராசியும் இல்லையாதலால், “வேற ஒண்ணும் இல்லையேம்மா. எதோ ஒரு வித்தியாசம் உங்ககிட்ட. நீங்க நார்மலா இருக்கிற மாதிரி தெரியல?”

“இல்லடா. அப்படி எதாவதுனா உன்கிட்ட சொல்லமாட்டோமா. சரி தம்பியை வேணும்னா வந்து விடச்சொல்லவா?”

“இல்லம்மா நானே ட்ரைவ் பண்ணிருவேன்” என்றதும் அவளை அனுப்பிவைத்து உள்ளே வந்தவர்களை வரவேற்ற சரத் கிரியிடம், “வெளிய ராசி இருக்காளா? உள்ள ஆளையே காணோம்” என்றான்.

“வீட்டுக்குக் கிளம்பிட்டா மாம்ஸ். உங்ககிட்ட சொல்லலையா?” என்றான் கேள்வியாய்.

‘வீட்டுக்கா? ஏன் என்கிட்ட சொல்லலை?’ என நினைத்தாலும், “எதுக்குடா இப்ப வீட்டுக்கு?” என்றான்.

“தலைவலியாம் மாம்ஸ்” என்றான்.

“யாருக்குத் தலைவலி?” என்றபடி சாந்தி வர... “ராசிக்கு தான் அக்கா” என்ற சரத்தின் மனம் ‘ஏன் சொல்லவில்லை’ என்பதிலேயே நின்றது.

“கண்ணுல தூசி விழுந்துட்டதால முகத்தைக் கழுவிட்டிருக்கிறதா சொன்னா. தலைவலின்னு சொல்லலையே. சொல்லியிருந்தா தனியா அனுப்பியிருக்க மாட்டேனே.”

“நான் போய் பார்த்துட்டு வர்றேன்கா” என்றவனை தடுத்து, “வீட்ல ஆள் இருக்காங்க. சாயங்காலம் அவங்க ஆச்சியை நீ விடும்போது பார்த்து விசாரிச்சிட்டு வா” என்றார்.

மாலை வீட்டிற்கு சென்ற பொழுது ராசி தூங்கிக் கொண்டிருப்பதாக லோஜி பார்த்து வந்து சொல்ல சரத் கிளம்பினான்.

அவனுக்குத் தெரியாதது அவனின் கார் சத்தம் கேட்டு நெற்றியில் தைலம் தேய்த்து உறங்குவது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள் ராசி. சரத் சென்றதும் அழுதழுது கண்கள் சிவந்திருந்த பேத்தியைப் பார்த்த லோஜி “என்னடா ரொம்ப தலைவலிக்குதா” என்று அக்கறையாகக் கேட்டார்.

“ஆமா ஆச்சி ரொம்ப வலிக்குது. என்னால தாங்க முடியாத வலி” என்றாள் பரிதாபமாக.

“இருமா மாத்திரை எடுத்துட்டு வர்றேன். மதியம் சாப்பிட்டிருக்க மாட்டதான? எதாவது சாப்பிடுறியா?”

“இல்ல அம்மாஆச்சி. பூஸ்ட் போதும். வேற எதுவும் வேண்டாம்.”

சில நிமிடங்களில் திரும்பிய லோஜி பூஸ்டுடன் தலைவலி மாத்திரையும் கொடுத்து படுக்க வைத்து அருகில் அமர...

“அம்மாஆச்சி எனக்கு அழுகை அழுகையா வருது. நான் அழுதா மாமாவுக்கு பிடிக்காது தான. என் சார்புல மாமாகிட்ட சாரி சொல்லிடறீங்களா?” என்று மடிமீது தலைவைத்தவளை ஆறுதலாகத் தட்டிக்கொடுக்க, சற்று நேரத்தில் கண்ணயர்ந்தாள்.

சரத் தன்னுடைய வேலையில் பிஸியாக ராசியைக் காண முடியவில்லை. போனிலாவது பேசலாம் என்றால் ரிங் சென்றதே தவிர எடுக்கப்படவில்லை. அதை ஒரு சாதாரண நிகழ்வாகவே எடுத்துக் கொண்டானே தவிர, அவள் தன்னைத் தவிர்க்கிறாள்” என்று எண்ணவில்லை அவன்.

ராசிக்கோ அதன் பின்னர் அவன் தன்னை சந்திக்க வராதது ‘உண்மையிலேயே தன்னைப் பிடிக்கவில்லை போல. போன் கூட ஒரு ப்ரண்ட்லி டாக்கிற்காகத் தான்’ என்று கணக்கு போட்டாள் அந்த கணக்காளினி. அதன்பின் சரியாக சாப்பிடாமல் தூங்காமல் உழன்றவளிடம் மீனலோஜினி என்ன கேட்டும் பதில் வரவில்லை. தன்னுடைய குறும்புத்தனங்கள் அனைத்தையும் மறந்து கவலை தோய்ந்த முகத்துடன் வலம் வந்தவளை தேற்ற ப்ரீகுட்டியை அவளிடம் விட, சற்று நேரம் விளையாடுபவள் சிறு புன்னகையையே வெளியிட்டாலும் அதில் உயிர்ப்பில்லை.

ஒருவாரம் பொறுத்தவருக்கு அதற்கு மேல் பொறுமையில்லாமல் அவளிடம் வந்து, “என்ன பிரச்சனை ராசிமா? ஏன் எதையோ இழந்தது மாதிரி இருக்க? உன்னோட சிரிப்பு, கலகலப்பான பேச்சி இல்லாம வீடு வீடாகவே இல்ல. எதுவா இருந்தாலும் சொல்லுமா. உனக்கும் சரத்திற்கும் நடுவுல என்ன பிரச்சனை?”

அதுவரை தலை குனிந்தபடி அனைத்தையும் கேட்டிருந்தவள் கடைசி வார்த்தையில் தலை நிமிர்ந்தாள்.

“அப்ப உங்களுக்கள்ள தான் பிரச்சனை. இல்லையா?”

கண்கள் கலங்கி கண்ணீர் மறைக்க வேகமாக எழுந்து லோஜியினருகில் வந்து கட்டியணைத்து தன் வேதனைகள் தீர அழுதவளை தட்டிக்கொடுத்து, “என்ன பிரச்சனைமா?” என்றார் ஆதுரமாக.

“அம்..அம்மாஆச்சி சரத்துக்கு என்னைப் பிடிக்கலை.” சொல்லி முடித்து தேம்பித் தேம்பி அழுதாள்.

“என்னடா உளர்ற? நான்தான் அன்னைக்கே அவன் பேசினதைச் சொன்னேன்ல.”

“நீங்க சொன்னீங்க. எனக்குமே அப்படித்தான்னு மனசு சொல்லிச்சி. ஆனா, நிஜம் வேற ஆச்சி. அதைக் கேட்டதிலிருந்து என்னால தாங்க முடியல. அப்படியே செத்திடலாம் போல வருது ஆச்சி” என்று கதறினாள்.

“பாப்பா!” என அதிர்ந்தவர் அவள் முகம் நிமிர்த்தி, “என்ன பேசுறன்னு தெரிஞ்சிதான் பேசுறியா? அடிச்சி பின்னிடுவேன் ராஸ்கல். உன்னை சாகக் கொடுக்கவா நான் பார்த்துப் பார்த்து வளர்த்திருக்கேன். இனி இப்படி ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வரக்கூடாது சொல்லிட்டேன். சரி என்ன நடந்ததுன்னு சொல்லு? முதல்ல அழுகையை நிறுத்து ராசாத்தி” என்றும் அவளின் அழுகை ஓயாமலிருக்க, “நிறுத்தப்போறியா, இல்லையா?” என குரலை உயர்த்தி அதட்டியவர் அவள் கண்ணீர் துடைத்து, “இப்பச் சொல்லு என்ன நடந்தது?”

“பால் காய்ச்சின அன்னைக்கு மணி அண்ணாவும், சரத்தும் பேசிட்டிருந்தாங்க. நீ ராசிகிட்ட ஐ லவ் யூ சொல்லு அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிடலாம்னு சொன்னாங்க. அதுக்கு சரத், ராசிகிட்ட ஐ லவ்யூ சொல்லமாட்டேன். என் உயிரே போனாலும் சொல்லமாட்டேன் சொல்லிட்டாங்க ஆச்சி. நீங்க சொல்லுங்க யாரோ ஒருத்தர் இதை என்கிட்ட அவங்க சொன்னதா சொல்லியிருந்தா நான் நம்பியிருப்பேனா? சரத்தே சொன்னப்ப நான் ரொம்ப நொறுங்கிட்டேன் ஆச்சி. நான் என்ன தப்பு பண்ணினேன் ஆச்சி. ஏன் அவங்களுக்கு என்னைப் பிடிக்கல? விவரம் தெரியாதப்ப நடந்த கல்யாணத்தை காரணமா வைக்கிறாங்களா? அது கல்யாணமே இல்லைன்னு எப்படி சொல்வேன் ஆச்சி?” அனைத்தையும் விடாமல் சொல்லி கதறுபவளை தேற்ற வழியில்லாமல் போனது அந்த வளர்ப்புத் தாய்க்கு.

“ராசாத்தி இங்க பாரு. என்னைப் பாரு சொல்றேன்ல. அப்படில்லாம் இருக்காதுடா. எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத. கொஞ்ச நாள் எல்லாத்தையும் மறந்துட்டு நார்மலாயிரு.”

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா, எந்தப்பக்கம் திரும்பினாலும் அவங்க முகமே தெரியுது. எதை நினைச்சாலும் அவங்க நினைப்புத்தான் வருது. இந்த ஒரு வாரமா அதை ஒதுக்கி எப்படியாவது நார்மலாகணும்னு தான் நினைக்கிறேன். என்னால தடுக்க முடியல அம்மாஆச்சி. நான் என்ன பண்ணட்டும். அவங்களுக்கு என்னைப் பிடிக்கலன்றதை என்னால இன்னும் நம்பமுடியலை அம்மாஆச்சி.”

அழுது கரையும் பேத்தியை ஆறுதலாக அணைத்த லோஜியின் கண்களில் நீர் வர, “என்னால நம்ப முடியலைடா ராசிமா. இதுக்கு எதாவது காரணம் இருக்கும். அன்னைக்கு உன்னை விட வந்தப்ப உன்மேல் அவனுக்கிருந்த உரிமை உணர்வு நல்லாவே தெரிஞ்சதே. நான் வேணும்னா பேசிப்பார்க்கவா?”
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
சட்டென்று கோவத்தில் தலை நிமிர்ந்தவள், “என்னன்னு பேசப்போறீங்க. சொல்லுங்க? என்னன்னு பேசுவீங்க? என் பேத்திக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. அவளைக் கல்யாணம் பண்ணி வாழ்க்கை கொடுன்னு கேட்கப் போறீங்ளா? தேவையில்லை. நீங்க என்னை நல்லவிதமா தான் வளர்த்திருக்கீங்க. என்கிட்ட என்ன குறை இருக்குன்னு எனக்காக போய் பேசுறேன்றீங்க. வேண்டாம் இது என்னோட வாழ்க்கை. யார்கிட்டேயும் கையேந்த தேவையில்லை. நீங்க! நான்! இதான் என் லைஃப். எனக்காகப் பேசுனீங்கன்னு கேள்விப்பட்டா கூட என்னோட முடிவு ரொம்ப தவறாயிருக்கும் ஆச்சி” என்று சீறினாள்.

“அப்புறம் ஏன் அழுற?”

“இனி அழமாட்டேன் போதுமா. நான் ஏன் யாருக்காகவோ கண்ணீர் வடிக்கணும். இத்தோட இந்த விஷயத்தை மறந்திடுறேன். நீங்களும் மறந்திருங்க ஆச்சி” என்று படபடப்புடன் பேசி வேகமாக தன்னறைக்குள் சென்று கதவடைத்தாள்.

‘என்னுடைய பேத்தி வாழ்க்கை அவ்வளவுதானா?’ அழுகையை அடக்க அடக்க நெஞ்சி வலிப்பது போலிருந்தது மீனலோஜினிக்கு. “எப்படி மனசு வந்தது அவனுக்கு?”

‘அவங்களா வந்து ஐ லவ் யூ ராசாத்தின்னு சொல்றதுதான் லோஜி கெத்தா கிக்காயிருக்கும்.’ கண்களில் கனவுடன் சொன்ன பேத்தியின் முகம் வந்து போனது. அவன் கடைசிவரை சொல்லப் போவதில்லை என்ற உண்மை தெரிய, அதுவும் சம்பந்தப்பட்டவன் வாய் மூலமாக கேட்டதில் எவ்வளவு துடித்திருப்பாள். அன்றைய தினம் ‘அழுகை அழுகையா வருது அம்மாஆச்சி. மாமாகிட்ட என் சார்பா சாரி சொல்லிருறீங்களா?’ கண்களில் அடிபட்ட வலியுடன் சொன்ன பேத்தி நினைவு வர, “எப்படி இருந்த பெண்ணை இப்படி கதற விட எப்படி மனசு வந்தது சரத் உனக்கு?” நெஞ்சி வலி அதிகரிக்க ப்ரஷர் மாத்திரை போட்டு படுத்து அரை மணி நேரத்திற்கெல்லாம் இன்னும் வலி அதிகரித்தது. முடிந்த மட்டும் குரலை உயர்த்தி ராசியை அழைக்க கதவு மூடியிருந்ததால் கேட்கவில்லை அவளுக்கு.

தன்னுடைய பிரச்சனைகளிலேயே சுழன்ற ராசி, லோஜிக்கு மாத்திரை கொடுக்காதது நினைவு வர, இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் மாத்திரை போட்டிருக்க மாட்டார் என்று வெளியே வந்தவளுக்கு முனகல் சத்தம் கேட்டு வேகமாக வர, அங்கே வலியில் புரண்டு கொண்டிருந்த லோஜிபட, “அம்மாஆச்சீஈஈ” என்ற அலறலுடன் அருகில் சென்று, “என்ன செய்யுது அம்மாஆச்சி?” என்றாள் அழுகையுடன்.

“நெஞ்சி வலிக்குதுமா?” திணறலுடன் அவர் சொல்ல... “ஒண்ணும் இல்ல அம்மாஆச்சி. ஜஸ்ட் டிஸ்டர்ப் ஆனீங்கதான அதான். சீக்கிரம் சரியாகிரும்” என்று ஆம்புலன்ஸ் போன் செய்தவள், கிரிக்கும் போன் செய்ய, சற்று நேரத்திற்கெல்லாம் அந்த தனியார் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் லோஜினி.

அனைத்து நடைமுறையையும் முடித்து அமர்ந்தவள் அருகில் கிரி அமர, ரோகிணியும் வந்து சேர்ந்தார். ரோகிணியைக் கண்டதும் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து கண்கள் கண்ணீரைப் பொழிய தாயைக் கட்டிக்கொண்டாள்.

“என்னாச்சிமா? நல்லாத்தான இருந்தாங்க? ராசி அழாத, ப்ச்... அழாம சொல்லுமா. சொன்னால்தான தெரியும்.”

“எ..என்னாலதான் இப்படியாச்சி. நான் மட்டும் அவசரப்படாம கொஞ்சம் பொறுமையாயிருந்தா இப்படி ஆகியிருக்காதும்மா.”

“அப்படி என்னதான்மா சொன்ன?”

“இல்ல வேண்டாம் கேட்காதீங்களேன் ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்..

“சரி சரி கேட்கலை” என்றார் ரோகிணி.

சற்று நேரத்திற்கெல்லாம் தகவலறிந்து சரத் வர, ரோகிணி சரத்தின் வருகையை ராசியிடம் சொன்னது தான் தாமதம், வேகமாக எழுந்து “மாமா” என்றழைத்து நான்கு எட்டு எடுத்து வைத்தவள் அப்படியே நின்றாள். ‘இப்ப நீ என்ன செய்யப்போற? உன்னை வேண்டாம்னு சொன்னவனை கட்டிப்பிடிச்சி, அவன் தோள் சாய்ந்து ஆறுதல் தேடிக்கப் போறியா? அவ்வளவு ரோஷம் இல்லாதவளா. இது தான் நீயா அசிங்கமாயில்ல உனக்கு?”

சில வினாடிகளில் அவளின் மனசாட்சி அவளை கேள்விகளால் குத்திக்கிழிக்க கண்களிலிருந்த கண்ணீர் நின்று முகத்தில் ஒரு இறுக்கம் வர மெல்ல அவன்புறம் நடந்தாள்.

தன்னைப் பார்த்ததும் அவள் வேகமாக வந்து பின் தயங்கி நடந்து வருவதைப் பார்த்தவனுக்கு கிட்டத்தட்ட ஒருவாரம் கழித்து சந்திப்பது எத்தனையோ ஆண்டுகள் ஆனாற்போல் தோன்றியது. அவளைக் கண்களுள் நிறைத்து அவள் துயர் துடைக்க எண்ணிநான்.

முன்னால் நடந்து வந்த ராசி அவன் தோள் சாய்வதுபோல் சென்றவள், அவனைத் தாண்டி வந்து கொண்டிருந்த பாபுவிடம் தஞ்சம் புக, சரத் சொல்ல முடியாத ஒருவித ஏமாற்ற உணர்விற்குப் போனான். அவள் கண்களில் கண்ட விலகல் தன்மையை அருகில் வரும் பொழுதுதான் உணரவே செய்தான். அவனையே பார்த்திருந்தவாறு வந்தவள் அவனை விட்டு விலகுகையில் இதயத்தில் ஒரு வலி வந்து சென்றது.

“மாமா.. அம்மாஆச்சி” என பாபுவின் கைபிடித்து அழ...

“என்னடா பாப்பா நீ தைரியாசலின்னு நினைச்சேன். இப்படி அழற. இப்படி அழுறது உன் மாமாவுக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல?” அவளின் ‘ம்’ என்ற தலையாட்டலில், “தெரிஞ்சுமா அழுற?” என்றான் கேள்வியாய்.

“நான் அழல மாமா. பாருங்க, கண்ணீர் அதுவா வருது. ஸ்டாப் பண்ண முடியல” என்று குழந்தையாய் சொல்ல...

அவளின் பேச்சில் ஏதோ மனதில் புதைந்த பழைய நிகழ்வுகள் வினாடிகளேனும் எட்டிப்பார்த்துச் சென்றது. அந்த சூழ்நிலையிலும், அவளின் குழந்தைத்தனமான வார்த்தைகளில் சரத்திற்கு சிரிப்பு வர...

அவனை முறைத்த ராசி “ஏன் சிரிக்கிறீங்க? என்னைப் பார்த்தா கோமாளி மாதிரியா இருக்கு” என்று கடிக்காத குறையாக கேட்டாள்.

சட்டென்று சிரிப்பை நிறுத்தியவன், “ஏன் கோவப்படுற? நீ சொன்னதுல சிரிப்பு வந்தது. சாரி இந்த நிலையில தப்புதான். இனி சிரிக்கல” என்றான். ராசி சொல்லும்போது பாபுவிற்குமே சிரிப்பு வரத்தான் செய்தது. அவன் அதை அடக்கிக் கொண்டான்.

“மாமா லோஜிக்கு ஒண்ணும் ஆகாதுல்ல? எனக்கு பயமாயிருக்கு. நீங்க வந்து பாருங்களேன்” என அவனை இழுத்துச் சென்றவள் பத்து வருடங்களுக்கு முன் பார்த்த ராசியாக பாபுவின் கண்முன் தோன்றினாள். திருச்சி மருத்துவமனையில் லோஜினியின் பின்னால் நின்றிருந்தவளை பார்த்தபொழுது நண்பன் சொன்னது உண்மை என்றே தோன்றியது. ‘குழந்தை! எப்படி மனம் வந்தது அவர்களுக்கு?’ என மனதினில் நினைத்த போதும், “நானும் உனக்கு மாமா தான்மா பெயர் பாபு” என்றான்.

“கிரி மாமா சொன்னாங்க சாகுறதுக்கு முன்னாடி” என்று அழுதாள்.

“பாப்பா! உன் மாமா உன்னை அழக்கூடாது, அழவிடாம பார்த்துக்கோன்னு சொல்லியிருக்கான். நீ என் பேச்சைக் கேட்பதான?” அவளின் சம்மதமான தலையாட்டலைப் பெற்று, “அப்ப அழாத” என்றவன், அதன்பின் அனைத்து காரியங்களையும் திருச்சியிலேயே முடித்து இருவரையும் சென்னை அழைத்து வந்து, பத்திரத்தில் கையெழுத்து வாங்கி முறையாக பதிவு செய்து அந்த வீட்டிலேயே குடியமர்த்தி, அவளின் படிப்பு வீட்டுச் செலவு என அனைத்தையும் கிரியின் இடத்திலிருந்து அவனின் எண்ணப்படி செய்து முடித்தான் பாபு.

அவன் மனைவி சௌந்தர்யாவும் இதுவரை எதற்கும் தடை செய்ததில்லை. ஆதலால், மீனலோஜினி, ராசி என்ற இரு ஜீவன்களும் அவர்களின் நிழல் தந்த பாதுகாப்பில் ராசியின் படிப்பு முடித்து வேலை கிடைக்கும் வரை இருந்தார்கள். அதன் பிறகு ராசி தான் பார்த்துக் கொள்வதாகச் சொன்னதால், கொஞ்சம் பாபு விலகியிருந்தாலும் அவனின் கண்காணிப்பு அவர்களைச் சுற்றியே இருக்கும். இன்று அந்த குழந்தையை திரும்பவும் கண்டவன் கண்கள் கலங்கியது பாபுவிற்கு.

‘லோஜியை இழந்து நிராதரவாகிவிடுவோமோ!’ என்பதை விட, ‘எந்த வகையிலும் லோஜியை இழந்துவிடக்கூடாது’ என்ற எண்ணம்தான் ராசிக்கு. அவளுக்கான ஒரே உறவு மீனலோஜினி அல்லவா! தன் காதல் லோஜியை சாவு வரை கொண்டு சென்றதால் காதல் என்ற வார்த்தையையே வெறுத்தாள். தன் காதலுக்குச் சொந்தக்காரனான சரத்தை அதைவிட அதிகம் வெறுத்தாள். சரத்தோ அவள் பார்வையின் அர்த்தம் புரியாமல் தடுமாறினான்.

அவசர சிகிச்சையில் இருந்து வெளியே வந்த டாக்டரை அனைவரும் மொய்க்க, அவர்களை அமைதிப்படுத்தி “மைல்ட் அட்டாக்தான். அவங்க வயசுக்கு கொஞ்சம் ஹெவியா தாக்கிருச்சி. அவங்களை சந்தோசமா பார்த்துக்கோங்க. நாளைக்கு வார்டுக்கு மாத்திரலாம். அவங்களை டிஸ்டர்ப் பண்ணாம ஒவ்வொருத்தரா சத்தமில்லாம பார்த்திட்டு வாங்க” என்று அவர் சென்றார்.

“முதல்ல நீ பார்த்துட்டு வா” என்று ராசியிடம் ரோகிணி சொல்ல...

“இல்ல வேண்டாம். நான் போகலை. என்னால அம்மாஆச்சியை இப்படி பார்க்க முடியாதும்மா” என்று மடியில் முகம் புதைத்து அழுதவளை அணைத்து ஆறுதல் சொல்ல அருகில் சென்ற சரத்தை அவள் உணர்ந்தாளோ! நிமிர்ந்தவள் அவனை குற்றப் பார்வை பார்த்து பார்வையால் எரிக்க... அதற்கு மேல் அவளிடம் செல்ல சரத்திற்கு மனம் வரவில்லை.

அவனின் பார்வையில், ‘ஏன் இந்த தண்டனை?’ என்ற கேள்வி அவளைத் தாக்க...

சில வினாடிகள் அவனின் பார்வையில் சிக்கியவள், மீண்டும் தெளிந்து ‘உன்னைவிட பெரிய தண்டனை கொடுக்கவில்லை. இது உன்னுடைய தப்புக்கான தண்டனை’ என்றது அவள் கண்களால் சொன்ன பதில்.

சரத்திற்கு சுத்தமாக புரியவில்லை. ‘ஏனிந்த விலகல்? வீடு பால்காய்ச்சும் போது திருமணம் என்றதும் வெட்கத்தில் சிவந்ததென்ன, அதன்பின்...’ என நினைத்தவன் இதயம் ஒரு முறை நின்றே விட்டது. ‘ஓ மை காட்! மணிகிட்ட நான் பேசினதை கேட்டிருப்பாளோ?’ கேட்டிருப்பாள் என்று இப்பொழுது தோன்றியது. அதற்கு பிறகுதான் தன்னிடம் பேசவில்லை. வீட்டிலிருந்து தலைவலி என்று ஒருவரிடமும், கண்களில் தூசி விழுந்ததென்று ஒருவரிடமும் சொல்லிச் சென்றிருக்கிறாள். போன் செய்தும் எடுக்காமல் தன்னைத் தவிர்த்திருக்கிறாள்.

‘கடவுளே! எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கேன். இதை இந்த நேரத்தில் இவளிடம் விளக்கவும் முடியாதே. சொன்னால் இருக்கும் கோபத்திற்கு தூபம் போட்டு நிரந்தரப் பிரிவாகிட்டா.. அதை தன்னால் தாங்க முடியுமா?’ பாவம்போல் அவளைப் பார்த்து கண்களால் மன்னிப்பை வேண்டினான்.

அவனையே பார்த்திருந்தவளுக்கு அவனுக்கு உண்மை புரிந்துவிட்டதென்று தெரிய, அவனின் நேர்ப்பார்வையை எதிர்க்க இயலாமல் எழுந்து சென்றாள். கடைசி ஆளாக மீனலோஜினியை பார்க்கச் சென்றவள் கால்கள் தள்ளாட, மெல்ல அருகிலமர்ந்து மௌனக் கண்ணீர் வடித்தாள்.

“அம்மாஆச்சி ஏன் இப்படி படுத்திருக்கீங்க? எனக்கு இது பிடிக்கல வாங்க வீட்டுக்குப் போகலாம். நீங்க என்னோட வரலன்னா நானும் உங்களோடவே வந்திருவேன். எனக்குன்னு யார் இருக்காங்கன்னு இங்க வந்து படுத்துட்டீங்க? பாருங்க கையிலல்லாம் ட்யூப். ஊசி போட்டது வலிக்கும் தான. இந்த வலிக்கு நான்தான் காரணமாகிட்டேன்ல அம்மாஆச்சி. காதல் கீதல்னு நான் ரொம்ப கெட்ட பொண்ணாகிட்டேன்ல. நீங்க என்னை சரியா வளர்க்கலன்னு தான் இங்க வந்து படுத்துட்டீங்களா? இனிமேல் இந்த மாதிரி நடக்காது அம்மாஆச்சி. ப்ராமிஸ். பழையபடி நாலு மாசத்துக்கு முன்னாடி உள்ள ராசியா இருக்கேன். சரத்னு ஒருத்தரை நான் சந்திக்கவே இல்லை” என்று சொல்லும்போது அவளுக்குள் வலியை உணர்ந்தாள்.

அதைக் கேட்டிருந்த சரத்திற்கோ, அந்த வலி உயிர் வரை சென்று தாக்கியது.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top