- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
20
“ஹரி என்னடா பிடிவாதம் இது. இது ஈகோ பார்க்கிற நேரம் இல்லை. அந்த பொண்ணுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. அப்புறம் என்ன தயக்கம்? ராசிகிட்ட ஐ லவ் யூ சொல்லிரு. அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிரலாம்.”
“நோ என்னால ராசிகிட்ட ஐ லவ் யூன்னு சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டேன். என் உயிரே போனாலும் மாட்டேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் சத்தமாகவே சொன்னான்.
“ஹரி என்னடா நீ?”
“விடுடா. என்னைக்கு இருந்தாலும் அவள்தான் என்னோட ஒய்ஃப். இப்ப சொல்லலன்னா என்ன, அவளை சொல்ல வச்சி, அவ சொன்ன அடுத்த நிமிஷமே நான் சொல்லிரப் போறேன்” என்று சிரித்தான்.
ராசிக்கோ, அவனின் வார்த்தைகள் ஈட்டியாய் பாய்ந்து இதயம் நுழைய துடித்துப் போனவள் கண்களிலிருந்து கண்ணீர் ப்ரவாகமெடுத்தது. என் உயிரே போனாலும் மாட்டேனென்ற பிறகு அவர்கள் பேசிய எதுவும் காதில் விழவில்லை. மனம் மரத்து போனாற்போல் ஆனது ராசிக்கு.
‘என்னைப் பிடிக்கலையா ஏன்? இத்தனை நாள் காட்டிய அன்பு அக்கறை, அந்த கண்கள்ல பார்த்த காதல் எல்லாமே பொய்யா? பொய்யே தானா! உயிரே போனாலும் காதலைச் சொல்ல மாட்டேன்னு சொன்னது சரத் தானா? ஏன் என்னைப் பிடிக்கலை? என் சின்ன வயசுல நடந்த அந்த பொம்மைக் கல்யாணத்திற்காகவா? இல்ல இருக்காது சரத் அந்தளவு தரம் தாழ்ந்த ஆள் கிடையாது’ என தன்னைத்தானே சமாதானப்படுத்தினாலும் அவனின் வார்த்தைகள் தந்த வலி நெஞ்சைப் பிசைந்து, மனம் உடைய உடல் தளர்ந்தது.
இந்த விழாவுக்காகவே தன்னை பார்த்துப் பார்த்து அலங்கரித்திருந்தாலும், அதற்கு அதிகம் மெனக்கெடவில்லை. சந்தோஷத்தில் முகப்பொலிவுடன் வர, அவள் காரில் வந்து இறங்கியதிலிருந்து, அந்த அதிகாலை நேரத்திலும் சரத்தின் பார்வை அவளைவிட்டு எங்குமே நகரவில்லை. அதை ராசியும் உணர்ந்தே இருந்தாள். அப்படிப் பார்த்தவன் அதன்பின்னும் தன்னையே சுற்றிச்சுற்றி வந்தவன் ஏன் இப்படி பேசுகிறான் என்பது அவளுக்குப் புரியவில்லை. அதை காதல் என்று தான் நினைக்க, அதை பிரதிபலிக்க வேண்டியவனோ காதல் என்ற வார்த்தையையே சொல்ல பிடிக்கவில்லை என்கிறான். யாரும் காணும் முன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தவள் சமையலறை சென்று அங்கிருந்த குழாயில் தண்ணீர் பிடித்து முகத்திலடித்தாள்.
அங்கு வந்த சாந்தி, “என்னமா தூசி எதாவது விழுந்திருச்சா? கண்ணு கலங்கியிருக்கு” என கேட்டார்.
“ம்... ஆமாம்மா தூசிதான். கொஞ்சம் வேகமாகவே விழுந்திருச்சி. அதான் முகத்தை கழுவிட்டிருக்கேன். அப்படியிருந்தும் கண்ணுல இருந்து தண்ணியா ஊத்துது” என்றாள் அழுகையைக் கட்டுப்படுத்தி குரலை சாதாரணமாக வைத்தபடி.
“சரிமா. நீ ரூம்ல போயி ஓய்வெடு சரியாகிரும்.”
“அம்மா இங்க வேண்டாம். நான் வீட்டுக்குப் போறேன். இன்னைக்குத்தான் வீடு பால்காய்ச்சிருக்கு இங்க கண்ணீர் அது தூசியினாலே என்றாலும் வேண்டாம்” என்றவள் ‘சரத் எப்பவும் சந்தோஷமா இருக்கணும் என்னோட கண்ணீர் அவங்களைக் காயப்படுத்தக்கூடாது’ என நினைத்து, தன் முகத்தை கைக்குட்டையால் அழுந்தத் துடைத்து, “அம்மாஆச்சிக்கு ஆட்டோ பிடிச்சி அனுப்பிடுறீங்களா?” என்றாள் சாந்தியிடம்.
“என்ன கேள்வி ப்ரியா இது? நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு. காரை ஓட்டிருவதான?”
“ஓட்டிருவேன்ம்மா” என்று வெளியே வர... அதே சமயம் ரோகிணியும், கிரியும் எதிரில் வந்து, “பங்ஷன் முடிஞ்சிருச்சா? கொஞ்சம் லேட்டாகிருச்சி” என்றனர்.
“இப்பத்தான் முடிஞ்சிது. ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை” என்ற ராசியிடம்... “ஆமா எங்க கிளம்பிட்டீங்க? ஏன் ஒருமாதிரியா கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?” கிருபா கேட்க,
“என்ன ராசிமா எதாவது பிரச்சனையா?” என்று ரோகிணியும் கேட்டார்.
“எதுவுமில்லைம்மா. தலைவலிச்சது வீடு குடிவர்ற அன்னைக்கு இங்க எதுக்குன்னு தான் கிளம்பிட்டேன். ஆமா நீங்க ஏன் லேட்?”
“அ..அது” என தடுமாறி, “காலையில எழுந்துக்க டைமாகிருச்சி.” அவர்களின் தடுமாற்றம் எதனால் என்பதை அறியும் மனநிலையில் ராசியும் இல்லையாதலால், “வேற ஒண்ணும் இல்லையேம்மா. எதோ ஒரு வித்தியாசம் உங்ககிட்ட. நீங்க நார்மலா இருக்கிற மாதிரி தெரியல?”
“இல்லடா. அப்படி எதாவதுனா உன்கிட்ட சொல்லமாட்டோமா. சரி தம்பியை வேணும்னா வந்து விடச்சொல்லவா?”
“இல்லம்மா நானே ட்ரைவ் பண்ணிருவேன்” என்றதும் அவளை அனுப்பிவைத்து உள்ளே வந்தவர்களை வரவேற்ற சரத் கிரியிடம், “வெளிய ராசி இருக்காளா? உள்ள ஆளையே காணோம்” என்றான்.
“வீட்டுக்குக் கிளம்பிட்டா மாம்ஸ். உங்ககிட்ட சொல்லலையா?” என்றான் கேள்வியாய்.
‘வீட்டுக்கா? ஏன் என்கிட்ட சொல்லலை?’ என நினைத்தாலும், “எதுக்குடா இப்ப வீட்டுக்கு?” என்றான்.
“தலைவலியாம் மாம்ஸ்” என்றான்.
“யாருக்குத் தலைவலி?” என்றபடி சாந்தி வர... “ராசிக்கு தான் அக்கா” என்ற சரத்தின் மனம் ‘ஏன் சொல்லவில்லை’ என்பதிலேயே நின்றது.
“கண்ணுல தூசி விழுந்துட்டதால முகத்தைக் கழுவிட்டிருக்கிறதா சொன்னா. தலைவலின்னு சொல்லலையே. சொல்லியிருந்தா தனியா அனுப்பியிருக்க மாட்டேனே.”
“நான் போய் பார்த்துட்டு வர்றேன்கா” என்றவனை தடுத்து, “வீட்ல ஆள் இருக்காங்க. சாயங்காலம் அவங்க ஆச்சியை நீ விடும்போது பார்த்து விசாரிச்சிட்டு வா” என்றார்.
மாலை வீட்டிற்கு சென்ற பொழுது ராசி தூங்கிக் கொண்டிருப்பதாக லோஜி பார்த்து வந்து சொல்ல சரத் கிளம்பினான்.
அவனுக்குத் தெரியாதது அவனின் கார் சத்தம் கேட்டு நெற்றியில் தைலம் தேய்த்து உறங்குவது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள் ராசி. சரத் சென்றதும் அழுதழுது கண்கள் சிவந்திருந்த பேத்தியைப் பார்த்த லோஜி “என்னடா ரொம்ப தலைவலிக்குதா” என்று அக்கறையாகக் கேட்டார்.
“ஆமா ஆச்சி ரொம்ப வலிக்குது. என்னால தாங்க முடியாத வலி” என்றாள் பரிதாபமாக.
“இருமா மாத்திரை எடுத்துட்டு வர்றேன். மதியம் சாப்பிட்டிருக்க மாட்டதான? எதாவது சாப்பிடுறியா?”
“இல்ல அம்மாஆச்சி. பூஸ்ட் போதும். வேற எதுவும் வேண்டாம்.”
சில நிமிடங்களில் திரும்பிய லோஜி பூஸ்டுடன் தலைவலி மாத்திரையும் கொடுத்து படுக்க வைத்து அருகில் அமர...
“அம்மாஆச்சி எனக்கு அழுகை அழுகையா வருது. நான் அழுதா மாமாவுக்கு பிடிக்காது தான. என் சார்புல மாமாகிட்ட சாரி சொல்லிடறீங்களா?” என்று மடிமீது தலைவைத்தவளை ஆறுதலாகத் தட்டிக்கொடுக்க, சற்று நேரத்தில் கண்ணயர்ந்தாள்.
சரத் தன்னுடைய வேலையில் பிஸியாக ராசியைக் காண முடியவில்லை. போனிலாவது பேசலாம் என்றால் ரிங் சென்றதே தவிர எடுக்கப்படவில்லை. அதை ஒரு சாதாரண நிகழ்வாகவே எடுத்துக் கொண்டானே தவிர, அவள் தன்னைத் தவிர்க்கிறாள்” என்று எண்ணவில்லை அவன்.
ராசிக்கோ அதன் பின்னர் அவன் தன்னை சந்திக்க வராதது ‘உண்மையிலேயே தன்னைப் பிடிக்கவில்லை போல. போன் கூட ஒரு ப்ரண்ட்லி டாக்கிற்காகத் தான்’ என்று கணக்கு போட்டாள் அந்த கணக்காளினி. அதன்பின் சரியாக சாப்பிடாமல் தூங்காமல் உழன்றவளிடம் மீனலோஜினி என்ன கேட்டும் பதில் வரவில்லை. தன்னுடைய குறும்புத்தனங்கள் அனைத்தையும் மறந்து கவலை தோய்ந்த முகத்துடன் வலம் வந்தவளை தேற்ற ப்ரீகுட்டியை அவளிடம் விட, சற்று நேரம் விளையாடுபவள் சிறு புன்னகையையே வெளியிட்டாலும் அதில் உயிர்ப்பில்லை.
ஒருவாரம் பொறுத்தவருக்கு அதற்கு மேல் பொறுமையில்லாமல் அவளிடம் வந்து, “என்ன பிரச்சனை ராசிமா? ஏன் எதையோ இழந்தது மாதிரி இருக்க? உன்னோட சிரிப்பு, கலகலப்பான பேச்சி இல்லாம வீடு வீடாகவே இல்ல. எதுவா இருந்தாலும் சொல்லுமா. உனக்கும் சரத்திற்கும் நடுவுல என்ன பிரச்சனை?”
அதுவரை தலை குனிந்தபடி அனைத்தையும் கேட்டிருந்தவள் கடைசி வார்த்தையில் தலை நிமிர்ந்தாள்.
“அப்ப உங்களுக்கள்ள தான் பிரச்சனை. இல்லையா?”
கண்கள் கலங்கி கண்ணீர் மறைக்க வேகமாக எழுந்து லோஜியினருகில் வந்து கட்டியணைத்து தன் வேதனைகள் தீர அழுதவளை தட்டிக்கொடுத்து, “என்ன பிரச்சனைமா?” என்றார் ஆதுரமாக.
“அம்..அம்மாஆச்சி சரத்துக்கு என்னைப் பிடிக்கலை.” சொல்லி முடித்து தேம்பித் தேம்பி அழுதாள்.
“என்னடா உளர்ற? நான்தான் அன்னைக்கே அவன் பேசினதைச் சொன்னேன்ல.”
“நீங்க சொன்னீங்க. எனக்குமே அப்படித்தான்னு மனசு சொல்லிச்சி. ஆனா, நிஜம் வேற ஆச்சி. அதைக் கேட்டதிலிருந்து என்னால தாங்க முடியல. அப்படியே செத்திடலாம் போல வருது ஆச்சி” என்று கதறினாள்.
“பாப்பா!” என அதிர்ந்தவர் அவள் முகம் நிமிர்த்தி, “என்ன பேசுறன்னு தெரிஞ்சிதான் பேசுறியா? அடிச்சி பின்னிடுவேன் ராஸ்கல். உன்னை சாகக் கொடுக்கவா நான் பார்த்துப் பார்த்து வளர்த்திருக்கேன். இனி இப்படி ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வரக்கூடாது சொல்லிட்டேன். சரி என்ன நடந்ததுன்னு சொல்லு? முதல்ல அழுகையை நிறுத்து ராசாத்தி” என்றும் அவளின் அழுகை ஓயாமலிருக்க, “நிறுத்தப்போறியா, இல்லையா?” என குரலை உயர்த்தி அதட்டியவர் அவள் கண்ணீர் துடைத்து, “இப்பச் சொல்லு என்ன நடந்தது?”
“பால் காய்ச்சின அன்னைக்கு மணி அண்ணாவும், சரத்தும் பேசிட்டிருந்தாங்க. நீ ராசிகிட்ட ஐ லவ் யூ சொல்லு அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிடலாம்னு சொன்னாங்க. அதுக்கு சரத், ராசிகிட்ட ஐ லவ்யூ சொல்லமாட்டேன். என் உயிரே போனாலும் சொல்லமாட்டேன் சொல்லிட்டாங்க ஆச்சி. நீங்க சொல்லுங்க யாரோ ஒருத்தர் இதை என்கிட்ட அவங்க சொன்னதா சொல்லியிருந்தா நான் நம்பியிருப்பேனா? சரத்தே சொன்னப்ப நான் ரொம்ப நொறுங்கிட்டேன் ஆச்சி. நான் என்ன தப்பு பண்ணினேன் ஆச்சி. ஏன் அவங்களுக்கு என்னைப் பிடிக்கல? விவரம் தெரியாதப்ப நடந்த கல்யாணத்தை காரணமா வைக்கிறாங்களா? அது கல்யாணமே இல்லைன்னு எப்படி சொல்வேன் ஆச்சி?” அனைத்தையும் விடாமல் சொல்லி கதறுபவளை தேற்ற வழியில்லாமல் போனது அந்த வளர்ப்புத் தாய்க்கு.
“ராசாத்தி இங்க பாரு. என்னைப் பாரு சொல்றேன்ல. அப்படில்லாம் இருக்காதுடா. எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத. கொஞ்ச நாள் எல்லாத்தையும் மறந்துட்டு நார்மலாயிரு.”
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா, எந்தப்பக்கம் திரும்பினாலும் அவங்க முகமே தெரியுது. எதை நினைச்சாலும் அவங்க நினைப்புத்தான் வருது. இந்த ஒரு வாரமா அதை ஒதுக்கி எப்படியாவது நார்மலாகணும்னு தான் நினைக்கிறேன். என்னால தடுக்க முடியல அம்மாஆச்சி. நான் என்ன பண்ணட்டும். அவங்களுக்கு என்னைப் பிடிக்கலன்றதை என்னால இன்னும் நம்பமுடியலை அம்மாஆச்சி.”
அழுது கரையும் பேத்தியை ஆறுதலாக அணைத்த லோஜியின் கண்களில் நீர் வர, “என்னால நம்ப முடியலைடா ராசிமா. இதுக்கு எதாவது காரணம் இருக்கும். அன்னைக்கு உன்னை விட வந்தப்ப உன்மேல் அவனுக்கிருந்த உரிமை உணர்வு நல்லாவே தெரிஞ்சதே. நான் வேணும்னா பேசிப்பார்க்கவா?”