- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
20
முழு உரிமையை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் சின்னச்சின்னதாய் வார்த்தைச் சீண்டல்களில் அவளை வெட்கப்பட வைக்க அவன் காத்திருக்க, இவளோ! ‘என்னவாகிற்று இவளுக்கு? போய்த்தான் தீருவேன் என்பதாய் ஏனிந்த திடீர் மனமாற்றம்? ஒருவேளை அன்பு பற்றித் தெரிந்துவிட்டதோ?’
ஆடை மாற்றி வந்து அருகில் படுத்தவன் அவளின் வழக்கமாக கையைப் பிடித்துக்கொள்ள, கையை வெடுக்கென்று உருவினாள்.
“என்னமா? கை பிடிச்சிக்கலன்னா உனக்குத் தூக்கம் வராதே. எதுவாயிருந்தாலும் ஓரம்கட்டி நிம்மதியா தூங்கு.”
சட்டென்று எழுந்தமர்ந்தவள் கண்கள் சிவப்பேறியிருக்க. “என்னால எப்படி நிம்மதியா தூங்க முடியும்னு நினைக்கிறீங்க? அவங்களைப் பழிவாங்கணும். என் கண்முன்னால என் குடும்பத்தைக் கொன்னவங்களைப் பழிவாங்கணும். அதுவரை எனக்குத் தூக்கம் வராது.”
“மொழி ஏன் திடீர்னு? நான் பார்த்துக்கறேன்மா நீ தூங்கு.”
“உங்களால் ஒண்ணும் செய்யமுடியாது. அவன் சி.எம்கு நிற்கப்போறானாம். எம்.எல்.ஏவா இருந்தப்பவே எதுவும் செய்ய முடியல. இப்ப சி.எம்னா.? நான் தோத்துட்டேனா? அவனைப் பழிவாங்க முடியாதா? இந்த பதவிக்கே இத்தனை கொலைனா.. சி.எம் ஆனா... நாட்டையே அழிச்சிருவான்.”
“மொழி உன்னைத் தோற்க விடமாட்டேன். அதுக்குள்ள எதாவது பண்ணிரலாம். நீ அமைதியாயிருமா” என்றான் கனிவாய்.
“எப்படி அமைதியா இருக்கிறது? திருநெல்வேலி பக்கத்துல ஒரு கிராமத்துல, சொத்துக்காக சொந்த தங்கச்சி குடும்பத்தை கொன்னுருக்கான் ஒருத்தன். அடுத்து அவன் ரவுடியாகி அரசியல்வாதியாகி... இன்னும் எத்தனையெத்தனை கார்மேகம்! ஜெயராம்களோ! நான் ஊருக்கே போறேன்” என்றாள் அடமாக.
“நீ அங்க போய் என்ன செய்யப்போற மொழி? தனியா போராட முடியும்னு நினைக்கிறியா? எந்த ஆதாரமும் இல்லாமல் போய் நிற்கிறது பைத்தியக்காரத்தனம். தயவு செய்து ஒரு பத்து நாள் வெய்ட் பண்...”
“ஆமா நான் பைத்தியக்காரிதான். நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தேன்ல. கண்டிப்பா நான் பைத்தியம்தான். கல்யாணம் குடும்பம்னு என்னை ஒரு பந்தத்துல இழுத்துவிட்டு, என் லட்சியத்தை முழுசா கெடுத்துட்டீங்க. ஐ ஹேட் யூ.. ஐ ஹேட் யூ” என்று கத்த...
‘ஆமா. இதுக்கு முன்ன ஐ லவ் யூன்னு கத்துன மாதிரிதான்.’ மனதினுள் முனகி, “எந்தப் பைத்தியமும் தன்னைத்தானே பைத்தியம் சொல்லாது” என முடிக்கு முன் தலையணை அவன் மார்பைப் பதம்பார்க்க, “இங்க பார் வன்முறை நல்ல பொண்ணுக்கு அழகில்ல. அதுவும் உனக்கு செட்டே ஆகல. சோ பிரச்சனையிலிருந்து விலகிக்க. உன் கண்முன்ன நீ நினைச்ச எல்லாமே நடக்கும்.”
“நான் இங்கயிருந்தா நிஜமாவே எல்லாத்தையும் விட்டு விலகிருவேன். என்னது எல்லாமே அங்கதான் இருக்கு.”
“அப்ப நான்?” வாய்வரை வந்த வார்த்தைகளை மென்று “அப்ப இங்க இருக்கமாட்ட?”
‘ம்...’ என்ற தலையசைவில் பெருமூச்சு விட்டவன், தன் செல்லை எடுத்து மற்றவர்கள் செல்லும் ப்ளைட்டில் இடம் கேட்க இருக்கு என்றதும் அதிலேயே புக் செய்து அவளிடம் திரும்பி, “இப்ப ஹேப்பியா மொழி. உன் ஊருக்கு நீ போகப்போற. இப்பவாவது தூங்குறியா?”
“நிஜமா?”
“உன் முன்னாலதான புக் பண்ணினேன்.”
“உங்களுக்கு வருத்தம் இல்லையே?”
“நான் என்ன சொல்லணும்னு நினைக்கிற மொழி? எனக்கு வருத்தம் இல்லைன்னா? எப்படிச் சொல்றது?” அவளின் தலை வேறுபுறம் திரும்ப... அவளைத் திருப்பி தன்னைப் பார்க்க வைத்து, “இப்ப நீ என் ஒய்ஃப். நீ சொல்லு நான் வருத்தப்படணுமா? என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டாள்னு சந்தோஷப்படணுமா? எதையும் யோசிக்காம படு. நாளைக்குக் காலையில பத்து மணிக்கு டிக்கெட் போட்டுருக்கேன். குட் நைட்” என்று கண்மூடி படுத்துக்கொண்டான்.
அவளோ கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பல நேரங்களில் இளங்கதிரின் பொறுமை திருவை வியக்க வைக்கிறது. இதோ தன்னுடைய புலம்பலுக்கு இரண்டே நிமிடங்களில் தீர்வு சொல்லி தன் வருத்தத்தை மறைத்து... ‘இவனுடன் வாழ என்ன தடுக்கிறது என்னை?’ தன் மனபாரம் குறைந்தால் மட்டுமே மற்றவை சாத்தியம் என்று தோன்றியது. மெல்ல அவனின் கைபிடித்து கணவன் காணுமுன் கண்மூடினாள்.
அச்செயலில் சின்னதாகச் சிரிப்பு எழ அவளின் தலைகலைத்து “குட் நைட்” என்றான்.
காலை சீக்கிரமே எழுந்த திருமொழி பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் பரபரப்புடன் எடுத்து வைக்க, அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்தவன். “என்னை விட்டுட்டுப் போறதுல ரொம்பத் தீவிரமாயிருக்க போல?” என்றான்.
கையில் எடுத்த புடவையுடன் அப்படியே நின்றது சில வினாடிகளே.. தன்னை சமாளித்து “நான் வரும்போதே திரும்பிருவேன்னு சொல்லிட்டுத்தான் வந்தேன். நீங்க கூட சம்மதம்னு சொன்னதா நினைவு. இப்ப தடுக்கிறதுல நியாயமே கிடையாது.”
“நான் எப்ப உன்னைத் தடுத்தேன். நீ தாராளமா போகலாம். போகாதன்னு சொல்லி கையைப் பிடிச்சி ஒண்ணும் தடுக்கலையே. ஏன் பிடிச்சி தடுக்கணுமா?”
“இங்க பாருங்க” என விரல் நீட்டியவள் டக்கென்று மடக்கி, “பேக்கிங் முடிஞ்சது நான் கிளம்புறேன்” என்றாள்.
“ஹேய் ஏர்போர்ட் எப்படி பழிவாங்கப் போற?”
“இளா அத்தான் வருவாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து அவங்களைக் கண்டந்துண்டமா.. இல்ல அப்படிப் பண்ணினா சீக்கிரம் செத்திருவாங்க. வேற எதாவது பண்ணுவோம்.”
“அப்ப எல்லாமே மிஸ்டர்.இளநாதன்கிட்டதான் இருக்கு. அப்புறம் அங்க நீ எதுக்கு?”
“ஹலோ நாங்களும் சில ப்ளான்ஸ் வச்சிருக்கோம். முடிஞ்சா தண்டனை இல்லன்னா ஒரேடியா...” எனும்போது அவள் கண்களில் ஒருவித வெறி.
“சரி நீ கிளம்பு” என்றவனுக்குள் யோசனைகள் பல.
ஏர்பேக்குடன் வெளியே வந்தவளை தமிழரசியுடன் சேர்ந்து மற்றவர்களும் கேள்வியாய் பார்த்தனர்.
“எங்க கிளம்பிட்ட?” என்றார் காமாட்சி.
“நானும் உங்களோட வர்றேன் அத்தை.” அனைவரும் அதிர்ந்து அவளைப் பார்க்கவும், “சித்தி எப்பவும்போல மொழி உங்களோடவே இருக்கட்டும்” என்றான் இளங்கதிர்.
“ஏன்பா இவ ஏதாவது பழிவாங்குறேன்னு... ஏற்கனவே ரெண்...” என ஆரம்பித்து நிறுத்தினார்.
“சே..சே அப்படிலாம் இல்ல சித்தி. கொஞ்ச நாளைக்கு உங்களோடவே இருக்கணும் ஃபீல் பண்றா.”
“எது அவளோட அம்மாவை விட்டுட்டு என்னோடவா?”
“அதானே!” என்பதாய் அனைவரும் அவனைக் காண... “அவங்க பழைய மாதிரியே இருக்கட்டும் சித்தி. இப்போதைக்கு அதுதான் எல்லாருக்கும் நல்லது. சில விஷயங்கள் வெளிப்படையா சொல்ல முடியாது சித்தி. என்னை நம்பிப்போங்க. உங்க மருமகளை அப்படியே விட்றமாட்டேன்” என்று தமிழரசியிடம் வந்தவன், “என் ஒய்ஃப்கிட்ட எதுவும் கேட்காதீங்க அத்தை. சின்ன மனசஞ்சலம் மட்டும்தான். சில காரணங்களுக்காக அங்க இருக்கிறதும் நல்லதுதான்.”
“ஆனா அண்ணா...?”
“ஸ்ஸ்.. எதுவும் பேசக்கூடாது. நீங்க எல்லாரும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க போதும். வாங்க சாப்பிட்டுக் கிளம்பலாம்.”
உணவு முடித்து இரண்டு காரில் கிளம்ப தன்னருகே அமைதியாக அமர்ந்திருந்தவளிடம், “மேடமோட ஆசையை நிறைவேத்தியாச்சி. இப்ப ஹேப்பிதான? என்ன மொழி பேசாம சைலண்ட்டாயிருக்க?” என வம்படியாக பேச்சுக் கொடுத்தான்.
“சாரி!”
“கேட்கல?”
“சாரீஈஈஈ... சொன்னேன். இப்ப கேட்டுச்சா?”
“யா பட் எதுக்கு?”
“சொல்லணும் தோணிச்சி” என்றவள் குரல் இறங்க...
“ஓகே அக்செப்ட் பண்ணியாச்சி.” அதன் பின் எந்த வார்த்தையும் இல்லை அவர்களிடம். அவன் முகம் பார்க்க பின் குனிய என்றிருந்தவளிடம் “என்னமா? ஏன் முகத்தை முகத்தைப் பார்க்கிற?”
கணவனின் கரிசனமான வார்த்தையில் “அ..அது உங்களுக்குக் கோபமாயில்லையா?”
“தெரியல.”
‘என்ன பதில்’ என்பதாய் அவனைக் காண... “நிஜமாவே தெரியலமா. கோபம் சின்ன வயசுல நிறைய வரும். பயங்கரமா சண்டை போடுவேன். அப்புறம் அப்படியே அடங்கிருச்சி. இப்ப நானே நினைச்சாலும் கோபப்பட முடியல. அதுவும் உன்கிட்ட...” தனக்குள் குற்றவுணர்ச்சி தாக்க அமைதியாக வந்தாள்.
ப்ளைட் செக்கிங் செல்லுமுன் பிரஷாந்திடம் ஆயிரத்தெட்டு அறிவுரை சொல்லி அனுப்பிவிட்டு வீடு வந்தவனை குருமூர்த்தி பிடித்துக்கொண்டார்.
“ஏன்டா மருமகளை ஊருக்கு அனுப்பின? முன்னாடியே சொல்லியிருந்தா பேசி சமாதானப்படுத்தியிருப்பேன்ல. இங்க பார்டா கண்ணா நீ தமிழ்நாடு போகக்கூடாதுன்னுதான் மருமகளை இங்க வரவழைச்சது. அவளை உன்னோடவே வைக்க முடியலையாடா?”
“அதுக்காகப் போறேன் சொல்றவளை தடுக்கவாப்பா முடியும். அவ எனக்கு டைம்லாம் குடுக்கலப்பா. சொன்னா புரிஞ்சிக்கோ. பதினைந்து வருஷமா மனசுல ஊறிப்போன லட்சியம் பெருசா, பதினைந்து நாள் முன்ன வந்த புருஷன் பெருசான்னு வாக்குவாதம் பண்ண நான் தயாரா இல்லப்பா. அவள் நினைச்சிருந்தா இந்த ரிசப்ஷன்கு வராமலே இருந்திருக்கலாம். இல்ல கட்டாயத்தாலி தானன்னு தூக்கிப் போட்டிருக்கலாம். ஏன்பா செய்யல? அவளுக்கு என்னை ரொம்பப் பிடிச்சிருக்குப்பா. அதே நேரம் அவ வாழ்க்கையில் நடந்ததை மறக்கவும் முடியல. இருதலைக்கொள்ளி எறும்பா தவிக்கிறா. அதான் அங்கேயே இருக்கட்டும்னு அனுப்பிட்டேன்.”
“அப்ப உன் நிலை?”
“பார்க்கலாம்பா!” என்று நகர குருவிற்கோ தவிக்கும் நிலை. மருமகள் அங்கேயிருந்தால் கண்டிப்பாக மகன் அங்கு செல்வான் என்பது உறுதி. அவரும் அதே இருதலைக்கொள்ளி எறும்பு நிலையில்தான் இருந்தாரோ!