- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
2
திருநெல்வேலி டவுன்:
"முடியாது. முடியாது. முடியாது" என்ற சத்தம் சுத்தி இருந்த நாலைந்து வீடுகளுக்கும் கேட்டிருக்கும். ஏன் நாற்பது வீடுகளுக்குக் கூட கேட்டிருக்கும். அது கிராமமாக இருந்திருந்தால்.
"சொன்னா கேளுமா. அம்மாவே தேய்ச்சி விடுறேன். நீ சீக்கிரம் குளிச்சி முடிச்சா, அப்படியே என் வேலையும் முடிஞ்சிரும். பாரு உன் தங்கச்சி உனக்கு முன்னாடியே குளிச்சிட்டு கிளம்புறா” என்றார் அவளின் தாய்.
உள்ளே இருந்து ஆடை மாற்றிக் கொண்டிருந்தவள், இதுக்காகத்தானே நான் முதல்ல குளிச்சது” என்று அவளும்,
“என்னைத் திட்டு வாங்க வைக்கணும்னே எல்லாத்தையும் பண்ணுது பாரு” என்று இவளும் கரித்துக் கொட்டினர்.
“அம்மா. அம்மா ப்ளீஸ்ம்மா. காலேஜ்ல கிண்டலடிக்கிறாங்கம்மா. ஒரு இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் மாதிரியா வர்றன்னு பயங்கரமா நக்கலடிக்கிறாங்கம்மா. என் செல்லம்ல வேண்டாம்மா. வாரமானா, இன்னைக்கு வெள்ளிக்கிழமைன்னு உன் தலையில் உள்ள சீயக்காய் வாசத்தை வச்சி சொல்லிரலாம்னு சொல்றாங்க. அது மட்டுமா? வாசம் தூக்குதுன்னு ஒருத்தி சொன்னா, நாத்தமடிக்குதுன்னு ஒருத்தி சீண்டிக்கிட்டிருக்கா. அதை விடுங்க. நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இருக்கே ஒரு குரங்கு. அவ என்னை எப்படிப் பார்க்கிறான்னு தெரியுமா? வேதாவாம் வேதா. வேதவல்லின்னு முழுப்பெயர் சொல்லி கூப்பிடணும் அந்தப் பல்லிய” என்று தோழியை வகைதொகையில்லாமல் திட்டினாள்.
"என்னையவாடி இவ்வளவு காலையில பாசமா பாராட்டிக்கிட்டிருக்க" என்று சரியான நேரம் பார்த்து நின்றாள் அவளின் நட்பு வேதவல்லி..
“எப்படிடி எங்கம்மா சீயக்காய் டப்பாவைத் தூக்கினதும் மூக்குல வேர்க்குதா என்ன? கரெக்டா கலாட்டா பண்ண வந்திட்ட? என்று நக்கலாக கேட்டாள்.
"மூக்குக்கு வாசம் வரலைடி ஆத்தா. காலைல ஆறு மணிக்கு, மாதா கோவில் மணி அடிக்கிற மாதிரி, வெள்ளிக்கிழமை ஆனா நீ முடியாதுன்னு கத்துற சத்தம் நம்மத் தெரு தாண்டி, பக்கத்து தெரு வரைக்கும் போகுது. ஒரு சிறப்பு என்னன்னா, சேவல் பார்க்கிற வேலையை நீ பண்ணுற. அதான் எட்டி ஒரு பார்வை பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று சலிப்பாகச் சொன்னாள்.
தோழியின் கால்வாரலில் பல்லைக் கடித்துக் கொண்டு, “அதான் பார்த்துட்டல்ல. இப்பக் கிளம்பு. உனக்கும், உள்ள இருக்காளே அவளுக்கும் இதே வேலையாகிப் போச்சி. எட்டு மணிக்கு ரெடியாகி இரு வர்றேன். இன்னைக்குப் பார்த்தா காலேஜ் கடைசி நாளா இருக்கணும். இன்னும் எத்தனை நட்புகள் என்னை என்னென்ன பாடுபடுத்தப் போகுதுங்களோ, அந்த முருகனுக்குத் தான் தெரியும்” என்றாள்.
வேதவல்லி சென்றதும் தலைக்கு சீயக்காய் போட்டுக் குளித்து, இடுப்பு வரை அடர்த்தியாக இருந்த முடியை, அழகாகப் பின்னலிட்டு கிளம்பி தோழியைப் பார்க்க வந்தவள், உள்ளே இருந்து வந்த சத்தத்தில் வாசலிலேயே நின்றாள்.
“ஏன் வள்ளி? வாரம் ஒரு முறை சீயக்காய் போட்டுக் குளிச்சா குறைஞ்சா போயிருவ. எப்படித்தான் அவளுக்கு நீ ஃப்ரண்டா இருக்கியோ” என்ற வார்த்தையை வெளியிலிருந்து கேட்டவளுக்கு சிரிப்புச் சிரிப்பாக வந்தது.
இவ்வளவு நேரம் தோழி, அவளின் அம்மாவிடம் அடித்த லூட்டியைப் பார்த்தவளால், தன்னுடையத் தாய் அவளைவிடத் தன்னை மட்டம் தட்டிப் பேசவும் கோவத்தில், “அம்மா அவள் ஒண்ணும் எழுந்திருச்சி பொறுப்பா குளிக்கலை. அவங்கம்மா திட்டித் திட்டிதான் குளிக்க வச்சாங்க. நீங்க என்னடான்னா அது தெரியாம, அவளோட நான் மோசம்னு சொல்றீங்க” என்று கத்தினாள்.
“அவள் அழுதாலும், அடம் பிடிச்சாலும், அவ அம்மா சொல்றதைக் கேட்டாளா, இல்லையா? ஆனா, நீ அப்படியா இருக்கிற?”
இதுக்கெல்லாம் மூலகாரணமான தோழியின் மேல் கோவம் கோவமாக வந்தது. ‘எரும. படிப்பும் வேண்டாம். ஒரு மண்ணும் வேண்டாம்னு இருந்தவளை, இழுத்து விட்டுட்டு, டெய்லி திட்டு வேற வாங்க வைக்கிறா’ எப்பொழுதும்போல் இன்றும் திட்டித்தீர்க்க,
“ம்ஹூம். இது சரிப்படாது. இப்படியே போனா அந்தப்புள்ள போன்கிருவா’ என்று நினைத்தவள், "வேதா கிளம்பிட்டியா? டைம் ஆகுது. கிளம்பலாம் வா” என்றழைத்து உள்ளே வந்தாள்.
"வாங்க மேடம் டைமுக்கு வருவீங்களே. எல்லாம் உன்னால தான்டி" என்று தோழியை முறைக்க,
அவளைக் கண்டு கொள்ளாமல், "என்னம்மா? என்னாச்சி? எதுவும் பிரச்சனையா?” என்று வேதவல்லியின் தாயிடம், எதுவும் தெரியாத அப்பாவி போல் கேட்டவளுக்கு, அருகிலேயே பல் கடிபடும் ஓசை கேட்க, தோழியின் கோவத்தின் அளவு தெரிந்தது.
“ஒண்ணும் இல்லம்மா. உன்னை மாதிரி தலைக்கு சீயக்காய் போட்டுக் குளிக்கச் சொன்னேன். அதுக்குத்தான் கோபம் இவளுக்கு.”
தோழியைப் பார்க்காமலேயே, “அவளோட முடிக்கு சீயக்காய் செட்டாகாதும்மா. அதனாலதான் நான் அவளை வற்புறுத்தலை. இல்லைனா அவளை யாரு விடுறது சொல்லுங்க” என்று அவரை திசைதிருப்பினாள்.
“என்னவோ சொல்ற. சீக்கிரம் கிளம்புங்க நேரமாகுது” என்று இருவரும் அவரிடம் விடைபெற்று வெளியே வந்த நொடி,
“எல்லாம் உன்னாலதான்டி. படிப்பு வேண்டாம்னு விட்டவளை, எனக்காக, எனக்காகன்னு சொல்லி, இப்ப டெய்லி என்னைப் படுத்துறாங்க. உனக்கென்ன?”
“சாரி வேதா. இனி நான் வெள்ளிக்கிழமை கத்துறதை கம்மி பண்ணிக்கிறேன். சாரி. சீயக்காய் போடுறதை நிறுத்திருறேன்.”
“ஆமா. நீ இதை ஆயிரம் தடவையாவது சொல்லியாச்சி. நாங்களும் ஆயிரம் முறை கேட்டாச்சி. நீ விட்டாலும் உங்கம்மா விடணுமே. போடி நீயுமாச்சி உன்னோட சீயக்காவுமாச்சி. அச்சோ! பஸ் வந்திருச்சி. ஏய்! ஆரா! வா சீக்கிரம். பஸ் வந்திருச்சி” என்று தோழியை இழுத்துச் சென்றாள் வேதவல்லி.
பேருந்தில் ஏறி அமர்ந்ததும் வழக்கமாக வரும் ஓட்டுனர், நடத்துனரிடம் ஒரு புன்னகையைச் செலுத்தி, முன்பகுதியிலேயே அமர்ந்து, கொஞ்சம் நேரம் சலசலத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆரா! முழுப்பெயர் ஆராதனா. அப்பா கேசவன். தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்து திருமணமாகி சில வருடங்களில் திருநெல்வேலியில் நிரந்தரமாகக் குடியேறியது குடும்பம்.
பதினாறு வருடங்களுக்கு முன் திருநெல்வேலி டவுனில், சின்னதாக ஆரம்பித்த மளிகைக் கடை, இன்று வளர்ந்து பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோராக வளர்ந்திருக்கிறது.
அம்மா செல்வலட்சுமி. இல்லத்தை இனிமையாக்கும் இல்லத்தரசி. பெண்களுக்கு கண்டிப்புக்கு கண்டிப்புமாக, பாசத்திற்கு பாசமுமாக இருப்பவர்.
கேசவன், செல்வலட்சுமி தம்பதியருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் ஆராதனா. மாநிறத்தில் அழகாக ஆளைக் கவரும் அழகி. அவளுக்கு அழகு சேர்ப்பது அவளின் தெற்றுப்பல். புன்னகை அரசி. படிப்பில் கெட்டிக்காரி. இந்த பட்டங்களோடு இருப்பவள். வாயிலும், வம்பிழுப்பதிலும் கூட கெட்டிக்காரி தான். அவள் இருக்குமிடத்தில் அவள் தனியாகத் தெரிவாள்.
இரண்டாமவள் கீர்த்தனா. என் அக்கா பத்தடி பாய்ந்தால், நான் கூட ஒரு பூஜ்யம் அதிகம் சேர்த்து, நூறு அடி பாய்வேன் என்று அதைச் செயலிலும் காட்டுபவள். படிப்பிலும், சேட்டைகளிலும், அப்படியே அக்காவின் நகல். ஆராதனாவை விட இரண்டு வயது இளையவள்.
ஆராதனாவை ஒரு ஆள் மிரட்டுகிறார்கள் என்றால், அது கீர்த்தனாவால் மட்டுமே முடியும். ஆராதனா எவ்வளவுதான் எகிறி எகிறிக் குதித்தாலும், ஒரே ஒரு வார்த்தையைச் சொல்லி வாயை அடைத்து விடுவாள், அவளின் பாசமலர்.
ஆராதனா தமிழ் வழிக் கல்வியில், பத்தாம் வகுப்பில் நானூற்று எண்பத்து மூன்று மதிப்பெண்கள் எடுத்து. அந்தப் பள்ளியிலேயே முதலாவதாக வந்தாள். நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு, அந்தப் பள்ளியில் இவள்தான் முதல் மதிப்பெண் எடுத்திருக்கிறாள். வேதவல்லி நானூற்று இருபது மதிப்பெண்கள் எடுத்திருந்தாள்.
தோழிகள் இருவரும் தனிமையில் இருக்க, ‘அடுத்து எந்தப் பள்ளியில் சேரலாம்? இல்லை இதே பள்ளியில் தொடரலாமா?’ என்ற யோசனையில் வேதவல்லி இருக்க,
“நான் பத்தோட படிப்பை நிறுத்திரப் போறேன்” என்று ஒரு குண்டைத் தூக்கி தோழியின் மேல் அசால்ட்டாகப் போட்டாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த வேதல்லி அதிர்ந்து போய், “என்னடி உளறல் இது? ஸ்கூல்ல நீதான் முதல் மார்க். நியாபகம் இருக்கா? என்றாள்.
“ம்... நல்லாவே நியாபகம் இருக்கு. அதுக்கென்ன இப்ப?”
“அதுக்கென்ன இப்பவா? ஹேய்! அப்புறம் ஏன் படிக்கலைன்னு சொல்ற? மேல படிச்சா, நல்ல வேலைக்குப் போகலாம். நல்ல படிச்ச வரனா வருதா, இன்னும் ஈசி. கல்யாணம் செய்து செட்டிலாகிரலாம்.”
“எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் டென்த்தோட நிற்கப் போறேன். படிக்கவே பிடிக்கலை. புக்கு, படிப்பு, ஸ்கூல், டீச்சர், எக்ஸாம்னுட்டு போடி. போர் அது. அதான் முடிவு பண்ணிட்டேன். ஆமா நீ என்ன செய்யப்போற?”
“நான் மேல படிக்கப் போறேன். எல்லாரும் நல்ல மார்க் எடுத்திருக்க நல்லா படின்னு ஊக்கப் படுத்தினாங்க தெரியுமா? அப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. இன்னும் இன்னும் படிக்கணும் தோணுது” என்றாள் சந்தோசமாக.
“ஏன், என்னைக் கூடத்தான் சொன்னாங்க. நாம என்ன நினைக்கிறோமோ, அதைத்தான் செய்யணும். நீயும் பத்தோட நிப்பாட்டிக்கோ” என்றதும் வேதாவல்லிக்குப் பயத்தில், உடல் தூக்கிப் போட்டது போல் அதிர்ந்தது.
“அச்சோ! என்னால முடியாது. நான் படிக்கணும். நல்ல மார்க் எடுத்துட்டு படிக்காம இருக்கக்கூடாது” என்ற வேதாவை,
“படிச்சி என்னடி செய்யப்போற? படிச்சா வேலைக்குப் போகணும். வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சா கிழவி ஆகும் வரை சம்பாதிச்சிட்டே இருக்கணும். வேலைக்குப் போகலன்னா, படிச்சவனுக்குக் கல்யாணம் பண்ணித் தருவாங்கன்னு உனக்குத் தெரியுமா? ஏதோவொரு கிராமத்தில் இருக்கிற மாடு மேய்க்கிரவனுக்கோ, இல்ல மெக்கானிக்குக்கோ கொடுபாங்க. அதுக்கு நாம ஏன் படிக்கணும்? படிக்காம இருந்தா நம்ம தலைவிதின்னு அந்த வாழ்க்கையை ஏத்துக்கலாம். படிச்சிட்டு அந்த வாழ்க்கையை மனசார ஏத்துக்க முடியுமா? நல்லா யோசிடி” என்று தன் திறமைகள், புழுகு மூட்டைகள் அனைத்தையும் அவிழ்த்துவிட்டாள்.
அந்த நேரத்தில் தோழியின் வார்த்தைகள் சரியென்று பட, சாத்தான் ஓதிய வேதத்தில் மயங்கி, "ஆரு... நீ சொல்றது தான்டி கரெக்ட்" என்று வேதவல்லியின் வாயாலேயே சொல்ல வைத்தாள் அவளின் உ(யி)யர் நட்பு.
தானும் கெட்டு, தோழியையும் கெடுத்து, இரு வீட்டினர் கண்டித்தும், அடித்தும் படிப்பின் அருமையை எடுத்துச் சொல்லியும் இருக்க, பெரியவர்களின் அறிவுரையில், கொஞ்சம் மனசு இலகும் வேதவல்லியை ஒரு முறைப்பால் அடக்கினாள்.
‘என்னவோ போய்த்தொலைங்க’ என்று தண்ணீர் தெளித்துவிடும் அளவு போனது தோழிகளின் அலம்பல். பள்ளியின் ஆசிரியர்கள் முதல் தலைமை ஆசிரியர் வந்து கேட்டும் போகவில்லை.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு!
கீர்த்தனா பள்ளியிலேயே நானூற்று எண்பத்து ஏழு மார்க்குகள் எடுத்து முதலாவதாக வந்தாள். அவள் மேலே படிக்கப் போறேன் என்றதும் அவளுக்குத் தனி கவனிப்பு நடந்தது. இதற்காகத்தானே அவள் விழுந்து விழுந்து படித்தது. அவளின் நினைப்புபோல் ஆராதனாவின் மேல் உயிரையே வைத்திருக்கும் தந்தையும், சின்ன மகளைப் புகழ்ந்து பேச ஆராதனாவின் காதில் புகை வந்தது.
மெல்ல அக்காவிடம் வந்த தங்கை, "ஆரூ செல்லம்! உன்னைவிட நான் நாலு மார்க் ஜாஸ்தி எடுத்துட்டேனே" என்று பெருமையடித்தாள்.
இந்த ஒத்த வார்த்தையை சொல்லித்தான், அவள் அக்காவை வாயடைக்க வைத்து விடுவாள்.
சட்டென்று முடிவெடுத்து, "அப்பா நானும் படிக்கப் போறேன்” என்று தந்தையின் முன் நின்றவளை வித்தியாசமாகப் பார்த்தார் கேசவன்.
“ஏன்டா தனா? உன் ப்ரைவேசி என்ன ஆகிறது? பக்கத்துல உள்ள குட்டிங்கள்ல இருந்து, பெரிய பிள்ளைங்க வரை கூட்டுட்டுச் சுத்துறியே அதெல்லாம் படிக்கப் போனா முடியாதே. மரம் ஏறுறது, சின்னப் பசங்களோட கபடி விளையாடுறது, எதுவும் இருக்காதே” என்றார் நிதானமாக.