• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
2


திருநெல்வேலி டவுன்:

"முடியாது. முடியாது. முடியாது" என்ற சத்தம் சுத்தி இருந்த நாலைந்து வீடுகளுக்கும் கேட்டிருக்கும். ஏன் நாற்பது வீடுகளுக்குக் கூட கேட்டிருக்கும். அது கிராமமாக இருந்திருந்தால்.

"சொன்னா கேளுமா. அம்மாவே தேய்ச்சி விடுறேன். நீ சீக்கிரம் குளிச்சி முடிச்சா, அப்படியே என் வேலையும் முடிஞ்சிரும். பாரு உன் தங்கச்சி உனக்கு முன்னாடியே குளிச்சிட்டு கிளம்புறா” என்றார் அவளின் தாய்.

உள்ளே இருந்து ஆடை மாற்றிக் கொண்டிருந்தவள், இதுக்காகத்தானே நான் முதல்ல குளிச்சது” என்று அவளும்,

“என்னைத் திட்டு வாங்க வைக்கணும்னே எல்லாத்தையும் பண்ணுது பாரு” என்று இவளும் கரித்துக் கொட்டினர்.

“அம்மா. அம்மா ப்ளீஸ்ம்மா. காலேஜ்ல கிண்டலடிக்கிறாங்கம்மா. ஒரு இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் மாதிரியா வர்றன்னு பயங்கரமா நக்கலடிக்கிறாங்கம்மா. என் செல்லம்ல வேண்டாம்மா. வாரமானா, இன்னைக்கு வெள்ளிக்கிழமைன்னு உன் தலையில் உள்ள சீயக்காய் வாசத்தை வச்சி சொல்லிரலாம்னு சொல்றாங்க. அது மட்டுமா? வாசம் தூக்குதுன்னு ஒருத்தி சொன்னா, நாத்தமடிக்குதுன்னு ஒருத்தி சீண்டிக்கிட்டிருக்கா. அதை விடுங்க. நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இருக்கே ஒரு குரங்கு. அவ என்னை எப்படிப் பார்க்கிறான்னு தெரியுமா? வேதாவாம் வேதா. வேதவல்லின்னு முழுப்பெயர் சொல்லி கூப்பிடணும் அந்தப் பல்லிய” என்று தோழியை வகைதொகையில்லாமல் திட்டினாள்.

"என்னையவாடி இவ்வளவு காலையில பாசமா பாராட்டிக்கிட்டிருக்க" என்று சரியான நேரம் பார்த்து நின்றாள் அவளின் நட்பு வேதவல்லி..

“எப்படிடி எங்கம்மா சீயக்காய் டப்பாவைத் தூக்கினதும் மூக்குல வேர்க்குதா என்ன? கரெக்டா கலாட்டா பண்ண வந்திட்ட? என்று நக்கலாக கேட்டாள்.

"மூக்குக்கு வாசம் வரலைடி ஆத்தா. காலைல ஆறு மணிக்கு, மாதா கோவில் மணி அடிக்கிற மாதிரி, வெள்ளிக்கிழமை ஆனா நீ முடியாதுன்னு கத்துற சத்தம் நம்மத் தெரு தாண்டி, பக்கத்து தெரு வரைக்கும் போகுது. ஒரு சிறப்பு என்னன்னா, சேவல் பார்க்கிற வேலையை நீ பண்ணுற. அதான் எட்டி ஒரு பார்வை பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று சலிப்பாகச் சொன்னாள்.

தோழியின் கால்வாரலில் பல்லைக் கடித்துக் கொண்டு, “அதான் பார்த்துட்டல்ல. இப்பக் கிளம்பு. உனக்கும், உள்ள இருக்காளே அவளுக்கும் இதே வேலையாகிப் போச்சி. எட்டு மணிக்கு ரெடியாகி இரு வர்றேன். இன்னைக்குப் பார்த்தா காலேஜ் கடைசி நாளா இருக்கணும். இன்னும் எத்தனை நட்புகள் என்னை என்னென்ன பாடுபடுத்தப் போகுதுங்களோ, அந்த முருகனுக்குத் தான் தெரியும்” என்றாள்.

வேதவல்லி சென்றதும் தலைக்கு சீயக்காய் போட்டுக் குளித்து, இடுப்பு வரை அடர்த்தியாக இருந்த முடியை, அழகாகப் பின்னலிட்டு கிளம்பி தோழியைப் பார்க்க வந்தவள், உள்ளே இருந்து வந்த சத்தத்தில் வாசலிலேயே நின்றாள்.

“ஏன் வள்ளி? வாரம் ஒரு முறை சீயக்காய் போட்டுக் குளிச்சா குறைஞ்சா போயிருவ. எப்படித்தான் அவளுக்கு நீ ஃப்ரண்டா இருக்கியோ” என்ற வார்த்தையை வெளியிலிருந்து கேட்டவளுக்கு சிரிப்புச் சிரிப்பாக வந்தது.

இவ்வளவு நேரம் தோழி, அவளின் அம்மாவிடம் அடித்த லூட்டியைப் பார்த்தவளால், தன்னுடையத் தாய் அவளைவிடத் தன்னை மட்டம் தட்டிப் பேசவும் கோவத்தில், “அம்மா அவள் ஒண்ணும் எழுந்திருச்சி பொறுப்பா குளிக்கலை. அவங்கம்மா திட்டித் திட்டிதான் குளிக்க வச்சாங்க. நீங்க என்னடான்னா அது தெரியாம, அவளோட நான் மோசம்னு சொல்றீங்க” என்று கத்தினாள்.

“அவள் அழுதாலும், அடம் பிடிச்சாலும், அவ அம்மா சொல்றதைக் கேட்டாளா, இல்லையா? ஆனா, நீ அப்படியா இருக்கிற?”

இதுக்கெல்லாம் மூலகாரணமான தோழியின் மேல் கோவம் கோவமாக வந்தது. ‘எரும. படிப்பும் வேண்டாம். ஒரு மண்ணும் வேண்டாம்னு இருந்தவளை, இழுத்து விட்டுட்டு, டெய்லி திட்டு வேற வாங்க வைக்கிறா’ எப்பொழுதும்போல் இன்றும் திட்டித்தீர்க்க,

“ம்ஹூம். இது சரிப்படாது. இப்படியே போனா அந்தப்புள்ள போன்கிருவா’ என்று நினைத்தவள், "வேதா கிளம்பிட்டியா? டைம் ஆகுது. கிளம்பலாம் வா” என்றழைத்து உள்ளே வந்தாள்.

"வாங்க மேடம் டைமுக்கு வருவீங்களே. எல்லாம் உன்னால தான்டி" என்று தோழியை முறைக்க,

அவளைக் கண்டு கொள்ளாமல், "என்னம்மா? என்னாச்சி? எதுவும் பிரச்சனையா?” என்று வேதவல்லியின் தாயிடம், எதுவும் தெரியாத அப்பாவி போல் கேட்டவளுக்கு, அருகிலேயே பல் கடிபடும் ஓசை கேட்க, தோழியின் கோவத்தின் அளவு தெரிந்தது.

“ஒண்ணும் இல்லம்மா. உன்னை மாதிரி தலைக்கு சீயக்காய் போட்டுக் குளிக்கச் சொன்னேன். அதுக்குத்தான் கோபம் இவளுக்கு.”

தோழியைப் பார்க்காமலேயே, “அவளோட முடிக்கு சீயக்காய் செட்டாகாதும்மா. அதனாலதான் நான் அவளை வற்புறுத்தலை. இல்லைனா அவளை யாரு விடுறது சொல்லுங்க” என்று அவரை திசைதிருப்பினாள்.

“என்னவோ சொல்ற. சீக்கிரம் கிளம்புங்க நேரமாகுது” என்று இருவரும் அவரிடம் விடைபெற்று வெளியே வந்த நொடி,

“எல்லாம் உன்னாலதான்டி. படிப்பு வேண்டாம்னு விட்டவளை, எனக்காக, எனக்காகன்னு சொல்லி, இப்ப டெய்லி என்னைப் படுத்துறாங்க. உனக்கென்ன?”

“சாரி வேதா. இனி நான் வெள்ளிக்கிழமை கத்துறதை கம்மி பண்ணிக்கிறேன். சாரி. சீயக்காய் போடுறதை நிறுத்திருறேன்.”

“ஆமா. நீ இதை ஆயிரம் தடவையாவது சொல்லியாச்சி. நாங்களும் ஆயிரம் முறை கேட்டாச்சி. நீ விட்டாலும் உங்கம்மா விடணுமே. போடி நீயுமாச்சி உன்னோட சீயக்காவுமாச்சி. அச்சோ! பஸ் வந்திருச்சி. ஏய்! ஆரா! வா சீக்கிரம். பஸ் வந்திருச்சி” என்று தோழியை இழுத்துச் சென்றாள் வேதவல்லி.

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் வழக்கமாக வரும் ஓட்டுனர், நடத்துனரிடம் ஒரு புன்னகையைச் செலுத்தி, முன்பகுதியிலேயே அமர்ந்து, கொஞ்சம் நேரம் சலசலத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆரா! முழுப்பெயர் ஆராதனா. அப்பா கேசவன். தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்து திருமணமாகி சில வருடங்களில் திருநெல்வேலியில் நிரந்தரமாகக் குடியேறியது குடும்பம்.

பதினாறு வருடங்களுக்கு முன் திருநெல்வேலி டவுனில், சின்னதாக ஆரம்பித்த மளிகைக் கடை, இன்று வளர்ந்து பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோராக வளர்ந்திருக்கிறது.

அம்மா செல்வலட்சுமி. இல்லத்தை இனிமையாக்கும் இல்லத்தரசி. பெண்களுக்கு கண்டிப்புக்கு கண்டிப்புமாக, பாசத்திற்கு பாசமுமாக இருப்பவர்.

கேசவன், செல்வலட்சுமி தம்பதியருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் ஆராதனா. மாநிறத்தில் அழகாக ஆளைக் கவரும் அழகி. அவளுக்கு அழகு சேர்ப்பது அவளின் தெற்றுப்பல். புன்னகை அரசி. படிப்பில் கெட்டிக்காரி. இந்த பட்டங்களோடு இருப்பவள். வாயிலும், வம்பிழுப்பதிலும் கூட கெட்டிக்காரி தான். அவள் இருக்குமிடத்தில் அவள் தனியாகத் தெரிவாள்.

இரண்டாமவள் கீர்த்தனா. என் அக்கா பத்தடி பாய்ந்தால், நான் கூட ஒரு பூஜ்யம் அதிகம் சேர்த்து, நூறு அடி பாய்வேன் என்று அதைச் செயலிலும் காட்டுபவள். படிப்பிலும், சேட்டைகளிலும், அப்படியே அக்காவின் நகல். ஆராதனாவை விட இரண்டு வயது இளையவள்.

ஆராதனாவை ஒரு ஆள் மிரட்டுகிறார்கள் என்றால், அது கீர்த்தனாவால் மட்டுமே முடியும். ஆராதனா எவ்வளவுதான் எகிறி எகிறிக் குதித்தாலும், ஒரே ஒரு வார்த்தையைச் சொல்லி வாயை அடைத்து விடுவாள், அவளின் பாசமலர்.

ஆராதனா தமிழ் வழிக் கல்வியில், பத்தாம் வகுப்பில் நானூற்று எண்பத்து மூன்று மதிப்பெண்கள் எடுத்து. அந்தப் பள்ளியிலேயே முதலாவதாக வந்தாள். நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு, அந்தப் பள்ளியில் இவள்தான் முதல் மதிப்பெண் எடுத்திருக்கிறாள். வேதவல்லி நானூற்று இருபது மதிப்பெண்கள் எடுத்திருந்தாள்.

தோழிகள் இருவரும் தனிமையில் இருக்க, ‘அடுத்து எந்தப் பள்ளியில் சேரலாம்? இல்லை இதே பள்ளியில் தொடரலாமா?’ என்ற யோசனையில் வேதவல்லி இருக்க,

“நான் பத்தோட படிப்பை நிறுத்திரப் போறேன்” என்று ஒரு குண்டைத் தூக்கி தோழியின் மேல் அசால்ட்டாகப் போட்டாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த வேதல்லி அதிர்ந்து போய், “என்னடி உளறல் இது? ஸ்கூல்ல நீதான் முதல் மார்க். நியாபகம் இருக்கா? என்றாள்.

“ம்... நல்லாவே நியாபகம் இருக்கு. அதுக்கென்ன இப்ப?”

“அதுக்கென்ன இப்பவா? ஹேய்! அப்புறம் ஏன் படிக்கலைன்னு சொல்ற? மேல படிச்சா, நல்ல வேலைக்குப் போகலாம். நல்ல படிச்ச வரனா வருதா, இன்னும் ஈசி. கல்யாணம் செய்து செட்டிலாகிரலாம்.”

“எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் டென்த்தோட நிற்கப் போறேன். படிக்கவே பிடிக்கலை. புக்கு, படிப்பு, ஸ்கூல், டீச்சர், எக்ஸாம்னுட்டு போடி. போர் அது. அதான் முடிவு பண்ணிட்டேன். ஆமா நீ என்ன செய்யப்போற?”

“நான் மேல படிக்கப் போறேன். எல்லாரும் நல்ல மார்க் எடுத்திருக்க நல்லா படின்னு ஊக்கப் படுத்தினாங்க தெரியுமா? அப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. இன்னும் இன்னும் படிக்கணும் தோணுது” என்றாள் சந்தோசமாக.

“ஏன், என்னைக் கூடத்தான் சொன்னாங்க. நாம என்ன நினைக்கிறோமோ, அதைத்தான் செய்யணும். நீயும் பத்தோட நிப்பாட்டிக்கோ” என்றதும் வேதாவல்லிக்குப் பயத்தில், உடல் தூக்கிப் போட்டது போல் அதிர்ந்தது.

“அச்சோ! என்னால முடியாது. நான் படிக்கணும். நல்ல மார்க் எடுத்துட்டு படிக்காம இருக்கக்கூடாது” என்ற வேதாவை,

“படிச்சி என்னடி செய்யப்போற? படிச்சா வேலைக்குப் போகணும். வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சா கிழவி ஆகும் வரை சம்பாதிச்சிட்டே இருக்கணும். வேலைக்குப் போகலன்னா, படிச்சவனுக்குக் கல்யாணம் பண்ணித் தருவாங்கன்னு உனக்குத் தெரியுமா? ஏதோவொரு கிராமத்தில் இருக்கிற மாடு மேய்க்கிரவனுக்கோ, இல்ல மெக்கானிக்குக்கோ கொடுபாங்க. அதுக்கு நாம ஏன் படிக்கணும்? படிக்காம இருந்தா நம்ம தலைவிதின்னு அந்த வாழ்க்கையை ஏத்துக்கலாம். படிச்சிட்டு அந்த வாழ்க்கையை மனசார ஏத்துக்க முடியுமா? நல்லா யோசிடி” என்று தன் திறமைகள், புழுகு மூட்டைகள் அனைத்தையும் அவிழ்த்துவிட்டாள்.

அந்த நேரத்தில் தோழியின் வார்த்தைகள் சரியென்று பட, சாத்தான் ஓதிய வேதத்தில் மயங்கி, "ஆரு... நீ சொல்றது தான்டி கரெக்ட்" என்று வேதவல்லியின் வாயாலேயே சொல்ல வைத்தாள் அவளின் உ(யி)யர் நட்பு.

தானும் கெட்டு, தோழியையும் கெடுத்து, இரு வீட்டினர் கண்டித்தும், அடித்தும் படிப்பின் அருமையை எடுத்துச் சொல்லியும் இருக்க, பெரியவர்களின் அறிவுரையில், கொஞ்சம் மனசு இலகும் வேதவல்லியை ஒரு முறைப்பால் அடக்கினாள்.

‘என்னவோ போய்த்தொலைங்க’ என்று தண்ணீர் தெளித்துவிடும் அளவு போனது தோழிகளின் அலம்பல். பள்ளியின் ஆசிரியர்கள் முதல் தலைமை ஆசிரியர் வந்து கேட்டும் போகவில்லை.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு!

கீர்த்தனா பள்ளியிலேயே நானூற்று எண்பத்து ஏழு மார்க்குகள் எடுத்து முதலாவதாக வந்தாள். அவள் மேலே படிக்கப் போறேன் என்றதும் அவளுக்குத் தனி கவனிப்பு நடந்தது. இதற்காகத்தானே அவள் விழுந்து விழுந்து படித்தது. அவளின் நினைப்புபோல் ஆராதனாவின் மேல் உயிரையே வைத்திருக்கும் தந்தையும், சின்ன மகளைப் புகழ்ந்து பேச ஆராதனாவின் காதில் புகை வந்தது.

மெல்ல அக்காவிடம் வந்த தங்கை, "ஆரூ செல்லம்! உன்னைவிட நான் நாலு மார்க் ஜாஸ்தி எடுத்துட்டேனே" என்று பெருமையடித்தாள்.

இந்த ஒத்த வார்த்தையை சொல்லித்தான், அவள் அக்காவை வாயடைக்க வைத்து விடுவாள்.

சட்டென்று முடிவெடுத்து, "அப்பா நானும் படிக்கப் போறேன்” என்று தந்தையின் முன் நின்றவளை வித்தியாசமாகப் பார்த்தார் கேசவன்.

“ஏன்டா தனா? உன் ப்ரைவேசி என்ன ஆகிறது? பக்கத்துல உள்ள குட்டிங்கள்ல இருந்து, பெரிய பிள்ளைங்க வரை கூட்டுட்டுச் சுத்துறியே அதெல்லாம் படிக்கப் போனா முடியாதே. மரம் ஏறுறது, சின்னப் பசங்களோட கபடி விளையாடுறது, எதுவும் இருக்காதே” என்றார் நிதானமாக.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
ஆனால், அதனுள் ஏகப்பட்ட கேலி இருப்பதை உணர்ந்தவள், “அப்பா நீங்க என்னைப் படிக்க வைக்கப் போறீங்களா? இல்லையா? எஸ் ஆர் நோ சொல்லுங்க போதும். இதான் சாக்குன்னு என்னைக் காலை வார வேண்டாம்” என்றாள் கோவத்தில்.

“என்ன திடீர் ஞானோதயம்?”

“அ..அது அப்பத் தோணலை. அதனால போகல. இப்பத் தோணுது அதான் படிக்கப் போறேன்.”

“வேதா கூட சுத்த முடியாதே?” அவர் கேள்வியை முடிக்கும் முன், "அவளும் தான்ப்பா வர்றா" என்றாள் தோழியைக் கேட்காமலேயே.

“நல்ல முடிவுதான். உன் தங்கை கூடத்தான் படிக்கப் போகணும். யாராவது உன்னைப் பற்றி எதாவது சொன்னா, உனக்கு கஷ்டமா இருக்காதா? என்னடா பண்ணலாம்? என அவரே மகளிடம் பதில் கேட்க...

“இல்லப்பா. கீர்த்தி ப்ரைவேட் ஸ்கூல்ல படிக்கட்டும். நாங்க கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்கிறோம். அதுக்கும்மேல யாராவது கேட்டா, நாங்க ட்வின்ஸ்னு சொல்லிருறேன்” என்றாள்.

நடுவில் புகுந்த கீர்த்தி, "இல்லப்பா அக்கா ப்ரைவேட் ஸ்கூல்ல படிக்கட்டும். நான் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்கிறேன்" என்றாள்.

“இல்ல கீர்த்தி. நான் சொன்னதுதான் கரெக்ட். இனி எதுவும் பேசின அப்புறம் நான் படிக்கவே போகலை” என்று மிரட்டினாள்.

“இல்ல, இல்ல, இல்லக்கா. நீ அங்கேயே படி” என்றவள் மனதினுள், ‘இவளைப் படிக்க வைக்கிறதுக்கு, நான் இந்த ரெண்டு வருஷமா தலை கீழா நின்னு தண்ணி குடிச்சிருக்கேன். அதை ஏன் நாமளே கெடுக்கணும்?’ என்று ஒத்துக் கொண்டாள் கீர்த்தனா.

“என்னம்மா நீங்க? உங்க ரெண்டு பேருக்கும் இடையில வித்தியாசம் பார்க்கிற மாதிரி தோணுது. இதுக்கு சேர்ந்தே படிக்கலாமே” என்றார் அவரும்.

“இல்லப்பா. இது நானா எடுத்த முடிவு. எல்லாவிதமாகவும் யோசிச்சி தான் முடிவெடுத்திருக்கேன். எனக்கு எந்த பாரபட்சமும் தோணாதுப்பா. அவ என்னோடத் தங்கைப்பா. எதிரியோ, விரோதியோ இல்லைப்பா” என்றாள்.

தன் பெண்களின் இந்த விட்டுக்கொடுக்கும் குணத்தில் பெருமைப்பட்டவர், “சரிம்மா. அப்படியே செய்யுறேன். ஹ்ம்.. உன்னைப் பார்க்கும் போது, ஒரு சில டைம் அப்படியே எங்க அக்காவைப் பார்க்கிற மாதிரி இருக்கு. அப்படியே அக்காவோட குணம். என்ன, எங்க அக்கா அமைதியா எதையும் தீர்க்கமா சொல்லிருவா. உன்னை மாதிரி வால் தனம் மட்டும் செய்ய மாட்டாள்" என்றவருக்குத் தன் அக்காவின் நினைவு பசுமையாய்.

“அதுவாப்பா. வால்தனம் மட்டும் உங்ககிட்ட இருந்து வந்தது. நீங்க சின்ன வயசுல பண்ணிய சேட்டையை எல்லாம் தாத்தா சொல்லியிருக்காங்க” என்று சிரித்தாள்.

“போ வாலு. நாளைக்கே மூணு பேருக்கும் போயி அப்ளிகேஷன் வாங்கிட்டு வர்றேன்.”

"தேங்க் யூப்பா" என்று தந்தையைச் செல்லம் கொஞ்சியவள். ‘இந்த வேதாவை எப்படிச் சம்மதிக்க வைக்கிறதுன்னு தெரியலையே. ம்ம்ம்... சொல்லிப் பார்க்கலாம். இல்லைனா, உண்மையான காரணத்தைச் சொல்லி சம்மதிக்க வைக்க வேண்டியதுதான்" என தோழியை தேடிச் சென்றாள்.

வேதாவை தேடிச்சென்ற ஆராதனாவிடம், “அவ தோட்டத்துல இருக்கிறாமா. போய்ப்பாரு” என்றார் கலைவாணி.

பின்னால் சென்றால், கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருந்த தோழி கண்ணில்பட, அவளருகில் சென்றவள், “என்னாச்சி வேதா? அம்மா எதுவும் திட்டினாங்களா? ஏன் சோகமா இருக்க?” என்று தோளில் கை வைக்க,

அவளின் கையைத் தட்டிவிட்டுப், “போடி. எல்லாம் உன்னால தான். பத்துக்கு மேல படிக்க விடாம பண்ணிட்ட. இப்ப பக்கத்திலேயே உன் தங்கை, நிறைய மார்க் எடுத்ததும் சாக்லேட் கொடுக்க வந்தவகிட்ட க்ராஸ் கொஸ்டினா கேட்டு, அவள் வாயைப் புடுங்கி அவ என்ன செய்யப்போறா, என்ன க்ரூப் எடுக்கப் போறான்னு கேட்டுட்டு, என்னை ஜாடையில திட்டுறாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி தெரியுமா? எப்பவும் யாரோடவாவது சேர்த்து வைத்து பேசுறதே வேலையா போச்சி. நான் படிச்சிருந்தா இப்ப பனிரெண்டாவது முடிச்சிருப்பேனாம்" என்று அழுதாள்.

தான் செய்த தவறு என்று தெரிந்ததால், என்ன சொல்லித் தேற்றுவது என தெரியாமல் விழித்தவள், பின்னர் சுதாரித்து, “சாரிடி. என்னாலதான எல்லாம். அந்த டைம் ஏதோ விளையாட்டுத்தனமா தெரிஞ்சது. இப்ப யோசிச்சா, இவ்வளவு மார்க் எடுத்துட்டு படிக்காம இருக்கிறோமேன்னு கஷ்டமா இருக்குடி. நாம படிக்கலாமா?" என கேட்டாள்.

“லூசாடி நீ. இதை இப்ப வந்து கேட்கிற? இரண்டு வருஷம் போச்சுது. ஆளையும், மூஞ்சியும் பாரு” என்று திட்டிவிட்டு, “போலாமா ஆரு? நம்மளைக் கேலி பண்ண மாட்டாங்களா? படிச்சதெல்லாம் மறந்திருக்கும்தான? சரியாகிருமா?" என்றவள் கண்களில் அழுகையுடன் ஒரு நம்பிக்கை.

“பண்ணினா பண்ணிக்கட்டுமேடா. நாம ஸ்டெடியா நின்னு படிச்சி முடிச்சா, யார் நம்மைக் கேட்கிறது. அப்புறம் யாராவது பேசட்டும், நான் ஒரு கை பார்க்கிறேன். அப்பா நாளைக்கு அப்ளிகேஷன் வாங்கப் போறாங்க. உனக்கும் சேர்த்துத்தான் வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கேன். கவர்ன்மெண்ட் ஸ்கூல்தான். உனக்குப் பரவாயில்லையா? இல்லன்னா கீர்த்தி பிரைவேட் ஸ்கூல் போகப்போறா அவகூட போறியா?” என்று கேட்ட தோழியின் அக்கறையில், அழுகை மறைந்து அவளைக் கட்டியணைத்து, “நான் எப்பவும் உன்னோட தான் இருப்பேன். தேங்க்ஸ் ஆரு. என்னைக் கேட்காமலேயே ஃபார்ம் வாங்கி வரச்சொன்னதுக்கு” என்றாள் சந்தோசமாக.

“போடி. என்னால நீ இல்லாமல் தனியா படிக்க முடியாது. அதான் உன்னையும் இழுத்து விட்டுட்டேன்” என்றவள் மனதிலோ, ‘நல்லவேளை உண்மைக் காரணம் இப்பச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருச்சி” என்று நிம்மதியடைந்தாள்.

அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக மற்றவர் கேலியைப் புறம் தள்ளி நன்கு படித்தார்கள்.

பனிரெண்டாம் வகுப்பில் ஆராதனா, வேதவல்லி, கீர்த்தனா மூவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேறி வர, ஆராதனா பொறியியல் படிக்கப் போவதாகச் சொன்னதும், வேதாவும் அவளுடனே சேருவேன் என்று நிற்க, தோழிகள் இருவரையும் பொறியியல் சேர்த்தார்கள்.

கீர்த்தனா மருத்துவக்கல்லூரி சேர்ந்தாள்.

கல்லூரியிலேயே நேர்காணல் வைத்து வேலைக்கு எடுப்பார்கள் என்பதற்காகவே, வேதவல்லியையும் தன்னோடு சேர்த்து நன்றாகப் படிக்க ஊக்கப்படுத்தினாள். காரணம் வேலைக்குச் சென்றாலும் ஒரே நிறுவனத்தில் சேர வேண்டும் என்பதற்காக.

கடைசி வருடம் சென்னையில் உள்ள, பிரபல நிறுவனத்திலிருந்து வருகிறார்கள் என்று தெரிந்ததும், சின்னதாக ஏற்பட்ட உதறல்களையும், பயங்களையும் புறம் தள்ளி, தோழிக்கும் தைரியம் சொன்னாள்.

“இந்த இன்டர்வியூவில் எப்படியாவது பாஸாகி, சென்னை போகணும். என்னோட லட்சியக் கனவு பலிக்கணும் முருகா” என்று மனமுருக வேண்டிக் கொண்டாள்.

நேர்காணலுக்குச் சரியான பதில்களைத் தைரியமாகச் சொன்னாள். அவளின் பேச்சுத் திறமையில் கவரப்பட்ட நிர்வாகம், ஆராதனாவைத் தேர்ந்தெதுக்க, அவளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தோழியும் தேர்வாகி வர வேண்டுமென்று திரும்பவும் வேண்டிக்கொண்டாள். ‘தனக்காக, தன் சொல்லுக்காக இரண்டு வருடப் படிப்பை இழந்தவளாயிற்றே. அவள் முதலில் ஜெயிக்க வேண்டும். இல்லையெனில் தானும் வேலைக்குச் செல்வதில்லை’ என்ற முடிவில் இருந்தாள்.

நாம் நமக்கென கடவுளிடம் வேண்டுவதை விட, பிறருக்காக மனமுருக வேண்டினால் அந்த வேண்டுதல் பலிக்கும் என்பது உண்மையிலும் உண்மை.

ஆராதனாவின் வேண்டுதல் கடவுளைச் சேர, தோழிகளைப் பிரிக்க மனமில்லாமல், அதே நிறுவனத்தில் தேர்வானாள் வேதவல்லி.

நேர்காணல் முடிந்து அன்று திரும்பும் பொழுது, “ஹேய்! சென்னைக்குப் போய்த்தான் ஆகணுமா ஆரு? முதல்ல அவ்வளவு தொலைவு நம்மளை விடுவாங்களா? ஈசியா செலக்ட் ஆகிட்டோம். வீட்டில் விடணுமே” என்றாள் வருத்தமாக.

“விடுவாங்கடி. விடணும். விடலன்னா விட வைக்கணும். அதுக்கு என்ன பண்ணணுமோ, அதைப் பண்ணணும்” என்றாள் தீவிரமாக.

தோழியின் வித்தியாசமான தொணியில், திரும்பி அவளின் முகம் பார்த்தவளுக்கு, அவளின் தீவிர பாவனை கண்ணில்பட்டது. ஆனால், அதை ஆராயாமல் விட்டவள், “எங்க வீட்டுல ஒத்துப்பாங்களா ஆரு? மேரேஜ் பண்ணனும்னு சொல்லிட்டிருந்தாங்கடி. எப்படி வேலைக்குப் போக முடியும் சொல்லு?”

“இதுக்கு மேல் உன் இஷ்டம் வேதா. ஆனா எங்க வீட்லயும் ஆரம்பிச்சாங்கன்னா, அப்புறம் ஓபனா உண்மையை ஒத்துக்க வேண்டியதுதான். நான் திரும்பவும் படிச்சதுக்கான காரணத்தையும், அதுவும் குறிப்பிட்டு சென்னைக்குத் தான் போகணும்னு நினைச்ச காரணத்தையும் சொல்லிருவேன். எது எப்படியோ நான் சென்னை போகணும். என்னோட வாழ்க்கை அங்கதான் இருக்கு. எனக்காக உன்னைக் கஷ்டப்படுத்த விரும்பலை வேதா. இதுவரைக்கும் நீ என்னோட இருந்ததே பெரிய விஷயம். இனி உன்னோட அப்பா, அம்மா இஷ்டப்படி அவங்க பேச்சைக் கேட்டு நல்ல பொண்ணா நடந்துக்க” என்றாள் மனதார.

“ஆரு! என்னடி பேசுற? ஏன் சென்னைக்குப் போறதுல இவ்வளவு தீவிரமா இருக்க? உன்னோட எல்லா உறவுகளும் இங்கே இருக்கும்போது, அங்க யார் இருக்காங்கன்னு சென்னை போகணும்னு சொல்ற?” என்றாள் புரியாது.

“அங்க யாரும் இல்லைன்னு, உனக்கு யார்டி சொன்னது? என் அத்தை பெத்த மகன் சரவணன். என் அத்தான் அங்கதான் இருக்காங்க. அவங்க தான் என்னோட எதிர்காலம். அவங்களைத் தேடிக் கண்டுபிடிச்சி, கல்யாணம் பண்ணிக்கிறது தான் என்னோட லட்சியமே.”

அவள் சொன்னதைக் கேட்டு வாயடைத்துப் போன வேதவல்லி, அவளிடம் திரும்பி, “ஆரு அதை இன்னும் மறக்கலையாடி. சின்ன வயசுல சும்மா விளையாட்டுக்குச் சொல்றன்னு நினைச்சேன். நாளாக நாளாக மறந்திருப்பேன்னு நினைச்சேன்டி. நீ இன்னும் அதை மனசுலதான் வச்சிட்டிருந்தியா? என்னடி இது புதுக் குழப்பம். வேண்டாம் ஆரு. உன்னோட லைஃப்ல ரொம்ப ரிஸ்க் எடுக்கறியோன்னு தோணுது.” தோழி வாழ்க்கையில் தவறிவிடுவாளோ என்ற பயத்தில் எடுத்துச் சொன்னாள்.

“அப்படில்லாம் இல்லைடி. அதிலும் இது புதுக்குழப்பம்லாம் இல்லை. சின்ன வயசுலயிருந்து மனசுல சுமந்துக்கிட்டு இருக்கிறது. இப்ப என்னோட வாழ்க்கை அவங்கதான்ற முடிவுல இருக்கேன். பாதியில நிறுத்தின படிப்பைத் தொடர்ந்ததுக்கு காரணமும் அதான். நாம பத்தோட நிறுத்தினதும் நம்ம கீர்த்தி பத்து படிக்கும்போது, அவங்க டீச்சர் நமக்குப் பக்கத்துலதான் இருந்தாங்க. உனக்குத் தெரியும்தான?”

“ஆமா. அதுக்கு இப்ப என்ன?”

“அதுக்கு ஒண்ணும் இல்லை. நான் அவங்க தங்கை நிர்மலாகிட்ட பேசிட்டிருக்கும் போது, என் மார்க் பற்றி விசாரிச்சாங்க. நான் மார்க் சொன்னதும், அவங்களுக்கு ஆச்சர்யம். புடிப்பை ஏன் பாதியில நிப்பாட்டினேன்னு கேட்டு என்னைத் திட்டினாங்க. அப்புறமா பனிரெண்டாவது முடிச்சதும், என்னென்ன க்ரூப் எடுத்தா என்னென்ன படிக்கலாம். என்ன வேலையிருக்குன்னு பட்டியல் போட்டாங்க. நல்ல மார்க் எடுத்தோம்னா, கேம்பஸ் இன்டர்வியூ வைக்கிற காலேஜா இருந்தா, சென்னை, பெங்களுர்னு போகலாம். ஆறு மாதம் ட்ரெயினிங் வைப்பாங்க. அப்புறம், அதே கம்பெனியில் வேலை பார்க்கலாம். இல்லன்னா வேற கம்பெனியில் ஜாயின் பண்ணிக்கலாம் சொன்னாங்க.”

“எனக்குச் சென்னைன்னு சொன்னதும், சந்தோஷம் தாங்கலை. அந்த வினாடி முடிவு பண்ணிட்டேன். அப்புறம்தான் கீர்த்தி மார்க்கை காரணம் காட்டி நானும் படிக்கப் போறேன்னு சொன்னேன். என்ன ரெண்டு வருஷம் லேட்டாகிருச்சி முன்னாடியே தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். நான் பண்ணின தப்பைச் சரி பண்ணனும்னு தான், உன்னையும் என்னோட படிக்க இழுத்தேன். இனியும் உன்னைக் கஷ்டப்படுத்த விரும்பலை. நீ கல்யாணம் பண்ணி ஜாலியா செட்டிலாகிரு. நான் என் மச்சானைத் தேடிட்டே வேலையும் பார்க்கிறேன்” என்றாள்.

“எப்படி ஆரு இந்த எண்ணமெல்லாம் வந்தது?”

“எந்த எண்ணம்?”

“ம்... உன் அத்தை மகனை கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம். உன் அப்பா, அம்மா இந்த மாதிரி பேசி பார்த்ததில்லையே?” நீ மட்டும் எப்படி?” அருகில் வீடு என்பதால் தோழியைப் பற்றி அறிந்து வைத்திருப்பவள். அந்த எண்ணத்தை யார் விதைத்தது என்று தெரிந்துகொள்ளக் கேட்டாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“ஓ... அதுவா, அது சின்ன வயசுல எனக்கு எங்க அத்தைன்னா ரொம்பப் பிடிக்கும். அப்பாவுக்கு, அவங்க அக்கான்னா உயிர். எப்பவும் எங்க அத்தையை புகழ்ந்து பேசிட்டே இருப்பாங்க. இப்பவரைக்கும் அப்படித்தான். அவங்க போனபிறகு, பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. உங்க அத்தை பையனைக் கல்யாணம் கட்டிக்கோ. உறவு விட்டுப் போகாது. அதைவிட பையனும் ரொம்ப நல்லவனா இருக்கான். இந்த வயசுலயே ரொம்பப் பொறுப்பா யோசிக்கிறான். அவன் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்தா என்னைவிட சந்தோஷப்படுறவங்க யாரும் இருக்க மாட்டாங்க. உங்கப்பா, அம்மாகிட்ட சொன்னேன். ஆனா! அவங்க இதைக் கண்டுக்கவே இல்லை. இந்த மாதிரி சின்னப் பொண்ணுகிட்ட சொல்லாதீங்கன்னு சொல்லிட்டாங்க. இருந்தாலும், மனசு கேட்கலை தாயி. என்னோட கடைசி ஆசைன்னு கூட வச்சிக்கோ. உனக்கு விவரம் தெரியிறதுக்குள்ள எனக்கு எதாவது ஆகிருச்சின்னா, இதை யாரும் சொல்ல வழியில்லாமலேயே போயிரும்னு சொன்னாங்க.”

“அதை மாதிரியே போய்ட்டாங்க. அத்தை குடும்பத்தை எனக்குமே பிடிக்கும்தான். அதுல, பாட்டி வேற சொல்லிச் சொல்லிப் மனசுல பதிய வச்சிட்டாங்க. ஒரு நாள் அப்பா, இந்த விஷயமா அம்மாகிட்ட பேச்செடுத்தப்ப, குழந்தை மனசுல இந்த வயசுல அந்த மாதிரிச் சொல்லி வைக்காதீங்க. அது நடக்கலன்னா பாதிப்பென்னவோ, நம்ம பொண்ணுக்குத் தான்னு சொல்லி, அப்பாவோட வாயடைச்சிட்டாங்க. அப்பாவுக்கு உள்ளூர ஆசைதான் போல. பார்க்கலாம் வேதா. என்னோட வாழ்க்கை லட்சியம் ஜெயிக்குதான்னு” என்று பேசியபடியே இருவரும் வீட்டிற்கு வர வேதவல்லி விடைபெற்றுச் சென்றாள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top