- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
19
மூன்று கார்கள் வரிசையாக வர, செக்யூரிட்டி கேட் திறந்ததும் நுழைவாயில் சென்று முதல் கார் நின்றதும், ஆரத்தி எடுப்பதற்காக ஈஸ்வரி வேகமாக வீட்டினுள் நுழைந்தார்.
கார் நின்றதும் கீழே இறங்கி “வா அவந்தி” என கார்த்திக் அழைக்க, ஒருவித முக இறுக்கத்துடன், கண்ணயர்ந்திருந்தவளை பார்த்தவனுக்கு ‘ஏன் இவள் முகத்தில் சந்தோஷமில்லை?’ என்ற குழப்பம் வந்தது. ‘தனியாக பேசி சரிசெய்யலாம்’ என்றெண்ணி, மனைவியை மெல்ல தொட்டு “அவந்தி வீடு வந்திருச்சி” என்றான்.
கண் திறந்தவளுக்கு மற்றுமொரு அதிர்ச்சி, முதன்முறையாக கார்த்திக்கின் குடும்பத்தை சந்திக்க வந்தபொழுது, ‘என்ன கார்த்திக் நீங்க சொன்ன இடத்துல ஒரு மினி பங்களாதான் இருக்கு’ என்றாளே அங்கேதான் வந்திருந்தார்கள். அப்பொழுதே தெரிந்தது அவர்கள் இருந்தது அவுட்கௌஸ் என்று. அதற்கும் கார்த்திக்கை முறைக்க, அவனோ அன்று சிரித்த அதே சிரிப்பையே பதிலாக்கினான்.
“பொய்யைத் தவிர எதுவுமே என்கிட்ட சொல்லலைல நீங்க? ஒரு விஷயத்துலயும் உண்மையாயில்ல, என்னை நம்பவுமில்ல, இதுல நீங்க போலீஸ் வேற!” என வார்த்தையால் அவனைக் கடித்தாள்.
அவள் தான் கோவிலுக்கு தாமதமாக வந்ததால் தான் கோவப்படுகிறாளோ என்றெண்ணி, “அவந்தி ப்ளீஸ் எதுக்கு கோவப்படுற? நான் வேணும்னேலா...” அவனை முடிக்கவிடாமல் கைதூக்கி நிறுத்தி, “இப்ப நான் இங்க வந்ததுக்கு காரணம் அத்தைதான். இது நிரந்தரமான்னு தெரியாது. எனக்குப் பிடிக்காதது நடந்தாலோ, ரொம்ப உரிமை எடுத்தாலோ, நான் எங்க வீட்டுக்குக் கிளம்பிருவேன்” என்றாள் சற்று மிரட்டலாகவே.
என்ன சொல்லி சமாதானப்படுத்துவது, என்ன செய்வதென்று தெரியாமல் “சரி வா” என்று சற்று இறுகிய முகத்துடனே சென்றான். அவன் பின்னே சென்றவள் கணவனை விட்டு மூன்றடி தள்ளி நின்றாள்.
“அவந்தி ஏன் இவ்வளவு இடைவெளி?” என்ற வைஷ்ணவி கார்த்திக்கின் அருகில் நெருக்கமாக நிறுத்த, தன்மீது உரசியவளை பார்த்து சிநேகமாக சிரித்தவனை, முறைத்து விலகி நின்றாள் அவனின் அழகி.
புவனேஸ்வரி வந்து மணமக்களுக்கு ஆரத்தி எடுத்தார்.
“வலது காலை உள்ளே வச்சி வாங்கண்ணி. தங்களின் வரவு என்றும் நல்வரவே!” என்று சந்தோஷ் பூத்தூவி வரவேற்றான்.
சில வினாடிகள் வியந்தவள் முகம் தன்னால் மலர, சந்தோஷைப் பார்த்து புன்னகைத்தாள் அவளின் புன்னகையில் ஒருவன் கடுப்பாவதை அறியாமல். தற்செயலாக கணவன் முகம் பார்த்தவளுக்கு, அவனது காண்டான முகம் தெரிய, ‘மவனே மாட்டுனியா! இரு உன்னை ஒருவழி பண்றேன்’ என மனதினுள் எண்ணி, “என்ன சந்தோஷ் பூவெல்லாம்?”
“அழகான எங்க அண்ணியோட வரவேற்புக்குத்தான்.”
“தேங்க்ஸ் சந்தோஷ்.”
“தேங்க்ஸை அப்புறம் பார்த்துக்கறேன்,. இப்ப, யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் அண்ணி” என தலைதாழ்ந்து வரவேற்க, சட்டென்று சிரித்தாள்.
“வாசல்லயே எல்லாத்தையும் பேச வேண்டாம். உள்ள வாங்க” என்றவர், “நித்யாமா, பொண்ணு மாப்பிள்ளைக்கு பால்பழம் ரெடி பண்ணியாச்சா? நான் சொன்னமாதிரி செஞ்சியா?”
“இதோ, நீங்க வந்ததைப் பார்த்ததும் ரெடி பண்ணிட்டேன்ம்மா” என்றபடி வந்தாள் நித்யா. சந்திரகுமார், புவனேஸ்வரியின் வளர்ப்பு மகள்.
பால் பழம் கொடுத்து முடித்ததும், “நான் கமிஷனர் ஆஃபீஸ் வரை போயிட்டு வர்றேன்மா. திரும்பி வர நேரமானாலும் ஆகலாம்” என்று தன் அறைக்குச் சென்று தயாராகி வந்தவன், தாய் தந்தையிடம் சொல்லி மனைவியிடம் திரும்ப, அவளோ அப்பொழுதுதான் அக்கறையாக நேத்ராவிடம் பேசிக் கொண்டிருந்தாள். ‘இவளை... வந்து கவனிச்சிக்கறேன்’ என்று சென்றான். செல்லும் கணவனையே பார்த்திருந்தவள் சின்ன பெருமூச்சுடன் திரும்பினாள்.
“என்னங்க மேடம், ஏக்கப் பெருமூச்சி பெருசா வருது?”
“ப்ச்... நீ வேற சும்மாயிரு வைஷு.”
“ஏன் அவந்தி? கார்த்திக் சார் மேல உள்ள லவ் என்னாச்சி? ஏன் இந்தக் கோவம்?”
“வைஷு ப்ளீஸ். இந்த பேச்சை விடுறியா?” என்றவள் பேச்சை மாற்ற எண்ணி நேத்ராவிடம் திரும்பி, “நேத்ரா வேலை கிடைச்சாச்சி. அடுத்து கல்யாணம் தான?” என கேட்டாள்.
“கல்யாணம்! ம்... பார்க்கலாம்” என்றவள் கண்கள் சந்தோஷை ஒரு வினாடியேனும் தொட்டு மீண்டது.
மற்றவர்கள் அதை கவனிக்கவில்லை. அவளையே பார்த்திருந்த அவந்திகாவின் கண்கள் அதைக் கண்டுகொண்டன. சந்தோஷைப் பார்த்தபொழுது, நேத்ராவின் கண்களில் தோன்றிய ஒருவித மயக்கம், ‘அடிப்பாவி! கௌஷிக்கை கரெக்ட் பண்ண வந்திருக்கியான்னு கேட்டதுக்கு பதிலா, சந்தோஷை கரெக்ட் பண்ண வந்தியா கேட்டிருக்கணும் போலருக்கே. தப்புப் பண்ணிட்டியே அவந்தி’ என மனதிற்குள் தன்னையே திட்டினாள்.
உணவு முடித்து கிளம்பும் பொழுது, சந்தோஷிடம் வந்த வெங்கடேஷ் நன்றி சொன்னான்.
“ஏன்? எதற்கு?” என்ற சந்தோஷிடம்,
“நேத்ராவைப் பாதுகாத்ததுக்கு” என்றான்.
“ஹா...ஹா அதுக்கு தேங்க்ஸா? என்னோட கடமை” என்றான் அவந்திகாவை மனதில் வைத்து.
அதைக் கேட்டிருந்த நேத்ராவிற்கோ மனம் குதூகலித்தது. அவனைத் தாண்டுகையில் “ரொம்ப தேங்க்ஸ்ங்க” என்றாள்.
“நீயுமா? எதுக்கு நேத்தி?”
“எல்லாத்துக்கும்” என்று சற்று தள்ளிச் சென்றவள் “சந்தோஷ்” என்றழைக்க, திரும்பியவனைக் கண்டு தலைசாய்த்து, ஒரு கண்மூடி விரல் நீட்டி, அவனைப் போலவே, “டிஸ்ஸூ” என்றாள்.
அவளின் செய்கையில், அந்த அழகில் சில வினாடிகள் ஸ்தம்பித்து நின்றவன் பின் சுதாரித்து சிரித்தபடி, “ஹேய் நேத்தி.. எனக்கேவா. ஓகே பை” என்று அண்ணியிடம் வந்தவன், “சரியான விளையாட்டுப் பொண்ணு அண்ணி. இவள்லாம் டாக்டர்னா நம்பவா முடியுது” என்று தன்னறைக்குச் சென்றான்.
செல்லும் அவனின் செயலில், எதுவும் புரியாமல் அவந்திகா விழித்தாள்.
அதுவரை அங்கிருந்த சுந்தரேஷனும், விஷ்ணுவால் தனியாளாகப் பார்த்துக்கொள்ள முடியாதென்று கிளம்பினார்.
அனைவரும் சென்றதும் மதியம் சமையலுக்கு நித்யாவிடமும், அவளுக்குத் துணையாக நின்றிருந்த வேலைக்காரப் பெண்ணிடமும், சொல்லிவிட்டு மருமகளிடம் புவனேஸ்வரி வந்தமர, எதிரிலிருந்த இருக்கையில் வந்தமர்ந்தார் சந்திரகுமார்..
“சாரி மாமா. சாரி அத்தை. நான் எப்படி உங்களையெல்லாம் அடையாளம் தெரியாமல் போனேன்னு தெரியலை.”
“ப்ச்... அதையெல்லாம் விடும்மா. உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா?”
“ம்... பிடிச்சிருக்கு. இதைவிட அவுட்ஹவுஸ் ரொம்ப பிடிச்சிருந்தது மாமா” என்றாள் தலைகவிழ்ந்தவாறு.
அவளின் நிலை புரிந்தவர்கள், “தப்பான எண்ணத்துல இதெல்லாம் பண்ணலம்மா. விவரம் தெரிஞ்சா நீ புரிஞ்சிப்பன்னு தான் சொல்லல. இந்த சி.என் ட்யூட்டி அப்படி. அவன் எப்ப எங்கயிருக்கான், என்ன பண்றான் எதுவுமே தெரியாது. சொல்லவும் மாட்டான். அவன் வேலை சக்ஸஸ் ஆனா மட்டும்தான் எங்ககிட்ட வாயே திறப்பான்.”
“நீங்க கூடதான் எதுவுமே சொல்லல?” என குறைபட்டாள்.
“நான் என்னடா பண்றது? நீயே கண்டுபிடிப்பன்னு நினைச்சேன். பட், நீ அவ்வளவு ஷார்ப் இல்ல போ.”
‘எங்க கண்டுபிடிக்க? நான்தான் நானாவே இல்லையே!’ என மனதினுள் நினைத்தவள், காலையில் இருந்து தனக்கிருந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த, “அத்தை உங்க பையன் பெயர் கார்த்திகேயன் தான? இல்ல..?” என கேள்வியாய் இழுத்தாள். அதிலும் ஏமாற்றப்பட்டிருக்கிறோமோ என்றெண்ணி.
“ஆமாமா” என்று அவள் மனதிலுள்ள உறுத்தலைத் தடுத்து, “உங்க மாமாவோட அப்பா பெயர் நாராயணன். அவர் இறந்த மறுமாசம் கார்த்திக் பிறந்தான். இவங்களுக்கு அப்பா பெயரை வைக்கணும்னு ஆசை. எனக்கு கார்த்திகேயன் வைக்கணும்னு ஆசை. நாராயணன் கொஞ்சம் ஓல்ட் நேம் என்றதால ஸ்கூல்கு அதை வச்சிட்டு, கூப்பிடுறதுக்கு கார்த்திகேயன்ற நேம் வச்சோம். அப்ப சி.என் எதுக்குன்றியா? அவனோட க்ளாஸ் பையனுக்கும் இவனுக்கும் ஒரே இன்ஷியல்ல நேம். அந்தப் பையன் முதல்ல சேர்ந்ததால, அவனை அவங்க மிஸ் நாராயணன்னும் இவனை இன்ஷியலோட சி.என்னும் கூப்பிட, அதை கேலி பண்ண ஆரம்பிச்ச நாங்களும் அப்படியே கூப்பிட ஆரம்பிச்சிட்டோம். ஸோ, உனக்கு மட்டும்தான் அவன் கார்த்திக்” என்றதும் சற்றுமுகம் மலர்ந்தது.
அவளை ஆதுரமாக வருடிக்கொடுத்து, “அவந்திமா ரெண்டுபேரும் உங்களுக்குள்ள பிரச்சனைகளை பேசித் தீர்த்துப்பீங்களோ? பேசாம தீர்ப்பீங்களோ? இல்லை சண்டை போட்டு தீர்ப்பீங்களோ தெரியாது. உங்க பிரச்சனை உங்களைத் தாண்டி, அதாவது உங்க பெட்ரூம் தாண்டி, மூணாவதா ஒருத்தர் காதுக்கும் போகக்கூடாது. ஓகேவா?”
சம்மதமாக தலையசைத்தாலும், ‘அந்த லூசனை நான் மன்னிக்கவேற செய்யணுமா? எப்ப அவங்க என்னை நம்பலையோ, அப்பவே எங்களுக்குள்ள எதுவுமில்லை’ என மனதிற்குள் பொருமினாள் அவந்திகா.
“முதல்ல இந்த சேலையை மாத்தி, நைட்டி போட்டுக்கம்மா வயிறு வலிக்கப்போகுது” என அக்கறையாக சொன்ன மாமியாரின் வார்த்தைகளில் அடங்கினாலும், “அத்தை விஷயம் தெரிஞ்சி யாராவது பார்க்க வந்தா?” என கேட்டாள்.
“அது என்னோட பிரச்சனை. அதை நான் சமாளிச்சிப்பேன்” என்றவரை அணைத்து, “நீங்க ஒரு கலெக்டர். அப்படியிருந்தும், எப்படி அத்தை, எங்க வீட்ல வந்து எனக்கும் வேலை பார்த்து, எங்கத்தையோட வார்த்தைகளையும் வாங்கி, இப்ப நினைச்சா இன்னும் கஷ்டமாயிருக்கு” என கண்கலங்கினாள்.
“ப்ச்... அவந்தி அழக்கூடாது. கலெக்டர்னா வேலை செய்யக்கூடாதுன்னு இருக்கா என்ன? உனக்காக! என் பையனுக்காக! இதைக்கூடச் செய்யலன்னா நானெல்லாம் என்ன அம்மா சொல்லு?”
“உனக்காகன்னா? என்னை உங்களுக்கு முன்னாடியே தெரியாதே அத்தை?” என கேள்வியாய் நோக்கினாள்.
“அட நீ வேறம்மா. உங்கத்தை உன்னோட தீவிர ரசிகை” என்றதும் கலங்கிய கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. “ஆமாம்மா. உன்னை எப்படியாவது மீட் பண்ணனும்னு நினைப்பா. ஆனா, டைம் கிடைக்கல. தமிழ்நாட்டுல போஸ்டிங் கிடைச்ச பின்னாடி. உன்னைச் சந்திச்சே தீருவேன்னு. ஒத்தைக்கால்ல நின்னா தெரியுமா? நான்தான் கால் வலிக்கப் போகுதுடா புவி. ரெண்டு கால்லயும் நில்லுன்னு சொன்னேன்” என்றவரின் பாவனையில் சட்டென்று சிரித்தாள் அவந்திகா.
“கார்த்திக் சென்னை வந்தது தெரிந்ததும், உன்னை பார்க்கச் சொல்லிட்டிருந்தேன் அவந்திமா. அவன் என்னடான்னா, நான் இந்த கேஸை முடிச்சிட்டுத்தான் மீட் பண்ணுவேன்னுட்டான். அதுக்கப்புறம் விதிவசத்தால் நீயே வரவும், அவனால மறுக்க முடியல. உடனே சம்மதிச்சி, எங்களையும் வரச்சொல்லிட்டான். மெடிக்கல் லீவோட ட்ரான்ஸ்பரும் கேட்டிருந்தேன். இங்கே சென்னை கலெக்டர் ரிடையர்டானதால எனக்கு கிடைச்சது” என்றார் புவனேஸ்வரி.
தனக்காக அவர்களின் வேலையையும், தொழிலையும், இரண்டாம்பட்சமாக கருதியவர்களின் இந்த பாசத்திற்குத் தான் தகுதியானவளா என்றே தோன்றியது.