- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
19
“ஹாய் பரி! வாழ்த்து சொல்லமாட்டியா?” தன் முன் நின்றிருந்தவனை முறைத்தாலும், உள்ளம் தேடிய அவளின் தேடலுக்கு ஒரு இதம் எழுந்ததென்னவோ உண்மை.
அவனோ முகம் மலர அவள் கைபிடித்துக் குலுக்கி, “தேங்க்ஸ்” என்றான்.
அவனிடமிருந்து கையை உருவி, “எதுக்கு இந்த டிராமா?” என்றாள் நிதானமாக.
“டிராமாவா? என்ன மிஸஸ்.வசீகரன் உன் புருஷன் வாழ்க்கையில் ஒருபடி மேல போனா சந்தோஷப்பட வேண்டாமோ!” என கிழவி போல் தாடையில் கைவைக்க, கோபத்தை மீறி வந்த புன்னகையை அவன் காணுமுன் அடக்கிக் கொண்டாள்.
“சிரிப்பு வந்தா சிரிச்சிரணும். சில இயற்கை உணர்வுகளைக் கட்டுப்படுத்துறதனாலதான் மன அழுத்தம் வருதுன்னு டாக்டர்ஸ் சொல்றாங்க” என்றான் புன்னகை மாறாது.
“அஹான்!” என்றவள் புன்னகை முகமாகி, “என்ன விஷயமா வந்தீங்க?” என்க,
“உன்னைப் பார்க்க விஷயம் வேணுமா என்ன?” என்றான் மனம் நிறைந்த மகிழ்வுடன்.
“கண்டிப்பா வேணும். நான் கண்டவன்கிட்டேயும் பல்லைக்காட்டுற ரகமில்லை. அதுவும் துரோகிகளைப் பக்கத்தில் வச்சிருக்க பைத்தியக்காரியும் இல்லை. மெடிக்கல்கு நேரமாகுது கொஞ்சம் வழிவிடுறீங்களா?” என்றவள் முகத்தில் புன்னகை என்பது துளிகூட இல்லாமல் கோபம் மட்டுமே இருந்தது.
“நான் கண்டவனா பரி?” குரலில் அந்தளவு வருத்தமிருந்தது.
அவளோ, “இல்லையா பின்ன” என்று அசால்டாக தோளைக்குலுக்க,
“அந்தக் கண்டவனை, ஏன் உன் வீட்டுக்குக் கூட்டிட்டுப்போன பரி?” என்றான் அழுத்தமாக.
சில நொடிகள் அமைதியாகி பின் நிமிர்ந்து அவன் கண்பார்த்து, “தப்புன்னு தெரிந்தே செய்த தப்பு அது. அதுக்கும் சேர்த்துதான பழிவாங்குனீங்க?” என்று திருப்பிக் கொடுத்தாள்.
“பழிவாங்குனேனா? என்மேல் நீ வச்சிருக்கிற அன்பு தெரியும் பரி. உன் மனசு...”
அவன் பேசும் விஷயத்தின் கனம் தாங்காது, “கொஞ்சம் நிறுத்துறீங்களா? அன்பு, மனசுன்னு உங்க வீட்டுல இல்லாததை ஏன் பேசுறீங்க?” கண்டிப்புடனே கேட்க,
“நீ இல்லைன்னு சொல்ற எல்லாம் என்கிட்ட நிறைய இருக்கே பரி” என்றவன் பார்வையில் அத்தனை கனிவு.
“தூக்கிக் குப்பையில் போட்டுட்டு, வந்த வழி பார்த்துக் கிளம்புங்க” என்று முகத்திலடித்தாற்போல் பேசி அவனை விட்டு விலகி நடந்தாள்.
“பரி” என்று திரும்பவும் அவள் முன் வர, தன் எரிச்சலை முகத்தில் காட்டி, “என்ன என்னை கரெக்ட் பண்ணனுமா?” அவ்வார்த்தையில் ‘இதுகூட நல்லாயிருக்கே’ என்றெண்ணி அவன் முகம் பிரகாசமடைய, அதைச் சற்று ஏளனமாய்ப் பார்த்து, “கரெக்ட் பண்ணி.. சொல்லுங்க கரெக்ட் பண்ணி உங்கப்...” தனக்கே அவ்வார்த்தை அருவருப்பைக் கொடுக்க அதை முகத்தில் காண்பித்து, வார்த்தையை அத்துடன் நிறுத்த, அதற்குள் “ஏய்!” என்று கை ஓங்கியிருந்தான் வசீகரன்.
அவள் சொல்ல வந்ததின் அர்த்தம் அவனுக்கு எப்படித் தெரியும் என்பதை உணரவில்லை பூரணி. உணர்ந்திருந்தால் பேசி பிரச்சனையை முடித்திருப்பாளோ! வாழ்க்கை அவ்வளவு எளிதல்லவே!
“பேசுற வார்த்தை நமக்குத் தகுதியானதான்னு யோசிச்சிப் பேசு. என்னைத் திட்டி அனுப்பணும்ன்ற காரணத்துக்காக உன்னை நீயே...”
கை ஓங்கியதில் அவன் கோபத்தின் அளவு தெரிந்து சிறிது பயம் எழுந்தாலும் அதை தூசுபோல் தட்டி, “பேசக்கூடாததை எல்லாம் பேச வைக்குறது நீங்கதான். முதல்ல இங்கயிருந்து கிளம்புங்க” என்றாள் பிடிவாதமாக.
“அப்படில்லாம் உன்னை ஈஸியா விட்டுட்டுப் போகமுடியாது. திரும்பத்திரும்ப வருவேன் என் மனைவியே! உனக்காக! உனக்காக மட்டும் வருவேன். நீயே தடுத்தாலும் வருவேன். இப்ப உன் குட்டிக்கண்ணனுக்கு ஒரு முத்தம் கொடு” என்று நெற்றியைக் காட்டினான்.
“லூசா நீங்க” என்று அதிர்ந்துபோய் கேட்க,
“ஹேய்! நெற்றியில் கேட்டது உன் குட்டிக்கண்ணன். இதே வசீகரனாயிருந்தா முத்தம் கேட்குற இடமே வேற” என்றான் கண்ணடித்து.
‘ஆத்தாடி!’ என மனதினுள் அலறி, “உங்களை...” என சைக்கிளை ஒரு கையால் பிடித்து, ஒரு கையால் அவன் கழுத்தை நெறிப்பதுபோல் செய்ய, “ஐயோ! கொலை என்னைக் கொல்லப் பார்க்குறா” என்று கத்தியதில் அவனை முறைத்துத் திரும்பி புன்னகையுடன் சைக்கிளை நகர்த்திச் சென்றுவிட்டாள்.
அவள் செல்வதை வெற்றிப் புன்னகையுடன் பார்த்திருந்தான் வசீகரன். அவனுக்குத் தெரிந்தது அவளின் முகமலர்ச்சி.
எதற்கு வாழ்த்து என்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. ஒருவித மனநிறைவுடன் அவரவர் இடம் நோக்கிச் சென்றார்கள்.
“என்ன பூரணி முகமெல்லாம் டாலடிக்குது. எதுவும் விசேஷமா?” அப்பொழுதுதான் மருந்தகம் உள் நுழைந்தவளைக் கேட்டாள் சண்முகி.
“அப்படில்லாம் இல்ல சண்மு. எப்பவும் போலதான் இருக்கேன்.”
“பார்த்தா அப்படித் தெரியலையே” என்று தாடையில் கைவைக்க, அது சற்று முன் வசீகரன் செய்ததை நினைவுப்படுத்த இன்னுமே முகத்தில் ஒரு பளிச்சிடல்.
“பார்த்தா தெரியலைன்னா பார்த்துக்கிட்டே இருந்து சொல்லுடா சண்மு” என்றாள் கேலியாக.
“ஹேய் நீதானா இது? நிஜமாவே உன் முகத்துல பல்ப் எறியுது பூரணி. என்ன மச்சானைப் பார்த்தியா?” என்க,
அவளின் மச்சானில் முகம் சுருக்கி, “நான்லாம் யாரையும் பார்க்கலை. பார்க்கணும்ன்ற அவசியமுமில்லை. அந்தப் பைத்தியக்காரன் எனக்கு வேண்டாம்” என்றாள்.
“பார்றா! நாங்க பைத்தியம்னு சொன்னா பெரிய வார் நடக்கும் இங்க. இப்ப மேடமே அதைச் சொல்றாங்க. எல்லாம் அவருக்குச் சரியாகிருச்சின்ற திமிர்” என்றாள் கேலியாகவே.
வசீகரனைப் பார்த்து வந்த மறுநாளே அவனைப்பற்றிய உண்மையைச் சொல்லி தன் நிலையையும் சொல்லிவிட்டாள் பூரணி. தனக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் என்றாலும், நல்லவிதமாக தெரிந்திருக்கக்கூடாதா என்ற எண்ணம் மட்டுமே சண்முகிக்கு.
“திமிர்தான் இல்லைன்னு சொல்லமாட்டேன். அவங்களுக்கு சரியானாலும் சரியாகலைன்னாலும் ஒண்ணுமில்லை புரியுதா? முதல்ல வேலையைப் பாரு போ” என்று விரட்டினாள்.
ஆனந்திக்கு மாரடைப்பு வந்ததை இருவருக்குமே தெரியாமல் மறைத்து விட்டான் வசீகரன். தினகரனையும் சண்முகியிடம் சொல்லவிடாமல் தடுத்துவிட்டான். ஏனென்று கேட்ட தினகரனுக்கும் காரணம் சொல்லவில்லை.
தொடர்ந்த நாட்களில் அவனின் அடுத்தடுத்த படையெடுப்பு எதற்கும் மசியவில்லை மிஸஸ்.பரிபூரணி வசீகரன்.
தன் வீட்டில் நுழைந்தவனைப் பரபரப்பாய் வரவேற்றார்கள் மலையரசன் மைதிலி தம்பதி. வசீகரன் குணமானதை ஜனனி ஏற்கனவே சொல்லியிருந்தாள். அதைக் கேள்விப்பட்டதும் சந்தோஷத்தில் சின்ன மகளிடம் அடுத்து என்ன செய்வதென்று கேட்க, “உங்க பொண்ணு இங்க இருக்கணும்னா யார்கிட்டேயும் எனக்காகப் பேச வேண்டாம்” என்று தடையிட்டுவிட்டாள்.
மகளின் பேச்சை மீறியிருப்பார்தான் மலையரசன். அவருக்கு அது பெரிதில்லை. ஏனோ இப்பொழுது அவள் போக்கில் விட முடிவெடுத்துவிட்டார்.
வசீகரனைப் பார்க்கும் வரை மலையரசனுமே எதுவும் புரியா நிலையில்தான் இருந்தார். பார்த்த நிமிடமோ அனைத்தையும் மறந்தார் என்பதே நிஜம்! அவனை வீட்டினுள் கண்டதும் அவர் கண்களில் நம்பிக்கை ஒளி. அதிலும் அவனின் ‘வணக்கம் மாமா’ என்ற அழைப்பில் மயங்கிவிட்டார் என்றே சொல்லலாம்.
“வா..வாங்க உட்காருங்க” என்று அங்கிருந்த மரநாற்காலியை எடுத்துப்போட்டு, “மைதிலி காப்பி போடு” என்று மனைவியை அவசரப்படுத்த, “அதெல்லாம் வேண்டாம் மாமா. தண்ணீர் மட்டும் கொடுங்க அத்தை” என்று மைதிலியிடம் பேச, திருதிருவென விழித்தபடி மெல்ல நகர்ந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க, காத்திருந்து வாங்கிக் குடித்தவன், “நான் எதுக்கு வந்திருக்கேன்னு நேரடியாகவே சொல்லிடுறேன். முதல்ல எங்க குடும்பத்தை நீங்க மன்னிக்கணும்” என்றான் கையெடுத்துக் கும்பிட்டு.
பதறிய மலையரசனோ, “என்ன தம்பி மன்னிப்பெல்லாம்? முதல்ல கையைக் கீழ இறக்குங்க” என்றார்.
“என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லாம உங்க பொண்ணுக்கும் எனக்கும் கல்யாணம் முடிச்சது தப்புதான் மாமா. பையன் மேல உள்ள பாசத்துல கொஞ்சமும் யோசிக்காம செய்துட்டாங்க. என்னதான் நஷ்டஈடு கொடுத்தாலும் உங்களுக்குதான் அதிக பாதிப்பு. உண்மையைச் சொல்லணும்னா.. விஷயம் தெரிஞ்சப்ப, என்ன அப்பா இவர்னு உங்க மேல கோபமாதான் இருந்தேன். அன்னைக்கு உங்க பொண்ணு சார்பா பேசினதைப் பார்த்து கோபமெல்லாம் குறைஞ்சிருச்சி. உங்களைப் பார்க்கணும்னு தோணிச்சி. வந்து பார்க்கவும் செய்துட்டேன் கிளம்புறேன் மாமா” என்று இருக்கையை விட்டு எழ,
‘என்ன மகளைப் பற்றி எதுவும் சொல்லவில்லை’ என்ற பரிதவிப்புடன் அவனைக் கண்டார் மலையரசன்.
அதை உணர்ந்தவனோ, “கண்டிப்பா என் மனைவியை விட்டுரமாட்டேன் மாமா. இப்ப என்மேல ரொம்ப கோபத்துல இருக்கா. அது சரியானதும் கூட்டிட்டுப் போறேன்.”
“எ..என்ன.. ஏன் கோபம்?” என்றார் தயங்கியபடி.
“அதுவா குணமானதைச் சொல்லாம அவள்கிட்டப் பழைய மாதிரி பேசினேன்ல அதுக்காக. இப்ப நீங்க இல்லை யார் சொன்னாலும் கேட்கமாட்டா. அதனால அவளை நான் பார்த்துக்குறேன். அவளைப்பற்றிய கவலையை விட்டுருங்க. இப்ப நான் கிளம்புறேன். வர்றேன் மாமா. வர்றேன் அத்தை” என்று கிளம்ப,
அவன் வெளியேறிய நொடி, “உங்க பொண்ணுக்கு என்ன பைத்தியமா? அவரே வந்து கூப்பிடுறப்ப போறதுக்கென்ன?” மைதிலி கத்த,
“எல்லாருக்கும் தன்மானம் இருக்கும் மைதிலி” என்று மனைவியை அவர் அடக்குவது வசீகரனுக்குக் கேட்க, தனக்கு வேலையில்லாமல் செய்த மாமனாருக்கு ஒரு சபாஷ் போட்டு புன்னகையுடன் காரை நோக்கிச் சென்றவன் முன் வந்து நின்றாள் அஞ்சுகா.
“ஹாய்! எப்படியிருக்கீங்க?” என்றான்.
“என்னை விசாரிக்கிறது இருக்கட்டும். உங்க அம்மாவுக்கு எப்படியிருக்கு?”
“இப்ப சரியாகிருச்சி. வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாச்சி. உங்களுக்கெப்படித் தெரியும்?” என்றான் யோசனையாக.
“அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டிருந்ததைக் கேட்டேன்.”
“ஓ.. பரிகிட்ட இதைச் சொல்ல வேண்டாம்.”
“ஏன் சார்? தெரிஞ்சா உடனே அவங்களைப் பார்க்கக் கிளம்பிருவா” என்றாள்.
“வருவாள்தான். ஆனா, அவளுக்காகப் பேசப்போய்தான் அப்படி ஆகிருச்சின்ற உண்மை தெரிஞ்சா, என்மேல் உள்ள கோபம் இன்னும் அதிகமாகும். தன்னால்தானோன்னு குற்றவுணர்ச்சியிலும் துடிப்பா. போதும் நாங்க அவளை கஷ்டப்படுத்தினது” என்றவன் குரல் இறங்கயிருந்தது.
இப்படியே ஒவ்வொரு காரணமா கண்டுபிடிச்சா எப்படி சார்? எப்பதான் சேர்றதுக்கு வழிவகுக்கப் போறீங்களோ” என்றாள் ஆற்றாமையுடன்.
“சீக்கிரமே உங்க தோழியை அழைச்சிட்டுப் போயிருறேன்” என்றான் புன்னகையுடன்.
“சரி வீட்டுக்கு வாங்க. அப்பா உங்களைப் பார்த்தா சந்தோஷப்படுவாங்க.”
“இப்ப வேண்டாம் அஞ்சுகா. எங்க வீட்டு சார்பா அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன்னு சொல்லுங்க. நேர்ல பார்க்கிறப்ப நானே சொல்லிடுறேன். இப்ப கிளம்புறேன்” என்று சென்றுவிட்டான்.
‘வாவ்! லைவா ஒரு லவ் ஸ்டோரி பார்க்கிற அஞ்சு. ரிசல்ட் என்ன வருதுன்னு பார்க்க வெய்ட்டிங்’ என்றாள் மனதினுள்.
“என்னடா கண்ணா! எப்படிப் போகுது உன் கஜினி முகமது படையெடுப்பு?” சிரித்தபடி கேலியாய் கேட்டார் ஆனந்தி.
“ப்ச்.. எப்பவும்போல தோல்வியில்தான்மா முடியுது. தினமும் அவளுக்குத் தரிசனம் தர்றேன். எட்டிக்கூட பார்க்க மாட்டேன்றா” என்றான் கவலையாய்.