• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
19



“என்ன மாப்பிள்ளை இதெல்லாம்? ஏய் வித்தி நீ சொல்லு, கார்த்தி சொல்றது உண்மையா? நைட் வீட்டுக்கு வந்தாரா? நீங்க பேசிட்டிருந்தீங்களா?” என்று சரமாரியாகக் கேள்விகளால் மகளைத் துளைத்தார்.

“அம்மா, அண்ணி சொல்ற அர்த்தத்துல எதுவுமில்லமா” என்றாள் தொய்ந்து போன குரலில்.

“அண்ணி தற்செயலா நடந்திருக்கும். அதையெல்லாம் பெருசு பண்ணாம, என்ன நடந்ததுன்னு பொறுமையா கேட்கலாம்.”

“என்ன பொறுமை சுபா. காலையிலயிருந்து இவரைப் பற்றிக் கேள்விப்படுறதெல்லாம் சரியாவா இருக்கு? நெஞ்சே பதறுது சுபா. இதுக்கு மேல...” என குரல் அடைக்க சரி செய்து, “நீ சொல்லு வித்யா, நேத்து வந்ததை ஏன் சொல்லல? வெளியில தெரிஞ்சா... ப்ச்.. உன் அண்ணனும் கல்யாணத்தை நல்லவிதமா முடிக்கல. நீயும் அவன் தங்கைன்றதை நிரூபிச்சிட்டல்ல” என்றார் கலங்கிய குரலில்.

“அம்மா எதுக்கும் எதுக்கும் முடிச்சி போட்டுப் பேசுறீங்க?” என கேட்ட மகனைத் தடுத்த சுதாகர், “வாணி இப்ப எதுவும் பேசாத. நம்ம பொண்ணு வாழ்க்கை இன்னும் சிக்கலாக்குறது சரியில்ல” என்றார்.

“ஆமா அப்படியொரு அக்கறையிருந்தா பையனைப்பற்றி விசாரிச்சிக் குடுத்திருப்பீங்கள்ல” என்று தன் கோபத்தைக் கணவனிடம் காட்டினார்.

“விசாரிக்கலன்னு உனக்குத் தெரியுமா? விசாரிச்ச பிறகுதான் பத்திரிக்கை அடிச்சதே. அவங்களும் உண்மையைச் சொல்லிதான் பெண் கேட்டதே.”

“ஒரு நிமிஷம் மாமா” என்று இடையிட்ட ஆனந்த், “மேல மேல பேசிட்டு போகவேண்டாம். பிரச்சனை பெருசாகுதே தவிர, யாரும் சமாதானமாகுற மாதிரித் தெரியல. நடந்தது தற்செயலானது. எந்தத் திட்டமும் போட்டு சந்திக்கல. அப்படி பார்த்து பேசணும்னு தோணியிருந்தா உங்ககிட்டயே பெர்மிஷன் கேட்டிருப்பேன். திருட்டுத்தனமா சந்திச்சிருக்கமாட்டேன். என்னை நம்புறதும் நம்பாததும் உங்க விருப்பம்.”

“ஏன் கார்த்திகா, என்னை விடுங்க இப்ப வந்தவன். உங்க வீட்டுப் பொண்ணைத் தெரியாதா? அவ்வளவு நம்பிக்கையா அவள்மேல” என்று அவளைக் குற்றம் சாட்டி, “இதுக்கு மேல நைட் வந்ததுக்கு விளக்கம் சொல்ல நான் தயாராயில்ல. நீங்க சொல்லுங்க? தாலி கட்டுறதுக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?”

“ஹ்ம்... நிறுத்தியிருப்போம்” என்று முணுமுணுக்க... அதை வாணி வாய் திறந்து சொல்லுமுன் வித்யா மயங்கிச் சரிந்தாள்.

அவர்களின் பேச்சுக்கு நடுவே வராமல் என்ன ஏதென்று ஆராயவும் முடியாமல் நின்றிருந்தவளுக்கு, ஏற்கனவே இருந்த காய்ச்சலின் வீரியமும், காலையிலேயே தலைக்குக் குளித்து ஈரம் காயுமுன் மணப்பெண் அலங்காரம் என்று தலை ஈரம் காயாமல் இருந்ததால் வந்த உடல் உஷ்ணமும், காலையிலிருந்து நடக்கும் மனப்போராட்டங்களும் சேர்ந்து சோர்வடையச் செய்ய, தன் தாயும் அண்ணியும் என்ன சொல்வார்கள் என்பதை உணர்ந்த நிமிடம் உணர்வில்லாமல் விழுந்தாள்.

“தியா” என்ற அலறலுடன் ஆனந்த் அவளைத் தூக்கி முகத்தைத் தட்ட, அவளின் உடல் அனலாய் கொதித்ததை உணர்ந்து, “சே.. நானாவது உன்னைக் கூட்டிட்டுப் போயிருக்கணும். இவங்களோட பேசி உன்னைக் கவனிக்காமல் விட்டுட்டேன்மா. சாரி தியா” என்றவனின் புலம்பல்கள் அவள் காதில் விழுந்ததோ!

மெல்ல கண் திறந்தவள், உரியவன் கைகளில் தன்னைக் கண்டு கண்களில் அவனை நிறைத்துக் கொண்டு முழுதாய் மயக்கத்திற்குச் சென்றாள்.

தண்ணீர் தெளித்தும் எழவில்லை என்றதும் அனைவருக்கும் சற்று பயம் வர, “சாரகேஷ் காரை எடுத்துட்டு வாங்க” என்றான் ஆனந்த் வேகக்குரலில்.

“இல்ல நா..ங்..களே...” ஆரம்பித்த கார்த்திகா சுதாகரின், “இனிமேல் பொம்பளைங்க யாராவது வாயைத் திறந்தீங்க நடக்கிறதே வேற” என்ற மிரட்டலில் அமைதியாக, சாரகேஷிடம் திரும்பி “பின்பக்கம் காரை எடுத்துட்டு வாங்க தம்பி. முன்னாடினா நிறைய கேள்வி வரும். என் பொண்ணை யாரும் தப்பா பேசுறது எனக்குப் பிடிக்காது” என்று கறாராகச் சொன்னார்.

அதற்குள் கார் கொண்டு வர, வித்யாவைக் காருக்குத் தூக்கிச் செல்லவும், அவனின் வீட்டினர் காரில் ஏற, பின்னால் சுபாஷ் கொண்டு வந்த காரில் ஆண்கள் ஏறிக்கொள்ள, உடன் சுபாஷிணி மட்டும் சென்றார்.

“ஆனந்த் இவள் போட்டிருக்கிற மாலையையும், நகையையும் முதல்ல கழட்டு. அதுவே பாதி டிஸ்டர்பா இருக்கும்” என்றதும் நகையைக் கழட்டியபடி, “எனக்கும் கல்யாணத்துக்கும் ராசியில்ல போலம்மா. என்னைத் தேடி வந்ததும் நிலைக்கல. நான் தேடி வந்ததும் இப்படி... இவ என்னைப் புரிஞ்சிப்பாள்லம்மா?” என்றான் மனைவியவளின் முகம் வருடி.

“புரிஞ்சிக்குவாடா. உங்களுக்குள்ள பிரிவுதான்னு இருந்திருந்தா கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் நடந்திருக்கும். அப்படி நடக்கலன்னும் போதே தெரியலையா, நீங்க சேரணும்னு விதியிருக்கு. எல்லாம் சரியா நடக்கும்” எனும்போது ஆனந்த்கு போன் வர, சுபாஷின் நம்பரைக் கண்டு எடுத்தவனிடம், “மச்சான் லெப்ட்ல கட் பண்ணினா இரண்டாவது பில்டிங் ஹாஸ்பிடல்” என்று சொல்ல... அதை சாரகேஷிடம் சொல்லி முடிக்க கார் மருத்துவாமனை வாயிலில் நின்றது.

இரண்டு கார்களும் அடுத்தடுத்து நிற்க சுபாஷ் வேகமாக ஓடி வந்து, ரிசப்ஷனில் பேசி பெட் ஏற்பாடு செய்து, டாக்டரைப் பார்த்து அவசரம் என்று அழைத்து வர, அதற்குள் வித்யாவை பெட்டில் சேர்த்திருந்தார்கள். டாக்டர் வந்ததும் முதலில் கண்களைப் பார்த்து ட்ரிப்ஸ் ஏற்றச்சொல்லி பரிசோதித்து முடித்தவர், “இப்போதைக்கு பேஷண்ட்கு எதுவுமில்ல. ப்ளட் டெஸ்ட் வந்ததும் பார்க்கலாம்” என்றிட சற்று ஆசுவாச மூச்சு அனைவருக்குள்ளும்.

மனைவியைத் தனியே பார்க்க ஆனந்த் நினைக்க, அவன் எண்ணம் புரிந்தாற்போல் சுபாஷிணி மற்றவர்களுடன் வெளியே செல்ல, அவளருகில் சென்று பெட்டின் ஓரம் அமர்ந்தபடி அவளைக் காண, மூன்று நாட்கள் காய்ச்சலிலும் காலை வரை புன்னகையுடனிருந்த முகம் வாடிப்போயிருந்தது.

“நான் உன் லைப்ல வராமலே போயிருக்கலாம் தியா. பாரு நிம்மதியா இருந்த உன்னை ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிருக்கேன். ரெண்டு டைம் அடிபட்டும் உன்னைத் தேடி வருவேனா? எனக்கெல்லாம் எதுக்கு கல்யாண ஆசை. ப்ளீஸ் தியா எனக்காக வந்திரு. நீயும் என்னைப் புரிஞ்சிக்கலன்னா மொத்தமா உடைஞ்சிருவேன். யார் என்ன வேணும்னா சொல்லட்டும், அதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை. நான் உன்னை விரும்புறது நிஜம். அது என்னைக்கும் மாறாது” என்று அவளின் ஒரு கையை எடுத்து முத்தமிட்டு, “ஐ லவ் யூ தியா” என்றான்.

சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தையுடன் கார்த்திகாவும், வாணியும் வர. அவர்களைக் கண்ட சுபாஷ் தாயிடம் எதுவும் சொல்ல முடியாது, “நீ ஏன் இங்க வந்த? வீட்ல பண்ணின பிரச்சனை போதாதுன்னு இங்க வந்தியா? நல்லாதானடி இருந்த? இப்ப என்னாச்சி? இதுல உன் மாமியாரும் கூட்டணி.”

“ஏன் இப்படிப் பேசுறீங்க? சாதனா பொய் சொல்லமாட்டாங்க. அதுவும் மண்டபத்துல அத்தனை பேர் முன்னாடி கோபப்படுறாள்னா, நீங்க பார்த்த மாப்பிள்ளையோட யோக்யதை அப்படியிருக்கு.”

“திரும்பத்திரும்ப தப்புப் பண்ற கார்த்தி. தீர விசாரிக்காம தீர்ப்பெழுதக்கூடாது. படிச்சவள்தான நீ? அதை விடு என்னை நம்பமாட்டியா?”

“இவள் கேட்கிறதுல என்னடா தப்பு. அந்தப் பொண்ணு சொன்னதைக் கேட்டு நானே ஆடிப்போயிட்டேன்.”

“தப்பு செய்யாதவங்கன்னு யாரும் கிடையாதும்மா. செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்ட பிறகும் ஏன் தண்டிக்கணும்? அதுவும் இப்ப நம்ம வீட்டு மாப்பிள்ளை. இவ என்னவோ பேய் புகுந்த மாதிரி கத்துறா” என்று மனைவியைக் குற்றம் சாட்டினார்.

“பேய் மாதிரிக் கத்துறேனா? நீங்க ஆம்பளைதான அப்படித்தான் பேசுவீங்க. நான் யாருக்காகக் கத்தினேன்? எனக்காகவா? சொல்லுங்க எனக்காக என் சுயநலத்துக்காக பண்றேனா? அடிக்கலாம் கை ஓங்குறீங்க.” வந்த அழுகையை இடமறிந்து அடக்கினாள்.

“கார்த்தி வேண்டாம். பச்சை உடம்புக்காரின்னு பார்க்கிறேன். இல்ல...”

“இல்லன்னா என்ன பண்ணுவீங்க?” அடக்கி வைத்த கண்ணீர் கன்னம் தாண்டி இறங்க...

“ச்சீ.. போடி. உன்னை இந்த மாதிரி நினைச்சிக்கூட பார்க்கல. ஒரே நாள்ல...”

“ஒரே நாள்ல... சொல்லுங்க? ஒரே நாள்ல பிடிக்காம போய்ட்டேனா?”

“விட்டுரு கார்த்தி. கோபத்துல ஆமாம்னு ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னா, காலத்துக்கும் உன்னால அதைத் தாங்கிக்க முடியாது.” மனைவியின் அதிர்ந்த முகம் பார்த்து, “சாரி கார்த்தி. நான் அந்த மாதிரி நடந்திடக்கூடாதுன்னு சொன்னேன்” என்று அவளைத் தொட வர...

அவனிடமிருந்து விலகி, “இப்ப வந்த உறவுக்காக, கட்டின பொண்டாட்டியைக் கைவிட்டுட்டீங்கள்ல” என்றாள் கணவன் கண் பார்த்து.

“ஏய் கார்த்தி. நான் என்ன பேசினா, நீ என்ன...”

‘ப்ச்...’ என கையை நீட்டி அவன் பேச்சைத் தடுத்து அங்கிருந்து நகர... அவளைத் தொடரப்போனவனை சுதாகரும் சுபாஷிணியும் தடுத்து தனியே அழைத்து வந்தார்கள்.

“பாருங்கப்பா ஒண்ணுமில்லாத விஷயத்தை, முழுசா விசாரிக்காம என்னலாம் பேசுறா. அவர் இல்லன்னா நாம இப்படியாப்பா நிற்போம். ரெண்டு குடும்பத்தோட சந்தோஷத்தை மீட்டுக் கொடுத்திருக்கார். இப்படின்னு தெரிஞ்சிருந்தா வருத்தப்பட்டாலும் பரவாயில்லன்னு நடந்ததை அவள்கிட்ட முன்னாடியே சொல்லியிருப்பேன்பா.”

“சுபாஷ் அமைதியாயிரு. கார்த்திகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். அவள் எது பேசினாலும் பதில் பேசாத. அவள் நினைக்கிறதைப் பேசட்டும்” என்றார் சுதாகர்.

“அப்பா நீங்க... வித்யா வாழ்க்கைப்பா?”

“தெரியும்டா. அதனால்தான் இந்த அமைதி” என, புரியாமல் விழித்த மகனிடம். ஜாதகத்தைப் பற்றிச் சொல்லி, “ஐயர் சொல்லி தேதி குறிச்சிட்டாலும் சின்னதா பயம்தான். காரணம், அவர் வாழ்க்கையில நடந்ததை மாப்பிள்ளை சொல்லிட்டதால, அப்படி என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு அசால்டா இருந்துட்டோம். இது நாங்க எதிர்பார்க்காதது. பிரச்சனைக்கு நடுவுலதான் அவங்க கல்யாண வாழ்க்கை ஆரம்பிக்கும்ன்றப்ப, இன்னும் இரண்டு வருஷம் கழிச்சி நடத்தினாலும் இதேதானே நிலை.”

“ஆமா சுபாஷ். இப்ப நாம சொல்ற எதையும் கார்த்தியால புரிஞ்சிக்க முடியாது. அண்ணியையும் சேர்த்துதான். அதனாலதான் நாங்க இடையில வரல.”

“சுபா சொன்னதுதான் சுபாஷ். நாங்க நடுவுல வந்திருந்தா மாப்பிள்ளைக்கு ஆதரவா வரணும். அப்படி வந்திருந்தா மருமகளை கைவிட்ட மாதிரியாகிடும். அதுமட்டுமில்லாம கார்த்தியோட கோபம் இன்னும் அதிகமாயிருக்கும். எல்லை மீறிடாம கொஞ்சம் பொறுத்துப் போடா” என பக்குவமாக எடுத்துச் சொன்னார் சுதாகர்.

“ஆனா அப்பா, அதான் தெளிவா சொல்றோமே. அதுகூட ஏன் புரியல?”

“கெட்ட நேரம்னு வந்தா கண்முன்னே நடக்கிற நல்லது கூட கெட்டதாதான் தெரியும். சீக்கிரமே தான் செய்ற தவறைப் புரிஞ்சிக்குவா” என்று மகனின் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

கார்த்தியும் வாணியும் வித்யா அறைக்குள் வர, அவர்களைக் கண்ட ஆனந்த் வெளியே செல்ல, மாமியாரும் மருமகளும் அவனை முறைத்தபடி நின்றார்கள்.

‘பார்த்து! நீங்க முறைக்குற முறைப்புல கண்ணு வெளில வந்து குதிச்சிடுவேன்னு நிற்குது’ என்று சொல்ல நினைத்தவன், “விட்ரா விட்ரா ஆனந்து! ஆபீஸ்ல எத்தனை முறைப்பையும் கடுப்பையும் பார்த்திருப்போம்” என்று அவர்களுக்குக் கேட்கும்படி சொல்லிச் சென்றான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“இங்க பாருங்க...” ஏதோ சொல்ல வாயெடுத்தவள் கையைப் பிடித்து வாணி நிறுத்தினார்.

வாசலருகில் சென்றவன் நின்று, “இங்க பாருங்கன்னு மொட்டையா சொல்லக்கூடாது தங்கச்சி. இங்க பாருங்க அண்ணா சொல்லணும் சரியா.”

“உங்களுக்கு நான் தங்கச்சியா? கிடையவே கிடையாது.”

“அப்ப உங்களை எப்படிக் கூப்பிடுறது சிஸ்டர்னா? சே..சே.. நர்ஸ்ங்களையும் சிஸ்டர்னுதான் சொல்வாங்க. வேண்டாம் கார்த்தியே கூப்பிடுறேன்.”

முறைப்பு மாறாமல், “என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடாதீங்க. அது எனக்குப் பிடிக்காது” என்றாள் முகத்திலடித்தாற்போல்.

“அம்மா வயசோ, அக்கா வயசோ உங்களுக்கில்ல. அப்ப இதான் கரெக்ட்” என்றான்.

அவனை சற்று அலட்சியமாய் அவள் பார்க்க... பலத்த யோசனையின் முடிவில், “எப்பவும் பச்சை மிளகாய் கடிச்ச மாதிரி காரசாரமா இருக்கிறதால, உங்க பெயர் பச்சையம்மா. ஓ.. வாவ்! பொருத்தமான பெயர்ல. இனிமேல் உங்களைப் பச்சையம்மாள்னே கூப்பிடுறேன்” என்று நிதானமாக சொன்னான்.

“ஏய் உன்னை...”

“என்னை எதுவும் செய்ய முடியாது பச்சையம்மா. என் பொண்டாட்டியை நல்லா பார்த்துக்கோ. நீ மட்டும் காலையில பச்சை மிளகாய் சாப்பிடாம இருந்திருந்தா, என் ஒய்ஃப பெட்ல சேர்க்க வேண்டிய அவசியமே வந்திருக்காது.” அவளை கேலி செய்ததையும் மீறி அவன் குரலில் கலக்கம் இருந்ததோ!

“அப்ப வித்தியோட இந்த நிலைக்கு நான்தான் காரணம்னு சொல்றியா?”

“நான் அப்படிச் சொல்லலையேங்க. பட் நீங்க கொஞ்சம் மரியாதை கத்துக்கலாம். ட்யூஷன் வேணும்னா ஏற்பாடு செய்யட்டுமா? மரியாதை கற்றுக் கொடுத்து மரியாதை பெறுவோர் சங்கம். அதன் முதல் உறுப்பினர் திருமதி.பச்சையம்மாள். ஃப்ரம் செங்கல்பட்டு. ஃபீஸ் விவரம் மெயிலில் அனுப்பப்படும்.”

அவளோ ‘சே...’ என்று முகம் திருப்ப...

“பச்சையம்மா என் ஒய்ஃப் பத்திரம். என்கிட்ட பேசின மாதிரி அவள்கிட்ட பேசிடாதீங்க. ஏற்கனவே நிறைய பேசிட்டீங்க” என்று சீரியஸாக முடித்துச் சென்றான்.

ஆனந்த் பேசியதில் வாணிக்கு தற்பொழுது வேறு விதமான குழப்பங்களுடன், தப்பு செய்துவிட்டோமோ என்ற தடுமாற்றமும் வந்தது. மகளருகில் சென்று கையை வருட கண்களில் கண்ணீர் பெருகியது. “கடவுளே! நான் யாருக்கும் எந்த துரோகமும் செய்யலையே. என் பொண்ணுக்கு ஏன் இந்த நிலை? மாப்பிள்ளை தப்பு செய்திருந்தா இவ்வளவு தைரியமா பேச முடியமா?” குழப்பத்துடன் அழுதபடி அமர்ந்திருந்தவரை கார்த்தி தோள் தொட்டு ஆறுதல்படுத்தினாள்.

தாயின் கண்ணீர் துளி கையில்பட்ட வினாடி தன் மயக்கலோகத்தில் இருந்து வெளியே வந்து கண் திறந்த வித்யா, தன் முகத்திற்கெதிராய் தாயின் அழுத முகம் பார்த்து, மயங்குமுன் பார்த்த கணவன் முகம் தேட, அவன் அங்கு இல்லை என்றதும் மனம் வாடியது. ‘ஒருவேளை வீட்டை விட்டு விரட்டிட்டாங்களோ? அப்படியே விரட்டினாலும் என்னை விட்டு எப்படிப் போகலாம்?’ மனம் சண்டையிட, ‘அப்பொழுதே கணவனுக்கு ஆதரவாய் பேசியிருக்கலாமோ?’ என்ற எண்ணம் எழுந்ததும் மனம் வலித்தது.

மகளின் விழிப்பைக் கண்டவர் முகம் மலர, “வித்திமா முழிச்சிட்டியா? ரொம்பப் பயந்துட்டேன்மா. இப்ப பரவாயில்லையா?” என்ற தாயை நேரடியாகப் பார்த்தாள்.

மகளின் குற்றப் பார்வையில், “அ..அவன்...”

“ம்மா..” என்ற அதட்டலில்... “ம..மருமகனால உன் வாழ்க்கை இப்படி ஆகிருச்சேன்னு...”

“எப்படியாச்சிமா?” என்றாள் பார்வையை மாற்றாது.

“வித்தி முழிச்சிட்டியா. ஷப்பா இப்பதான் உயிரே வந்தது. நீ முழிக்கலன்னதும் ரொம்பப் பயந்துட்டேன். இதுல அந்த ஆனந்த் வேற உன் நிலைக்கு நான்தான் காரணம்னு சொல்லிட்டுப் போயிட்டான்” என்று அவன் மேலுள்ள கோபத்தைக் காட்டினாள்.

“அண்ணி, சரியோ தப்போ வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு மரியாதை குடுங்க. போயிட்டாங்கன்னா என்ன அர்த்தத்துல சொல்றீங்க?”

வித்யா கார்த்தியிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவளின் கழுத்து நெற்றி கை என பார்த்த வாணி, “ஏய் நகையெல்லாம் எங்கடி? தாலியும் ஒரு செயினும் தவிர கழுத்துல, நெத்தியில எதுவுமில்ல. கையில பெயருக்கு இரண்டு வளையல் கிடக்குது?” என்று வாணி கேட்க...

“அந்த ப்ராடு எடுத்திருப்பான் அத்தை” என்று அவருக்குப் பதிலளித்து, “அவங்க உறவு நமக்கு வேணாம் வித்தி” என்றாள் பட்டென்று.

“புரியல? யார் உறவு வேண்டாம் சொல்றீங்க. என் புருஷனோட உறவா? நீங்க சொல்றதும் சரிதான் அண்ணி. அவங்க உறவு வேண்டாம். நான் உங்களோடவே இருந்திடுறேன்” என்றதும் கார்த்தியின் முகம் மலர, “நிஜமாவா?” என... ‘ம்..’ என்றாள் சம்மதமாக.

உள்ளே கேட்ட பேச்சுக்குரலில் மனைவியின் கண்விழிப்பை உணர்ந்து, அவளைக் காணும் ஆவலில் வந்த ஆனந்திற்கு அவ்வார்த்தைகள் நெருப்பாய் நெஞ்சில் விழ, அதிர்ச்சியில் விக்கித்து நின்றவன் மனம் நொறுங்க, அடுத்த நொடி அங்கிருந்து அகன்றான்.

அதே நேரம் தாயும் தகப்பனும் விருந்தினர்களைச் சமாளிக்கும் பொருட்டு வீட்டிற்கு வந்துவிட்டதால் வித்யாவைக் காண அவசரமாக வந்த கீர்த்தி, எதிரில் வந்தும் தன்னைக் கவனிக்காது சோர்ந்து போய் சென்ற ஆனந்தை யோசனையாய்ப் பார்த்தபடி அந்த அறைக்குள் நுழைந்தாள்.

“என்ன அண்ணி ஹேப்பிதான? நான் உங்களோடவே இருக்கேன். நீங்க எதிர்பார்த்த பதில் இதான? அதுக்கு முன்னாடி, அப்படி என்ன தப்பு செஞ்சாங்கன்னு சொல்லுங்க இருந்துடறேன்?” என்றபடி அவர்களின் முகம் பார்த்து, “அவங்களை விட்ருன்னு எவ்வளவு ஈஸியா சொல்லிட்டீங்க. நான் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கல அண்ணி” என்றாள் வேதனைக்குரலில்.

அவளின் வார்த்தையில் அதிர்ந்து, “வித்தி நா...” வார்த்தைகள் தடுமாற கார்த்தி நிற்க...

“கல்யாணத்துக்குப் பொண்ணு பார்த்துட்டுப் போனாங்களே, அப்ப இந்த வார்த்தையைச் சொல்லியிருந்தா கண்டிப்பா விட்ருப்பேன். மாப்பிள்ளை பற்றி விசாரிக்கிறப்ப மாப்பிள்ளை தண்ணியடிப்பான், பொறுக்கின்னு எதாவது தெரிஞ்சிருந்தா, கண்டிப்பா விட்ருப்பேன் அண்ணி. ஏன் தேதி குறிச்சிப் பத்திரிக்கை அடிச்ச புதுசுல சொல்லியிருந்தாலும் விட்ருப்பேன். எதுவரை தெரியுமா அண்ணி விட்ருப்பேன்? உங்க குழந்தைப் பிறந்தப்ப பார்க்க வந்தாங்களே அதுக்கு முந்தின நிமிடம் வரை! அதுக்கப்புறம் சாதாரண வித்யா மனசளவுல மிஸஸ்.வித்யானந்தா மாறிட்டா. இனி எப்பவும் நான் ஆனந்த் மனைவி மிஸஸ்.வித்யானந்த்தான்” என்றாள் சற்று கர்வமாக.

“வித்தி, சாதனா பொய் சொல்லமாட்டா...”

“நாங்களும் இல்லன்னு சொல்லலையேக்கா” என்ற கீர்த்தி, “அண்ணா அம்மாகிட்ட பொண்ணு கேட்டப்பவும், பொண்ணு பார்க்க வந்தப்பவும் நடந்த எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. உன் ஃப்ரண்டைப் பிடிச்சிருக்கு கேட்டாங்க சரி. மறுத்ததும் நாகரீகமா விலகிட்டாங்கள்ல. அவங்க பின்னாடியே சுத்தவோ, தூக்கிட்டுப் போய் தாலி கட்டுவேன்னோ மிரட்டலையே? எப்பவும் எங்ககிட்ட வார்த்தையை நிதானமா பேசச் சொன்ன நீயே வாய் விட்டுட்டியேக்கா. நீ என்ன நினைச்ச அண்ணாவை? யோசிக்கவேயில்லாம பேசாத.” உடன் பிறந்தவளின் தவறைச் சுட்டிக்காட்டினாள்.

“ஓ... அப்படி யோக்யமானவர்தான் நேத்து நைட் தனியா இருக்கிற பொண்ணுகிட்ட பேச வந்தாராமா?” என்றாள் நக்கலாக.

“அண்ணி ப்ளீஸ், இதை எத்தனை தடவைதான் கேட்பீங்க? பிடிக்காதவங்க எது செஞ்சாலும் குற்றமாதான் தெரியும். அவங்க சொன்னதையே நானும் கேட்கிறேன். அவங்களை உங்களுக்குப் பழக்கமில்லை சரி. என்னைத் தெரியும்ல?”

“ஏய் வித்தி என்ன பேசுற? நான் உன்னைத் தப்பா பேசுவேனா?” என்று கார்த்திகா அவளின் வாய் மூடினாள்.

அவளின் கையை விலக்கி, “ஒரு செகண்ட் கூட என்னைத் தப்பா, தப்பா என்ன.. பிடிச்ச பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்ற பார்வை கூட பார்க்கல. ஜவுளிக்கடையில சந்திச்சப்பவும் சரி...”

“வித்திமா அவர் வந்தது நகைக்கடைக்குத்தானே” என்ற வாணியின் கேள்வியில், கார்த்திகாவின் அடங்கிய சந்தேகம் திரும்பவும் எழும்பி, “பாருங்கத்தை. இதுக்குப் பெயர் என்னவாம்?” என்றாள் கேள்வியாக.

“அதுக்குப் பெயர் அண்ணி மேல அண்ணா வச்சிருந்த லவ்கா. இதையும் தாண்டி உனக்கும் அத்தைக்கும் நிறைய விஷயம் தெரியாது.”

“ஓ... சின்னவ உனக்குத் தெரிஞ்சது எங்களுக்குத் தெரியாதா?” வேகமாக ஆரம்பித்ததை நிறுத்தி, ஹாஸ்பிடலில் நடந்ததைச் சொல்லிவிடலாமா என நினைத்தவள், பிள்ளை பெற்ற உடம்பை நோகடிக்கக்கூடாதென்ற பெரியவர்களின் அறிவுரையைப் பின்பற்றி அதை விடுத்து, பெயர் மாற்றத்தால் நடந்ததைச் சொன்னாள்.

“இதை ஏன் என்கிட்ட யாரும் சொல்லல? ஏன் என்னைக் கண்டா மனுஷியா தெரியலையா?” என்றார் வாணி.

“அதைச் சொல்லி உங்களைக் குழப்ப விரும்பல அத்தை. தான் பார்க்க வந்தது கீர்த்தியை இல்ல வித்யாவைன்னு தெரிஞ்சும், ஒரு பெண்ணைக் கேட்க வந்து இன்னொரு பெண்ணை எப்படி கேட்கிறதுன்னு கிளம்பிட்டாங்க. அப்புறம் ஆனந்த் அண்ணா அம்மாதான் மனசு கேட்காம அம்மாகிட்ட உண்மையைச் சொல்லி, அப்பா மாமால்லாம் வந்து பேசினாங்க. இதைவிட என்ன வேணும் ஒருத்தரைப் புரிஞ்சிக்க?”

“நாங்க நேத்து அன் டைம்ல பேசினதுதான் பிரச்சனைனா, தாகத்துக்கு தண்ணீர் எடுத்து வைக்காதது நம்ம தப்பு. அதே நேரம் உங்க வீடு பூட்டியிருந்ததும் வீட்டாளுங்க தப்பு. தண்ணீர் தாகத்துல செத்திருக்கச் சொல்றீங்களா?” வித்யா கோபமாகக் கேட்க...

“ஏய் அண்ணி, அவங்கதான் புரியாம பேசுறாங்கன்னா, நீயும் என்ன லூசுத்தனமா பேசுற?” என்று கீர்த்தி அதட்டல் போட்டாள்.

“லூசுதான் கீர்த்தி. காலைலயிருந்து எல்லாரையும் பேசவிட்டு கேட்டுட்டிருந்தேன்ல, நான் லூசுதான். எனக்கு எப்ப காய்ச்சல்னு தெரிஞ்சிக்கிட்டாங்களோ, அப்பயிருந்து கேட்கிற ஒரே வார்த்தை, பீவர் குறைஞ்சிருச்சா, உடம்புக்கு எப்படியிருக்குன்னுதான். நேத்து நைட் கூட, உடம்பு சரியில்லாத டைம் தூங்காம என்ன பண்றன்னுதான் முதல்ல கேட்டாங்க.”

“தற்செயலா சந்திச்சாலும் நேரமாகிருச்சி மத்தவங்க தப்பா நினைப்பாங்கன்னு கிளம்பினவங்களை, நான் நான்தான்...” என்று அழுகையைக் கட்டுப்படுத்தி, “நான்தான் வலுக்கட்டாயமா நிற்கவச்சிப் பேசிட்டிருந்தேன். ஏன்னு தெரியாது அவங்க கண்ணியம் பிடிச்சிருந்தது. காலையில கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு தனியா நிற்கிறேன்னு தெரிஞ்சும் என்னை நெருங்க முயற்சிக்கல. உங்க கணிப்புப்படி பொறுக்கியா இருந்தா நானே இந்தக் கல்யாணத்தை நிறுத்தியிருக்க மாட்டேனா? சொல்லுங்க அண்ணி?”

“நீங்க வர்றது தெரிஞ்சி போயிடுங்கன்னு சொன்னதுக்கு, இப்ப போனால்தான்மா தப்பாகும்னு சொல்லி நின்னாங்க. அந்த நேர்மை உங்களுக்குப் புரியலையா அண்ணி? எப்பவோ செஞ்ச தப்புதான் பெருசுன்றீங்கள்ல. நைட் ரிசப்ஷன்ல ஆரம்பிச்சி, கல்யாணம் வரைக்கும், ஏன் தாலி கட்டும்போது கூட உடல் சூடு உணர்ந்து, ஹாஸ்பிடல் போகலாமான்னுதான் கேட்டாங்க. கல்யாண வேலையில நீங்க மறந்த, நான் கண்டுக்காம சாதாரணமா நினைச்ச விஷயம். அதை ஒரு செகண்ட் கூட அவங்க மறக்கல.”

“காலையில நீங்க கேள்வியா கேட்டு அவங்களை அவமானப்படுத்தினப்பவும், எனக்காக ஏன் பேசலன்னு ஒரு பார்வை கூட பார்க்கல. அப்பவும் வா ஹாஸ்பிடல் போகலாம்னு...” சட்டென்று அழுது உடைந்தவள், “எனக்கு இந்த வாழ்க்கை போதும் அண்ணி. இப்படிப்பட்ட அன்பான ஒருத்தரை ஒண்ணுமில்லாத பழைய காரணத்துக்காகத் தூக்கியெறிய நான் தயாராயில்ல. என் வாழ்க்கை மொத்தத்துக்கும் அவங்க வேணும். இதனால நம்ம உறவுக்குள்ள பிரிவு வரும்னா... தப்புதான் இருந்தாலும், சாரி அண்ணி...”

அவள் விட்ட இடம் புரிந்தவர்கள் அதிர்வாய் அவளைக்காண, மனதில் தவறு செய்துவிட்ட குற்றவுணர்வு.

“கீர்த்தி ப்ளீஸ் எனக்கு அவங்களைப் பார்க்கணும். கொஞ்சம் வரச்சொல்லேன்” என்று கண் மூடினாள்.

“அண்ணா நான் வரும்போதுதான எதிர்ல போனாங்க. நீ பார்க்கலையா அண்ணி?” என்றாள் கேள்வியாய்.

“நீ வரும்போதுதான் நான் எழுந்ததே.” ஏனென்று புரியாத ஏதோ ஒரு கலக்கம் அவளினுள்.

“அது தெரியாது அண்ணி. ஆனா ரொம்ப சோகமா, நான் எதிர்ல வந்ததைக்கூட கவனிக்காம... கவனிக்கலையா, கவனிக்கிற நிலையில் இல்லையா!” கீர்த்தி யோசிக்க ஆரம்பித்தாள்.

எதையோ உணர்ந்தவளாக, “நீ வரும்போது நாங்க என்ன பேசிட்டிருந்தோம் கீர்த்தி” என படபடப்பாய் கேட்ட்டாள்.

“உங்களோடவே இருக்கேன்னு... எஸ் அதைத்தான் சொன்ன.”

“ஐயோ!” என்றலறிய மறுவினாடி ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸை உருவி, இரத்தம் கொட்டுவதை அலட்சியம் செய்து வேகமாக வெளியே செல்பவளை வியந்து அதிர்வாய் பார்த்திருந்தார்கள் மூவரும்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top