- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
18
சென்னை:
அபிநயாவிற்கான சிகிச்சை அவளுக்கேத் தெரியாமல் கொடுத்துக் கொண்டிருந்தான் அபிஷேக். மனதளவில் திடமானவளாகவும், தன்னை முக்கியமானவனாகவும் மாற்றிக் கொண்டிருந்தான் என்று சொல்லலாம்.
அக்கா குணமாவதில் தன் பங்கு இருக்க வேண்டும். தான் இந்த படிப்பை எடுத்ததே அதற்காகத்தான் என்று தெரிந்த போது ராஜாவின் மேல் அபிஷேக்கிற்கு தனிப் பாசம் வந்தது. அவனுக்குப் படிப்புச் சம்பந்தமான சந்தேகங்களையும் அபிஷேக்கே சொல்லிக் கொடுத்தான்.
ஆராதனாவும், வேதவல்லியும் புது நிறுவனத்துக்கு வேலையில் சேருவதற்கு வந்தவர்கள், வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம், “எம்டியை பார்க்க வேண்டும்” என்று சொல்லவும், தொலைபேசியில் அழைத்துப் பேசி முடித்த அப்பெண், எம்டியின் அறையைக் காண்பித்தாள்.
அனுமதி கேட்டு உள்ளே சென்றவர்களை உட்காரச் சொன்னார் நாராயணன். “முதல் நாள் வேலை ஆரம்பிக்கப் போறீங்க பெஸட் ஆஃப் லக்மா. கம்பெனி ரூல்ஸ் எங்க மேனேஜர் சொல்லித்தருவார். ஒன் இயர் கான்ட்ரேக்ட். அதோட நடுவுல வேலையை விட்டு நின்னா, ஃபைனா நிறைய அமௌண்ட் கட்ட வேண்டி வரும். அதுக்கு சம்மதம் சொல்லி சைன் பண்ணனும். எப்பவும் அதை மறந்துராதீங்க. வேலையில் சின்சியாரிட்டி ரொம்ப முக்கியம். டேக் கேர்” என்றார்.
“இல்ல சார் வேலையை விட்டுப் போகமாட்டோம்.”
“நீ போக மாட்டமா. உன் ப்ரண்ட் எப்படி? இரண்டு மாசத்துல மேரேஜ் வேற...”
“மேரேஜ் லீவ் மட்டும் கொடுத்தா போதும் சார்” என்றாள் வேதா.
மேலாளருக்கு அழைத்துத் தன்னுடைய அறைக்கு வரவழைக்க, வந்த மேலாளரோ இவர்களைப் பார்த்ததும் அதிர்ந்து நின்று விட்டார்.
”வாப்பா சரண். என்ன அங்கேயே நின்னுட்ட?” என்றதும் திரும்பிப் பார்த்த ஆராதனா, கணவனைப் பார்த்து கண்ணடித்து, ‘எப்புடி’ என்பது போல் பார்த்தாள்.
அதில் திணறியவன், ‘ரௌடி ரௌடி. என்ன அட்டகாசம் பண்றா பாரு. தைரியம்டி உனக்கு” என நினைத்தபடி, “சொல்லுங்க சார்” என்றான்.
அவர் இருவரையும் அறிமுகப்படுத்த, வேதவல்லிக்கு கைகுவித்து வணக்கம் தெரிவித்தவன், ஆராதனாவிடம் கைநீட்ட, பதிலுக்கு அவள் கைகுவித்து வணக்கம் சொல்லி அவனின் மூக்குடைத்து விட்டாள்..
“உன்னையெல்லாம் என்ன பண்ணலாம்?” என்று பார்த்தவனை,
“என்ன வேணும்னா பண்ணிக்கடா மச்சான். என் கலாய்ப்பு தொடரும்.” என்று பதில் பார்வை பார்த்தாள்.
நாராயணனோ தொண்டை கனைத்து, “சரண் பார்த்தது போதும். அவங்களுக்கு கம்பெனி பார்மாலிட்டீஸ் சொல்லிக் கொடுத்து, அக்ரிமெண்ட்ல சைன் வாங்கிரு” என்று அனுப்பி வைத்தார்.
சம்மதம் சொல்லி விடைபெற்றவர்கள் மேலாளர் அறைக்குள் நுழைய, “வெல்கம் டூ கே.என் கம்பெனி என் பொண்டாட்டியே” என்றான் சிரம் தாழ்ந்து.
“அண்ணா! வரவேற்பு பொண்டாட்டிக்கு மட்டும் தானா?”
“நீ தப்பா நினைச்சாலும் அதான்மா உண்மை. ஏன் தனு இங்க வேலைக்கு வர்றத சொல்லவே இல்ல?” என்று மனைவியிடம் கேட்டான்.
“தோணலை. அதனால சொல்லலை?” என்றாள் தோள்குலுக்கி.
“என்ன பதில் இது? ஏன்மா நீயாவது சொல்லிருக்கக் கூடாது?”
“எங்க சொல்ல விட்டா. அதுக்குத்தான் செக் வச்சிட்டாளே. மீறி பண்ணினா எங்க நட்புக்கு முற்றுப்புள்ளி வச்சிருவேன்னு சொல்லிட்டா. அதை விடமுடியாதே அண்ணா. அதான் சொல்லலை” என்றாள்.
சரண் அவர்கள் தொடர்பான அலுவலக ஊழியர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திக் கடைசியில், “இவங்க வசந்தி அக்கா. இவங்க தான் உங்களுக்கு வேலை சொல்லித்தரப் போறாங்க” என்று வசந்தியுடன் அனுப்பினான்.
ஆராதனா, வேதவல்லி இருவருக்கும் சக்தியின் அருகிலேயே வேலைக்கான இடம் ஒதுக்கப்பட்டது. வசந்தி மூலமும், சக ஊழியர்கள் மூலமும் சரணைப் பற்றி ஒரு நாளிலேயே நிறைய தெரிந்து கொண்டாள். ‘கம்பெனியின் முக்கிய அங்கமே தன் கணவன்தான். அவன் தனியாக ஒரு கம்பெனி ஆரம்பித்தால் கூட அவனால் பெரிய அளவு சாதிக்க முடியும். சாதிக்கக் கூடியவன்தான்’ என்று கணவனை நினைத்து பெருமைப்பட்டாள்.
மாலையில் அவர்களை சரணே கூப்பிட்டுச் செல்லலாம் என்று நினைத்து வர, அவளோ ஆட்டோவில் ஏறிக் கொண்டிருந்தாள்.
“ஹேய் தனு! என்னோட வருவன்னு பார்த்தா ஆட்டோ வரச் சொல்லியிருக்க. அங்கிள் நான் வேலை செய்யுற கம்பெனின்னு தெரியும்ல. அப்புறம் ஏன் வந்தீங்க?” என்று சேகரையும் கேட்டான்.
“அதை உன் திருநெல்வேலிகிட்ட கேட்டுக்க. வரச்சொல்லி, வரலன்னா யாரு உன் ஒய்ஃப்கிட்ட மாட்டிட்டு அவஸ்தைப்படுறது.”
சரண், ஆராதனாவையே பார்க்க, “இப்படிப் பார்த்தா நாங்க மயங்கிடுவோமா! அங்கிள் ஸ்டார்ட் பண்ணுங்க” என்று சொல்லி, கணவனைப் பார்த்து புருவம் தூக்கி, ‘எப்புடி’ என்பது போல் பார்த்துக் கிளம்பினாள்.
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன், “பழி வாங்குறாங்களாமாம்” என்றபடி சிரித்தான்.
அப்பொழுது வெளியே வந்த சக்தியும், ஷோபியும், “என்ன சார் தெரிஞ்சவங்களா?” என்று கேட்க,
“ம்... ரொம்பத் தெரிஞ்சவங்க” என்று சிரித்தபடி காரில் ஏறிச் சென்றான்.
“என்ன சக்தி லெட்டர்லாம் வைக்கிறாருன்னு சொல்ற? உன்னைக் கண்டுக்கிட்டது மாதிரியே தெரியலையே. எதுக்கும் பாருடி. வேற யாராவது இருக்கப் போறாங்க” என்று அக்கறையுடன் சொன்னாள் நல்ல தோழியாய்.
“அப்படில்லாம் இருக்காது ஷோபி. இத்தனை நாள்ல இன்னைக்கு சிரிச்சாவது பேசிருக்காரே. வா போகலாம்” என்றதும் கிளம்பினார்கள்.
இப்படியே ஒவ்வொரு விஷயத்திலும் கணவனை கால்வாருதல், கலாய்த்தல் என்று அவளின் வேலையைச் செய்ய, சரண் அதை ரசிப்பதையே தன் பொழுது போக்காக மாற்றிக் கொண்டான்.
வேதவல்லியின் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்த பொழுது தான் ஆராதனா ஒரு சின்ன வித்தியாசத்தை உணர்ந்தாள். அது சக்தி! அவளின் பார்வை தன் கணவன் மேல் படிவதையும், அடிக்கடி அவன் அறை அருகில் சென்று, அவனறியாமல் அவனைப் பார்ப்பதையும் கவனித்தாள்.
‘பார்றா! நம்மாளுக்கு நிறைய கேர்ள்ஸ் ஃபேன்ஸ் இருக்காங்க போலிருக்கே. பெரிய ஆளுதான் மேனேஜர் சார் நீங்க. உங்க மேல நிறைய கம்ப்ளைண்ட்ஸ் வேற. எல்லா பொண்ணுங்களையும் அக்கா, தங்கைன்னு கூப்பிட்டு அரள வைக்கிறீங்களாம். என்கிட்ட மட்டும் எப்படி சார் கவுந்தீங்க? இந்த சக்தி வேற நல்லா கலரா பார்க்க லுக்கா இருக்கா. அவளை ஏன் உங்களுக்குப் பிடிக்கல?”
“லூசு ஆரா! உன் ஹஸ்பண்ட் அவளை லவ் பண்ணியிருக்கணும்னு எதிர்பார்க்குறியா? எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்கிறதில்லை. உனக்கு சரணைப் பிடிச்சிருக்கு. அவனுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. கல்யாணமும் ஆகிருச்சி. அப்புறம் என்ன நினைப்பு இது. ஒழுங்கா அந்தப் பொண்ணை திருத்துற வழியைப் பாரு” என்று மனசாட்சி சொல்ல, தன் தலையில் தட்டிக் கொண்டாள்.
ஒருநாள் சரணையே பார்த்துக் கொண்டிருந்த சக்தியிடம் வந்தவள். “என்ன சக்தி லவ்வா?” என்றதும், அவள் வந்ததைக் கவனிக்காத சக்தி அதிர்ச்சியில், “ஆ... இல்.. ஆமா ஆராதனா” திணறியபடியே சொன்னவள், “உங்களுக்கு எப்படி?” என்றாள்.
“அதான் இந்த ரூம் தாண்டி உங்க பார்வை எங்கேயும் போக மாட்டேன்னுதே. ஒன் சைடா?”
“என்ன? எனக்குப் புரியலை?”
“இல்ல ஒன் சைட் லவ்வான்னு கேட்டேன்?”
“இல்ல டூ சைட்தான்.”
இப்பொழுது ஆராதனா அதிர்ந்தாள். ‘இல்ல அப்படிலாம் இருக்காது. இந்தப் பொண்ணு ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கா’போல. என்னடா ஆராவுக்கு வந்த சோதனை?’ என்று தன்னையே நொந்து என்று, “எப்ப? எப்படி ஆரம்பித்தது?” என்று விளக்கம் கேட்டாள்.
“அதை நீங்க ஏன் கேட்குறீங்க?”
“இப்படியே தூரத்துல இருந்து எத்தனை நாள் பார்த்துட்டு இருப்பீங்க. என்னால முடிஞ்ச எதாவது ஹெல்ப் பண்ணலாமேன்னு தான்.”
சக்தி தன் காதல் கதையை ஆராதனாவிடம் சொல்ல, ஹையோ!”’ என்று தலையிலடித்துக் கொள்ளலாம் என்றிருந்தது அவளுக்கு. அந்த பூ விஷயம் சொல்லும் போது அப்படியே அவளை அறைய வேண்டும் போலிருந்தது. சக்தி சொன்னது இதுதான். ‘ஒரு நாள் மேனேஜர் சிவகுமார் சார் பக்கத்துல இருக்கும் போதே பூ வச்சிட்டுப் போனார்’ என்றதும் ஆராவிற்குப் புரிந்தது. இது அந்த சிவகுமாரின் வேலை என்று.
சக்தியிடம் திரும்பி, “கொஞ்சம் பொறுமையா இருங்க. எனக்குத் தெரிஞ்சி நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்களோனு தோணுது. இது என் கருத்துதான்” என்றாள்.
“ஷோபி கூட இதேதான் சொன்னா.”
“எதுக்கும் உங்க கனவுகளை கட்டுக்குள்ள வையுங்க. எந்த முடிவா இருந்தாலும் பாசிட்டிவா ஏத்துக்கணும். மனம் தளரக் கூடாது” என்று அவளை யோசிக்க விட்டு நகர்ந்தாள்.
சக்திக்குமே அவளின் இத்தனை நாள் அவன் பின் சுத்தியதற்கு பெயர் காதல் தானா? இல்லை சலனமா? என்று குழம்ப ஆரம்பித்தாள். உண்மையான காதலாக இருந்திருந்தால், இந்த குழப்பத்திற்கு அங்கு என்ன வேலை. சக்தியின் குழப்பமே அது காதல் இல்லை என்றானது.
வேதவல்லியின் திருமணம் திருநெல்வேலியிலும், வரவேற்பு சென்னையிலும் வைப்பதால், சரணால் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை.
“என்னால வர முடியாது. ரிசப்ஷன் புல்லா அட்டெண்ட் செய்வேன்” என்று அவர்களிடம் சொல்ல அவனின் சூழ்நிலை தெரிந்ததால் சம்மதித்தார்கள்.
வேதவல்லியின் திருமணம் பெரியவர்களின் சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துடனும் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஊரிலேயே திருமணம் வைத்ததால், ஆராதனாவின் வீட்டினர் வரவேற்புக்கு வரவில்லை என்றதும், அனைவரிடமும் சொல்லி தோழியுடனே சென்னை வந்தாள்.
முகிலன் அழைத்ததால் சரண் வீட்டிலும், வேதவல்லி அழைத்ததால் ராணியும் வரவேற்புக்குக் கிளம்பினார்கள். தன்னுடன் வேலை பார்ப்பவர்களுக்கு வேதவல்லி திருமணத்திற்கு முன்னரே பத்திரிக்கை வைத்திருந்தாள்.
Last edited: