- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
18
வெளியூரிலிருந்து கோயம்பேடு வரும் பேருந்துகளின் நுழைவாயிலில் இருந்து பேருந்துக்காக பொதுமக்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.
“இந்த இடத்துல எந்த பிரச்சனையும் இல்லாமல், அந்த அக்யூஸ்டைப் பிடிக்க முடியுமாடா கார்த்திக்?”
“ஸ்ஸ்ஸ்... ட்யூட்டி டைம்ல அதுவும் பப்ளிக் ப்ளேஸ்ல பெயர் சொல்லாத சொல்லியிருக்கேன்ல” என கடிந்தான் கார்த்திகேயன்.
“சாரிடா. பழக்கதோஷம்.”
“எந்த தோஷமும் நுழையக்கூடாது. கண்டிப்பா அவன் வருவான். எந்த கெட்டப்ல என்பதுதான் தெரியாது. அதைக் கண்டுபிடிக்கிறதுலதான் நம்மளோட திறமை இருக்கு. இந்த எழுபது வயது கெட்டப் எனக்கு ஓகேதான?
“ஹ்ம்... ஓகேடா. நீயே சொன்னாலும், உன்னை யங்மேன்னு யாரும் நம்பமாட்டாங்க. இதே மேக்கப்ல அவன் வந்தா எப்படிடா கண்டுபிடிக்கிறது?”
“அதெல்லாம் கண்டுபிடிச்சிரலாம். அவனுக்கு பலவித மேக்கப்போட்டு பல கோணத்துல எடுத்ததை, என் மனசுல அப்படியே பதிய வச்சிருக்கேன். எந்த வேஷத்தில் இருந்தாலும் என்னால அவனை கண்டுபிடிக்க முடியும்” என்றான்.
இருவரும் கோயம்பேடு பேருந்து நுழைவாயிலின் வெளிப்புறமிருந்த ஒரு ஆட்டோவில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு எண்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் தடுமாறியபடி, அங்கிருந்த வழிப்போக்கன் ஒருவனிடம், “இங்க பெங்களுர் பஸ் எங்க போய்பா ஏறணும்?” என கேட்டார்.
அவன் வழி சொல்லி அனுப்ப, “தாமு அலார்ட்டா இரு. அவன் வந்துட்டான்” என்றபடி கொஞ்சம் மெதுவாக அந்த வழிப்போக்கனிடம் சென்று, “முன்னாடி போறது எங்கண்ணன்பா. அவனுக்கு சரியா கண்ணு தெரியாது. எங்க போறேன்னு சொன்னான் சொல்லுங்க. நானே அவனை விட்டுட்டுப் போயிருறேன்” என்றதும், “ஆமா. இங்க மட்டும் இளமை ஊஞ்சலாடுது. நீங்களும் வயசானவர்தானே. இருந்தாலும் அவர் தம்பின்னு சொல்றீங்க. அவர் பெங்களுர் பஸ் எங்க இருக்குன்னு கேட்டார்” என்றான்.
அவனுக்கு நன்றியுரைத்து எண்பதைப் பின்தொடர்ந்தது எழுபது.
சற்று நேரத்திற்கெல்லாம் அவனிடம் வந்த அவந்திகா, இருவரையும் என் தாத்தா என்று சொல்லி விவரம் கேட்க, அவளுக்குப் பதிலளித்தவன், ‘இதுக்கு மேல இங்க நின்னா இவங்க ஃபேமிலியே வந்து விசாரிப்பாங்க போல. தாங்காதுடா சாமி” என்று ஓடியேவிட்டான்.
நடைபாதையில் பொதுமக்கள் அனேகம் பேரை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ஒன்றிரண்டு பேராக அனுப்பினர். குற்றவாளிக்குச் சந்தேகம் வந்து தப்பிவிடக்கூடாதென்று.
முன்னாடி சென்ற எண்பது வயசானவர், சுற்றிலும் திரும்பித் திரும்பி பார்த்தபடி வர, அவருக்குத் தன்னை ஏதோ கண்ணுக்குத் தெரியாத வலை சூழ்ந்திருப்பதாக தோன்றியது. ‘சே...சே அப்படிலாம் இல்லை’ என்பது போல் தலையை உலுக்கி நடக்க, அவர்களைத் தொடர்ந்து அவந்திகா சென்று கொண்டிருந்தாள்.
வைப்ரேட்டிலுள்ள அவந்தியின் போன் சத்தம் கேட்டு எடுத்தவள், ப்ளூடூத்தை காதில் சொருகி, “சொல்லு விஷ்ணு”” என்றாள் மெல்லிய குரலில்.
“அவந்தி! நீ ஏன் உள்ள போற? அவுட் ஆஃப் போகஸ் பண்ணிக்கலாம். நான் சைடுலதான் நிற்கிறேன் பாரு” என்று அவள் திரும்பி அவனைக் கண்டதும் தலையசைத்து, “அவங்க ஸ்பாட்கிட்ட நெருங்கிட்டாங்க. நீ இப்ப நான் இருக்கிற இடத்துக்கு வந்திரு” என்றான்.
“விஷ்ணு, அதான் பொதுமக்கள் ஒருசிலரா இருந்தாலும், போக வர்றதா இருக்காங்க தான? என் கணிப்பு சரின்னா, என் முன்னாடி போற ரெண்டு வயசானவங்கள்ல, முதல்ல போறவன் அக்யூஸ்ட். செகண்ட் போலீஸா இருக்கும். நான் சேஃபா அவங்களைப் பின் தொடர்றேன்.”
“அவந்தி சொன்னா புரிஞ்சிக்கோ. அங்க என்ன வேணும்னா நடக்கலாம். தள்ளி வா.”
“அவனுக்கு ஏன் விஷ்ணு பயப்படணும்? அவனென்ன அவ்வளவு பெரியவனா?” என கேள்வி கேட்டாள்.
“ஆமா. இப்ப வந்து கேளு. நீ எதுவும் பேசவேண்டாம். நான் சொல்றதை மட்டும் கேளு. அவன் இப்ப உள்ள போறதே பாம் வைக்கத்தான்.”
“ஐயோ! என்ன சொல்ற?”
“ஏய்! கத்தாத அமைதியா சொல்றதைக் கேளு. அவனுக்கு போதைக் கடத்தல்லயும் சம்பந்தமிருக்காம். அதை நோண்டுனப்பதான், சிபிஐக்கு இந்த மேட்டர் சிக்கியிருக்கு. இது ஒரு அமைப்பாம். என்னைக்குத்தான் இவனுங்க திருந்தப் போறாங்களோ தெரியல” என சலித்தவன், “பாம் வச்சிட்டு, முதல்ல போற பஸ்ல எஸ்கேப்பாகிடுறது அவன் ப்ளான். போலீஸ் ரொம்ப மெனக்கெட்டிருக்காங்க. நீ வேற நடுவுல புகுந்து சொதப்பிராத தாயே. வெளில வா” என்றான்.
அவன் சொன்ன சொதப்பல் வேலையை செவ்வனே செய்தாள் அவந்திகா.
“இல்ல விஷ்ணு நான் தள்ளியே நடக்கிறேன்” என்று குரலை இறக்கிப் பேசினாள்.
“நான் சொல்லி என்னைக்கு கேட்டுருக்க. சரி வைக்கிறேன். பார்த்துப் போ! என்னைத் தாண்டி நீ போயிட்டா, உன்னை வாட்ச் பண்றது கஷ்டம்” என்று வைத்தான்.
சரியாக இருபாதைகள் பிரியும் இடத்திற்கு முன், அந்த எண்பது வயதானவரை, முன்னால் சென்று கொண்டிருந்த இருவர் திரும்பி மடகினர். அதே சமயம் மற்ற புறங்களில் இருந்தும் நிறைய பேர் சுற்றி வளைக்க, பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தன் சூழ்நிலை புரிந்து, ஓட யத்தனியத்த எண்பதை, எழுபது தடுத்தது, தன் தடிமுனையில் வைத்திருந்த துப்பாக்கியால்.
பின்னால் வந்த அவந்திகா எழுபது வயது நாராயணனை நோக்கி ஓடிவர, அவளையும் போலீஸ் என நினைத்தான் அந்த எண்பது வயது குற்றவாளி.
யாரோ ஒருவர் விட்டுச் சென்றிருந்த குழந்தை, நாராயணன் பின்னால் நின்றிருந்தது. அதைப் பார்த்த அவந்திகா, குழந்தைக்கு எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாதென்றே, குழந்தையை நோக்கி வந்தாள்.
சுற்றிலும் போலீஸ் துப்பாக்கியும் கையுமாக நிற்க, குற்றவாளியோ நிலைமையின் தீவரம் உணர்ந்ததுமே, தன்னுடைய துப்பாக்கியை எடுத்து மற்றவர்களை மிரட்டி நகரச் சொன்னான். அதே நேரம் குழந்தையைப் பார்த்து பதறியபடி ஓடிவந்த அவந்திகாவைப் பார்த்ததும், ‘பயமில்லாதவளா இந்த போலீஸ்காரி’ என சற்றே ஆச்சர்யப்பட்டு, “என்னைப் பிடிக்கப் பொம்பள புள்ளைய கூட்டிட்டு வந்திருக்கீங்களேடா. பொட்டப்பசங்களா” என்று எகத்தாளமாக பேசிநான்.
மற்றவர்கள் அவன் என்ன பேசுகிறான் என உணருமுன், அவந்திகாவை நோக்கிச்சுட, இதை அறியாதவள் குழந்தையைத் தூக்குவதற்குக் குனிய, குண்டு திசைமாறியது. அது சைலன்ஸர் துப்பாக்கியாதலால், துப்பாக்கி சத்தம் அவள் காதில் விழவில்லை. விழுந்திருந்தால், ஒருவேளை சுதாரித்திருப்பாளோ என்னவோ!
பின்னால் வந்தவளை அறியாததால், தன்னைத்தான் சுட்டான் என்பதில் சுதாரித்த நாராயணன், அவன் காலில் சுட, தங்கள் அமைப்பை எண்ணி மனம் தளராமல் நின்றவன், நாராயணனைக் குறிவைத்ததும் உஷாராகி கீழே குனிந்தான்.
அதேநேரம் இடதுபக்க தோளில், குழந்தையை தூக்கியபடி, அவந்திகா எழுந்து நிற்க, அந்தக் குண்டு அவளின் வலதுபக்க மார்பிற்கு மேல் பாய்ந்து துளைத்தது.
“அம்மாஆஆஆ...” என்ற அலறல் சத்தம் பின்னால் கேட்க, பெண்ணின் குரலில் பதறிய நாராயணன் குற்றவாளி அசந்த சமயம் நெற்றியில் குறிவைத்து சுட, அவன் அந்த இடத்திலேயே உயிரை விட்டான்.
அவன் இறந்ததை உறுதிப்படுத்தி சத்தம் வந்த திசையில் திரும்ப, குழந்தையை மெல்ல கையிலிருந்து இறக்கியபடி, கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து கொண்டிருந்தாள் அவந்திகா. அதை அவள் கண் சொருகலில் கண்டவன், ஓடிச்சென்று தாங்கிப் பிடித்துக் கையில் ஏந்தியதில், பொய் தாடி உருவ, அவனின் நாடியில் உள்ள தழும்பு அவள் கண்களில் பட்டது. அவனைப் பார்க்கும் பொழுதே தெரிந்தது அவன் ஒரு இளைஞன் என்று. அவன் கண்களின் தீவிர பாவனை, ‘ஐயோ!’ என்று பரிதாபமாக மாறி, பின் பார்வையை நேர்படுத்தியதையும் பார்த்தபடி மயங்கினாள்.
“எல்லாரும் என்ன பண்ணிட்டிருந்தீங்க? குழந்தையோட வர்ற குடும்பத்தை, உள்ளே அலோ பண்ணக்கூடாது சொல்லியிருந்தேன்ல? பின்னாடியே ஒரு பொண்ணும் வந்திருக்கா. இது தெரியாம அவனை ரௌண்டப் பண்ணியிருக்கீங்க? எப்படி இவ்வளவு கேர்லெஸ்ஸா இருந்தீங்க தெரியல? இனி கேஸ் அது இதுன்னு என் தலைதான் உருளும்” என தன் கீழ் இருந்தவர்களை சத்தமிட்டு, மற்றவர்களின் தலைகுனிதலில் எரிச்சலானவன், “இவன்கிட்ட எதாவது தடயம் இருக்குதான்னு பாருங்க” என்று ஆணையிட்டான்.