- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
18
“அம்மா சீக்கிரம் வாங்க” என கத்திய கிருபாவின் அலறலில்... “என்னடா சத்தம் ஓவராயிருக்கு? காலேஜ் போயிட்டு வந்தா முகம் கைகால் கழுவிட்டு வரச் சொல்லியிருக்கேன்ல.”
“அதெல்லாம் அப்புறமா பார்க்கலாம். நான் அவசரமா உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்மா.”
“எதுவாயிருந்தாலும் ஐந்து நிமிஷத்திற்குள்ள யாரும் ஓடிப்போகப் போறதில்ல. முதல்ல முகம் கைகால் கழுவி, ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா.”
“இதோ பைவ் மினிட்ஸ்” என்றவன், சீக்கிரத்திலேயே வந்து தாயிடம் ஒரு போட்டோவைக் கையில் கொடுத்து, “இவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்மா. அதுக்கு உங்க சம்மதம் வேணும்” என்றான்.
“என்னடா இப்படி சொல்ற? ஆமா யார் இந்த பொண்ணு?”
“முதல்ல எப்படி இருக்காங்கன்னு சொல்லுங்கம்மா?”
“ம்... அழகா சூப்பராயிருக்கா. உன்னை விட பெரிய பொண்ணா தெரியுதேடா” என்றார் மகன் எதோ தன்னிடம் விளையாடுகிறான் என்று தன்மையாகவே.
“பெரிய பொண்ணா இருந்தா என்னம்மா? நான் கூட்டிட்டு வர்றதா முடிவு பண்ணிட்டேன்” என்று சீரியஸாகவே சொல்லும்போது சிவராமன் உள்ளே நுழைந்தார்.
“வந்துட்டீங்களா. உங்க பையன் எதோ ஒரு பொண்ணு போட்டோவைக் காண்பிச்சி வீட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்னு சொல்றான். என்னன்னு கேளுங்க?” என்று கணவரிடம் பஞ்சாயத்து வைத்தார்.
“யார்டா அது? உனக்கு என்ன வயசுன்னு நினைவிருக்கா. இப்பவே பொண்ணு போட்டோவோட சுத்துற. அந்தளவுக்கா உன்னை வளர்த்திருக்கோம். பொறுப்பானவன்னு நினைச்சா, இது படிக்கிற வயசுடா. படிச்சி நல்ல வேலைக்கு போய் ஸ்டெடியாகுறதை விட்டுட்டு, பொண்ணு போட்டோவோட சுத்துறியா?” என்றார் பொறுப்பான தந்தையாக.
“அதுவும் இவனோட பெரிய பொண்ணுங்க. இருபத்திரெண்டு வயசிருக்கும்னு நினைக்கிறேன்” என்று ரோகிணி புலம்ப...
“இல்லம்மா. இருபத்தைந்து வயசு. வேலைக்கு போறாங்க” என்று முடிப்பதற்குள், கன்னத்தில் கை வைத்திருக்க... ஓங்கி அடித்திருந்த தாயிடம்... “ஏன்மா அடிச்சிங்க? எனக்கு அவங்களைப் பிடிச்சிருக்கு. நான் அவங்களை இங்க கூப்பிட்டு வரத்தான் செய்வேன்” என்றான் வீம்பாக.
அடுத்தடுத்த அடிகளாக சிவராமன் அவனை அடித்துத் துவைக்க, “அப்பா எதுக்கு என்னை அடிக்கிறீங்க? இப்படி வயசுப்பையனை அடிக்காதீங்க சொல்லிட்டேன். இது என் லைஃப். எனக்கு பிடிச்சதைச் செய்றேன். அதுல தலையிடாதீங்க?”
அவனின் திமிர் பேச்சில், “ராஸ்கல்.. யாருன்னு சொல்லு அவளையே கேட்கிறேன். ஐந்து வயசுச் சின்னப்பையனோட என்ன பழக்கம்னு.”
“நோ அதெல்லாம் முடியாது. அவங்களை யாரும் டிஸ்டர்ப் பண்றது எனக்குப் பிடிக்கலை.”
“முதல்ல வீட்டைவிட்டு வெளியில போடா. உன்னை மாதிரி ஒரு பிள்ளை எனக்கு வேண்டாம். இப்படி ஒரு பிள்ளை பிறக்கலைன்னு நினைச்சிக்கிறேன்” என்று அழுதவர், “உன்னை பொறுப்பானவனா வளர்த்திருக்கிறேன். இவன் என் பிள்ளைன்னு எத்தனை பேர்கிட்ட சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டிருப்பேன் தெரியுமா? எல்லாத்தையும் கெடுத்துட்டியேடா” என்ற தாயை வலியுடன் பார்த்தான். இது தன் தந்தையின் தவறென்று தெரிந்தால் என்ன செய்வார் என்றெண்ணி.
“அம்மா என்னையா வெளில போகச் சொன்னீங்க. அவங்களைப் பார்த்துமா உங்களுக்கு பிடிக்காமல் போச்சி” என்று குனிந்து போட்டோவை எடுத்து, “நீங்களாவது ஒருமுறை பாருங்கப்பா. பார்த்தா கண்டிப்பா வேண்டாம்னு சொல்ல மாட்டீங்க” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.
அதை தட்டிவிட்ட சிவராமன், “எவ்வளவு பெரிய ரதியா இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வேண்டாம்” என்றவர் கண்கள் தன்முன்னே விழுந்து கிடந்த போட்டோவைக் காண, சந்தேகத்தில் கண்ணைக் கசக்கியபடி பார்த்தவர் உதடுகள் அதிர்ச்சியில் “ஹரிப்ரியா” என்று முணுமுணுத்தது.
மகனோ தந்தையின் அதிர்ச்சியை சற்று குரூரத்துடன் பார்த்திருக்க, போட்டோவை கையிலெடுத்தவர், “இந்த பொண்ணையாடா சொன்ன? சொல்லுடா இவளா நீ சொன்ன பொண்ணு?”
“இந்த பொண்ணைத் தான்ங்க சொன்னான்.”
“இல்ல இது தப்பு” என்றார் குரல் நடுங்க.
“எதுப்பா தப்பு? அவங்களுக்கு அப்பா, அம்மா கிடையாது. ஒரு பாட்டி மட்டும்தான். பேசுறதுக்கு ரொம்ப ஸ்வீட். ஸோ பிடிச்சிருந்தது. அதான் அம்மாகிட்ட கேட்டேன்” என்றான் அசால்ட்டாக அவர் மனம் வலிக்க வேண்டுமென்றே.
“இல்ல நீ தப்பு பண்ற. அந்தப் பொண்ணை உனக்கெப்படி தெரியும்?” எனும்போதே முகமெல்லாம் வியர்த்தது.
“அதுவா அவங்க வேலை செய்யுற பேங்குக்கு ஒரு டைம் போயிருந்தேன். அப்ப பழக்கமாச்சி.”
“நீ பொய் சொல்ற. அவ நல்ல பொண்ணு. அவளுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை கூட பார்த்துட்டேன்.”
“இந்த பொண்ணை உங்களுக்குத் தெரியுமாங்க? நீங்க அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தீங்களா? இதென்ன புதுக்கதை? அவளுக்கு நீங்க ஏன் மாப்பிள்ளை பார்க்கணும்?” ரோகிணி கணவனை கேள்விகளால் குடைய...
“ப்ச்... அம்மா அப்பா கதையை விடுங்க. நீங்க சம்மதம்னு சொல்லுங்க நான் அழைச்சிட்டு வர்றேன். அவங்களை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றான்.
இவர்களின் வாக்குவாதத்தில் அவன் அந்தப்பெண்ணை வாங்க போங்க என்பதை கவனிக்க மறந்திருந்தனரா, இல்லை அது வித்தியாசமாக படவில்லையா தெரியவில்லை.
“இல்ல ரோகிணி வேண்டாம். இவன் அவளை கூட்டிட்டு வரக்கூடாது.”
“நானும் கூட்டிட்டு வாடான்னு சொல்லலையே. ஆமா ஏன் உங்களுக்கு இப்படி வேர்க்குது?”
“அது ஒண்ணுமில்லை. நீ..நீ ஒத்துக்காத” என்று பதட்டத்துடன் சொன்னார்.
அவரைக் கேள்வியாய் பார்த்த ரோகிணி, “ஏன்? அவளை நீங்க கூட்டிட்டு வரப்போறீங்களா?” என ஒரு மாதிரிக் குரலில் வினவ...
“ரோகிணீஈஈ..” என்று மனைவியின் கன்னத்தில் பளார் என்று வைக்க... தாயின் இந்த வார்த்தையை எதிர்பார்த்திராத கிரி தந்தையின் அடியில் ‘அப்பா’ என்றலற போனவன் அதை மனதோடு நிறுத்தி, கழகத்திற்கு பின் வழி பிறக்குமென்ற நம்பிக்கையில் அமைதியானான்.
“அடிங்க ஏன் நிறுத்திட்டீங்க? ஒரு பொண்ணுக்காக அப்பனும், மகனும் போட்டி போடுறீங்களே! அறிவில்லை உங்களுக்கு” என்று ஆத்திரத்தில் வார்த்தைகளை விட்டார்.
“வேண்டாம் ரோகிணி. அவளைப்பற்றி அப்படில்லாம் சொல்லாத. உன் வார்த்தைக்கான அர்த்தம் தப்பாயிருக்கு. அப்புறம் நான் மனுஷனாயிருக்க மாட்டேன்.”
“ஓஹ்ஹோ.. இப்பனாப்ல இருக்குறேன்றீங்களா? அப்படி என்ன அந்த பொண்ணு ஸ்பெஷல். என்னை விட?” என்றவர் குரல் கோபத்தின் உச்சியிலிருந்தது.
“ஆமா. அவள் ஸ்பெஷல் தான். எல்லாரையும் விட. உன்னை விட. இல்ல உனக்கு முன்னாடியிருந்தே எனக்கு ஸ்பெஷல் தான்.” ரோகிணியின் குழப்ப முகம் பார்த்து... “என்ன புரியலையா? புரியாது எப்படி புரியும் நான்தான் உன்கிட்ட சொல்லவே இல்லையே. ஏன்னா அவ நான் பெத்த பொண்ணு!. ஆமா, நான் பெத்த பொண்ணு. அவளைப் போய் என்னோட சே...” என்று கண்மூடி கீழே அமர்ந்து அழுதார்.
அப்பாவின் வாய்மூலமாக வந்த உண்மையில், அதிர்ச்சியில் திக்பிரமை பிடித்தாற் போலிருந்த தாயைத் தட்டி “அம்மா” என்று அசைக்க...
அதிர்ச்சியிலிருந்தவர், “உங்கப்பா என்னடா சொல்றாங்க? இது அவர் பொண்ணா? எப்படிடா? அப்ப நான் யாரு? நீ யாரு?” கணவனிடம் திரும்பி, “உண்மையைச் சொல்லுங்க. இது உளறல் தான. பையனை திருத்தணும்னு தான இப்படி உங்கமேலயே பழி போட்டுக்கிட்டீங்க?” என்றார் பொறுமையாக சற்று கணவன் மேலுள்ள நம்பிக்கையுடன்.
கண்ணீர் துடைத்து நிமிர்ந்து அமர்ந்தவர், “நான் சொன்னது உண்மைதான். நீ எனக்கு இரண்டாவது மனைவி. என்னோட முதல் மனைவி சங்கீதாவுக்கு பிறந்தவள் தான் இந்தப்பொண்ணு. இவளுக்கு நாலு வயசிருக்கும் போதுதான் சங்கீதா இறந்துட்டா. அப்புறம் தான் உன்னைப் பார்த்து பிடிச்சதும் கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்.”
“நான் இரண்டாவதா? ஏன் இந்த துரோகம்? இதை ஏன் கல்யாணத்துக்கு முன்னாலயே சொல்லல?”
“துரோகம்னு பெரிய வார்த்தை சொல்லாதமா. ஒருத்தி இருக்கும்போதே இன்னொருத்தியோட வாழ்றதுக்குப் பெயர்தான் துரோகம்” என்றார் சிவராமன்.
“ஓ... துரோகத்துக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா. சரி அதை விடுங்க. இந்தப் பொண்ணு இத்தனை வருஷம் எங்கிருந்தா. இப்ப எப்படி கிடைச்சா? ரெட்டை வாழ்க்கை வாழ்ந்திட்டிருந்தீங்களா? இது தெரியாம உங்களை ராமன்னு உயர்வா நினைச்சிட்டிருந்திருக்கேனே! என் புத்தியை என்ன பண்ணலாம்.”
“அம்மா ப்ளீஸ். உங்க புருஷன் பண்ணின தப்புக்கு அக்காவை ஏன் பேசுறீங்க? அவங்க நல்லவங்கம்மா. அவங்களுக்கு அப்பான்னு ஒருத்தர் உயிரோட இருக்காரா இல்லையான்றதே இப்ப வரைக்கும் தெரியாது.”
“அக்காவா! என்னடா நீ இவ்வளவு நேரம் பேசியதென்ன? இப்ப அக்கான்ற?”
“அம்மா தயவு செய்து கொஞ்சம் அமைதியா இங்க வந்து உட்காருங்க” என்று ஷோபாவில் அமர வைத்து தண்ணீர் கொடுத்து, “நான் இவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்னு தான் சொன்னேன். இவங்களை லவ் பண்றதாகவோ, கல்யாணம் பண்ணப் போறதாகவோ சொல்லவே இல்லையேம்மா.”
“கிரி” என்ற தாயின் மலர்ந்த முகம் பார்த்தவன்...
“கிரிதான்ம்மா உங்க பையன் எப்பவும் தப்பு பண்ணமாட்டேன். ஆனா, நீங்க இவர் பண்ணியதை வச்சி அக்காவை தப்பா நினைக்காதீங்கம்மா. அவங்களைப் பற்றி முழுசா தெரிஞ்சிதுன்னா நீங்களே போய் கூட்டிட்டு வருவீங்க.”
“கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுடா?”
ராசியின் அம்மா இறந்ததில் ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடிக்க... கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைக் கூட உணராது அமர்ந்திருந்த தாயின் கண்ணீரை துடைத்து, “இப்ப சொல்லுங்கம்மா? அக்கா மேல என்ன தப்பிருக்கு. அதுவு...”
அவனைத் தடுத்து, “நான் என் பொண்ணைப் பார்க்கணும் கூட்டிட்டுப் போறியா?” என்றார்.
“தேங்க்ஸ்மா. நீங்க இந்த முடிவுதான் எடுப்பீங்கன்னு தெரியும். ஆனா, அக்கா என்ன முடிவெடுப்பாங்க தெரியாதே. அப்பான்னு ஒருத்தர் இல்லவே இல்லைன்னு சொல்றவங்க, அம்மாவா நீங்க போயி நின்னா ஏத்துப்பாங்களா தெரியலையே!”
“அதை நான் பார்த்துக்கறேன். வா போகலாம்.”
“இப்பவேவா. பேங்க் க்ளோஸ் பண்ணியிருப்பாங்கமா?”
“ஏன்? அவளுக்குன்னு வீடு இருக்குல்ல...” கிரி ‘ம்’ என்றதும், “அப்ப வா போகலாம்.”
“ஒரு நிமிஷம்மா. போன் பண்ணிட்டு வர்றேன்” என்று சரத்திற்கு போன் செய்து விஷயம் சொல்லி, “அக்காவை இப்பவே பார்க்கணும் சொல்றாங்க மாம்ஸ்” என...
“ரொம்ப சந்தோஷம் கிரி. கூட்டிட்டுப் போ” என்றான்.
“நீங்கதான் கொஞ்ச நாளாகட்டும்னு சொன்னீங்க?”
“ஆமா நான்தான் சொன்னேன். அப்ப சந்தர்ப்பம் சரியில்லை. இப்ப தன்னாலயே கிடைச்ச சந்தர்ப்பத்தை ஏன் விடணும். அதுவுமில்லாம இன்னும் காத்திருந்து என்ன செய்யப்போறோம். எப்பன்னாலும் இதை சந்திச்சித்தான ஆகணும். மாற்றம் வரும்னு நம்புவோம். தைரியமா போ நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகும்” என்று போனை வைத்தான்.
தாயிடம் சென்றவன் “வாங்கம்மா போகலாம்” என்றான்.
“போன் யாருக்கு உன் அக்காவுக்கா?”
“இல்லம்மா மாமாவுக்கு. உங்க மருமகனாகப் போகிறவர்மா.” தாயின் அதிர்ந்த முகத்தைக் கண்டு, “போற வழியில எல்லாம் சொல்றேன் கிளம்புங்க” என்றான்.