• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687


18



சிவகாமியிடம் கதிர் ஏதோ சொல்ல, கணவரிடம் அதைச் சொல்லி மேடையை விட்டு இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்த தமிழரசியிடம் சென்று, “வாங்க வாங்க. சீக்கிரம் வந்திருக்கலாமே? பெண்ணைப் பெத்தவங்க நீங்க இவ்வளவு லேட்டா வந்தா எப்படி?” என்ற சிவகாமியின் அதிரடியில் தமிழரசி வாயடைத்துப்போய் நின்றார்.

“இவங்க கதிர் அப்பா” என்று கணவரை அறிமுகப்படுத்தவும், குருமூர்த்தி கைகுவித்து “வணக்கம்மா” என்றார்.

பதிலுக்கு தமிழரசியும் வணக்கம் சொல்லி, “எங்களை... ஐ மீன் எனக்கும் மங்கைக்குமான உறவு தெரியுமா?” என்றார் கேள்வியாய்.

“அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தப்பதான் தெரியும். அதான் சர்ப்ரைஸா அம்மா பிள்ளைங்களை சேர்த்து வைக்கணும்னு இங்க வரவழைச்சது.”

“அப்ப அன்பு?” என்றார் கேள்வியாய்.

“உங்க பையன்றது தெரியும். மத்தது அப்புறமா பேசலாம். இப்ப உள்ள வந்து மணமக்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றார்.

“ஓய் மங்கை! உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தர்றேன் சொன்னேன்ல?”

“ஆமா சொன்னீங்க. என்னன்னுதான் சொல்ல மாட்டேன்னுட்டீங்க.”

“சர்ப்ரைஸ்னு சொல்லிட்டு அப்பவே அதையும் சொல்வாங்களா?”

“சரி இப்ப சொல்லுங்க?”

“அது சஸ்பென்ஸ் ஏர்போர்ட்” என்று மேடையை விட்டு கீழே அழைத்து வந்து அவளின் கண்மூடினான்.

“சர்ப்ரைஸ் பெரிய லெவல்ல இருக்கும் போல?” என்று புன்னகையுடன் சொல்ல...

“நீ மயங்கி மட்டும் விழாம இருந்தா போதும். அப்படியே விழுறதாயிருந்தாலும் என் மேல் விழு ஏர்போர்ட். எதையும் தாங்கும் இதயம். சோ, உன்னையும் தாங்கிக்கறேன்.”

“உங்களை...” என முட்டியால் அவன் வயிற்றில் இடிக்க...

“ஏய் ஒய்ஃப்கு ஹெல்ப் பண்ணலாம் நினைச்சா என்னை அடி.. இல்ல இடிக்கிறியா?”

“இடிக்காம கொஞ்சுவாங்களா உங்களை.”

“நீதான் கொஞ்சமாட்டேன்னு கெஞ்ச விடுறியே. கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் பண்ணலாமா? ஆர் யூ ரெடி பேபி” என்றான் காதோரம்.

அதில் நாணப்புன்னகை எழ, வெட்கம் முகத்தில் புதுக்கோலமிட, அதை கேமராக்களும் அள்ளிக்கொண்டன. அதைக் கண்டவன் மனமோ இன்னுமின்னும் கொள்ளை போக, “சர்ப்ரைஸ்” என்றான் கையை விலக்கி.

மெல்ல கண் திறந்தவள் சுற்றிலும் இருளாக இருக்கவும், “உங்களை யார் கண்ணை ரொம்ப நேரம் மூடச்சொன்னது. இப்ப எல்லாமே இருட்டா தெரியுது” என சிணுங்கலாய்ப் பேசி கண்ணை மெல்ல கசக்கினாள்.

“கண்ணை ரொம்ப கசக்காத திரு. மை சுத்திலும் பூசிக்கும். அப்புறம் அழகுப் பொண்ணு அழுக்குப் பொண்ணா தெரிவ” என சிவகாமி கிண்டலடிக்க...

“ஹான் அதுக்கு உங்க பையன்தான் அத்தை காரணம். நான் கிடையாது” என்று மெல்ல கண்களைத் திறக்க, எதிரில் மங்கலாய்த் தெரிந்த உருவங்கள் யாவும் தெளிவாகத் தெரிந்ததும், முகத்திலிருந்த புன்னகை சட்டென்று மறைய “அம்மாஆஆ” என்ற குரல் மட்டும் எதிரொலித்ததோ!

சிவகாமியுடன் வந்த தமிழரசியிடம், “அதோ வர்றா உங்க பொண்ணு மங்கையர்கரசி” என்றதும் ஆர்வமாய் பார்க்க... கண்கள் மூடியபடி கணவன் மனைவி இருவரும் புன்னகை பூத்த முகத்துடன், பேசிக்கொண்டும் புதுப்பெண்ணுக்கான நாணத்துடனும் தன்னருகே, தன் முன்னே வந்து நின்ற மகளை நம்பமாட்டாமல் பார்த்தார் தமிழரசி. இன்னும் இது உண்மையா என்று நம்பத்தான் முடியவில்லை. ‘தன் பெண்! அதுவும் கணவனுடன்!’ கோடி நன்றி சொல்லத் தோன்றியது கடவுளுக்கு.

மகளின் “அம்மா” என்ற அழைப்பில் அவள் தன்னை அடையாளம் கண்டுகொண்டாள் என்பதில் மகிழ்ச்சி இரட்டிப்பாக... “மங்கை” என்று அவர் கைவிரிக்க, ஓடிச்சென்று தாய்ப்பறவையின் சிறகுக்குள் அடைக்கலமாகிக் கொண்டாள் மங்கையவள்.

சில நிமிடம் கழித்து தாயின் முகம் பிடித்து, “அம்மா! அம்மா.. என்னோட அம்மா நீங்க உயிரோட... சத்தியமா நா..நான் உ..உங்களை எதிர்பார்க்கலம்மா.” குரல் அடைக்க சரி செய்து, “நான் உங்களை ரொ..ம்ப மிஸ் பண்ணினேன்மா. பெரிய பொண்ணானப்போ... படிச்சி முடிச்சப்போ... இதோ இப்பக் கூட நம்ம குடும்பத்துல உள்ளவங்க இருந்தா எப்படியிருக்கும்னு ஒரு ஏக்கம் இருந்ததும்மா. எனக்கு சந்தோஷத்துல...” வார்த்தைகள் திக்க கணவனிடம் திரும்பியவள் “உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது தெரியல. இவ்வளவு பெரிய சர்ப்ரைஸ்... கண்டிப்பா நான் எதிர்பார்க்கலங்க. தேங்க்யூ தேங்க்யூ சோ மச்” என்றாள் உணர்ச்சிப்பெருக்குடன்.

“ஹேய்! என்னடா நமக்குள்ள தேங்க்ஸ் சொல்லிட்டிருக்க. நீ ஹேப்பினா நானும் ஹேப்பி” என்றான் புன்னகைத்து.

அப்படியே கணவனைக் கட்டிக்கொள்ளத் தோன்றியது. அதை கண்களில் காண்பித்தாளோ மங்கையவள். அதைப் புரிந்தாற்போல் சிரித்து கண்ணடிக்க... சட்டென்று வந்த வெட்கத்தில் முகம் திருப்பிக்கொண்டாள்.

“மங்கை” என்றவருக்குமே வார்த்தைகள் வெளிவரவில்லை. தன் உணர்வுகளைக் கொட்டிய மகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, “நம்ம மேல கடவுளுக்குக் கருணை இருக்கு போலமா. நாங்க ரெண்டு பேர்தான் மிஞ்சினோம்னு நினைச்சேன். ஆனா என் பொண்ணும் பை...”

“ஹேய் யக்கா! இவங்க உன் அம்மாவா? வாழ்த்துகள்” என இடையிட்டு தன்னை உங்கள் மகனாக அறிமுகப்படுத்த வேண்டாமென்று எச்சரிக்கை செய்த அன்புவை விவரம் தெரிந்தவர்கள் அதிர்ந்து பார்க்க,

தமிழரசியின் கண்களோ கலங்கி, ‘உனக்கு அம்மா இல்லையா?’ என்று மகனைக் காண, அவரை ஏறிட்டு கூட பார்க்கவில்லை அவன்.

“டேய் தம்பிப்பையா! நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன். என் அம்மா கிடைச்சிட்டாங்க” என்றதும், “ஏன்.. என் அம்மா” என்கிறாள் என தமிழரசி புரியாமல் விழித்தார் தமிழரசி.

“அவங்க ரெண்டு பேருக்கும் உள்ள உறவு, நம்ம மங்கைக்கு தெரியாது போலிருக்கு அத்தை” என்றாள் தனக்குத் தெரியும் என்பதை மறைத்து.

“நீ வந்த பிறகுதான்டா எல்லாமே!”

“ஹா..ஹா பத்து நாள் முன்னாடி யாரோ வேற மாதிரி சொன்னாங்க. என் சட்டையெல்லாம் பிடிச்சிக் கேள்வியா கேட்டாங்க. இப்ப என்னவாம் அவங்களுக்கு?” என்றான் கேலியாக.

என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் திரு திருவென விழிக்க...

“மச்சான் திருமொழின்ற பெயருக்குப் பொருத்தமா உங்க பொண்டாட்டி இப்பதான் திரு திருன்னு முழிக்கிறா பாருங்க.”

“டேய் மாப்ள! திருவுக்கு இன்னொரு பெயர் இருக்குடா” என முடிக்காமல் நிறுத்தினான் இளங்கதிர்.

மங்கையவளோ “அச்சோ” என்று அலறியடித்துக் கணவனின் வாய்மூட, அவளின் செய்கையில் மற்றவர்கள் சிரித்தார்கள் என்றால் தாயின் மனமோ இதே சந்தோஷம் என்றும் நிலைக்க வாழ்த்தியதோ!

“அத்தை எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று மனைவியுடன் ஆசி வாங்கி எழ,

“ஹாய் மங்கை! ஹேப்பி மேரீட் லைஃப். இது அம்மா வீட்டு சீதனம்” என்று செயின் ஒன்றைக் கொடுத்து, “அண்ணா இது பையன் வீட்டு நாத்தனார் பரிசு. எங்க அப்படியே உங்க ரெண்டு பேரோட கையில உள்ளதையும் மாத்தி போட்டுக்கோங்க பார்ப்போம்” என்றாள் கயல்விழி.

“நாத்தனாரா!” ஆச்சர்யமாய் திரு கயலைப் பார்க்க...

“என்ன மங்கை அப்படிப் பார்க்கிற? என்னைத் தெரியலையா?”

‘ம்கூம்..’ என தலையசைத்து, “அத்தைக்குச் சொந்தமா?” என்று சிவகாமியைக் காண்பித்தாள்.

“இல்ல இந்த அத்தைக்குச் சொந்தம்” என்று தமிழரசியைக் காண்பித்து, “உனக்கும் இதோ நிற்கிறாங்களே உன் இளா அத்தானுக்கும் சொந்தம்.” இளா அத்தானில் அழுத்தம் கொடுத்தாள் கயல்விழி.

குருமூர்த்திக்கோ இந்தப் பெண் எதாவது உளறிவைக்கப் போகிறாள் என்ற பதற்றம் வந்தது என்றால், கதிருக்கும் அன்று போல் எதுவும் ஏடாகூடமாக பேசிவிடுவாளோ என்று பயம் வந்தது.

“எப்படி?” என்றாள் திரு.

“என்னை இன்னுமா தெரியல மங்கை? நான் கயல்விழி. உன் அத்தை காமாட்சியோட பொண்ணு.”

“ம..தி..னி” என்று நிதானமாகக் கேட்க... அவளின் ‘ம்’ என்ற வார்த்தையில் தாயின்பு றம் திரும்ப, அவரின் சம்மதமான தலையாட்டலில் கயலின் கைபிடித்து, “இன்னைக்கு சர்ப்ரைஸ்னு சொல்லி அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி தர்றீங்க. சந்தோஷத்துல என்ன பேசுறது கூட புரியல. அப்படினா அம்மா கூடதான் இருந்தீங்களா? இப்படியே எல்லாரும் கிடைச்சிட்டா நல்லாயிருக்கும்ல. ஆனா, அது நடக்கவும் செய்யாதுல்ல” என்றாள் அவளே.

“மங்கை இன்னைக்கு உனக்கான நாள். பழையவை எதையும் நினைக்காம ஹேப்பியா இருக்கணும். சரியா?”

“நீங்க சொன்னா சரிதான்ங்க” என்று கண்களை மெல்ல துடைத்து, “மதினி நான் உங்களுக்கு உறவு சரி. இவங்க எப்படி? என்னைக் கல்யாணம் பண்ணின உறவு வச்சிச் சொல்றீங்களா?”

“இல்ல நீ...”

“கதிர் ஆட்கள் வர்றாங்க பாரு. மருமகளைக் கூட்டிட்டு ஸ்டேஜ்கு போ” என குருமூர்த்தி கயலை பேசவிடாது இடையிட்டார்.

அவளோ சின்னச் சிரிப்புடன், “இன்னும் செயின் மாத்திக்கலை” என்று போடச்சொல்ல அவர்கள் அதைச் செய்யும்பொழுது சுற்றிலும் கைதட்டல் சத்தங்களுடன் கேமராவின் பளிச் மின்னல்கள்.

மேடை ஏறிய நிமிடம் நிஷாந்த் சரண்யாவை அருகே அழைத்த கதிர் அங்கிருந்தவர்களிடம், “இவர் நம்ம கம்பெனி ஸ்டாப் எல்லாருக்கும் தெரியும். மேரேஜ்காகதான் லீவ் எடுத்திருந்தார். இப்ப என் மச்சான். இவரோட தங்கையைத்தான் நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்” என அறிவித்தான்.

தெரிந்தவர்கள் அனைவரும் திருமணத்திற்கு வரமுடியாததற்கு வருத்தம் தெரிவித்து வாழ்த்தும் தெரிவிக்க, அதை சிறிதும் எதிர்பார்த்திராத நிஷாந்த் வாயடைத்திருந்தான்.

“சார் இப்படி ஸ்டேஜ்ல வச்சி... நான் எதிர்பார்க்கல. என் கல்யாணம் ரிலேடிவ்ஸ் தவிர எல்லாருக்கும் தெரியும்தான். ஆனா, திருமொழியை என் தங்கைன்னு உங்களோட உறவா... என்ன சொல்றது தெரியல. ரொம்ப சந்தோஷமாயிருக்கு சார். என்னதான் அண்ணன் தங்கையா பழகினாலும், வேற வீட்டுப் பொண்ணுதான தோணும். அப்படியெல்லாம் கிடையாதுடா மடையா அவள் உனக்கும் சொந்தத் தங்கைதான்னு புரிய வச்சிட்டீங்க.”

“நிஷா.. அவளை அடுத்த வீட்டுப் பொண்ணுன்னு நினைச்சிருந்தா, நாத்தனார் முடிச்சி போட அத்தனை பேரையும் காத்திருக்க வச்சிட்டு, இவளைத் தேடியிருக்கமாட்ட. அப்பவே இவள்தான் என் தங்கைன்னு ஊருக்குச் சொல்லிட்ட. அந்த ஊரை உன் உறவுகளைப் பொருத்தவரை இவள் உன் தங்கை. இதையே நான் என் ஒய்ஃப் அண்ணன் இவன்னு சொன்னேன். அப்புறம் இந்த சாரை விடு. உன் தம்பியைப் பார்த்தியா எவ்வளவு அழகா மச்சான் இல்ல அத்தான்னு கூப்பிடுறான்.”

“சார். நீங்க என் எம்.டி.”

“அது ஆபீஸ்ல. இங்க உன் தங்கை புருஷன் மட்டுமே. ஏன்மா இதெல்லாம் உன் புருஷனுக்குச் சொல்லித் தர்றதில்லையா?” என்றான் சரண்யாவிடம்.

“நான் சொல்லாமல் இருப்பேனா. அதெல்லாம் சொல்லிட்டேன் அண்ணா. பயம், பக்தி, பரவசம்னு பூஜை போடுறவங்களை என்ன செய்ய. அதான் அப்படியே விட்டுட்டேன்.”

“ஹா..ஹா பயமா? ஒய் நிஷா?” என்றதும் அவன் முறைக்க, கதிர் இன்னும் சிரிக்க, இளங்கதிரவனின் ஒளிவிடும் சிரிப்பில் மங்கையவளும் மயங்கித்தான் போனாளோ! கணவனையே முழுவதும் ரசித்திருந்தாள்.

சிரித்து முடித்து “நிஷா நிஷா நிஷா ஓ நிஷா” என நிஷாந்தை இளங்கதிர் தொடர்ந்து வம்பிழுத்தான்.

“மச்சானா போயிட்டீங்க. எதாவது சொன்னா என் தங்கை என்னை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிருவா. சோ, இனிமேல் உங்க விருப்பம்போல கூப்பிட்டுக்கோங்க” என்று இறங்கி வந்தான்.

“அண்ணா அப்படிலாம் உங்களை விட்டுக்கொடுத்துர மாட்டேன். நீங்க உங்க மச்சான் கெத்தைக் காட்டுங்க” என்று நிஷந்திடம் சொல்லி கணவனைப் பார்த்து கண்சிமிட்டினாள்.

“அடிப்பாவி!” என்றவன் அவள் கண்சிமிட்டலில் இன்பமாய் அதிர்ந்து அவள்புறம் குனிந்து, “ஆர் யூ ரெடி பேபி” என்றான் மென்மையாக.

சட்டென்று வெட்கம் கொண்ட மங்கையர்கரசியைப் பார்த்த தாய், தம்பிக்கு மனதில் எல்லையில்லா சந்தோஷமென்றால்... கயல்விழி கதிரையேப் பார்த்திருந்தாள். ‘என் அண்ணன்! ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் நீதான் என் அண்ணன் இளநாதன். இதில் எந்த மாற்றமும் கிடையாது. இதை நானா யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்ணா. நீயா உன் தங்கையைத் தேடி வருவ பார். அன்பு மாதிரி நானும் உன்னை விட்டு விலகியே நிற்கிறேன்’ என்றாள் மனதினுள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
மங்கையின் முன் வந்த அன்பு, “அக்கா பிறந்த வீட்டு சீதனம்னு என்னால எதுவும் செய்ய முடியல. கண்டிப்பா நீ ஆசைப்பட்டுக் காத்திருந்த பிறந்த வீட்டு சீர் வரும்” என்றான் அவளின் லட்சியத்தை மனதில் வைத்து.

“நீயே எனக்குப் பெரிய கிஃப்டுடா தம்பிப்பையா. முன்னப்பின்ன தெரியாதவங்ககிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாம அன்பா பழகுறதுல, உன்னை மிஞ்சிக்க யாராலும் முடியாது.”

“அக்கான்னு வந்தா அதெல்லாம் பார்க்கக்கூடாது. இப்போதைக்கு என் சார்பா உன்கிட்ட இல்லாத உனக்கு ரொம்பப் பிடிச்சது. இந்தா பிடி” என்று ஒரு கவரைக் கொடுத்தான்.

அதைப் பிரித்தவளின் கண்கள் அதில் ஆச்சர்யமாய் படிந்து தம்பியானவன் மீது பாய... “எப்படிக்கா?” என்றான் கண்சிமிட்டி.

“உ..உனக்கு எப்படிடா தெரியும்?”

“தம்பி போஸ்டிங் வான்டடா வந்து வாங்கிட்டு, அக்காவுக்குப் பிடிச்சது பிடிக்காதது தெரியாமலிருக்குமா?”

“எங்க வீட்ல உள்ளவங்களைத் தவிர வேற யாருக்கும் தெரியாதுடா.”

“என் கனவுல வந்து சொன்னக்கா.”

“யாரு நான்... அதுவும் உன் கனவுல...”

“யா... யூ!”

“டேய் மாப்ள! இதெல்லாம் அநியாயம். நான் கேட்டப்ப இதைச் சொல்லாம விட்டுட்டியேடா. என் பொண்டாட்டியை சந்தோஷப்படுத்த மௌத்தார்கன் போதும்ன்றதை மறைச்சிட்டியேடா” என்றான் கடுப்புடன்.

“ஹான்! எல்லாத்தையும் உங்களுக்கே விட்டுக்கொடுத்துட்டா ,மாப்பிள்ளைங்கன்னு நாங்க எதுக்கு இருக்கோம். இல்லண்ணா” என்று நிஷாந்திடம் ஹைபை போட...

“அடப்போங்கடா. நான் என் ஒய்ஃப்கிட்ட கூட்டு சேர்ந்துக்கறேன். அப்படித்தான ஏர்போர்ட்” என்று மனைவியைத் துணைக்கழைத்தான்.

“மங்கைக்கு எத்தனை பெயர்தான் இருக்கு? இதென்ன ஏர்போர்ட்?” என கேட்டாள் கயல்விழி.

“அது மதினி, இவங்க ரெண்டு பேரோட முதல் ரணகள மீட்டிங் மதுரை ஏர்போர்ட்லதான் நடந்தது. திரும்ப பார்த்தப்ப பெயர் தெரியாதுல்ல... அது அப்படியே கன்டினியூ பண்ணி செல்லப் பெயராக்கிட்டாங்க.”

“என்னது செல்லப் பெயரா?” என்று வாய் திறக்க,

“எஸ். க்ளோஸ் தி மௌத் மதினி.”

“கொழுப்புடா உனக்கு” என்று செல்லமாய் முதுகில் தட்டினாள்.

“கதிர் ஆட்கள் வர்றாங்க பாரு. உங்க அரட்டையை பங்ஷன் முடிஞ்சதும் வச்சிக்கோங்க.” குருமூர்த்தியின் குரலில் அனைவரும் அடங்கினார்கள்.

இரவு வீடு வர தயங்கிய தாயை உள்ளே அழைத்து வந்து ஹாலிலிருந்த ஷோபாவில் உட்காரவைத்து, தோளில் தலைசாய்த்து கையைப்பிடித்துக் கொண்டாள் மங்கையர்கரசி.

“டேய் மகனே! இன்னைக்குத்தான்டா வீடு நிறைஞ்சிருக்கு.”

“தாயே! ஒரு வழியா எல்லா ரூமையும் இன்னைக்கு ஃபில் பண்ணிரப்போறோம்” என்றதும் மற்றவர்கள் விழிக்க... “தாத்தா, பாட்டி போன பிறகு மூணு மாடிக் கட்டிடத்துல மூணே பேர் இருக்கோம். வேலைக்கு வர்றவங்களுக்கு குறிப்பிட்ட டைம்தான். ரொம்பநாள் வருத்தம் ஆளேயில்லாமல் இருக்குதேன்னு. நிஷாவைக் கூட இங்கேயே வந்து தங்கிரச் சொன்னேன். அவன்தான் லாஜிக்லாம் பேசி தனி வீடு பார்த்துட்டான்.”

“சரண் ஆபீஸ்கு பக்கத்துல இருக்கு மச்சான். அதுவுமில்லாம பெண் கொடுத்த வீட்டுல தங்குறது தப்பு.”

தமிழரசிக்கும், திருவிற்கும் அவனின் உறவுப்பாசம் ஒரு பொக்கிஷமாய் தோன்றியது. சொந்த உறவுகளால் வலிகளை மட்டுமே சுமந்தவர்களுக்கு பழகிய இவ்வுறவுகள் வலிக்கு மருந்தானார்கள்.

“அதான் தனியா வீடு பார்த்து பால்காய்ச்சிட்டியே. அப்புறம் என்ன? பொண்ணு கொடுத்த வீடு எடுத்த வீடுன்ற.”

“ஏன் என் அண்ணனை விரட்டிட்டிருக்கீங்க? அவங்க ஒண்ணும் குழந்தை கிடையாது. வீட்ல வச்சி முதலாளி தோரணையில மிரட்டக்கூடாது சொல்லிட்டேன்.”

“அடிப்பாவி! உன் அண்ணனை மிரட்டக்கூடாதுன்னு என் அண்ணனை மிரட்டறியா? உனக்கு நாத்தனாரா நான் இருக்கேன் ஞாபகமிருக்கட்டும்.” கயல் ஒரு எச்சரிக்கை அனுப்ப...

கதிரோ தனக்கு வந்த ஆதரவை மனைவியிடம் காண்பித்து காலர் தூக்கிவிட்டான். அவனவளோ உதடு சுழிக்க, சுற்றிலும் பார்த்தவன் உதடு குவித்து ஒரு முத்தத்தூது அனுப்பினான்.

கணவனின் திடீர் செயலில் கண்மூடித்திறந்து அதை தனக்குள் செலுத்தினாளோ! அத்துடன் தலைகவிழ நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்.

நிஷாந்த் கதிரிடம் பால்காய்ச்சிய அன்றே வீட்டில் ஆள் இல்லாமல் போகக்கூடாது என்பதால், அப்பா அம்மா இங்கேயே இருக்கட்டும் என்று மனைவியுடன் கிளம்பினான்.

மகனையே பார்த்திருந்த தமிழரசியின் பக்கம் மறந்தும் திரும்பவில்லை அன்பழகன். தாய் தன்னையே பார்த்திருப்பது புரிந்துதானிருந்தது. இருந்தும் மனம் ஆறவில்லை அவனுக்கு. அன்று நடந்தது அனைத்தும் அவன் நினைவுகளில் வர தன்னாலேயே ஒரு இறுக்கம் அவனுள்.

தன்னுயிர் தந்து பிள்ளைகள் உயிர் காப்பவள்தான் தாய். அந்நேரம் தன்னை சாவின் விளிம்பில் விட்டுவிட்டு, தான் கதறிய கதறல்கள் யாவும் காதில் வாங்காமல் திரும்பியும் பாராது சென்ற தாயை மன்னிக்க முடியவில்லை அவனால்.

மாடியில் தனியே நின்றிருந்தவனிடம் வந்த கதிர் “உனக்கும் சேர்த்து சர்ப்ரைஸ் கொடுக்கத்தான்டா இந்த ஏற்பாடெல்லாம். அப்படியே உன்னைப்பற்றி மங்கைகிட்டயும் சொல்லிரலாம்னு இருந்தேன். ஆனா, நீ என்னடா பண்ணிட்டிருக்க?” என்று மூத்தவனாய் அதட்டினான்.

“இது எனக்கு சர்ப்ரைஸ் இல்ல மச்சான் ஷாக்தான்.”

“என்ன அன்பு இப்படிச் சொல்ற? ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியிருக்கு? அப்படியென்ன கோவம் அவங்க மேல?”

“கோவமா! அதுவும் அவங்ககிட்டயா? ஹ்ம் அன்பு இருந்தால்தான் மச்சான் கோவம் வரும். எனக்கு அவங்கமேல இருக்கிறது வெறுப்பு மட்டும்தான்.”

“ஏன்டா?”

“ஏன்னா... என்ன சொல்லச் சொல்றீங்க மச்சான்? இப்ப உங்களுக்கு ஒரு ஆபத்துன்னா சிவகாமி அத்தை என்ன பண்ணுவாங்க? காப்பாத்துவாங்களா இல்ல சாகட்டும்னு விட்டுட்டுப் போவாங்களா?”

“அதெப்படி சாகட்டும்னு போவாங்க. எப்பாடுபட்டாவது தன்னைக் கொடுத்து என்... அன்பு.! அப்படினா?”

“ஆமா மச்சான். தன்னைக் காப்பாத்திக்க சாவின் விளிம்புல இருந்த என்னை அப்படியே விட்டுட்டுப் போயிட்டாங்க.”

“அப்படி இருக்காதுடா. அவங்களை அப்படி யோசிக்கக் கூட முடியல. அப்படியே நடந்தாலும் எதாவது காரணம் இருக்கும்.”

“காரணம் என்னவாயிருந்தா என்ன மச்சான். என் அழுகை கூட அவங்களைப் பாதிக்கலையே. அனாதை மாதிரி விட்டுட்டுப் போயிட்டாங்க. அவனுங்களோட கடைசி நேர மனமாற்றம் இல்லாம போயிருந்தா அப்பவே நானும்...”

சிறுவனாய் மாறி அழுதவனைத் தட்டிக்கொடுத்து “என்ன நடந்தது? ஏன் விட்டுட்டுப் போனாங்கன்னு நேர்ல கேள் அன்பு. பேசித் தீர்க்க முடியாத பிரச்சனைன்னு எதுவுமில்ல.”

“எனக்கு யார்கிட்டேயும் பேசணும்னு அவசியமில்ல மச்சான். என்னைக்கு வேண்டாம்னு விட்டுட்டப் போனாங்களோ, அப்பவே அவங்க மேலிருந்த அன்பு விட்டுப்போச்சி. என்ன என் வாழ்நாள்ல பார்க்கக்கூடாது நினைச்சேன்... ப்ச்...”

“எனக்கென்னவோ வேற எதாவது காரணம் இருக்கும்னு தோணுதுடா.”

“இருக்கட்டும் மச்சான் எனக்கு வேண்டாம்.”

இப்பொழுது இன்னும் பேசுவது வேறு பிரச்சனையைக் கொண்டு வரக்கூடாதென்று, “போய்ப் படு அன்பு” என்றான்.

தனி அறையிலிருந்த தமிழரசியிடம், “அன்பு பற்றி யோசிக்கிறீங்களா அத்தை? அவன் எதோ புரியாம பண்றான்” என்றாள் கயல்விழி.

“இல்லமா புரிஞ்சி தெரிஞ்சிதான் பண்றான். என்னைப் பார்த்ததும் அடையாளம் தெரிஞ்சிருச்சி. அப்புறமும் ஏன்? நிஜமாவே புரியல கயல். என்னை வெறுக்கக் காரணம் என்ன? எப்படி கடைசி நேரத்துல விட்டாங்கன்னு ஒண்ணும் புரியல.”

“பேசிக்கலாம் அத்தை” என்றாள் ஆதரவாக.

“முகத்தையே பார்க்காதவன் என்கிட்ட பேசுவான்னு தோணலமா. ஆனா, ஒண்ணு புரியல... தம்பின்றதை மங்கைகிட்ட ஏன் மறைக்கிறான்? என்னை மாதிரி அவளை ஒதுக்கியும் வைக்கல. ரொம்ப பாசமாயிருக்கான். ஏன் யாரோ ஒருவனா அக்காவோட கல்யாணத்தை நடத்தணும்?”

“எதாவது காரணம் இருக்கும் அத்தை.”

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயங்கள். சரி தூங்கு” என்று அவளருகில் படுத்துக்கொள்ள... ஏனோ கயல்விழிக்கு தூக்கம் வர மறுத்தது. அருகில் தமிழரசியும் தூக்கம் தொலைத்திருக்க... “அத்தை பால்கனியில கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வர்றேன்” என்றாள்.

“நானும் வரவாமா?”

“வேண்டாம் அத்தை படுங்க. நேத்திலிருந்து ஒரே அலைச்சல் சந்தோஷம் சங்கடம்னு நிறைய. உங்க பொண்ணை நினைச்சிட்டேயிருங்க தூக்கம் தன்னால வந்திரும்.”

“ஏன்மா உன்னை நினைக்கக்கூடாதா?”

“ஒய் நாட்? தாராளமா நினைங்க. இப்ப குட் நைட்” என சிரித்தபடி வெளியேறியவளைக் கனிவாய் பார்த்திருந்தார் தமிழரசி.

“ஹேய் ஏர்போர்ட் வெல்கம் டூ அவர் ரூம்.” சிரம் தாழ்ந்து வரவேற்க, தலையில் கொட்டு வைக்கத்தான் தோன்றியது திருவிற்கு. “ஹேய்! பால் கொடுத்துவிடலையா? உள்ள வந்ததும் என் கால்ல விழல?” என வம்பிழுக்க,

“அட ஆசைதான் போங்க. நான் கால்ல விழுந்தா நீங்க கீழ விழணும் பரவாயில்லையா?”

“நான் ஏன் விழ...” அர்த்தம் புரிந்ததும் “இதெல்லாம் செய்வியா நீ?” என்றான் ஆச்சர்யமாய்!

“சாம்பிள் காட்டவா” என்று குனியப்போக... அவனின் அலறிலில் “அந்த பயம் இருக்கட்டும்” என்றாள்.

“அப்ப எதுவும் இல்லையா?” என்றான் அப்பாவியாக.

“அததுக்குன்னு நேரம் வந்தா எல்லாம் தன்னாலே நடக்கும்.”

“அந்த நேரம் எப்ப வரும்?”

“தெரியல” என்பதாய் தோள் குலுக்கி “ஆமா உங்க ரூம் ஏன் கீழயிருக்கு? பொதுவா வயசுப்பசங்க மாடியைத்தான சூஸ் பண்ணுவாங்க?”

“எனக்கு மாடின்னா அலர்ஜி மொழி.”

“ஏன்?”

“ஏன்னா.. சின்ன வயசுல உயரமான இடத்திலிருந்து கீழ விழுந்துட்டேனாம். ரொம்ப மாசமா பெட் ரெஸ்ட்தான். அதிலிருந்து எனக்கு உயரம்னா அலர்ஜி. அதான் ரூம் கூட கீழயிருக்கு. சரி அதென்ன கையில?”

தன் கையிலுள்ள மௌத்தார்கனைக் காண்பிக்கவும், “வாசியேன்” என்றான் ஆர்வமாய்.

“இப்பவா?”

“வேற எப்ப. இதுதான் நேரம் வா வந்து வாசி” என்று தன்னருகே உட்காரவைக்க...

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

அவன் ஆலயத்தில் அன்புமலர் பூஜை வைத்தேன்

அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்

அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்.

வாசிப்பு விட்டுப்போனதால் வந்த தடுமாற்றமும் விரைவிலேயே சரியாக அதை ரசித்துக் கேட்டிருந்தான் கதிர்.

“நீ என்ன சாங் பாடின ஏர்போர்ட்? பழைய சாங்னு தெரியுது.”

“ம்... சாமிப்பாட்டு” என்று தலைகவிழ...

‘சாமிப்பாட்டுன்றா. இப்படி வெட்கப்படுறா? சாமிப்பாடல்கள்ல லவ் சாங் உண்டே’ என்றவன் மனதினுள் பல்ப் எறிய “ஆர் யூ ரெடி பேபி” என சீண்டலாக ஆரம்பித்து ஹஸ்கியாக முடித்தான்.

அவ்வார்த்தையில் படக்கென்று தலைநிமிர்ந்து கணவனைக் காண, மின்னலென பாய்ந்த கண்களின் ஈர்ப்பில் இளங்கதிரவன் அவனோ அழகாக கவரப்பட... “ஆர் யூ ரெடி பேபி” என்றான் அதே கிறங்கல் குரலில்.

விழி பேசும் மொழி அறியா மௌனம்! இதுவரை கேலியாக சொன்ன வார்த்தை கிடையாது இது என்பதை உணர அவனிடம் மயங்கும் தன் மனதை அடித்து உதைத்து, “தேங்க்ஸ்” என்றாளவள்!

“தேங்க்ஸா எதுக்கு?” வார்த்தைகள் அதே கிசுகிசுப்பில்.

“என்னோட அம்மாவை எனக்குத் திரும்பக் கொடுத்து இன்றைய நாளை மறக்க முடியாமல் செய்ததுக்கு.”

“அது என்னோட கடமை ஏர்போர்ட். அப்படிப் பார்த்தாலும் நானா போய் தேடி அலைந்து கண்டுபிடிக்கலையே. தானாக கண்ணில் பட்டவங்கதான.”

“என்னை மாதிரியா?”

“உன்னை மாதிரியில்ல. நீ வேற லெவல்” முகத்தில் ஒருவித ரசனை வந்து ஒட்டிக்கொள்ள “கனவுலயே வந்து கல்யாணம் பண்ணிக்கச் சொல்ல வச்சவ. அதையே நேர்லயும், உன் கனவுலயும் நான் என்ட்ரி போட்டுருக்கேன்னு ஏர்போர்ட்ல உன்னைப் பார்த்தப்ப புரிஞ்சது.”

“அ..அப்படிலாம் இல்ல.”

சத்தமாகச் சிரித்து “நானும் நம்பிட்டேன். குட் நைட்” என்று அவளின் கையைப் பிடித்தபடியே படுத்தவனுக்குள் மங்கையவளை தன்னை விட்டு எங்கேயும் போகவிடக்கூடாதென்ற எண்ணம். கைகளின் இணைப்போ பலதும் சொல்ல அப்படியே கண்மூடினான்.

விதியோ என்னை எப்படி மறக்கலாம் என்று பல்லைக்காட்டியது!
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top