- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
18
சிவகாமியிடம் கதிர் ஏதோ சொல்ல, கணவரிடம் அதைச் சொல்லி மேடையை விட்டு இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்த தமிழரசியிடம் சென்று, “வாங்க வாங்க. சீக்கிரம் வந்திருக்கலாமே? பெண்ணைப் பெத்தவங்க நீங்க இவ்வளவு லேட்டா வந்தா எப்படி?” என்ற சிவகாமியின் அதிரடியில் தமிழரசி வாயடைத்துப்போய் நின்றார்.
“இவங்க கதிர் அப்பா” என்று கணவரை அறிமுகப்படுத்தவும், குருமூர்த்தி கைகுவித்து “வணக்கம்மா” என்றார்.
பதிலுக்கு தமிழரசியும் வணக்கம் சொல்லி, “எங்களை... ஐ மீன் எனக்கும் மங்கைக்குமான உறவு தெரியுமா?” என்றார் கேள்வியாய்.
“அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தப்பதான் தெரியும். அதான் சர்ப்ரைஸா அம்மா பிள்ளைங்களை சேர்த்து வைக்கணும்னு இங்க வரவழைச்சது.”
“அப்ப அன்பு?” என்றார் கேள்வியாய்.
“உங்க பையன்றது தெரியும். மத்தது அப்புறமா பேசலாம். இப்ப உள்ள வந்து மணமக்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றார்.
“ஓய் மங்கை! உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தர்றேன் சொன்னேன்ல?”
“ஆமா சொன்னீங்க. என்னன்னுதான் சொல்ல மாட்டேன்னுட்டீங்க.”
“சர்ப்ரைஸ்னு சொல்லிட்டு அப்பவே அதையும் சொல்வாங்களா?”
“சரி இப்ப சொல்லுங்க?”
“அது சஸ்பென்ஸ் ஏர்போர்ட்” என்று மேடையை விட்டு கீழே அழைத்து வந்து அவளின் கண்மூடினான்.
“சர்ப்ரைஸ் பெரிய லெவல்ல இருக்கும் போல?” என்று புன்னகையுடன் சொல்ல...
“நீ மயங்கி மட்டும் விழாம இருந்தா போதும். அப்படியே விழுறதாயிருந்தாலும் என் மேல் விழு ஏர்போர்ட். எதையும் தாங்கும் இதயம். சோ, உன்னையும் தாங்கிக்கறேன்.”
“உங்களை...” என முட்டியால் அவன் வயிற்றில் இடிக்க...
“ஏய் ஒய்ஃப்கு ஹெல்ப் பண்ணலாம் நினைச்சா என்னை அடி.. இல்ல இடிக்கிறியா?”
“இடிக்காம கொஞ்சுவாங்களா உங்களை.”
“நீதான் கொஞ்சமாட்டேன்னு கெஞ்ச விடுறியே. கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் பண்ணலாமா? ஆர் யூ ரெடி பேபி” என்றான் காதோரம்.
அதில் நாணப்புன்னகை எழ, வெட்கம் முகத்தில் புதுக்கோலமிட, அதை கேமராக்களும் அள்ளிக்கொண்டன. அதைக் கண்டவன் மனமோ இன்னுமின்னும் கொள்ளை போக, “சர்ப்ரைஸ்” என்றான் கையை விலக்கி.
மெல்ல கண் திறந்தவள் சுற்றிலும் இருளாக இருக்கவும், “உங்களை யார் கண்ணை ரொம்ப நேரம் மூடச்சொன்னது. இப்ப எல்லாமே இருட்டா தெரியுது” என சிணுங்கலாய்ப் பேசி கண்ணை மெல்ல கசக்கினாள்.
“கண்ணை ரொம்ப கசக்காத திரு. மை சுத்திலும் பூசிக்கும். அப்புறம் அழகுப் பொண்ணு அழுக்குப் பொண்ணா தெரிவ” என சிவகாமி கிண்டலடிக்க...
“ஹான் அதுக்கு உங்க பையன்தான் அத்தை காரணம். நான் கிடையாது” என்று மெல்ல கண்களைத் திறக்க, எதிரில் மங்கலாய்த் தெரிந்த உருவங்கள் யாவும் தெளிவாகத் தெரிந்ததும், முகத்திலிருந்த புன்னகை சட்டென்று மறைய “அம்மாஆஆ” என்ற குரல் மட்டும் எதிரொலித்ததோ!
சிவகாமியுடன் வந்த தமிழரசியிடம், “அதோ வர்றா உங்க பொண்ணு மங்கையர்கரசி” என்றதும் ஆர்வமாய் பார்க்க... கண்கள் மூடியபடி கணவன் மனைவி இருவரும் புன்னகை பூத்த முகத்துடன், பேசிக்கொண்டும் புதுப்பெண்ணுக்கான நாணத்துடனும் தன்னருகே, தன் முன்னே வந்து நின்ற மகளை நம்பமாட்டாமல் பார்த்தார் தமிழரசி. இன்னும் இது உண்மையா என்று நம்பத்தான் முடியவில்லை. ‘தன் பெண்! அதுவும் கணவனுடன்!’ கோடி நன்றி சொல்லத் தோன்றியது கடவுளுக்கு.
மகளின் “அம்மா” என்ற அழைப்பில் அவள் தன்னை அடையாளம் கண்டுகொண்டாள் என்பதில் மகிழ்ச்சி இரட்டிப்பாக... “மங்கை” என்று அவர் கைவிரிக்க, ஓடிச்சென்று தாய்ப்பறவையின் சிறகுக்குள் அடைக்கலமாகிக் கொண்டாள் மங்கையவள்.
சில நிமிடம் கழித்து தாயின் முகம் பிடித்து, “அம்மா! அம்மா.. என்னோட அம்மா நீங்க உயிரோட... சத்தியமா நா..நான் உ..உங்களை எதிர்பார்க்கலம்மா.” குரல் அடைக்க சரி செய்து, “நான் உங்களை ரொ..ம்ப மிஸ் பண்ணினேன்மா. பெரிய பொண்ணானப்போ... படிச்சி முடிச்சப்போ... இதோ இப்பக் கூட நம்ம குடும்பத்துல உள்ளவங்க இருந்தா எப்படியிருக்கும்னு ஒரு ஏக்கம் இருந்ததும்மா. எனக்கு சந்தோஷத்துல...” வார்த்தைகள் திக்க கணவனிடம் திரும்பியவள் “உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது தெரியல. இவ்வளவு பெரிய சர்ப்ரைஸ்... கண்டிப்பா நான் எதிர்பார்க்கலங்க. தேங்க்யூ தேங்க்யூ சோ மச்” என்றாள் உணர்ச்சிப்பெருக்குடன்.
“ஹேய்! என்னடா நமக்குள்ள தேங்க்ஸ் சொல்லிட்டிருக்க. நீ ஹேப்பினா நானும் ஹேப்பி” என்றான் புன்னகைத்து.
அப்படியே கணவனைக் கட்டிக்கொள்ளத் தோன்றியது. அதை கண்களில் காண்பித்தாளோ மங்கையவள். அதைப் புரிந்தாற்போல் சிரித்து கண்ணடிக்க... சட்டென்று வந்த வெட்கத்தில் முகம் திருப்பிக்கொண்டாள்.
“மங்கை” என்றவருக்குமே வார்த்தைகள் வெளிவரவில்லை. தன் உணர்வுகளைக் கொட்டிய மகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, “நம்ம மேல கடவுளுக்குக் கருணை இருக்கு போலமா. நாங்க ரெண்டு பேர்தான் மிஞ்சினோம்னு நினைச்சேன். ஆனா என் பொண்ணும் பை...”
“ஹேய் யக்கா! இவங்க உன் அம்மாவா? வாழ்த்துகள்” என இடையிட்டு தன்னை உங்கள் மகனாக அறிமுகப்படுத்த வேண்டாமென்று எச்சரிக்கை செய்த அன்புவை விவரம் தெரிந்தவர்கள் அதிர்ந்து பார்க்க,
தமிழரசியின் கண்களோ கலங்கி, ‘உனக்கு அம்மா இல்லையா?’ என்று மகனைக் காண, அவரை ஏறிட்டு கூட பார்க்கவில்லை அவன்.
“டேய் தம்பிப்பையா! நான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன். என் அம்மா கிடைச்சிட்டாங்க” என்றதும், “ஏன்.. என் அம்மா” என்கிறாள் என தமிழரசி புரியாமல் விழித்தார் தமிழரசி.
“அவங்க ரெண்டு பேருக்கும் உள்ள உறவு, நம்ம மங்கைக்கு தெரியாது போலிருக்கு அத்தை” என்றாள் தனக்குத் தெரியும் என்பதை மறைத்து.
“நீ வந்த பிறகுதான்டா எல்லாமே!”
“ஹா..ஹா பத்து நாள் முன்னாடி யாரோ வேற மாதிரி சொன்னாங்க. என் சட்டையெல்லாம் பிடிச்சிக் கேள்வியா கேட்டாங்க. இப்ப என்னவாம் அவங்களுக்கு?” என்றான் கேலியாக.
என்ன சொல்வதென்று தெரியாமல் அவள் திரு திருவென விழிக்க...
“மச்சான் திருமொழின்ற பெயருக்குப் பொருத்தமா உங்க பொண்டாட்டி இப்பதான் திரு திருன்னு முழிக்கிறா பாருங்க.”
“டேய் மாப்ள! திருவுக்கு இன்னொரு பெயர் இருக்குடா” என முடிக்காமல் நிறுத்தினான் இளங்கதிர்.
மங்கையவளோ “அச்சோ” என்று அலறியடித்துக் கணவனின் வாய்மூட, அவளின் செய்கையில் மற்றவர்கள் சிரித்தார்கள் என்றால் தாயின் மனமோ இதே சந்தோஷம் என்றும் நிலைக்க வாழ்த்தியதோ!
“அத்தை எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று மனைவியுடன் ஆசி வாங்கி எழ,
“ஹாய் மங்கை! ஹேப்பி மேரீட் லைஃப். இது அம்மா வீட்டு சீதனம்” என்று செயின் ஒன்றைக் கொடுத்து, “அண்ணா இது பையன் வீட்டு நாத்தனார் பரிசு. எங்க அப்படியே உங்க ரெண்டு பேரோட கையில உள்ளதையும் மாத்தி போட்டுக்கோங்க பார்ப்போம்” என்றாள் கயல்விழி.
“நாத்தனாரா!” ஆச்சர்யமாய் திரு கயலைப் பார்க்க...
“என்ன மங்கை அப்படிப் பார்க்கிற? என்னைத் தெரியலையா?”
‘ம்கூம்..’ என தலையசைத்து, “அத்தைக்குச் சொந்தமா?” என்று சிவகாமியைக் காண்பித்தாள்.
“இல்ல இந்த அத்தைக்குச் சொந்தம்” என்று தமிழரசியைக் காண்பித்து, “உனக்கும் இதோ நிற்கிறாங்களே உன் இளா அத்தானுக்கும் சொந்தம்.” இளா அத்தானில் அழுத்தம் கொடுத்தாள் கயல்விழி.
குருமூர்த்திக்கோ இந்தப் பெண் எதாவது உளறிவைக்கப் போகிறாள் என்ற பதற்றம் வந்தது என்றால், கதிருக்கும் அன்று போல் எதுவும் ஏடாகூடமாக பேசிவிடுவாளோ என்று பயம் வந்தது.
“எப்படி?” என்றாள் திரு.
“என்னை இன்னுமா தெரியல மங்கை? நான் கயல்விழி. உன் அத்தை காமாட்சியோட பொண்ணு.”
“ம..தி..னி” என்று நிதானமாகக் கேட்க... அவளின் ‘ம்’ என்ற வார்த்தையில் தாயின்பு றம் திரும்ப, அவரின் சம்மதமான தலையாட்டலில் கயலின் கைபிடித்து, “இன்னைக்கு சர்ப்ரைஸ்னு சொல்லி அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி தர்றீங்க. சந்தோஷத்துல என்ன பேசுறது கூட புரியல. அப்படினா அம்மா கூடதான் இருந்தீங்களா? இப்படியே எல்லாரும் கிடைச்சிட்டா நல்லாயிருக்கும்ல. ஆனா, அது நடக்கவும் செய்யாதுல்ல” என்றாள் அவளே.
“மங்கை இன்னைக்கு உனக்கான நாள். பழையவை எதையும் நினைக்காம ஹேப்பியா இருக்கணும். சரியா?”
“நீங்க சொன்னா சரிதான்ங்க” என்று கண்களை மெல்ல துடைத்து, “மதினி நான் உங்களுக்கு உறவு சரி. இவங்க எப்படி? என்னைக் கல்யாணம் பண்ணின உறவு வச்சிச் சொல்றீங்களா?”
“இல்ல நீ...”
“கதிர் ஆட்கள் வர்றாங்க பாரு. மருமகளைக் கூட்டிட்டு ஸ்டேஜ்கு போ” என குருமூர்த்தி கயலை பேசவிடாது இடையிட்டார்.
அவளோ சின்னச் சிரிப்புடன், “இன்னும் செயின் மாத்திக்கலை” என்று போடச்சொல்ல அவர்கள் அதைச் செய்யும்பொழுது சுற்றிலும் கைதட்டல் சத்தங்களுடன் கேமராவின் பளிச் மின்னல்கள்.
மேடை ஏறிய நிமிடம் நிஷாந்த் சரண்யாவை அருகே அழைத்த கதிர் அங்கிருந்தவர்களிடம், “இவர் நம்ம கம்பெனி ஸ்டாப் எல்லாருக்கும் தெரியும். மேரேஜ்காகதான் லீவ் எடுத்திருந்தார். இப்ப என் மச்சான். இவரோட தங்கையைத்தான் நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்” என அறிவித்தான்.
தெரிந்தவர்கள் அனைவரும் திருமணத்திற்கு வரமுடியாததற்கு வருத்தம் தெரிவித்து வாழ்த்தும் தெரிவிக்க, அதை சிறிதும் எதிர்பார்த்திராத நிஷாந்த் வாயடைத்திருந்தான்.
“சார் இப்படி ஸ்டேஜ்ல வச்சி... நான் எதிர்பார்க்கல. என் கல்யாணம் ரிலேடிவ்ஸ் தவிர எல்லாருக்கும் தெரியும்தான். ஆனா, திருமொழியை என் தங்கைன்னு உங்களோட உறவா... என்ன சொல்றது தெரியல. ரொம்ப சந்தோஷமாயிருக்கு சார். என்னதான் அண்ணன் தங்கையா பழகினாலும், வேற வீட்டுப் பொண்ணுதான தோணும். அப்படியெல்லாம் கிடையாதுடா மடையா அவள் உனக்கும் சொந்தத் தங்கைதான்னு புரிய வச்சிட்டீங்க.”
“நிஷா.. அவளை அடுத்த வீட்டுப் பொண்ணுன்னு நினைச்சிருந்தா, நாத்தனார் முடிச்சி போட அத்தனை பேரையும் காத்திருக்க வச்சிட்டு, இவளைத் தேடியிருக்கமாட்ட. அப்பவே இவள்தான் என் தங்கைன்னு ஊருக்குச் சொல்லிட்ட. அந்த ஊரை உன் உறவுகளைப் பொருத்தவரை இவள் உன் தங்கை. இதையே நான் என் ஒய்ஃப் அண்ணன் இவன்னு சொன்னேன். அப்புறம் இந்த சாரை விடு. உன் தம்பியைப் பார்த்தியா எவ்வளவு அழகா மச்சான் இல்ல அத்தான்னு கூப்பிடுறான்.”
“சார். நீங்க என் எம்.டி.”
“அது ஆபீஸ்ல. இங்க உன் தங்கை புருஷன் மட்டுமே. ஏன்மா இதெல்லாம் உன் புருஷனுக்குச் சொல்லித் தர்றதில்லையா?” என்றான் சரண்யாவிடம்.
“நான் சொல்லாமல் இருப்பேனா. அதெல்லாம் சொல்லிட்டேன் அண்ணா. பயம், பக்தி, பரவசம்னு பூஜை போடுறவங்களை என்ன செய்ய. அதான் அப்படியே விட்டுட்டேன்.”
“ஹா..ஹா பயமா? ஒய் நிஷா?” என்றதும் அவன் முறைக்க, கதிர் இன்னும் சிரிக்க, இளங்கதிரவனின் ஒளிவிடும் சிரிப்பில் மங்கையவளும் மயங்கித்தான் போனாளோ! கணவனையே முழுவதும் ரசித்திருந்தாள்.
சிரித்து முடித்து “நிஷா நிஷா நிஷா ஓ நிஷா” என நிஷாந்தை இளங்கதிர் தொடர்ந்து வம்பிழுத்தான்.
“மச்சானா போயிட்டீங்க. எதாவது சொன்னா என் தங்கை என்னை லெப்ட் அன்ட் ரைட் வாங்கிருவா. சோ, இனிமேல் உங்க விருப்பம்போல கூப்பிட்டுக்கோங்க” என்று இறங்கி வந்தான்.
“அண்ணா அப்படிலாம் உங்களை விட்டுக்கொடுத்துர மாட்டேன். நீங்க உங்க மச்சான் கெத்தைக் காட்டுங்க” என்று நிஷந்திடம் சொல்லி கணவனைப் பார்த்து கண்சிமிட்டினாள்.
“அடிப்பாவி!” என்றவன் அவள் கண்சிமிட்டலில் இன்பமாய் அதிர்ந்து அவள்புறம் குனிந்து, “ஆர் யூ ரெடி பேபி” என்றான் மென்மையாக.
சட்டென்று வெட்கம் கொண்ட மங்கையர்கரசியைப் பார்த்த தாய், தம்பிக்கு மனதில் எல்லையில்லா சந்தோஷமென்றால்... கயல்விழி கதிரையேப் பார்த்திருந்தாள். ‘என் அண்ணன்! ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் நீதான் என் அண்ணன் இளநாதன். இதில் எந்த மாற்றமும் கிடையாது. இதை நானா யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்ணா. நீயா உன் தங்கையைத் தேடி வருவ பார். அன்பு மாதிரி நானும் உன்னை விட்டு விலகியே நிற்கிறேன்’ என்றாள் மனதினுள்.