• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
18



காலை திருமண சுறுசுறுப்பிலும், வேகத்திலும் அனைவரும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்க, வித்யாவைக் கேலி செய்யவென்று அவளின் தோழிகளும், சில உறவுப் பெண்களுடன் கீர்த்தியும் மணமகள் அறையைக் கலகலக்க வைத்திருக்க, கார்த்திகாவோ சிறு டென்சனிலேயே இருந்தாள்.

“என்ன அண்ணி முகமே சரியில்ல? எதாவது ப்ராப்ளமா?”

“நத்திங்மா” என்றாள் தன் உணர்வுகளை மறைத்து.

“இல்ல உங்ககிட்ட ஏதோ மிஸ்ஸிங்.”

“அச்சோ அப்படியில்ல வித்தி. சென்னையிலிருந்து ஃப்ரண்ட் வந்துட்டிருக்கேன் சொன்னா. கிளம்பின நேரத்துக்கு இங்க வந்திருக்கணும். அதான் சின்ன பயம்.”

“அக்கா ட்ராபிக் அதிகமாயிருக்கலாம். இல்ல வண்டி ரிப்பேராகியிருக்கலாம். கண்டதையும் போட்டுக் குழப்பிக்காம ரிலாக்ஸாயிரு” என்று வித்யாவிடம் திரும்பி, “ஏய் அண்ணி.. எங்க அண்ணா உனக்குத் தனியா எதுவும் ப்ரெசண்ட் பண்ணலையா?” என கேட்டாள்.

“இல்லையே கீர்த்தி. நான் அவங்களைப் பார்த்ததே மூணு நாலு டைம்தான். அதுவுமில்லாம...” யோசித்தவளுக்கு, அண்ணன் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு ஆசிரமத்தில் கீர்த்தியின் பெயரில் வந்த கிஃப்ட் ஆனந்த் கொடுத்ததோ என்று தோன்ற, அதில் என்ன இருந்தது என்று யோசிக்கையில் நினைவு வரவில்லை.

“சொல்லு அண்ணி. அதுவுமில்லாம?”

“ப்ச்... ஒண்ணுமில்ல கீர்த்தி. எனக்குன்னு தனியா எந்த கிஃப்டும் தந்ததில்லை.”

“பொய் சொல்லாத அண்ணி. நீ கிஃப்ட் வாங்கியிருக்க. எனக்குன்னு நினைச்சி தூக்கிப் போட்டுட்ட. சரிதான?”

“ஏய் உனக்கெப்படி?”

“ஐ நோ அண்ணியாரே. அண்ணா என்கிட்ட சாரி கேட்டாங்க. ஏன்னு கேட்டதுக்கு, பெயர் மாற்றத்துல என் பெயருக்கு கிஃப்ட் அனுப்பினதா சொன்னாங்க. அதான் நீ ஏதோ தப்பானதுன்னு தூக்கிப் போட்டிருப்ப தோணிச்சி.”

“ஆமா கீர்த்தி. இன்னொரு டைம் வந்தா என்ன ஏதுன்னு பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். என்ன கிஃப்ட்னு கூட மறந்துட்டேன்” என்று அசடு வழிந்தாள்.

“வழியாத இந்தா பிடி. என் அண்ணா உனக்குன்னு கொடுத்தது” என்று ஒரு கிஃப்ட் பாக்ஸைக் கொடுத்தாள்.

“எப்போ கீர்த்தி!” ஆச்சர்யத்துடன் அந்த கிஃப்டைப் பிரித்து, அதிலிருந்த பாக்ஸைத் திறக்க செயின் இருந்தது. அதை எடுத்துப் பார்க்கையில் ‘யுஏ’ என்ற இரண்டு எழுத்துகள் பார்க்க ‘N’ போல தோன்றினாலும் “யு” எனக்காட்ட, சின்னதாக ஒரு தங்க நூலிலை நடுவிலிருக்க கண்கள் வியப்பில் விரிந்தது.

“ஜவுளி எடுக்கிறப்ப வரலைல்ல. அந்த டைம்தான் எடுத்திருக்காங்க. AV லெட்டர்ல டாலர் கிடைக்கலன்னு N லெட்டர் நடுவுல தங்க இலை சேர்க்கச்சொல்லி காத்திருந்து வாங்கியிருக்காங்க. நாம ஜுவல்ஸ் எடுத்து வெளில வர்றதுக்கு முன்ன குடுத்தாங்க. நீ போட்டுக்கோ” என்றாள்.

அவள் சொல்லுமுன் அந்தச் செயின் வித்யாவின் கழுத்தை அலங்கரிக்க, “நல்லாயிருக்கா கீர்த்தி?” என்று முகம் முழுக்கப் புன்னகையுடன் கேட்டாள்.

“எங்க அண்ணா செலக்ஷன் என்னைக்கும் சோடை போகாது. உன்னையும் சேர்த்துதான் அண்ணி” என்றதும் செல்லமாய் மணப்பெண் சிணுங்க, “ஹலோ எங்க அண்ணியைக் கேலி பண்றீங்களா? நான் இருக்கும்போது நீங்க மட்டும் எப்படித் தொடரலாம்” என்று அனுவும் சேர்ந்து கொண்டு கேலியைத் தொடர்ந்தாள்.

சில நிமிடங்களில் பெண்ணை மணமேடைக்கு அழைத்துச் செல்ல, ஐயர் சொன்ன மந்திரத்தை கவனமாய் சொல்லிக் கொண்டிருந்தவன், பெண்ணை அழைத்து வந்து அருகில் அமர்த்தியதும், அவளைக் கண்டு புன்னகைக்க, அவளின் பதில் புன்னகையில், “பீவர் குறைஞ்சிருச்சா தியா? இது பொதுயிடமா இருக்கு. இல்லன்னா கழுத்துல கைவச்சிப் பார்த்திருப்பேன்” என்றான்.

‘நல்லவேளை அதைச் செய்யாமவிட்டாங்க’ என நினைத்து, “இப்ப சரியாகிருச்சிங்க. மேரேஜ் முடிஞ்சி தனியா இருக்கிறப்ப பார்த்துக்கோங்க. நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்றாள் அவனுக்கு உரிமையிருக்கிறது என்ற அர்த்தத்தில்.

“ஹேய் நிஜமாவா?” என்றதும் அவள் விழிக்க, “ஓகே கூல்” என்றான் அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு.

‘உங்களுக்குக் கூலாயிருக்கா. தொட்டு மட்டும் பார்த்திருக்கணும், எல்லார் முன்னாடியும் மானம் போயிருக்கும்.’

“ஏன் அமைதியாகிட்ட?”

“இல்ல புகை கண்ணுல படுது” என மழுப்பினாள்.

“கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ தியா.”

‘ம்’ என்ற தலையாட்டல் மட்டுமே அவளிடமிருந்தது.

“அண்ணா எல்லாரும் உங்களைத்தான் பார்க்கிறாங்க.” அனு அண்ணனிடம் ரகசியமாகச் சொல்ல,

“எங்களைப் பார்க்கிறதுக்காகத்தான்மா வந்திருக்காங்க” என்று சிரித்தான்.

அண்ணனவனின் பதிலில் அனு பேந்தப் பேந்த விழிக்க, அதைக் கண்ட கீர்த்தி சிரித்து, “அக்கா பல்ப் பெருசாவே கிடைச்சிருக்கு போல. ம்..” என்ற அனுவின் தலையாட்டலில், “அதான் நான் அந்த ஏரியாவுக்குப் போகாம நின்னுட்டிருக்கேன்” என்றாள் கீர்த்தி.

“உன் அக்கா எங்க கீர்த்தி?”

“பாப்பா அழுதான்னு போனா. கூட்டம் வேறயா அதனால ஆள் இங்க இல்ல போல” என சுற்றிலும் பார்த்தவள் கண்களில் கார்த்திகா பட, “அதோ வந்துட்டாளே” எனும்போது சுபாஷ் கார்த்திகா கையில் குழந்தையுடன் மேடையேறினார்கள்.

“என்ன கார்த்திமா? அதான் ஒண்ணுமில்ல வர்றோம் சொல்லிட்டாங்கள்ல அப்புறமும் ஏன் ஃபீல் பண்ணிட்டிருக்க? கல்யாணத்தை ரசி எல்லாம் சரியாகிரும்.”

“ஏன்னு தெரியலங்க. இந்தக் கல்யாணத்துல என்னால ஒட்டவும் முடியல. அம்மா பார்த்த பையன்தான்னாலும் ஏதோ சரியில்ல தோணுது” என்றாள் சிறு கலக்கத்துடன்.

“கார்த்தி! மாப்பிள்ளையும் அவங்க வீட்டுக்காரங்களும் ரொம்ப நல்லவங்க. சென்னை பெங்களுர்னு எல்லா இடத்திலும் விசாரிச்சாச்சி. யாரும் எந்தக் குறையும் சொல்லல. அதைவிட உண்மையை நேருக்கு நேர் பேசுறார். எதையும் மறைக்க முயற்சிக்கல. ஓகே.”

‘அப்படி என்ன உண்மையோ?’ என நினைத்தாலும் கேட்காமல், “ம்.. சரிங்க மாம்ஸ்” என்று சிரித்தாள்.

“இதுதான் கருவாச்சி உனக்கழகு” என்று அவளைக் கடுப்படித்து செல்லமாய் ஒரு இடியையும் பெற்றுக் கொண்டான்.

கெட்டிமேளங்கள் ஒலிக்க, சொந்தங்களின் அட்சதையுடனும், வாழ்த்துடனும், வித்யா சுதாகரை, வித்யானந்தாக மாற்றிக்கொண்டான் ஆனந்த்ராஜ்.

தாலி கட்டும்பொழுது இருவருக்குள்ளும் ஒரு நிறைவு இருக்க, அதோடு வித்யாவின் கழுத்தின் சூடு தாலிகட்டுகையில் குனிந்த பொழுது தன் கைகளில் மூச்சுக்காற்றாய் பட்டது. நெற்றிப் பொட்டு வைக்கும் பொழுது அவளின் முகம் கண்டிட, புன்னகை மாறா அவளின் முகம் சிறு நிம்மதியைக் கொடுத்தாலும், தாலி கட்டிய தைரியத்தில் காய்ச்சல் இருக்கிறதா என்று அவள் கழுத்தில் கை வைக்கப்போக, கழுத்தில் கிடந்த கனத்த மாலையும், நகைகளும் அவனின் எண்ணத்தைத் தடை செய்தது.

அவளுக்குத் தான் பேசுவது கேட்க வேண்டும் என்பதற்காக இன்னும் நெருங்கியமர்ந்து, “பீவர் குறைஞ்சிருச்சி சொன்ன? ஆனா குறையல போலிருக்கே. தாலிதான் கட்டியாச்சில்ல வா ஹாஸ்பிடல் போகலாம்” என்றான்.

வியப்பாய் விழிவிரித்து கணவனைக் காண, “என்னடா போலாமா?” காதலில் உருகத் தெரியாது செயலில் காண்பித்த அந்நேசத்தில் கண்கலங்கியது வித்யாவிற்கு.

“நான் சொன்னேன்ல. பாரு கண்கலங்குது. வா ஹாஸ்பிடல் போகலாம்” என்று கைபிடிக்க, அதன் சூடு அவனைத் தாக்கியது. அதற்குள் கணவன் கைபிடித்து, “இப்ப வேண்டாம். எல்லாரும் போனதும் போகலாம். அதுவரை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்” என்றாள்.

‘முடியுமா?’ என்பதாய் அவன் பார்க்க, ‘முடியும்’ என்பதாய் கண்மூடித்திறந்தாள்.

அடுத்தடுத்த சடங்குகள் நடந்து கொண்டிருக்க, அவ்வப்பொழுது தன்னைப் பார்த்த கணவனிடம், தனக்கு எதுவுமில்லையென்று கண்களால் சொல்லியபடியிருக்க, அருகிலிருந்தவர்களுக்கு அவர்களின் பேச்சும் பார்வையும் வித்தியாசமாகயிருக்கவும், என்னவென்று கேட்ட தாயை வருத்தப்பட வைக்க விரும்பாது “ஒண்ணுமில்லம்மா” என்றுவிட்டான்.

தாலிகட்டு முடிந்ததுமே சுபாஷும், தணிகாசலமும் பந்தி நடக்குமிடம் சென்று கவனிக்க ஆரம்பிக்க, சுதாகர் சில முக்கியமான உறவினர்களிடம் பேசிக் கொண்டிருக்க, சுபாஷிணி மணமக்களை வரவேற்பதற்காக வீட்டிற்குச் சென்றிருந்தார். குழந்தையை படுக்கப்போட வாணி வாங்கிச் செல்ல, கார்த்திகாவோ மணமக்களின் முகபாவம் பார்த்து சற்று குழம்பினாள்.

அவளின் குழப்பத்தை அதிகப்படுத்தி ஜாதகம் எனும் ரிங் மாஸ்டரின் ஆட்டத்தை ஆரம்பித்து வைக்க, செங்கல்பட்டில் நுழைந்தது அந்தக் கார்.

அநேக பேர் இரவே வந்து சென்றிருந்ததாலும், காலையில் வந்தவர்களும் முகூர்த்தம் முடிந்ததும் சாப்பிட்டுக் கிளம்பிட, முக்கிய உறவினர்களும் நட்புகள் சிலர் மட்டுமே அங்கு. அவர்களும் அங்கங்கு நின்றிருக்க மணமக்களருகில் கீர்த்தி, அனு, சாரகேஷ், வரலட்சுமியுடன் சில நட்புகள் மட்டுமே நின்று அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

வாசலில் தோழிக்கு வழி சொல்லியபடி நின்றிருந்த கார்த்திகா மண்டப வாசலில் வந்து நின்ற காரைக் கண்டதும், கைகாண்பித்து அருகில் சென்று அவர்களை வரவேற்று குழந்தையை வாங்கிக்கொண்டாள்.

பதிலுக்குத் தோழியை அணைத்த சாதனா, “ஹேய் கார்த்தி! நீதான் கல்யாணப் பொண்ணு மாதிரியிருக்க” என்று கேலி செய்தாள்.

“ஆமாமா. நீ கூட கல்யாணப் பொண்ணோட தோழி மாதிரிதான் இருக்க என்றதும் அவள் முறைக்க... “வாங்கண்ணா. அப்பா அம்மா கூட்டிட்டு வரலையா?” என்று பிரேமிடம் கேட்டாள்.

“இல்லமா. அம்மாவுக்கு டிராவல் பண்ண உடம்பு ஒத்துழைக்கல. அதனால அப்பா எங்களை போயிட்டு வரச்சொல்லிட்டாங்க.”

“பரவாயில்லண்ணா. சாது அப்பாவுக்கு எப்படியிருக்கு?”

“நார்மலா இருக்காங்க கார்த்தி.” மணமேடை நோக்கி நடந்தபடி குழந்தையைப் பற்றி விசாரிக்க, குழந்தை தூங்குவதாக கார்த்தி சொன்னதும், “சரி போகும்போது பார்த்துக்கறேன்” என்றபடி மேடையேற, ஆனந்த் நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருக்க, வித்யாவை சாதனாவிற்கு அறிமுகப்படுத்தினாள் கார்த்தி.

“வித்யாவா உன் நாத்தனார் பெயர்! ஹேய் கார்த்தி, பெங்களுர்ல இருக்கிற என் ஃப்ரண்ட் நேம் கூட வித்யாதான். அவளும் நானும் செம க்ளோஸ்” என்று புன்னகையுடன் சொல்லி, “ஹாய்! கங்க்ராட்ஸ் புதுப்பொண்ணு” என்று கொண்டு வந்த கிஃப்டைக் கொடுத்தாள்.

வித்யா பதிலுக்கு நன்றி சொல்ல... கார்த்திகாவிடம் இருந்த குழந்தை அவள் தகப்பனிடம் தாவ, பிரேமிடம் குழந்தையைக் கொடுத்து மாப்பிள்ளையை அறிமுகப்படுத்த ஆனந்தின் புறம் திரும்பினாள். இதுவரை கார்த்திகா ஆனந்தை முறை சொல்லி அழைத்திராததால், அந்தத் தயக்கம் அப்படியே இருக்க, அதை உணர்ந்த கீர்த்தி “அண்ணா ஒரு நிமிஷம்” என்றாள்.

பேசிக் கொண்டிருந்தவர்களை அனுப்பி வைத்து, “சொல்லுமா?” என்று திரும்பியவன் கார்த்தியைப் பார்த்துப் புன்னகைத்து, அருகிலிருந்தவர்களைப் பார்த்து மரியாதை நிமித்தம் “வாங்க” என்ற போது அவர்கள் முகம் பார்த்ததும் சின்ன அதிர்வு வந்தாலும், “ஹாய் பிரேம். நான் எதிர்பார்க்கவேயில்ல. ஹவ் ஆர் யூ?” என்றான் சந்தோஷமாகவே.

சின்னதாக தயக்கம் பிரேமிற்குள் இருந்தபோதும், “பைன் ஆனந்த். நீங்க?” என சபை மரியாதைக்குக் கேட்டான்.

“அவங்க நல்லாதான் இருக்காங்க. நீ எப்படி நல்லாயிருக்க?” என்று ஒருமையில் கேட்டு, அனைவரின் அதிர்ந்த முகம் காணாது, “கார்த்தி உன் நாத்தனாருக்கு வேற மாப்பிள்ளையா கிடைக்கல. போயும் போயும் இவன்தானா கிடைச்சான்” என கோபத்தில் கேட்டாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“சாது என்னாச்சி? இவரை உனக்குத் தெரியுமா?” என்னவென்று புரியாமல் கார்த்திகா கேட்க...

“தனா இப்ப எதுவும் பேச வேண்டாம். வா கீழ போகலாம்” என்று பிரேம் மனைவியை அழைத்தான்.

ஆனந்தோ இன்னும் எதையும் வித்யாவிடம் பேசவில்லை என்ற நிலையில் இவர்களின் பேச்சை வித்யா தப்பாக எடுத்துக் கொள்வாளோ என தவிப்பாய் பார்க்க, அவளோ அவனைப் புரியாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்குத் தெரியுமாவா? என் குடும்பத்துல உள்ள எல்லாருக்குமே சாரையும் அவரோட புத்தியையும் தெரியும். உன் வீட்டுல பொண்ணு எடுக்கிறது முன்னாடியே தெரிஞ்சிருந்தா...”

“சாதனா போதும் நிறுத்துங்க. தெரிஞ்சிருந்தா கல்யாணத்தை நிறுத்திருப்பீங்களா? செஞ்சது தப்புன்னு தெரிஞ்சதும் மன்னிப்பு கேட்டு விலகிட்டேன்ல. அப்புறமும் ஏன் என்னைத் தப்பானவனா பார்க்குறீங்க?”

“தப்பானவனைத் தப்பாதான் பார்ப்பாங்க. நீ எனக்கு முன்னாடியே போட்டோ அனுப்பியிருக்கலாமே கார்த்தி?” என்று தோழியைக் கேட்டாள்.

“நேத்து அனுப்பினேன் சாது. நீ பார்த்திருக்கமாட்ட. சரி நீ ஏன் இவரைத் தப்பானவர்னு சொல்ற?” என்றவள் குரல் வெளிவரவில்லை.

“சார் ஒரே வீட்டைச் சேர்ந்த ரெண்டு பொண்ணுங்க லைப்ல விளையாண்டவர். என்ன இவரைப் புரிஞ்சி அவங்க விலகிட்டாங்க” என ஏளனமாகப் பார்த்தாள்.

வித்யா ஒருவித குழப்பத்துடன் நின்று ஆனந்தைப் பார்க்க, அவளை நேராகப் பார்க்க மட்டுமே செய்தான். தனியாக எந்த விளக்கமும் கொடுக்காத போதும், அவன் பார்வை நிறைய சொன்னதோ!

“சாரி ஆனந்த். தனா வா போகலாம். அவங்களுக்கு கல்யாணமாகிருச்சி. நீ பண்ற வேலையால நிறைய ப்ராப்ளமாகும்ன்றது உனக்குப் புரியலையா? எல்லாத்தையும் யோசிச்சிச் செய்யுற நீ, இதை ஏன் யோசிக்காமாட்டேன்ற” என்று பிரேம் மனைவியைக் அவளைக் கடிந்தான்.

“பிரேம் அண்ணா ஒரு நிமிஷம்” என்று பிரேமை பேசாது செய்து, “நீ சொல்லு சாது? எனக்குமே நேத்திலிருந்து மனசெல்லாம் என்னவோ போலிருக்கு. என்ன ஏதுன்னு புரியாமல்தான் திணறிட்டிருக்கேன்” என்றாள் கார்த்திகா.

கீர்த்தி அதற்குமேல் பொறுக்க முடியாது சுபாஷை அழைக்கச் சென்றாள்.

கணவன் சொன்னதால் சற்று தயங்கி பின், “எங்க அண்ணிக்கு இவனோடதான் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது. கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்ன கோவிலுக்குப் போகும்போது, கார் ஆக்சிடண்ட் ஆகப்போகுதுன்னு தெரிஞ்சதும், இவன் தன்னைக் காப்பாத்திட்டு, அண்ணியை கவனிக்காம விட்டதுல அவங்க முகமெல்லாம் சிதைஞ்சி கண் தெரியாம போயிருச்சி. அந்த டைம் அண்ணன் பார்த்து காப்பாத்தி கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க. சரியான சுயநலம் பிடிச்சவன் கார்த்தி இவன். அந்த இடத்துல அண்ணன் இல்லாமல் போயிருந்தா அண்ணி என்னாகியிருப்பாங்க.”

“அதோட விட்டானா, படிச்சி முடிச்சதும் நான் வேலைக்குப் போன கம்பெனில டீம் லீட் இவன்தான். என்னை பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டதும், நான் வீட்ல பேசச்சொல்ல, வீட்டுக்கு வந்தவனை அண்ணன் அடையாளம் தெரிஞ்சி விரட்ட... அப்புறம்தான் எனக்கு அண்ணி பத்தின முழு விவரம் தெரியும். இவன் பண்ணின கூத்தாலதான் எங்களுக்கு அவசர அவசரமா கல்யாணத்துக்கு ரெடி பண்ணினாங்க. அதுக்கப்புறம் இப்பதான் பார்க்கிறேன்” என்றாள்.

ஆனந்த் மேல் ஒட்டுதல் இல்லாத கார்த்திகாவிற்கோ கண்மண் தெரியாத கோபத்துடன் வெறுப்பும் வர, அதே நேரம் கீர்த்தியும் சுபாஷும் வந்தார்கள்.

“சாதனா தப்பு செய்தவன் திருந்த மாட்டானா? சில நேரம் நாம என்ன செய்றோம்னு தெரியாம செஞ்சிட்டு விளைவுகளைப் பின்னாடிதான் அனுபவிப்போம். அந்த அனுபவப்பாடம் நமக்கு பக்குவத்தைக் கொடுக்கும். நான் தப்பே செய்யலைன்னு சொல்லல. ஆனா, நீங்க சொல்ற அளவுக்கு கெட்டவன் கிடையாது.”

சத்தம் கேட்டு அங்கு வந்திருந்த வாணி, சாதனா சொன்னதைக் கேட்டு, ‘மாப்பிள்ளை விஷயத்தில் தவறு செய்து விட்டோமோ’ என்று யோசிக்க ஆரம்பித்து, வரலட்சுமியிடம் சென்று “உண்மையா?” என கேட்டார். அவரோ சம்மதமான தலையசைப்புடன் தலைகுனிந்து கொண்டார்.

ஏனோ வாணிக்குக் கோபம் வர, தன் பெண்ணின் வாழ்க்கையை எண்ணி கண்கலங்க ஆரம்பித்தார்.

வித்யாவோ என்ன செய்வதென்று புரியா நிலையில் காய்ச்சலின் வேகம் அதிகரிக்க, கால்களில் சிறு தடுமாற்றம் எழ அப்படியே அமர்ந்தாள்.

“சாதனா நீங்க முதல்ல கிளம்புங்க. எதுவாயிருந்தாலும் நடந்ததை நான் சொல்லிக்கிறேன். இவளுக்கு ஏற்கனவே பீவர். இதையெல்லாம் பார்த்தா உடம்பும் மனசும் தாங்காது” என்றான் தவிப்புடன்.

“அப்ப நீ இவங்ககிட்ட எதையும் சொல்லல” என்றதும் ஆனந்த் பிரேமை இயலாத பார்வை பார்த்தான்.

ஆனந்த்தின் தவிப்பும், அச்சூழ்நிலையிலும் தன் மனைவியை மரியாதையாகப் பேசிய நிதானமும் பிரேமிற்குள் அவன் மாற்றம் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த மனைவியின் புறம் திரும்பியவன், “சாதனா திஸ் இஸ் யுவர் லிமிட். ரொம்பப் பேசிட்ட வா போகலாம்” என்று இழுத்தான்.

“பிரேம் அண்ணா அவளை ஏன் திட்டுறீங்க? அவ ஒண்ணும் தப்பா சொல்லலையே?”

“கார்த்திகா நட்புன்றது ஒரு எல்லைக்குள்ள இருக்கிற வரை நல்லது. அதை உறவுக்குள்ள கொண்டு வராதீங்க. இவ சொன்னது கடந்த காலம். முடிஞ்சி போன ஒரு விஷயத்துக்கு கமா போட்டு ஆரம்பிச்சிராதீங்க. முடிஞ்சது முடிஞ்சதுதான். இது உங்க நாத்தனார் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. கொஞ்சம் யோசிச்சி பேசுங்க” என்று மனைவியை அழைத்துச் சென்றான்.

பிரேமின் பேச்சில் கோபமெல்லாம் ஆனந்த் மேல் பாய, “பொண்ணுங்களை மதிக்கத் தெரியாத உங்களுக்கெல்லாம் எதுக்குக் கல்யாணம்? பொண்ணுங்கன்னா அவ்வளவு ஈசியா போச்சா. எங்க வித்தியை என்ன செய்யுறதா உத்தேசம்?” என ஆங்காரமாக நின்றாள்.

“கார்த்தீ” என்ற சுபாஷின் அதட்டலில், ஆதரவு தேடி கணவனின் அருகில் சென்று நடந்ததைச் சொல்லி அழுதாள்.

“நான் நேத்திலிருந்து சொல்றேன். எல்லாம் சரியாதான் நடக்குதுன்னு. அது உன் காதுல விழலையா? யாரோ சொன்னா என்ன ஏதுன்னு விசாரிக்கிறதில்லையா? இல்ல உன் அம்மாவை நீ நம்பலையா?” என்றான் கடுமையாக.

“இது நம்ம வீட்டுப் பொண்ணு வாழ்க்கைங்க. அதோட சாதனா தெரியாம எதையும் சொல்லமாட்டா.”

சுதாகரும் தணிகாசலமும் தங்கள் வீட்டுப்பெண் காட்சிப்பொருளாக இருப்பதை விரும்பாமல், “எதுவாயிருந்தாலும் வீட்ல போயி பேசிக்கலாம்” என்று அவர்களை அதட்டி மண்டபத்தின் பொறுப்பை நெருங்கிய உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்து, சுபாஷிணிக்கு போன் செய்து மேலோட்டமாகச் சொல்லி மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.

முதல்முறையாக வரும் மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்க, அனைவரின் முகங்களும் ஏதோ ஒரு இறுக்கத்திலிருந்தது. இருந்த சில உறவினர்களை சுபாஷிணி வீட்டில் தங்க வைத்து கீர்த்தியை பார்த்துக்கொள்ளச் சொன்னார்.

“இல்லம்மா. இந்த இடத்துல நான் அவசியம். அண்ணா மேலதான் தப்புன்னு வந்தா, அவர் சார்புல பேச நான் இருக்கணும்” என்றாள் பிடிவாதமாக.

“நான் இருக்கேன் கீர்த்தி. எந்த கெட்டதும் நடக்க விடமாட்டேன். அவங்களைப் பார்த்துக்க ஆள் இல்லன்னா நிறைய கேள்வி வரும். இப்பவும் அவங்களுக்குள்ள குழப்பம் இருக்கும். அதை இன்னும் அதிகப்படுத்தக்கூடாது. வீட்டுப்பொண்ணா நீ அங்கயிருந்தா நல்லதுடா புரிஞ்சிக்கோ” என்றார்.

சரியென்று சம்மதித்து வித்யாவினருகில் வந்தவள், அவள் கையில் செல்போன் கொடுத்து, “ஸ்பீக்கர்ல இருக்கு அண்ணி. கட் பண்ணிடாத. எது நடந்தாலும் அண்ணாவை விட்டுடாதே” என்றதில் வித்யா அவளைக்காண, “டேக் கேர் அண்ணி.” வந்த அழுகையை அடக்கி வித்யாவின் கண் துடைத்து ஹெட்செட் மாட்டியபடி தன் வீட்டிற்குச் சென்றாள்.

கீர்த்தி சென்றதும் கதவைத் தாளிட்டு, “அண்ணி பால்பழம் எடுத்துட்டு வாங்க” என்றதும் வாணி தயங்கி நிற்க, “சரி நானே செய்றேன்” என்று அந்த சம்பிரதாயத்தைச் செய்து முடிக்க...

“இப்ப இது தேவையா?” கார்த்தி கோபமாகக் கேட்டாள்.

“அத்தை அவளைப் பேசாம இருக்கச் சொல்லுங்க. நானும் ஆரம்பத்திலிருந்து சொல்லிப் பார்த்துட்டேன். கேட்காம சலங்கையைக் கட்டின மாதிரி ஆடிட்டிருக்கா” என்ற சுபாஷின் குரலில் அவ்வளவு கோவம்.

“நான் ஒண்ணும் எனக்காகப் பேசல. உங்க தங்கச்சிக்காகத்தான் பேசுறேன். அவளோட லைப் கெட்டுப்போனா பரவாயில்லையா?” என்றாள் கோபம் குறையாமல்.

“கார்த்தி அக்கா, நீங்க என் அண்ணனை தப்பா நினைச்சிட்டுப் பேசுறீங்க. ப்ளீஸ் உங்கமேல நிறைய மதிப்பு வச்சிருக்கேன்” என குறுக்கிட்டாள் அனு.

“உங்க மதிப்பை வச்சி நான் என்ன பண்றது? ஏமாத்தி கல்யாணம் பண்ணியிருக்கீங்க” என்று அழுதாள்.

அதுவரை பொறுமையாக இருந்த வரலட்சுமி, “போதும் நிறுத்துமா. எப்பவோ நடந்து முடிஞ்சதைப் பேசி...” அவரைத் தொடரவிடாமல், “எப்பவோ நடந்தாலும் தப்பு தப்புதான்” என்று கத்தினாள்.

“கார்த்தீஈஈ” என்ற அதட்டல் அவளின் தாயிடமிருந்து வந்தது.

“சின்னப்பொண்ணுன்றதை நிரூபிக்கிறமா. அவன் செஞ்ச தப்புக்கு எத்தனை பேர்கிட்ட, எத்தனை விதமா தண்டனை அனுபவிப்பான். அவன் உண்மையை மறைச்சித்தான் கல்யாணம் பண்ணினான்றது உனக்குத் தெரியுமா?”

“தெளிவாவும் எதையும் உங்க பையன் சொல்லலை” என்றாள் பட்டென்று.

“பொறுமையா இருக்கிறோம்னு நிறைய சோதிக்கிறமா” என வருத்தமுடன் சொன்னார்.

வரலட்சுமியிடம் வந்த சுபாஷிணி, “நீங்க சொன்னமாதிரி அவள் சின்னப்பொண்ணு அக்கா. நான் புரியவைக்கிறேன்” என்றார்.

“புரிய வச்சி, நடந்த அவமானம்லாம் இல்லாமல் போயிடுமா? உங்களுக்கேத் தெரியும் அவன்கிட்ட நான் பேசினதே இந்த கல்யாணத்தோடதான். அவன் செய்த பாவம் இன்னும் தொடருது போல” என்று கண்கலங்கினார்.

“அம்மா” என்று தாயைத் தன்னோடு அனைத்துக் கலங்கிய தன் கண்களை சரி செய்து, “இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் எதையும் மறைச்சி கல்யாணம் பண்ணிக்கல. வேணும்னா உங்க அப்பா சுபாம்மாகிட்ட கேட்டுக்கோங்க” என்று மாமியாரிடம் வந்தவன், “நீங்க சொல்லுங்க அத்தை, உங்க பொண்ணுக்கு நான் ஏத்தவன் இல்லன்னு நினைக்கிறீங்களா?” நேராகப் பார்த்துக் கேட்டான்.

அவரோ மருமகளைப் பார்க்க, அவரின் எண்ணம் புரிந்தவனோ, அதற்கு மேல் பேச முடியாமல், “அம்மா போகலாம். இனிமேல் இங்கயிருந்தா என்னோட பொறுமையும் எல்லை மீறலாம். அது வேற மாதிரிப் பிரச்சனையில் விட்டுரும்” என சொல்லி மனைவியிடம் வந்து, “என்மேல் நம்பிக்கையிருந்தா என்னை நம்பி வா தியா. இல்ல அவங்களை மாதிரி என்னைத் தப்பா நினைச்சா, உன்னிஷ்டம் எதுவோ அதை நான் ஏத்துக்கறேன்” என்றான் அவள் கண்பார்த்து.

அவள் கண்களிலிருந்த கண்ணீர் துடைக்க மேலேறிய கையை, உரிமையிருந்தும் உரிமை இல்லாததுபோல் தோன்ற கீழே இறக்கிவிட்டு, “பீவர் அதிகம் இருக்கு அழாத. இப்ப கூட வர்றியா இல்லையான்றதோட, வா ஹாஸ்பிடல் போகலாம்” என்றான்.

“அவ எங்கேயும் வரமாட்டா.”

“வரமாட்டாள்னா? என்ன அர்த்தத்துல சொல்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” கார்த்தியின் மேல் கூர்மையாய் பார்வையைப் பதித்து ஆனந்த் கேட்க...

“உங்களை நம்பி அவளை அனுப்புறதாயில்ல” என முகத்திலடித்தாற்போல் சொன்னாள்.

“கார்த்தீஈஈ” என்று சுபாஷ் கை ஓங்கிட... “சுபாஷ்!” அதட்டல் குரல்களில் தன் வசம் வந்தவனுக்கு தான் செய்யவிருந்த தப்பு புரிந்தது.

“யாருக்காகவோ கட்டின பொண்டாட்டியை கை ஓங்குறியா சுபாஷ். இதுதான் நல்ல ஆம்பளைக்கு அழகா” என்று தணிகாசலம் மகளுக்காக பரிந்து வர...

“இவர் யாரோ இல்ல மாமா. என் தங்கச்சி புருஷன். நடக்கிறதை நீங்க பார்க்குறீங்கதான. யார் பேச்சையாவது கேட்கிறாளா உங்க பொண்ணு. இல்ல பெரியவங்களைத்தான் பேச விடுறாளா? அவர் இல்லன்னா இப்படி நின்னு பேசிட்டிருப்பாளா?” மனைவியிடம் திரும்பி, “செய் நன்றி கொன்ன பாவம் நமக்கு வேணாம் கார்த்தி. பெரியவங்க பேசிக்கட்டும் நீ அமைதியாயிரு” என்றான்.

“அப்ப நான் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் இல்லையா? எனக்குக் கேட்கிற உரிமைதான் கிடையாதா? மத்ததையெல்லாம் விடுங்க, நேத்து நைட் ஏன் பின் வழியா வீட்டுக்குள்ள வந்து வித்யாகிட்ட பேசினார்னு கேளுங்க” என்று கோபத்தில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் உளறிவிட்டாள்.

வித்யா விக்கித்து நிற்க... அனைவரின் பார்வையும் கேள்வியாய் அவளைத் துளைக்க, ஆனந்த் பேச மறந்து நின்றிருந்தான்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top