• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687


17


நடப்புக்கு நடுவில்:

மூன்று வருடங்களுக்கு முன்:

தினமீன் பத்திரிக்கையின் முதல் பகுதியில் இருந்தது அந்தக் கட்டுரை. பச்சைப் பசேலென்ற நெல் விளையும் நிலமும், காய்ந்து பிளவு விட்டிருந்த விளைச்சல் இல்லாத நிலமும், உள்ள இரண்டு புகைப்படங்களுடன் இருந்தது அந்த கட்டுரை.

விவசாயத்தின் விபரீதங்கள்:

வருடம் மும்மாரி பொழிந்து, முப்போகம் நெல்விளையும் பூமி! இது பழமொழி. ஆனால், இன்று நாலுபோகம் விளைச்சல் நடக்கிறது. எப்படி? இதுதான் கேள்விக்குறியான ஒன்று. இது நல்லதற்கா? அல்லது கெட்டதற்கா? நிச்சயமாக கெட்டதற்கே” என்பது என்னுடைய அபிப்ராயம்.

ஒரு பக்கம் விளை நிலங்களை, துண்டு நிலங்களாக (ப்ளாட்) போட்டு இயற்கையை அழிக்கிறார்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் இயற்கையை மருந்துகளால்தான், பாதுகாக்க முடியுமென்ற எண்ணத்தில் செயற்கை உரங்களிட்டு, இயற்கையை வளர்க்கிறார்கள்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு! இதுவும் பழமொழி.

உணவும் விஷமாகிப் போனதேனோ! அரிசி நாம் உண்ணும் உணவின் ஆதாரம். முப்போக விளைச்சலில், தேவையான அளவு பூச்சி மருந்துகள் மட்டுமே தெளித்து அறுவடை செய்தார்கள். இன்றோ, நாலுபோக விளைச்சல் நடக்கிறது. முடியுமா? என்ற எண்ணத்தை மாற்றி முடியுமென்று நிரூபித்திருக்கிறார்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளை, அதன் அளவு தாண்டி அதிகமாக உபயோகித்து, சீக்கிரத்திலேயே அறுவடை செய்யப்படுகிறது. இதன்மூலம் நாம் உணவு என்னும் விஷத்தை சேர்த்தே உண்கிறோம். இதனால் நாற்பது வயதிற்குள், நாற்பது வகையான நோய்கள் வந்து மனிதனைத் தாக்குகிறது. என்ன நோய் என மருத்துவர்கள் அறியும் முன் உயிர்பலி அதிகரிக்கிறது. எதனால்? முதலாளிகள். ஆம். முதலாளிகள் மட்டுமே. இதில் அரசியலோ, சமூகமோ எப்படி பங்குவகிக்க முடியும்? அரசு அனைத்து பகுதிகளுக்கும் வந்து, நிதமும் பார்த்துக் கொண்டிருக்கவா முடியும்? முதலாளிகளின் பேராசை. இருக்கிற பணத்தை இன்னும் அதிகமாக்க வேண்டுமென்ற பேராசை. இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் குடும்பமும் தான் என்பது ஏன் தெரியவில்லை?

மழையில்லாமல் விவசாய தற்கொலை என்று ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம், மனிதர்களால் நிதமும் இயற்கைத் தற்கொலைகள் நடக்கிறதே! இதற்கு யார் பொறுப்பு? நன்றாக விளையக்கூடிய, தண்ணீர் வசதியுள்ள இடங்களில் இதே போன்ற அநியாயங்கள் நடக்கிறது. வருடங்கள் செல்லச்செல்ல, மருந்துகளின் மாயத்தால், இயற்கை உரங்களான மண்புழுக்கள் அழிந்து, வறண்ட பூமியே நமக்கு காட்சியளிக்கும். நாம் அதை ப்ளாட் போட தேவையில்லை. அந்த வேலையையும் மருந்துகளே கவனித்துக் கொள்ளும்.

விவசாயத்துறை அமைச்சர், இதற்கான நடவடிக்கைகள் எடுத்தாலும், எந்தளவு முன்னேற்றம் உண்டாகுமென்று தெரியாது. எல்லா மாநிலங்களிலும், மாவட்டங்களிலும், வட்டங்களிலும் மற்றும் கிராமம் கிராமமாக சென்று பார்க்க எந்த அமைச்சராலும் முடியாது. ஆனால், இதை இப்படியே விடவும் முடியாது. இதற்கென ஒரு குழு ஆரம்பித்து அரசு அதை சீர்படுத்த வேண்டுமென்பதே என் எண்ணம்.

விளை நிலங்களைத் துண்டு நிலமாக்குவதால், இயற்கைச் சீரழிவு நடக்கிறது. துண்டு நிலமாக்கப்படாத நிலங்களில், மனிதச் சீரழிவு நடக்கிறது. செயற்கையை மற! இயற்கையை நேசி! இனி மனிதனாய் யோசி!

நட்புடன்

அவந்திகா அழகப்பன்.



“எப்படி மாமா கட்டுரை?” என கேட்டபடி வந்த மருமகளிடம்,“

“முதல்ல ட்வென்டி பர்ஸ்ட் ஹேப்பி பர்த்டேமா. இப்பத்தான் கையில ஒப்படைச்ச மாதிரியிருக்கு. அப்படியே பதினெட்டு வருஷம் ஓடிருச்சி” என்றார் சுந்தரேசன்.

“மாமா பர்த்டேதான் வருஷா வருஷம் வருதே. நான் கேட்டதற்கு பதில்.”

“சூப்பர்! எப்பவும் போல கலக்கிட்டமா. போனமுறை குழந்தைகளைப் பற்றி எழுதி இருந்த. இப்ப இயற்கையா? ம்... உன்னோட இந்த கட்டுரைக்கு அப்புறம், நம்ம பத்திரிக்கை சேல் அதிகரிச்சிருக்கு என்பது என்னோட அபிப்ராயம். ஆனாலும், எப்படித்தான் யோசிக்கிறியோ போ. என் தங்கச்சிக்கு இப்படி ஒரு புத்திசாலிப் பொண்ணா? ஆச்சர்யமாகத்தான் இருக்கு” என்றார்.

“மாமா” என முறைத்தவளிடம்,

“சரி சரி என் மாப்பிள்ளையோட புத்திசாலித்தனமா இருக்கும்.” திரும்பவும் முறைத்தவளிடம், “சரி ஒத்துக்கறேன் உங்கம்மா ரொம்ப புத்திசாலி. ம்ம்.. உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு அவந்திமா. நீ என்னோட பொறுப்புல இருக்கிறதால, உன்னை எப்படி எந்த குறையுமில்லாம வளர்க்கப் போறேனோன்னு ஒரு கலக்கம் இருந்தது. ஆனா, நீ சுயம்பு மாதிரி, உன்னை நீயே வளர்த்துக்கிற. அதுவும் நல்ல வழியில். உன்னோட சிந்தனைகள், செயல்கள் எல்லாம் பார்த்தா, குறை சொல்ல முடியாத ஒரு பெர்சனாலிட்டி நீ. உன்னோட கார்டியனா ஒரு சின்ன அட்வைஸ்மா” என்றார்.

“என்ன மாமா? கார்டியன்னுலாம் சொல்லிட்டு இருக்கீங்க? நீங்க எனக்கு காட்பாதர் மாமா. அட்வைஸ் மழையே பொழிஞ்சாலும், அசராமல் அசால்ட்டா கேட்கிற பொறுமையும், பக்குவமும் எனக்கிருக்கு. ம்... சொல்லுங்க கேட்போம். ஒருத்தி பொறுமையா கேட்கிறான்றதுக்காக ஓவரா ப்ளேடு போட்டுராதீங்க, ப்ளீஸ்” என குறும்பாக கலாய்த்தாள்.

சின்ன சிரிப்புடன் மருமகளின் பேச்சை ரசித்து, பின், “நீ ரொம்ப ரிஸ்க் எடுக்கிறியோனு தோணுதும்மா. அதனால, உன்னோட உயிருக்கு எந்த ஆபத்தும் வந்திரக்கூடாதுன்னும் பயமாயிருக்கு. உன்னோட முன்னேற்றத்துல எப்படி அக்கறை இருக்கோ, அதே அளவு உயிர் பயமும் இருக்கு. எப்பவும் ஜாக்கிரதையா இரும்மா. ஜர்னலிஸ்ட்னாலே நிறைய ரிஸ்க் இருக்கு. இந்த வேலை செய்ய நிறைய மனதிடம் உள்ளவங்களால மட்டும்தான் முடியும். இதுவரை உன்னோட போட்டோ எதுவும் பப்ளிக்ல பப்ளிஷாகல. அதனால, தொல்லைகளும் கம்மியா இருக்கு. பார்த்து முடிந்தளவுக்கு எதுலயும் இன்வால்வ் ஆகாம பார்த்துக்கோ” என்று தன் பயத்தை வெளியிட்டார்.

“மாமா... மாமா அவசியமில்லாத, அர்த்தமில்லாத, இவ்வளவு பயம் எதுக்கு உங்களுக்கு? எனக்கு ஒண்ணும் ஆகாது. பயப்படாம இருங்க. நான் ரொம்ப ஸ்ட்ராங்க் கேர்ள்” என கைதூக்கிக் காண்பித்தாள்.

“ஜர்னலிஸ்ட்கு வாய் பேச்சுக்கு சொல்லியா கொடுக்கணும். பேசாம உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிரவா?” என தீவிர முகபாவத்துடன் கேட்டார்.

“பேசாம எப்படி மாமா கல்யாணம் பண்ணுவாங்க? ரெண்டு வீட்டுலயும் சேர்ந்து பேசினால்தான, கல்யாணம் நடக்கும்?” என தன் பெரிய சந்தேகத்தைக் கேட்டு, “அதுவுமில்லாம, எனக்கு இப்பக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்ல மாமா. கீழ இருக்கிற தினமீனை விண்மீனாக்கணும்” என்று வானத்தை நோக்கி கை காண்பித்தாள்.

“நீ இப்பவும் அந்த விண்மீன் தான்மா. என்ன ஒருசிலர் உன் அருமை தெரியாம, ஒருசிலர் என்ன, என் பொண்டாட்டியும், பையனும்தான் உன்னை கீழ போட்டு மிதிக்கிறாங்க.”

“அவன் நல்லவன்தான் மாமா.”

“யாரு அவனா? அட போமா. அநேகமா உன்னோட கட்டுரையில், அவன் கண்டிப்பா இடம் பிடிப்பான்னு நினைக்கிறேன். என்ன, அது நல்லதா இருக்காதுன்னு மட்டும் தெரியுது” என்றார் மகனைத் தெரிந்தவராய்.

“அவனைப்பற்றி அந்தளவுக்கு நான் யோசிக்கல. அப்புறம் மாமா கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட்ல ஒரு பெரிய குற்றவாளியைப் பிடிக்கப்போறாங்கன்னு நியூஸ் வந்திருக்கு. டீமா போக முடியாது. முதல்ல விஷ்ணுவை அனுப்பிட்டேன். இனிமேல்தான் நான் போகப்போறேன்.”

“அதுக்கெல்லாம் நீ வேண்டாம்மா. வேற யாரையாவது அனுப்பலாம். பெரிய பெரிய ஆஃபீஸர்ஸ் சம்பந்தப்படுவாங்க. ஷுட்டிங் கூட நடக்க சான்ஸ் இருக்கு. அதனால, ரிஸ்க் எடுக்கவேண்டாம். எப்படியும் நமக்கு நியூஸ் வந்திரும். பத்திரிக்கை சர்குலேஷன் இப்பவும் நல்லாத்தானிருக்கு. உன் உயிரைப் பணயம் வைக்கிற மாதிரியான, ஒரு நியூஸ் கலெக்ட் பண்ணத் தேவையில்லை” என்றார்.

“மாமா இப்பத்தான சொன்னேன், அர்த்தமில்லாம பயப்படாதீங்கன்னு. இந்தப் போட்டி நிறைஞ்ச உலகத்துல, நம்ம தினமீனை எப்ப எல்லாரும அண்ணாந்து பார்க்கிற விண்மீனா மாத்துறது? டோண்ட் ஒர்ரி மாமா, நான் ஒண்ணும் அவங்க எதிர்ல நின்னு இந்தா என்னைச் சுடுன்னு சொல்லப்போறதில்ல.”

“இல்லமா அது...”

“நோ எக்ஸ்க்யூஸ் மாமா. நான் கிளம்பறேன் அவ்வளவுதான்” என்று முடித்தாள்.

“ஓகேமா. சீக்கிரம் வந்திரு. நானும் ஆஃபீஸ்லயிருந்து சீக்கிரம் வர்றேன்.”

‘ஏன்?’ என கேள்வியாய் பார்த்தவளிடம், “எப்படியும் கேக் வெட்ட சம்மதிக்க மாட்ட. அட்லீஸ்ட் கோவிலுக்காவது போயிட்டு வரலாம்மா.”

“ம்... ஓகே நான் சீக்கிரம் வர முயற்சிக்கிறேன்” என்றாள்.

இப்பொழுது சுந்தரேசன் கேள்வியாய் பார்க்க, “சரி வர்றேன்” என்று கிளம்பினாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“புவிமா! இங்க வந்து இந்த பத்திரிக்கையில உள்ள கட்டுரையைப் பாரு” என்று மனைவியை வேகமாக அழைத்தார் சந்திரகுமார்.

“யாரு? தினமீன் அவந்திகா அழகப்பனைத்தான சொல்றீங்க?”

“ஆமா. “எப்படி இவ்வளவு கரெக்டா சொல்ற? ஏற்கனவே படிச்சிட்டியா?”

“நோ நோ. நீங்க ஒரு நியூஸ்கு ரொம்ப எக்ஸைட்டானீங்கன்னா, அதுக்குக் காரணம், அதுல ஜனங்களுக்கு நல்ல மேசேஜ் இருந்திருக்கணும். அந்த மாதிரி நியூஸ், பொறுக்கியெடுத்தா மாதிரி ஒண்ணு ரெண்டுதான் வருது. மத்ததெல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அரசியல்ல இங்க இருந்து அங்க போனாங்க. அங்க இருந்து இங்க வந்தாங்கன்னு இருக்கும். இல்லையா? சினிமா நியூஸ், ஸ்போர்ட்ஸ் பத்தியிருக்கும். ஆனா, இந்த பேப்பர்ல வர்ற நியூஸ் அன்றாட கொலை, கொள்ளைன்னு வந்தாலும், அதுக்கு அவ்வளவு இம்பார்டண்ட் இருக்காது. ஏன்னா, அதைத்தான் நியூஸ்ல பார்க்கிறீங்களேன்னு சொல்லி இருந்தா அந்தப் பொண்ணு. அவளோட நேரடிக் கட்டுரைன்னு, இப்படி எதாவது ஒண்ணுதான் வரும். ஆனா, அதுக்குள்ள ஆயிரம் அர்த்தம், ஆழம் இருக்கும்.”

“போனவாரம் ஒரு கட்டுரை. அதுல குழந்தைகள்மேல் பாலியல் வன்முறைகள்னு பண்ணியிருந்தா, சும்மா பிச்சி உதறியிருந்தா. இதைத் தடுக்கிறது முக்கியமா பேரண்ட்ஸால முடியும்னு ஸ்டேட்மெண்ட் போட்டிருக்கா. அதுக்காக அவ சொன்ன காரணங்களைக்கூட, யாராலும் மறுக்க முடியாது.”

“குழந்தைங்க எங்க போறாங்க. வர்றாங்கன்னு வாட்ச் பண்ணி, அந்தந்த வயசுக்கான சின்னச்சின்ன அட்வைஸ் செஞ்சி ஓரளவு வெளிப்படையா ப்ரீயா பேசவிட்டுக் கேளுங்க. நான் மறுக்கலை, சொஸைட்டில நிறைய வக்கிரம் பிடிச்ச ஆண்கள் இருக்கத்தான் செய்றாங்க. என்னதான் பிள்ளைகளை சரியா வளர்த்தாலும், ஒருசில ஆண்வர்க்கத்தின் கொடூரம்தான் பாலியல் வன்கொடுமைகள். அதுக்காக நாம அலார்ட்டா இருக்கக்கூடாதுன்னு இல்லையே. அக்கம்பக்கத்து வீடுகள், சொந்த சித்தப்பா, பெரியப்பா, மாமான்னு வர்ற உறவுகளால கூட குழந்தைங்க பாதிக்கப்படுறாங்க. முதல்ல பேரண்ட்ஸ் நீங்க, நல்ல உறவுகளை பிரித்துப்பார்த்து, குழந்தையை அவங்க தொடுற விதம் பார்த்து பழக விடுங்க. அக்கம்பக்கம் போகும்போது, அதிக நேரம் எங்கேயும் இருக்கவிடாதீங்க. கண்காணிங்க. கண்காணிப்பு அவசியம். இந்த மாதிரி இன்னும் சில பாய்ண்ட்ஸ் சும்மா அள்ளித் தெளிக்கிறா” என்று புவனா புகழ்ந்து கொண்டிருந்தார்.

“கலெக்டர் மேடம் அந்தப் பொண்ணுகிட்ட கவுந்திட்டீங்கன்னு சொல்லு.”

“ம்... கண்டிப்பாங்க. அநேகமா சின்னப்பொண்ணாத்தான் இருக்கணும். பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சா, ஆட்டோகிராப் வாங்குற அளவுக்கு தீவிர ரசிகையாகிட்டேன். என்ன, என் ஹீரோயினுக்கு அரசியல்ல அவ்வளவா இன்ட்ரெஸ்ட் இல்ல போல.”

“அவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்கியா? அச்சச்சோ! நான்தான் விவசாயத்துறை அமைச்சராச்சே. அப்ப அந்தப் பொண்ணுக்கு என்னைப் பிடிக்காதுல்ல?”

“ஹையோ! உங்களை... என்னவோ நம்ம பையனுக்கு அந்தப் பொண்ணை பெண்கேட்கப் போகிற மாதிரில்ல பில்டப் கொடுக்குறீங்க.”

“யாரு பொண்ணு? எங்க பொண்ணு? ஷப்பா! ஒருவழியா பார்த்தாச்சா? என்னைக்கு கல்யாணம்? முகூர்த்தநாள் எப்போ? எப்ப ஃபர்ஸ்ட் நைட்?” என ஆயிரம் கேள்விகளுடன் ஆலாய் பறந்து அட்டகாசமான புன்னகையுடன் வந்தான் கார்த்திகேயன்.

“அடப்பாவி! சி.என். ஏன்டா இந்த அலை அலையுற? இப்பத்தானடா இருபத்தாறு வயசாகுது. இன்னும் வயசிருக்கேடா? அதுவுமில்லாமல் வேலையில முதல் ப்ரமோஷனும் வந்திருக்கு. நீ இன்னும் முன்னேற வேண்டாமா?”

“என்னது முன்னேறணுமா? ஹலோ! நான் என்ன கடையா போட்டிருக்கேன். முன்னேறுனதுக்கு அப்புறம் மேரேஜ் பண்ணிக்கிறதுக்கு. போங்கப்பா எல்லா பேரண்ட்ஸூம், எப்படா பையனுக்கு கல்யாணம் பண்ணி, பேரப்பிள்ளைகளை பார்க்கலாம்னு எதிர்பார்ப்பாங்க. பையனுங்க முறுக்கிப்பாங்க. இங்க என்னடான்னா, நான் துடிக்கிறேன். நீங்க முறுக்கிக்கறீங்க. என்னவோ போங்க” என சடைத்து, “அதுசரி என்ன விஷயமா பொண்ணு பெயர் வந்தது?”

“இதோ இந்த கட்டுரைதான் காரணம்” என்று மகனிடம் தினமீன் பேப்பேரை நீட்டினார்.

“படிக்க டைம் இல்லம்மா. நான் இன்னொரு நாள் படிக்கிறேன்.”

“அதெல்லாம் முடியாது. நான் காஃபி தர்றேன். அதை குடிச்சி முடிக்கிறதுக்குள்ள படிச்சிரு.”

“ஓகே உங்களுக்காக” என்று படிக்க ஆரம்பித்தான். பின், அதிலுள்ள விஷயங்களை கண்கள் உள்வாங்கி மனதில் ஏற்ற, சுவாரஸ்யமாக படித்து முடித்து பெயர் பார்க்க, அதிலேயே பார்வை பதிந்தது. அவளின் எழுத்தைப்போல்.

“அவந்திகா” என்ற பெயரும் அவனைக் கவர, அருகிலிருந்த, ‘அழகப்பன் அப்பாவா? இல்லை கணவனா?’ என்ற எண்ணம் எழாமலில்லை. ‘யாரா இருந்தா உனக்கென்னடா’ என்ற மனசாட்சியிடம், ‘உனக்கு என்னடா இல்ல. எனக்கு என்னவளா மாத்திக்கலாம்ன்ற ஒரு ஆசையில்தான் மனமே’ என்றது அறிவு.

“மனசெல்லாம் மழையே! நனைகிறேன் உயிரே! என்னடா தம்பி டூயட்டா?” என்ற தகப்பனாரின் கிண்டலில்,

“நல்லா பண்ணிருக்காங்களேன்னு ரசிச்சா, அதுக்குப் பேரு டூயட்டா? அதுவும் கல்யாணமான பொண்ணாயிருந்தா? தப்புப்பா” என கன்னத்தில் போட்டபடி சொன்னான்.

“நம்பிட்டேன்டா” என நம்பாமல் சொல்லி, “முதல்ல அவந்திகான்ற பெயர்ல இருந்து கையை எடு. தேஞ்சிரப்போகுது” என்றார்.

“என்னது?” என சலிப்பாய் கேட்ட மகனிடம்,

“ம்... பேப்பரு” என்றார் நக்கலாய்.

“அரசியல்வாதில்ல, பேச்செல்லாம் அல்வா மாதிரிதான் இருக்கும்” என்றவன், “அப்பா இந்தப் பொண்ணு சொன்ன விஷயத்துல, முழுக்க முழுக்க உண்மை இருக்குதுப்பா. உங்களால இதை சரி பண்ண முடியும்னு சொல்லியிருக்காங்க. உங்க பதவிக்காலம் முடியுறதுக்குள்ள, இந்த பிரச்சனையை முடிந்தளவுக்கு, சால்வ் பண்ணுங்கப்பா” என்றான் அந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து.

“ம்... நானும் அதைத்தான் யோசிச்சிட்டிருந்தேன். இதுக்கு சீக்கிரமே ஒரு நல்ல முடிவெடுக்கிறேன். அவந்திகா சொன்னமாதிரி முழுசா திருத்த முடியுமா, தெரியல? இருந்தாலும், விவசாயத்துல விஷத்தைக் கலக்காதீங்கன்னு சொல்லி, ஒரு டீம் ஏற்பாடு செஞ்சி நிப்பாட்டப் பார்க்கிறேன். மீறி செய்தா விவசாய நிலங்களெல்லாம், கவர்ன்மெண்ட்கு போயிரும் சொன்னா அடங்கிருவாங்க.”

சொன்னதைச் செய்யவும் செய்தார் என்பது தனிக்கதை.

“அம்மா நீங்ககூட, உங்க மாவட்டத்துல இதை செயல்படுத்தலாமே?”

“செயல்படுத்தலாமே! முடிந்தளவிற்கு முயற்சி பண்றேன்டா.”

“சரி என்ன விஷயம்? இவ்வளவு சீக்கிரம் எங்க கிளம்பிட்ட?”

“அது டிபார்ட்மெண்ட் சம்பந்தப்பட்ட விஷயம், ஸோ... சீக்ரெட் மிஸ்டர்.சந்திரன். இது தெரியாம நீங்கள்லாம் ஒரு அமைச்சர். ஸோ ஸேட்” என்றான் உச்சிக்கொட்டியபடி.

“எல்லாம் நேரம்டா. உன்னை மாதிரி ப்ரொபஷனல் வேண்டாம்னுதான் சந்தோஷை என்லைன்ல படிக்க வைக்கிறேன்.”

“குட்” என பாராட்டியவன், “ஓகேப்பா டைமாகிருச்சி கிளம்பறேன். அம்மா கிளம்பறேன்” என்று சத்தமாக சொல்லியபடி வேகமாக வெளியேற,

“அதுக்குள்ள கிளம்பியாச்சாண்ணா?” கேள்வியோடு காலையிலேயே கோவிலுக்குச் சென்று, வீட்டினுள் நுழைந்த நித்யா விபூதியை நீட்ட, நெற்றியில் வைத்தபடி ஓடினான். சீக்கிரம் வந்திருங்க அண்ணா. இன்னைக்கு ஈவ்னிங் நானும் ஊருக்குப் போகணும்.”

“ஓகேம்மா. முடிஞ்சா சீக்கிரம் வர்றேன்.”

“டேய் சாப்பிட்டுப் போ?” என்ற புவனேஷ்வரியின் வார்த்தைகள் காற்றோடு சென்றது. “ஹ்ம்... இவனைத் திருத்தவே முடியாது” என தாயாய் திட்டவும் மறக்கவில்லை.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top