- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
17
நடப்புக்கு நடுவில்:
மூன்று வருடங்களுக்கு முன்:
தினமீன் பத்திரிக்கையின் முதல் பகுதியில் இருந்தது அந்தக் கட்டுரை. பச்சைப் பசேலென்ற நெல் விளையும் நிலமும், காய்ந்து பிளவு விட்டிருந்த விளைச்சல் இல்லாத நிலமும், உள்ள இரண்டு புகைப்படங்களுடன் இருந்தது அந்த கட்டுரை.
விவசாயத்தின் விபரீதங்கள்:
வருடம் மும்மாரி பொழிந்து, முப்போகம் நெல்விளையும் பூமி! இது பழமொழி. ஆனால், இன்று நாலுபோகம் விளைச்சல் நடக்கிறது. எப்படி? இதுதான் கேள்விக்குறியான ஒன்று. இது நல்லதற்கா? அல்லது கெட்டதற்கா? நிச்சயமாக கெட்டதற்கே” என்பது என்னுடைய அபிப்ராயம்.
ஒரு பக்கம் விளை நிலங்களை, துண்டு நிலங்களாக (ப்ளாட்) போட்டு இயற்கையை அழிக்கிறார்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இன்னொரு பக்கம் இயற்கையை மருந்துகளால்தான், பாதுகாக்க முடியுமென்ற எண்ணத்தில் செயற்கை உரங்களிட்டு, இயற்கையை வளர்க்கிறார்கள்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு! இதுவும் பழமொழி.
உணவும் விஷமாகிப் போனதேனோ! அரிசி நாம் உண்ணும் உணவின் ஆதாரம். முப்போக விளைச்சலில், தேவையான அளவு பூச்சி மருந்துகள் மட்டுமே தெளித்து அறுவடை செய்தார்கள். இன்றோ, நாலுபோக விளைச்சல் நடக்கிறது. முடியுமா? என்ற எண்ணத்தை மாற்றி முடியுமென்று நிரூபித்திருக்கிறார்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளை, அதன் அளவு தாண்டி அதிகமாக உபயோகித்து, சீக்கிரத்திலேயே அறுவடை செய்யப்படுகிறது. இதன்மூலம் நாம் உணவு என்னும் விஷத்தை சேர்த்தே உண்கிறோம். இதனால் நாற்பது வயதிற்குள், நாற்பது வகையான நோய்கள் வந்து மனிதனைத் தாக்குகிறது. என்ன நோய் என மருத்துவர்கள் அறியும் முன் உயிர்பலி அதிகரிக்கிறது. எதனால்? முதலாளிகள். ஆம். முதலாளிகள் மட்டுமே. இதில் அரசியலோ, சமூகமோ எப்படி பங்குவகிக்க முடியும்? அரசு அனைத்து பகுதிகளுக்கும் வந்து, நிதமும் பார்த்துக் கொண்டிருக்கவா முடியும்? முதலாளிகளின் பேராசை. இருக்கிற பணத்தை இன்னும் அதிகமாக்க வேண்டுமென்ற பேராசை. இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் குடும்பமும் தான் என்பது ஏன் தெரியவில்லை?
மழையில்லாமல் விவசாய தற்கொலை என்று ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம், மனிதர்களால் நிதமும் இயற்கைத் தற்கொலைகள் நடக்கிறதே! இதற்கு யார் பொறுப்பு? நன்றாக விளையக்கூடிய, தண்ணீர் வசதியுள்ள இடங்களில் இதே போன்ற அநியாயங்கள் நடக்கிறது. வருடங்கள் செல்லச்செல்ல, மருந்துகளின் மாயத்தால், இயற்கை உரங்களான மண்புழுக்கள் அழிந்து, வறண்ட பூமியே நமக்கு காட்சியளிக்கும். நாம் அதை ப்ளாட் போட தேவையில்லை. அந்த வேலையையும் மருந்துகளே கவனித்துக் கொள்ளும்.
விவசாயத்துறை அமைச்சர், இதற்கான நடவடிக்கைகள் எடுத்தாலும், எந்தளவு முன்னேற்றம் உண்டாகுமென்று தெரியாது. எல்லா மாநிலங்களிலும், மாவட்டங்களிலும், வட்டங்களிலும் மற்றும் கிராமம் கிராமமாக சென்று பார்க்க எந்த அமைச்சராலும் முடியாது. ஆனால், இதை இப்படியே விடவும் முடியாது. இதற்கென ஒரு குழு ஆரம்பித்து அரசு அதை சீர்படுத்த வேண்டுமென்பதே என் எண்ணம்.
விளை நிலங்களைத் துண்டு நிலமாக்குவதால், இயற்கைச் சீரழிவு நடக்கிறது. துண்டு நிலமாக்கப்படாத நிலங்களில், மனிதச் சீரழிவு நடக்கிறது. செயற்கையை மற! இயற்கையை நேசி! இனி மனிதனாய் யோசி!
நட்புடன்
அவந்திகா அழகப்பன்.
“எப்படி மாமா கட்டுரை?” என கேட்டபடி வந்த மருமகளிடம்,“
“முதல்ல ட்வென்டி பர்ஸ்ட் ஹேப்பி பர்த்டேமா. இப்பத்தான் கையில ஒப்படைச்ச மாதிரியிருக்கு. அப்படியே பதினெட்டு வருஷம் ஓடிருச்சி” என்றார் சுந்தரேசன்.
“மாமா பர்த்டேதான் வருஷா வருஷம் வருதே. நான் கேட்டதற்கு பதில்.”
“சூப்பர்! எப்பவும் போல கலக்கிட்டமா. போனமுறை குழந்தைகளைப் பற்றி எழுதி இருந்த. இப்ப இயற்கையா? ம்... உன்னோட இந்த கட்டுரைக்கு அப்புறம், நம்ம பத்திரிக்கை சேல் அதிகரிச்சிருக்கு என்பது என்னோட அபிப்ராயம். ஆனாலும், எப்படித்தான் யோசிக்கிறியோ போ. என் தங்கச்சிக்கு இப்படி ஒரு புத்திசாலிப் பொண்ணா? ஆச்சர்யமாகத்தான் இருக்கு” என்றார்.
“மாமா” என முறைத்தவளிடம்,
“சரி சரி என் மாப்பிள்ளையோட புத்திசாலித்தனமா இருக்கும்.” திரும்பவும் முறைத்தவளிடம், “சரி ஒத்துக்கறேன் உங்கம்மா ரொம்ப புத்திசாலி. ம்ம்.. உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு அவந்திமா. நீ என்னோட பொறுப்புல இருக்கிறதால, உன்னை எப்படி எந்த குறையுமில்லாம வளர்க்கப் போறேனோன்னு ஒரு கலக்கம் இருந்தது. ஆனா, நீ சுயம்பு மாதிரி, உன்னை நீயே வளர்த்துக்கிற. அதுவும் நல்ல வழியில். உன்னோட சிந்தனைகள், செயல்கள் எல்லாம் பார்த்தா, குறை சொல்ல முடியாத ஒரு பெர்சனாலிட்டி நீ. உன்னோட கார்டியனா ஒரு சின்ன அட்வைஸ்மா” என்றார்.
“என்ன மாமா? கார்டியன்னுலாம் சொல்லிட்டு இருக்கீங்க? நீங்க எனக்கு காட்பாதர் மாமா. அட்வைஸ் மழையே பொழிஞ்சாலும், அசராமல் அசால்ட்டா கேட்கிற பொறுமையும், பக்குவமும் எனக்கிருக்கு. ம்... சொல்லுங்க கேட்போம். ஒருத்தி பொறுமையா கேட்கிறான்றதுக்காக ஓவரா ப்ளேடு போட்டுராதீங்க, ப்ளீஸ்” என குறும்பாக கலாய்த்தாள்.
சின்ன சிரிப்புடன் மருமகளின் பேச்சை ரசித்து, பின், “நீ ரொம்ப ரிஸ்க் எடுக்கிறியோனு தோணுதும்மா. அதனால, உன்னோட உயிருக்கு எந்த ஆபத்தும் வந்திரக்கூடாதுன்னும் பயமாயிருக்கு. உன்னோட முன்னேற்றத்துல எப்படி அக்கறை இருக்கோ, அதே அளவு உயிர் பயமும் இருக்கு. எப்பவும் ஜாக்கிரதையா இரும்மா. ஜர்னலிஸ்ட்னாலே நிறைய ரிஸ்க் இருக்கு. இந்த வேலை செய்ய நிறைய மனதிடம் உள்ளவங்களால மட்டும்தான் முடியும். இதுவரை உன்னோட போட்டோ எதுவும் பப்ளிக்ல பப்ளிஷாகல. அதனால, தொல்லைகளும் கம்மியா இருக்கு. பார்த்து முடிந்தளவுக்கு எதுலயும் இன்வால்வ் ஆகாம பார்த்துக்கோ” என்று தன் பயத்தை வெளியிட்டார்.
“மாமா... மாமா அவசியமில்லாத, அர்த்தமில்லாத, இவ்வளவு பயம் எதுக்கு உங்களுக்கு? எனக்கு ஒண்ணும் ஆகாது. பயப்படாம இருங்க. நான் ரொம்ப ஸ்ட்ராங்க் கேர்ள்” என கைதூக்கிக் காண்பித்தாள்.
“ஜர்னலிஸ்ட்கு வாய் பேச்சுக்கு சொல்லியா கொடுக்கணும். பேசாம உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிரவா?” என தீவிர முகபாவத்துடன் கேட்டார்.
“பேசாம எப்படி மாமா கல்யாணம் பண்ணுவாங்க? ரெண்டு வீட்டுலயும் சேர்ந்து பேசினால்தான, கல்யாணம் நடக்கும்?” என தன் பெரிய சந்தேகத்தைக் கேட்டு, “அதுவுமில்லாம, எனக்கு இப்பக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்ல மாமா. கீழ இருக்கிற தினமீனை விண்மீனாக்கணும்” என்று வானத்தை நோக்கி கை காண்பித்தாள்.
“நீ இப்பவும் அந்த விண்மீன் தான்மா. என்ன ஒருசிலர் உன் அருமை தெரியாம, ஒருசிலர் என்ன, என் பொண்டாட்டியும், பையனும்தான் உன்னை கீழ போட்டு மிதிக்கிறாங்க.”
“அவன் நல்லவன்தான் மாமா.”
“யாரு அவனா? அட போமா. அநேகமா உன்னோட கட்டுரையில், அவன் கண்டிப்பா இடம் பிடிப்பான்னு நினைக்கிறேன். என்ன, அது நல்லதா இருக்காதுன்னு மட்டும் தெரியுது” என்றார் மகனைத் தெரிந்தவராய்.
“அவனைப்பற்றி அந்தளவுக்கு நான் யோசிக்கல. அப்புறம் மாமா கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட்ல ஒரு பெரிய குற்றவாளியைப் பிடிக்கப்போறாங்கன்னு நியூஸ் வந்திருக்கு. டீமா போக முடியாது. முதல்ல விஷ்ணுவை அனுப்பிட்டேன். இனிமேல்தான் நான் போகப்போறேன்.”
“அதுக்கெல்லாம் நீ வேண்டாம்மா. வேற யாரையாவது அனுப்பலாம். பெரிய பெரிய ஆஃபீஸர்ஸ் சம்பந்தப்படுவாங்க. ஷுட்டிங் கூட நடக்க சான்ஸ் இருக்கு. அதனால, ரிஸ்க் எடுக்கவேண்டாம். எப்படியும் நமக்கு நியூஸ் வந்திரும். பத்திரிக்கை சர்குலேஷன் இப்பவும் நல்லாத்தானிருக்கு. உன் உயிரைப் பணயம் வைக்கிற மாதிரியான, ஒரு நியூஸ் கலெக்ட் பண்ணத் தேவையில்லை” என்றார்.
“மாமா இப்பத்தான சொன்னேன், அர்த்தமில்லாம பயப்படாதீங்கன்னு. இந்தப் போட்டி நிறைஞ்ச உலகத்துல, நம்ம தினமீனை எப்ப எல்லாரும அண்ணாந்து பார்க்கிற விண்மீனா மாத்துறது? டோண்ட் ஒர்ரி மாமா, நான் ஒண்ணும் அவங்க எதிர்ல நின்னு இந்தா என்னைச் சுடுன்னு சொல்லப்போறதில்ல.”
“இல்லமா அது...”
“நோ எக்ஸ்க்யூஸ் மாமா. நான் கிளம்பறேன் அவ்வளவுதான்” என்று முடித்தாள்.
“ஓகேமா. சீக்கிரம் வந்திரு. நானும் ஆஃபீஸ்லயிருந்து சீக்கிரம் வர்றேன்.”
‘ஏன்?’ என கேள்வியாய் பார்த்தவளிடம், “எப்படியும் கேக் வெட்ட சம்மதிக்க மாட்ட. அட்லீஸ்ட் கோவிலுக்காவது போயிட்டு வரலாம்மா.”
“ம்... ஓகே நான் சீக்கிரம் வர முயற்சிக்கிறேன்” என்றாள்.
இப்பொழுது சுந்தரேசன் கேள்வியாய் பார்க்க, “சரி வர்றேன்” என்று கிளம்பினாள்.