- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
17
மறுநாள் காலையிலேயே கல்லூரியைக் கட்டடித்து அக்காவைத் தேடி வந்த கிருபா குனிந்து வேலை செய்து கொண்டிருந்தவளை பார்த்து, “ஹாய் அக்கா! எப்படியிருக்கீங்க?” என்றான் சிரித்தபடி.
‘அக்காவா? யார்ரா அது? நம்ம பயலுங்க அவ்வளவு சீக்கிரத்துல அக்கான்னு யாரையும் கூப்பிட மாட்டானுங்களே’ என்றெண்ணியபடி நிமிர்ந்து பார்க்க, அரும்பு மீசையில் சிரித்த முகமாய் நின்றிருந்தவன் கண்ணில்பட, “யார்பா நீ?” என்றாள் யோசனையுடன்.
“என்னக்கா நீங்க. நான் கிருபா நீங்க கிரின்னு கூப்பிடுங்க” என... ‘கிரி’ என்ற பெயரைக் கேட்டதும் கண்ணில் ஒரு பாசத்துடன் இருக்கையை விட்டு எழுந்தவள், “உனக்கு என்ன வேணும்? அக்கௌண்ட் ஓபன் பண்ணனுமா?” என்றாள் அன்பாக.
“அதெல்லாம் அப்பா பண்ணிட்டாங்கக்கா. நான் அமௌண்ட் போட வந்தேன்” என்று நூறு ரூபாயைக் கொடுத்து சலானுடன் புக்கையும் கொடுத்தான். அக்காவின் வித்தியாசமான பார்வையை உணர்ந்து, “என்னடா நூறு ரூபாய்னு பார்க்கறீங்களா? அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். எதாவது அர்ஜெண்ட்கு தேவைப்படும்னு கொடுப்பாங்க. நான்தான் கையிலிருந்தா செலவாகிரும்னு சேமிக்க வந்துட்டேன்” என்றான் பவ்யமாக.
“ம்... நல்ல பாலிசி தான்” என்று வங்கிப் புத்தகத்தில் அப்பா பெயர் சிவராமனையும், இவனையும் பார்த்தவள், ஹரிப்ரியா என்ற பெயரை அதனுடன் சம்பந்தப்படுத்த மறந்து, வேலையை முடித்துக் கொடுத்து அனுப்பினாள்.
தினமும் இதுவே தொடர்கதையாக, கிரியின் மேல் வந்த அன்பை தடுக்கவில்லை ராசி. நல்ல குணம். பொறுப்பான பையன் என்பதையும் தாண்டி ஒரு ஈர்ப்பு அது உடன்பிறப்பால் வந்ததை ராசி அறியவில்லை.
அதே போல் சிவராமனும் பையன் பெயருக்கு பணம் போடுவதாக சொல்லி, சொந்த மகளை சொந்தமாக்க முடியாமல் மூன்றாம் மனிதராய் பார்த்துச் செல்வார்.
இடையில் ஒருமுறை ராசியிடம் அவளின் அப்பா பற்றிய பேச்செடுக்க... “அப்பா பற்றி பேசுனீங்கன்னா உங்களை அத்து விட்டிருவேன்” என அத்துடன் வாய்மூடிக் கொண்டான் சரத்.
அந்த வாரம் இறுதியில் வேலை முடித்து விமானத்தில் மதுரை வந்து மஞ்சுவின் வீட்டைத் தட்டினான் சரத். முதலில் மணியை அனுப்புவதாக இருந்தவன் தனக்கும் ராசிக்கும் இடையில் யாரும் வேண்டாமென்று முடிவெடுத்து அதை செயல்படுத்தவும் செய்தான்.
கதவைத் திறந்த மஞ்சு முதலில் விழித்தாலும், பின் “வாங்க” என்று வரவேற்று, “என்ன திடீர்னு? வீட்டு விஷயமா அனுப்பினாங்களா?” என்றாள்.
“இல்லங்க அண்ணி. உங்ககிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும். நான் வந்தது அவங்களுக்குத் தெரியாது.”
‘அண்ணி’ என்ற அழைப்பிலேயே அமிழ்ந்தவள், அவனை அங்கிருந்த ஷோஃபாவில் அமரவைத்து, “என்னை என்ன சொல்லி கூப்பிட்டீங்க?”
“அண்ணின்னு சொன்னேன். ஏன் தெளிவா சொல்லணுமா? ராசியோட பாட்டிக்கு நீங்க மருமகள்னா, ராசியோட மாமாவுக்குக்கு நீங்க முறைப்பொண்ணுன்னா, ராசிக்கு நீங்க சித்தின்னா எனக்கு அண்ணிதான?”
“ஷப்பா! உண்மையை சொல்லட்டுமா. எனக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு சுத்தமா புரியல. இதுல நான் உங்களுக்கு எப்படி அண்ணியாவேன்?”
“சரி இப்படி சொன்னா புரியுதா பாருங்க. ராசியை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, லோஜினி அம்மாவுக்கு பையன் முறையாகி, உங்களுக்கு முறைப்பையன் முறையாகிருவேன்ல” என்றான் தெளிவாய்.
அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை உணர்ந்தவள், “நிஜமாவா! நீங்க பொய் சொல்லலையே?”
“ஏங்க.. பொண்ணு விஷயத்துல பொய் சொல்ற அளவுக்கு மோசமா வளரலங்க” என்று ரோஷமாக சொன்னவன். என்னை உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளையாக்குறீங்களா?” என கேட்டான்.
“உங்களைவிட ஒரு பெஸ்ட் மாப்பிள்ளை எங்க பொண்ணுக்கு கிடைக்காது. அதே போல எங்க பொண்ணு மாதிரி உங்களுக்கும் கிடைக்கவே கிடைக்காது” என தீர்க்கமாக சொல்லியவள், “ஆனா, அத்தை என்கிட்ட சொல்லவே இல்லையே?”
“இன்னும் நான் அவங்ககிட்ட கேட்கவேயில்லயே அண்ணி. அவங்கன்னு இல்லை இன்னும் யார்கிட்டேயும் சொன்னதில்ல. உங்ககிட்ட பேசிட்டு ஒரு சின்ன விஷயம் கலக்ட் பண்ணிட்டு, அதைப் பொருத்து ப்ரொபோஸ் பண்ணலாம்னு நினைக்கிறேன். நான் இங்க வந்ததே, ராசியோட மாமா எப்ப எப்படி இறந்தாங்கன்றதை தெரிஞ்சிக்கத்தான்.”
“ரொம்ப சந்தோஷம் தம்பி. புருஷன்னு சொல்லாம மாமான்னு சொன்னதுக்கு.” பத்து வருடத்திற்கு முன்னர் கிரியின் திருமண பேச்சை ஆரம்பித்ததிலிருந்து, திருமணத்திற்குப் பின் அவர்களது மனநிலை சொல்லி முடித்து, “ராசாத்தி இந்த வீட்டுக்கு வந்த ஒரு வாரத்துக்குள்ள அவளுக்காக வீடு காலி பண்ணி சென்னைக்கு குடியேற நினைச்சாங்க. அங்க வீடு வாங்கி பத்திரம் முடிக்க போன அத்தான் திரும்பி வரும்போது, டோல்கேட் ஒண்ணுல ஒரு பொண்ணை காப்பாத்தப் போனதுல அந்தப் பொண்ணோட சேர்த்து இவங்களையும் குத்திட்டாங்க.”
மஞ்சு சொல்லும்போதே உண்மை தெரிந்தவன் சொல்லி முடித்ததும், “அண்ணி அவர் பெயர் கிரிதரனா?” என்றான் வேகமாக.
“ஆமா, உங்களுக்கெப்படி?” என்றாள் யோசனையாய்.
“அ..அந்தப்பொண்ணு என்னோட அக்கா பொண்ணுதான்” என்றான் உணர்ச்சி மேலீட்டால்.
“இந்த திருப்பத்தை நான் எதிர்பார்க்கல” என்று மஞ்சு சொல்ல... “நானும்தான்” என்றான் சரத்.
“இப்பவும் உங்க முடிவு மாறலையே?” என்றாள் எதுவும் மாறிவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தில்.
“இல்ல அண்ணி. இப்பத்தான் ஸ்ட்ராங்காயிருக்கு ராசியை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும்னு. நான் கிளம்பறேன்” என்றவனை சாப்பிட வைத்து அனுப்பினாள் மஞ்சு.
காலை ஆறு மணிக்கெல்லாம் ராசியின் வீட்டு அலாரம் அடிக்க அதற்காகவே காத்திருந்தாற்போல் கதவைத் திறந்து, “ஹாய்” என்று சொல்லி திருதிருவென விழித்தாள் வெளியே நின்றிருந்தவனைப் பார்த்து. “சாரி நான் தீபான்னு...”
விழித்தவளின் விழியழகில் விரும்பியே விழுந்தவன், “ஏன் எனக்கு ஹாய் சொல்லமாட்டியா?” என்றான் அவளின் கண்களைக் கண்டு.
‘ம்..ம்கூம்.. ம்..’ என அங்குமிங்கும், மேலும் கீழும் தலையாட்டி, “சொ..சொல்லலாமே! தப்பில்லையே! ஹாய் உள்ள வாங்க” என்றாள் அசடுவழிய.
அவளின் அசட்டுத்தனத்தை ரசித்து சிரித்தபடி உள்ளே செல்ல, தன் தலையிலேயே மெல்ல தட்டி, “லூசு மாதிரி உளறுற ராசி” என்றாள். “தலையில தட்டாத ராசி. தலை வலிக்கும்” என்றான் அவளைப் பார்க்காமலேயே.
சட்டென்று திரும்பி அவனைப் பார்க்க, அவனோ அடுப்படி நோக்கி சென்று கொண்டிருக்க... ‘இவங்க என்னைப் பார்த்தாங்களா? பார்க்கலையா?’ என்றபடி சரத்தைக் கண்டாள்.
“என்னைப் பார்க்கிறதை விட்டுட்டு வந்தவங்களை கூப்பிடு. போ” என்றவன், “லோஜிமா எங்கயிருக்கீங்க?” என உள்ளே சென்றான்.
அவனையே பார்த்திருந்தவள் உதட்டைப் பிதுக்கி மெச்சுதலாய் தலையாட்ட, தீபா வரவும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள்.
அதற்குள் சரத் வெளியே சென்று பயணப்பையை ஓட்டுனரின் உதவியுடன் உள்ளே வைத்து கால்டேக்ஸியை அனுப்பி உள்ளே வந்தான். வந்தவர்களை பல் தேய்க்கச்சொல்லி காஃபி கொடுத்து சற்றுநேரம் ஓய்வெடுக்க அனுப்பிய லோஜியிடம்...
“அம்மாஆச்சி இப்ப தீபாவை தூங்கவிட்டீங்கன்னா சாயங்காலம் தான் முழிச்சிப்பாங்க. ஏன்னா அவங்க கும்பகர்ணின்னு அவங்களே சொல்லியிருக்காங்க” என்றாள்.
“ச்சோ.. அப்படில்லாம் இல்ல பாட்டி. சும்மா அவளை கலாட்டா பண்ண சொன்னேன். ப்ரியா இரு உன்னை தனியா கவனிச்சிக்கறேன்” என்று ராசியை மிரட்டினாள்.
அவளோ தோள்குலுக்கி “நல்லா கவனிச்சிக்கோங்க. யார் வேண்டாம்னு சொன்னது” என்றாள் அசால்டாக.
“சரிமா நைட் ட்ராவல் பண்ணிருக்கீங்க. போய்ப்படுங்க. ஒன்பது மணிக்கெல்லாம் சாப்பிட எழுப்பறேன்” என்ற லோஜி வேலைக்கு வந்த பெண்ணிடம் இரண்டு நாளைக்கு அதிகப்படி வேலையிருக்குமென்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.
கிளம்ப எழுந்த சரத்திடம் வந்த ராசி ஒரு பாக்ஸை நீட்டி, “ஸ்வீட் எடுத்துக்கோங்க” என்றாள்.
“என்ன ராசி காலையிலேயே ஸ்வீட்?”
“அவளுக்கு மேனேஜரா ப்ரமோஷன் கிடைச்சிருக்குபா. இதுக்காகவே எக்ஸாம்கு விழுந்து விழுந்து படிச்சான்னா பாரேன்” என்றார் பெருமையாக.
‘இவ்வளவு சின்ன வயசுல மேனேஜர் போஸ்டிங்.’ ராசியை எண்ணுகையில் பெருமையாக இருந்தாலும் அவளை கலாட்டா பண்ண எண்ணி, “லோஜிம்மா விழுந்ததுல அடி எதுவும் படலையே” என்ற சரத்திற்கு செல்லமாக ஒரு அடி போட்டு,” உனக்கும் எங்க பாப்பா மாதிரி வாய் கொஞ்சம் ஜாஸ்திதான்” என்றபடி உள்ளே சென்றார் லோஜி.
“ஹேய்! க்ரேட் நியூஸ். கங்க்ராட்ஸ் ராசி” என்று கைநீட்ட... நீட்டிய கையை பற்றிக்குலுக்கி “தேங்க்யூ சரத்” என்றவள் கையை விட மனமில்லாதவன், “முன்னாடியே ஏன் சொல்லலை? எப்ப ஜாய்ண்ட் பண்ணப்போற? போஸ்டிங் எங்க?” என்றான் விடாமல்.
“அது இன்னும் ஒன் வீக்ல ஜாய்ண்ட் பண்ணனும். எங்க ப்ராஞ்ச்லயே கிடைச்சா நல்லாயிருக்கும்னு கேட்டிருந்தேன். எங்க மேனேஜருக்கு ஹார்ட் ப்ராப்ளம் இருந்ததால, விஆர்எஸ் வாங்கிட்டார். அதனால இங்கேயே போஸ்டிங் போட்டுட்டாங்க. இந்த மன்த் என்டிங்ல ஆடிட்டிங் வேற வருது. ஸோ, கொஞ்சம் டென்சனும் இருக்கு.”
“பயம் எதுக்கு ராசி. எதாவது தவறு பண்ணிருவோம்னா. ஏற்கனவே கணக்கெல்லாம் பினிஷிங் டைம்ல இருக்கும். நீ தைரியமாயிரு. இன்னைக்கு ஆஃபீஸ் போகணுமா ராசி?”
“இல்லங்க. இன்னைக்கு செகன்ட் சாடர்டே. ரெண்டு நாள் தீபாவோட சேர்ந்து சென்னையை சுத்தப்போறேன். நீங்க வர்றீங்க தான?” என்றவளுக்குள் சின்ன எதிர்பார்ப்பு இருந்தது.
அவளின் எதிர்பார்ப்பை மறுத்து, “இல்லமா எனக்கு வேலையிருக்கு. உனக்கு தெரியும்தான நேத்து வேளச்சேரி ஏரியாவுல ஒரு குழந்தை காணோம்னு நியூஸ் வந்திச்சே?”
“ம்.. பார்த்தேன்” என்றவளிடம், “அந்த குழந்தை காணாமல் போனது ஃபேக் நியூஸா, இல்ல உண்மையான்னு விசாரிக்கச் சொல்லியிருந்தேன். உண்மைதானாம். அதனால எங்க சார்புலயும் ஒரு தேடுதல் வேட்டை. போலீஸ்கும் ஹெல்பாயிருக்கும். அதே சமயம் பெண்குழந்தை வேற பெத்தவங்களுக்கு எவ்வளவு கஷ்டம்ல. நான் கிளம்புறேன் ராசி” என்று அதுவரை பிடித்திருந்த கையை விடுவிக்க மனமில்லாமல், அவளது மனதையும் கிளறிவிட்டுச் சென்றான் இனிமையாக.
‘ஷப்பா... என்ன ஆளுடா மாமா நீ!’ என மனம் கௌண்ட் கொடுக்க... அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் வாழ்த்துரைக்க அதை ஏற்று நன்றி சொல்லி சிரித்தபடியே சென்றாள்.