• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
17



தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் பூரணி. எழுந்தால் ஜனனியின் தூக்கம் கலைந்துவிடும் என்ற காரணத்தினால் எழுந்து உட்கார முடியாமல் இருந்தாள்.

மனதெல்லாம் ஒரே குடைச்சல். ஆம் குடைச்சல்தான். முன்தினம் வசீகரன் வந்ததிலிருந்து தெரியாத ஏதோவொன்று அவன் சென்றதும் வண்டாய்க் குடைகிறது. மருந்து சாப்பிடுவதால் வந்த மாற்றமென்று நினைத்தாலும், ஏதோவொரு வித்தியாசத்தை அவனிடம் உணர்கிறது உடலும் உயிரும். அதுவும் செல்லும்போது அவன் கொடுத்த அணைப்பும் முத்தமும் மொத்தமாக ஏனோ மிகவும் இம்சித்தது.

கணவனின் அந்தப் புன்னகை தாண்டி பார்வையில் ஏதோவொன்று... ‘சரியாகிருச்சா?’ என்ற மூளையின் கேள்வியில் திடுக்கிட்டது உடல். ‘இல்ல இருக்காது. அப்படியிருந்தா இங்க வர வாய்ப்பில்லையே! ரிலாக்ஸ் ரிலாக்ஸ்.’ தனக்குத்தானே மனதைக் கட்டுப்படுத்தி உறங்கவே நேரமாகியது.

“பூரணி ஹாஸ்பிடல் போகணும் வர்றியா?” என்றழைத்தாள் ஜனனி.

“நானா? நான் மெடிக்கல் போகணுமே. இரண்டு நாளாகிருச்சி. ஏன் உன் ஹஸ்பண்ட் வரலையா?” என கேட்க,

“அவங்களுக்கு வேலை இருக்காம் பூரணி. அப்பாவை கூட்டிட்டு வரச்சொன்னாங்க. அப்பா கோழிப்பண்ணை போயிருக்காங்கன்னு அசால்டாயிருந்தேன். கோழிக்குத் திவனம் போட்டுட்டு பக்கத்து ஊருக்கு அவசரமா போயிட்டாராம். அதான் உன்னைக் கூப்படுறேன்” என்றாள்.

“ஓ.. அப்ப எங்க ஹாஸ்பிடல் வாயேன்கா. டாக்டர்கிட்ட நானே பேசுறேன்” என்க,

“இல்ல பூரணி. இந்த மன்த் ஸ்கேன் இருக்கு சொன்னாங்க. மாறி மாறிப் பார்த்தா சரியாயிருக்காது. என்னோட மெடிக்கல் ஃபைலும் அங்க வீட்டிலிருக்கு.”

“அப்புறம் ஏன் நேத்து வந்த? இன்னைக்கு ஹாஸ்பிடல் போயிட்டு நிதானமா வந்திருக்கலாம்ல. அங்க நான் எப்படிக்கா? யாரையாவது பார்த்துட்டா...” என்றாள் தவிப்புடன்.

“ஹாஸ்பிடல் போகணும்ன்றதை மறந்துட்டேன் பூரணி. உனக்கு மாப்பிள்ளை பற்றிச் சொல்லணும்ன்ற அவசரம்னும் சொல்லலாம்” என்றாள் வேகமாக.

தங்கையவளோ அவளை முறைஒக்க, “சரி இனி அந்த அனர்த்தத்தைச் செய்யமாட்டேன். திருச்சி ஒண்ணு கிராமம் கிடையாது. நீ வந்ததும் வந்துட்டன்னு ஊரே தெரிஞ்சிக்க. அவ்வளவு பெரிய ஊருல அப்படிலாம் பார்த்திர முடியாது. பயப்படாம வா. ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததும் பஸ் ஏற்றிவிடச் சொல்றேன்” எனவும் அரை மனதாக சம்மதித்துக் கிளம்பிவிட்டாள்.

மருத்துவ அறிக்கைக்காகக் காத்திருக்கையில், “திருச்சி டூ பொன்நகர் இருபது கிலோமீட்டர் வித்தியாசத்துல இருக்கு. எப்படி ஜனனி திருச்சியிலிருந்து நம்ம வீட்டுக்கு நினைச்சதுமே கிளம்பி வந்திடுற?” என்றாள்.

“இரண்டு பேரும் பேசிட்டே பைக்ல வர்றதால தூரம் தெரியலை. அடிக்கடி வர்றதால பழகிருச்சி பூரணி.”

“ஓ.. உங்க பைக் ரைட் ரொமான்ஸ்குதான் அடிக்கடி வீட்டுக்கு வர்றியா? நான் என்னவோ பாசத்துலன்னு நினைச்சேன்” என்று ஜனனியின் கால்வார,

“பூரணி! அப்படிலாம் இல்லை” என்றவளுக்கு தங்கை உண்மையைக் கண்டுபிடித்ததில் வெட்கம் வந்தது.

“ஹேய் அப்படித்தான்னு முகம் சொல்லுது. ஆனாலும், இந்த நிலையிலும் இது கொஞ்சம் ஓவர்தான்” என்றாள் அவளின் எட்டுமாத வயிறைக் காண்பித்து.

“எந்த நிலையா இருந்தா என்ன? கூட்டுக்குடும்பத்துல இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி சில சந்தர்ப்பங்கள்தான் மனசுவிட்டுப் பேச கிடைக்கும். அதை நான் அம்மா வீட்டை காரணம் காண்பிச்சி எடுத்துக்குறேன்.”

“பார்றா! அவ்வளவு பொறுப்பா நீ?” என்றாள் ஆச்சர்யமாக. ஆச்சர்யம்தான் பூரணிக்கு. வீட்டிற்கு வந்தால் அதிகாரம் செய்து ஆட்டிப்படைக்கும் ஜனனியா இது என்றிருந்தது.

“முதல்ல நம்ம வீடு மாதிரி அசால்டாதான் இருந்தேன். என் மாமியார் அப்படி இருக்கவிடலை. லவ் மேரேஜ்தான அதனால்தான் இப்படியிருக்கா உங்க மருமகள்னு சொல்லி மத்தவங்க உன்னைத் தப்பா பேசிரக்கூடாது. அதுக்கான பொறுப்போட இருக்கணும்னு அட்வைஸ் பண்ணி வீட்டு நடவடிக்கையை அப்பப்ப சொல்லிட்டேயிருப்பாங்க. முதல்ல எரிச்சலாதான் வந்தது. நம்ம வீட்டுல நாமே ராணின்னு இருந்துட்டோமா, அவங்க என்னை கண்ட்ரோல் பண்றது பிடிக்கலை. தனியா போயிரலாம்ன்ற எண்ணம் வந்ததை அவர்கிட்ட சொன்னேன்.”

“ஜெஃப்ரின்தான், நம்ம இரண்டு பேர் தனியா நின்னா எந்த மதிப்புமிருக்காது. நான் வேலை பார்க்கிறது தனியார்ல ஜனனி. திடீர்னு வேலை போயிட்டா குடும்பத்தோட இருந்தா அவங்க நம்மளைத் தாங்கிப் பிடிப்பாங்க. கொரோனா டைம்ல எத்தனை பேருக்கு வேலை போயிருக்குன்னு உனக்குத் தெரியும்தான? அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் எங்க வீட்டுக்குப் போனா, சேர்த்துக்கிட்டாலும் நம்மளை மனுஷனா கூட மதிக்கமாட்டாங்க.”

“அம்மா அப்படியில்லைதான். அக்கா குடும்பம், அண்ணன் குடும்பம்னு ஒரு பெரிய லிஸ்ட் இருக்கே. அட்ஜஸ்ட் பண்ணி நல்ல பெயர் எடுக்கப்பாரு. நான் எப்பவும் உன்னை விட்டுரமாட்டேன். உனக்கொரு பிரச்சனைன்னா கண்டிப்பா கேட்பேன். ஆனா, உன்னால ஒரு பிரச்சனைன்னு வந்திரக்கூடாது. நல்ல மருமகள்ன்ற பெயர் எடுன்னு அமைதியா நடைமுறையை விளக்கினார்.”

“முதல்ல கஷ்டமாதான் இருந்தது. இப்ப பெருசா தெரியுறதில்லை. உனக்கொண்ணு தெரியுமா? ஜெஃப்ரின் அம்மாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். எங்கேயும் விட்டுக்கொடுத்துப் பேசமாட்டாங்க. சின்ன மருமகள் அப்படி இப்படின்றப்ப நமக்குமே பெருமையாதான் இருக்கு” என்றாள் புன்னகையுடன்.

“அப்ப உன் ஆட்டமெல்லாம் நம்ம வீட்டுலதான்னு சொல்லு?”

“அதென்னவோ தெரியலை. அங்க வந்துட்டா ஆட்டோமேடிக்கா பிறவி குணம் வந்திருது. நான் என்ன செய்யட்டும்?” என்றாள் அப்பாவியாய்.

“ஆத்தாடி! ஜனனி உனக்குள்ள இப்படியொரு அம்பி இருக்கிறது தெரியாமல் போச்சே” என்றதும் சகோதரிகள் இருவரும் சிரிக்க நர்ஸ் வந்து, “மிஸஸ்.ஜனனி ஜெஃப்ரின் உங்க ரிப்போர்ட் வந்திருச்சி. ரிப்போர்ட் வாங்கிட்டு டாக்டரைப் பாருங்க” என்றுவிட்டு சென்றார்.

“ஜாஸ்மின் பெயர் போடாம ஜனனி போட்டிருக்க? உன் ஹஸ்பண்ட் வீட்டுல எப்படி ஒத்துக்கிட்டாங்க?” ஆச்சர்யத்துடன் தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

“காதல் வேகத்துல எல்லாமே நடந்தது. குழந்தைன்னு வரும்போது என்னோட சொந்தப் பெயரை விட்டுக்கொடுக்கத் தோணலை. ஜெஃப்ரின்கிட்டயும் சொல்லிட்டேன்.”

“நீ இந்துப் பொண்ணுன்னு எனக்குத் தெரியும். தெரிந்தேதான் காதலித்ததே! பெயர் மாத்துறது கூட எங்க வீட்டுல சொன்னதுதான். எனக்கு அதில் விருப்பமில்லை. நீ சம்மதிச்சதால நான் மறுக்கலை. மத்தபடி நீ எப்பவும் எனக்கு ஜனனிதான்.”

கணவன் சொன்னதைப் பெருமையுடன் தங்கையிடம் சொல்லி, “நான்தான் கொஞ்சம் இல்லை ரொம்பவே ஆடிட்டேன். இப்ப சரின்ற மாதிரி தோணுற என் கேரக்டர் எப்ப வேணும்னா பழையபடி மாறலாம். முடிந்தவரை இப்படியே இருக்க முயற்சிக்கிறேன். பாhக்கலாம் என்னோட செல்ஃப் கண்ட்ரோல் எதுவரைன்னு. சரி பூரணி. போய் ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு வந்து டாக்டர் பார்க்கலாம். அதுவரை இங்கேயே இரு” என்று நகர, அருகில் நின்றிருந்த கர்ப்பிணிப் பெண்ணை தன்னிடத்தில் உட்காரவைத்து எழுகையில் சிறுவன் ஒருவன் மோதிவிட, பூரணி மன்னிப்பு கேட்குமுன், “சாரி ஆன்ட்டி தெரியாம மோதிட்டேன்” என்றானவன்.

“இட்ஸ் ஓகே” என்று அவனை நோக்கியவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, “கிருஷ்” என்றாள்.

“நீங்க...” சில நொடி யோசனையில், “பூரணி சித்தி நீங்களா? எப்படியிருக்கிங்க?” என்றான் முகம் முழுக்கப் புன்னகையுடன்.

“நலம் விசாரிக்கிற அளவு வளர்ந்துட்டீங்களா குட்டி சார்? என்னை அடையாளம் தெரியுதா?” என்று அவன் தலைவருட,

“சித்தி செவன் இயர்ஸ் ஓல்ட் பாய் நான். எனக்கு எல்லாமே தெரியும். நீங்க எப்படியிருக்கீங்க?” என்றான் ஆர்வம் குறையாது.

“நல்லாயிருக்கேன்டா. நீ எப்படியிருக்க? இங்க யார்கூட வந்த? யாருக்கு என்ன?” என்றவள் குரலில் ஒருவித பதற்றம்.

“நான் நல்லாயிருக்கேன் சித்தி. அம்மாவுக்கு நெக்ஸ்ட் பேபி வரப்போகுதாம். அப்பா அவசரமா ஊருக்குப் போயிருக்கிறதால சித்தப்பா கூட்டிட்டு வந்தாங்க” என்றான்.

அவன் பேசிய எதுவும் கேட்கவில்லை அவளுக்கு. கேட்டதென்னவோ அவளின் வசீகரனின் கோபக்குரலிலுள்ள கம்பீரத்தையும் அக்கறையையும் மட்டுமே! ‘இவன் இவ்வளவு பேசுவானா? அவன் வார்த்தைக்காகக் காத்திருந்த காலங்கள் எத்தனையெத்தனை!’ கேட்க ஆசைப்பட்ட வார்த்தைகள் இடம் மாறி, தடம் மாறி அவளைப் புயலாக்கியது. அவன் மேல் வந்த கோபத்தில் நவரசங்களும் பரிபூரணியின் முகமானதோ!

கிருஷிடம் பேசினாலும் பூரணியின் பார்வை ஐஸ்வர்யாவைத் தேட, மருத்துவரின் அறையிலிருந்து வந்தவனைப் பார்த்த சந்தோஷத்தில் கிருஷ் சொன்ன ‘சித்தப்பா கூட்டிட்டு வந்தாங்க’ மூளையில் பதியாமல் கணவனை அழைக்கப்போக, “ஏன் அண்ணி இத்தனை நாள் சொல்லலை? டாக்டர் எவ்வளவு திட்டுறாங்க. அப்படியென்ன அஜாக்கிரதைத்தனம் உங்களுக்கு? இந்த அண்ணன் வரட்டும். என்ன பார்த்துக்குறான் உங்களை? மற்ற நேரம்லாம் கோழி அடைகாத்த மாதிரி அடைகாக்கத் தெரியுது. தேவையான நேரம் கவனிக்க ஆளில்லை” என்று கோபத்தில் கத்திக்கொண்டு வந்தான்.

“வசீ போதும். எனக்கேத் தெரியலை. ஒரு சந்தேகத்துலதான் வந்தேன்னு சொன்...” சொன்னேன்ல என்று கூறுவதற்கு முன் ஐஸ்வர்யாவின் குரல் நின்றது.

அது தெரியாது, “இப்ப மட்டும் இந்த சந்தேகம் வரலைனா இன்னும் எத்தனை மாதம் போயிருக்குமோ. நல்லவேளை இன்னைக்கு நான் இருந்தேன். அது சரி உங்க அம்மாகூடவா கவனிக்கலை? என்ன அண்ணி மேடம் நான் பேசிட்டேயிருக்கேன் பேயறைஞ்ச மாதிரி நிற்குறீங்க?” என்ற வசீகரனின் முகத்தைத் திருப்பிக் காண்பிக்க, “யார்டா அது?” நன்றாகப் பார்த்தவன், “பரி!” என அதிர்ச்சியில் மூர்ச்சையற்று நின்றுவிட்டான்.

அவர்களருகில் வந்த பூரணி, “அப்ப எல்லாம் நடிப்புதான்ல? மெண்டலி குணமாகிட்டீங்கன்றது பேச்சிலேயே தெரியுது. பார்க்க ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ஆனா, என் வசீ...” என நிறுத்தி, “சாரி. நீங்க உங்க குடும்பத்தார் போல இருக்கமாட்டீங்க நினைச்சேன். இல்லைன்னு நிரூபிச்சிட்டீங்க. அப்ப நம்மைப் பற்றித் தெரிந்தும் பைத்தியமா நடிச்சி, என்னைப் பைத்தியக்காரி ஆக்கியிருக்கீங்க. அப்படித்தான?” என்றாள் கோபமும் ஆதங்கமுமாக.

ஒவ்வொரு நொடியும் அவனுக்காக அவன் முழுமையாக குணமாக தான் வேண்டிக்கொண்டிருக்க, அவனோ குணமாகியதோடு தங்கள் உறவு தெரிந்தும் ஏமாற்றியிருக்கிறான் என்பதே அவளைக் கொன்றது. ‘உண்மை தெரியவில்லையெனில் இரண்டு நாள் தங்கள் வீட்டு வாசம் தேவையில்லையே! அப்படியென்றால் கண்டிப்பாக தங்களின் உறவு தெரிந்திருக்கிறது. தெரிந்தும் ஏன் இந்த நாடகம்? பிடிக்கவில்லை என்றால் தன்னைக் காணாமலே இருந்திருக்கலாமே.’ மனம் தன்பாட்டிற்குச் சுழன்றடிக்க, முகம் கோபத்தில் அத்தனை வர்ணஜாலங்களைக் காட்டியது.

“பூரணி நான்...” என்று தன்னை நெருங்கி வந்த ஐஸ்வர்யாவை கைநீட்டி நிறுத்தி, “வேண்டாம். தயவுசெய்து எதுவும் பேசாதீங்க. மாசமாயிருக்கீங்கன்னு பையன் சொன்னான். முதல் செக்கப் வேற. தப்பிதமா நான் எதுவும் சொல்லிட்டா, என்னையே என்னால மன்னிக்க முடியாது. இது எனக்கும் உங்க கொழுந்தனுக்கும் இடைப்பட்ட பிரச்சனை. நாங்களே பார்த்துக்குறோம்” என்றாள்.

“ப..பரி! சா..ரி நான்...” என தயங்கியவனைப் பார்த்து, “நீங்க பேசாதீங்க ப்ளீஸ். ஒன்றிரெண்டு வார்த்தைன்னு இல்லாம தொடர்ந்து என்கிட்ட பேசமாட்டீங்களான்னு எத்தனை ஆசைப்பட்டிருக்கேன் தெரியுமா? ஏன் ஏக்கம்னே சொல்லலாம். என் ஆசை இப்பதான் நிறைவேறிச்சி. என்ன அதை ரசிக்கதான் என்னால் முடியலை. இனியும் முடியாது. என்னைத்தேடி ஏன் வந்தீங்க? எதுக்காக வந்தீங்கன்னு தெரிய வேண்டாம். ஆனா, இன்னொரு முறை என் முன்ன வராதீங்க” என்றாள் முகத்திலடித்தாற்போல்.

“பரி! நான் சொல்றதைக் கேளு” என்றான் தவிப்புடன்.

பார்வையாலே அவனை நிறுத்தி, “அந்த இரண்டு நாள்...” சட்டென வார்த்தை நிற்க, உள்ளுக்குள் கேவல் ஒன்று எழ அதை அடக்கி, “ப்ச்.. என்னை அழவச்சிப் பார்க்குறதுல உங்க குடும்பத்துல உள்ளவங்களுக்கு அப்படியென்ன சந்தோஷமோ. நீங்க இதைச் செய்திருக்க வேண்டாம் வசீகரா” என்றவள் குரல் பிசிறடித்து வர, அதில் கலங்கிப் போனவனோ தவிப்புடன் அவளை நெருங்க நினைக்க, “வராதீங்க சொன்னேன்ல” என அதட்டி, “நான் ஒரு நடுத்தரவர்க்கத்துப் பொண்ணு. உங்க வசதிக்கேற்ற ஆளுங்ககிட்ட விளையாடுங்க. என்கிட்ட வேண்டாம். குட் பை” என்றாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
சுற்றிலும் உள்ளவர்கள் வேடிக்கை பார்க்க தங்கை யாருடனோ கத்திப் பேசுவதைப் பார்த்து அருகில் வந்தவள் வசீகரனைக் கண்டு புருவம் சுருக்கினாலும், முதலில் தங்கையின் பிரச்சனையை விசாரிக்க விழைந்தது மனம்.

“பூரணி என்னாச்சி? உன் ஹஸ்பண்ட் இங்க எதுக்கு வந்திருக்கார்? உடம்புக்கு எதாவது...”

“ப்ச்.. நீயா எதாவது கற்பனை பண்ணாதக்கா. அவங்களாலதான் மத்தவங்க மனசும் உடம்பும் பிரச்சனையாகும். நீ சொல்லுவியே பைத்தியம்னு.. அவங்க பைத்தியம் கிடையாதுக்கா. தெளிவாதான் இருக்காங்க. எல்லாத்தையும், எல்லாரையும் நம்பிக் கெட்டுப்போற நான்தான் முழுப் பைத்தியம்” என்றாள் கோபம் குறையாது.

“பூரணி! நிஜமா குணமாகிருச்சா?” ஜனனியின் கண்ணில் ‘தங்கையின் வாழ்வில் இனி பிரச்சனை இருக்காதே’ என்ற சந்தோஷ மின்னல்.

“நிஜமோ பொய்யோ எதுக்குத் தேவையில்லாத ஆராய்ச்சி? ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டா டாக்டரைப் பார்த்துட்டுக் கிளம்பலாம் வா” என்று அக்காவின் கைபிடித்து இழுத்துச் செல்கையில், “பரி! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு” என்று மனைவியின் இன்னொரு கையை அவன் பிடித்தான்.

“நீங்க சொல்றதைக் கேட்க நான் யார் சார்? சுற்றிலும் ஆட்கள் இருக்காங்க. முதல்ல கையை விடுங்க” என்றதும் பட்டென்று அவள் கையை விட்டான்.

“இருந்தாலும் என்னை இப்படி ஏமாத்தியிருக்க வேண்டாம் வசீகரா. இங்க ரொம்..ப..வே வலிக்குது” என்று நெஞ்சைத் தொட்டுக் காண்பித்து குரல் இளகி தன்னை மீறி வந்த கண்ணீரைத் துடைத்து, “வலி பழகிப்போன ஒண்ணுதான். அது மத்தவங்க என்னை ஏமாற்றும்போது...” என்று ஐஸ்வர்யாவைப் பார்க்க, அவளோ உள்ளுக்குள் துடித்துப்போக கண்ணில் கண்ணீர் கட்டியது.

“ஆனாலும், நீங்க கொடுத்த வலி...” இடைவெளி விட்டவள், “இந்த வலி அடங்குறது கொஞ்சம் கஷ்டம்தான். காலங்கள் போனா அதுவும் கடந்து போகலாம். உங்களுக்கு நல்ல மனைவி கிடைக்கணும்” என்றவள் ஓரளவு வலியை அடக்கி நிதானத்திற்கு வந்திருந்தாள்.

“உன்னை விடவா...” என்ற வார்த்தையைக் கேட்க அவள் அங்கில்லை. “பரீ.. ஏய்! உனக்காகத்தான் வந்தேன்னு உன்னால புரிஞ்சிக்க முடியலையா? எனக்கு நீ மட்டும் போதும். வேற எதுவும் வேண்டாம். வா பரி வாழலாம்” என்று கத்தினான்.

கேட்க வேண்டிவளைத் தவிர சுற்றியுள்ளவர்கள் பார்த்துத் தங்களுக்குள் இருவர் சார்பாகவும், எதிராகவும் பேச ஆரம்பித்தனர்.

“வசீ! வாங்க வீட்டுக்குப் போகலாம். எல்லாரும் உங்களையே பார்க்கிறாங்க. கண்ணைத் துடைங்க வசீ” என்றாள் படபடப்புடன்.

“என்ன பேசிட்டுப் போறாள்னு பாருங்க அண்ணி. அவளை நான் ஏமாத்துவேனா? ஏமாத்துறவன் ஏன் அவளைத்தேடிப் போகணும். போகாமலே இருந்திருக்கலாமே. வேற ஒருத்தியை... எல்லார்கிட்டேயும் இப்படித்தான் அண்ணி சொல்லிட்டிருக்கா. அது தப்புன்னு அவளுக்கு ஏன் புரியலை? பைத்தியமாகவே இருந்திருக்கலாம் போல” என்று உள்ளுக்குள் கதறி வெளியே புலம்ப...

“வசீ என்ன பேச்சு பேசுறீங்க? சீக்கிரமே உங்களைப் புரிஞ்சி வாழ வருவா பாருங்க. நீங்க வாங்க முதல்ல. ஆமா கிருஷ் எங்க?” சுற்றிலும் பார்த்து, “காருக்குப் போயிருப்பான் வாங்க” என்று கிட்டத்தட்ட இழுத்துச் சென்றாள்.

டாக்டரைப் பார்த்து வெளியே வந்தவள் கண்கள் சுற்றிலும் அவளின் வசீகரனைத் தேடியது.

“கண்டிப்பா என்னைத் தேடுவாள்னு நான் சொன்னேன்ல அண்ணி. இவளை விட்டுட்டு இன்னொருத்தியைப் பார்க்கணுமாம். நிச்சயமா இவளுக்குப் பைத்தியம்தான் அண்ணி. என்ன அது வசீகரன் பைத்தியம்ன்றதுதான் இங்க முக்கியமே. இதுக்கு சீக்கிரமே ஒரு முடிவு கட்டணும்” என்றபடி காரை எடுத்தான்.

“சித்தப்பா சித்தியை விட்டுட்டு வர்றீங்க? போய் கூட்டிட்டு வாங்க” என்றான் கிருஷ்கரன்.

“உன் சித்தியை இப்படிலாம் கூட்டிட்டு வரக்கூடாதுடா பையா. எல்லாரும் குடும்பத்தோட போய் கூட்டிட்டு வரலாம். இப்ப உன் தங்கச்சிப் பாப்பா வர்றதைக் கொண்டாடலாம்” என்றான் கிருஷின் தலைகலைத்து.

“சித்தியும் இப்படிதான் சித்தப்பா செய்தாங்க” என்றான் முகம் சுருக்கி.

“இதுலையாவது அவளோட ஒத்துப்போறேன்னு சந்தோஷம்தான்டா” என்றவன் நிதானத்திற்கு வந்திருந்தாலும், வெடிக்கப்போகும் வெடியென உணர்வுகள் உள்ளே ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

“என்ன பூரணி அவரைத் தேடுறியா?” தங்கையின் மனமறிந்து கேட்டாள் ஜனனி.

“இல்லையே. நான் ஏன் தேடணும்? அப்படில்லாம் யாரையும் தேட வேண்டிய அவசியமில்லை” என்றவள் கண்கள் தேடிக்கொண்டுதான் இருந்தது.

“இவ்வளவு ஆசையிருந்தும், ஏன்டி அப்படிப் பேசின? பாவம் அவர் முகமே சுருங்கிருச்சி. உன்னைப் பார்க்கணும்ன்ற ஆசையில கூட நடிச்சிருக்கலாமே” என்றாள்.

“ப்ச்.. ஜனனி எதையும் பேசி பிரயோஜனம் இல்லை. நீ சொன்னதுதான் நமக்கும் அவங்களுக்கும் செட்டாகாது. முற்றும் போட்ட அத்தியாயத்தைத் தொடங்க முடியாது. வா போகலாம்” என்றாள் பிடிவாதமாக.

“என்னவோ செய்” என்று ஜனனி உடன் சென்றாள்.

கார் போர்டிகோவில் நின்றதும் கிருஷ் தந்தையிடம் வீடியோ கால் பேசவென்று தங்களறைக்குச் சென்றுவிட, வசீகரனும் ஐஸ்வர்யாவும் இறங்கி வீட்டினுள் செல்ல, “ஐஸ்வர்யா டாக்டர் என்ன சொன்னாங்க?” என்றபடி ஆர்வத்தில் வேகமாக வந்த ஆனந்தியைக் கண்ட வசீகரன் கண்கள் நெருப்பைக் கொட்டியதோ!

ஐஸ்வர்யா பதிலளிக்கும் முன் தன்னை நிதானப்படுத்தியவன், “ஏன்மா இப்படிப் பண்ணிட்டீங்க? என்றான். அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை. மனைவியின் கோபம், அழுகை, வேதனை, நிராகரிப்பு அனைத்தையும் பார்த்தவனாயிற்றே!

அப்பொழுதுதான் மகனைக் கண்டவருக்கு ‘என்ன இப்படியிருக்கான்?’ என்றுதான் தோன்றியது. அதன்பின்னே அவன் கேள்வி நினைவு வர, “என்னடா உளர்ற? என்ன பிரச்சனை உனக்கு? ஏன் ஒருமாதிரியிருக்க? எங்கேயாவது விழுந்துட்டியா?” என்றார் அக்கறையுடன்.

அவரின் அக்கறை எதுவும் அவன் கருத்தில் பதியாமல் போக, “நானா விழலைம்மா. நீங்கதான் தள்ளி விட்டுட்டீங்க” என்றான் வேதனையுடன்.

“நான் தள்ளிவிட்டேனா? திரும்பவும் அடிபட்டுருச்சா என்ன?” என்று மகனை அளவிட்டார்.

“ஏன்மா இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சி, அவள் மேலயும் பழிபோட்டுத் தாலியைப் பிடுங்கி அனுப்பவா?” தாயின் கண்பார்த்து அழுத்தமாக அதே சமயம் நிதானமாகக் கேட்டான்.

“வசீ!” என அதிர்ந்தவர், ‘இவனுக்கு எப்படித் தெரிந்தது?’ என்று உள்ளுக்குள் நடுங்கித்தான் போனார்.

“ஏன் இப்படிப் பண்ணுனீங்கம்மா? ஐயோ! ஏன் ஏன்னு கேட்டு மூளை குழம்புதும்மா. ஏன்மா அவளைப்பார்த்து அந்தக் கேள்வி கேட்டீங்க? எங்கம்மாதான் பெஸ்ட். எங்கம்மா போல யாரும் கிடையாதுன்னு பெருமை பேசின நான், சமீபமா தெரிந்த அடுத்தடுத்த உண்மையில் மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம தவிச்சிட்டிருக்கேன். சொல்லுங்க நான் என்ன செய்யட்டும்?” வந்த அழுகையை அடக்கியபடி கேட்டான்.

“டேய் கண்ணா! உன்கிட்ட யாரோ தப்பா சொல்லி குழப்பி விட்டுருக்காங்கடா. எதுவாயிருந்தாலும் புரியுற மாதிரிப் பேசு? பூ..பூரணி பற்றி யாராவது சொன்னாங்களா? நீ சொன்னியா?” என்றார் மருமகளிடம் திரும்பி.

“இல்லை அத்தை. வசீக்கே எப்படியோ தெரிஞ்சிருக்கு” என்றாள் எச்சில் விழுங்கியபடி.

“அதெப்படி நாம சொல்லாமல் தெரியும்?” என்று மருமகளிடம் எகிறினார்.

அதற்குமேல் தாயின் பேச்சைக் கேட்க முடியாத வசீகரன், “அம்மா போதும். உண்மையை ரொம்ப நாளைக்கு மூடிவைக்க முடியாது. தெரிய வேண்டியது, தெரியக்கூடாதது எல்லாமே எனக்குத் தெரிஞ்சிருச்சி. உங்களுக்கு அதுல சம்பந்தம் இல்லைன்னு நினைச்சிதான் கேட்டுக்கலை. சமீபமாதான் தெரிஞ்சது கடைசியா அவளை உயிரோடு வதைச்சது உங்களுடைய வார்த்தைகள்னு. அப்பவே உங்களை வந்து கேள்வி கேட்டிருக்கணும். அந்நேரம் அவள் முக்கியமா பட்டதால அவளைத்தேடிப் போனேன்.”

“அவளோட முகத்தைப் பார்த்தாலே அது சொல்லும் அவள் குணத்தை. அது ஏன்மா உங்க கண்ணுக்குத் தெரியலை? ஹ்ம் எப்படித் தெரியும்? தெரிய விட்டால்தான. கண்கட்டி பொம்மைதான நீங்க. உங்களுக்கேத் தெரியாம உங்களைத் தூண்டிவிட்டவங்களைச் சொல்லணும். இது தெரியாம நீங்க பண்ணின காரியம்..?” ஐயோ என்றிருந்தது அவனுக்கு.

“நீ என்னென்னவோ சொல்ற வசீ. உனக்கு அவளை எப்படித் தெரியும்னு தெரியாது. அவளோட நடவடிக்கை சரியில்...”

“ம்மா..” என்றான் பல்லைக்கடித்தபடி குரலை உயர்த்தி.

அவரோ சட்டென்று பேச்சை நிறுத்தினாலும், “உன் கோபத்தைக் குறைச்சிட்டு நான் சொல்றதைக் கேள் வசீ. பொண்ணு பார்த்து முடிக்கிறப்ப அவள்மேல அவ்வளவு பிடித்தமில்லைதான். மறுநாள் காலை உங்களை ஜோடியா பார்த்தப்பதான் அவளுக்கென்ன குறைன்னு ஒதுக்கி வைக்கணும் தோணிச்சி. மாமியாரா இல்லாம தாயாதான் பார்த்துக்கிட்டேன்.”

“தாயாயிருந்த நீங்க மாமியாரா ஏன்மா மாறுனீங்க? பையன்கள் மட்டும் இருக்கிறதால பொண்ணுங்க உணர்வு தெரியலையா? நீங்களும் அதே பெண்ணினம்தான்றதை எப்படி மறந்தீங்க? உங்களுக்குத் தெரியுமா.. அவளுக்கு அப்பா அம்மா அன்பு கிடைச்சதில்லை. உங்களைப் பார்த்ததும் அவளோட அம்மா ஸ்தானத்தை உங்களுக்குக் கொடுத்து உங்களுக்காகவே என்னைப் பார்க்காம கல்யாணம் பண்ண சம்மதிச்சா. அப்படிப்பட்டவளுக்கு நீங்க செய்தது என்ன?” கோபத்தை அடக்கிய வேகத்தில் கேட்டான்.

“இ..இல்லடா கண்ணா. அ..அது.. அவருக்குமே...” தன்னை வைத்து ஏதோ தவறு நடந்திருப்பது புரிய ஆரம்பித்து வார்த்தைகள் தடுமாறியது அவருக்கு.

“யார் சொல்லி உங்க மனசு மாறிச்சின்னு எங்களுக்குத் தெரியும்மா.”

மகனின் வார்த்தைதனில் தவறெல்லாம் கணவன் மீது செல்லவும், ‘அப்படியிருக்காது! இருக்கக்கூடாது!’ என்றது மனது. “நீ நினைக்கிற மாதிரி இருக்காதுடா. உங்கப்பா அப்படில்லாம்...”

தாயின் தவிப்பில் உண்மையை உணர ஆரம்பிக்கிறார் என்று தெரிந்தும் தகப்பனுக்கு ஆதரவாகப் பேசியவரிடம், “சாட்சி இருக்குதும்மா” என்றான் பட்டென்று.

“வசீ!”

“இதோ உங்க பெரிய மருமகள்தான் இந்த வீட்டுல நடந்த எல்லாத்துக்கும் சாட்சி” என்றான் அண்ணியவளைக் காண்பித்து.

“ஐஸ்வர்யாவா? அப்ப உன் புருஷனை அவள் தப்பா பார்த்ததுக்கு நீ சண்டை போடலையா?” உண்மையைப் போட்டு உடைத்தவரின் கண்களில் குழப்பம் மட்டுமே!

“அத்தை! என்ன உளர்றீங்க? அவளைப் போய்... எப்படி நினைக்க முடிந்தது. அப்படிப்பட்ட பொண்ணையா உங்க மருமகளா பார்த்திருப்பீங்கன்னு நினைக்குறீங்க? சுத்தத் தங்கம் அவள். அவளைக் குறை சொல்ற தகுதி எனக்குக் கிடையாது. யார் சொன்னது என் புருஷனை அவள் தப்பாப் பார்க்கிறாள்னு?” கோபத்தில் சற்றே குரலுயர்த்தினாள் ஐஸ்வர்யா. இப்படி ஒரு விஷயத்தை அவள் யோசிக்கக்கூட இல்லை. மாமனாரை நினைக்கையில் ச்சீ என்றிருந்தது.

“உங்க மாமாதான்” என்றவர் குரல் இறங்கியிருந்தது.

“ஓ.. அவரா..” ஐஸ்வர்யாவின் குரலிலிருந்த அருவருப்பை உணர்ந்தார் ஆனந்தி. அவளின் அடுத்த வார்த்தையில் மொத்தமாகவே நொறுங்கினார்.

“தன்மேல உள்ள தப்பை மறைக்க, அந்தப் பொண்ணைத் தப்பானவளா காட்டியிருக்காரா?” ‘இதுவேறையா’ என்பதுபோல் அவள் பார்க்க,

“ஐஸ்வர்யா நீ.. நீ என்ன சொல்ற?” இதுவரைத் தன் கணவன் மீது அவள் காட்டியது அலட்சியம் என்றுதான் நினைத்திருந்தார். நேரில் கேட்கவில்லை என்றாலும் அவள் மீது அவருக்குக் கோபம் உண்டுதான். தற்போது அதற்கு மேலும் ஏதோ இருக்கிறது என்று தோன்ற பயந்துபோனார் ஆனந்தி.

“அதுக்கு முன்ன இந்தத் தண்ணியைக் குடிங்கம்மா” என்று தாயை உட்காரவைத்துக் கொடுக்க, உண்மையிலேயே மனதிலுள்ள அதிர்வுகளில் ஆடிப்போயிருந்தவர் தண்ணீரை வாங்கிக் குடித்து மருமகள் முகம் பார்த்து, “அ..அன்னைக்குப் பூரணிகிட்ட சண்டை போட்டு விரட்டக் காரணம்?” என்றார் உள்ளுக்குள் ஊறிய பயத்துடன். தொடர் பூதங்கள் வந்தால் அவரும்தான் என்ன செய்வார்.

“உங்க புருஷன்தான் அத்தை” என்றாள் பட்டென்று.

கண்கள் மொத்த அதிர்ச்சியைக் காட்ட தொண்டைக்குள் எதுவோவொன்று அடைத்தது அவருக்கு. கணவனின் மேலிருந்த நம்பிக்கை தூள்தூளானதோ!
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top