- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
17
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் பூரணி. எழுந்தால் ஜனனியின் தூக்கம் கலைந்துவிடும் என்ற காரணத்தினால் எழுந்து உட்கார முடியாமல் இருந்தாள்.
மனதெல்லாம் ஒரே குடைச்சல். ஆம் குடைச்சல்தான். முன்தினம் வசீகரன் வந்ததிலிருந்து தெரியாத ஏதோவொன்று அவன் சென்றதும் வண்டாய்க் குடைகிறது. மருந்து சாப்பிடுவதால் வந்த மாற்றமென்று நினைத்தாலும், ஏதோவொரு வித்தியாசத்தை அவனிடம் உணர்கிறது உடலும் உயிரும். அதுவும் செல்லும்போது அவன் கொடுத்த அணைப்பும் முத்தமும் மொத்தமாக ஏனோ மிகவும் இம்சித்தது.
கணவனின் அந்தப் புன்னகை தாண்டி பார்வையில் ஏதோவொன்று... ‘சரியாகிருச்சா?’ என்ற மூளையின் கேள்வியில் திடுக்கிட்டது உடல். ‘இல்ல இருக்காது. அப்படியிருந்தா இங்க வர வாய்ப்பில்லையே! ரிலாக்ஸ் ரிலாக்ஸ்.’ தனக்குத்தானே மனதைக் கட்டுப்படுத்தி உறங்கவே நேரமாகியது.
“பூரணி ஹாஸ்பிடல் போகணும் வர்றியா?” என்றழைத்தாள் ஜனனி.
“நானா? நான் மெடிக்கல் போகணுமே. இரண்டு நாளாகிருச்சி. ஏன் உன் ஹஸ்பண்ட் வரலையா?” என கேட்க,
“அவங்களுக்கு வேலை இருக்காம் பூரணி. அப்பாவை கூட்டிட்டு வரச்சொன்னாங்க. அப்பா கோழிப்பண்ணை போயிருக்காங்கன்னு அசால்டாயிருந்தேன். கோழிக்குத் திவனம் போட்டுட்டு பக்கத்து ஊருக்கு அவசரமா போயிட்டாராம். அதான் உன்னைக் கூப்படுறேன்” என்றாள்.
“ஓ.. அப்ப எங்க ஹாஸ்பிடல் வாயேன்கா. டாக்டர்கிட்ட நானே பேசுறேன்” என்க,
“இல்ல பூரணி. இந்த மன்த் ஸ்கேன் இருக்கு சொன்னாங்க. மாறி மாறிப் பார்த்தா சரியாயிருக்காது. என்னோட மெடிக்கல் ஃபைலும் அங்க வீட்டிலிருக்கு.”
“அப்புறம் ஏன் நேத்து வந்த? இன்னைக்கு ஹாஸ்பிடல் போயிட்டு நிதானமா வந்திருக்கலாம்ல. அங்க நான் எப்படிக்கா? யாரையாவது பார்த்துட்டா...” என்றாள் தவிப்புடன்.
“ஹாஸ்பிடல் போகணும்ன்றதை மறந்துட்டேன் பூரணி. உனக்கு மாப்பிள்ளை பற்றிச் சொல்லணும்ன்ற அவசரம்னும் சொல்லலாம்” என்றாள் வேகமாக.
தங்கையவளோ அவளை முறைஒக்க, “சரி இனி அந்த அனர்த்தத்தைச் செய்யமாட்டேன். திருச்சி ஒண்ணு கிராமம் கிடையாது. நீ வந்ததும் வந்துட்டன்னு ஊரே தெரிஞ்சிக்க. அவ்வளவு பெரிய ஊருல அப்படிலாம் பார்த்திர முடியாது. பயப்படாம வா. ஹாஸ்பிடல் போயிட்டு வந்ததும் பஸ் ஏற்றிவிடச் சொல்றேன்” எனவும் அரை மனதாக சம்மதித்துக் கிளம்பிவிட்டாள்.
மருத்துவ அறிக்கைக்காகக் காத்திருக்கையில், “திருச்சி டூ பொன்நகர் இருபது கிலோமீட்டர் வித்தியாசத்துல இருக்கு. எப்படி ஜனனி திருச்சியிலிருந்து நம்ம வீட்டுக்கு நினைச்சதுமே கிளம்பி வந்திடுற?” என்றாள்.
“இரண்டு பேரும் பேசிட்டே பைக்ல வர்றதால தூரம் தெரியலை. அடிக்கடி வர்றதால பழகிருச்சி பூரணி.”
“ஓ.. உங்க பைக் ரைட் ரொமான்ஸ்குதான் அடிக்கடி வீட்டுக்கு வர்றியா? நான் என்னவோ பாசத்துலன்னு நினைச்சேன்” என்று ஜனனியின் கால்வார,
“பூரணி! அப்படிலாம் இல்லை” என்றவளுக்கு தங்கை உண்மையைக் கண்டுபிடித்ததில் வெட்கம் வந்தது.
“ஹேய் அப்படித்தான்னு முகம் சொல்லுது. ஆனாலும், இந்த நிலையிலும் இது கொஞ்சம் ஓவர்தான்” என்றாள் அவளின் எட்டுமாத வயிறைக் காண்பித்து.
“எந்த நிலையா இருந்தா என்ன? கூட்டுக்குடும்பத்துல இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி சில சந்தர்ப்பங்கள்தான் மனசுவிட்டுப் பேச கிடைக்கும். அதை நான் அம்மா வீட்டை காரணம் காண்பிச்சி எடுத்துக்குறேன்.”
“பார்றா! அவ்வளவு பொறுப்பா நீ?” என்றாள் ஆச்சர்யமாக. ஆச்சர்யம்தான் பூரணிக்கு. வீட்டிற்கு வந்தால் அதிகாரம் செய்து ஆட்டிப்படைக்கும் ஜனனியா இது என்றிருந்தது.
“முதல்ல நம்ம வீடு மாதிரி அசால்டாதான் இருந்தேன். என் மாமியார் அப்படி இருக்கவிடலை. லவ் மேரேஜ்தான அதனால்தான் இப்படியிருக்கா உங்க மருமகள்னு சொல்லி மத்தவங்க உன்னைத் தப்பா பேசிரக்கூடாது. அதுக்கான பொறுப்போட இருக்கணும்னு அட்வைஸ் பண்ணி வீட்டு நடவடிக்கையை அப்பப்ப சொல்லிட்டேயிருப்பாங்க. முதல்ல எரிச்சலாதான் வந்தது. நம்ம வீட்டுல நாமே ராணின்னு இருந்துட்டோமா, அவங்க என்னை கண்ட்ரோல் பண்றது பிடிக்கலை. தனியா போயிரலாம்ன்ற எண்ணம் வந்ததை அவர்கிட்ட சொன்னேன்.”
“ஜெஃப்ரின்தான், நம்ம இரண்டு பேர் தனியா நின்னா எந்த மதிப்புமிருக்காது. நான் வேலை பார்க்கிறது தனியார்ல ஜனனி. திடீர்னு வேலை போயிட்டா குடும்பத்தோட இருந்தா அவங்க நம்மளைத் தாங்கிப் பிடிப்பாங்க. கொரோனா டைம்ல எத்தனை பேருக்கு வேலை போயிருக்குன்னு உனக்குத் தெரியும்தான? அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் எங்க வீட்டுக்குப் போனா, சேர்த்துக்கிட்டாலும் நம்மளை மனுஷனா கூட மதிக்கமாட்டாங்க.”
“அம்மா அப்படியில்லைதான். அக்கா குடும்பம், அண்ணன் குடும்பம்னு ஒரு பெரிய லிஸ்ட் இருக்கே. அட்ஜஸ்ட் பண்ணி நல்ல பெயர் எடுக்கப்பாரு. நான் எப்பவும் உன்னை விட்டுரமாட்டேன். உனக்கொரு பிரச்சனைன்னா கண்டிப்பா கேட்பேன். ஆனா, உன்னால ஒரு பிரச்சனைன்னு வந்திரக்கூடாது. நல்ல மருமகள்ன்ற பெயர் எடுன்னு அமைதியா நடைமுறையை விளக்கினார்.”
“முதல்ல கஷ்டமாதான் இருந்தது. இப்ப பெருசா தெரியுறதில்லை. உனக்கொண்ணு தெரியுமா? ஜெஃப்ரின் அம்மாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். எங்கேயும் விட்டுக்கொடுத்துப் பேசமாட்டாங்க. சின்ன மருமகள் அப்படி இப்படின்றப்ப நமக்குமே பெருமையாதான் இருக்கு” என்றாள் புன்னகையுடன்.
“அப்ப உன் ஆட்டமெல்லாம் நம்ம வீட்டுலதான்னு சொல்லு?”
“அதென்னவோ தெரியலை. அங்க வந்துட்டா ஆட்டோமேடிக்கா பிறவி குணம் வந்திருது. நான் என்ன செய்யட்டும்?” என்றாள் அப்பாவியாய்.
“ஆத்தாடி! ஜனனி உனக்குள்ள இப்படியொரு அம்பி இருக்கிறது தெரியாமல் போச்சே” என்றதும் சகோதரிகள் இருவரும் சிரிக்க நர்ஸ் வந்து, “மிஸஸ்.ஜனனி ஜெஃப்ரின் உங்க ரிப்போர்ட் வந்திருச்சி. ரிப்போர்ட் வாங்கிட்டு டாக்டரைப் பாருங்க” என்றுவிட்டு சென்றார்.
“ஜாஸ்மின் பெயர் போடாம ஜனனி போட்டிருக்க? உன் ஹஸ்பண்ட் வீட்டுல எப்படி ஒத்துக்கிட்டாங்க?” ஆச்சர்யத்துடன் தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
“காதல் வேகத்துல எல்லாமே நடந்தது. குழந்தைன்னு வரும்போது என்னோட சொந்தப் பெயரை விட்டுக்கொடுக்கத் தோணலை. ஜெஃப்ரின்கிட்டயும் சொல்லிட்டேன்.”
“நீ இந்துப் பொண்ணுன்னு எனக்குத் தெரியும். தெரிந்தேதான் காதலித்ததே! பெயர் மாத்துறது கூட எங்க வீட்டுல சொன்னதுதான். எனக்கு அதில் விருப்பமில்லை. நீ சம்மதிச்சதால நான் மறுக்கலை. மத்தபடி நீ எப்பவும் எனக்கு ஜனனிதான்.”
கணவன் சொன்னதைப் பெருமையுடன் தங்கையிடம் சொல்லி, “நான்தான் கொஞ்சம் இல்லை ரொம்பவே ஆடிட்டேன். இப்ப சரின்ற மாதிரி தோணுற என் கேரக்டர் எப்ப வேணும்னா பழையபடி மாறலாம். முடிந்தவரை இப்படியே இருக்க முயற்சிக்கிறேன். பாhக்கலாம் என்னோட செல்ஃப் கண்ட்ரோல் எதுவரைன்னு. சரி பூரணி. போய் ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிட்டு வந்து டாக்டர் பார்க்கலாம். அதுவரை இங்கேயே இரு” என்று நகர, அருகில் நின்றிருந்த கர்ப்பிணிப் பெண்ணை தன்னிடத்தில் உட்காரவைத்து எழுகையில் சிறுவன் ஒருவன் மோதிவிட, பூரணி மன்னிப்பு கேட்குமுன், “சாரி ஆன்ட்டி தெரியாம மோதிட்டேன்” என்றானவன்.
“இட்ஸ் ஓகே” என்று அவனை நோக்கியவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, “கிருஷ்” என்றாள்.
“நீங்க...” சில நொடி யோசனையில், “பூரணி சித்தி நீங்களா? எப்படியிருக்கிங்க?” என்றான் முகம் முழுக்கப் புன்னகையுடன்.
“நலம் விசாரிக்கிற அளவு வளர்ந்துட்டீங்களா குட்டி சார்? என்னை அடையாளம் தெரியுதா?” என்று அவன் தலைவருட,
“சித்தி செவன் இயர்ஸ் ஓல்ட் பாய் நான். எனக்கு எல்லாமே தெரியும். நீங்க எப்படியிருக்கீங்க?” என்றான் ஆர்வம் குறையாது.
“நல்லாயிருக்கேன்டா. நீ எப்படியிருக்க? இங்க யார்கூட வந்த? யாருக்கு என்ன?” என்றவள் குரலில் ஒருவித பதற்றம்.
“நான் நல்லாயிருக்கேன் சித்தி. அம்மாவுக்கு நெக்ஸ்ட் பேபி வரப்போகுதாம். அப்பா அவசரமா ஊருக்குப் போயிருக்கிறதால சித்தப்பா கூட்டிட்டு வந்தாங்க” என்றான்.
அவன் பேசிய எதுவும் கேட்கவில்லை அவளுக்கு. கேட்டதென்னவோ அவளின் வசீகரனின் கோபக்குரலிலுள்ள கம்பீரத்தையும் அக்கறையையும் மட்டுமே! ‘இவன் இவ்வளவு பேசுவானா? அவன் வார்த்தைக்காகக் காத்திருந்த காலங்கள் எத்தனையெத்தனை!’ கேட்க ஆசைப்பட்ட வார்த்தைகள் இடம் மாறி, தடம் மாறி அவளைப் புயலாக்கியது. அவன் மேல் வந்த கோபத்தில் நவரசங்களும் பரிபூரணியின் முகமானதோ!
கிருஷிடம் பேசினாலும் பூரணியின் பார்வை ஐஸ்வர்யாவைத் தேட, மருத்துவரின் அறையிலிருந்து வந்தவனைப் பார்த்த சந்தோஷத்தில் கிருஷ் சொன்ன ‘சித்தப்பா கூட்டிட்டு வந்தாங்க’ மூளையில் பதியாமல் கணவனை அழைக்கப்போக, “ஏன் அண்ணி இத்தனை நாள் சொல்லலை? டாக்டர் எவ்வளவு திட்டுறாங்க. அப்படியென்ன அஜாக்கிரதைத்தனம் உங்களுக்கு? இந்த அண்ணன் வரட்டும். என்ன பார்த்துக்குறான் உங்களை? மற்ற நேரம்லாம் கோழி அடைகாத்த மாதிரி அடைகாக்கத் தெரியுது. தேவையான நேரம் கவனிக்க ஆளில்லை” என்று கோபத்தில் கத்திக்கொண்டு வந்தான்.
“வசீ போதும். எனக்கேத் தெரியலை. ஒரு சந்தேகத்துலதான் வந்தேன்னு சொன்...” சொன்னேன்ல என்று கூறுவதற்கு முன் ஐஸ்வர்யாவின் குரல் நின்றது.
அது தெரியாது, “இப்ப மட்டும் இந்த சந்தேகம் வரலைனா இன்னும் எத்தனை மாதம் போயிருக்குமோ. நல்லவேளை இன்னைக்கு நான் இருந்தேன். அது சரி உங்க அம்மாகூடவா கவனிக்கலை? என்ன அண்ணி மேடம் நான் பேசிட்டேயிருக்கேன் பேயறைஞ்ச மாதிரி நிற்குறீங்க?” என்ற வசீகரனின் முகத்தைத் திருப்பிக் காண்பிக்க, “யார்டா அது?” நன்றாகப் பார்த்தவன், “பரி!” என அதிர்ச்சியில் மூர்ச்சையற்று நின்றுவிட்டான்.
அவர்களருகில் வந்த பூரணி, “அப்ப எல்லாம் நடிப்புதான்ல? மெண்டலி குணமாகிட்டீங்கன்றது பேச்சிலேயே தெரியுது. பார்க்க ரொம்ப சந்தோஷமாயிருக்கு. ஆனா, என் வசீ...” என நிறுத்தி, “சாரி. நீங்க உங்க குடும்பத்தார் போல இருக்கமாட்டீங்க நினைச்சேன். இல்லைன்னு நிரூபிச்சிட்டீங்க. அப்ப நம்மைப் பற்றித் தெரிந்தும் பைத்தியமா நடிச்சி, என்னைப் பைத்தியக்காரி ஆக்கியிருக்கீங்க. அப்படித்தான?” என்றாள் கோபமும் ஆதங்கமுமாக.
ஒவ்வொரு நொடியும் அவனுக்காக அவன் முழுமையாக குணமாக தான் வேண்டிக்கொண்டிருக்க, அவனோ குணமாகியதோடு தங்கள் உறவு தெரிந்தும் ஏமாற்றியிருக்கிறான் என்பதே அவளைக் கொன்றது. ‘உண்மை தெரியவில்லையெனில் இரண்டு நாள் தங்கள் வீட்டு வாசம் தேவையில்லையே! அப்படியென்றால் கண்டிப்பாக தங்களின் உறவு தெரிந்திருக்கிறது. தெரிந்தும் ஏன் இந்த நாடகம்? பிடிக்கவில்லை என்றால் தன்னைக் காணாமலே இருந்திருக்கலாமே.’ மனம் தன்பாட்டிற்குச் சுழன்றடிக்க, முகம் கோபத்தில் அத்தனை வர்ணஜாலங்களைக் காட்டியது.
“பூரணி நான்...” என்று தன்னை நெருங்கி வந்த ஐஸ்வர்யாவை கைநீட்டி நிறுத்தி, “வேண்டாம். தயவுசெய்து எதுவும் பேசாதீங்க. மாசமாயிருக்கீங்கன்னு பையன் சொன்னான். முதல் செக்கப் வேற. தப்பிதமா நான் எதுவும் சொல்லிட்டா, என்னையே என்னால மன்னிக்க முடியாது. இது எனக்கும் உங்க கொழுந்தனுக்கும் இடைப்பட்ட பிரச்சனை. நாங்களே பார்த்துக்குறோம்” என்றாள்.
“ப..பரி! சா..ரி நான்...” என தயங்கியவனைப் பார்த்து, “நீங்க பேசாதீங்க ப்ளீஸ். ஒன்றிரெண்டு வார்த்தைன்னு இல்லாம தொடர்ந்து என்கிட்ட பேசமாட்டீங்களான்னு எத்தனை ஆசைப்பட்டிருக்கேன் தெரியுமா? ஏன் ஏக்கம்னே சொல்லலாம். என் ஆசை இப்பதான் நிறைவேறிச்சி. என்ன அதை ரசிக்கதான் என்னால் முடியலை. இனியும் முடியாது. என்னைத்தேடி ஏன் வந்தீங்க? எதுக்காக வந்தீங்கன்னு தெரிய வேண்டாம். ஆனா, இன்னொரு முறை என் முன்ன வராதீங்க” என்றாள் முகத்திலடித்தாற்போல்.
“பரி! நான் சொல்றதைக் கேளு” என்றான் தவிப்புடன்.
பார்வையாலே அவனை நிறுத்தி, “அந்த இரண்டு நாள்...” சட்டென வார்த்தை நிற்க, உள்ளுக்குள் கேவல் ஒன்று எழ அதை அடக்கி, “ப்ச்.. என்னை அழவச்சிப் பார்க்குறதுல உங்க குடும்பத்துல உள்ளவங்களுக்கு அப்படியென்ன சந்தோஷமோ. நீங்க இதைச் செய்திருக்க வேண்டாம் வசீகரா” என்றவள் குரல் பிசிறடித்து வர, அதில் கலங்கிப் போனவனோ தவிப்புடன் அவளை நெருங்க நினைக்க, “வராதீங்க சொன்னேன்ல” என அதட்டி, “நான் ஒரு நடுத்தரவர்க்கத்துப் பொண்ணு. உங்க வசதிக்கேற்ற ஆளுங்ககிட்ட விளையாடுங்க. என்கிட்ட வேண்டாம். குட் பை” என்றாள்.