• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
17



வியாழன் மாலை ஆறு மணிக்கெல்லாம் பெரியவர்கள் முன் நிச்சயதார்த்தம் முடிந்து, ரிசப்ஷனுக்கு மாப்பிள்ளை வந்து நிற்க... சற்று நேரத்திற்கெல்லாம் மணப்பெண் வித்யாவை கார்த்திகா, கீர்த்திகா அழைத்து வர, இன்னும் காய்ச்சலிலிருந்து முழுவதும் மீளவில்லை என்பதைப் பார்த்ததுமே கண்டுகொண்டான் ஆனந்த். மணப்பெண் வருகிறாள் என்றதும் திறந்த வாய் மூடாமல் பார்க்கவில்லை அவன். அவள் அழகில் மயங்கிக் கிறங்கியதாய் பெயர் செய்து நடிக்கவுமில்லை. அவளைக் கண்டதும் நன்றாகயிருக்கிறாள் என்ற ஒருவித திருப்தியே!

மேடை ஏறும்போது வித்யா அவனைக் கண்டு மெல்லிதாக புன்னகைக்க... பதில் புன்னகை புரிந்தவன், தன் கழுத்தில் கைவைத்து “பீவர் சரியாகிருச்சா?” என்றான்.

அந்நேரம் அத்தனை பேர் அடங்கிய மண்டபத்தில் தன் நலன் மட்டுமே முக்கியம் என்பதாய் விசாரித்தவனை காதலிப்பதில் தவறில்லையே! மனதில் தோன்றிய நிமிடம் முகம் இன்னும் பிரகாசிக்க, சரியாகிவிட்டது என்பதை தலையசைத்துச் சொல்ல... அவனிடமும் ஒரு நிம்மதி மூச்சு.

காதலிக்கும் ஆசையில்லை

கண்ணா உன்னைக் காணும் வரை - என்

உள்ளம் கொள்ளை போனதே உன்னால்!

உன்னை மட்டும் காதல் செய்ய

ஜென்மம் தோறும் காத்திருப்பேன்...

நம் காதல் வாழும் என்றும் தன்னால்!

“அடப்பார்றா! இவ்வளவு கூட்டத்துலயும் ரொமான்ஸ் ஓட்டுறதை” என்று வித்யாவின் மோனத்தை கலைக்க...

“கீர்த்தி ஹெல்த் பற்றிதான் கேட்டாங்க.”

“ஓ... சைகை பாஷையெல்லாம் கத்துக்கிட்டீங்களா அண்ணியாரே? ஆனாலும் உங்க கண்ணு நிறைய பேசுதே. வாழ்க உங்கள் காதல்! வளர்க உங்களின் வாரிசுகள்!”

“ஸ்... சும்மாயிருக்கமாட்டியா!” என்றவள் வந்த வெட்கத்தை மறைத்து தலைகவிழ... “ஆ..ஊன்னா தலையைக் கவிழ்த்து சமாளிச்சிடுறீங்கப்பா” என்று அதற்கும் கேலி செய்தாள்.

அதைப் பார்த்திருந்த கார்த்திகாவிற்குமே திருப்தியாக இருந்தது. ‘என் அம்மா செலக்ஷனாகிற்றே!’ நினைத்தபடி கணவனைக் காண, ‘என் அம்மா செலக்ஷன் என்றுமே சூப்பர்தான்’ என்று மனம் சொல்ல கணவனிடமிருந்த கண்கள் விலகவில்லை. தாயின் மேலுள்ள நம்பிக்கையை மனதில் பதிந்திருக்கலாம் கார்த்திகா!

மனைவியின் பார்வை கண்டு என்னவென்று கேட்க, ஒன்றுமில்லையென்று தலையசைத்து மேடைக்கு பார்வையைத் திருப்பினாள்.

தன்னருகே வந்தவளின் கைபிடிக்க, அவளது கை ஜில்லென்றிருக்கவும், “எங்க பீவர் குறையலையோ நினைச்சேன் தியா. ரிசப்ஷன் நடுவுல டயர்டாயிருந்தா சொல்லிடுமா. வேற அரேஞ்ச் பண்ணிக்கலாம்.”

“இல்லங்க நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.”

“சரிமா. எதுனாலும் சொல்லிடணும்.”

“டேய் நண்பா நாங்களும் இருக்கோம். எங்களை அறிமுகப்படுத்தாம நீயே பேசிட்டிருக்க” என ஆரம்பித்து மணமக்களுக்கேயான கேலிகளை விதவிதமாக செய்தார்கள்.

மணமக்களை மோதிரம் மாற்றிக்கொள்ளச் சொல்ல, இருவருமே புன்னகை மாறாமல் கரம்பிடித்து விரல் தொட்டு போட்டுவிட திருமணமே முடிந்தாற்போல் ஒரு நிறைவு இருக்க, அதைத் தங்களின் பார்வையால் பகிர்ந்து கொண்டார்கள்.

அதிக நேரங்கள் மேடையிலேயே நின்றதால் வித்யாவிற்கு அசதியாகி காய்ச்சல் திரும்பவும் வருவேனா என்றது. அதைக் கவனித்தவனோ, சுபாஷிடம் ஏதோ சொல்ல அடுத்த சில நிமிடங்களில் மணமக்கள் அமரும் நாற்காலிகள் வர, அதில் தன் மிஸஸை அமரவைத்து, “யார் வந்தாலும் எழுந்துக்காத. நான் பார்த்துக்கறேன்” என்றான்.

அவனது அக்கனிவில் சந்தோஷத்தில் கண்கலங்க, ‘உங்களை நான் பார்த்துக்கறேன்’ என்றதை பார்வையால் காட்டிக்கொண்டிருந்தாள்.

“ஏய் அண்ணி, உன்னை கேர் எடுக்கிறேன்ற பெயர்ல கல்யாணமாகாத நிறைய இளம் பெண்களோட மனசைக் கெடுக்கிறார் அண்ணா” என்று கீர்த்தி வித்யாவிடம் சொல்ல...

“என்னடி உளர்ற?”

“நல்லா பாரு. பொறாமையில அவளவள் காதுல புகை வருது. எங்கண்ணா மாதிரி பையன் கிடைக்கக் குடுத்து வச்சிருக்கணுமாம். இதே பேச்சாதான் இருக்குது.”

“ஹ்ம்.. அப்புறம்?”

“நானென்ன கதையா சொல்றேன். அப்புறம்னு கேட்கிற. என் புருஷனை எவடி சைட் அடிக்கிறவள்னு உனக்கு கோபம் வரலையா?”

“வரல கீர்த்தி. லவ்னா இதான்.. இந்த அக்கறை கலந்த அன்புதான்னு புரியுது. அசட்டுத்தனமா வழியல. கட்டிக்கப்போற பொண்ணுதானன்னு தொட்டுப் பேச முயற்சித்ததில்ல. உரிமையிருக்குன்ற பேர்ல போன்ல தத்து பித்துன்னு உளர்னதில்ல. ரொம்ப ஜெனியூன் பெர்சன். அதிலும் இப்ப உள்ள ஜெனரேஷன்ல இவங்களை மாதிரி ஆண்கள் ரொம்ப ரேர்” என்றாள் அவனில் மயங்கிய மனதுடன்.

“அண்ணாவை ரொம்பவே புரிஞ்சி வச்சிருக்க. எனக்கு ரொம்ப ஹேப்பியாயிருக்கு அண்ணி. நீ வேணும்னா பாரு. அண்ணாவுடனான உன் வாழ்க்கை மொத்தமும் ரொம்பவும் மகிழ்ச்சியானதா இருக்கும். எனிவே ஹேப்பி மேரீட் லைப்” என்றாள்.

பதிலுக்கு அவளிடம் நன்றி சொல்லி, ‘கண்டிப்பா எங்க லைப் மகிழ்ச்சியானதா இருக்கும்.’ நினைத்தபடி கண்களுக்குள் கணவனாகப் போகிறவனை நிறைக்க, புன்னகை இதழ்களை விட்டு விலகவில்லை.

குழந்தைக்குப் பசியாற்றிக் கொண்டிருந்த கார்த்திகாவின் மொபைல் அழைக்க, குழந்தையைப் படுக்கப்போட்டு ஆடையை சரிசெய்து, மொபைலைப் பார்த்ததும் முகம் மலர ஆன் செய்து, “ஹேய் சாது” என்றாள்.

“சாரி கார்த்தி ரொம்ப வேலை. ரிசப்ஷன் அட்டெண்ட் பண்ண முடியல. இப்பக்கூட ஆபீஸ்லதான் இருக்கோம். காலையில முகூர்த்தத்துக்கு நான் அங்கேயிருப்பேன். அதுக்கு முன்ன மணமக்கள் போட்டோ அனுப்பு. நான் கொஞ்சம் ஃப்ரீயானதும் பார்த்துக்கறேன். கார்த்தி எதையும் நினைச்சிக்காத சரியா” என்றாள் கெஞ்சலாக.

“ஹேய் சாது கூல். எனக்கு உன் நிலை புரியுது. என்னைத் தெரியும்தான உனக்கு. காலையில சீக்கிரமே வா.”

“நீ புரிஞ்சிப்பன்னு தெரியும் கார்த்தி. பை” என்று போனை வைக்க...

“கார்த்தி வீட்டுக்குக் கிளம்புறாங்க. நீயும் வா உன்னையும் விட்டுட்டு வந்திடுறேன்.” சுபாஷ் மனைவியிடம் கேட்டபடி வர...

“சார் ரொம்ப பிஸி போல.”

“இல்லையா பின்ன. பொண்ணோட அண்ணனாச்சே. இனி கீர்த்தி கல்யாணத்தப்பதான் பிஸியாயிருக்க முடியும்.”

“சாப்பிட்டீங்களா?”

“அதெல்லாம் ஆச்சு. நான் மறந்தாலும் மச்சான் இழுத்துட்டுப் போயிட்டாங்க. நல்ல ஜோடிப்பொருத்தம்ல கார்த்தி. வித்யா டல்லானது தெரியவுமே உட்கார ரெடி பண்ணச் சொல்லி சான்ஸேயில்ல.” ஆனந்திற்கு புகழாரம் சூட்ட...

“உங்க மச்சானுக்கு பேன்ஸ் க்ளப் ஆரம்பிச்சிடுவீங்க போல?”

“அதெல்லாம் ஆரம்பிச்சி நிறைய நாளாகிருச்சி. கல்யாணம் முடிஞ்சி பாப்பாக்கு பெயர் வைக்கிற பங்க்ஷன் வேற இருக்கு. ஆக மொத்தம் எனக்கு ஒரு வாரம் நோ ரெஸ்ட்.”

“டயர்டாயிருந்தா வீட்டுக்கு வந்து ரெண்டு மணிநேரம் படுத்துக்கறீங்களா?”

“ஹேய் கருவாச்சி! சந்தோஷத்துல டயர்டாவது ஒண்ணாவது. மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை படுக்க வைக்க வசதி செய்து குடுக்கணும். வேற யாராவது வந்தாங்கன்னா இடம் சொல்லி வரச்சொல்லணும்.”

“கொஞ்சம் பக்கத்துல வாங்களேன்” என்றழைக்க...

‘என்ன கருவாச்சின்னு சொல்லியும் என்னை அமைதியா கூப்பிடுறா. ஒருவேளை அடிக்கக் கூப்பிடுறாளோ’ என நினைத்தபடி அவள் முகம் பார்க்க, ஏதோ போல் அமர்ந்திருந்தவள் அருகிலமர்ந்து, “என்ன கார்த்திமா டல்லாயிருக்க?” என்றான்.

கணவன் தோள் சாய்ந்து, “எனக்கு என்னவோ மாதிரியிருக்குங்க. என்னன்னே சொல்லத் தெரியாத ஒரு ஃபீல்.”

“சரியா சாப்பிட்டிருக்க மாட்டமா. பாப்பாவுக்கு பால் குடுக்கிறல்ல அதான் படபடப்பா இருக்கும்.”

“ப்ச்... அப்படியில்லங்க. ஏதோ ஒண்ணு அடி வயித்துல பிசையுது. என்னவோ நடக்கப்போகுதுன்னு தோணுது.”

“வித்யா கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பிடுவாள்ல அதை நினைச்சிட்டிருந்திருப்ப. மத்தபடி எல்லாமே சரியாதான் நடக்குது. நீ மனசைப்போட்டுக் குழப்பிக்காம ரிலாக்ஸாயிருமா. இப்ப நீ வீட்டுக்கு வா” என்றான் மென்மையாக.

“அண்ணா நேரம் ஆக ஆக மனசுக்குள்ள படபடப்பாயிருக்கு.” கார்த்திகாவைப் போல் தன் நிலையை தன் அண்ணனிடம் சொன்னார் சுபாஷிணி.

“ஏன்மா?”

“எல்லாம் நல்லாவே நடக்குதுன்னாலும், ஐயர் சொன்னது அப்பப்ப கண் முன்னால வந்துபோகுது. கல்யாணம் பேசி பத்திரிக்கை அடிச்ச பிறகுதான் குழந்தை பிறந்தப்ப பிரச்சனையாச்சி. அதுக்கு முன்ன பொண்ணு பார்க்கிறதுலயே குழப்பம். எத்தனை வருஷமானாலும் இவங்களுக்குதான் முடிச்சின்னு சொன்னதால வர்றது வரட்டும்னு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டோம். தப்பா எதுவும் ஆகிடக்கூடாதுன்னு பயமாயிருக்கு. எது எந்த ரூபத்துல வருமோன்ற பயத்துல சாமியை வேண்டிட்டிருக்கேன்ணா” என்றவர் குரலில் அவரறியாமல் ஒரு பயம்.

“என்ன சுபா அண்ணன் தங்கை ரெண்டு பேரும் எதையோ சீரியஸா பேசிட்டிருக்கீங்க?”

“ஒண்ணுமில்ல அண்ணி. கல்யாணத்துல யாருக்கும் எந்த மனவருத்தமும் இல்லாம சரியா நடக்கணும்னு பேசிட்டிருக்கோம்.”

“அதெல்லாம் வராது. நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிங்களா இல்லையா? முதல்ல சாப்பிட வாங்க. அப்புறம் நிதானமா உட்கார்ந்து பேசலாம்” என்று அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

மண்டபத்திலிருந்து பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட, உறவினர்கள் பலர் மண்டபத்திலேயே தங்கிவிட, மணமகன் அறைக்குப் பக்கத்தில் மாப்பிள்ளை வீட்டினர் இருந்தார்கள்.

வேகமாக சுபாஷிடம் வந்த ஆனந்த், “சுபாஷ் பக்கத்துல எதாவது லாட்ஜ் இருக்கா?” எனக் கேட்க...

“யாருக்கு மச்சான்? இன்னும் ஃப்ரண்ட்ஸ் வர்றாங்களா? அப்படினா மண்டபத்துலயே ரூம் இருக்கு. நான் அரேஞ்ச் பண்றேன்” என்றான்.

“ஃப்ரண்ட்ஸ்கு இல்ல சுபாஷ். எனக்குதான் வேணும். பசங்களை என் ரூம்ல தங்க வச்சிட்டேன். பசங்களோட இருந்தா தூங்கவிடமாட்டாங்க. நேற்று வரை ஒர்க் அதிகம். சுத்தமா ரெஸ்ட் கிடையாது. தூங்கி எழுந்தா கொஞ்சம் பெட்டராயிருக்கும்னு ஃபீல் பண்றேன்.”

“இந்த டைம் லாட்ஜ்... ம்...” என யோசித்தவன், “பேசாம வீட்டுக்கு வர்றீங்களா? அத்தை வீட்ல படுத்துக்கோங்க.”

“அங்கேயும் ரிலேடிவ்ஸ் இருப்பாங்களே சுபாஷ்?” என்றான் கேள்வியாக.

“பேசாம மாடியில படுத்துக்கறீங்களா? மொட்டை மாடிதான்னாலும் காற்று சூப்பரா வரும். டிஸ்டர்ப் இல்லாம பார்த்துக்கறேன். நீங்க நிம்மதியா தூங்கலாம்.”

“அப்ப டபுள் ஓகே.”

“சரி கிளம்புங்க. நான் வீட்டுக்குதான் போறேன். ஒரு நிமிஷம் அப்பாகிட்ட சொல்லிட்டு வந்திடுறேன்” என்று அனுமதி வாங்கி வீடு வந்து அத்தையின் மூலம் சின்ன கட்டில் ஏற்பாடு செய்து, அத்துடன் ஒரு டேபிள் பேனும் எடுத்து வந்து கொடுத்து படுக்கச் சொன்னான்.

“இருக்கிற வேலையில நானும் உங்களை டிஸ்டர்ப் பண்றேன் சுபாஷ்” என்றான் சங்கடமாக.

“அட இதிலென்ன மச்சான் கஷ்டம். உங்களை இப்படி மொட்டைமாடியில படுக்க வைக்கிறேனேன்னுதான் வருத்தம். விடுங்க நெக்ஸ்ட் மேல ஒரு ரூம் கட்டிடலாம். உங்களுக்கு துணைக்கு ஹரீஸ் வரச்சொல்லியிருக்கேன்; அவன் வந்ததும் நான் மண்டபத்துக்கு போறேன்” என்றான்.

“நீங்களும் கொஞ்ச நேரம் தூங்கலாமே சுபாஷ்?”

“அதெல்லாம் எங்கயாவது படுத்து விடியுறதுக்குள்ள ஒரு குட்டி தூக்கத்தைப் போட்டுருவேன்.”

“அப்ப உட்காருங்க பேசலாம்” என்று கட்டிலில் அமர்ந்தபடி, “ம்.. பக்கத்துலயே முறைப்பொண்ணு. லவ் மேரேஜா சுபாஷ்?” ஆனந்த் கேட்க...

“உண்மையைச் சொல்லணும்னா, நான் ஒரு தப்பு செய்யுறதுவரை கார்த்தியை நேருக்கு நேரா பார்த்ததுகூட கிடையாது மச்சான்.”

“பக்கத்துல இருந்துமா!” என ஆச்சர்யமாய் கேட்டான்.

தான் வீடு மாறிப் படுத்ததில் ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்து, “எங்க மாமா அத்தை மேல உள்ள லவ்வால குடும்பத்தை பிரிச்சி வச்சிருந்தார். நான் வீடு மாறிப்போய் சேர்த்து வச்சிட்டேன்” என பெருமையாகச் சொல்ல...

“அதோட இவன் கல்யாண டைம்ல அடிச்ச லூட்டியையும் கேளுங்க ப்ரோ” என்று அங்கு வந்த ஹரீஸ் மற்றதையும் போட்டுக் கொடுக்க, சிரித்து வயிறே புண்ணானது ஆனந்திற்கு.

சிறிது நேரம் பேசிவிட்டு சுபாஷ் சென்றுவிட, அங்கிருந்த திண்டில் ஹரீஸ் படுத்துக்கொண்டான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
இரவு ஒரு மணியளவில் ஆனந்திற்கு தாகமெடுக்க, சுற்றிலும் பார்க்க தண்ணீர் இல்லையென்றதும் கீழே இறங்கிச் சென்றான். அங்கேயோ கதவு பூட்டியிருக்க என்ன செய்வதென்று தெரியாமல் மேலே வந்தவனுக்கு தண்ணீரில்லாமல் இருக்க முடியாதென்பதாய் தோன்றியது. நடுவிலிருந்த திண்டைத் தாண்டி சுபாஷின் வீட்டிற்குச் செல்ல, அங்கேயும் கதவு பூட்டியிருக்க, ‘இங்கேயுமா!’ என்று சோர்வு வந்தது. வேறு வழியில்லாமல் கதவைத் தட்டினான்.

“யாரது?” என்ற குரலில் சந்தோஷித்து. “நான்தான் மிஸஸ்.வித்யானந்த். தண்ணி வேணும். அங்க கதவு பூட்டியிருக்கு” எனும்போதே கதவைத் திறந்து, “மண்டபத்துல படுக்கலையா?” என்றாள் சின்னக்குரலில்.

“நீ என்ன கேட்கிறன்னு புரியலமா?” என்றான் பாவமாய்.

“சத்தமா பேசாதீங்க” என்று ஆனந்தின் அருகில் வந்து, “யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க. இருங்க தண்ணி கொண்டு வர்றேன்” என்று நகர்ந்தவள் அப்படியே நின்று, “அச்சோ தண்ணீர் எடுக்க முடியாதே” என்று மருதாணி போட்ட கையைப் பார்க்க...

“எங்கயிருக்கு சொல்லு?” என்றதும் அவள் கைகாட்டிய இடத்திலிருந்த தண்ணீரை எடுத்து வேகமாக தொண்டைக்குள் இறக்கி, “அப்பாடா. ரொம்பவே தாகம் தியா. அதான் தப்புன்னு தெரிஞ்சும் வரவேண்டியதாகிருச்சி. சாரி” என்றான்.

“பரவாயில்ல சீக்கிரம் கிளம்புங்க.”

“நான் கிளம்புறது இருக்கட்டும். நீ ஏன் இன்னும் தூங்காம இருக்க? உடம்பு வேற சரியில்லாம இருக்கிறப்ப சீக்கிரம் தூங்க வேண்டாமா?”

“மருதாணி வச்சதால டைமாகிருச்சிங்க. இதோ படுக்கத்தான் போறேன்.”

“தண்ணி குடிக்கத்தான் வந்தியா?” அவளின் ‘ம்’ல் “தண்ணி சூடு பண்ணியிருக்கா? இல்ல நான் சூடு பண்ணித்தரவா?” எனக்கேட்க...

“அச்சோ! அதெல்லாம் வேண்டாம். நீங்க இப்ப குடிச்சதுதான்” என்றதும் அதை எடுத்து வந்தவன் மருதாணியை தொந்தரவு செய்ய விரும்பாது அவனே குடிக்கக் கொடுக்க... மறுப்பாக வந்த தலையசைப்பைக் கண்டுகொள்ளாது, “நான்தான தர்றேன் குடி தியா” என்றான் மென்மையாக.

பாவையவளின் பார்வை அவனையே சுற்றியிருக்க வாய் சிறிதாகத் திறந்து தண்ணீரை உள்வாங்க, குடித்து முடித்ததும் பாட்டிலை அங்கே வைத்து, அவளின் உதட்டிற்குக் கீழ் சிந்திய நீரை தன் கர்சீப்பால் துடைத்து, “பீவர் இல்லதான” என்று எதையும் யோசிக்காது அவள் கழுத்தில் கைவைக்க... பதறி ஓரடி பின்னே நகர்ந்தாள் மங்கையவள்!

“லைட்டா ஹீட் இருக்கு. போய்ப்படு. மேரேஜ் முடிஞ்சதும் ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு வரலாம் சரியா?” என்றதும், ‘ம்...’ என்ற தலையாட்டல் மட்டுமே வர, இரவு நேரத் தனிமை... நாளை மனைவியாகப் போகிறாள் என்ற உரிமையிருந்தும் தள்ளி நிற்கும் அவனின் கண்ணியம் பிடித்தது வித்யாவிற்கு. இந்தக் கள்ளமில்லா அக்கறை இன்னுமின்னும் பிடித்தது.

“என்ன மிஸஸ்.வித்யானந்த் பார்வையெல்லாம் ஒரு மாதிரியிருக்கு? ஹேய் என்னை நம்பி வீட்டுல விட்டிருக்காங்க. நீ பார்க்கிறதைப் பார்த்தா அந்த நம்பிக்கையைக் கெடுக்க வச்சிருவ போலிருக்கு” என்றான் கிண்டலாக.

“உங்களை...” என்று சிணுங்க...

“என்னை நீ எது வேணும்னாலும் செய்யலாம். என்னை உனக்குப் பிடிச்சிருக்கா தியா?” என்றான் ஒரு எதிர்பார்ப்புடன்.

“எவ்வளவு சீக்கிரம் கேட்குறீங்க?”

“முதல்லயே கேட்டிருந்தா, கண்ணைப் பார்த்து நேருக்கு நேரா பிடிக்கலன்னு பட்டுன்னு சொல்லிடுவியே. தெரிஞ்சே யாராவது ரிஸ்க் எடுப்பாங்களா?”

“உஷார்தான்” என்றாள் உதடு சுழித்து.

“அதான் உன்னைப் பிடிச்சேன். எப்புடி” என்ற சட்டைக்காலரைத் தூக்கிவிட்டு புருவம் உயர்த்த... ‘சூப்பர்’ என்றாள் விரல்களால்.

அந்தக் கையைப் பிடித்து, “அழகா போட்டிருக்காங்க. பெயர் எழுதுவாங்களே என்ன போட்டிருக்க?”

“பெயர்லாம் எதுவும் போடல. டிசைன் மட்டும்தான்.” அவனிடமிருந்து கையை இழுக்க முயற்சிக்க...

“பொய்தான?” என்றதும் அவள் சிரிக்க, “கேடி” என்று கையை விட்டு, “சரி ரொம்ப நேரமாகிருச்சி போய்ப்படுத்துத் தூங்கி காலையில பிரெஷ்ஷா மணமேடைக்கு வரணும் ஓகே” என்றான்.

“படுக்காம எப்படிங்க தூங்குறது?” அவனுடனான நிமிடங்களை அதிகரிக்க, வேண்டுமென்றே அவனிடம் பேச்சை வளர்த்தாளோ!

“அதான, படுக்காம எப்படித் தூங்குறது? நான்லாம் ஆபீஸ்ல சேர்ல உட்கார்ந்துல்ல தூங்குறேன்” என்றதில் வித்யா தாண்டி, கதவின் மறுபுறமிருந்த கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தி வாயை மூடிச் சிரித்தாள்.

வித்யா வந்து சில நிமிடங்களில் வந்தவள் ஆனந்தைப் பார்த்து அதிர்ந்தாலும், அவர்களின் பேச்சைக் கேட்டு மெல்ல சாத்திவிட்டு யாரும் வராமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அப்ப உங்க ஆபீஸ்ல வந்து தூங்கினா, லட்சக்கணக்குல சம்பளம் தர்றாங்களா? தெரிஞ்சிருந்தா நானும் ஒரு அப்ளிகேஷன் போட்டிருப்பேனே” என்றாள் பாவனையாக.

“ஹா..ஹா இல்லையா பின்ன. தி கிரேட் ஆனந்தராஜ்னா சும்மாவா. அவனவன் நான் தூங்குறதுக்காகவே வேலை தரமாட்டான். நீ சின்னப்பொண்ணு அதனால தூங்குற வேலையைத் தரமாட்டாங்க” என்றான் புன்னகையுடன்.

“நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்குமாம்” என்று உதடு சுழிக்க...

“நீ கேட்டதால நான் பதில் சொன்னேன். உனக்கு ஆட்சேபணையில்லன்னா, நேத்து நான் பேசணும்னு சொன்னதை சொல்லட்டுமா?”

“சொன்னால்தான் உங்களால நிம்மதியா இருக்க முடியும்னா சொல்லுங்க. இல்ல நான் நார்மலாயிருக்கேன்னு உங்களுக்குத் தோணிச்சின்னா விட்ருங்க.”

“அ.. அது தியா...”

“ஏய் அண்ணி, அக்கா வர்றா” என்ற கீர்த்தியின் குரலில் பதறிய வித்யா, “நீங்க இங்கயிருந்து கிளம்புங்க” என்றாள்.

“நான் போனால்தான்மா தப்பாகும்.”

“அச்சோ! நீங்க இங்கயிருந்தா இன்னும் தப்பாகும்ங்க” என்றாள் தவிப்புடன்.

“தங்கச்சிதானமா தப்பா எடுத்துக்கமாட்டா” என அவளுக்கு புரியவைக்க முயற்சித்தான்.

“ஐயோ! அது கீர்த்தியில்லங்க. கார்த்தி அண்ணி. சில விஷயங்கள்ல அவங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். சூழ்நிலை சரியில்லன்னா எப்பேர்பட்ட நல்லவங்களும் தப்பாதான் எடுப்பாங்க.”

“கீர்த்தி அங்க ஏன் நிற்கிற? கிச்சன்ல ஏன் லைட் எறியுது? யாராவது இருக்காங்களா?” என அருகில் வருகையில் ஆனந்த், வித்யா இருவரின் குரலும் கிசுகிசுப்பாக வர, சட்டென்று கதவைத் திறந்தவள் கண்களில்... சுவரில் ஒரு கையை ஊன்றி சாய்ந்தபடி ஆனந்த் நிற்க, அவனருகில் அங்கிருந்த சுவரில் முதுகை முழுவதும் சாய்ந்தபடி வித்யா நிற்க... அதைக்கண்ட கார்த்திகாவிற்கோ தவறாகப்பட்டது.

தன்னை மீறின கோபம் எழ அதை அடக்கி, “இங்க என்ன பண்ற வித்யா?” என்றவள் அனந்திடம் திரும்பி, “இந்நேரத்துல இங்க என்ன பண்றீங்க?” சத்தம் வெளியே வராமல் கோபமாகக் கேட்க...

“தண்ணி குடிக்க வந்தேன். அங்க கதவு பூட்டியிருந்ததால வேற வழியில்லாம இங்க வரவேண்டியதாயிருச்சி.” நேரடியாக மன்னிப்பு கேட்காமல் அவன் குரலே அதைக் கேட்டது.

“தண்ணி குடிச்சாச்சினா டக்குன்னு கிளம்புங்க. யாராவது பார்த்தா தப்பா போயிடும்.”

“சரிமா” என்று அவன் கிளம்ப கதவடைத்து, “கொஞ்சமாவது அறிவிருக்கா வித்தி. எனக்குப் பதிலா மாமா வந்திருந்தா? உங்களை காவல் காக்க ஸ்பை வேற” என்று தங்கையையும் திட்டினாள்.

கார்த்திகா வித்யாவைத் திட்டுவது ஆனந்த் காதில் விழ, அனாவசியமாக அவளைத் திட்டு வாங்க வைத்ததில், மனம் வாடிப்போனது.

அறைக்குள் வந்தும் கோபம் போகாமலிருக்க, “எப்பயிருந்து வித்தி இப்படி மாறின? இந்நேரம் தனியா ஒரு ஆண் கூட...”

“அண்ணீ.. ஏன் இப்படிப் பேசுறீங்க?”

“அக்கா அவங்க தப்பா எதுவும் பேசிக்கல. அண்ணா அவ்வளவு டீசண்டா பேசினதாலதான், தண்ணீர் குடிக்கப்போன நான் உள்ள போகாமலே நின்னுட்டேன்.”

“சரி தப்பு இந்த இடத்துல இல்லடா. மாமா பத்தி உனக்குத் தெரியும்தான. இப்படி ஒரு சூழ்நிலையில் பார்த்தா கல்யாணத்தையே நிறுத்திடமாட்டாங்களா?”

“அக்கா நீ ஓவரா கற்பனை பண்ற. அண்ணாகிட்ட பழகிப்பாரு அவர் எவ்வளவு நல்லவர்ன்றது தெரியும். நீ கூட மாம்ஸோட கல்யாணத்துக்கு முந்தின நாள் டூயட் பாடினது ஞாபகமிருக்கட்டும். இவங்க அப்படி எதுவும் செய்யல” என்றாள் அக்காவிற்கு ஆனந்தை புரியவைப்பதற்காக.

“நாம உறவு கீர்த்தி. அவர் அந்நியம்ன்றதைப் புரிஞ்சி பேசு.”

“புரியுதுக்கா. அங்க வீடு பூட்டியிருந்ததால இங்க வந்துட்டாங்க. சூழ்நிலை கரெக்டா அந்நேரம் அண்ணி வந்துட்டா. இதே நான் வந்திருந்தாலும் அண்ணா சாதாரணமா பேசிட்டுதான் இருப்பாங்க. அம்மாவோ, அத்தையோ வந்திருந்தாலும் காரணம் இதுதான்னா புரிஞ்சிட்டிருந்திருப்பாங்க. நீதான் பெரிய விஷயமா பேசிட்டிருக்க” என எரிச்சல் பட்டாள்.

“எது எப்படியோ கீர்த்தி, எனக்கு எதுவும் பிடிக்கல. அதே மாதிரி நீ அண்ணா, அண்ணான்னு ஓவரா உரிமை கொண்டாடுறதும் சுத்தமா பிடிக்கல” என்றாள் ஆனந்த் மீதான பிடித்தமின்மையை முகத்திலும் வார்த்தையிலும் காண்பித்து.

“அண்ணீ!” என்ற அதிர்வு வித்யாவிடம். இதுவரையிருந்த நல்ல மனநிலை மாறி சின்னதாக பயம் சூழ்ந்தது.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top