• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
16


கணவனின் செயலில் மனதின் மகிழ்ச்சி முகத்தில் தெரிய பிள்ளைகளைக் கவனிக்கச் சென்றாள். மனதில் கணவனுடன் யுகம் யுகமாக வாழ்ந்த திருப்தி இருந்தது.

கிணற்றடியில் பிள்ளைகளைக் குளிக்க வைக்கத் தயாராகி, பெண் பிள்ளையான அபிநயாவிற்கு அந்த வயதில் புரியும் அளவிற்கு, சின்னச் சின்னதான அறிவுரைகளாக, “அபி குட்டிமா. அப்பா, அண்ணன் தவிர மத்த ஆண்கள் தூக்கினா போகக் கூடாது. கட்டிப்பிடிக்கவோ, முத்தம் கொடுக்கவோ விடக் கூடாது” ஆண்களின் தொடுகைகள் பற்றியும், அவர்களிடம் பழகும் விதம் எல்லாம் சொல்லிக் கொடுத்தாள்.

அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சரணிடம், “உனக்கும் சொல்றேன்டா. பொண்ணுங்ககிட்டப் பழகும் போது கொஞ்சம் தள்ளி நின்னு பேசணும். உனக்குன்னு ஒருத்தி வருவா. அவளைத் தவிர மத்த எல்லாரும் அக்கா, தங்கை தான். நான் இல்லன்னா கூட அப்பா, தங்கச்சிய கடைசி வரை நல்லா பார்த்துக்கணும். நல்ல பிள்ளைங்களா வளரணும். அம்மா சொல்றது புரியுதா?”

“புரியுதுமா” என்று இருவரும் சொல்லி தலையை ஆட்டினார்கள்.

சரவணன் தாயிடம், “இனிமேல் இது மாதிரி பேசாதீங்கம்மா. எங்களுக்கு எப்பவும் நீங்க வேணும்” என்றதும் மகனின் வார்த்தைகளில் புன்னகைத்தவள், “சரிடா” என்றாள்.

‘புரிஞ்சிதோ, இல்லையோ, இதுல கொஞ்சம் நியாபகம் வச்சிருந்தா கூட போதும். என் பிள்ளைகள் நல்லா வருவாங்க’ என நினைத்தவாறு நீர் இறைத்தாள்.

“ஸ்... மறந்து போச்சே குட்டிங்களா. குளிச்சிட்டிருங்க அம்மா சாப்பாடு வடிச்சிட்டு வந்திடுறேன்” என்று உள்ளே சென்றாள்.

கிணறு ரொம்ப உயரம் கிடையாது. ஆனால், ஆறு வயதுக் குழந்தை எட்டிப் பார்க்கும் அளவு கம்மியும் கிடையாது. அருகிலேயே துணி துவைக்கும் கல் இருப்பதால் அதில் ஏறித்தான் அபிநயா குருவிக்கூட்டை பார்வையிடுவது. கிணற்றில் இருக்கும் மீன்களுக்கு இறை வைப்பதில் அபிக்கு ஆர்வம் அதிகம். அப்பொழுது தான் அந்த விபரீதம் நடந்தது.

தண்ணீர் விடச் சென்ற வெற்றிவேலுக்கு மனதின் உறுத்தல் பெரிதாகிக் கொண்டே போக, காரணமே இல்லாமல் கண்ணீர் வந்தது. என்ன என்று காரணம் தெரியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது. ‘இல்ல எதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகுது.’ நேற்று மனைவி பேசிய பேச்சு அந்த நேரம் நியாபகம் வர, ‘இது சரியில்லை’ என்று பொறுப்பை அங்கு வேலை செய்பவரிடம் கொடுத்துவிட்டுத் தன் டிவிஎஸ்ல் வீட்டிற்கு கிளம்பினான்.

சோறு வடித்து பிள்ளைகளைப் பார்க்க வந்த தனலட்சுமி, கல்லில் சின்னவள் ஏறி நிற்பதைப் பார்த்து வேகமாக வந்தாள்.

குருவியைப் பார்த்துக் கொண்டிருந்த அபிநயா, அந்த நேரம் ஒரு குருவி சர்ரென்று கிணற்றுக்குள் பாய, அதைப் பார்த்த குழந்தை, “ஐயோ! அண்ணா! குருவி கிணத்துக்குள்ள விழுகுது பாரு” என்று காலை எம்பி எட்டிப் பார்க்கும் பொழுதுதான் வந்தாள் தனலட்சுமி.

“குட்டிமா நில்லு. அப்படிப் பார்க்காத” என்று சொல்லி முடிக்க, சரவணன் தங்கையைப் பிடிக்க அருகே வர, குழந்தை கிணற்றுக்குள் விழுந்திருந்தாள். அவளைப் பிடிக்க வந்த தனலட்சுமி சற்றும் யோசிக்காமல் கிணற்றில் குதித்தாள்.

அதே நேரம் வாசலில் நுழைந்த வெற்றிவேல் மனைவியின் சத்தத்தில் உள்ளே வர, மகனின் “அம்மாஆஆஆஆ” என்ற அலறல் கேட்டு அவன் கால்கள் தன்னால் வேகமெடுத்து கிணற்றுப் பக்கம் செல்ல, அங்கே அவன் பார்த்த காட்சி உயிர் வரை தாக்கி உலுக்கி எடுத்தது.

“த...ன..ம்..” என்ற அவள் கணவனின் குரல் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களைச் சென்றடைந்தது.

வெற்றிவேல் பார்க்கும் பொழுது குழந்தையைத் தூக்கி தோளில் வைத்ததில், தண்ணீர் மனைவியின் சுவாசத்திற்கு மேல் வர, எம்பிப் பார்த்தும் மூச்சிக்குத் திணறியவளை, காப்பாற்ற உள்ளே குதிக்கச் சென்ற வெற்றிவேலுவை பையன் ஒரு கையால் பிடிக்க, மனைவியோ ஒற்றைக் கையால் அவனைத் தடுத்தாள். ஒற்றைக் கையால் குழந்தையைப் பிடித்து, ஒற்றைக் கையால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு ஜாடை செய்தாள். அவளுக்குத் தெரியும்.. கணவன் பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொள்வான். வேறு திருமணம் முடிக்க மாட்டான் என்று. மனம் கணவனின் அன்பில் அமைதியடைய, அனைத்தும் சில விநாடிகளிலேயே நடந்தது.

தோளில் இருந்த அபிநயா தான் காப்பாற்றப்பட்டது தெரிந்ததும், அம்மாவையே பார்த்துக் கொண்டு, அவ்வளவு அருகாமையில் தாயின் உயிர் பிரிவதைப் பார்க்க, “அம்மா... அம்மா” என்றழைத்தவளின் குரல் பின்பு அவளுக்கே கேட்கவில்லை.

குழந்தையைப் பிடித்த பிடியையும் தளர்த்தாமல், கணவனைப் பார்த்தவாறு கண்களின் வழியே கொஞ்சம் கொஞ்சமாக தனலட்சுமியின் உயிர் பிரிந்தது.

பையனோ அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருக்க, வெற்றிவேல் நடப்பது அனைத்தும் கனவாக இருக்கக் கூடாதா என்று ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தான். அருகில் உள்ளவர்கள் வந்து இருவரையும் மேலே கொண்டு வர, குழந்தையை அங்கிருந்த பெண் வாங்க, தனலக்ஷ்மி சடலமாக மேலே வந்தாள்.

அருகில் இருந்தவர்கள் வெற்றிவேலுவைத் தேற்றி, தொலைபேசி எண் வாங்கி இருவீட்டினருக்கும் தகவல் சொல்ல, தனத்தின் அப்பா ஊர் தூத்துக்குடி என்பதால் சீக்கிரமே வந்தார்கள். வந்தவர்கள் அழுத அழுகை அனைவரையும் உருக்கியது.

“பாவி பாவி என் பொண்ணைக் கொன்னுட்டியே.” மகளின் மேல் உள்ள பாசத்தில் பெற்றவர்கள் வார்த்தை விட்டார்கள். “உன்னை யாரு வீட்டுக்குள்ள இவ்வளவு பெரிய கிணறு வெட்டச் சொன்னது? அருமையா வளர்த்த பொண்ணை இப்படிப் பண்ணிட்டியே? உன்னால பார்த்துக்க முடியலன்னா எங்ககிட்ட அனுப்பிருக்கலாமே? இன்னொரு முறை என் பொண்ணை எங்க போயி பார்ப்பேன்.”

மற்ற வார்த்தைகளை அவர்களின் கோவத்தில் விளைந்த வார்த்தைகளாக ஒதுக்கியவனால், ‘கொன்னுட்டியே’ என்ற வார்த்தை பலமாகத் தாக்கியது. முன்தினம், ‘வேண்டாம்ங்க. சாமி குத்தமாகிரப் போகுதுன்னு தடுத்தாளே. நான் கேட்காமல் விட்டுட்டேனே. கடவுள் பழி வாங்கிருச்சா? பழிவாங்கினா அது எப்படிக் கடவுளாகும்? என் தனத்தை என்கிட்ட இருந்து மொத்தமாகப் பிரிச்சிருச்சா? நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்?’ அதுவரை அழாதவன் கதறி அழுதான்.

“தனம் உன்னை நானே கொன்னுட்டேனே” என்ற வார்த்தை அவன் வாயிலிருந்து வெளி வர, அவன் மாமனார் உறவுகளுக்கு அதுவே சாட்சியானது. தட்டிக்கேட்கப் போன தகப்பனை மகன் தடுத்து, “அக்காவை நிம்மதியா அனுப்பனும் அப்பா மச்சான் ஏதோ புலம்புறாரு என்பதற்காக தப்பா பேச வேண்டாம். அவரைப் பற்றி நமக்குத் தெரியும். அமைதியா இருங்கப்பா. அப்புறமா விசாரிக்கலாம்” என்றான்.

வெற்றிவேலுவின் அப்பா, அம்மா, அக்கா மூவரும் கார் பிடித்து ஐந்து மணியளவில் வர, மருமகளை அந்தக் கோலத்தில் பார்த்த மாமியார் மூர்ச்சையானார்.

“இருட்டுறதுக்குள்ள எடுக்கணும். தண்ணியில் இருந்த உடம்பு நாளை வரை தாங்காது” என்று உறவுகள் சொல்ல, வெகு விரைவில் அனைத்தும் முடிந்தது. ஊர் வழக்கப்படி அப்பாவுக்கும், பையனுக்கும் மொட்டை அடிக்கப்பட்டு சாங்கியங்கள் செய்யப்பட்டது.

‘நெருப்புன்னா வாய் வெந்துடாதுங்க’ என்று சொன்ன தனலக்ஷ்மியின் உடல் நெருப்பில் வெந்து கொண்டிருந்தது.

மூன்றாம் நாள் தனத்தின் தம்பி கேசவன், சரவணனை தனியே விசாரிக்க அழைத்துச் சென்றான். அவனுக்குத் தெரியும் அக்கா கணவன் மேல் தவறு இருக்காது என்று. அவர்கள் இருவருக்கும் இடையேயான அன்பு, காதல் அவனுக்குத் தெரியும். அவனுக்கு அவனின் அக்கா தான் உலகம். தன் அக்காவின் மேல் எவ்வளவு பாசம் என்றால், தன் மகள்களுக்கு ஆரா ‘தனா’, கீர்த் ‘தனா’ என்று அக்காவின் பெயரைச் சேர்த்து வைக்கும் அளவிற்கு. பெரியவள் அக்காவைப் போல் ஜாடையில் இருக்கவும், அவள் மேல் பாசம் அதிகம். அக்கா உயிருடன் இருந்தவரை ஆரா என்று அழைத்தவன், அக்காவின் இறப்புக்குப் பின் ‘தனா’ என்றே அழைப்பான்.

அப்பா, அம்மா கூட இரண்டாம் பட்சம் தான். திருமணத்திற்குப் பின் வீட்டிற்கு விடுமுறைக்கு கூப்பிட்டாலும், ‘அத்தான் தனியா இருப்பாங்க அத்தனை நாள் அவங்களை இங்கேயும் தங்க வைக்க முடியாது. வேணும்னா காலையில வந்து, நைட் வீட்டுக்குப் போகுற மாதிரி வர்றேன்’ என்று அதன்படியே நடந்தும் கொண்டாள்.

தம்பியின் திருமணத்திற்கு மூன்றே நாட்கள், அதுவும் கணவன் இருக்கும் வரையே இருந்தவள் மேல், அந்த நேரம் கோவம் வந்தாலும், அந்த கணவன், மனைவி அந்நியோன்யம் அதை மறக்க வைத்தது. அப்பேர்பட்ட அக்காவை மச்சான் கொன்றிருப்பார் என்பதை அவன் நம்பவில்லை. அதனாலேயே பையனிடம் கேட்டான். தன் தாய் மாமனிடம் நடந்த அனைத்தையும் சொன்னதும், தன் நினைப்பு பொய்க்கவில்லை என்று எழுந்தான் கேசவன்.

மூன்றாவது நாள் காரியம் முடிந்ததும் கிளம்பி தயாராக வந்த மாமனார் அவனருகில் வந்து, “மருமகனே பிள்ளைங்களை எங்களோட அனுப்புங்க. நாங்க பார்த்துக்கறோம். இப்ப முடியாதுன்னா பதினாறுக்கு வந்து கூட்டிட்டுப் போறோம்” என்றார்.

“என் பிள்ளைங்களை நான் பார்த்துக்குவேன். தேவைன்னா நீங்க அப்பப்ப வந்து பார்த்துக்கோங்க. இது என் தனத்தோட கடைசி ஆசை. பிள்ளைங்களை கூப்பிட்டா கூட வரமாட்டாங்க. வேணும்னா கூப்பிட்டுப் பாருங்க” என்று சொல்ல,

“எங்க கூட வர்றியா? உங்களை நல்லா பார்த்துக்கறோம்” என்று பேரனைக் கூப்பிட்டு தாத்தா கேட்க,

“நான் வரமாட்டேன் தாத்தா. அம்மா என்கிட்ட அப்பாவையும், குட்டிமாவையும் பார்த்துக்கச் சொல்லியிருக்காங்க” என்றான்.

அனைவரும் அவனை பார்த்து, “எப்ப?” என்று கேட்க,

“அ... அம்மா கிணத்துல விழறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி” என்றான் அழுகையுடன்.

‘உனக்கு முன்னாடியே தெரிஞ்சிதா தனம். என்கிட்ட சொன்னது பத்தாதுன்னு பையனிடமும் சொன்னியா? இது எனக்கு தெரிஞ்சிருந்தா நான் உன்னை விட்டு வெளியே போயிருக்கமாட்டேனே தனம்’ என்று உள்ளுக்குள் அழ,

அபியிடம் சென்று கூப்பிட அவள் தலையை மட்டும் ஆட்டினாள். “வாயைத் திறந்து சொல்லுமா. தாத்தா கூட வர்றியா?” அப்பொழுதும் குழந்தை தலையையே ஆட்டினாள்.

வெற்றிவேலுவின் அம்மாவிற்கு சின்னதாக சந்தேகம் வந்தது. “அபிமா என்கிட்ட பேசு” என்று குழந்தையை தன் பக்கம் திருப்பி கேள்வி கேட்க, குழந்தை முழித்தாள். அதன்பின் அனைவரின் கவனமும் அபிநயாவிடம் செல்ல, குழந்தை பேசாமல் அப்பாவிடம் சென்றமர்ந்தாள்.

அவளின் தந்தைக்குமே, ‘ இவள் ஏன் கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை?’ என்று அவளை தன்னைப் பார்க்குமாறு திருப்பி, “பாப்பா சாப்பிட்டியா?” என கேட்டான்.

தலையசைத்து, “ஆமாம்” என்று சொல்ல,

“இல்லடா சாப்பிட்டேன் அப்பான்னு வாயைத் திறந்து சொல்லுமா.”

“ம்... சாப்பிட்டேன்பா” என்று சொல்லி முடித்தாள் குழந்தை. ஆனால், அனைவரின் முகமும் தங்களின் உச்சபட்ச அதிர்ச்சியை வெளிக்காட்டியது.

ஆம் சாப்பிட்டேன் என்று சொல்லி முடித்தாள். ஆனால், யாருக்கும் கேட்கவில்லை. தாயை அந்நிலையில் பார்த்த அதிர்ச்சியில் ஊமையானாள் அபிநயா.

“கடவுளே! உனக்கு கண்ணில்லையா? எம்புள்ளையத்தான் பறிச்சிட்டேன்னா, பச்சப்புள்ள வாயையும் புடுங்கிட்டியே. என்ன அழகா பேசிட்டிருந்த குழந்தை. இப்ப பேச்சில்லாமல் நிற்குதே.”

அனைவரின் புலம்பலையும் காதில் வாங்காமல் தன் பொண்ணையே பார்த்துக் கொண்டிருந்தவன், “பாப்பா” என கூப்பிட்டதும் திரும்பிய மகளிடம், “பாப்பா! என்னை அப்பான்னு கூப்பிட மாட்டியாடா? சொல்லுடா? என்னை அப்பான்னு கூப்பிட மாட்டியா? இதோ உன் அண்ணன் பாரு. அண்ணான்னு கூப்பிடு” என்றான் கலங்கிய குரலை குழந்தைக்குக் காட்டாது.

‘முடியலப்பா’ என்பதை குழந்தை தலையாட்டிச் சொல்ல தன் உறுதி உடைய, நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுதான். “ஐயோ தனம்! உன்னோட இழப்பையே என்னால தாங்க முடியல. நம்ம பொண்ணுக்கும் இப்படியா ஆகணும். நான் என்ன பண்ணுவேன்? எனக்கு எல்லாமாகவும் நீ இருந்துட்டு, இப்படி எங்களைத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டியே” என்று கதறி அழுதான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
தந்தையின் அருகில் வந்த சரவணன் கண்ணீரை துடைக்க, மகன் கண்களில் கண்ணீர் இருந்தாலும், அதையும் மீறி ஒரு தெளிவு இருந்தது. அந்தப் பார்வை பனிரெண்டு வருடங்களாக ரசித்த பார்வை. ஆம் அவன் கண்களில் அவன் மனைவி தெரிந்தாள். எந்த சூழ்நிலையிலும் விவேகமான முடிவெடுக்கும் அவளின் செயல்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த வெற்றிவேலிடம், “நாம சரி பண்ணலாம்ப்பா. எதுக்கும் கவலைப்படாதீங்க. நான் இருக்கேன்ல. அம்மா நம்ம கூட தான் இருப்பாங்க. கைவிட மாட்டாங்க” என்றான் தெளிவாய்.

அவனின் பேச்சு சுற்றி இருந்தவர்களையும் ஓரளவு தெளிய வைத்தது.

“ஆமா மச்சான் பார்த்துக்கலாம். கண்ணைத் துடைங்க. நீங்க அழுறத பார்த்தா பிள்ளைங்க இன்னும் கலங்குவாங்க. பிள்ளைங்க உங்களோட இருக்கணும்னு தான் ஆசைப்படுறாங்க. நாங்க அப்பப்ப வந்து பார்த்துக்குறோம்” என்று கேசவன் சொல்ல,

தனத்தின் தாய்க்குப் பேரனின் குணம் மிகவும் பிடித்தது. தாயின் ஒரு சொல்லுக்காக, இந்த பதினோரு வயதில் பொறுப்பாக பேசிய பேரனை விட மனமில்லை அவருக்கு. அதனாலேயே தன் மகன் வயிற்றுப் பேத்தி ஆராதனாவிடம் சொல்லியே வளர்த்தார்.

இரண்டு நாள் கழித்து அக்கா ராஜி, “பிள்ளைங்களை நல்லா பார்த்துக்கோடா தம்பி” என்று அப்பா, அம்மாவை தம்பியிடம் விட்டுக் கிளம்பினாள்.

உறவுகள் அனைவரும் சென்றதும் வீடு அமைதியாக இருந்தது. வீட்டில் மனைவியின் கால் கொலுசொலி ஓசை எங்கும் எதிரொலிக்க, பிரமை பிடித்தவன் போல் இருந்த மகனை அவன் தாய் தந்தையால் தேற்ற முடியவில்லை. இரவில் சரவணனும், அபிநாவும் அவனைக் கட்டிக் கொண்டு தூங்க ஆரம்பித்தார்கள்.

மறுநாள் முதல் பையன் முதலில் எழுந்து அப்பாவை எழுப்புவதை வழக்கமாக்கிக் கொண்டான். ஆனால், யாருக்கும் தெரியாமல் கிணற்றருகே சென்று, அவன் தாயைப் பார்த்து பேச ஆரம்பித்தான். “அம்மா நான் இன்னைக்கு உங்களைப் போல அப்பாவையும், குட்டிமாவையும் எழுப்பி பால் கொடுத்தேன். அப்புறம் அப்பாவை தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச அனுப்பினேன். எங்க கிளம்புறாங்க. எப்பப்பாரு உங்களையே நினைச்சி அழறாங்க. வலுக்கட்டாயமா தான் அனுப்பி வச்சேன்” என்று அன்று நடந்தது ஒன்று விடாமல் ஒப்பித்தான்.

அபிநயா அன்று முதல் கிணற்றுப் பக்கம் வருவதே இல்லை. “அம்மா குட்டிமா பேச மாட்டேன்றா. வந்து என்னன்னு கேட்டு பேச வைக்கலாம்ல. எப்படியும் நீங்களும் வரமாட்டீங்க. விடுங்க நானே பார்த்துக்கறேன். யாரோ வர்றாங்க நான் நாளைக்கு வர்றேன்ம்மா” என்று சொல்லிச் சென்றான். அதையே வழக்கமாக்கியும் கொண்டான்.

தனலக்ஷ்மி இறந்து பனிரெண்டாம் நாள் தற்செயலாக இதைப் பார்த்த வெற்றிவேலுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கிணற்றுக்குள் பார்த்து அன்று நடந்ததைச் சொல்லிக் கொண்டிருந்த மகனைப் பார்த்தவனுக்கு, தன் சோகத்தை மனதின் ஓரம் ஒதுக்கி, மனைவி சொன்னதைப் போல் பிள்ளைகளைக் கவனிக்க வேண்டுமென மனதில் நினைத்தவன், ஓசை எழுப்பியபடி நடந்து வரவும், சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான் சரவணன். மகனின் அந்தப் பார்வையில் வித்தியாசம் இருந்தது.

“வாங்கப்பா. இங்க அம்மாவைப் பார்க்க வந்தீங்களா?” என்றதும் மகனைக் கட்டிக் கொண்டு மௌனமாக அழுதான். மனதில் அப்பொழுதே முடிவு செய்தான். இனி இந்த ஊரில் இருக்கக் கூடாது என்று. அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினான். சென்னையில் அக்காவிடம் பேசி அங்கே சொந்தமாக வீடு வாங்க ஏற்பாடு செய்தான். கிணறை மறுநாளே எத்தனை லாரிகள் மண் பிடிக்குமோ அவ்வளவும் கொண்டு வந்து மூடினான்.

“அப்பா! அம்மாப்பா. அம்மா” என்ற மகனின் கதறலை காதில் வாங்கவில்லை. அந்த சமயத்தில் பையன் எதிர்காலம் மட்டுமே கண்ணில் இருந்தது. அக்கா தன் வீட்டிலேயே இருக்கச் சொல்லிக் கேட்டும், “என் பிள்ளைகளை நான் நல்லபடியா வளர்க்கணும்னு என் தனம் சொல்லியிருக்காக்கா. நானே வளர்த்தாதான் அவளோட ஆன்மா சாந்தியடையும்” என்றான்.

தூத்துக்குடிக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று மகனுக்கும், மகளுக்கும் மனநல மருத்துவம் பார்த்து, இறப்பு சம்பந்தமான மருத்துவ அறிவுரை கொடுக்க, பின் மகளுக்கு வாய் பேச சிகிச்சை கொடுத்ததும், பையனிடம் சின்ன மாற்றம் தெரிந்தது. பெண்ணோ வாய் பேச முடியாதே தவிர சாதாரணமான குழந்தையாகவே இருந்தாள். தன்னால் தான் அம்மா இறந்தது என்று வருந்தினாலும், இறப்பைப் பிஞ்சி மனம் ஏற்றுக் கொண்டது.

சென்னைக்குச் செல்வதாக சொன்னதால் அந்த மனநல மருத்துவர் சென்னையில் உள்ள டாக்டர்.ஈஸ்வரைப் பார்த்து தொடர்ந்து சிகிச்சையளிக்க வழி சொன்னார். தான் சென்னை செல்வதை மாமனாருக்கு கடிதம் மூலம் தெரிவித்து, சென்னைக்கு கிளம்ப தயாரானான்.

நத்தம் கிராமத்தில் இருந்து மதுரைக்கு சென்று, பின் அங்கிருந்து சென்னை செல்வதாகச் சொல்லி, வீட்டைப் பூட்டி அருகில் இருந்த உறவினரிடம் சாவியைக் கொடுத்தான்.

சரவணனோ, “கண்டிப்பா நான் பெரியவனானதும் உங்களைத் தேடி வருவேன்ம்மா” என்றான்.

வீட்டைத் திரும்பிப் பார்த்த வெற்றிவேலுக்கு மனைவியின் முகம் கண்ணில் ஆடியது. ‘என்னை விட்டுப் போறீங்களா?’ என்று கேட்டது அவளின் குரல். மனதோடு சொல்லிக் கொண்டான் ‘கண்டிப்பா வருவேன். என் கடைசி காலம் உன்னோடு வாழ்ந்த இந்த வீடுதான். இப்ப நம் பிள்ளைங்களுக்காகப் போறேன். அவங்களுக்கான நல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடுத்துட்டு கண்டிப்பா வருவேன். உன்னைத் தேடி தேடியே.’

நின்னையே நினைந்து,

நின்னையே சுவாசித்து,

நின்னையே உயிரென நினைத்த

எனைவிட்டு விலகிச் செல்கிறாயா?

என் கண்முன்னே

உன் உயிர் பிரியும் வேளையில்,

தடுக்க வழியில்லாமல் தவித்த

என்னுயிர் வேதனை அறிவாயா?

சட்டென்று சென்றுவிட்டாய்

என் வாழ்விலிருந்து.

நீயின்றி என் வாழ்வு

வேரில்லா மரமென்றுத் தெரிந்தும்

எனைத் தனிமையிலிட்டுச் செல்கிறாயா?

செல்! என் சுமைகளை இறக்கி

நானும் வருகிறேன்!

உன்னுடன்! உன்னவனாய்!

உன்னைத் தேடி தேடியே!”

மனதார மனைவியுடன் பேசி விடைபெற்றான் வெற்றிவேல்.

மதுரையில்தான் ராணியைச் சந்தித்தார்கள் வெற்றிவேல் குடும்பத்தினர். யாருடைய ஆதரவும் இல்லாமல், தனியாக சென்னைக்கு வேலை தேடி வந்த பெண்ணிடம், இருவர் வம்பு செய்ய, வெற்றிவேல் அதைத் தட்டிக் கேட்டது மட்டுமில்லாமல், அவர்களுடனேயே அவளை அழைத்து சென்னை வந்தார்கள். பேருந்துப் பிரயாணத்திலேயே வெற்றி சமீபத்தில் தான் மனைவியைப் பறிகொடுத்தது தெரிந்ததும், குழந்தைகள் மேல் ஒரு இனம் புரியாத பாசம் வர, அப்பொழுதே அவர்களுக்கு அத்தையானாள்.

ராணிக்கு விடுதி தேடிச் சென்ற இடங்களில் எதுவும் அமையாமல் போக, ராணியின் அருகே வந்த அபிநயா “எங்க வீட்டுக்கு வாங்க அத்தை” என்பதை சைகையில் சொல்ல, வீட்டில் பெரியவர்களும் ஒத்துக்கொள்ள தயக்கத்துடன் நின்றவளை, “அத்தை வாங்க. நான் உங்களைப் பார்த்துக்கறேன்” என்று சரவணன் அழைத்தான். குழந்தை மறுபடியும் “வாங்க அத்தை” என்றழைக்க, “சரிடா சரண். ஓகேடா நியா குட்டி” என்று சொல்ல, பின் அந்த பெயரே இருவருக்கும் நிலைத்துவிட்டது.

ராணிக்கு வந்த விடுதிப் பிரச்சனையால் வந்ததே “தனலக்ஷ்மி பெண்கள் விடுதி” மனைவியின் பெயரில் இருந்தாலும், உரிமை ராணிக்கு என்று அவளின் வாழ்விற்கும் வழிவகுத்தான் வெற்றிவேல். இந்த நன்றிதான் ராஜாவிற்கு எப்பொழுதும் இருக்கும். ராணி குழந்தையில் இருந்து சொல்லிச் சொல்லி வளர்த்திருந்தாள்.

மனநல மருத்துவரைப் பார்க்க வெற்றிவேல் உள்ளே நுழைய, ஒரே நேரத்தில் டாக்டர்.ஈஸ்வரும், வெற்றிவேலும் திகைத்துப் பின் சந்தோஷத்தில், “டேய்! மூர்த்தி” என்று கூப்பிட, “வேலு” என்று ஈஸ்வர் அழைத்தனர்,

பால்ய சிநேகிதனைப் பார்த்த சந்தோஷத்தில் சில நிமிட நல விசாரிப்புக்குப் பின் வந்த விவரம் சொன்னான்.

“நான் கடைசி வரை தங்கச்சியைப் பார்க்க முடியாமல் போயிருச்சேடா” என்ற வருத்தப்பட்ட ஈஸ்வரமூர்த்தி, கண்கலங்கிய நண்பனைச் சமாதானம் செய்து சிகிச்சை ஆரம்பிக்க, பையனிடம் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் அவன் சொன்ன பதில்கள், மற்ற பிள்ளைகளை விட புத்திசாலி என்பதை ஒத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

அவனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சான்று அளிக்க, பின் இரு குடும்பமும் நட்பு பாராட்ட, அபிஷேக் சரணுக்கு நல்ல தோழனாகவும், அபிநயாவிற்கு நல்ல காவலனாகவும் இருந்தான்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top