• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
16


“அந்த நேரம் அவந்தியைக் காப்பாத்துனது, நீங்களா தம்பி? நாங்க விசாரிச்சப்ப உங்க நேம் சொன்னாங்க. உங்களை மீட் பண்ணி நன்றி சொல்ல, நானும் அவந்தியும் முயற்சி பண்ணினோம். ஆனா, முடியல” என்ற சுந்தரேசனுக்கு, ‘ஆம்’ என்று பதிலளித்தவன், “ஓ... நான் அதன்பிறகு வடமாநிலம் சைடு போயிட்டேன்” என்றான்.

“போதை மருந்து சம்பந்தமா முக்கியமான விஷயங்கள் கலெக்ட் பண்ணினப்ப, தமிழ்நாட்டுல உள்ளவன் மேல் கைகாட்டுனாங்க. எட்டு மாசத்துக்கு முன்னாடி இவனை ஸ்மெல் பண்ணிட்டேன். அதுக்குள்ள இன்ஸ்பெக்டர் பரத் சம்பந்தப்பட்ட விஷயமும் கேள்விக்குறியா இருந்ததால, ரெண்டுலயும் பிஸியாகிட்டேன். அப்புறம் கௌஷிக் ப்ரூட்ஸ் யூனிட்ல செக்யூரிட்டியா வேலைக்குச் சேர்ந்து, வாட்ச் பண்ணினோம். அதுக்கு அந்த ஏரியாவுல உள்ள செக்யூரிட்டி சங்கத்துல பேசி, சம்மதிக்க வச்சி பகல்ல நான்னா, நைட்ல தாமு இருப்பான். அப்படியே இந்த கும்பலைப் பிடிக்க பண்ணின ப்ளான்தான் திருடன் வேஷம்.”

நடப்புக்கு நடுவில்

கடந்த ஆறுமாதமாக சென்னையிலுள்ள விஐபிகளிடம் பேசி தங்கள் வீட்டில் திருடு போய்விட்டது என்று அவர்கள் மூலம் பத்திரிகைக்கும், ஊடகத்திற்கு தகவல் கொடுத்து, அதை மக்களை மட்டுமல்லாமல், தவறான தொழில் செய்பவர்களையும் நம்பவைத்தது காவல்துறை. குற்றவாளிகள் எவ்வளவு அடித்தாலும், உதைத்தாலும், தன் கூட்டத்தாரைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். காவல்துறையிடம் மாட்டியிருந்த ரத்தனிடம் விசாரிக்கப்படும், விசாரணையில் எந்த விஷயத்தையும் வாங்க முடியாது என்பதை உணர்ந்திருந்ததால், அவன் மூலம் தென்மாவட்ட வியாபாரியான கௌஷிக்கை பிடிக்கத்தான், இந்த திருடன் வேஷத்தை ஆறுமாத காலமாக தொடர்ந்தது. அதன்பின் காவல்துறையினரிடம் பிடிபடுவது போல் ஜெயிலுக்கு சென்று, ரத்தனின் நம்பிக்கைக்கு உரியவனாக மாற அகமும், புறமும் ஒருங்கிணைத்து, முகத்திலோ, வார்த்தையிலோ சின்ன வேறுபாடு தெரியாத அளவிற்கு அவனிடம் பழகினான் கார்த்திக்.

பின் அவனின் நம்பிக்கைக்குரியவனாகி, இருவரும் தப்பிக்கும் முன் தெரிந்த காவலர்களை வரவழைத்து, ரத்தன் முன் அவர்களை அடிப்பதுபோல் நடித்ததும், ரத்தனின் நம்பிக்கையில் ஒருபடி மேலேறினான். அவன் மூலமாக, இந்திய அளவில் விற்பனை செய்யும் ஜாக்கின் மேல், காகம் எச்சமிட்டதாக சொல்லி, அதை துடைப்பதுபோல் அவனுக்கே தெரியாமல், பெல்ட்டின் இடையில் சிப் ஒன்றை வைத்தான். ரத்தனுடன் வந்த ஆள் என்பதால், ஜாக்கும் கார்த்திக்கை சந்தேகப்படவில்லை. அந்த சிப் மூலம் அவன் போகுமிடம் அறிந்து, தனி காவலர்களை வைத்து ஆந்திராவில் வளைத்துப் பிடித்தார்கள்.

பின் சென்னையில் போதைப் பொருளை, உரிய இடத்தில் சேர்ப்பிக்க எண்ணிய ரத்தனிடம், ‘வெளியிடங்களில் அந்த ஏஜெண்டை சந்திக்க வேண்டாம் மாட்டிக் கொள்வோம். அதனால், கோவிலில் சந்திக்கலாம்’ என்று ரத்தனுக்கு ஐடியா கொடுத்ததோடு, ‘தான் இருந்தால் வருகிறவருக்கு தயக்கம் இருக்கும். நான் உங்க கண்ணு படுற தூரத்தில் இருக்கேன். பார்ட்டி போனதும் கூப்பிடுங்க’ என நல்லபிள்ளையாக தள்ளிச் சென்று மறைவாக அமர்ந்தான். கார்த்திக்கை மெச்சிக் கொண்டிருக்கும்போது கௌஷிக் வர, வந்தவன் ரத்தனிடம் பேசியதை பார்த்து, மறைத்து வைத்திருந்த கைபேசி மூலமாக, கோவிலின் வெளியே இருந்த கௌஷிக் காலணியின் உள்பகுதியில், கால் தட்டாதவாறு ஒரு சிப் வைக்கச்சொல்லி மெசேஜ் அனுப்ப, அதை தாமு கச்சிதமாக முடித்திருந்தான்.

கௌஷிக்கின் மூலமே அவன் சம்பந்தப்பட்ட நபர்களைத் தெரிந்து, அதன் பின்னரே வேட்டைகள் அதிகமாக, குடும்பத்தைப் பற்றியோ, அவந்திகாவைப் பற்றியோ எண்ணமில்லாமல், வட மாநிலத்துக்கும், தென் மாநிலத்துக்குமாக அலைந்து, நான்கு வருடங்களாக, தாங்கள் போட்டிருந்த குறிக்கோள்படி, இந்த குறுகிய காலத்தில் அந்த கும்பலை கூண்டோடு பிடித்திருந்தான் கார்த்திக்.

கௌஷிக்கைப் பிடிக்க எதிர்பார்த்த தருணத்தை, அவனே ஏற்படுத்திக் கொடுத்திருந்தான். சந்தோஷ் மூலம் நேத்ராவைக் கடத்த திட்டமிட்டதை அறிந்து, அங்குள்ள நம்பிக்கையான அதிகாரி மூலமாக, கௌஷிக்கின் நண்பனையும் கூட்டாளிகளோடு பிடிக்க வைத்திருந்தான் கார்த்திக்.

“உங்க பையனோட பினாமியா உங்க ஒய்ஃப்தான் இருக்காங்க அங்கிள். உங்க ஒய்ஃப்கு எதுவரை தொடர்புன்னு தெரியல. அன்பார்சுனேட்லி அவங்களையும் அரஸ்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை. ஐம் சாரி அங்கிள்” என்றான் சற்று வருத்தமாக.

“ இல்ல இவன் பொய் சொல்றான். எங்கமேல உள்ள கோபத்துல போலியா கேஸ் ஜோடிச்சி மாட்டிவிடப் பார்க்கிறான்” என்று வனஜா கத்தினார்.

அதையே ‘ஆமாம்’ என ஆமோதித்தான் மகன்.

“ஓ... அப்படியா கௌஷிக்” என்ற கார்த்திக்கின் தீவிர பாவனையில், தன் பார்வையை தழைத்தாலும், திரும்பவும் தலைதூக்கி “அப்படித்தான்” என்றான்.

“அப்ப சரி இது யாருன்னு பாரு” என்று ஒரு வீடியோவை ஓடவிட, அவன் அந்த ஜாக்கிடம் டீல் பேசியது. கோவிலில் ரத்தனை சந்தித்தது. சென்னையின் இன்றைய நிலவரம் என்று புள்ளிவாரியாக கௌஷிக் பேசியது பதிவாகியிருந்தது. “இப்பவும் சொல்வியா இது நீயே இல்லைன்னு?”

“ஆ... ஆமா” என்று சொல்லி முடியுமுன் அடி வாங்கியிருந்தான் வனஜாவின் கையால்.

“இப்படி என் தலைமேல கல்லைத் தூக்கிப் போட்டுட்டியேடா. நிறைய பேர் இந்த மாதிரி ப்ரூட்ஸ் பழுக்க வைக்கிறாங்கம்மா. நல்லா பண்ணினா நிறைய லாபம் கிடைக்கும்னு சொன்னதாலதான், நான் பணம் கொடுத்தேன். ஆனா, நீ என்னடா பண்ணிட்டு வந்து நிற்கிற?”

“இதெல்லாம் நீ கொடுத்த இடம்தான் வனி. இப்ப இந்த நிலையில் வந்து நிற்குது” என்ற சுந்தரேசனிடம் திரும்பி,

“ஆமா. நான்தான் இடம் கொடுத்தேன். ஒரு தகப்பனா அவனை நீங்க கண்டிச்சிருக்கலாம்ல? ஏன் கண்டிக்கலை?

“எங்க என்னை கண்டிக்கவிட்ட? அவனைத்தான் அடைக்கோழி மாதிரி என்கிட்ட வரவிடாம அடைகாத்தியே” என்றார் பதிலுக்கு.

“ஆமா. எல்லாமே என்னாலதான். என்னோட பேராசைதான். இந்த அவந்தியை விட, என் பையன் பெரிய ஆளா வரணும்னு எதிர்பார்த்தேன். ஆனா, எல்லாமே தப்பாவே முடிஞ்சிருச்சே” என்று தலையிலடித்தபடி அழுதார்.

“அத்தை வேண்டாம்” என்று தடுக்க சென்ற அவந்தியை ஈஸ்வரி தடுத்தார்.

அதற்குள் கண்ணீர் துடைத்து, மகனின் சட்டையைப் பிடித்து, “ஏன்டா இப்படிப் பண்ணின? இவ்வளவு பணம் வச்சிருந்தும், ஏன்டா அவந்திய கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு துடிச்ச? என்னோட ஆசைக்காகன்னு சொல்லாத? இந்த உண்மை தெரியுறதுக்கு முன்னாடி, அதை சொல்லியிருந்தா, கண்டிப்பா உன்னை நம்பியிருப்பேன். இல்ல அவள்மேல உள்ள பாசம்னு சொல்லாத. அதை நம்புறதுக்கு நான் ஒண்ணும் முட்டாள் கிடையாது. உன்னோட அம்மா. அப்புறம் நிறைய டாக்குமெண்ட்ஸ்ல கையெழுத்து வாங்கினியே. அது இந்த கார்த்திக் சொன்னமாதிரி பினாமி பேப்பர்ஸா?”

அனைத்திற்கும் கௌஷிக் அமைதிகாக்க, “பேசுடா ஏன் அமைதியா நிற்கிற?”

“எல்லாத்துக்கும் தொடக்கம் நீங்களா இருந்துட்டு, என்னை பேசு பேசுன்னா, என்ன பேசச் சொல்றீங்க? ஆமா. அந்த பேப்பர்ஸ் எல்லாம் பினாமியா உங்களைப் போட்ட சொத்துப் பத்திரம்தான். நீங்க ஆசைப்பட்டதுதானே நிறைய பணம் வேணும்னு. அதான். உங்களோட பணத்தாசையை எனக்கும் காட்டி, ஊட்டி வளர்த்தது நீங்க. அவந்தியைப் பற்றி பேசும்போதெல்லாம், அவ பணக்காரி நாம ஒண்ணுமில்லாம வந்தவங்க, நீ பெருசானதும் அவளைக் கல்யாணம் பண்ணி, இந்த சொத்து முழுதையும் நீயும் நானும் முறையா அனுபவிக்கணும்னு, சொல்லி வளர்த்தது யாரு? அப்பான்னு ஒருத்தர் இருந்தும் இல்லைன்ற எண்ணத்தை உண்டு பண்ணி, அப்பாகிட்ட நான் பேசப்போகும் போதெல்லாம், அவருக்கு அவந்திதான் முக்கியம். நீயோ நானோ முக்கியமில்லைன்னு, அவர் மேலயும், அவந்தி மேலயும் வெறுப்பை வளர்த்தது யாரு?”

“சின்ன வயசுல, அப்பா பாசத்துக்கு எவ்வளவு ஏங்கியிருப்பேன் தெரியுமா உங்களுக்கு? ஒவ்வொருத்தனும் என்னடா உனக்கு அப்பா இல்லையா? எல்லா பங்சனுக்கும் அம்மாவே வர்றாங்கன்னு கேட்டப்ப, நான் பட்டபாடு எனக்குத்தான தெரியும். இப்படி எல்லாம் இருந்தும், இல்லாம இருந்ததாலதான், சின்ன வயசுலயே தேவையில்லாத நட்பு வட்டம், சேரக்கூடாத ஆளுங்களோட சேரும்போது எதுவும் தப்பில்லைன்னு தோணிச்சி.”

“அவந்தி மேல அப்பவும் சரி, இப்பவும் சரி, எந்தவிதமான அபிப்ராயமும் கிடையாது. அவ எனக்கு எதிரி மட்டும்தான். இப்ப நான் பண்றது போதைக்கடத்தல். மாட்டினா தண்டனை உறுதி. சம்பாதிச்ச அத்தனையும் போயிரும்னு தெரியும். அதுக்கப்புறம் என்னோட வாழ்க்கை நடுரோட்டுல நிற்க வேண்டியதாகிரும் அப்பாட்டின்னுதான், அவந்தியை கல்யாணம் பண்ணி, அவளோட சொத்தை நாம உரிமையா அனுபவிக்கலாம்னு சம்மதிச்சேன். எனக்கென்ன இப்படி வாழணும்னு ஆசையா என்ன? அப்பா அம்மா இருந்தும், அனாதை மாதிரி வளர்றவன் தறிகெட்டுத்தான் போவான்.”

தகப்பனிடம் சென்றவன் “முடிஞ்சா என்னை மன்னிச்சிருங்கப்பா. நீயும்தான் அவந்தி. விடுதலைன்னு ஒண்ணு கிடைச்சிதுன்னா, கண்டிப்பா உங்க பையனா நல்லவனா வாழ்றேன்பா. போகலாம் சார் நான் ரெடி” என்றான் கார்த்திக்கிடம்.

“என்னை மன்னிச்சிருடா கௌஷிக். உங்கம்மாவுக்கு பயந்து உன்னை கைவிட்டுட்டேனோன்னு குற்றவுணர்ச்சியா இருக்கு. நான் அவளை கண்டிச்சா, இந்த சின்னப் பொண்ணை பழிவாங்குவாளேன்னுதான் விலகியிருந்தேன். ஆனா, அது உனக்குள்ள இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்னு நினைக்கல” என்றார் வருத்தமாக.

“விடுங்கப்பா. இந்த நிலையிலதான், என்னை உங்களுக்கு புரியவைக்கணும்னு இருக்கு. என்ன பண்றது? “

“என்னை மன்னிச்சிருன்னு சொல்லக்கூட தகுதியில்ல கௌஷிக். உன்னோட இந்த நிலைக்கு நானே காரணமாகிட்டேனே” என வனஜா ஒருபுறம் அழ... “ஹ்ம்... காலம் கடந்த ஞானோதயம்மா. பட், என்னோட சேர்த்து நீங்களும் தண்டனை அனுபவிக்கப் போறீங்க. அப்ப நீங்க செஞ்ச பாவமும், சேர்ந்து போயிரும்” என்றான்.

“ஓகே இன்ஸ்பெக்டர். அரைமணி நேரத்துல நான் வர்றேன். ப்ரஸ்கு நியூஸ் கொடுக்கலாம். இனியும் கௌஷிக் தப்பிக்க முயற்சி பண்ணமாட்டான்னு நினைக்கிறேன்” என்றதும் சம்மதமாக தலையசைத்தவன், தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து கார்த்திக் கையில் கொடுத்தான்.

கார்த்திக் அதை வாங்கியதும், “உங்க கல்யாணத்துக்கு என்னுடைய வாழ்த்துகள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா, நானும் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணலாமா?” என்றான் சின்ன குன்றலோடு.

சிறிது யோசனைக்குப்பின் கார்த்திக் சம்மதம் சொல்ல, அதே சமயம் “நாங்க வர்றதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சிருச்சா?” என்று வைஷ்ணவி, வெங்கடேஷ், நேத்ரா உள்ளே வந்தார்கள்.

“பெண்ணுக்கு தோழி நீங்க இல்லாமலா” என வைஷ்ணவியை வரவேற்று, “அப்புறம், வாங்க டாக்டர் மேடம்” என்று நேத்ராவை சந்தோஷ் அழைத்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
சிரித்தபடியே “அதான் வந்தாச்சே. அப்புறமென்ன ஆரம்பிக்க வேண்டியதுதான” என்று நேத்ரா பதிலுக்கு வாயடிக்க, கௌஷிக் என்று ஒருத்தன் அங்கு இருப்பதையே கண்டுகொள்ளவில்லை அவள்.

அதுவரை அவளையே பார்த்திருந்த கௌஷிக், ‘அப்ப இவள் நர்ஸ் இல்லையா? இதுவும் என் லைஃப்ல பொய்யாகிருச்சா? ஹ்ம்... இந்த பிறவியில அன்புக்கும், உனக்கும் ரொம்ப தூரம்டா கௌஷிக்’ என்று தன்னைத்தானே நொந்து தேற்றிக் கொண்டான்.

“சீக்கிரம் முகூர்த்த நேரம் முடியப்போகுது. கல்யாணத்தை முடிங்க சாப்பாடு போடுங்க. நேத்திலிருந்து இதுக்காகவே காத்திருக்கேன்” என்று சந்தோஷ் சந்தோசக் கூச்சலிட,

“எதுக்கு சாப்பாட்டிற்காகவாடா?” நக்கலாக கேட்ட சந்திரனிடம், “நீங்க என்ன அர்த்தம் எடுத்துக்கிட்டாலும் ஓகேபா” என்றான் கூலாக.

“கல்யாணமா?” என்று கேள்வியாய் அவந்தியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.

அப்பா, தம்பியின் விளையாட்டை புன்னகையோடு பார்த்திருந்தவன், அப்படியே திரும்பி தன் வருங்காலத்தைப் பார்க்க, ‘என்னடா இது? யாருக்கோ கல்யாணம்ன்ற ரேஞ்சில லுக்கு விடுறா. இவ முழிக்கிறதைப் பார்த்தா, என்மேல இருக்கிற கோவத்துல கல்யாணத்தை நிறுத்திருவா போலிருக்குதே. டேய்! கார்த்திக் ரிஸ்க் எடுத்து, வெண்ணை சாப்பிட ட்ரை பண்ணாத. ஈஸியா பாலாவே குடிச்சிரு. எதாவது ஷார்ட் கட்ல போயி உன்னோட கோழி சே... அழகியை அமுக்கப்பாரு’ என்று மனம் அலாரம் அடித்து விரட்ட, அதை தாயின் காதில் ஓதியவன், பின் சுந்தரேசனிடமும் பேசினான் அவந்திகா அறியாமல்.

சுந்தரேசன் அவசரமாக, கார்த்திக்கின் கழுத்தில் மாலை போட்டு, சந்நிதானத்தின் அருகில் நிறுத்த, ஈஸ்வரி அவந்திகாவுக்கு மாலைபோட, தடுத்தவளைக் கண்டுகொள்ளாது மாலையிட்டு, மணமகனருகில் அழைத்து வந்தார்.

“இல்ல வேண்டாம்” என்று மறுத்தவளுக்கு வார்த்தைகள் ஒலி வடிவம் இல்லாமல் போக, கால்கள் தள்ளாடியது. மனம் ஏதோ மரத்துப் போனாற்போல் சென்றவள் திடீரென நின்று, “எனக்குக் கல்யாணம் வேண்டாம் அத்தை” என்றாள் தெளிவாக.

“ஏன்மா?”

“எ...எனக்கு இவங்களைப் பிடிக்கலை.”

“என்ன உளர்ற அவந்தி?” என்று வைஷ்ணவி வர, அவளை கையமர்த்தியாவர், “சரி. ஏன் பிடிக்கல?” என கேட்டார்.

“ஏன்னு கேட்டா? எனக்கு எதுவுமே பிடிக்கலை. இந்த காதல், கல்யாணம், நான், இந்த வாழ்க்கை, எதுவுமே” என்றாள் ஒருவித வெறுப்புடன்.

“ஓ... அப்ப வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிறியா அவந்தி?” என்ற வார்த்தை சுந்தரேசனிடமிருந்து வந்தது.

“மாமா என்ன பேசுறீங்க!” என அதிர்ந்தவளிடம்.

“ஆமா, மாமாவேதான். உனக்குப் பிடிக்கலன்னா, இந்த கல்யாணத்தை நிறுத்திரலாம். ஏற்கனவே இவர் கட்டிய தாலி என் பையனால இறங்கிருச்சி. திரும்பவும் அவரே கட்டுறேன்னா, ஏன் வேண்டாம்னு சொல்ற?”

‘ஹையோ! என்ன இந்த அங்கிள் டபுள் கேம் ஆடுறார்’ என கார்த்திக் புலம்பினான்.

“இது அவரே இல்ல மாமா. சார் பெரிய ஆஃபீஸர் நாராயணன் என்ற சி.என் அப்படித்தான சார்? என்று கார்த்திக்கை கிண்டலாக பார்த்து, “எனக்கு பிடிச்சது கார்த்திக்தான். இப்ப அந்த கார்த்திக்கையும் பிடிக்கலை. அப்ப இவர் யாரோதான எனக்கு” என்றாள்.

அடிபட்ட வலியில் கார்த்திக் அவந்திகாவைப் பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்தாள். பார்வையிலேயே ‘உனக்கு நான் யாரோவா?’ என கேள்வி கேட்டான்..

அவளும், ‘கண்டிப்பா நீ யாரோதான்’ என பதில் பார்வை பார்த்தாள்.

‘அந்தளவுக்கு நான் வேண்டாதவன் ஆகிட்டேனா?’ ஏனோ தன் கண்கள் கலங்குகிறதோ என்று தோன்றியது அந்த காவல்துறை அதிகாரிக்கு.

அங்கிருந்து நகரப்போனவனை கண்களால் தடுத்த சுந்தரேசன், “பழைய கார்த்திக்கோட கம்பேர் பண்ணும்போது, இவருக்கு என்ன குறைம்மா. ஒரு திருடனைப் பிடிச்ச உனக்கு, ஏன் அந்த திருடனைப் பிடிக்கிறவனைப் பிடிக்காமல் போச்சின்னு தெரியலை. சரிம்மா. கடைசியா கேட்கிறேன். இவரை கல்யாணம் பண்ணிக்குவியா? மாட்டியா?”

“முடியாது மாமா?”

“அப்ப நான் சொல்ற பையனை நீ கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிரு. கார்த்திக்கும் மணமகனா வந்த பிறகு, தனியா வீட்டுக்குப் போறது சரி கிடையாது. அதனால, இதே மேடையில கார்த்திக்கிற்கும் நான் வேற பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

அனைவரும் அதிர்ச்சியில் பார்க்க, சம்பந்தப்பட்டவளோ, ‘அதெப்படி நடக்கும்?’ என்பதுபோல் பார்த்தால்.

“ஆமா, எனக்கும் இதுதான் சரின்னு தோணுது” என்றபடி வந்த சந்திரன், “நேத்ரா உனக்கு சம்மதம்னா, எங்க கார்த்திக்கை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்றார் தடாலடியாக.

அவளோ தீயை மிதித்தாற்போல், “ஐயோ! நானா? என்னால முடியாது” என்று சந்தோஷைப் பார்க்க, சந்தோஷும் ஒரு கலவையான மனநிலையில் அவளைத்தான் பார்த்தான்.

அதே சமயம் அதிர்ந்தது இன்னொரு இதயம். சொல்லவும் வேண்டுமா கௌஷிக்கினது என்று.

“அப்பா அவ எப்படி அண்ணனை” என்று சந்தோஷ் இழுத்தான்.

சுந்தரேசனோ அசராமல், “அவந்திமா நீ சந்தோஷை முடிச்சிக்கோமா. ரொம்ப நல்ல பையன்” என்று அடுத்த குண்டை விட்டெறிந்தாரே பார்க்கலாம்.

அவ்வளவுதான் கார்த்திக் கோவம் வந்து, “யோவ்! அங்கிள் என்ன கேம் விளையாடுறீரா?” என சட்டையைப் பிடித்தான் தன் மனதினுள். அந்தோ பரிதாபம் வெளியில் செய்ய இயலவில்லை அவனால்.

“மாமா! அவங்களை போய் எப்படி மாமா? அவங்க எப்பவும் என்னோட மச்சினன்தான்.”

அந்த வார்த்தையில் கார்த்திக் மகிழ, அதுவரை அமைதியாக இருந்த சந்தோஷ், “அங்கிள் இப்படி அதிர்வெடில்லாம் போடாதீங்க. பாவம் இந்த பச்சப்புள்ள மனசு தாங்காது. இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும், அவங்க என்னோட அண்ணிதான். அம்மா ஸ்தானம்!” உணர்ந்து சொன்னவனை, கண்களில் நன்றியுடனும், நீருடனும், ஓர் உறவுப்பார்வை பார்த்தாள் அவந்திகா.

சந்திரன் ஆறுதலாக மகனை தோள் சேர்த்தணைத்து, “நீ சொல்றதும் சரிதான்பா. பட், நீ பச்சப்புள்ளன்னு சொன்ன பாரு. அதைத்தான் என்னோட சின்ன ஹார்ட் ஏத்துக்க மாட்டேன்னுது. வேற எதாவது சொல்லுடா. தாங்க முடியல!” என்றபடி நெஞ்சை தேய்க்க, அவ்வளவு நேரமிருந்த இறுக்கம் மறந்து அனைவரும் சிரித்தார்கள்.

அந்த புன்னகையுடனேயே சி.என்னை அவந்திகா பார்க்க, அவளையே பார்த்திருந்தவனோ, இதுதான் சமயமென்று கண்ணடித்து, உதடு குவித்து பறக்கும் முத்தமொன்று அனுப்பினான்.

“சீ... போ... லூசன்” என்று முத்தத்தைத் தட்டிவிட்டு முகம் திருப்பிக் கொண்டாள்.

சுந்தரேசன் வேகமாக போன் செய்து “யாரு சாமியா? நான்தான்டா சுந்தர் பேசுறேன். உன் பையன் காஞ்சிபுரத்துலதான தாசில்தாரா இருக்கான்? ஆமாடா. பொண்ணு பார்த்திருக்கேன். அதுக்காகத்தான் உன்னை கூப்பிட்டேன். என் மருமக அவந்தி தெரியுமில்லையா? இங்க ஒரு ப்ராப்ளம்” என்று ஆரம்பித்து தன் நிலைமையை சொல்லி முடித்து, “ரொம்ப தேங்க்ஸ்டா. இன்னும் பத்து நிமிஷத்துல வந்திடுறியா? திருப்பவும் தேங்க்ஸ்டா. இதை என் வாழ்நாளிற்கும் மறக்கமாட்டேன்” என்றார்.

அழைப்பைத் துண்டித்து, “என் ப்ரண்ட், அவன் பையனோட இன்னும் பத்து நிமிஷத்துல வர்றானாம். நீ என்னமா சொல்ற?” என கேட்டார்.

அனைவரும் ஒருவித அதிர்ச்சியோடும், டென்சனோடும் அவந்திகாவின் பதிலுக்காய் பார்த்திருக்க, அவளோ கூலாக, “எனக்கு சம்மதம் மாமா” என்று கார்த்திக்கின் ஈகோவைத் தட்டிவிட்டாள்.

அதில் வேகமாக அவளருகில் கோபமாக வந்தவன், “அறிவிருக்கா உனக்கு? கட்டின புருஷனை பக்கத்துல வச்சிட்டு, எவனையோ கட்டிக்கப் போறேன்னு உளர்ற. அடிச்சிப் பல்லைக் கழட்டிருவேன் ராஸ்கல்” என்றான்.

“ஹலோ சார். இந்த அதிகாரமெல்லாம் மத்தவங்ககிட்ட வச்சிக்கோங்க. என்கிட்ட வேண்டாம் சொல்லிட்டேன்.”

“ஓ... அப்ப அந்த மத்தவங்கள்ல நீ கிடையாதுன்னு சொல்ற? ம்... புரியுது.”

‘சரியான லூசன். என்ன பேசினாலும், அதுல ஒரு பாய்ண்டை பிடிக்கிறான்’ என மனதினுள் வசைபாடினாள்.

அவளின் நினைவுக்குத் தடையிட்டு, “சரி வா டைமாகுது” என கைபிடித்தான்.

பிடித்த கையை உதறி, “நான் மாமா பார்த்த பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்று அவனின் ஈகோவிற்கு திரும்பவும் தீ ஏற்ற, அடுத்த வினாடி கன்னம் பிடித்து நின்றாள்.

அவளுக்குத்தானே தெரியும், தன் ஈகோவையும் விட்டுக்கொடுத்துக் கல்யாணம் பண்ணக்கூடாது. அதே நேரம் கார்த்திக்கைத் தவிர, வேறு யாரையும் நிழலால் கூட நெருங்க முடியாது. அதனால்தான் ,அவனின் கையால் தாலி வாங்க, வேண்டுமென்றே வீம்பாக பேசியது.

அதற்குள், “என்ன பண்ற கார்த்திக்?” என்று அனைவரும் அவன்மேல் பாய,

“ஹான்! இப்ப வாங்க இவ்வளவு நேரம் இவள் பேசினப்பல்லாம், யாரும் பக்கத்துல வந்திராதீங்க” என்றவன் அவந்தியின் புறம் திரும்பி, “என்ன தைரியமிருந்தா, நான் பக்கத்துல இருக்கம் போதே, யாரையோ கட்டிக்குவேன்னு சொல்வ? உன்னை... விட்டா இப்படியே பேசிட்டேயிருப்ப” என்று எதையோ தேடினான்.

அவன் அடித்த அடி தாளாமல், முந்தைய தின தூக்க மாத்திரையின் வீரியமும், காலையிலேயே தலைக்கு குளித்ததும் சேர்ந்து, கீழே தள்ளுவது போல் கண்ணை இருட்டிக் கொண்டு வர, தலையைக் குலுக்கி சுதாரித்து நின்றவளிடம், வந்த கார்த்திக், அவந்திகா தன்னை பார்ப்பது தெரிந்ததும், கையிலுள்ள தங்கத்தாலியை, காலத்துக்கும் நிலைத்திருக்க அம்மனை வேண்டியபடி, அவந்திகாவின் கழுத்தில் அணிவித்து மிசஸ்.அவந்திகா கார்த்திகேயன் ஆக்கிக் கொண்டான்.

இதை எதிர்பார்த்தாற்போல், சுற்றியுள்ளவர்கள் அட்சதை போட, தாலி அணிவிக்கும் வரை அமைதியாக நின்றிருந்தவள், கழுத்தில் தாலி ஏறியதும், அதிர்ந்து விழிப்பதுபோல் செய்து விலகப் போக, விலகவிடாமல் கார்த்திக் பிடித்திழுக்க, அந்த வேகத்தில் அவந்தியின் கண்கள் சொருகியது.

அவளின் உடல் தள்ளாட்டத்தை வைத்து மயங்கப்போகிறாள் என்பதை உணர்ந்தவன், கீழே விழாமல் தாங்கிப் பிடித்து, அவசரமாக தண்ணீர் எடுத்துவரச் சொல்லி, தண்ணீர் வந்ததும் அதை வாங்கி அவள் முகத்தில் தெளித்தான்.

“என்னாச்சி?” என்று மற்றவர்கள் பதைப்புடன் வர, “அதிர்ச்சிதான் வேற ஒண்ணுமில்லை” என்றான்.

கௌஷிக், வனஜாவை சென்னை கமிஷனர் அலுவலகம், அழைத்துச்செல்ல சொல்லி மற்றவர்களையும், சென்னை கிளம்பச் சொன்னான். மனைவியை கைகளில் ஏந்தி காருக்கு கொண்டு செல்லும் பொழுது, கண்விழித்த அவந்திகா அப்பொழுதுதான் கவனித்தாள் அந்தத் தழும்பை. கண்கள் அதைவிட்டு விலகாமல் பார்த்திருக்க, அவளின் எண்ணங்களும், அவள் தன்னைப் பார்ப்பதை அறிந்தவனுடைய எண்ணங்களும், மூன்று வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுக்குச் சென்றது.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top