- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
16
“அந்த நேரம் அவந்தியைக் காப்பாத்துனது, நீங்களா தம்பி? நாங்க விசாரிச்சப்ப உங்க நேம் சொன்னாங்க. உங்களை மீட் பண்ணி நன்றி சொல்ல, நானும் அவந்தியும் முயற்சி பண்ணினோம். ஆனா, முடியல” என்ற சுந்தரேசனுக்கு, ‘ஆம்’ என்று பதிலளித்தவன், “ஓ... நான் அதன்பிறகு வடமாநிலம் சைடு போயிட்டேன்” என்றான்.
“போதை மருந்து சம்பந்தமா முக்கியமான விஷயங்கள் கலெக்ட் பண்ணினப்ப, தமிழ்நாட்டுல உள்ளவன் மேல் கைகாட்டுனாங்க. எட்டு மாசத்துக்கு முன்னாடி இவனை ஸ்மெல் பண்ணிட்டேன். அதுக்குள்ள இன்ஸ்பெக்டர் பரத் சம்பந்தப்பட்ட விஷயமும் கேள்விக்குறியா இருந்ததால, ரெண்டுலயும் பிஸியாகிட்டேன். அப்புறம் கௌஷிக் ப்ரூட்ஸ் யூனிட்ல செக்யூரிட்டியா வேலைக்குச் சேர்ந்து, வாட்ச் பண்ணினோம். அதுக்கு அந்த ஏரியாவுல உள்ள செக்யூரிட்டி சங்கத்துல பேசி, சம்மதிக்க வச்சி பகல்ல நான்னா, நைட்ல தாமு இருப்பான். அப்படியே இந்த கும்பலைப் பிடிக்க பண்ணின ப்ளான்தான் திருடன் வேஷம்.”
நடப்புக்கு நடுவில்
கடந்த ஆறுமாதமாக சென்னையிலுள்ள விஐபிகளிடம் பேசி தங்கள் வீட்டில் திருடு போய்விட்டது என்று அவர்கள் மூலம் பத்திரிகைக்கும், ஊடகத்திற்கு தகவல் கொடுத்து, அதை மக்களை மட்டுமல்லாமல், தவறான தொழில் செய்பவர்களையும் நம்பவைத்தது காவல்துறை. குற்றவாளிகள் எவ்வளவு அடித்தாலும், உதைத்தாலும், தன் கூட்டத்தாரைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். காவல்துறையிடம் மாட்டியிருந்த ரத்தனிடம் விசாரிக்கப்படும், விசாரணையில் எந்த விஷயத்தையும் வாங்க முடியாது என்பதை உணர்ந்திருந்ததால், அவன் மூலம் தென்மாவட்ட வியாபாரியான கௌஷிக்கை பிடிக்கத்தான், இந்த திருடன் வேஷத்தை ஆறுமாத காலமாக தொடர்ந்தது. அதன்பின் காவல்துறையினரிடம் பிடிபடுவது போல் ஜெயிலுக்கு சென்று, ரத்தனின் நம்பிக்கைக்கு உரியவனாக மாற அகமும், புறமும் ஒருங்கிணைத்து, முகத்திலோ, வார்த்தையிலோ சின்ன வேறுபாடு தெரியாத அளவிற்கு அவனிடம் பழகினான் கார்த்திக்.
பின் அவனின் நம்பிக்கைக்குரியவனாகி, இருவரும் தப்பிக்கும் முன் தெரிந்த காவலர்களை வரவழைத்து, ரத்தன் முன் அவர்களை அடிப்பதுபோல் நடித்ததும், ரத்தனின் நம்பிக்கையில் ஒருபடி மேலேறினான். அவன் மூலமாக, இந்திய அளவில் விற்பனை செய்யும் ஜாக்கின் மேல், காகம் எச்சமிட்டதாக சொல்லி, அதை துடைப்பதுபோல் அவனுக்கே தெரியாமல், பெல்ட்டின் இடையில் சிப் ஒன்றை வைத்தான். ரத்தனுடன் வந்த ஆள் என்பதால், ஜாக்கும் கார்த்திக்கை சந்தேகப்படவில்லை. அந்த சிப் மூலம் அவன் போகுமிடம் அறிந்து, தனி காவலர்களை வைத்து ஆந்திராவில் வளைத்துப் பிடித்தார்கள்.
பின் சென்னையில் போதைப் பொருளை, உரிய இடத்தில் சேர்ப்பிக்க எண்ணிய ரத்தனிடம், ‘வெளியிடங்களில் அந்த ஏஜெண்டை சந்திக்க வேண்டாம் மாட்டிக் கொள்வோம். அதனால், கோவிலில் சந்திக்கலாம்’ என்று ரத்தனுக்கு ஐடியா கொடுத்ததோடு, ‘தான் இருந்தால் வருகிறவருக்கு தயக்கம் இருக்கும். நான் உங்க கண்ணு படுற தூரத்தில் இருக்கேன். பார்ட்டி போனதும் கூப்பிடுங்க’ என நல்லபிள்ளையாக தள்ளிச் சென்று மறைவாக அமர்ந்தான். கார்த்திக்கை மெச்சிக் கொண்டிருக்கும்போது கௌஷிக் வர, வந்தவன் ரத்தனிடம் பேசியதை பார்த்து, மறைத்து வைத்திருந்த கைபேசி மூலமாக, கோவிலின் வெளியே இருந்த கௌஷிக் காலணியின் உள்பகுதியில், கால் தட்டாதவாறு ஒரு சிப் வைக்கச்சொல்லி மெசேஜ் அனுப்ப, அதை தாமு கச்சிதமாக முடித்திருந்தான்.
கௌஷிக்கின் மூலமே அவன் சம்பந்தப்பட்ட நபர்களைத் தெரிந்து, அதன் பின்னரே வேட்டைகள் அதிகமாக, குடும்பத்தைப் பற்றியோ, அவந்திகாவைப் பற்றியோ எண்ணமில்லாமல், வட மாநிலத்துக்கும், தென் மாநிலத்துக்குமாக அலைந்து, நான்கு வருடங்களாக, தாங்கள் போட்டிருந்த குறிக்கோள்படி, இந்த குறுகிய காலத்தில் அந்த கும்பலை கூண்டோடு பிடித்திருந்தான் கார்த்திக்.
கௌஷிக்கைப் பிடிக்க எதிர்பார்த்த தருணத்தை, அவனே ஏற்படுத்திக் கொடுத்திருந்தான். சந்தோஷ் மூலம் நேத்ராவைக் கடத்த திட்டமிட்டதை அறிந்து, அங்குள்ள நம்பிக்கையான அதிகாரி மூலமாக, கௌஷிக்கின் நண்பனையும் கூட்டாளிகளோடு பிடிக்க வைத்திருந்தான் கார்த்திக்.
“உங்க பையனோட பினாமியா உங்க ஒய்ஃப்தான் இருக்காங்க அங்கிள். உங்க ஒய்ஃப்கு எதுவரை தொடர்புன்னு தெரியல. அன்பார்சுனேட்லி அவங்களையும் அரஸ்ட் பண்ண வேண்டிய சூழ்நிலை. ஐம் சாரி அங்கிள்” என்றான் சற்று வருத்தமாக.
“ இல்ல இவன் பொய் சொல்றான். எங்கமேல உள்ள கோபத்துல போலியா கேஸ் ஜோடிச்சி மாட்டிவிடப் பார்க்கிறான்” என்று வனஜா கத்தினார்.
அதையே ‘ஆமாம்’ என ஆமோதித்தான் மகன்.
“ஓ... அப்படியா கௌஷிக்” என்ற கார்த்திக்கின் தீவிர பாவனையில், தன் பார்வையை தழைத்தாலும், திரும்பவும் தலைதூக்கி “அப்படித்தான்” என்றான்.
“அப்ப சரி இது யாருன்னு பாரு” என்று ஒரு வீடியோவை ஓடவிட, அவன் அந்த ஜாக்கிடம் டீல் பேசியது. கோவிலில் ரத்தனை சந்தித்தது. சென்னையின் இன்றைய நிலவரம் என்று புள்ளிவாரியாக கௌஷிக் பேசியது பதிவாகியிருந்தது. “இப்பவும் சொல்வியா இது நீயே இல்லைன்னு?”
“ஆ... ஆமா” என்று சொல்லி முடியுமுன் அடி வாங்கியிருந்தான் வனஜாவின் கையால்.
“இப்படி என் தலைமேல கல்லைத் தூக்கிப் போட்டுட்டியேடா. நிறைய பேர் இந்த மாதிரி ப்ரூட்ஸ் பழுக்க வைக்கிறாங்கம்மா. நல்லா பண்ணினா நிறைய லாபம் கிடைக்கும்னு சொன்னதாலதான், நான் பணம் கொடுத்தேன். ஆனா, நீ என்னடா பண்ணிட்டு வந்து நிற்கிற?”
“இதெல்லாம் நீ கொடுத்த இடம்தான் வனி. இப்ப இந்த நிலையில் வந்து நிற்குது” என்ற சுந்தரேசனிடம் திரும்பி,
“ஆமா. நான்தான் இடம் கொடுத்தேன். ஒரு தகப்பனா அவனை நீங்க கண்டிச்சிருக்கலாம்ல? ஏன் கண்டிக்கலை?
“எங்க என்னை கண்டிக்கவிட்ட? அவனைத்தான் அடைக்கோழி மாதிரி என்கிட்ட வரவிடாம அடைகாத்தியே” என்றார் பதிலுக்கு.
“ஆமா. எல்லாமே என்னாலதான். என்னோட பேராசைதான். இந்த அவந்தியை விட, என் பையன் பெரிய ஆளா வரணும்னு எதிர்பார்த்தேன். ஆனா, எல்லாமே தப்பாவே முடிஞ்சிருச்சே” என்று தலையிலடித்தபடி அழுதார்.
“அத்தை வேண்டாம்” என்று தடுக்க சென்ற அவந்தியை ஈஸ்வரி தடுத்தார்.
அதற்குள் கண்ணீர் துடைத்து, மகனின் சட்டையைப் பிடித்து, “ஏன்டா இப்படிப் பண்ணின? இவ்வளவு பணம் வச்சிருந்தும், ஏன்டா அவந்திய கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு துடிச்ச? என்னோட ஆசைக்காகன்னு சொல்லாத? இந்த உண்மை தெரியுறதுக்கு முன்னாடி, அதை சொல்லியிருந்தா, கண்டிப்பா உன்னை நம்பியிருப்பேன். இல்ல அவள்மேல உள்ள பாசம்னு சொல்லாத. அதை நம்புறதுக்கு நான் ஒண்ணும் முட்டாள் கிடையாது. உன்னோட அம்மா. அப்புறம் நிறைய டாக்குமெண்ட்ஸ்ல கையெழுத்து வாங்கினியே. அது இந்த கார்த்திக் சொன்னமாதிரி பினாமி பேப்பர்ஸா?”
அனைத்திற்கும் கௌஷிக் அமைதிகாக்க, “பேசுடா ஏன் அமைதியா நிற்கிற?”
“எல்லாத்துக்கும் தொடக்கம் நீங்களா இருந்துட்டு, என்னை பேசு பேசுன்னா, என்ன பேசச் சொல்றீங்க? ஆமா. அந்த பேப்பர்ஸ் எல்லாம் பினாமியா உங்களைப் போட்ட சொத்துப் பத்திரம்தான். நீங்க ஆசைப்பட்டதுதானே நிறைய பணம் வேணும்னு. அதான். உங்களோட பணத்தாசையை எனக்கும் காட்டி, ஊட்டி வளர்த்தது நீங்க. அவந்தியைப் பற்றி பேசும்போதெல்லாம், அவ பணக்காரி நாம ஒண்ணுமில்லாம வந்தவங்க, நீ பெருசானதும் அவளைக் கல்யாணம் பண்ணி, இந்த சொத்து முழுதையும் நீயும் நானும் முறையா அனுபவிக்கணும்னு, சொல்லி வளர்த்தது யாரு? அப்பான்னு ஒருத்தர் இருந்தும் இல்லைன்ற எண்ணத்தை உண்டு பண்ணி, அப்பாகிட்ட நான் பேசப்போகும் போதெல்லாம், அவருக்கு அவந்திதான் முக்கியம். நீயோ நானோ முக்கியமில்லைன்னு, அவர் மேலயும், அவந்தி மேலயும் வெறுப்பை வளர்த்தது யாரு?”
“சின்ன வயசுல, அப்பா பாசத்துக்கு எவ்வளவு ஏங்கியிருப்பேன் தெரியுமா உங்களுக்கு? ஒவ்வொருத்தனும் என்னடா உனக்கு அப்பா இல்லையா? எல்லா பங்சனுக்கும் அம்மாவே வர்றாங்கன்னு கேட்டப்ப, நான் பட்டபாடு எனக்குத்தான தெரியும். இப்படி எல்லாம் இருந்தும், இல்லாம இருந்ததாலதான், சின்ன வயசுலயே தேவையில்லாத நட்பு வட்டம், சேரக்கூடாத ஆளுங்களோட சேரும்போது எதுவும் தப்பில்லைன்னு தோணிச்சி.”
“அவந்தி மேல அப்பவும் சரி, இப்பவும் சரி, எந்தவிதமான அபிப்ராயமும் கிடையாது. அவ எனக்கு எதிரி மட்டும்தான். இப்ப நான் பண்றது போதைக்கடத்தல். மாட்டினா தண்டனை உறுதி. சம்பாதிச்ச அத்தனையும் போயிரும்னு தெரியும். அதுக்கப்புறம் என்னோட வாழ்க்கை நடுரோட்டுல நிற்க வேண்டியதாகிரும் அப்பாட்டின்னுதான், அவந்தியை கல்யாணம் பண்ணி, அவளோட சொத்தை நாம உரிமையா அனுபவிக்கலாம்னு சம்மதிச்சேன். எனக்கென்ன இப்படி வாழணும்னு ஆசையா என்ன? அப்பா அம்மா இருந்தும், அனாதை மாதிரி வளர்றவன் தறிகெட்டுத்தான் போவான்.”
தகப்பனிடம் சென்றவன் “முடிஞ்சா என்னை மன்னிச்சிருங்கப்பா. நீயும்தான் அவந்தி. விடுதலைன்னு ஒண்ணு கிடைச்சிதுன்னா, கண்டிப்பா உங்க பையனா நல்லவனா வாழ்றேன்பா. போகலாம் சார் நான் ரெடி” என்றான் கார்த்திக்கிடம்.
“என்னை மன்னிச்சிருடா கௌஷிக். உங்கம்மாவுக்கு பயந்து உன்னை கைவிட்டுட்டேனோன்னு குற்றவுணர்ச்சியா இருக்கு. நான் அவளை கண்டிச்சா, இந்த சின்னப் பொண்ணை பழிவாங்குவாளேன்னுதான் விலகியிருந்தேன். ஆனா, அது உனக்குள்ள இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்னு நினைக்கல” என்றார் வருத்தமாக.
“விடுங்கப்பா. இந்த நிலையிலதான், என்னை உங்களுக்கு புரியவைக்கணும்னு இருக்கு. என்ன பண்றது? “
“என்னை மன்னிச்சிருன்னு சொல்லக்கூட தகுதியில்ல கௌஷிக். உன்னோட இந்த நிலைக்கு நானே காரணமாகிட்டேனே” என வனஜா ஒருபுறம் அழ... “ஹ்ம்... காலம் கடந்த ஞானோதயம்மா. பட், என்னோட சேர்த்து நீங்களும் தண்டனை அனுபவிக்கப் போறீங்க. அப்ப நீங்க செஞ்ச பாவமும், சேர்ந்து போயிரும்” என்றான்.
“ஓகே இன்ஸ்பெக்டர். அரைமணி நேரத்துல நான் வர்றேன். ப்ரஸ்கு நியூஸ் கொடுக்கலாம். இனியும் கௌஷிக் தப்பிக்க முயற்சி பண்ணமாட்டான்னு நினைக்கிறேன்” என்றதும் சம்மதமாக தலையசைத்தவன், தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து கார்த்திக் கையில் கொடுத்தான்.
கார்த்திக் அதை வாங்கியதும், “உங்க கல்யாணத்துக்கு என்னுடைய வாழ்த்துகள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா, நானும் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணலாமா?” என்றான் சின்ன குன்றலோடு.
சிறிது யோசனைக்குப்பின் கார்த்திக் சம்மதம் சொல்ல, அதே சமயம் “நாங்க வர்றதுக்குள்ள கல்யாணம் முடிஞ்சிருச்சா?” என்று வைஷ்ணவி, வெங்கடேஷ், நேத்ரா உள்ளே வந்தார்கள்.
“பெண்ணுக்கு தோழி நீங்க இல்லாமலா” என வைஷ்ணவியை வரவேற்று, “அப்புறம், வாங்க டாக்டர் மேடம்” என்று நேத்ராவை சந்தோஷ் அழைத்தான்.