- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
15
18 வருடங்களுக்கு முன்
தூத்துக்குடி மாவட்டம் நத்தம் கிராமம். இங்கு விவசாயமே பிரதானம். மல்லி(தனியா), வெங்காயம், மிளகாய் விளைச்சலும் அமோகமாக நடக்கும் இடம். வீடுகள் என்றால் எண்ணிக்கையில் 1500 வீடுகள் இருக்கும் சற்று பெரிய ஊர். இங்கு அரசுப்பள்ளிகள் உண்டு. கடந்த நான்கு வருடமாக ஆங்கிலப் பள்ளி ஒன்று தனியாரால் நடத்தப்பட்டு வருகிறது.
ஆறுமுகம், ஜெயலக்ஷ்மி தம்பதியருக்கு இரு பிள்ளைகள். மூத்தவள் ராஜேஸ்வரி. ராஜேஸ்வரிக்கு குழந்தைகள் கிடையாது. அவளை விட பத்து வயது இளையவன் வெற்றிவேல்.
வெற்றிவேல் அந்த ஊரில் செல்வாக்கான மனிதன். பணத்தினால் மட்டுமல்ல குணத்தினாலும் உயர்ந்தவன். தனலக்ஷ்மி பெயருக்கேற்ற அழகு, குணம், புத்திசாலித்தனம் என ஒருங்கே அமைந்தவள். படிப்பு என்று பார்த்தால் இருவரும் பனிரெண்டு வரை படித்திருந்தார்கள். இவர்கள் திருமணம் பெற்றோர்கள் பார்த்து முடித்து வைத்திருந்தாலும், திருமணத்திற்குப் பின் காதல் என்ற ஒன்றை மட்டுமே அனுபவிப்பவர்கள்.
இவர்களின் அன்பின் பரிசு சரவணன், அபிநயா. சரவணன் அப்பாவைப் போல் இருந்தாலும் முழுக்க முழுக்க அம்மாவின் குணம். அம்மா பிள்ளை இவன். அபிநயா அம்மாவை ஜெராக்ஸ் எடுத்த உருவம். சின்னவர்களுக்கே உரித்தான சேட்டைகளோடும், பொறுப்போடும் இருப்பவள்.
“ஏன் இப்படிப் பண்றீங்க?” என்று கேட்ட மனைவியிடம்,
“நான் என்ன பண்ணினேன். இன்னும் ஒண்ணுமே பண்ணலையே?” என்று குறும்பாகக் கேட்ட வெற்றிவேலிடம்,
“சும்மா வேற எதாவது பேசி. பேச்சை மாத்தாதீங்க. நீங்க பிள்ளைங்கலை கொஞ்சம் கண்டிச்சி வைங்க. அம்மா கண்டிப்பு மட்டும் போதாது. அப்பாவோட கண்டிப்பும் அவசியம்ங்க” என்றாள் தனலட்சுமி.
“அதான் நீ இருக்கியேமா. நீ எவ்வளவுதான் கண்டிச்சாலும் ஏன் அடிச்சாலுமே, அடுத்த நிமிஷம் மறந்திருவாங்க. நான் கண்டிச்சா அது அவங்க மனசுல சின்னதா உறுத்திக்கிட்டே இருக்கும். நீ என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனா, நான் கண்டிக்கிறது கஷ்டம் தனம். நீ பிள்ளைங்களுக்கு நல்லது தான் சொல்லித்தருவன்னு தெரியும்.”
“போங்க. நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சிக்கவே மாட்டேன்றீங்க” என்று முகம் திருப்ப,
“புரியுதுமா. அப்பாவோட பாசம் மட்டுமில்லை, கண்டிப்பும் அவசியம் தான். இருந்தாலும் என்னால முடியலை. என்ன பண்ண சொல்ற?”
“என்னவோ பண்ணுங்க” என்றாள் கோவத்தில்.
“அப்ப என்ன வேணும்னா பண்ணலாமா?” கையைத் தேய்த்து நம்பியார் தொணியில் கேட்க,
“என்ன வேணும்னா பண்றதா. புரியலை? இப்ப என்ன சொல்ல வர்றீங்க?” என்றபடி அவனை ஏறிட்டவள், அவன் பார்வையின் மாற்றத்தைப் பார்த்து, “என்ன பார்வையெல்லாம் ஒரு மாதிரி இருக்கு? இது சரியில்லையே.”
“நீதானமா என்னவோ பண்ணுங்கன்னு சொன்ன. அதான் அத்தான் என்ன பண்ணலாம்னு பார்க்கிறேன்.”
“அச்சோ! உங்களை... நான் என்ன அர்த்தத்துல சொன்னா, நீங்க என்ன அர்த்தத்துல எடுத்துக்கறீங்க. எது சொன்னாலும் அதை டபுள் மீனிங்ல எடுத்துப் பேசுறது. பிள்ளைங்க வரப்போறாங்க கொஞ்சம் தள்ளியே இருங்க என்று அவனை கைகளால் தள்ளிவிட்டாள்.
“ம்... பேசுறதுக்குக் கூட உரிமையில்லப்பா இந்தக் காலத்துல” என்று சலித்துக் கொண்டவனிடம், பிள்ளைகள் ஓடி வந்து, “அப்பா, அம்மா வாங்க” என்று இழுத்தனர்.
“எங்கடா வரணும்? எனக்கு வேலை இருக்கு. அப்பாவைக் கூப்பிட்டுப் போங்க” என்றதும், சின்னக்குட்டி அம்மாவிடம், “அம்மா ப்ளீஸ்” என்று சொன்ன அழகில் மயங்கி, “சரி வாங்க போகலாம்” என்று அவர்கள் சென்ற இடம் வீட்டின் பின்புறம் உள்ள பெரிய கிணறு.
“இங்க என்னடா தம்பி அதிசயம் இருக்கு?” என்று கேட்ட தந்தைக்கு கிணற்றிற்குள் கை காண்பித்து, “பாருங்கப்பா” என்றான்.
“ஒண்ணும் தெரியலையேடா?”
“அப்பா கால் வைத்து இறங்குவோமே அங்க. ஆமாடா அதுக்கு இப்ப என்ன?”
“அச்சோ! அம்மா நீங்க பாருங்க” என்றதும் அங்கிருந்த குருவிக் கூட்டைப் பார்த்தவள், பையனே சொல்லட்டும் என்று தெரிந்தே தெரியாதது போல் நடிக்கும் கணவனைப் பார்த்தபடி, “தெரியலடா” என்றாள்.
கணவன் அவளைப் பார்த்து கண்ணடிக்க, நாக்கைப் பல்லால் கடித்து தலையை அசைத்து, ‘வந்தேன்னா பாருங்க’ என்பது போல் பாவனை செய்தாள்.
“அதுல குருவி கூடு கட்டியிருக்கும்மா” என்று அவர்களின் காதலைக் கலைத்தான்.
“ஆமா. ஆமாடா. தம்பி எனக்குத் தெரியல பாரேன். இரு நல்லா பார்க்கிறோம்” என்று எட்டிப் பார்த்து, “அட ஆமாடா குட்டி. குருவிக் கூடு” என்றாள்.
“சூப்பரா கட்டியிருக்குல்லம்மா. ஏன் கிணத்துல கட்டியிருக்கு? வீட்லதான கட்டணும்?” அவனின் சந்தேகத்திற்கு கணவனைப் பதில் சொல்லச் சொல்லிக் கண்ணைக் காட்ட,
“வாங்கடா குட்டீஸ். நான் வீட்டுக்குள்ள போயி கதை சொல்றேன். அம்மா சமையல் பண்ணட்டும். சரியா?”
“சரிப்பா” என இருவரும் அவன் மேல் தாவ, வீட்டில் வரவேற்பறையில் இருந்த நாற்காலியில் வெற்றிவேல் உட்கார, இருவரும் மடியில் இருபக்கமும் ஏறி உட்கார்ந்து, “ம்... சொல்லுங்கப்பா. ஈகர்லி வெய்டிங் பார் யுவர் ஸ்பேரோ ஸ்டோரி” என்றதும் பையனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தபடி, “நீ இங்கிலீஸ் சூப்பரா பேசுறடா” என்றான்.
“அப்பா அது அப்புறமா பேசலாம். முதல்ல குருவிக்கதை சொல்லுங்க?”
“ஆமா அப்பா. சொல்லுங்க?” என்று தன் மழலைக் குரலில் மிழற்றினாள் குழந்தை.
“அதுவா நமக்குன்னு ஒரு வீடு கட்டியிருக்கோம்ல. அது மாதிரி அதுக்குத் தேவையான வீட்டை அது கட்டிக்கிருச்சி.”
“அதான் எங்களுக்குத் தெரியுமேப்பா. அது நம்ம வீட்டு மாடியில கட்டாம, ஏன் கிணத்துல கட்டியிருக்குகன்னு கேட்டா? போங்கப்பா. நாங்க அம்மாகிட்டவே கேட்டுக்கறோம்” என்று மகன் இறங்கி ஓட, மகளும் ஒடினாள்.
“அம்மா, அம்மா” என்று இருவரும் தாயின் புடவையைப் பிடித்து இழுக்க, ஏற்கனவே கணவனின் சொதப்பல் பேச்சிக்களைக் கேட்டதால் அவனை முறைத்தாள்.
கண்களால் மன்னிப்புக் கேட்டவன், “நான் காய் கட் பண்றேன். நீ அதுக்குள்ள அவங்களுக்கு சொல்லிக் கொடுத்துரு. நல்ல பிள்ளைல” என்றான் கெஞ்சலாக.
“ம்க்கும்... இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.” நொடித்தபடி சென்றவள் மகன், மகளிடம் அமர்ந்து, “நம்ம வீட்ல நாலுபேர் இருக்கோம்ல?” என ஆரம்பிக்க,
“அம்மா! தாத்தா, பாட்டி சேர்க்கலை?”
“அவங்க ரெண்டு பேரும் தான் அத்தை கூட இருக்காங்களேடா.”
“ஆமால்ல. சரிம்மா சொல்லுங்க?” என்றனர்.
“வீட்டுக்குள்ள நாம சத்தமா பேசிக்குவோம். நீங்க ரெண்டுபேரும் ஓடியாடி விளையாடுவீங்க தான?” கவனமுடன் கேட்கும் குழந்தைகளைப் பார்த்தபடி, “உங்க காதுல யாராவது வந்து திடீர்னு கத்தினாலோ, இல்ல உன்னை விளையாட விடாம பிடிச்சிட்டு இருந்தாலோ, எப்படி பீல் பண்ணுவ?” என்ற தாயின் கேள்விக்கு,
“கோவமாகவும், எரிச்சலாகவும் வரும். இதையேன்ம்மா சொல்றீங்க? குருவிக்கூட்டைப் பற்றி சொல்லுங்கம்மா? என்று காரியத்தில் கண்ணாக இருக்க,
“இருடா. அதுக்குத்தான் வர்றேன். வீட்டுல கூடு கட்டி, முட்டையிட்டு குஞ்சி வந்திருக்கும் போது, நாம யாராவது கத்தினாலோ, ஓடினாலோ, இல்லை பாப்பாவோ, நீயோ அழுதீங்கன்னா குருவிங்க பயந்துக்கும் தான? குருவியோட குஞ்சுங்க அழுதா அவங்க அம்மாவால எப்படி தாங்கிக்க முடியும். இப்ப கிணறுன்னா எந்த தொந்தரவும் இல்லாம பாதுகாப்பா இருக்கும்ல. அதான் விஷயம்.”
“அம்மா எனக்கு ரெண்டு சந்தேகம்.”
“கேளுப்பா. என்ன சந்தேகம் உனக்கு?”
“குருவி கிணத்துல இருக்கும் போது, நாம தண்ணீர் இறைப்போமே, அப்ப அதுக்கு டிஸ்டர்பா இருக்காதா? அப்புறம், ம்... வந்து...” என யோசித்தவன், “ஹான்! குருவியோட குட்டி சின்னதா தான இருக்கும். உள்ள விழுந்துராதா?”
“நீ சொல்றதும் சரிதான். ஆனா, தண்ணீர் இறைக்கும் போது, அது அங்க இருக்கிறதால எதிர் பக்கத்துல இருந்துதான் தண்ணீர் இறைப்போம். கொஞ்ச நேர வேலை அது. சீக்கிரமே முடிஞ்சிரும். அடுத்தது, குருவி உள்ள விழாதான்னு தான கேட்ட? அது ஒரு குறிப்பிட்ட பருவம் வரை கழிச்சி தான் பறக்கவே ஆரம்பிக்கும். அதுவரை அவங்க அம்மா பாதுகாப்புல இருக்கும். அதனால கீழே விழாது சரியா?”
“இப்ப அம்மா மடியில குழந்தையா இல்லாம, வளர்ந்து நடக்கிறோமே அப்படியாமா?” என கேட்டான் மகன்.
அதேதான்டா கண்ணா. உனக்குப் புரியுதாடா குட்டிமா?”
“ம்... புரியுது” என்று தலையாட்டினாள் அபிநயா.
கணவனைப் பார்த்தவளிடம், ‘இந்த விளக்கம் போதும்’ என்று சொல்ல, ‘சரி’ என்று தலையாட்டியவளோ உள்ளுக்குள், ‘ஷப்பா! தெரியாத விஷயத்தைக் கூட, தெரிந்தா மாதிரி எப்படில்லாம் காட்டிக்க வேண்டியிருக்கு.’
இரவு சாப்பிட்டு முடித்த பிள்ளைகளை பக்கத்து அறையில் தூங்க வைத்து கணவனிடம் வந்தாள்.
“பிள்ளைங்க தூங்கிட்டாங்களா?”
“ம்... தூங்க வச்சிட்டுத்தான் வந்திருக்கேன். நீங்க இன்னும் என்ன பண்றீங்க?”
“எல்லாம் உனக்காகத் தான்டி செல்லம்.”
“ஏன் நான் இல்லன்னா தூக்கம் வராதோ?” அவன் கொஞ்சலில் கேட்க, இவள் கிண்டலில் பதிலளித்தாள்.