- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
15
மறுநாள் விடியும் முன் காஞ்சிபுரம் மாவட்டம், ஊத்துக்காடு கிராமத்திலுள்ள அம்மன் கோவிலின் ஒதுக்குப்புறமான அறையில், தூக்கம் கலையாத துகிலில் அவந்திகா ஆழ்ந்திருந்தாள். அதிகாலை நான்கு மணியளவில், கல்யாண வேலைகள் அமைதியாக நடைபெற்றது. கோவிலைச் சுற்றிலும் அடியாட்கள் போல் ஒருசிலர் நின்று கொண்டிருந்தார்கள்.
ஆறுமணி அளவில் கண்விழித்த அவந்திகாவுக்கு அந்த அறையின் மெல்லிய வெளிச்சம் முகத்தில் பட, சட்டென்று தன்னிலை நினைவு வர சுதாரித்து சுற்றிலும் பார்த்தாள். பழைய பொருட்கள் வைக்கும் பத்துக்கு பத்து அறை போலிருந்தது. அவள் எழுந்த நேரம் வனஜா உள்ளே வர, “அத்தை நாம எங்க இருக்கோம்? இதென்ன பழைய ஸ்டோர் ரூம் மாதிரியிருக்கு?” என்றவளுக்கு அனைத்தையும் மீறி குரலில் பதற்றம் வந்தது.
“காஞ்சிபுரம் மாவட்டத்துல, யாரும் கண்டுபிடிக்க முடியாத ஊர்ல இருக்கோம்” என்றார் வனஜா.
“ஏன்?”
“உன்னோட கல்யாணம்ல, அதான் வந்திருக்கோம்.”
“அத்தை! எனக்கு ஏற்கனவே கல்யாணமாகிருச்சி.”
“அந்த அத்தியாயத்தைத்தான் முடிச்சி வச்சிட்டோமே!”
“என்ன உளறல் இது? கல்யாணம் என்பது வாழ்நாள் ஒப்பந்தம். அதை ஒரு அத்தியாயத்தோட முடிக்கப் பார்க்காதீங்க. சே... இப்படி நம்பவச்சி கழுத்தறுத்திட்டீங்களே.”
“உன்னை யாரு நம்பச் சொன்னது? முதல்ல பக்கத்துல ஒரு ரூம் இருக்கு. அங்கபோயி குளிச்சிட்டு, இந்தப் புடவையைக் கட்டிட்டு வா. அங்கேயே பேஸ்ட் ப்ரஸ் இருக்கு. ரூம்ல பூவும், நகையும் இருக்கு எடுத்துப் போட்டுக்கோ. உன்னால தனியா அலங்காரம் பண்ண முடியலன்னா, நான் வர்றேன் உதவி செய்யுறதுக்கு.”
“சரி நானே ரெடியாகுறேன். ஆனாலும், உங்களுக்கு பேராசை நிறைய அத்தை. உங்க பையனோட என் கல்யாணம்னா, உங்க கனவுலகூட நடக்காதுன்னு சொன்னேன்னு, அதை நனவாக்க என்ன பாடுபடுறீங்க. உங்க கனவு பலிக்காதுன்னு, நான் சொன்னது உண்மைன்னா, அவந்தி கல்யாண பொண்ணா, உங்க பையன் பக்கத்துலகூட நிற்கமாட்டா. நிற்கமாட்டா என்பதோட, நிற்க விட்டிருக்க மாட்டாங்கன்றதுதான் கரெக்ட். ஹா! வருவாங்க பாருங்க. என்னோட ரியல் ஹீரோ கார்த்திக்” என்றாள் அழுத்தமும் தீர்க்கமுமாக.
“ஓ.. இந்த நினைப்பு வேற உன் மனசுல ஓடுதா?” என கேலியாக ஆரம்பித்து, “அப்படியே உன்னைத்தேடி வந்தாலும், உயிரோட இங்கிருந்து போனால்தான” என்று குரோதமாக வனஜா சொல்ல,
“அத்தை” என அலற,
“இதான் பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சிப் பேசணும் சொல்றது. ம்... வேகமா கிளம்பு” என்று அவசரப்படுத்தினார்.
“கண்டிப்பா அத்தை. அப்பத்தான என் கல்யாணத்துல அழகாயிருக்க முடியும். பிற்காலத்துல, போட்டோ காண்பித்து என் பிள்ளைங்களுக்கு சொல்ல வேண்டாமா!”
“உன்னை...” கழுத்தைப் பிடிக்க வந்து நிறுத்தி, “ரொம்ப வாய் பேசுற இப்ப என்னால எதுவும் செய்ய முடியல. கல்யாணம் மட்டும் முடியட்டும் அப்புறம் இருக்குடி உனக்கு” என்று வெளியே சென்றார்.
‘ஸப்பா...’ என்று மூச்சை இழுத்துவிட்டு அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள். கௌஷிக்குடன் கல்யாணம் என்று சொல்லியும், தான் எந்த பரபரப்பும் இல்லாமல் இருப்பதை எண்ணி, அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. கண்களில் ஒருதுளி நீரில்லை.
‘வீட்டுக்குள்ளேயே இவ்வளவு தைரியசாலியா, எப்ப இருந்து அவந்தி மாறின? ஆச்சர்யந்தான். காரணம் கார்த்திக்கா? இருக்கும்.. இருக்கும் அவன் இல்லாமல்தான் நீ நீயாயிருக்க மாட்டேன்றியே! திருடன்னு தெரிஞ்சும் எப்படித்தான் இந்த மனம் ஏத்துக்கிச்சோ தெரியல. அவன்மேல உள்ள நம்பிக்கையா? இதுதான் காதலா? என்ன காதலோ போ. ஆனாலும், நல்லாத்தானிருக்கு’ என்று தனக்குத்தானே சிரித்தாள்.
புடவையை கையில் எடுத்துப் பார்க்க, மஞ்சள் கலரில் அரக்கு பார்டர் போட்ட, எம்ப்ராய்டரி பட்டுப்புடவை. ‘சேலை கூட பாரு அம்மனுக்கு சுத்துற மாதிரி வாங்கியிருக்குதுங்க.’ திட்டியபடியே குளித்து வந்து புடவை கட்ட, வயிற்றில் முற்றும் ஆறாத புண் சிறிது வலியை ஏற்படுத்தியது. வேறு வழியில்லாமல் கட்டினாள். அழகு நிலையத்தின் உபயத்தால், முதுகிற்கு கீழ்வரை சீராக வெட்டப்பட்டிருந்த தலைமுடியை, ஈரம்போக துவட்டியபடி, சுற்றிலும் பார்க்க ஒரு பலகையில் நகை, பூ அனைத்தும் இருக்க, அதிலிருந்த கண்ணாடியை எடுத்துத் தன்னை பார்த்தாள். ‘ம்... நாட் பேட் புடவை நல்லாத்தான் இருக்கு.’
தலைவாரி முடித்து பூவை எடுக்க, அதனடியில் ஒரு கடிதம் இருந்தது. ‘என்ன கவர் இது?’ என்று பெயர் பார்க்க சி.என் என்றிருந்தது. ‘இந்த இடத்தில் சி.என் கவரா எப்படி சாத்தியம். அவன் என்னைத் தொடர்ந்து வர்றானா? இல்லை நேற்று வந்தது தவறி இங்கு வந்ததா?’ குழப்பத்துடன் பார்க்க அது இன்றைய தேதியில் சிரித்தது. ‘படிக்கவா? வேண்டாமா?’ என்ற போட்டியில், ‘படிச்சித்தான் பார்க்கலாமே” என்று திறந்து படிக்க ஆரம்பித்தாள்.
ஹாய் டபுள் எ,
அவந்திகா அழகப்பன் என்றாலே,
அகிலமும் அழகாகிறதடி!
விட்டுவிட்டுத் துடிக்கும்
இதயங்கூட நின்று துடிக்கிறதடி
நின் பெயரை உச்சரிக்கையில்!
உன் இடுப்பு மச்சம்
எனை இம்சை செய்வதை
அறியாயோ - என் சகியே!
இன்றே வருவேன்
உன் கரம் பிடித்து
மின்னல் வெட்டும்
உன் கண்கள் காண!
படித்து முடித்ததும், ‘என் இடுப்பு மச்சம் இவனுக்கு எப்படித் தெரியும்?’ என்று அதிர்ந்தாள். ‘இன்றே வருவேன் உன் கரம்பிடிக்க.’ இதுவரை இல்லாமல் அவனைப்பற்றி ஆராயவில்லை. இன்றோ, ‘யார் இந்த சி.என்? என்னைப்பற்றி அவனுக்கெப்படித் தெரியும்?” என்ற கேள்வி அவந்திகா மனதினுள் குடைந்தது.
‘கடவுளே! இதென்ன புதுக்குழப்பம்?’ என நினைத்தவள், “அவந்தி” என்ற வனஜாவின் குரலில் கலைந்து, சி.என் நினைவையும் கலைத்து, அலங்காரத்தில் தன்னை ஈடுபடுத்தி, முடிந்ததும் கண்ணாடி பார்த்தாள். “கார்த்திக் சொன்ன மாதிரி அழகிதான்டி நீ” என தனக்குத்தானே பாராட்டிக் கொண்டாள்.
அதையே வனஜா, “என்னதான் சொல்லு. நீ அழகுதான் அவந்தி” என கையால் திருஷ்டி எடுத்தபொழுது,
“தேங்க்ஸ் அத்தை” என்றாள் சிரிப்புடன்.
காலை ஏழுமணி அளவில் மாப்பிள்ளை தோரணையில், கோவிலில் நின்று கொண்டிருந்த கௌஷிக் மனதில் பலவித யோசனைகள். யோசனையின் நாயகி நேத்ராவைக் கடத்த எண்ணிய, முந்தைய நாள் திட்டம் மறுநாள் காலையில், சந்தோஷினால் காற்றுப்போன பலூனாக புஸ்ஸென்றாகியது.
அவளைக் கடத்த வேண்டாம் என்று, தன் நண்பனிடம் சொல்வதற்கு போன் செய்ய, எதிரில் போன் உயிரற்றிருந்தது. ‘ஒருவேளை நான் அங்கிருந்து நகர்ந்ததும் நேத்ராவைக் கடத்தியிருப்பானோ? ஏன் என்னைக் காண்டாக்ட் செய்யவில்லை? உனக்கு நேர்ல வந்து பேசிக்கிறேன்டா’ என்றபடி பற்களைக் கடித்தான்.
அவனுக்குத் தெரியுமா? அவன் நண்பனின் நிலை தற்பொழுது என்னவென்று?
அவர்கள் இருப்பது சின்ன கோவில். ஆதலால், வாசலில் யார் வந்தாலும் சுலபமாக காணமுடியும். அவந்திகாவை அந்த குட்டி அறையிலிருந்து, சந்நிதானத்திற்கு முன் அழைத்து வந்து, கௌஷிக்கினருகில் வனஜா நிற்கச்சொல்ல, தயங்கிய அவந்திகாவை, “உனக்கு வேற வழியே இல்ல. உட்காரு” என்று அதட்டினார்.
எங்கு இருந்துதான் வந்தார்களோ தெரியாது, போலீஸ் உடையில் வந்த நான்கைந்து போலீஸ்காரர்களைத் தொடர்ந்து, ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி காரிலிருந்து இறங்கி, நேரே கோவிலினுள் நுழைந்து கௌஷிக்கைப் பார்த்து, “அரஸ்ட் ஹிம்” என்று ஆணையிட்டார். அதற்குள் கௌஷிக்கையும், அவனது ஆட்களையும், போலீஸ் சுற்றி வளைத்திருக்க, வெளியே நின்றிருந்தவர்களையும் பிடித்திருந்தார்கள்.
கௌஷிக்கும், வனஜாவும் “இந்த பொம்பளையா?” என அதிர்ந்து நின்று கொண்டிருக்க,
கம்பீரமாக, நேர்ப்பார்வையோடு, அங்கு வந்து நின்ற பெண்மணியையும், அதுவரை அங்கு நடந்தவற்றை, விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்த அவந்திகா, ““ஈஸூமா” என்றாள் ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக!
அப்பொழுதுதான் அவந்தியின் புறம் திரும்பியவர் “நானேதான்மா. கொஞ்ச நேரம், இங்க நடக்கிற எதையும் கண்டுக்காம, வேடிக்கை மட்டும் பாரு. உனக்கே எல்லாம் புரியும்” என்றார்.
கௌஷிக் தன்னைச் சுற்றியிருந்த காவலர்களை எல்லாம் தாண்டி, “ஏய்! நீ அந்த கார்த்திக் அம்மாதான?” என திமிராக கேட்டான்.
அடுத்த நிமிடம் கன்னத்தில் கைவைத்திருந்தான் ஈஸ்வரியின் கைங்கரியத்தால். அதேநேரம் சுற்றியுள்ள காவலர்கள் அவனை அடிக்க நெருங்க, அவர்களை கையமர்த்தி, “மரியாதைன்னா என்னன்னு தெரியுமாடா உனக்கு? ஒரு தேர்ட்ரைட் கிரிமினல் நீ. என்னைக் கைநீட்டி பேசுறியா? உன்னைத் தப்பு சொல்ல முடியாதுடா. ஏன்னா உன் தாயோட வளர்ப்பு, உன்னை அப்படி பேசவைக்குது. பையனை வளர்த்திருக்கா பாரு சொத்து சொத்துன்னு.”
“ஏய்! போலீஸோட வந்தா பயந்திருவோமா என்ன?” என்று வனஜாவும் வாய் கொடுத்து கன்னத்தில் கைவைத்தபடி நின்றார்.
அதைப்பார்த்திருந்த அவந்திகா, “ஈஸூமா! அன்னைக்கு சொன்னமாதிரி நீங்க ரௌடி ப்ளஸ் அரசியல்வாதியா? சென்னையில எல்லா அரசியல் லேடீஸூம் எனக்குத் தெரியும். நீங்க எப்படி புதுசா?” என்று அன்று ஈஸ்வரி தன்னிடம் சொன்னது உண்மைதானோ என்றெண்ணி, தன் சந்தேகத்தைக் கேட்டதும், சட்டென்று சிரித்து, “நல்லா கெஸ் பண்றடா” என்றார் ஈஸ்வரி.
“அதான் கேட்குறாள்ல. சொல்ல வேண்டியதுதான?” என்று தன் வாய், தவளை என வனஜா நிரூபிக்க, இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்து, வனஜாவின் நெற்றியில் வைத்தார்.
ஒரு ஜந்துவைப்போல் பார்த்தவர், “உன் வாய் அடங்கவே அடங்காதா? என்ன லேடி நீ? லேசா அழுத்தினா போதும். காத்தோடு காத்தா உன் உயிர் பறந்து போயிரும். ஜாக்கிரதை.”
துப்பாக்கியைப் பார்த்ததும் வனஜாவிற்கு மட்டுமல்ல, கௌஷிக்கிற்குமே சர்வமும் அடங்கியது. “துப்பாக்கியைப் பார்க்காதவனல்ல கௌஷிக். இப்பொழுது கூட லைசன்ஸ் இல்லாத துப்பாக்கி வைத்திருக்கிறான். ஆனால், சுற்றிலும் போலீஸ் நிற்பதால், அவர்கள் முன்னிலையில் எடுக்கும் தைரியமில்லாமல், சூழ்நிலைக் கைதியாய் நிற்கிறான்.
அவந்தியோ, “அத்தை” என அதிர்ந்து நிற்க,
அதைக் கண்டுகொள்ளாது, “இப்ப என்ன, நான் யார்னு தெரிஞ்சிக்கணும். அவ்வளவுதான? சொல்றேன் கேளு. புவனேஸ்வரி ஐஏஎஸ்! கேள்விபட்டிருப்பீங்களே. அது நான்தான். நேற்றுதான் சென்னையில் பொறுப்பெடுத்திருக்கேன். என் கணவர் சந்திரகுமார். எக்ஸ் விவசாயத்துறை அமைச்சர். அப்புறம் இப்படி சொன்னா புரியும் பாருங்க. புவனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட். அது எங்களோடதுதான்” என்றார்..
அதிர்ச்சியில் வாயடைத்தது அவர்கள் மட்டுமல்ல. அவந்தியும்தான். ‘புவனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்திய அளவில் புகழ்பெற்றது. அதுவுமில்லாமல் ஒரு கலெக்டர் தனக்காக தன் வீட்டில் நர்ஸ் வேலை பார்த்தார்களா? அவ்வளவு பெரிய பதவியில் இருப்பவரை நான் எப்படி அறியாமல் போனேன்? நானெல்லாம் என்ன ஜர்னலிஸ்ட்? அப்ப அந்த சின்னவீடு இவங்களோடது இல்லையா? எதுக்கு இந்த நாடகம் எனக்காகவா? அப்ப கார்த்திக் யாரு?” மனதினுள் ஆயிரம் கேள்விகள் குடைந்தபோதும், கண்கள் ஈஸ்வரியை அளவிட மறக்கவில்லை. அவரின் தோரணையும், சேலை கட்டி இருக்கும் விதமும், முகத்திலிருந்த படித்த களையும் தெரிவித்தது, சொன்னது உண்மையென.
சாதாரண குடும்பத் தலைவியாக பார்த்தபொழுது, அவரின் அன்பும் அக்கறையும் மட்டுமே தெரிந்தது. இன்று தான் அவரை வேறு ஒரு கோணத்தில் காண்கிறாள். இப்பொழுது அவரிடம் முன்னர்போல் உரிமையெடுத்து பேசலாமா? இல்லை அவரின் உத்தியோகத்திற்கான மரியாதை குடுக்கலாமா? மயக்கம் வருவது போலிருந்தது அவந்திகாவுக்கு.
அதேநேரம் மற்றொரு கார் ஆட்களை இறக்கிவிட்டு நகர்ந்தது.
அதிலிருந்து சந்திரகுமார் இறங்க, வெள்ளை வேஷ்டி சட்டையில், தங்க நிற பிரேமிட்ட கண்ணாடி அணிந்து, தான் படித்தவன், பணக்காரன் என்ற தோரணையில் வந்தார். ‘எப்படி? எப்படி இவரை அடையாளம் காணாமல் போனேன்? சாதாரண குடும்பத் தலைவராக பனியன், கைலியில் பார்த்ததாலா?’ குழப்பத்திற்கு நடுவில் சந்தோஷ் வந்தான்.
அவந்தியைப் பார்த்து புன்னகைத்து பெருவிரல் தூக்கி, “சக்ஸஸ். வந்துட்டேன் பார்த்தீங்களா?” என்றான் ஜாடையாக.
அவளோ என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், சிரிக்கக்கூட இயலாதவளாய், ஏன் சிரிப்பையே மறந்தவளாய் நின்று, ஈஸ்வரி சொன்னாற்போல் வேடிக்கை பார்த்திருந்தாள்.
Last edited: