- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
14
மாலை நிச்சயம் என்பதால் வேலைகள் அனைத்தும் சீக்கிரம் முடிந்தது. மதியம் சரணிடம் வந்த ராணி, “கொஞ்சம் ஹாஸ்டல் வரை போயி, எங்க ரூம்ல ஒரு பேக் இருக்கு எடுத்துட்டு வந்திருடா” என்று வேலை சொன்னார்.
“அத்தை நான் எப்படி? இதுவரை ஹாஸ்டல் உள்ள போனதே இல்லையே. அதுவும் நீங்க இல்லாம நோ சான்ஸ் அத்தை” என்று மனதினுள் சந்தோஷம் வந்த போதும், அதைக் காட்டிக் கொள்ளாமல் சொன்னான்.
“டேய்! வீட்டுல யாரும் இல்லடா. இந்த ஒரு டைம் சரண்” என்று அவர் கெஞ்சவும்,
“சரிங்க அத்தை. போய்ட்டு வர்றேன்” என்று கிளம்பினான்.
விடுதியில் நுழைந்தவன் ராணி இருக்கும் இடத்தில், அங்கு வேலை செய்யும் பெண் இருக்க, ‘அவளை எப்படி வரவழைக்கலாம்?’ என்று யோசித்தான்.
“வாங்க தம்பி. உட்காருங்க. என்ன விஷயம்?”
“இல்ல அத்தை பேக் ஒண்ணு எடுத்துட்டு வரச் சொன்னாங்க. அதான் வந்தேன்.
“சரிங்க தம்பி” என்றவள் என்ன தோன்றியதோ, “தம்பி ஒரு விஷயம். பத்து நிமிஷம் இங்க உட்கார்ந்து பார்த்துக்க முடியுமா? பொண்ணுக்கு உடம்பு சரியில்லை. பெரிய பொண்ணு தான் இருந்தாலும் மனசு கேட்கல. பார்த்துட்டு வந்தா கொஞ்சம் நல்லா இருக்கும் தோணுது” என்றார்.
“நீங்க போயிட்டு வாங்க. வர்றதுவரை நான் பார்த்துக்குறேன்” என்று அனுமதியளித்தவன், உடனே வேதவல்லிக்கு கைபேசியில் அழைத்து, தான் வரவேற்பில் இருப்பதாகச் சொல்லி மனைவியை அழைத்து வரச் சொன்னான்.
“கீழே ரிசப்சனில் கூப்பிடுறாங்களாம் ஆரு. வா போய்ட்டு வரலாம்” என்று தோழியை அழைக்க,
“ஏன் திடீர்னு கூப்பிடுறாங்க?”
“அது யாருக்குத் தெரியும். வா போகலாம்” என்று இழுத்து வந்தாள்.
வரவேற்பறை வந்ததும் தான் கணவன் அங்கிருப்பதை அறிந்து, “இங்க ஏன் வந்தீங்க? யாராவது பார்த்தா என்னாகும்?” என்று கேள்வி கேட்டாள்.
ஞாயிறு விடுமுறை என்பதால் தலைக்குக் குளித்து முடியை விரித்துவிட்டு நைட்டியில் இருந்த ஆராதனா, ராணி தான் கூப்பிடுகிறார் என்று அசால்ட்டாக துப்பட்டா கூடப் போடாமல் வர, அவனைப் பார்த்ததும் அதுவும் கணவன் தன்னை ரசனையாகப் பார்த்ததை இவள் பார்த்ததும், ‘சே இனிமேல் ஞாயிறு கூட சுடிதார்ல தான் இருக்கணும்’ என்று நினைத்துக் கொண்டாள்.
மனைவியின், ‘ஏன் வந்தீங்க?’ என்ற கேள்விக்கு, “ஏன் பயப்படுற செல்லம். நான் உன் புருஷன் தான” என்றான்.
“ஓ... அப்படிச் சொல்றீங்களா? நீங்களே சொல்லும் போது நான் சொல்ல என்ன இருக்கு. யார்கிட்ட சொல்லணும்? இங்க ஹாஸ்டல்ல ஆரம்பிக்கலாமா? இல்ல நிச்சயதார்த்த வீட்டிலிருந்து ஆரம்பிக்கவா?”
“சாரி தனு” என்று சரண் சொல்லவும்
‘சமபந்தமே இல்லாமல் எதுக்கு இந்த திடீர் சாரி? கேள்வியாய் அவனை நோக்கினாள்.
“இல்ல இன்னைக்கு நம்ம கல்யாணம் முடிஞ்சி வீட்டுல நடக்கிற முதல் விசேஷம். ஆனா, உன்னைக் கூப்பிட்டுப் போக முடியாத சூழ்நிலை” என்று வருத்தத்துடன் சொன்னான்.
என்ன பதில் சொல்வதென்று யோசித்த ஆராதனாவிடம், “ஒரு பைவ் மினிட்ஸ் தனியா பேசலாம். வா தனு” என்று கைபிடித்து வேதவல்லியை அங்கே உட்காரச் சொல்லி, அத்தையின் அறைக்கு அழைத்துச் சென்றான்.
“ஹேய்! இது மேடமோட ரூமாச்சே. சாவி உங்க கையில எப்படி? அவங்க ஏதோ பங்ஷனுக்குப் போயிருக்காங்க.”
“தெரியும். நாளைக்கு காலையில தான் வருவாங்கன்னும் தெரியும்.”
‘இவங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று யோசித்தவள், “ஹேய்! உங்க வீட்டு பங்ஷனுக்கா?” என்றாள் ஆர்வத்தில்.
“சின்ன திருத்தம் தனு. நம்ம வீட்டு பங்சனுக்கு. அவங்க என்னோட அத்தைதான். உனக்கு சித்தி.”
“என்னது அத்தையா?” என அதிர்ந்தவள் பின், “இது வேறயா. சரி என்னை எதுக்கு இங்க கூப்பிட்டு வந்தீங்க?”
“என் ஒய்ஃப்கு மேரேஜ் ஆனதில் இருந்து எதுவுமே கொடுக்கலையா. எனக்கு ரொம்ப பீலிங்கா இருந்தது. அதான் அத்தை இங்க வரச் சொன்னதும் உனக்குக் கொடுக்கலாம்னு வந்துட்டேன்.”
“அதெல்லாம் தேவையில்லை. நான் கிளம்பறேன். யாராவது பார்த்தா மானம் போகும். இன்னைக்கு ஹாலிடே வேற. எல்லாரும் இங்கதான் இருக்காங்க. ஒருத்தர் கண்ணுல நாம ரெண்டு பேர் மாட்டினாலும் நாம காலி” என்று வெளியே செல்லச் சென்றவளை கைபிடித்து, “ஆமா. எனக்கான தண்டனை ரெடி பண்ணிட்டியா?”
“ம்... பண்ணிட்டேன் ஊருக்குப் போயிட்டு வந்ததும் தண்டனை தான்” என்றாள் புருவம் உயர்த்தி.
“அன்னைக்கு நீ பேசினதுக்கு நான் தண்டனை தரலையே?”
“அதான் ஸ்பாட்டுலயே கொடுத்தீங்களே” என்று கன்னம் பிடித்தாள்.
அவள் அருகில் வந்து அந்தக் கைகளை விலக்கியவன் கன்னத்தில் முத்தமிட்டான்.
“விடுங்க என்ன பண்றீங்க?” என்றவளிடம்,
“விடுறதுக்கா கல்யாணம் பண்ணியிருக்கேன்” என்று மறு கன்னத்திலும் கொடுக்க, அவள் அமைதியாக இருக்கவும், அவளை தன்னுடன் சேர்த்தணைத்து கூந்தலை விலக்கி கழுத்தில் முத்தமிட்டான். எதிர்ப்பில்லாமல் அவள் அமைதி தொடரவும் அவள் முகம் நிமிர்த்திப் பார்த்தவனுக்கு, அவளின் கண்ணீர் பட்டது.
“என்னமா? என்னாச்சி?” என்று பதறினான். “சாரி சாரிமா. ஏதோ உரிமையில கிஸ் பண்ணிட்டேன். இனி இப்படி நடந்துக்கமாட்டேன். சாரி நீ கிளம்பு” என்றதும் அவனிடம் இருந்து விலகி நடக்க, “ஒரு நிமிஷம்” என்று அவன் சொன்னதும் நின்றாள்.
அவள் கை பிடித்து சின்னதாக ஒரு ரிங் போட்டு விட்டு அவளின் கண்ணீர் துடைத்து, “கண்ணீர் ரொம்ப வேல்யூ உள்ளது தனு. அதை இப்படி வேஸ்ட் பண்ணாத.” அவளின் இரு கைகளையும் பிடித்து உள்ளங்கை காயங்களைப் பார்த்தவன் கண்கலங்க, “வலிக்குதா? இதோட வேலைக்கும் போயிட்டு வந்துட்ட” என்று கேட்டவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் என்ன நினைத்தாளோ,
“இது இன்னும் ரெண்டு நாள்ல சரியாகிரும். முதல்ல என் நாத்தனார் நிச்சயதார்த்தத்தை நடத்துங்க” என்றாள்.
“ஹேய்! என்ன சொன்ன?” என கேட்டான்.
“கோல்டன் வேர்ஸ்ட் நாட் ரிபீட்டட். போயி வேலையைப் பாருங்க சார்” என்று சிரித்துவிட்டுச் சென்றாள்.
அவள் சிரித்ததும் தான் மனதில் ஓரு நிம்மதி பரவ கிளம்பினான்.
மாலையில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து அனைவரும் வர, நண்பர்கள் இருவர் குடும்பங்களின் பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
“சார டா...க்டர் மச்சான். முதல்ல பார்த்தப்ப அடையாளமே தெரியல. எங்கேயோ பார்த்த நியாபகம் தான் வந்திச்சி.”
“எனக்கும் தான் சரண். பதினாலு வருஷமாச்சில்ல நேர்ல பார்த்து அதனால போன்ல கூட டச் இல்லாம போச்சி. அப்புறம் எப்படி அடையாளம் தெரிய.”
“அச்சோ! நண்டு சிண்டுங்கல்லாம் டச் வச்சி ரௌண்ட் அடிக்கும் போது உங்களுக்கு டச் இல்லாம போச்சே” என்றான் ராஜா.
முழித்த அபிஷேக்கிடம், “அவன் டச் போனைச் சொல்றான்டா...க்டர் மச்சான்.”
“நீ ஏன்டா டாக்டரை இந்த இழு இழுக்கிற? ஒண்ணு சேர்த்துச் சொல்லு. இல்லையா பேர் மட்டும் சொல்லு. அதை விட்டுட்டு இழுக்காத. அப்புறம் சரண் நான் உன் தங்கையை மத்தவங்க முறைப்படி பார்க்கிறதுக்கு முன்னாடி பார்க்கணும். ஐ மீன் அன்னைக்குப் பார்த்த டாக்டரா” என்றான்.
“அவ்வளவுதான” என்று தங்கையிடம் சென்றவன், “குட்டிமா கார்ல மோதுனியே அந்த டாக்டர் வந்திருக்காரு. நீங்க பேசிட்டு கீழே வாங்க. நாங்க வெயிட் பண்றோம்” என்று சென்றான்.
உள்ளே வந்தவனைப் பார்த்தவள் ஷோபாவைக் காண்பித்து உட்காரச் சொன்னாள். அதில் அமர்ந்தவன் அவளையே பார்த்திருக்க, அவள் அவனை பதில் பார்வை பார்த்தாளே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. அவளின் முகவாட்டத்தை மட்டும் என்ன முயன்றும் மறைக்க முடியவில்லை.
அவளருகில் வந்தவன் கைபிடித்து, “சரியாகிருச்சா?” என்றதும் வேகமாக கையை விலக்கி திரும்பி நின்றாள்.
‘வேண்டாம் என்று நினைத்தாலும், தேடி வந்து சோதிக்கிறானே’ என்று மனதினுள் மறுகினாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், “என்கிட்ட பேச மாட்டியா அபி?” என்றான்.
“அபி” என்ற அழைப்பில் சட்டெனத் திரும்பியவள் அவனையே ஆச்சர்யமாய் பார்த்தாள்.
“நீ பேசுறதை என்னால புரிஞ்சிக்க முடியாதுன்னு நினைச்சியா அபி.”
நியா என்ற அபிநயா! சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தினால் வாய் பேச வராது.
கண்களில் கண்ணீர் வர உதடசைத்து, “உ...உங்களுக்கு எப்படி? என்று வாயசைத்துத் திணற,
“அபி! அபிடா... அபிஷேக். என்னைத் தெரியலையா?” என கேட்டான்.
“அபிஷேக் நீங்களா? நீங்க எப்ப யூ எஸ்ல இருந்து வந்தீங்க?” சட்டென அவள் முகம் வாடி, “நீங்க இன்னைக்கு பொண்ணு பார்க்கப் போறதா சொன்னீங்க தான. இப்ப இங்க என்ன பண்றீங்க” என்றாள் சோர்ந்த முகத்துடன்,.
“பொண்ணு தான்மா பார்த்திட்டு இருக்கேன். என்னோட தேவதையைத் தேவையான அளவு பார்த்திட்டு இருக்கேன்.”
“அபி! நிச்சயதார்த்தம் உங்களோடவா” என்று சொன்னதும் அவளின் மனதில் நிம்மதி வந்தது. முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் எரிய, “என்கிட்ட யாரும் சொல்லவேயில்ல. வரட்டும் இந்த அண்ணன் மாப்பிள்ளை உனக்குப் பிடிக்கும் சொன்னானே தவிர, அது நீங்க தான்னு சொல்லவேயில்ல பாருங்க”
“ஹா ஹா இப்பதான் என் அபி பார்முக்கு வந்திருக்கா.”
“ச்சோ... போங்க. ஆனா, எனக்கு கல்யாணம் வேண்டாம் அபி” என்றாள்.
“ஏன்? என்னைப் பிடிக்கலையா?”
“பிடிக்காதுன்னு பொய் சொல்லமாட்டேன். உங்களைப் பிடிச்சதால தான் வேண்டாம்னு சொல்றேன்.”
“புரியலை. அப்புறம் என்ன பிரச்சனை?”
“என்னால மத்தவங்களுக்கு பிரச்சனை வர்றதை விரும்பலை. சின்னதா யாராவது எதாவது சொல்லி அது நல்லதுக்கே இருந்தாலும், என்னால முடியாது அபி.”
“பிரச்சனை வரும்னு நீயா கற்பனை பண்ணிக்கிற. நான் இருக்கேன். என்னை நம்ப மாட்டியா? அப்பா, அம்மா என்னை விட உன் மேல ரொம்ப பாசமா இருக்காங்க. உன்னை நல்லா பார்த்துப்பாங்க. இப்ப சொல்லு உனக்குச் சம்மதம்தான?”
பிடித்தவனின் அந்த அக்கறையில் வெட்கத்தில் தலை கவிழ்ந்து, “ம்” என்று சம்மதம் தெரிவித்தாள்.