• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
14



மறுநாளே டிஸ்சார்ஜ் ஆனதும் ஈஸ்வரியிடம் கண்களால், ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என விடைபெற்று நேத்ராவுடன் தன் வீட்டிற்கு வந்தாள் அவந்தி.

இரண்டு நாட்கள் எந்த பிரச்சனையுமில்லாமல் இனிதே நகர்ந்தது.

இந்த இரண்டு நாட்களில், வனஜா பூவனமாக மாறி அவந்திமேல் அன்பு மழை பொழிய, கௌஷிக் அதே மழையை கொஞ்சம் மாற்றி ஜொள்ளாக நேத்ராமேல் பொழிந்தான். தாய் மகன் இருவரின் கூத்தில் இரு இளம் பெண்களுக்கும் ஜலதோஷம் பிடிக்காததே பெரிய விஷயம்.

இதுவரை அன்று சவாலாக சொன்ன கல்யாண பேச்சை எடுக்கவேயில்லை. ‘ஒருவேளை இப்போதைக்கு வேண்டாம்னு விட்டுட்டாங்களா? இல்லை விட்டுப்பிடிக்கிறாங்களா?’ என மனதில் கேள்விகள் குடைந்தது.

விட்டால் இனிமேல் பிடிக்க முடியாதென்று, மூன்றாம் நாள் காலையிலேயே, தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள் தாயும், மகனும். அவந்திகாவிடம் வந்த வனஜா தன்னுடைய போன் ஒர்க் ஆகவில்லை என்றும் கணவரிடம் அவசரமாகப் பேச வேண்டுமென்றும் நயமாக பேசி கைபேசியைக் கேட்டார்.

‘வேலையை ஆரம்பிச்சிட்டாங்க போல.’ சிலவினாடி யோசித்து அதன்பின் கொடுத்தாள்.

சற்று நேரம் கழித்து வந்த கௌஷிக், “அவந்தி உன்னோட லேப்டாப் கொடு. என்னோடதுல வைரஸ் அட்டாக்காகி இருக்கு. வைரஸ் க்ளீன் பண்ணியும், இன்னும் ஏதோ ப்ராப்ளம் இருக்குன்னு நினைக்கிறேன். எனக்கு அர்ஜெண்டா ஒரு மெயில் அனுப்பணும். முடிச்சதும் தந்திடுறேன்” என்றான் தந்திரமாக.

மாமன் மகனின் தந்திரம் அறியாதவளா அவந்தி. ஏன்? எதுக்கென்று ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டே தூக்கிக் கொடுத்தாள்.

அவந்தியிடமிருந்து நேத்ராவின் புறம் பார்வையை திருப்பியவன் “உங்களுக்கு ஆட்சேபணை இல்லன்னா, உங்களோட மொபைல் கொஞ்சம் தர்றீங்களா?” என கேட்டான்.

“அவங்களோடது எதுக்கு கௌஷிக். என்னோடது அத்தை வச்சிருக்காங்க பாரு. அதை வாங்கிக்கோ.”

‘ப்ச்... இவ வேற நடுவுல வந்து..’ என நினைத்தவன்... “அம்மா எப்ப முடிக்கிறாங்களோ தெரியாது. எனக்கு இப்ப அர்ஜெண்டா வேணும்.”

“நான் எதுக்கு தரணும்?” என நேத்ரா மறுக்க,

“ப்ளீஸ் நேத்ரா!” என்று அவளிடம் கெஞ்சிவது போல் கொஞ்சி கவிழ்க்க எண்ணினான்.

‘அடப்பாவி! இப்படி லுக் விட்டா, நான் ஓகே பண்ணிருவேன்னு நினைச்சான் போல’ என நினைத்தவளுக்கு, தன் நினைவே தனக்கு அருவருப்பாக, அவனிடம் போனைத் தந்தாள். அதன்பிறகு அந்த பொருட்கள் அவர்களிடம் திரும்பி சென்றடையாததோடு, அவர்களுக்கே தெரியாமல் வீட்டுக் காவலில் முடக்கப்பட்டார்கள்.

கௌஷிக்கிற்கு நேத்ராவை மிகவும் பிடித்திருந்தது. அதைவிட அவந்தியால் வரப்போகும் சொத்தும் முக்கிய இடம் பெற, அவளா? இவளா? என தாமரையிலைத் தண்ணீராக தத்தளித்துக் கொண்டிருந்தவன், கடைசியில் வேறு வழியில்லாமல் அவந்தியை திருமணம் செய்து, சொத்தை தன் பெயருக்கு மாற்றி, அதன்பின் விவாகரத்து செய்து நேத்ராவை தனது துணையாக்கிக் கொள்ளலாம் என்றெண்ணினான்.

நேத்ராவிற்கு இந்த விஷயங்கள் தெரியக்கூடாது என்பதற்காக, திருமணத்திற்கு முந்தின தினம், அவள் சந்தேகப்படாதவாறு அப்புறப்படுத்த எண்ணி, அதன்பின் அதற்கான திட்டங்களை தீட்ட ஆரம்பித்தான். வனஜாவிற்கு திருமணத் திட்டத்தை மட்டும் சொன்னவன், நேத்ராவை தாயிடமிருந்து மறைத்தான்.

மறுநாள் காலையில் அவந்தியைப் பார்க்க சந்தோஷ் வர, சந்தேகமாய் வேலைக்காரர்களும், வனஜாவும் பார்த்தனர்.

‘ஏன்டா சந்தோஷ், நீயென்ன அவ்வளவு கேவலமாவா இருக்க? இருபத்தாறு வயசுப் பையனுக்கே உண்டான கலையோட, சூப்பராயிருக்கன்னு, எங்க வீட்டு சூப்பர் ஸ்டார், எங்கம்மா சொன்னாங்களே!’ என்றபடி வீட்டினுள் நுழையப் போனான்.

அவனுக்கென்ன தெரியும், இதுவரை அவந்தியைப் பார்க்கவென்று பையன்களோ, ஏன் பெண்களுமே வந்ததில்லை என்று. வீட்டைவிட்டு வெளியே சென்றால் அவளின் எல்லை அளவிட முடியாதது. ஏனெனில் வெளியே சென்றால் அவளுக்கு அவளே ராணி. அந்த நினைவில்தான் கார்த்திக்கிடம் திருமணத்திற்கே கேட்டிருந்தாள். அதே எல்லை திரும்ப வீட்டினுள் நுழையும் பொழுது, கேட்டோடு முடிந்துவிடும். முடித்து விட்டுத்தான் உள்ளே வரவேண்டும் என்பது வனஜாவின் கட்டளை.

புதிதாக அவந்திகாவித் தேடி வயசுப்பையன் வரவும், வாசல்வரை வந்த சந்தோஷை வனஜா தடுத்தார்.

“ஹையோ! ஆன்ட்டி எதுக்கு வேண்டாம் விடுங்க” என்று சொல்லவும்,

‘ஏன் இப்படி சொல்கிறான்?’ என்று புரியாமல் விழித்த வனஜா புதிராய் அவனைக்காண,

“என்ன பார்க்குறீங்க? முதல் தடவையா உங்க வீட்டுக்கு வர்றேன்னு, ஆரத்தியெல்லாம் எடுத்து வரவேற்க வேண்டாம். அந்தளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை. நானே வலது காலை எடுத்து வச்சி உள்ளே வர்றேன்” என்று உள்ளேயும் வந்திருந்தவனை,

வனஜா கோவத்தில் முறைத்து, “யார் நீ? சொல்லச் சொல்லக் கேட்காம உள்ள வர்ற?” என்று உறுமினார்.

‘இதுக்கெல்லாம் அசந்தா குமார்-ஈஸ்வரிக்கு நம்பர் டூ ப்ரொடக்டா எப்படியிருக்க முடியும்’ என்றெண்ணி, “ஆன்ட்டி நான் அவந்திகா ஃப்ரண்ட். இன்னைக்கு வர்றதா சொல்லியிருந்தேன். அவங்க வேண்டாம்னுதான் சொன்னாங்க. பட், எனக்கொரு பைவ் மினிட்ஸ் அவங்ககிட்ட பேசணும். அவங்க ரூம் எது நான் பார்த்துட்டு வந்திடுறேன்.”

“அதெல்லாம் இப்ப பார்க்க முடியாது. அவ ஆஃபீஸ் வர ஆரம்பிச்சதும் தாராளமா பார்த்துக்கோ.”

“ஆன்ட்டி பைவ் மினிட்ஸ்தான்” என வாக்குவாதம் பண்ணிக்கொண்டிருக்க,

கீழே கேட்ட சத்தத்தில் மாடியிலிருந்து எட்டிப் பார்த்த நேத்ரா கண்களில் சந்தோஷ் விழுந்தான்.

“ஹாய்! நேத்தி! இங்க பாரு. உங்க மேடமை பார்க்க விடமாட்டேன்றாங்க” என்றதும், ‘நேத்தி’ என்ற அழைப்பில் அசையாது அவனையே பார்த்துக் கொண்டிருக்க...

அதேநேரம் வீட்டினுள் நுழைந்த கௌஷிக், இதைப் பார்த்து, ‘நேத்ரா எனக்கு மட்டும்தான். அவ எப்படி இவனை பார்க்கலாம்?’ என்றும் எண்ணமிடும்போதே,

நேத்ரா கௌஷிக்கை கவனிக்க, ‘மை காட்! இவ்வளவு நேரம் சந்தோஷைப் பார்த்திருந்ததை கவனிச்சிருப்பானோ? இப்படியா தன்னை மறந்து நிற்பேன். கவனிச்சிருந்தாலும், இல்லன்னாலும் அதை இப்பவே மாத்தியாகணும். இல்ல எல்லா ப்ளானும் சொதப்பலாகிடும்’ என்று மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து, “என்ன சந்தோஷ் சார் சத்தம்? மேடம்லாம் யாரையும் பார்க்கிற நிலைமையில இல்ல. தூங்கிட்டிருக்காங்க. இப்ப நீங்க போகலாம்” என்றாள்.

“ஹேய்! பொய் சொல்லாத. காலையில ஒன்பது மணிவரைக்குமா தூங்குறாங்க? அதுவும் ஒரு பொறுப்பான வேலையில் இருக்கிறவங்க. இதை நம்ப நான் ஒண்ணும் கேனையனில்ல. ஓகே.”

“அதெல்லாம் தெரியாது. நீங்க அவங்களைப் பார்க்க முடியாது.”

“ஹேய்! என்ன பேசிட்டிருக்க. அவங்க யார் தெரியுமா? அவங்க என்...” என்றதும் அவனை முடிக்கவிடாமல் எங்கே கோவத்தில் உளறிவிடுவானோ என்று ,சட்டென்று கன்னத்தில் அறைந்து விட்டாள். அவன் சொல்ல வந்ததோ, ‘அவங்க என் தோழி’ என்பது மட்டுமே.

“ஏய்! ஏன் என்னை அடிச்ச?” என்று கோவத்தில் அடித்த கையை பிடித்து பின்புறம் வளைத்து தன்புறம் இழுத்துக் கொண்டான்.

“ஏய்! விடு” என்று முகத்தை கோவமாக வைத்திருந்தாலும், அவனின் அருகாமையில் ஒரு இதம் பரவுவதை உணர்ந்தாள். ஆனால், அது எதையும் உணராது அவன் பிடி இறுகியிருக்க,

நேத்ராவிற்கு சந்தோஷின் மேல் எதுவும் இன்ட்ரஸ்ட் இருக்குமோ! என சந்தேகித்த கௌஷிக், அவளின் ஒரே அடியில் தன்மனம் தெளிவாக, சந்தோஷிடமிருந்து அவளை விடுவிக்கப் போராடினான்.

அதேநேரம், “சந்தோஷ் என்ன காரியம் பண்றீங்க? முதல்ல அவங்ககிட்ட இருந்து கையை எடுங்க” என்றபடி அவந்தி கீழே இறங்கிவர முயற்சித்தாள்.

“நீங்க இறங்க வேண்டாம். நாங்களே மேலே வர்றோம்” என நேத்ராவையும் இழுத்துக் கொண்டே சென்றான். அவந்தியிடம் சென்றவன் எடுத்த எடுப்பிலேயே, “இவ உங்களுக்கு நர்ஸா? இல்ல இந்த வீட்டு அடியாளா? உங்களை மீட்பண்ண விடமாட்டேன்றா?” ல்ப்வத்தில் சிடுசிடுத்தான்.

“அதுக்கு இப்படியா வயசுப்பொண்ணை கையை பிடிச்சி முறுக்குவீங்க?”

“சரி தப்புதான் விட்டுட்டேன். பட், அப்ப இவள் என்னை அடிச்சது தப்பில்லையா?”

“ஹேய்! அவள் இவள் சொல்றதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்” என்று நேத்ரா எகிறினாள்.

“பார்றா! இவங்க பெரிய மகாராணி மங்கம்மா. அவங்க இவங்க சொல்றாங்க. சர்தான் போடி” என்றான் அசால்ட்டாக.

அதில் நிஜமாகவே கோவம் வந்தவள், “வேண்டாம் என்கிட்ட விளையாடாத? எதாவது ஊசியை எடுத்து உனக்குப் போட்டு க்ளோஸ் பண்ணிருவேன்” என்றாள் ஆத்திரமாக.

“இங்க பாருங்க சிஸ்டர். சந்தோஷை நீங்க அடிச்சது தப்பு. சாரி கேளுங்க” என அவந்திகா சொன்னாள்.

“அதெல்லாம் முடியாது மேம். அவங்க பேசின பேச்சி அப்படி” என மறுத்தாள்.

“அவர் என்னோட கெஸ்ட். என்னைப் பார்க்க வந்தவரை தடுத்ததும் இல்லாமல், அடிச்சி அசிங்கப்படுத்திருக்கீங்க. முதல்ல மன்னிப்பு கேளுங்க சிஸ்டர்.”

“அவ ஏன் மன்னிப்பு கேட்கணும். நான் செய்ய நினைச்சதை அவள் செய்றா” என்று இடைபுகுந்தான் கௌஷிக்.

“உனக்கும் சந்தோஷ்கும் என்ன பகை? நீ ஏன் அவங்க மன்னிப்பு கேட்கணும்னு நினைச்ச?” என்று அவந்தி செக் வைக்க,

நேத்ராவை கைபிடித்து இழுத்து வந்த கோவத்தில் இருந்தவன், “எங்களுக்குள்ள என்ன பகை. அதெல்லாம் ஒண்ணுமில்ல. இந்த பொண்ணை கைபிடிச்சி இழுக்கிறான். அதைப் பார்த்திட்டிருக்கச் சொல்றியா?”

“அவமேல உனக்கென்ன கௌஷிக் அக்கறை? ஏய்.. சிஸ்டர் நீ என்னைப் பார்த்துக்க வந்தியா? இல்ல இந்த கௌஷிக்கை கரெக்ட் பண்ண வந்தியா?” என நேத்ராவிடம் பாய்ந்தாள்.

“மேம் நீங்க ஓவரா பேசுறீங்க. நான் யாரையும் கரெக்ட் பண்ண வரல. உங்க ப்ரண்ட் வேணும்னா, என்னைக் கரெக்ட் பண்ண வந்திருப்பாரோ என்னவோ. யாருக்குத் தெரியும்” என்றாள் எரிச்சலில்.

“ஹலோ! அப்படி ஒரு நினைப்பிருந்தா, அதை இப்பவே மறந்திரு. எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதா ஐடியாவே இல்ல. அடுத்த ஜென்மத்துல பண்றதாயிருந்தா உன்னைத் தேடி வர்றேன்” என பதிலடி கொடுத்தான்.

அவன் கண்களின் தீவிரத்தில், ‘உண்மை பேசுகிறான்’ என உணர்ந்த நேத்ராவிற்கு உள்ளுக்குள் உதறலெடுக்க ஆரம்பித்தது. ஏதோ சொல்ல வாயெடுத்தவளை தடுத்து, டாக்டர் ரஞ்சனுக்கு போன் செய்து பேசி முடித்து, நேத்ராவிடம் நீட்டி, “டாக்டர் பேசுறாங்க பேசு” என்றான்.

“ஹலோ டாக்டர். எஸ் டாக்டர். ஓகே டாக்டர். இதோ வந்திடுறேன்” என போனை சந்தோஷிடம் கொடுத்தவள், “டாக்டர் என்னை இப்பவே கிளம்பி ஹாஸ்பிடல் வரச்சொன்னாங்க. நான் கிளம்பறேன். அவந்தி மேடம் உங்களுக்கு இன்னைக்கு பதினோரு மணிக்கு தையல் பிரிக்கிறாங்களாம். முதல்ல நான் போறேன். நீங்க கௌஷிக் சாரோட பின்னாடி வாங்க. நான் போய் என்னோட திங்ஸ் பேக் பண்ணிட்டு வர்றேன் சந்தோஷ் சார்” என்று அறைக்குள் செல்லுமுன், கௌஷிக்கிடம் ஒரு சோகப்பார்வையை வீசிச் சென்றாள்.

அதற்கு சற்றும் குறையாமல் பதில் பார்வை பார்த்திருந்தான் கௌஷிக். அதைக்கண்டு மற்ற இருவரும் உள்ளுக்குள் நகைத்தனர்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
உள்ளே சென்றதும் பரபரப்பாக, தன்னுடைய கையிலிருந்த அந்த சின்னக் கவரைப் பிரித்தாள் நேத்ரா. சந்தோஷ் அவளின் கையை பின்னுக்கு இழுத்துப் பிடித்து மாடிப்படி ஏறும் சமயம் அதைக் கையில் கொடுத்து காதோரம் குனிந்து, “இதை யாருக்கும் தெரியாம படிச்சிப் பார்த்து, அதன்படி நடந்துக்க” என்றிருந்தான். அந்த இரகசியப் பேச்சின் குறுகுறுப்பு மனதில் தோன்றி இன்பமாய் சிணுங்கியபடி பார்க்க, அந்த கவரில் கைக்கு அடக்கமான, சின்ன கைபேசியும், கடிதமும் இருந்தது.

‘நீ என்ன பண்ணுவியோ தெரியாது. இந்த செல் அண்ணிகிட்ட சேஃபா சேருற மாதிரி பண்ற. மற்றதை நாம வெளில போயி பேசிக்கலாம்’ என்றிருந்தது.

அந்த கவரை தன் கைப்பையில் வைத்து தலையணைக்கடியில் போனை வைத்தாள். தன்னுடைய பொருட்களை ட்ராவல் பேக்கினுள் திணித்து வெளியில், “மேம் கிளம்புற டைம்ல கொஞ்சம் வார்த்தையாடிட்டேன்னு என்னை மறந்திராதீங்க. நீங்க தலையணையில தலைவைத்து படுக்கும்போது, என்னோட நியாபகம் கண்டிப்பா வரும். திரும்பவும் சொல்றேன். தலையணையில் தலைவைக்கும் போதெல்லாம், இந்த நேத்ரா நியாபகம் வரணும்” என விடைபெற்றாள்.

‘இவள் ஏன் சம்பந்தமில்லாமல் பேசுறா?’ என்று அவளை நிமிர்ந்து பார்க்க, நேத்ரா அறையை காண்பித்து, கண்களால் சேதி சொல்ல, புரிந்த அவந்தி, “பரவாயில்ல சிஸ்டர். நான்கூடதான் கொஞ்சம் பேசிட்டேன். நீங்க எதுவும் மனசுல வச்சிக்காதீங்க. நான் அப்புறமா வந்து உங்களை பார்க்கிறேன்” என்றாள்.

கௌஷிக்கிடம் வந்தவள், “சார் என்னோட போன் நேத்து வாங்கினீங்க இன்னும் தரவேயில்ல. தர்றீங்களா கிளம்பணும்?”

“ஓ... இன்னும் தரலையா? சாரி இதோ எடுத்துட்டு வர்றேன்” என்று மறந்தவன் போல் எடுத்து வந்து தந்தான். ஏற்கனவே அதில் எந்த நம்பரும் இல்லை. ‘இங்க வர்றதுக்கு முந்தின தினம்தான் வாங்கினேன்’ என்று சொல்லியிருந்ததால் அவனுக்கு அந்த நம்பரை மட்டுமே பெற முடிந்திருந்தது. ‘சரி ஹாஸ்பிடல்லதான ஒர்க் பண்றா. நம் வேலை அனைத்தும் முடிஞ்சதும், பார்த்துக் கொள்ளலாம்’ என்று அவளை அனுப்பினான்.

அவர்களிடமிருந்து விடைபெற்று வெளியே வந்ததும், “ஷப்பா தப்பிச்சோம்டா சாமி” என்று சந்தோஷ் சொல்ல, அவனை புதிராய் பார்த்தாள் நேத்ரா. “என்ன பார்க்கிற நான் இப்ப வரலன்னா, இன்னைக்கு ஈவ்னிங் உன்னை இந்த கௌஷிக் கடத்தியிருப்பான் தெரியுமா?” என்றான்.

“என்னது!” என அதிர்ந்தவளை...

“ஹேய்! நாம இன்னும் வீட்டு வாசல்லதான் நிற்கிறோம். கத்தி வில்லங்கத்தை விலைக்கு வாங்காம, வா காருக்குள்ள உட்கார்ந்து பேசலாம்” என காருக்கு அழைத்துச் சென்றான்.

“இப்ப சொல்லுங்க? ஏன் என்னை கடத்தப்போறான்?”

“ம்... அவனோட லவ்ஸாம் நீ. அதான்.”

“உவ்வே... அவனை நான் லவ் பண்றதா” என்றதும் சந்தோஷ் வாய்விட்டுச் சிரிக்க, அதை முறைத்தாற்போல் சந்தோஷமாகவே பார்த்திருந்தாள் நேத்ரா.

சிரிப்பை அடக்கியபடி, “முறைக்காத. அண்ணியை அன்னைக்கு அடிச்சி ஹாஸ்பிடல்ல சேர்த்தப்ப, அவனை அடிச்சிக் கொல்லணும்னு வெறி வந்தது. அம்மாதான் வேண்டாம்டான்னு தடுத்துட்டாங்க. அதுக்காக அவனை அப்படியே விட்டுற முடியுமா சொல்லு? அப்புறம் மச்சினன்னு நான் எதுக்கு இருக்கணும். அதான் அப்பாகிட்ட சொல்லி, ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் ஏற்பாடு பண்ணி, அவனோட நடவடிக்கையை கண்காணிக்க சொல்லியிருந்தேன். ஆனா, சொல்லக்கூடாது ரொம்ப நல்லவன்தான். எங்க தண்ணியடிச்சா உளறிடுவோமோன்னு, பயபுள்ள தண்ணியடிக்காமலே உளறிடுச்சி” என்று சிரித்தான்.

அவனின் சிரிப்பை ரசித்தவாறு, ‘ஆமா. இங்க ஒருத்தி என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்க துடிக்கிறா. சார் இப்பத்தான் கூலா சிரிக்கிறாரு’ என நினைக்க...

“நேத்து பார்ல வச்சி அவன் ப்ரண்ட்கிட்ட, உன்னைக் கடத்துறதுக்கு இடம், நேரம் எல்லாம் சொல்லிட்டிருந்தான். காரணம் என்னன்னா சொத்துக்காக எங்கண்ணிய கல்யாணம் பண்ணிட்டு, அடுத்த மாசமே சொத்தை எழுதி வாங்கி, உடனே டைவர்ஸ்கு அப்ளை பண்ணி, அதுக்கு அடுத்த முகூர்த்தத்துல, உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போறானாம்.”

“என் சம்மதமில்லாமலா?”

“அதெதுக்கு உன் சம்மதம். அதான் அவனோட ஆளுன்னு நம்பவைக்க, லுக்கா விட்டுத் தள்ளுனியே. அதுல பய கிக்காகிப் போயிட்டான்போல. அந்த லுக் தந்த தைரியம்தான், இந்த ஹிட்னாப்பிங். உன் சம்மதம் இல்லன்னாலும் கட்டாயத்தாலி கட்டியாவது உன்னை அடைஞ்சிருவான்” என்றான் கிண்டலாக ஆரம்பித்து சீரியஸாக.

“அதுக்கு நான் உயிரோட இருக்கணும்ல” என்று சிரித்தபடி புருவம் உயர்த்தி கேட்டாள்.

சில வினாடிகளேனும், அவள்புறம் சென்ற மனதை அடக்கி, “அவனை மாதிரி ஆளுங்களுக்கு, இதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது. உன்னை எப்படி அவங்க கண்ட்ரோல்ல வைக்கணும்னு தெரியும். சரி. நான் உன்னை ஹாஸ்பிடல்ல விடுறேன். அண்ணி செக்கப் வந்துட்டு போனதும், நீ வீட்டுக்கு கிளம்பிரு.”

“ம்...” என்று தலையசைத்தவள், “நான் ஒண்ணு கேட்கலாமா?” என்றாள்.

“என்கிட்டயா? என்கிட்ட என்ன கேட்கணும்? சரி கேளு.”

“நீங்க என்ன ஒர்க் பண்றீங்க? உங்க அண்ணா திருடன்னு சொல்றாங்க. அதான்” என்றாள் குரலில் ஸ்ருதி குறைத்து.

“அதுவா, அது கூடிய சீக்கிரமே, அதாவது நாளைக்கு உனக்கு எல்லாமே தெரியும். அதுவரை சஸ்பென்ஸ்” என்று மருத்துவமனையில் இறக்கிவிட்டு, துப்பாக்கி சுடுவதுபோல் விரல் நீட்டி ஒரு கண்மூடி டுஸ்ஸூ என்று சிரித்தபடி அவளைக் கடந்து சென்றான்.

அவள் மனதில், அந்த துப்பாக்கியின் தோட்டா ஆழமாய் நுழைந்து, சிம்மாசனமிட்டு அமர்ந்ததை அறிவானா சந்தோஷ்!

தன் அறையினுள் நுழைந்த அவந்திகா, கதவைப் பூட்டி தலையணை அடியில் பார்த்து எடுத்து, அந்த குட்டி கைபேசியில் இருந்த மெசேஜ் பாக்ஸை எடுத்துப் பார்த்தாள்.

‘இதை அவங்களுக்குத் தெரியாம பத்திரமா வச்சிக்கோங்க. இதுல வைப்ரேஷன்கூட கனெக்ட் பண்ணல. ஏன்னா, ஒரு சின்ன சத்தம்கூட உங்களைக் காட்டிக் கொடுத்திரும். நேத்ராவை ஏன் கூட்டிட்டுப் போறேன்னா, அவளை இன்னைக்கு கடத்துறதுக்கு திட்டம் போட்டிருக்கான்.”

‘என்னது! நேத்ராவைக் கடத்தவா? ஏன்’ என்ற கேள்வி மனதினுள் எழ, திரும்ப வாசிக்க ஆரம்பித்தாள்.

“நாளைக்குத்தான் அவன் கொடுத்த டேட். ஸோ, எப்படியும் இன்னைக்கு நைட் பால்ல தூக்க மாத்திரை கலந்துதான், உங்களை அவங்க இடத்துக்கு கொண்டு போவாங்க. அதுக்கு முன்னாடி, செல்லுக்குள்ள ஒரு சிப் இருக்கும். அதையெடுத்து உங்க ஆடைக்குள்ள இருக்கிற மாதிரி, ஸ்டிச் பண்ணிருங்க. அது எப்பவும் ஆக்டிவேட்லயே இருக்கும். இது உங்களை எங்க கூப்பிட்டு போறாங்கன்றதை, எங்களுக்கு காட்டும். மனம் தளராம அவங்களோட கிளம்புங்க. நாங்க இருக்கோம். எப்படியும் ட்ரஸ் சேஞ்ச் பண்ணணும்னா, அவங்க இடத்துக்குப் போனதும்தான் பண்ண சொல்வாங்க. அதனால ப்ராப்ளம் வர சாத்தியமில்ல. சந்தோஷ் மாதிரி எப்பவும் கூலாயிருங்க. அப்ப கார்த்திக் வரலையான்னு கேட்கிறது புரியுது. கண்டிப்பா வருவான். நீங்களே பார்த்து அசந்துபோற மாதிரி வருவான், உங்க ஹீரோ. நாளைக்கு உங்களுக்கும், எங்கண்ணனுக்கும் முறையா கல்யாணம் எல்லார் முன்னாடியும். டேக் கேர். சீ யூ டுமாரோ அண்ணி.”

அதைப் படித்ததிலிருந்து மனம், பலவித யோசனைகளில் நுழைந்து அலசி ஆராய முற்பட, ‘அடபோங்கபா! எனக்கு ரெஸ்ட் எடுக்கணும்’ என மூளை நச்சரித்ததும்தான் விட்டாள் அவந்தி.

அதன்பின் மருத்துவமனை சென்று தையல் பிரித்துவர, அன்றிரவு சந்தோஷ் சொன்னதுபோல், வழக்கத்திற்கும் மாறாக வனஜா பாலை எடுத்து வந்து, குடிக்கச் சொல்லி பாசமாய் உருகியதும், வந்த சிரிப்பை அடக்கி கொஞ்சம் பிகு செய்து அதன்பின்னே குடித்தாள்.

மறுநாள் கார்த்திக்கை காணப்போகிறோம் என்ற சந்தோஷம் இருந்தாலும், கண்கள் சொருகுமுன், கடவுளை ஆயிரம்மு றை வேண்டினாள், அனைத்தும் நலமாக நடக்கவேண்டும் என்று.

கடவுளின் கணக்கு எதுவோ!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
Why this kolaveri? கடவுள் கணக்கு நல்லதே நடக்கும்
நல்லது நடந்தா ஓகேதான். கார்த்திகேயன் கணக்கு எதுவோ?
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top