• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
14



இரு குடும்பத்தவரும் முக்கிய விசேஷத்திற்குச் செல்வதால், வரும்வரை வசீகரனை தினகரன் பார்த்துக்கொள்வதாக ஏற்பாடு. திடீரென்று மும்பையில் மருத்துவர்களுக்கான செமினார் ஒன்றிற்குக் கிளம்ப வேண்டிய சூழ்நிலை வந்ததால், இங்கு விட்டுச் செல்ல வந்ததாக பூரணி நம்பும்படியாக ஒரு கதை சொன்னான் தினகரன்.

வசீகரனின் தலையிலிருந்த கட்டை எடுத்து ப்ளாஸ்டர் மட்டும் போட்டிருக்க அதைப் பார்வையால் வருடியபடி, “அதெல்லாம் சரிவராது கொழுந்தன். இத்தனை வருஷமா இல்லாதது என்னைப் பார்த்த பிறகு எப்படி? இவங்க அம்மா அப்படிலாம் தனியா விடுற ரகம் கிடையாது. நீங்க ஏதோ ப்ளான்ல வந்திருக்கீங்க தோணுது” என்று மறுத்தாள்.

ப்ளான் என்றதில் அண்ணன் தம்பி இருவரும் ஒருவரையொருவர் பார்த்து நொடியில் பார்வையை மாற்றி, “நீங்களே சொல்றீங்களே அண்ணி சித்தி அண்ணனை தனியா விடமாட்டாங்கன்னு. அதுக்காக அத்தியாவசியமான இடத்திற்குக்கூட சித்தியால போகாம இருக்க முடியுமா? நான் இருக்கிற தைரியத்துலதான் போனாங்க. எனக்கு திடீர்னு செமினார் அழைப்பு வந்திருக்கு. சித்திகிட்ட சொன்னா வருவாங்கதான். ரொம்ப வருஷம் கழிச்சி இப்பதான் குடும்பத்தோட போயிருக்கிறவங்களை டிஸ்டர்ப் பண்ண மனசு வரலை.”

“அடுத்து உங்க நினைவுதான் வந்தது. அதான் கூட்டிட்டு வந்துட்டேன். எனக்கு சனி ஞாயிறு இரண்டு நாள் செமினார். ஞாயிறு மதியம் முடிஞ்சிட்டா கூட அடுத்த ப்ளைட் பிடிச்சி இங்க வந்திருவேன். ப்ளீஸ் அண்ணி” என்றான்.

“நான் இல்லாமல் இருந்திருந்தா என்ன பண்ணிருப்பீங்க கொழுந்தன்?” என்றவள் குரலில் நக்கல் மட்டுமே!

“என்ன பண்ண முடியும்? எதாவது மெண்டல் ஹாஸ்பிடல்ல என்னோட மெடிக்கல் ஐடென்டி வச்சி மூணு நாளைக்குச் சேர்த்திருப்...”

“ஏய்! வாயை மூடு” என சத்தமாக அதட்டியவள், “என்னயிருந்தாலும் கூடப்பிறந்தவன் இல்லைன்றதை காட்டிட்ட கொழுந்தன். மெண்டல் ஹாஸ்பிடல்...” சட்டென்று நெற்றியில் இருவிரல் வைத்து தேய்த்தபடி தன்னை ஆசுவாசப்படுத்தி, “நான் இவங்களைப் பார்த்துக்குறேன். நீ எப்ப வர்றியோ அப்ப வா” என்றதும் சந்தோஷமாக அண்ணனவனை அவனின் ஆசை மனைவியிடம் விட்டுச் சென்றான் தினகரன்.

“சண்மு உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறியா?” கேட்டவளுக்கே அது தவறென்று புரிய, “சாரி” என்றாள்.

“சங்கடப்படாத பூரணி. நான் கூட்டிட்டுப் போறதுல பிரச்சனையில்லை. அப்பாவும் சரின்னுதான் சொல்வாங்க. என்ன ஒண்ணு உன்னளவுக்கு இவரை என்னால பார்த்துக்க முடியாது. இவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது எதெது எப்பப்பக் கொடுக்கணும்னு எனக்குத் தெரியாது. குளிக்க வைக்க ஒய்ஃப் உன்னால மட்டும்தான் முடியும். நான் சொல்ல வர்றது புரியுதா பூரணி?” என்றவள் மனமோ, தோழியின் அருகிருக்க ஆசைப்பட்டு வந்தவனை எப்படியாவது அவளுடனே இருக்கவைக்க நினைத்தது.

அந்தளவிற்கு வசீகரன் நிலை மோசம் இல்லையென்றாலும், “ம்.. புரியுது சண்மு” என்ற பூரணியின் மனதில் ‘இது சரிவருமா’ என்பதான யோசனை மட்டுமே!

“நீ கூட்டிட்டுப் போ. நான் மெடிக்கல் பாhத்துக்குறேன். வீட்டுல சேர்க்கலைன்னா இங்க ரூம்ல இருங்க” என்றாள்.

“சேச்சே.. வேலை இடத்துல சரிவராது சண்மு. நான் வீட்டுக்கே கூட்டிட்டுப் போறேன்.”

“ஒத்துப்பாங்களா?”

“ஒத்துக்க வைக்கணும்” என்றவள் முகத்தில் குழப்பம் மாறாதிருந்தது.

“இதனால உன் ப்யூச்சர் பாதிக்கப்படாதா பூரணி?”

“என்னோட இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே என் வசீகரன்தான்னு உனக்கேத் தெரியும். அப்புறமும் ஏன் இந்தக் கேள்வி சண்மு?”

“உன் எதிர்காலத்து மேல உள்ள அக்கறையில் சொல்றேன் பூரணி” என்று வசீகரனைப் பார்த்த சண்முகி, ‘பார்த்துக்கோங்க. இதுதான் என் பூரணி’ என்றாள் கண்ணசைவால். அதில் ‘இவளைக் கைவிட்டுவிடாதே’ என்ற மறைமுக எச்சரிக்கை இருந்ததோ!

அதைப் புரிந்தவன் மனைவியவளை மென்மையாகப் பார்த்து, சண்முகியிடம் திரும்பி, ‘அவள் என் மனைவி! என் உயிர் உள்ளவரை விட்டுக்கொடுக்கவோ, விட்டுப்போகவோ மாட்டேன்’ என்றவாறு அழுத்தமாகப் பார்த்து பார்வையிலேயே மனதிலுள்ளதை உரைத்தான்.

‘ம்க்கும் ரொம்பத்தான்’ என சண்முகி நொடிக்க... அவளின் தோளணைத்து, “ஏலே சண்மு! டோண்ட் ஒர்றி. பி ஹேப்பி” என்க, அத்தனை பதற்றமும் மறைந்து போக சத்தமாக சிரித்திருந்தான் வசீகரன்.

“என்னாச்சிங்க?” என்று பதறியபடி அவனிடம் வந்தவளை, ‘சிரிப்புக்கு ஏன் இவ்வளவு பதற்றம்’ என்பதாகப் பார்த்திருந்தான். அதையே சண்முகி கேட்க, “அங்கேயிருந்த அந்த பத்து நாளும் இவ்வளவு சத்தமா சிரிச்சதில்லை. அதான்...” என விளக்கமளித்தாள்.

சின்ன சந்தேகத்துடன் கணவனைக் கண்டு, “ஆமா நாங்க பேசினது உங்களுக்குப் புரிஞ்சதா?” என்ற கேள்வியில் புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து அவளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க... “உங்களுக்கெப்படிப் புரியும்” என தனக்கே பதிலளித்து, “கிளம்புறோம் சண்மு. கொழுந்தன் வந்ததும் கூட்டிட்டு வர்றேன்” என்றாள்.

சைக்கிளை உருட்டியபடி இருவரும் நடந்து வீடு வர அவனின் பேக்கை கையில் எடுத்து, கணவன் கைபிடித்து வீட்டினுள் வருகையில் ஒருவித சிலிர்ப்பு அவளுள். கணவன் மனைவியாக கைபிடித்து ஆரத்தி எடுத்து வலதுகாலை எடுத்து வைத்து வரவேண்டிய தருணமிது. ‘விடு பரி. உனக்கந்த கொடுப்பினை இல்லை’ என்றது மனம்.

தன் அறையில் அமரவைத்து மின்விசிறியை சுழலவிட்டவள், வீட்டினர் வசிகரனைக் கண்டால் நாள் முழுவதும் சண்டையிலேயே முடியும் என்பதால், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தயாராக ஆரம்பித்தாள்.

வெளியே சென்று அவனின் காலணியை எடுத்து ஒழித்து வைத்து கிச்சன் செல்ல, குளித்து வந்த மைதிலி கிச்சனிலிருந்த மகளைப் பார்த்து, “நீ கடைக்குதான போயிருந்த? இப்ப இங்க என்ன பண்ற?” என்று மகளை சந்தேகமாய்ப் பார்த்தார்.

“ரொம்பத் தலைவலிமா. அங்க சண்முவை பார்க்கச் சொல்லிட்டு வந்துட்டேன்.”

“அவள் பொறுப்பிலா? பணம்லாம் எப்படி?” என்றவர் குரலில் தன் சொத்தை யாரோ கொண்டு போவதைத் தடுக்கும் வேகம்.

தாயின் குரலிலிருந்த பததைப்பு பூரணியைத் தாக்க, “ம்மா.. சொந்த வீட்டுல யாரும் திருடமாட்டாங்க. மெடிக்கலை எனக்கே கொடுத்திருன்னு சண்மு ஒரு வார்த்தை சொன்னா, அடுத்த நிமிஷம் ஏன் எதுக்குன்னு கேட்காமல் கொடுத்துருவேன். அவளைவிட எனக்கு அது முக்கியமில்லை” என்றாள் தெளிவாய்.

“நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிப் பேசுற? நீயும் சேர்ந்து பணம் போட்டிருக்கதான?” என்றார் அலட்டலாக.

“அந்தப் பணமும் நீங்க கொடுத்ததில்லை. அவளோட அப்பா மூலமா லோன் போட்டது. பண விஷயம் பற்றி எப்பவும் நீங்க பேசாதீங்க” என்றாள் கண்டிப்புடன்.

‘ம்க்கும்..’ என நொடித்தவர், “உன் அக்கா போன் பண்ணியிருந்தா. பையன் பார்த்திருக்காளாம் எப்ப வரலாம்னு கேட்டா. சாயங்காலம் வரச்சொல்லியிருக்கேன். வந்ததும் பேசிக்கோ.”

‘அவளை..’ என பல்லைக்கடித்தவள், “எத்தனை முறை சொல்றது மாப்பிள்ளை அது இதுன்னு பேசாதன்னு. வரட்டும் நான் பேசிக்குறேன்” என்றாள்.

“பையன் நல்ல வசதியாம்டி.”

“வசதி வசதின்னு ஏற்கனவே செய்தது பத்தாதா உங்களுக்கு? போதும் உங்க பாசத்தின் அளவு” என்று வேகமாக அறைக்குள் வந்து கோபத்தை அடக்கியபடி நிற்க, அனைத்தையும் கேட்டிருந்த வசீகரனோ, மனைவிக்குப் பரிந்து பேசும் நிலையில் இல்லாததால், அனைத்தையும் அமைதியாக கிரகித்தான்.

“எங்க போயிட்ட பரி?” குரலில் மென்மையைக் கொண்டு வந்திருந்தான்.

‘எப்படி இவங்களை மறந்தேன்’ என தன் தலையில் தட்டி, “உங்களுக்கு காப்பி எடுக்கப்போனேன். ஆமா காலையில சாப்பிட்டீங்களா?” என,

“ம்.. அம்மா தந்துட்டுதான் போனாங்க.”

“இதோ வர்றேன்” என்று சென்றவள் சில நிமிடங்களில் வந்து காஃபியை கணவனிடம் கொடுத்துக் குடிக்க வைத்தவள். “உங்க போன் எங்க?” என்றாள்.

“இதான் போனா” என்று தன் கைபேசியை நீட்ட, அதை வாங்கிப் பார்த்தவள், “என்ன கேம் எதையும் காணோம்” என்று ப்ளே ஸ்டோர் சென்று சதுரங்க ஆட்டத்திற்கான தரமான ஆப் ஒன்றை தரவிறக்கம் செய்து, “இதை விளையாடுங்க” என்றாள்.

“எனக்குத் தெரியாது பரி. அம்மா எப்பவும் சூட்டிங் கேம் தருவாங்க.” பாவமாக முகம் வைத்து சொல்ல,

“இருங்க நான் சொல்லித்தர்றேன்” என்று கதவை தாழிட்டு அவனருகில் அமர்ந்து எந்த காய்கள் எப்படி செல்ல வேண்டும், அதை எதிரணி எப்படி தோற்கடிக்க வேண்டுமென்று சொல்லித்தந்து, “புரியுதா?” என கேட்க, அவனின் தலையசைவில், “குட் பாய் குட்டிக்கண்ணா. இந்த மாதிரி விளையாட்டுதான் தெரிஞ்சிக்கணும். மூளை சுறுசுறுப்பாயிருக்கும். சூட்டிங் கேம் மாதிரி வர்றது ஒருவகையில் வன்முறையைத் தூண்டும். உங்களுக்கு அதெல்லாம் சரிவராது” என்க, அவனோ புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

“இப்பவும் சிரிப்புதானா? வீட்டுல உங்களைப் பார்த்ததும் என்ன சொல்லப் போறாங்களோன்னு மனசெல்லாம் திக்திக்னு அடிக்குது.”

“மனசு எங்கயிருக்கு?” என்றான் அவளின் மீதான ஆர்வத்தை உள்ளடக்கி.

யோசிக்காது பட்டென்று, “இங்கதான்!” என தன் இதயப்பகுதியைக் காண்பிக்க, அவனோ, “இதுவா?” என்று அங்கு கைவைக்க... அவனின் ஸ்பரிசம் உணர்ந்த நொடி இதயத்தின் துடிப்பு இருமடங்காக, உடலின் அனைத்து பாகங்களும் சிலிர்த்தடங்க, மூளையின் எச்சரிக்கையில் அவன் கையை வேகமாகத் தட்டிவிட்டு, “எ..என்ன பண்றீங்க? இதெல்லாம் தப்பு. பொண்ணுங்க மேல கை வைக்கக்கூடாது” என்று படபடப்பை மறைத்து நிதானமாக புரியவைக்க முயன்றாள்.

‘பொண்டாட்டி மேல கை வைக்கலாம்’ என்றான் மனதினுள். அவளின் பேச்சு, பயம், ஜாக்கிரதை உணர்வு, அருகாமை என்று ஒவ்வொன்றாய் ரசித்திருக்க, கணவனின் தெளிவான மனநிலை உணராமல் அவளுமே அவ்வருகாமையை தனக்குள் செலுத்திக் கொண்டிருந்தாள்.

“ஏய் பூரணி! உள்ள என்ன செய்யுற?” தாயின் கதவு தட்டும் சத்தத்தில் இனிமைகள் தொலைய, பாதியளவு கதவு திறந்து, “தலைவலின்னு சொல்லிட்டுத்தானம்மா வந்தேன்” என்றாள் சிறு எரிச்சலில்.

“உன் அறைக்குள்ள வேற ஒரு சத்தம் கேட்டுச்சி. யாரது?” என்றார் அதட்டலாக.

“ஸ்பீக்கர்ல போட்டு போன் பேசிட்டிருந்தேன்மா. அந்த சத்தமாயிருக்கும்.”

“தலைவலின்னுட்டு போன் பேசினா சரியாகிருமா? படுத்துத் தூங்கு” என்று சத்தம் போட்டார்.

“சரிம்மா. எதுவும் வேலையிருந்தா மட்டும் எழுப்புங்க” என்று கதவைச் சாற்றி உள்ளே செல்ல, “தாலிகட்டின புருஷனை இப்படி கள்ளத்தனமா பார்த்துக்க வேண்டிய கொடுமையை என்னன்னு சொல்றது” என புலம்பியபடி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள். இப்படிச் செய்வது தப்பு போலவும் தோன்ற கண்கலங்கியது.

அவளையே கவனித்திருந்தவன் அவள் நிலையைக் கணித்து, ‘உன்னோட கஷ்டம் புரிந்தும், ஒரு பொண்ணு வாழ்ற சாதாரண வாழ்க்கையைக் கூட உனக்குக் கொடுக்காமல் இருக்கேன் பரி. கொஞ்ச நாள்தான் எல்லாத்தையும் சரி பண்றேன்’ என்றெண்ணி தற்பொழுது அவளின் அவஸ்தையை ரசிக்கவென்று, “பரி பாத்ரூம் வருது” என்றான் சுண்டுவிரலை நீட்டி.

“என்னது?” கிட்டத்தட்ட அலறி, “ஹையோ இதை யோசிக்கலையே” என்று சத்தமாகச் சொல்ல, அவனோ அவளின் அச்செயலில் வந்த சிரிப்பை அடக்கி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

வேகமாக வெளியே வந்தவள் தாயைப் பார்க்க, அவர் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருப்பது தெரியவும் சற்று ஆசுவாசமாகி, அதே வேகத்தில் கணவனை அழைத்து மெல்ல வாசல் வந்து தாயைப் பார்க்க... “பரி என்...” முடிக்க விடவில்லை அவள். சட்டென்று நெருங்கி அவன் வாயை மூடி, “பேசாதீங்க வசீகரா. ப்ளீஸ் எனக்கே திக் திக்னு இருக்கு. இதுல உங்க வாய்ஸ் கேட்டுச்சின்னா நான் காலி” என்று வாசல் பார்த்தவாறு கிசுகிசுத்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அவளின் திடீர் நெருக்கத்தில், தன்னை மீறி அணைக்கத் துடித்தக் கையை அடக்கியவனால், உதட்டை அடக்க முடியாமல் போக, அவளின் உள்ளங்கையில் மென்மையாய் முத்தமிட்டவன் கண்மூடி அத்தருணத்தை உள்வாங்கினான்.

அவனின் உதடசைவும் மீசையின் உராய்வும் திடீரென்று தீப்பந்தமாய் அவளுள் பற்றிக்கொள்ள, பட்டென்று கையை விலக்கி அவனைப் பார்க்க, இதுவரை நடந்தது நடக்கவேயில்லை என்பதாய் அதே புன்னகையுடன் நின்றிருந்தான் அவன்.

‘சே.. இவங்க நார்மலாதான் இருக்காங்க. நான்தான் அதையிதை கற்பனை பண்ணிக்குறேன் போல. இந்த இக்கட்டான நேரத்திலும் கற்பனை வருமா? அந்தக் கற்பனையும் மனதோடு உடலையும் சுருட்டி எடுக்குமா?’ கேள்விகள் அவளுள் எழுந்தாலும், தற்போதைய நிலை கருதி அவனை பக்கவாட்டில் இழுத்துச் சென்று, வீட்டின் பின்புறமிருந்த பாத்ரூமிற்குள் தள்ளி கதவை மூடி, “வசீகரா இரண்டாம் நம்பர் வந்தாலும் முடிச்சிட்டு வந்திருங்க. ப்ளீஸ்” என்று கெஞ்சி பதற்றத்துடன் நின்றிருந்தாள்.

உள்ளிருந்தவனுக்கோ தாள முடியாத சிரிப்பு எழ, சட்டென வாயை மூடிக்கொண்டான். “டேய் வசீகரா! பொண்டாட்டியை டென்ஷன் படுத்தி அவளோட அவஸ்தையைப் பார்க்கிறதும் நல்லாத்தானிருக்கு. அழகுடி செல்லம் நீ” என்றவன் ஏகாந்த மனநிலையில் இருக்க,

‘எதுக்கிந்த சைக்கோத்தனம்?’ என்றது மனசாட்சி.

‘அது சைக்கோத்தனம் கிடையாது. ரசனை மனசாட்சியே ரசனை’ என்றான்.

அவள் பதற்றத்தைக் குறைக்கவென்று சில நிமிடங்கள் அதிகமாக நின்றுவிட்டு வெளியே வர, “வந்துட்டீங்களா? சீக்கிரம் வீட்டுக்குள்ள போகலாம் வாங்க” என்று கைபிடித்துச் சுற்றிலும் பார்த்துவிட்டு வர, “ஹாய் பூரணி” என்ற குரலில் ஆணியடித்தாற்போல் அசையாது நின்ற இடத்திலிருந்தே பக்கத்து வீட்டைப் பார்த்தாள்.

“இதோ வர்றேன்” என்று அங்கிருந்து அஞ்சுகா கையசைத்து நிற்கச் சொல்ல, பரிபூரணிக்குதான் பயத்தில் வியர்த்துக் கொட்டியது.

“பரி பாரு உன் முகத்துல தண்ணீர்” என்று வசீகரன் துடைக்க வர...

“இ..இல்ல நானே துடைச்சுக்குறேன்” என்று துப்பட்டாவால் முகத்தை அழுந்தத் துடைக்க, அஞ்சுகா அவர்கள் முன் நின்றாள்.

“ஆடி மாதம் வெயில் கொளுத்துறப்ப இப்படி அடைமழைக்கு மேகம் திரண்டிருக்கும் போதே நினைத்தேன். காரணம் இப்பதான புரியுது” என்று அருகருகே இருந்த அவர்களின் ஜோடிப்பொருத்தம் பார்த்து, “இது எப்ப நடந்தது?” என்று அவர்களைக் காண்பித்துக் கேட்டாள்.

“ஐயோ! ப்ளீஸ் சத்தமா பேசாதீங்க. வீட்டுல யாருக்கும் இவங்க இருக்கிறது தெரியாது. எல்லாம் இந்த கொழுந்தன் பண்ணிய வேலை” என்று நடந்ததைச் சொன்னாள்.

‘இன்னும் இவளிடம் உண்மையைச் சொல்லலையா?’ வசீகரனை அஞ்சுகா முறைக்க, புன்னகை மட்டுமே அவனிடம். “உரிமைப்பட்டவனை ஏன் திருட்டுத்தனமா வச்சிட்டிருக்க பூரணி?” என்றாளவள்.

“என்னது? வச்சிட்டிருக்கேனா?” இடம் உணர்ந்து மெல்லிய அலறலில் கேட்க...

“ஐயோ சாரி சாரி பூரணி. நான் சொன்ன அர்த்தம் வேற. ஒழிச்சி வச்சிருக்கன்றதை அப்படிச் சொல்லிட்டேன்” என்றாள் கெஞ்சலாக.

“வேற என்ன செய்யுறது? இவங்களை அப்படியே விடவும் முடியாதே. எங்க வீட்டுக்குத் தெரிந்தால் எந்த மாதிரி பூதம் கிளம்புமோ தெரியலை. நீங்க அன்னைக்கு சொன்ன மாதிரி வார்த்தைகளை உபயோகிச்சா என்னால தாங்கிக்க முடியாது” என்றவள் குரல் கரகரத்து வந்தது.

“இவ்வளவு அப்பாவியா இருக்காதீங்க பூரணி. நீங்க நம்புனவங்களே உங்களை ஏமாத்துவாங்க” என்று கட்டினவளை கஷ்டப்படுத்துகிறானே என வசீகரனை கோபத்துடன் பார்த்தாள்.

“என் கல்யாணத்திற்குப் பிறகு, சண்முகி தவிர யாரையும் நம்புறதில்லை அஞ்சு.”

“இதோ இவரை நம்புறீங்கதான? இவர் ஏமாத்தலாமில்லையா?”

“இவங்களுக்கு அந்தளவு விவரம் தெரியாது அஞ்சு. விவரம் தெரிஞ்சிருந்தா இந்நேரம் வேற ஒரு வசதியான வீட்டுப் பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க. நான் இவங்க லைஃப்ல வந்ததே தெரியாமல் போயிருக்கும்” என்றவள் குரல் திக்கித் தொண்டை அடைக்க கண்கலங்கியது.

வசீகரன் அவளை ஆறுதலாக அணைக்கப்போக, அதை உணர்ந்த அஞ்சுகா அதைச் செய்து, “வசீகரனுக்கு விவரம் தெரிந்தாலும் உன்னை விட்டுப் போகாம உன்னையே சுத்தி வருவார்னு என்னோட ஏழாம் அறிவு சொல்லுது பூரணி” என்றாள் ஆறுதலாக.

“ஆறறிவு உள்ளவங்களையே நம்புறதில்லை. ஏழாவது அறிவு ஓவர் பிரில்லியண்டா இருப்பாங்கன்றப்ப நீங்களே யோசிச்சிக்கோங்க” என்றாள் பயந்தாற்போல்.

“இப்படிப் பேசுறதுக்கெல்லாம் அணை கட்டுனா எப்படி பூரணி? நீ என்ன அணை போட்டாலும் இந்த வசீகரனுக்கு நீ மட்டும்தான் மனைவி. உங்க உறவை யாராலும் மாற்ற முடியாது பூரணி. எதற்கும் பயப்படாம இப்ப இந்த நிமிஷத்தை சந்தோஷமா அனுபவி” என்றாள்.

“தேங்க்ஸ் அஞ்சு. அவங்களுக்கு எப்படியோ எனக்கு என் வசீகரன் மட்டும்தான். சரி அஞ்சு.. மழைத்துளி விழ ஆரம்பிச்சிருச்சி. அம்மா வர்றதுக்குள்ள வீட்டுக்குள்ள போறோம்” என்று கணவன் கைபிடித்து வீட்டிற்குள் சென்றாள்.

வெளியே மழை அடித்து ஊற்றிக் கொண்டிருக்க வசீகரன் கைபேசியில் விளையாடிக் கொண்டிருக்க, அவனின் கையோடு கைகோர்த்துத் தோள் சாய்ந்து ஜன்னல் வழி மழையை ரசித்திருந்தாள் பரிபூரணி.

விளையாடுவதாய் காண்பித்து கைபேசியை நோண்டினாலும் அவனின் ஒவ்வொரு உணர்வும் அவளிடமே! வார்த்தையில்லா மொழிகள் அங்கு வஞ்சனையின்றி இருக்க அதைக் கலைத்தாள் அவள்.

“வசீகரா!”

“ம்... சொல்லு பரி.”

“இப்படியே கடைசிவரை இருக்கணும் போலயிருக்கு. இப்படி என் கைக்குள்ள நீங்களும் உங்க தோளில் நானும்னு காலம் முழுக்க. இப்படியொரு சந்தர்ப்பம் இன்னொரு முறை கிடைக்குமா தெரியாது. இதெல்லாம் நான் வாழப்போற வாழ்க்கைக்கான நினைவுகள். நான் பேசுறதோட அர்த்தம் உங்களுக்குப் புரியாதுன்னு தெரியும். இருந்தும் இந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்” என்று தலை நிமிர்த்திப் பார்த்தாள்.

அவனும் அவள் விழிவழிப் பார்த்து, ‘நீ பேசுவதின் அர்த்தம் மட்டுமல்ல, உன்னையும் நானறிவேன்! நான் மட்டுமே அறிவேன்!’ என்பதாய் சில நொடிகளேனும் ஆழ்ந்த பார்வையை அவளுள் செலுத்தியவன் சட்டென்று நிதானித்து புன்னகையைக் கொடுக்க, அப்பார்வையின் வித்தியாசம் உணர்ந்து வேகமாக நிமிர்ந்து அமர்ந்தவள், கணவனவனின் கண்களை அழுத்தமாக ஆராய, எப்பொழுதும் போல் புன்னகையுடனிருந்தது.

‘தன்னை அவனுக்குள் இழுக்கும் பார்வை பார்த்தது மாயையோ! இல்லை நான் குழம்புகிறேனா? என்னாகிற்று எனக்கு?’ அவளுள் ஏதோவொரு ஏமாற்றம் சூழந்ததோ! தலையை உலுக்கி, “உங்களை ரொம்ப தேடினதால கனவெல்லாம் நிஜமா தெரியுது வசீகரா. கொஞ்ச நேரத்துலயே இப்படின்னா இரண்டு நாளைக்குள்ள என்னென்ன அகப்போறேனோ” என்றாள் முணுமுணுப்பாக.

அவளின் புலம்பலில் சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டவன், ‘உன்னோட இந்த அவஸ்தையை ரசிக்க எனக்கு இரண்டு நாளெல்லாம் பத்தாது பரி. கூடவே இருந்துவிடட்டுமா’ என்றது மனம்.

“ஏய் பூரணி! என்ன என்னைக்கும் இல்லாம கதவைப் பூட்டிட்டிருக்க?”

தாயின் குரலில் வேகமாக எழுந்தவள் கால் இடறி அவன் மேல் விழப்போக, “பரி பார்த்துடா” என்று விழவிடாமல் இடையைப் பிடிக்க, அவளின் கைகளோ அவன் தோள்களில் தஞ்சமானது.

சில நொடிப் பார்வை பரிமாற்றம், தடுமாற்றம், தவிப்பு அனைத்தையும், “பூரணி” என்ற அழைப்பு திரும்பவும் இழுக்க, வேகவேகமாக அவனை விட்டு விலகி கதவருகில் சென்று ஊஃப் என காற்றை வெளியிட்டு தன்னையும் நிதானப்படுத்தி மெல்ல கதவைத்திறந்து உடனே சாற்றி, “என்னம்மா? ஒருநாள் ரெஸ்ட் எடுக்க விடமாட்டீங்களா?” ஏனோ தாயின்மேல் என்றுமில்லாத எரிச்சலைக் காட்டினாள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ!

“மதியமாகுது சாப்பிடலையா கேட்க நினைச்சா கத்துற? உன்னைப்போய் கேட்டேன் பாரு” என தலையிலடித்துக் கொண்டார்.

‘என்னைப் பெற்ற தாய் அக்கறையா கேட்குறதே பெருசு. அதையும் கெடுக்கிறேனா? எல்லாம் இந்த வசீகரனால வந்தது. பாவிப்பய கூடவேயிருந்து கொல்றான்டா’ என்றவள் மணி பார்க்க அது ஒன்று பத்தைக் காட்டியது.

வேகமாக சமையலறை சென்றவள் என்ன இருக்கிறதென்று பார்க்க அங்கே எதுவுமில்லை. வெளியே மழை வேறு அடித்து ஊற்ற, மின்னிணைப்பு துண்டிக்காமல் இருப்பதே புண்ணியமென்றிருக்க, தேடலில் இறங்கியவள் கண்களில் பட்டது அந்த சேமியா பாக்கெட். இதுவே போதுமென்று வேகவேகமாக உப்புமா செய்து அறைக்குள் எடுத்துப்போகையில், “உன் மதிய சாப்பாடு எங்க? எதுக்கு உப்புமா செய்த?” என கேட்டார் மைதிலி.

“அ..அதும்மா வினோத் இல்ல.. அவன் காலையில சாப்பிட்டு வரலை சொன்னதால அவனுக்குக் கொடுத்துட்டேன். மதியம் சண்முவோடதை பகிர்ந்துக்கலாம்னு இருந்தேன். திடீர்த் தலைவலியால வந்துட்டேன்” என்று மூச்சை இழுத்துப்பிடிக்க,

“சரி சரி போய்ச் சாப்பிடு. சுடுதண்ணி இருக்கு அதைக்குடி” என்றனுப்ப,

‘தப்பிச்சோம்டா சாமி’ என்று மூச்சை வெளியிட்டு ஆசுவாசமாகி அறைக்குள் வந்ததும் உப்புமாவை கீழே வைத்துவிட்டுக் கதவைத் தாழிட்டு வந்தவள், “பொய்யே பிடிக்காத நீ பொய் பொய்யா சொல்றியே பரி. கடவுள் கண்ணைக் குத்தப்போறாரு பாரு. காதலுக்கு முதல் படியே பொய்தானாமே? இந்தக்காதல் வந்ததும்தான் வந்தது படாதபாடு படுத்துது. எவன்டா கண்டுபிடிச்சான் இந்தக் காதலை? இந்த வசீகரன் கிளம்புறதுக்குள்ள இன்னும் எத்தனை வகையான பொய் சொல்லணுமோ தெரியலையே! கடவுளே என்னோட பொய்யைப் பாவக்கணக்குல சேர்க்காத. அப்பப்ப மன்னிச்சி மறந்துரு” என்ற அவசர வேண்டுதல் வேறு.

வந்ததிலிருந்து புலம்பிக் கொண்டிருப்பவளைக் கண்டு வந்த சிரிப்பை உள்ளுக்குள் அடக்கி ஆசையாய்ப் பார்த்து, “என்ன பரி?” என்றான்.

“எல்லாம் உன்னாலதான் குட்டிக்கண்ணா. உன்னைக் கூட்டிட்டு வந்ததால குடும்பத்துக்குள்ளயே நடிக்கிறேன். பொய்லாம் சர்வசாதாரணமா சொல்றேன். இதோ திருட்டுத்தனமும் செய்றேன்” என்று உணவைக் காண்பித்து, “இன்னும் கொலை, கொள்ளை மட்டுமே பாக்கி. திருட்டுத்தனம்னா கொள்ளைதான? அப்ப கொலை மட்டுமே பாக்கி.” மரியாதையை காற்றில் விட்டு புலம்பிக்கொண்டிருந்தாள்.

வசீகரன் என்ன நினைத்தானோ அவள் முகம் பார்த்து, “நான் வேணும்னா அம்மாகிட்ட போயிரவா பரி?” என்றான்.

“அதெல்லாம் வேண்டாம். நான் ஏதோ.. ப்ச்.. உனக்காக இதை செய்யுறப்ப திரில்லா கிக்கா இருக்கதான் செய்யுது. அதையும் மீறின பயமும் வருது. அதான் இந்த புலம்பல். நீ கண்டுக்காம சாப்பிடு வா” என்றவாறு டப்பாவில் உள்ளதை எடுத்து அவனிடம் நீட்ட, அவனோ தட்டிலுள்ள உப்புமாவைப் பார்த்தான்.

“உப்புமா சாப்பிட்டா பசி அடங்காது. அதுக்கு நான் ஆதரவு கொடுத்துக்குறேன். இந்த டிபன் பாக்ஸ்ல சாம்பார் சாதமும் தொட்டுக்க உருளைக்கிழங்கு பொரியலும் இருக்கு. காம்பினேஷன் கலக்கலாயிருக்கும். உங்க பொண்டாட்டி செய்தது. சாப்பிட்டுப் பாருங்க” என்றாள்.

“நீயே ஊட்டிவிடு பரி” என்றதும் நொடி நேரத் தடுமாற்றத்துக்குப் பின் ஊட்டிவிட ஆரம்பிக்க, ஒவ்வொரு முறையும் அவன் உதட்டைத் தொட்டு வந்த விரல்களின் மூலம் ஏதோ வித்தியாசமான உணர்வு எழ, அவனோ பார்வை மாற்றாது அவளையே பார்த்திருக்க, அவள் பார்வை தன்னைத் தொடும் பொழுது புன்னகையை பூசிக்கொள்ள... கண்ணாமூச்சி ஆட்டம் அங்கே இனிதே அரங்கேறியது!

“இன்னும் வேணுமா வசீகரா?” என்க, அவனோ வேண்டாமென்று தலையசைக்கவும் தட்டிலேயே கைகழுவி தண்ணீர் கொடுத்து அவனின் வாயைத் தண்ணீரால் துடைக்க, துடைத்த வேகத்தில் சட்டென்று கையை விலக்கினாள் பரிபூரணி.

சில்மிஷமாய் அவன் பார்வையிருக்க, அவளோ என்ன நடந்ததென்று யோசிக்க, வாயைத் தண்ணீரால் துடைக்கையில் இதழ் முத்தமொன்று தன் கைக்குக் கடத்தப்பட்டதோ! கண்சிமிட்டும் நேரத்தில் நடந்ததை உணர்ந்தாள்! ஆனால் உணரவில்லை தோற்றம்! அனைத்தையும் நடத்தியவனோ அப்பாவிப் பார்வையை தத்தெடுத்திருந்தான்.

‘கடவுளே! என்னவோ நடக்குதுன்னு தெரியுது. ஆனா என்னன்னு தெரியலை. முதல்ல இடத்தைக் காலி பண்ணனும்’ என்று சாப்பிட்ட பாத்திரங்களை அவசரமாக எடுத்து வெளியே ஓடிவிட்டாள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top