- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
14
இரு குடும்பத்தவரும் முக்கிய விசேஷத்திற்குச் செல்வதால், வரும்வரை வசீகரனை தினகரன் பார்த்துக்கொள்வதாக ஏற்பாடு. திடீரென்று மும்பையில் மருத்துவர்களுக்கான செமினார் ஒன்றிற்குக் கிளம்ப வேண்டிய சூழ்நிலை வந்ததால், இங்கு விட்டுச் செல்ல வந்ததாக பூரணி நம்பும்படியாக ஒரு கதை சொன்னான் தினகரன்.
வசீகரனின் தலையிலிருந்த கட்டை எடுத்து ப்ளாஸ்டர் மட்டும் போட்டிருக்க அதைப் பார்வையால் வருடியபடி, “அதெல்லாம் சரிவராது கொழுந்தன். இத்தனை வருஷமா இல்லாதது என்னைப் பார்த்த பிறகு எப்படி? இவங்க அம்மா அப்படிலாம் தனியா விடுற ரகம் கிடையாது. நீங்க ஏதோ ப்ளான்ல வந்திருக்கீங்க தோணுது” என்று மறுத்தாள்.
ப்ளான் என்றதில் அண்ணன் தம்பி இருவரும் ஒருவரையொருவர் பார்த்து நொடியில் பார்வையை மாற்றி, “நீங்களே சொல்றீங்களே அண்ணி சித்தி அண்ணனை தனியா விடமாட்டாங்கன்னு. அதுக்காக அத்தியாவசியமான இடத்திற்குக்கூட சித்தியால போகாம இருக்க முடியுமா? நான் இருக்கிற தைரியத்துலதான் போனாங்க. எனக்கு திடீர்னு செமினார் அழைப்பு வந்திருக்கு. சித்திகிட்ட சொன்னா வருவாங்கதான். ரொம்ப வருஷம் கழிச்சி இப்பதான் குடும்பத்தோட போயிருக்கிறவங்களை டிஸ்டர்ப் பண்ண மனசு வரலை.”
“அடுத்து உங்க நினைவுதான் வந்தது. அதான் கூட்டிட்டு வந்துட்டேன். எனக்கு சனி ஞாயிறு இரண்டு நாள் செமினார். ஞாயிறு மதியம் முடிஞ்சிட்டா கூட அடுத்த ப்ளைட் பிடிச்சி இங்க வந்திருவேன். ப்ளீஸ் அண்ணி” என்றான்.
“நான் இல்லாமல் இருந்திருந்தா என்ன பண்ணிருப்பீங்க கொழுந்தன்?” என்றவள் குரலில் நக்கல் மட்டுமே!
“என்ன பண்ண முடியும்? எதாவது மெண்டல் ஹாஸ்பிடல்ல என்னோட மெடிக்கல் ஐடென்டி வச்சி மூணு நாளைக்குச் சேர்த்திருப்...”
“ஏய்! வாயை மூடு” என சத்தமாக அதட்டியவள், “என்னயிருந்தாலும் கூடப்பிறந்தவன் இல்லைன்றதை காட்டிட்ட கொழுந்தன். மெண்டல் ஹாஸ்பிடல்...” சட்டென்று நெற்றியில் இருவிரல் வைத்து தேய்த்தபடி தன்னை ஆசுவாசப்படுத்தி, “நான் இவங்களைப் பார்த்துக்குறேன். நீ எப்ப வர்றியோ அப்ப வா” என்றதும் சந்தோஷமாக அண்ணனவனை அவனின் ஆசை மனைவியிடம் விட்டுச் சென்றான் தினகரன்.
“சண்மு உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறியா?” கேட்டவளுக்கே அது தவறென்று புரிய, “சாரி” என்றாள்.
“சங்கடப்படாத பூரணி. நான் கூட்டிட்டுப் போறதுல பிரச்சனையில்லை. அப்பாவும் சரின்னுதான் சொல்வாங்க. என்ன ஒண்ணு உன்னளவுக்கு இவரை என்னால பார்த்துக்க முடியாது. இவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது எதெது எப்பப்பக் கொடுக்கணும்னு எனக்குத் தெரியாது. குளிக்க வைக்க ஒய்ஃப் உன்னால மட்டும்தான் முடியும். நான் சொல்ல வர்றது புரியுதா பூரணி?” என்றவள் மனமோ, தோழியின் அருகிருக்க ஆசைப்பட்டு வந்தவனை எப்படியாவது அவளுடனே இருக்கவைக்க நினைத்தது.
அந்தளவிற்கு வசீகரன் நிலை மோசம் இல்லையென்றாலும், “ம்.. புரியுது சண்மு” என்ற பூரணியின் மனதில் ‘இது சரிவருமா’ என்பதான யோசனை மட்டுமே!
“நீ கூட்டிட்டுப் போ. நான் மெடிக்கல் பாhத்துக்குறேன். வீட்டுல சேர்க்கலைன்னா இங்க ரூம்ல இருங்க” என்றாள்.
“சேச்சே.. வேலை இடத்துல சரிவராது சண்மு. நான் வீட்டுக்கே கூட்டிட்டுப் போறேன்.”
“ஒத்துப்பாங்களா?”
“ஒத்துக்க வைக்கணும்” என்றவள் முகத்தில் குழப்பம் மாறாதிருந்தது.
“இதனால உன் ப்யூச்சர் பாதிக்கப்படாதா பூரணி?”
“என்னோட இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே என் வசீகரன்தான்னு உனக்கேத் தெரியும். அப்புறமும் ஏன் இந்தக் கேள்வி சண்மு?”
“உன் எதிர்காலத்து மேல உள்ள அக்கறையில் சொல்றேன் பூரணி” என்று வசீகரனைப் பார்த்த சண்முகி, ‘பார்த்துக்கோங்க. இதுதான் என் பூரணி’ என்றாள் கண்ணசைவால். அதில் ‘இவளைக் கைவிட்டுவிடாதே’ என்ற மறைமுக எச்சரிக்கை இருந்ததோ!
அதைப் புரிந்தவன் மனைவியவளை மென்மையாகப் பார்த்து, சண்முகியிடம் திரும்பி, ‘அவள் என் மனைவி! என் உயிர் உள்ளவரை விட்டுக்கொடுக்கவோ, விட்டுப்போகவோ மாட்டேன்’ என்றவாறு அழுத்தமாகப் பார்த்து பார்வையிலேயே மனதிலுள்ளதை உரைத்தான்.
‘ம்க்கும் ரொம்பத்தான்’ என சண்முகி நொடிக்க... அவளின் தோளணைத்து, “ஏலே சண்மு! டோண்ட் ஒர்றி. பி ஹேப்பி” என்க, அத்தனை பதற்றமும் மறைந்து போக சத்தமாக சிரித்திருந்தான் வசீகரன்.
“என்னாச்சிங்க?” என்று பதறியபடி அவனிடம் வந்தவளை, ‘சிரிப்புக்கு ஏன் இவ்வளவு பதற்றம்’ என்பதாகப் பார்த்திருந்தான். அதையே சண்முகி கேட்க, “அங்கேயிருந்த அந்த பத்து நாளும் இவ்வளவு சத்தமா சிரிச்சதில்லை. அதான்...” என விளக்கமளித்தாள்.
சின்ன சந்தேகத்துடன் கணவனைக் கண்டு, “ஆமா நாங்க பேசினது உங்களுக்குப் புரிஞ்சதா?” என்ற கேள்வியில் புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து அவளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க... “உங்களுக்கெப்படிப் புரியும்” என தனக்கே பதிலளித்து, “கிளம்புறோம் சண்மு. கொழுந்தன் வந்ததும் கூட்டிட்டு வர்றேன்” என்றாள்.
சைக்கிளை உருட்டியபடி இருவரும் நடந்து வீடு வர அவனின் பேக்கை கையில் எடுத்து, கணவன் கைபிடித்து வீட்டினுள் வருகையில் ஒருவித சிலிர்ப்பு அவளுள். கணவன் மனைவியாக கைபிடித்து ஆரத்தி எடுத்து வலதுகாலை எடுத்து வைத்து வரவேண்டிய தருணமிது. ‘விடு பரி. உனக்கந்த கொடுப்பினை இல்லை’ என்றது மனம்.
தன் அறையில் அமரவைத்து மின்விசிறியை சுழலவிட்டவள், வீட்டினர் வசிகரனைக் கண்டால் நாள் முழுவதும் சண்டையிலேயே முடியும் என்பதால், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தயாராக ஆரம்பித்தாள்.
வெளியே சென்று அவனின் காலணியை எடுத்து ஒழித்து வைத்து கிச்சன் செல்ல, குளித்து வந்த மைதிலி கிச்சனிலிருந்த மகளைப் பார்த்து, “நீ கடைக்குதான போயிருந்த? இப்ப இங்க என்ன பண்ற?” என்று மகளை சந்தேகமாய்ப் பார்த்தார்.
“ரொம்பத் தலைவலிமா. அங்க சண்முவை பார்க்கச் சொல்லிட்டு வந்துட்டேன்.”
“அவள் பொறுப்பிலா? பணம்லாம் எப்படி?” என்றவர் குரலில் தன் சொத்தை யாரோ கொண்டு போவதைத் தடுக்கும் வேகம்.
தாயின் குரலிலிருந்த பததைப்பு பூரணியைத் தாக்க, “ம்மா.. சொந்த வீட்டுல யாரும் திருடமாட்டாங்க. மெடிக்கலை எனக்கே கொடுத்திருன்னு சண்மு ஒரு வார்த்தை சொன்னா, அடுத்த நிமிஷம் ஏன் எதுக்குன்னு கேட்காமல் கொடுத்துருவேன். அவளைவிட எனக்கு அது முக்கியமில்லை” என்றாள் தெளிவாய்.
“நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிப் பேசுற? நீயும் சேர்ந்து பணம் போட்டிருக்கதான?” என்றார் அலட்டலாக.
“அந்தப் பணமும் நீங்க கொடுத்ததில்லை. அவளோட அப்பா மூலமா லோன் போட்டது. பண விஷயம் பற்றி எப்பவும் நீங்க பேசாதீங்க” என்றாள் கண்டிப்புடன்.
‘ம்க்கும்..’ என நொடித்தவர், “உன் அக்கா போன் பண்ணியிருந்தா. பையன் பார்த்திருக்காளாம் எப்ப வரலாம்னு கேட்டா. சாயங்காலம் வரச்சொல்லியிருக்கேன். வந்ததும் பேசிக்கோ.”
‘அவளை..’ என பல்லைக்கடித்தவள், “எத்தனை முறை சொல்றது மாப்பிள்ளை அது இதுன்னு பேசாதன்னு. வரட்டும் நான் பேசிக்குறேன்” என்றாள்.
“பையன் நல்ல வசதியாம்டி.”
“வசதி வசதின்னு ஏற்கனவே செய்தது பத்தாதா உங்களுக்கு? போதும் உங்க பாசத்தின் அளவு” என்று வேகமாக அறைக்குள் வந்து கோபத்தை அடக்கியபடி நிற்க, அனைத்தையும் கேட்டிருந்த வசீகரனோ, மனைவிக்குப் பரிந்து பேசும் நிலையில் இல்லாததால், அனைத்தையும் அமைதியாக கிரகித்தான்.
“எங்க போயிட்ட பரி?” குரலில் மென்மையைக் கொண்டு வந்திருந்தான்.
‘எப்படி இவங்களை மறந்தேன்’ என தன் தலையில் தட்டி, “உங்களுக்கு காப்பி எடுக்கப்போனேன். ஆமா காலையில சாப்பிட்டீங்களா?” என,
“ம்.. அம்மா தந்துட்டுதான் போனாங்க.”
“இதோ வர்றேன்” என்று சென்றவள் சில நிமிடங்களில் வந்து காஃபியை கணவனிடம் கொடுத்துக் குடிக்க வைத்தவள். “உங்க போன் எங்க?” என்றாள்.
“இதான் போனா” என்று தன் கைபேசியை நீட்ட, அதை வாங்கிப் பார்த்தவள், “என்ன கேம் எதையும் காணோம்” என்று ப்ளே ஸ்டோர் சென்று சதுரங்க ஆட்டத்திற்கான தரமான ஆப் ஒன்றை தரவிறக்கம் செய்து, “இதை விளையாடுங்க” என்றாள்.
“எனக்குத் தெரியாது பரி. அம்மா எப்பவும் சூட்டிங் கேம் தருவாங்க.” பாவமாக முகம் வைத்து சொல்ல,
“இருங்க நான் சொல்லித்தர்றேன்” என்று கதவை தாழிட்டு அவனருகில் அமர்ந்து எந்த காய்கள் எப்படி செல்ல வேண்டும், அதை எதிரணி எப்படி தோற்கடிக்க வேண்டுமென்று சொல்லித்தந்து, “புரியுதா?” என கேட்க, அவனின் தலையசைவில், “குட் பாய் குட்டிக்கண்ணா. இந்த மாதிரி விளையாட்டுதான் தெரிஞ்சிக்கணும். மூளை சுறுசுறுப்பாயிருக்கும். சூட்டிங் கேம் மாதிரி வர்றது ஒருவகையில் வன்முறையைத் தூண்டும். உங்களுக்கு அதெல்லாம் சரிவராது” என்க, அவனோ புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
“இப்பவும் சிரிப்புதானா? வீட்டுல உங்களைப் பார்த்ததும் என்ன சொல்லப் போறாங்களோன்னு மனசெல்லாம் திக்திக்னு அடிக்குது.”
“மனசு எங்கயிருக்கு?” என்றான் அவளின் மீதான ஆர்வத்தை உள்ளடக்கி.
யோசிக்காது பட்டென்று, “இங்கதான்!” என தன் இதயப்பகுதியைக் காண்பிக்க, அவனோ, “இதுவா?” என்று அங்கு கைவைக்க... அவனின் ஸ்பரிசம் உணர்ந்த நொடி இதயத்தின் துடிப்பு இருமடங்காக, உடலின் அனைத்து பாகங்களும் சிலிர்த்தடங்க, மூளையின் எச்சரிக்கையில் அவன் கையை வேகமாகத் தட்டிவிட்டு, “எ..என்ன பண்றீங்க? இதெல்லாம் தப்பு. பொண்ணுங்க மேல கை வைக்கக்கூடாது” என்று படபடப்பை மறைத்து நிதானமாக புரியவைக்க முயன்றாள்.
‘பொண்டாட்டி மேல கை வைக்கலாம்’ என்றான் மனதினுள். அவளின் பேச்சு, பயம், ஜாக்கிரதை உணர்வு, அருகாமை என்று ஒவ்வொன்றாய் ரசித்திருக்க, கணவனின் தெளிவான மனநிலை உணராமல் அவளுமே அவ்வருகாமையை தனக்குள் செலுத்திக் கொண்டிருந்தாள்.
“ஏய் பூரணி! உள்ள என்ன செய்யுற?” தாயின் கதவு தட்டும் சத்தத்தில் இனிமைகள் தொலைய, பாதியளவு கதவு திறந்து, “தலைவலின்னு சொல்லிட்டுத்தானம்மா வந்தேன்” என்றாள் சிறு எரிச்சலில்.
“உன் அறைக்குள்ள வேற ஒரு சத்தம் கேட்டுச்சி. யாரது?” என்றார் அதட்டலாக.
“ஸ்பீக்கர்ல போட்டு போன் பேசிட்டிருந்தேன்மா. அந்த சத்தமாயிருக்கும்.”
“தலைவலின்னுட்டு போன் பேசினா சரியாகிருமா? படுத்துத் தூங்கு” என்று சத்தம் போட்டார்.
“சரிம்மா. எதுவும் வேலையிருந்தா மட்டும் எழுப்புங்க” என்று கதவைச் சாற்றி உள்ளே செல்ல, “தாலிகட்டின புருஷனை இப்படி கள்ளத்தனமா பார்த்துக்க வேண்டிய கொடுமையை என்னன்னு சொல்றது” என புலம்பியபடி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள். இப்படிச் செய்வது தப்பு போலவும் தோன்ற கண்கலங்கியது.
அவளையே கவனித்திருந்தவன் அவள் நிலையைக் கணித்து, ‘உன்னோட கஷ்டம் புரிந்தும், ஒரு பொண்ணு வாழ்ற சாதாரண வாழ்க்கையைக் கூட உனக்குக் கொடுக்காமல் இருக்கேன் பரி. கொஞ்ச நாள்தான் எல்லாத்தையும் சரி பண்றேன்’ என்றெண்ணி தற்பொழுது அவளின் அவஸ்தையை ரசிக்கவென்று, “பரி பாத்ரூம் வருது” என்றான் சுண்டுவிரலை நீட்டி.
“என்னது?” கிட்டத்தட்ட அலறி, “ஹையோ இதை யோசிக்கலையே” என்று சத்தமாகச் சொல்ல, அவனோ அவளின் அச்செயலில் வந்த சிரிப்பை அடக்கி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
வேகமாக வெளியே வந்தவள் தாயைப் பார்க்க, அவர் பக்கத்து வீட்டில் பேசிக்கொண்டிருப்பது தெரியவும் சற்று ஆசுவாசமாகி, அதே வேகத்தில் கணவனை அழைத்து மெல்ல வாசல் வந்து தாயைப் பார்க்க... “பரி என்...” முடிக்க விடவில்லை அவள். சட்டென்று நெருங்கி அவன் வாயை மூடி, “பேசாதீங்க வசீகரா. ப்ளீஸ் எனக்கே திக் திக்னு இருக்கு. இதுல உங்க வாய்ஸ் கேட்டுச்சின்னா நான் காலி” என்று வாசல் பார்த்தவாறு கிசுகிசுத்தாள்.