• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 13

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
13



தாயின் மிரட்டலில் அதிர்ந்தாலும் தன்னைப் பணிய வைக்கவே அப்படி சொல்கிறாரென்று தன் பயத்தை வெளியே காட்டாது, “அவள் உங்களோட பொண்ணுன்றது ஞாபகமிருக்கும் நினைக்கிறேன். இந்த பூச்சாண்டி காட்டுற வேலையெல்லாம் விட்டுட்டு உங்க ஆன்மீகத்துல போய் உட்காருங்க” என்று அலட்சியமாகவே பதிலளித்தான்.

“அந்தளவுக்கு நான் நல்லவள் இல்லை மகனே! வேணும்னா ஒரு சாம்பிள் காட்டவா” என்று தங்கை கணவரின் கைபேசியிலிருந்த வீடியோவை ஓடவிட, அதிர்ந்து போய் அவரைப் பார்த்தான் செந்தூரன்.

கல்லூரி முடித்து தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருக்கும் இடத்திற்கு நடந்து செல்லும் பவானியை நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனத்தில் கையுறை, முகமூடி என கிட்டத்தட்ட ஆணா பெண்ணா அடையாளம் தெரியா ஒரு உருவம் அவளை வேண்டுமென்றே இடித்துக் கீழே தள்ளிச் செல்ல, “அப்பா” என்ற அலறலுடன் கீழே விழுந்தவள் கையில் சிராய்த்து இரத்தம் கசிய, காலைப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தாள் பவானி.

மனம் துடிக்க அதைப் பார்த்தவனுக்கு, சற்று நேரத்திற்கு முன் நடந்ததென்று தங்கை காலையில் அணிந்த ஆடை காட்டிக்கொடுக்க, அதிகபட்ச கோபம் வந்த போதிலும் சிறிது நிதானித்தவன், “தற்செயலா நடந்த விபத்தை நீங்க செய்ததா பொய் சொல்றீங்கன்னு நான் சொல்றேன்” என்றான்.

“அப்படியா? அந்த ஆக்சிடெண்ட் பண்ணின ஆளே போன் பண்ணினா ஒத்துக்குவியா? அது பெண்கள் படிக்கிற கல்லூரி. அங்க ஆண்களை உள்ளே விடமாட்டாங்க. இருந்தும் ஒருத்தன் தைரியமா போயிருக்கான்னா பாரு” என்றார் தெனாவெட்டாக.

ரசிகா பவானியைப் பழிவாங்க செய்த விபத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி. எப்பொழுதும் ஏதோ ஒருவகையில் மகளைத் தொடர ஆள் வைத்திருந்தார். அதில் அவள் பிரிவுப் பெண்கள் சிலரும் உண்டு. அதில் யாரோ அனுப்பிய வீடியோதான் அது. யாராவது கேட்டால் கட்டுப்பாடு என்பார். அதற்குப் பெயர் அடக்குமுறை என்பதை அவர் மட்டுமே அறிவார். குழந்தையே வேண்டாம் என்றெண்ணியவருக்குக் குழந்தைகளாக வந்து பிறந்தார்களல்லவா, அதன் வினையை அறுவடை செய்கிறார்கள்!

“நம்பலைல்ல. இரு போன் பண்ணி ஸ்பீக்கர்ல போடுறேன்” என்றவர் யாருக்கோ அழைக்க, எதிரே எடுக்கப்பட்ட நொடி, “அம்மா நீங்க சொன்ன மாதிரியே செய்தாச்சி. இப்ப சந்தோஷமா இருக்கீங்கதான? இல்லை கைகால் எடுக்கிற மாதிரியிருந்தாலும் சொல்லுங்க செய்திரலாம்” என்றான் அவன்.

“இப்போதைக்கு இதுபோதும்டா கண்ணா. தேவைன்னா போன் பண்றேன்” என்று போனை வைத்து மகனைக் கண்டார்.

அந்நேரம் பவானி தன் இருசக்கர வாகனத்தை வாசலில் நிறுத்தி, முகத்தில் வேதனையுடன் வலது காலை சற்றுத் தாங்கியபடி நடந்து வந்தாள். அருகில் சென்று ஆறுதல் சொல்ல மனம் விளைந்தாலும், பழக்கமில்லா அப்பழக்கம் அவனுக்குத் தடா போட, அருகிலேயே பதில் வேண்டி தாயும் நின்றிருக்க அவளிடம் செல்லவியலாது தங்கையை தூரயிருந்தே ஆராய்ந்தான்.

அவளோ அண்ணனவனை சிறு ஏக்கத்தோடு பார்த்து அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ள, தன் மேலுள்ள கோபத்தில்தான் செல்கிறாள் என்றறியாது போனான் செந்தூரன்.

தான் ஒரு மருத்துவன்! தங்கைக்கு சிகிச்சையளிக்கவாவது அருகில் செல்ல வேண்டுமென்பதை மறந்திருந்தானோ! தங்கையைப் புரியும் இடத்தில் அவனும் அல்ல! புரியவைக்கும் இடத்தில் அவளும் அல்ல!

“இப்பச் சொல்லு? நான் சொல்லுற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? முடியாதா?” என்று கறாராகக் கேட்டார் ராஜேஸ்வரி.

“இப்படிக் கட்டாயப்படுத்தியேனும் அந்தப் பொண்ணை என் தலையில் கட்டணும்னு என்னயிருக்கு?” கிட்டத்தட்ட கோபத்தில் கத்தினான்.

‘பக்கத்துல இருந்தா அவளை எண்ணம்போல் பழிவாங்கலாமே! அவளுக்குக் கல்யாணம் மட்டும்தான் நடக்கும்’ என மனதிற்குள் நினைத்து, “காரணமெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. அந்தப் பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. நீ முடிவைச் சொல்லுறியா? இல்லை முடிச்சிரவா?” என்றார் திரும்பவும்.

“சே.. நீங்க பெத்த பொண்ணுன்ற பந்தபாசம் கூடவா இல்லை” என்றான் எரிச்சலாக.

“தொப்புள் கொடிக்கு முன்ன உள்ள தாலிக்கொடி பந்தத்தையே வேண்டாம்னு போனவள் நான். அதை மறந்துட்ட போல. சும்மா பேசி நேரத்தைக் கடத்தாம பதில் சொல்லு?” என்று பிடிவாதமாக நின்றார்.

“சரி நான் சம்மதிக்குறேன். இன்னொரு முறை பவி மேல சின்னதா கீறல் பட்டாலும், அப்புறம் ஒரு பொண்ணு உங்களை உள்ளூரில் நாறடிச்சிருக்கா. நான் அதை உலகத்துக்கேக் காட்டிருவேன். அப்புறம் நீங்க காலம் முழுக்கக் களிதான் திங்கணும்” என்றான் பதில் மிரட்டலாக.

“அந்தப் பொண்ணாலதான்டா உன்கிட்ட இப்படிப் பேச்சு வாங்க வேண்டியிருக்கு. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சிப் பழி தீர்க்குறேன்” என்று கிளம்ப, செல்லும் அவரை வன்மமாகவே முறைத்திருந்தான் செந்தூரன்.

“என் தங்கச்சியை இரத்தக் கறையோட பார்த்தப்ப உள்ளுக்குள்ள ரொம்பவே வலிச்சது. ஆனா, அறுதலா பேசக்கூட முடியலை. எதாவது சொல்லுவேன்னு என் முகத்தைப் பார்த்த பிள்ளைக்கு ஏமாற்றம் மட்டும்தான் கொடுத்திருக்கேன். குறைந்தபட்சமா வைத்தியம் பண்ணக் கூட அவள் பக்கத்தில் போகலை. அவளுடைய பார்வைக்கான அர்த்தம் அப்ப எனக்குத் தெரியலை. அப்பன்னு இல்லை நிறைய தடவை என்னைப் பார்க்கிறதுக்கு அர்த்தம் புரியலை. அவள் என்னை விட்டுப் போனதும் நிதானமா யோசிச்சா, எனக்கே என்மேல கோபம் கோபமா வருது. ரொம்ப செல்ஃபிஷh இருந்திருக்கேன்ல?”

அன்பழகிக்குப் புரிந்தது. ரசிகா செய்ததைத் தனதாக்கி மிரட்டியிருக்கும் மாமியாரை என்னவென்று சொல்வாள்.

“அதை விடுங்க செந்தூரன். நடந்ததை மாற்ற முடியாது. நடக்கிறது நல்லதா நடக்கட்டுமே. சரி கட்டாயக் கல்யாணம்னாலும் உங்களுக்கு உங்க மனைவியைப் பிடிக்குமா?” என கேட்டார் டாக்டர்.ரஹ்மான்.

“கல்யாணத்தப்ப பிடிக்காது டாக்டர். ஆனா, அந்த மண்டபத்துல அத்தனை பேர் முன்ன என் கண்ணைப் பாருங்கன்னு அழுத்தமா சொல்லி பார்க்க வச்சா பாருங்க, அந்தக் கண்ணுல ஏதோ இருக்கு டாக்டர். அந்தத் தைரியமும், அந்தக் கண்களும் அவ்வளவு பிடிச்சது. ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன்னு வச்சிக்கலாம்” என்றவன் இதழ்கள் புன்னகையை உதிர்க்க, அன்பழகியோ ஆவென பார்த்திருக்க, உள்ளுக்குள் நாணம் நர்த்தனமாடியது.

“என்னைப் பெத்தவள் செய்த வேலையில் பிடிவாதமா அவளை மறுத்துட்டேன். என் தங்கச்சிக்காக வந்து என்கிட்ட சண்டை போட்டப்ப அன்பழகிகிட்ட முழு சரண்டராகிட்டேன் டாக்டர். அன்பழகி! பெயரே எவ்வளவு அழகாயிருக்குல்ல? அன்பேயில்லாமல் வளர்ந்த எனக்கு அன்போட சேர்த்து அழகியும் கிடைச்சிருக்கா. அவள் மேல தப்பிருக்க வாய்ப்பில்லைன்னு தோன்றியது அப்பொழுதுதான் டாக்டர்” என்றான் ரசனையுடன்.

“வாவ் செந்தூரன்! உங்க மனைவியை ரொம்ப நேசிக்குறீங்கன்னு சொல்லுங்க?” என்று ஊக்கப்படுத்தினார்.

“எனக்கு எல்லாமே அவள்தான் டாக்டர். ஆனா, இதுவரை அவள்கிட்டச் சொன்னதில்லை. தூரத்துல இருந்து பார்த்துக்குவேன்” எனும்பொழுது அன்பழகிக்குக் கண்கலங்கிவிட்டது. ‘இவ்வளவு அன்பை வைத்துக் கொண்டுதான் அன்று அப்படி நடந்து கொண்டானா?’ அந்நேரம் தன்னைவிட கணவன் எத்தனை துடித்திருப்பான் என்ற எண்ணமே அவளை வேதனையடையச் செய்தது.

“உங்களுக்கு அன்பழகியைப் பிடிக்கும் சரி. அவங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?”

“பிடிச்சதாலதான் டாக்டர் எல்லாத்தையும் மறந்து வாழக்கூப்பிட்டா. எனக்குதான் அவளோட வாழக் கொடுத்து வைக்கலை” என்றவன் குரலில் கரகரப்பு ஏற அன்பழகியின் கண்களில் கண்ணீர்த் துளிகள்.

“ஓகே ரிலாக்ஸ். இவ்வளவு பிடித்த மனைவியை ஏன் விவாகரத்து செய்யப்போறீங்க செந்தூரன்?”

“முன்ன என் தங்கைக்காகன்னா, இப்ப என் அன்பழகிக்காக சேர்த்தும் டாக்டர்” என்றான் ஒருவித மரத்தகுரலில்.

“புரியலை செந்தூரன்?” என்க, அன்பழகிக்கோ இன்னதென்று புரியா உணர்வு.

“திரும்பவும் அதே கொலை மிரட்டல். அப்ப பவியை சொன்னவங்க, இப்ப அன்பழகியையும் சேர்த்துக்கிட்டாங்க” என்று அனைவரையும் அதிர வைத்தான்.

“நிஜமாவா?”

“என் சார்பா எனக்கே தெரியாமல் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிட்டாங்க. என் தங்கை வந்து சண்டை போட்டப்பதான் விஷயமே தெரியும். என் அன்பழகியை வேண்டாம்னு மனதார நானே சொல்வேனா டாக்டர்? சொல்ல வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தினாங்க. அண்ணி உன்னைக் காதலிக்கிறாங்கன்னு பவி சொல்றா. அது எவ்வளவு பெரிய சந்தோஷம். அதுவரை அப்படியொரு சந்தோஷத்தை அனுபவிச்சதில்லை டாக்டர். ஒரு மனைவி கணவனைக் காதலிக்குறது பெரிய விஷயமில்லாமல் இருக்கலாம். ஆனா, எங்க விஷயத்தில் எல்லாமே தப்பும் தவறுமா, தகராறா போயிருந்ததே!”


“என் தங்கையை சமாதானப்படுத்தி, அன்பழகியோட சேர்த்து நாங்க மூணு பேரும் ஒண்ணாயிருக்க ப்ளான் செய்தா, என்னைப் பெத்தவள் வேறொரு ப்ளான் செய்து எல்லாத்தையும் உடைச்சிட்டா” என்று கோபத்தில் பல்லைக் கடித்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அதுவரை தாயின் மேல் கோபமிருந்தாலும் மனைவி கிடைக்க அவரே காரணம் என்பதால் பழையவற்றை மறந்திருந்தான். தங்கையிடம் மனைவியை அழைத்து வருவதாகச் சொல்லிவிட்டாலும் அதீத சந்தோஷத்துடன் சிறு பயமும் முட்டிக்கொண்டிருந்தது. பேப்பரைக் கிழித்துப் போட்டதால், கவர் இருக்க அதை எடுத்துப் பார்த்தவன் அதைக் காரணமாக்கி அவளைச் சந்திக்கச் செல்ல நினைக்க, அவனின் எதிரே வந்து நின்றார் ராஜேஸ்வரி.

அவரைக் கண்டதுமே காரணம் புரிய மனம் அதிர்ந்தது. நீண்ட வருடங்களுக்குப் பின் அவரை நேருக்கு நேராக இரண்டு முறைதான் பார்த்துப் பேசியிருக்கிறான். திருமணத்திற்கு சம்மதம் கேட்ட பொழுதும், திருமணத்தன்றும். அவரின் எந்த சந்திப்பும் தனக்குத் துன்பத்தையே கொடுத்ததை நினைத்தவனுக்கு இச்சந்திப்பு மாபெரும் அச்சத்தைக் கொடுத்தது. தன் பலவீனம் தெரிந்தவரல்லவா!

அப்பொழுதே அவனின் ஆசைகளையும், கனவுகளையும் புதைத்துச் சென்றுவிட்டார் ராஜேஸ்வரி.

“என் அன்பழகியைப் பார்த்து வாழக்கூட்டிட்டு வரலாம்னு ஆயிரம் கனவுகளோட ஆசையா கிளம்பின என்னை வந்து பார்த்தாங்க சாமியம்மா” என்றான் கோபம் குறையாது.

“பெத்த தாயை வாங்கன்னு சொல்ற நாகரீகம் கூட உன்கிட்ட இல்லைல? உன்னையெல்லாம் பிள்ளைன்னு பெத்த என்னைச் சொல்லணும்” என்று கத்த,

கைநீட்டி அவர் பேச்சைத் தடுத்தவன், “என்ன வேணும்?” என்றான் நேரடியாக.

“நீ உன் மனைவியை விட்டுப் பிரியணும். அதுக்கு முறையா விவாகரத்து வாங்கணும்” என்றார்.

அவரின் திடீர் வரவில் ஏற்கனவே யூகித்ததுதான் என்றாலும், “ஓ.. ஆனா ஏன்?” என்றான்.

“ஏன்னா? எனக்கு அவளைப் பிடிக்கலை.”

“முன்ன அவளைப் பிடிச்சதா சொன்ன ஞாபகம்?” என்றான் அழுத்தமாகப் பார்த்து.

“அது அவளைப் பழிவாங்க. இதுவும் அதுக்குதான்.”

“இவ்வளவு தைரியமா என் மனைவியைப் பற்றி என்கிட்டேயே பேசுறீங்களே. எப்படி?”

“உனக்குதான் உண்மை தெரிஞ்சிருச்சே. இனி மறைத்து என்னாகப்போகுது. அதான் நேரடியா வந்துட்டேன்” என்றார் திமிர் குறையாது.

“நான் மாட்டேன்னு சொன்னா பவியைக் கொல்லப்போறேன்னு சொல்வீங்க. அப்படித்தானே?” என்றான் அவனும் அதட்டலாக.

“ஒரு சின்ன திருத்தம் செந்தூ. கொலை செய்யப்போறேன் இல்லை போயாச்சி. அன்னைக்காவது நடந்து முடிந்தது, அதுவும் சின்ன அடியோட விடியோவா வந்தது. இன்னைக்கு நேரடி ஒளிபரப்பு பார்க்குறியா?” என்று கைபேசியில் ஓடிக்கொண்டிருக்கும் படத்தை அவனிடம் காண்பித்தவர், இன்னொரு சின்ன கைபேசியின் மூலம் சேகருக்கு அழைப்பு விடுத்து, “தம்பி எல்லாம் தயாராயிருக்கா?” என கேட்க,

“நீங்க சொன்னா அடுத்த வினாடி தட்டிரத் தயாராயிருக்காங்க அண்ணி” என்றதும், “லைன்ல இருங்க பையன்கிட்ட கேட்டுச் சொல்றேன்” என்றவர், “என்ன கேட்டுச்சா?” என்க,

அதிர்ந்து விழித்த கண்களிலிருந்து வந்த கண்ணீரைத் தாண்டி அந்த வீடியோவைப் பார்த்திருந்தான் செந்தூரன். ஆள் நடமாட்டமில்லா இடத்தில் தனியாக நடந்து வந்த பவானியை ஒரு வாடகைக் கார் பின் தொடர, கைபேசியில் யாரிடமோ பேசியபடி நடந்து வந்த தங்கையை நிறுத்த முடியாமல் பார்த்தவனுக்கு, உச்சக்கட்ட அதிர்ச்சியாய் அமைந்தது திடீரென தங்கையினருகில் வந்து நின்ற மனைவியைக் கண்டு. பயத்தில் இதயம் பலமடங்காய்த் துடிக்க தன் நெஞ்சை வருடியபடி அவர்களைப் பார்த்திருந்தான்.

“அண்ணி பாப்பா கூட உங்க மருமகளும் வர்றா” என்றார் சேகர்.

“அட அட அட கடவுளோட கருணையே கருணை. சாம்பிள்கு இரண்டு பேர்ல யாராவது ஒருத்தரை லேசா தட்டச் சொல்லுங்க தம்பி” என்றதும் சேகர் சைகையில் ஓட்டுனரிடம் ஏதோ சொல்ல,

அதைப் பார்த்திருந்தவனோ, “இல்லை வேண்டாம். அவங்களை எதுவும் செய்யாதீங்க” என்று கத்த, அவர்கள் பின்னால் வந்த கார் பெண்களை நோக்கி வேகமெடுக்க, “நான் டைவர்ஸ் பண்ணிருறேன். நிஜமா டைவர்ஸ் பண்ணிருறேன். அவங்களை விட்டுருங்க” என்று கத்தினான்.

“தம்பி நிறுத்தச் சொல்லுங்க” என்றதும் சேகர் செய்த சைகையில் அவர்களை உரசினாற்போல் கார் நிற்க பெண்கள் இருவரும் பயந்து விலகிப்போனார்கள்.

“ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு மிருக குணம் இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, உங்களைப் பார்த்தா மிருகம் அசுரனா நிற்கிற மாதிரியிருக்கு. ஒரு நாள் இல்லை ஒரு நாள் நானே உங்களைக் கொன்னுருவேனோன்னு பயமாயிருக்கு. பெத்த பொண்ணைப் போய்... சே..” என்றான்.

அவனை அலட்சியமாகப் பார்த்து, “நீ என்ன வேணும்னாலும் பேசு. சாபம் விடு. அதெல்லாம் என்னை எந்த வகையிலும் பாதிக்காது. பார்த்துப் பார்த்து கட்டிக்காத்த கௌரவமே போச்சாம். அடுத்து எது நடந்தா எனக்கென்ன? என்னைப் பொருத்தவரை அந்த அன்பழகி நிம்மதியா இருக்கக்கூடாது. உன்மேல் உள்ள நம்பிக்கையில்தான விவாகரத்து வேணும்னா நேர்ல வந்து கையெழுத்து வாங்கிக்கச் சொன்னா? அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிஞ்சிட்டா? துடிப்பாள்ல? அது வேணும் எனக்கு” என்றவர் குரலில் அத்தனை குரோதம்.

ஹ்ம்.. என மூச்சை இழுத்துவிட்டவன், “அவசரப்பட்டு அந்தப் பேப்பரைக் கிழிச்சிட்டேன். நீங்களே எனக்கு பேப்பர் ரெடி பண்ணித்தாங்க” என்றான்.

“சீக்கிரமே உன் கைக்கு வந்து சேரும். நீ பேசுற பேச்சுல அவள் கதறித்துடித்துக் கண்ணில் தண்ணீர் வர்றதை நான் பார்க்கணும். அதுவும் நேரடியா. அதாவது இப்ப காண்பிச்சேனே லைவ் ஷோ. அதைப்போல” என்றார் வெறிகொண்டு.

“சரி நீங்க ரசிக்க வீடியோவும் எடுக்குறேன்” என்றான் விட்டேற்றியாய்.

“ம்.. நல்லது. இதை மாத்தணும்னு யோசிக்காத செந்தூ. அப்புறம் கொலை செய்ய நானும் யோசிக்கமாட்டேன். இன்னும் இரண்டு மூணுநாள்ல விவாகரத்துப் பேப்பர் உன் கைக்கு வந்திரும்” என்று சொன்னாற்போல் மூன்றாம் நாள் அவன் கையில் கிடைத்தது.

தங்கையிடம் மனைவியை அழைத்து வருவதாகச் சொன்ன மறுநாள் காலையில் நடந்ததை நினைக்க நினைக்க நெஞ்சம் கொதித்தது. விவாகரத்து என்ற வார்த்தையையே வெறுப்பவன். அதைத் தானே செய்வானா? ஏனோ கையெழுத்திடாமல் அனுப்பியதே அவள் மனதைச் சொல்ல, மனதில் ஒரு நிறைவு அவனிடத்தில். அவ்விடத்தில் உணர்ச்சிவசப்பட்டு அவள் கையெழுத்திட்டிருந்தால், தங்கள் நிலை? இல்லையில்லை தன் நிலை? மனதின் ஆசை அலறித்துடித்ததை அவன் மட்டுமே அறிவான்.

தாயின் வெறியால் மனதின் ரணத்தை மறைத்துக் கையெழுத்திட்டு, மனைவியின் வீடு சென்று அவளையும் பேசிக் காயப்படுத்தி அழவைத்து, அதைத் தாய் பார்க்கும்படி செய்து, மனைவியின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டு, அவளின் வீட்டைவிட்டு வெளியே வந்தவன் கண்களில் கண்ணீர்த் துளிகள். சட்டையிலிருந்த மைக்ரோ கேமராவைப் பிய்த்துத் தூக்கியெறிய, அங்கேயே கதறியழத் துடித்த மனதை அடக்கி, வாழ்க்கையில் அத்தனையையும் இழந்து நின்று கொண்டிருந்தான் செந்தூரன்.

வலதுபுறமிருந்து உருண்டு விழுந்த கண்ணீர்த் துளியைத் துடைத்தபடி, “ஐம் சாரி அன்பழகி. நீ சொன்ன மாதிரி நல்ல ஆண்மகனா நான் இல்லை. கண்ணீரை மட்டுமே கொடுத்துட்டிருக்கிற நான் உனக்கு வேண்டாம். யார் யாருக்காகவோ.. தெரிந்தே உனக்கு பாவத்துக்கு மேல பாவம் செய்யுறேன். இன்னொரு முறையும் மன்னிப்புன்ற தண்டனையை எனக்குக் கொடுத்திரு. ஹ்ம்.. இன்னொருத்தி, வீட்டிலிருந்து என்ன செய்யக் காத்திருக்காளோ!” என்ற புலம்பலே அவனுள்.

தங்கைக்குத் தாயாய் மாறியவளை, தாரமாய் உரிமை கொண்டாட முடியாத சூழ்நிலையை அறவே வெறுத்தான். அவளிடம் பேசிட ஆசை! அவளைக் கொஞ்சிட ஆசை! அவளைத் தன்னுடனே தன் கையணைவில் வைத்திருக்க ஆசை! சேயாய் மாறி அவளின் அன்பைப் பெற ஆசை! எண்ண எல்லைகள் விரிந்தது. கானல் கனவுகள் என்றும் பலிப்பதில்லை என்று அறிந்தவனாகிற்றே!

“வித்தியாசமான தாய்! போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கலாமே செந்தூரன்?” என்றார் டாக்டர்.ரஹ்மான்.

“கொடுக்கணும்னு தோணும். ஆனா, மனசு வந்ததில்லை டாக்டர். பெற்ற தாய்! அதுவும் ஊரே மதிக்கும் பெரிய மனுஷp. அவங்களை என் கையாலேயே கொல்லணும் அளவு கோபமிருக்கு. என்னால எதுவும் செய்ய முடியலை. நான் யோசித்து ஒரு அடி எடுத்து வைக்குறதுக்குள்ள, அவங்க பத்தடி எடுத்து வைக்குறாங்க. படத்துலதான் டாக்டர் ஹீரோயிஸம்லாம். நிஜத்துல நான் ஒரு கோழை. எதுக்கும் உதவாத கையாலாகாதவனா நிற்கிறேன். எப்பவும் ஹீரோவைவிட வில்லனுக்குதான் மூளை அதிகம் வேலை செய்யுமாம். என்னைச் சேர்ந்தவங்களை வச்சி ரிஸ்க் எடுக்க விரும்பலை.”

“என்னைப் பழிவாங்குறதா நினைத்து கல்யாணக் கோலத்துல வந்து நிற்கிறா என் தங்கச்சி. செத்துட்டேன் டாக்டர்” என்றதில் அன்பழகியின் உடலும் உள்ளமும் அதிர்ந்து கண்கள் கலங்கியது.

“அடித்துக் கேட்கிற உரிமை கூட இல்லாமல் ஆக்கிட்டா. அங்கயிருந்தா அம்மான்ற பெயர்ல இருக்கிற மிருகம் அவளை எதாவது செய்துரக்கூடாதுன்னுதான், வாழ்த்தி அனுப்பிட்டேன். போகும்போது என்னை ஒரு பார்வை பார்த்தாள் பாருங்க ஜென்மத்துக்கும் மறக்காது டாக்டர்” என்று கணவன் சொன்னதை அன்பழகி சொல்ல,

அதுவரை அழுகையை அடக்கியிருந்த பவானி சத்தமிட்டு அழுதபடி, “நீங்க சொன்னது சரிதான் அண்ணி. நான்தான் என் அண்ணனை புரிஞ்சிக்காம போயிட்டேன். எனக்காகன்னே வாழ்ந்தவங்களை நானே உயிரோட கொன்னுட்டேன். எங்கம்மா செய்ததை விட நான்தான் அண்ணி அண்ணனை வார்த்தையாலயும், செய்கையாலயும் வதைச்சிட்டேன். எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. நான் செய்ததெல்லாம் பெரும் பாவம் அண்ணி” என்றாள் அழுகையுனூடே.

பவானியின் அழுகையை வேடிக்கை பார்த்த அன்பழகிக்கு கடைசியாக கணவன் சொன்ன வார்த்தை மனதில் வந்தது. “இதுக்கப்புறம் அவங்களை விடுறதாயில்லை டாக்டர். போலீஸ் கேஸ்னு போகக்கூடாதுன்னு நினைத்த என்னை அவங்களே விவாகரத்துன்ற பெயர்ல கோர்ட் ஏத்துறாங்க. இந்த விவாகரத்தை விவகாரமா மாத்தி, அவங்க வாழ்க்கையை மாத்தி அமைக்கப்போறேன். அப்பதான அவங்க பையன்றதை ஒத்துப்பாங்க.”

“தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயணும்ன்றது காலங்காலமா பெரியவங்க நம்ம மனசுல விதைச்சது இல்லையா டாக்டர்? சீக்கிரம் பிரச்சனையை முடிச்சிட்டு என் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கப்போறேன்” என்றவன் குரலில் அதுவரையிருந்த வருத்தம், வேதனை, துக்கம் அனைத்தும் பறந்து போய் பேச்சில் தெளிவு, உடலில் நிமிர்வு.

நேருக்கு நேர் தாக்கும் சத்ரியனை விட, சாணக்கியத்தனத்தால் மட்டுமே தன் தாயை அடக்க முடியும் என்பதை செந்தூரன் உணர்ந்திருந்தானோ!

“பெஸ்ட் ஆஃப் லக் செந்தூரன். அன்பழகியோட சேர்ந்து நீங்க சந்தோஷமா வாழ்றதை டாக்டராயில்லாம அன்புவின் நலம் விரும்பியா நான் பார்க்கணும். இப்ப மனசு ரிலாக்ஸ் ஆகிருச்சா?” என்றார்.

“எஸ் டாக்டர்.”


“அப்ப மெல்ல எழுந்திரிங்க” என்றதும் அன்பழகி அவரிடம், “இங்க நடந்த எதுவும் எனக்குத் தெரியும்னு அவங்ககிட்ட சொல்ல வேண்டாம் சார். தொடர்ந்து நீங்களே கவுன்சிலிங் கொடுத்து இவங்க பிரச்சனையிலிருந்து முழுசா வெளிவர வையுங்க. எனக்காக செய்யுங்க சார்” என்றாள் கண்ணீருடன்.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அவள் கண்ணீர் துடைத்து, “ஓவர் லவ்ஸ் அன்பு உனக்கு. கண்ணீரெல்லாம் குடம் குடமா வருது. நீ சார்னு கூப்பிட்டாலும் உன் அப்பா ஸ்தானத்துல இருந்துதான் உன்னைப் பார்க்கிறேன். என் பொண்ணுக்காக இதைக்கூட செய்யமாட்டேனா? இது என் தொழிலும் கூட அன்பு. உன் செந்தூரன் உன்னை எப்போதும் விடமாட்டார்” என ஆறுதலளித்து அனுப்ப, அவருக்கு நன்றியுரைத்து ஆதிகேசவனிடம் வந்தவள் கண்ணீர் மல்க கையெடுத்துக் கும்பிட்டாள்.

“அச்சோ சிஸ்டர்! என்னதிது? முதல்ல கையை இறக்குங்க” என்று பதறினான்.

“இதைவிட என் நன்றியை எப்படிச் சொல்றதுன்னு தெரியலை அண்ணா. நட்புல உங்களைப் போல் மனிதர்களும் உண்டுன்னு முதல்முறை கண்ணாரப் பார்க்குறேன். ஒருத்தனுக்கு உங்களை மாதிரி நட்பு கிடைச்சா போதும். வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகளைக் கடந்து சாதிப்பாங்க. நீங்க எப்பவும் நல்லாயிருக்கணும் அண்ணா” என்று வெளியே வந்துவிட்டாள். அதேபோல் தன் நினைவிலிருந்தும்!

“இப்ப சொல்லு பவிக்குட்டி? என்னை மனசுல சுமக்குற என் கணவனுக்கு ஆதரவா பேசுறதில் தப்பில்லையே?” என்றாள் நிமிர்வாக.

“ஐயோ! நான்தான் அண்ணி தப்பு. நான் மட்டும்தான் தப்பு. அண்ணனே விலகிப்போனாலும் நான் நெருங்கிப் போயிருக்கணும். அப்படிப் போயிருந்தா எங்களுக்குள்ள இடைவெளி வந்திருக்காது. என் அண்ணன் பாசம் எனக்கு முழுசா கிடைச்சிருக்கும்” என்றாள் தேம்பலுடன்.

“உனக்கொண்ணு தெரியுமா பவிக்குட்டி?” என்றதும் அண்ணியவள் முகம் காண, “நமக்கு பாதுகாப்புக்கு ஆள் வைச்சிருக்காங்க உன் அண்ணா. நீயோ நானோ எங்கேயிருக்கோம் என்ன செய்யுறோம்னு தெரியும். ஆனா, உங்கண்ணனைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அவங்க டாக்டர்ல டபுள் டிகிரின்னே இன்னைக்கு கோர்ட்ல சொல்லும் போதுதான் தெரியும்” என்றாள் வருத்தமாக.

“அப்படி சொல்லித்தான அண்ணி கல்யாணம் நடந்ததே?” என்றாள் குழப்பமாக.

“ஆனா, மண்டபத்துல வச்சி வேற மாதிரி சொல்லி அதை வைத்தும் பிரச்சனையாச்சில்லடா. அதுதான் தொழில்னு நினைச்சிட்டோம்.”

“சாரி அண்ணி. நான் அப்பவே இதை உங்களுக்கு விளக்கியிருக்கணும். ஏனோ தெரியலை எல்லாம் மாறி...”

“சரிவிடு. ஆமா டாக்டர் சேல்ஸ்மேனா மாறின கதை சொல்லு? ஏன் ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணலை?” இனியாவது கணவனைப் பற்றி தெரிந்துகொள்ளும் எண்ணத்துடன் கேட்டாள்.

“சென்னையில் கவர்ன்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல குழந்தைகளுக்கான பிரிவுல வேலை செய்தாங்க அண்ணி. அப்படியே அவங்க நண்பர்கள் துணையோட இங்க திருவள்;ர்ல ஆரம்பித்ததுதான், பவானி குழந்தைகள் நல மருத்துவமனை!”

“ஹேய்! பவானி மருத்துவமனையா? அது நான் ஒர்க் பண்ற ஹாஸ்பிடலாச்சே? அதுவுமில்லாம அது குழந்தைகள் நல மருத்துவமனை கிடையாது. மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல். அந்த ஹாஸ்பிடல் ஓனர் பெயர் வேறல்ல சொன்னாங்க? ஏதோ...” என்றாள் குழப்பத்துடன்.

“செல்லத்துரை! இல்லையா அண்ணி” என்று முடிக்க,

“எஸ் கரெக்ட்” என்றாள் அன்பழகி.

“செல்லத்துரை எங்க அப்பா பெயர். ஹாஸ்பிடல் ஓபன் செய்து நாலு வருஷமாகுது. அண்ணன் ஓனர்னு யாருக்கும் தெரியாது. ஹாஸ்பிடல் ஓபன் அப்பதான் அங்க போயிருக்கேன். அதுக்கப்புறம் நானும் போனதில்லை.”

“அப்ப ஏன் இப்படியிருக்காங்க? டாக்டர்.ரஹ்மான் எங்களுக்கெல்லாம் சீனியர். அவருக்கேக் கூடத் தெரியலையே எப்படி?” என்றாள்.

“நல்லா யோசிச்சீங்கன்னா மூணு வருஷத்துக்குப் பிறகு வந்தவங்கதான் நீங்க எல்லாருமா இருக்கும். அதுக்கும் முன்ன சென்னை, திருவள்ளூர் டாப் லெவல் ஹாஸ்பிடல்ல பவானியும் ஒண்ணு” என்றாள்.

“ஓ.. ஆனா இப்பவும் நல்லாதான் போகுது. ஆனா, பாப்புலாரிட்டி கம்மியாயிருக்கே ஏன்?” என கேட்டாள்.

“ஹாஸ்பிடல் ஆரம்பித்த ஒரு வருஷத்துல ஹாஸ்பிடல்ல ஒரு பிரச்சனையாகி அது கேஸாகிருச்சி. என்ன ஏதுன்னு எனக்கே முழு விவரம் தெரியலை அண்ணி. அதுக்குப் பிறகுதான் மல்ட்டி ஸ்பெஷாலிட்டியா மாத்தியிருக்கணும். அந்தக் கேஸிலிருந்து வெளி வந்த பிறகும் அண்ணன் ஹாஸ்பிடல் போகாம, ஹாஸ்பிடலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாத மாதிரி, இந்த வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு அண்ணன்கிட்ட சொல்ல பயம். சொல்லியிருந்தா எனக்காகவாவது அண்ணன் ஹாஸ்பிடல் போயிருப்பாங்கன்னு இப்ப தோணுது அண்ணி” என்றாள் குற்றவுணர்வுடன்.

“அப்படின்னா இப்ப ஹாஸ்பிடல் யார் தலைமையில் நடக்குது?”

“ஹாஸ்பிடல் ரன்னிங்ல இருக்குன்னே நீங்க சொல்லிதான் அண்ணி தெரியுது. வீட்டிலும் அது பற்றின பேச்சு இல்லைன்றதால அண்ணன் வித்துட்டாங்க நினைச்சேன்” என்றாள்.


“பவானியை எப்படி விடுவாங்க பவிக்குட்டி? ஆனாலும், ஒரே நாள்ல ஓவர் அதிர்ச்சியா கொடுக்குறீங்கப்பா. மர்மமான மனிதர்களடா நீங்கள்” என்றாள் வியப்பு மாறாது.
 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
Un aaathala nalla vachi sei thala
Marmam neraya irukuthe
Lovely update dear
சாமியார அப்படி சொல்ல கூடாது. கன்னத்துல போட்டுக்கங்க:love:

நன்றி.
 
Member
Joined
Sep 12, 2024
Messages
35
நேசத்துல மர்மமான மனிதர்கள் தான் நீங்க
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top