- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
13
கிளம்பும் நேரம் நெருங்கியதால் அவந்திகாவின் மறுபுறம் ஒரு கையை ஊன்றியிருந்தவன், “ஏய் அழகி. இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னியே அது நிஜமா?” என்றதும் எதைச் சொல்கிறான் என புரியாமல் விழித்தவளிடம், “நான் உரிமை எடுத்துக்கவா?” என்றதும் அர்த்தம் புரிய, வெட்கத்தில் முகத்தை எங்கு வைப்பதென்று திணறிக் கொண்டிருந்தவளை, ரசித்துக் கொண்டிருந்தவன், “முகம் புதைக்க இடம் தேடுறியா அழகி? உனக்கே உனக்காகன்னு என் மார்பு இருக்கு பாரு” என்று சட்டையை விலக்கி நெஞ்சு நிமிர்த்திக் காட்டினான்.
அந்த அழுக்கனின் கவர்ச்சியில், அந்த அழகியின் மனம் சலனமடைய ஆரம்பித்தது. “ப்ச்... கார்த்திக். என்ன பேச்சிது?” என்று அதட்டினாலும் அவன் மார்பில் விழிமூடி சாய்ந்து கொள்ள, மனம் துடித்தது என்னவோ உண்மைதான். உடலிலும் ஏதோ ஒரு இன்ப உணர்வு ஏற்பட, அந்த அவஸ்தையை கண்மூடி அனுபவித்தாள்.
அவளின் அவஸ்தையை கண்களால் பருகியபடி, தொடத்துடித்த தன் கையை அடக்கி, “அட பார்றா! நீ சொன்னதுல ஒரு பங்காகக் கூட செயல் முறையில் காட்டலதான. அப்புறமென்ன கேள்வி?” என்றதும் இதழோர சிரிப்புடன் கண்திறந்தவளின், நெற்றியில் முத்தமிட்டு, கன்னம் இறங்கிய முத்தத்தை இதழில் தொடரவிடாமல், அவந்திகாவின் கிறங்கல் பார்வை தடுக்க, அவளை அதிகம் சோதிக்க விரும்பாமல், வயிற்றில் இருந்த தையலில் முத்தமிட, அவனையும் மீறி ஒரு சொட்டு கண்ணீர் காயத்தில் விழுந்தது.
இந்த ஒரு சொட்டு உப்பு நீரே, அவளின் ஒட்டுமொத்த காயங்களுக்கும், மருந்தானதுதான் விந்தை.
அவனையே பார்த்திருந்தவள் அவனின் காதலில் கரைந்து, “கார்த்திக் ப்ளீஸ் வேண்டாம். நீங்க கண்கலங்குறதை என்னால பார்க்க முடியல. எல்லாத்தையும் மறந்திடலாம் கார்த்திக்.”
“என்னையும் சேர்த்து” என்றான் இறுகிய குரலில்.
“கார்த்திக்” என்று அதிர்ந்து அலறினாள்.
“உனக்கு நான் பொருத்தம் இல்லடா. நீ என்னை மறந்திரு” என்றான் மனதைக் கல்லாக்கி.
“இதுக்கு நீ செத்துப் போன்னு சொல்லியிருக்கலாம் கார்த்திக்” என்றாள் அடிபட்ட மனதுடன் கண்கலங்கியபடி.
“ச்சீ...லூசு என்ன பேச்சி பேசுற?”
“அப்ப நீங்க மட்டும் அப்படி சொல்லலாமா?” என்றவள் கண்கள் கண்ணீரைப் பொழிய,
“ஓகே. நான் இனி அதைப்பற்றி பேசலை” என்று அவளை சகஜமாக்க நினைத்தவன், “நீ இந்த நிலையில இருக்கும்போது தப்பு பண்ணலாம்னு, எந்த தைரியத்துல சொன்ன அழகி” என்றான் கிண்டலாக.
“ப்ச்... கார்த்திக் திரும்பவும் முதல்ல இருந்தா?” என சிணுங்கினாள்.
“ஹ்ம்... எனக்கு கூடத்தான் என்னோட அழகியை கொஞ்சம் அழுக்கு பண்ணனும்னு தோணுது. சரிவிடு இன்னொரு நாள் மாட்டாமலா போயிருவ” என்றதும் செல்லமாக அவனை அடித்தவள் முகம் வெட்கச்சிவப்பைக் கொண்டது.
அவளிடமிருந்து எவ்வாறு விடைபெறுவது என்று யோசித்துக் கொண்டிருக்க, தாய் கதவைத் தட்டி உள்ளே வந்து நேரமானதை நியாபகப்படுத்தினார்.
‘அதுக்குள்ள ஒருமணி நேரமாகிருச்சா?’ என தோன்றியது கார்த்திக்கிற்கு.
“அவந்தி ஹாஸ்பிடல்லயிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும், அம்மாவோட நம்ம வீட்டுக்குப் போயிடுறியா? நானும் உன்னைப்பற்றின டென்சன் இல்லாமல் இருப்பேன்.”
“ம்கூம்... நான் எங்க வீட்டுக்கே போறேன்.” தாய், மகன் இருவருமே கேள்வியாய் பார்க்க, “நம்ம வீட்டுக்கு வரணும்னா, நீங்க எனக்கு முறைப்படி தாலிகட்டி, உங்க மனைவின்ற உரிமையோட கூப்பிடுங்க. நான் வர்றேன்” என்றாள் தீர்மானமாக.
அவந்திகாவின் வார்த்தையிலுள்ள உணர்வை உணர்ந்த ஈஸ்வரியோ நியாயமென எண்ணி அமைதியாகினார்.
“என்னமா இப்படிச் சொல்ற? இப்ப அம்மாவாலயும் அங்க வரமுடியாதே. அவங்க ஆட்டம் அதிகமாகி, உன்னை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சா, என்ன பண்றது? உங்க மாமாவால எதையும் தடுக்கவும் முடியாது. ஏற்கனவே கல்யாணத்துக்குன்னு டைம் வேற கொடுத்திருக்கான்னு அம்மா சொன்னாங்க. அது நடக்காதுன்றது வேற விஷயம். இருந்தாலும்...”
“அதனாலதான் சொல்றேன். நீங்க வந்து என்னைக் கூப்பிட்டு வாங்கன்னு. அவனுக்கு என்ன தைரியமிருந்தா கழுத்...” முழுமையாக முடிக்க முடியாமல் சட்டென்று அழுதாள்.
மீதி வார்த்தைகளைப் புரிந்தவன், “அவந்தி வேண்டாம். உன்னோட ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும், அந்த கௌஷிக்கை பதில் சொல்ல வைக்கிறேன். இன்னைக்குத்தான் ஆபரேஷன் முடிஞ்சிருக்கு. இவ்வளவு நேரம் உன்னோட பேசிட்டிருந்ததே கில்டியா இருக்கு. இனியும் தையல் பிரிஞ்சி இன்னொரு வலி வேண்டாம். நீ உங்க வீட்டுக்கே போ! நான் கண்டிப்பா வருவேன் உனை மீட்க.”
அந்தோ பரிதாபம் விதியின் வாயில் சிக்கி, கார்த்திக்கால் வரமுடியாமல் போகப்போவதை அறிவானா!
“இப்போதைக்கு நர்ஸ் வச்சிக்கலாம். அதுவும் நம்பிக்கையானவங்களா வேணும். அந்த கௌஷிக்கோட ஆள் யாரும், அவந்தியை அண்டக்கூடாது. என்ன பண்ணலாம்?” என்ற யோசனையில் இருந்தவர்களைக் கலைக்கவென்று இல்லை காப்பாத்தவென்று வந்தது அந்த போன்.
அவந்திகாவின் போனை எடுத்த ஈஸ்வரி, “வைஷ்ணவி யாரு? ஓ... அந்த சிறுவாபுரி பொண்ணா” என்று மருமகளைக் கேட்டார்.
“ஆமா அத்தை அவள்தான்” என போனை வாங்கி நலம் விசாரிக்க, சற்று நேரத்திற்கெல்லாம் அவளிடமிருந்து போனை வாங்கிய கார்த்திக், “ரொம்ப பேசக்கூடாது. ரெஸ்ட் எடு. நான் பேசிக்கறேன்” என்று வைஷ்ணவியிடம், “என்னமா இந்த நேரத்துல போன் செஞ்சிருக்க?” என கேட்டான்.
“நீங்க எப்படி அங்க? அவளோட? உங்களை போலீஸ் தேடுறதா பேப்பர்ல பார்த்தேனே. என்ன சார் நடக்குது அங்க? எனக்கு ஒண்ணும் புரியல? அவந்தி வீட்ல நீங்க எப்படி?” என சந்தேகத்திற்கு மேல் சந்தேகமாக கேட்டாள்.
“அதெல்லாம் இப்ப பேச நேரமில்லமா. இப்ப அவந்தியை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கு” என்றான்.
“ஏன்? என்னாச்சி?” என்று பதறியவளிடம் நடந்த விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்லி, “இப்போதைக்கு நம்பிக்கையான ஒரு ஆள் வேணும் அவந்தியைப் பார்த்துக்க.”
“சார் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க. திரும்பக் கூப்பிடுறேன்” என்றவள் சொன்ன நேரத்தில் திரும்ப அழைத்து, “சார் என்னோட தங்கச்சி ஒரு டாக்டர். இப்பதான் ட்ரெயினிங் முடிச்சி போஸ்டிங்காக வெய்ட் பண்ணிட்டிருக்கா. தற்சமயத்துக்கு ஒரு ப்ரைவேட் ஹாஸ்பிடல்ல பார்ட் டைமா ஒர்க் பண்றா. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா அவந்திக்கு துணையா அவளை வச்சிரலாம்.”
“என்னமா நீ. டாக்டருக்கு படிச்ச பொண்ணைப் போய் நர்ஸ் வேலை பார்க்கச் சொல்றதா. அதெல்லாம் வேண்டாம்.”
“நீங்க கேட்ட நம்பிக்கையான ஆள், இப்போதைக்கு அவள்தான் சார். அவகிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டுத்தான் உங்களைக் கூப்பிட்டேன்.”
“இல்லமா. இருந்தாலும் வயசுப்பொண்ணு” என தயங்கியவன், “அவந்தி சொந்தம் என்கிறதால, அந்த கௌஷிக் அவளிடம் ஒரு லிமிட்குமேல தாண்டமாட்டான். இதுவே அடுத்த வீட்டுப் பொண்ணுன்னா, அவனோட எல்லை எந்தளவுக்கு இருக்கும்னு தெரியாதே. அதுவுமில்லாமல் அவந்தி கூட அனுப்புறதுக்கு அந்த கௌஷிக் சம்மதத்தோட, அவன் மூலமா போறமாதிரி இருக்கணும். அப்பத்தான் அவனுக்கும் சந்தேகம் வராது” என்றான் நிதர்சனத்தை உணர்ந்து.
“அதெல்லாம் அவ சரியா செய்வா. அவ என்னை மாதிரி கிடையாது. நம்பர் மெசேஜ் பண்றேன். பேசிப்பாருங்க. அவளைவிட யாரும் இந்த வேலைக்கு செட்டாக மாட்டாங்கன்னு சொல்வீங்க” என்றாள்.
“ரொம்ப நன்றிமா.”
“எனக்கு நன்றியா! போங்க சார். என் வாழ்க்கையையே திருப்பிக் கொடுத்த அவந்திக்காக, இதைக்கூட செய்யமாட்டேனா” என்று போனை வைத்தாள்.
சில வினாடிகளில் மெசேஜ் வர எடுத்துப் பார்த்தவன் “நேத்ரா எம்பிபிஎஸ்” என்று போன் நம்பரும் சேர்ந்திருக்க, அவளிடம் பேசியவனுக்கு, வைஷ்ணவி சொன்னதுபோல், ‘இந்த வேலைக்கு நேத்ராதான் பெஸ்ட் சாய்ஸ்’ என்று தோன்றியது.
அதன்படி நேத்ராவிற்கும், தன் தாய்க்கும், மனைவிக்கும் சிலபல விஷயங்களை சொல்லி புரியவைத்து கிளம்பத் தயாரானான்.
அதுவரை அவன் சொல்வதை சிரத்தையாக கேட்டுக் கொண்டிருந்தவள், கிளம்ப ரெடியாகி எழவும், கைபிடித்து ‘வேண்டாமே’ என்பதுபோல் பார்வையால் யாசித்தாள்.
“கொஞ்ச நாள்தான்டா. நான் முடிஞ்சளவுக்கு சீக்கிரம் வந்திருவேன். சந்தர்ப்பம் கிடைச்சா போன் பண்றேன்” என்று தாயிடமும் விடைபெற, அதுவரை பிடித்த கையை விடாமல் இருந்தவளிடம் வந்தவன் தாயைப் பார்க்க, ஈஸ்வரி வெளியே செல்லவும்... “டேக் கேர்டா அழகி” என்று நெற்றியில் முத்தமிட்டு, “இப்பக்கூட நீயா ஒரு முத்தம் கொடுக்கமாட்டல்ல?” என குறைபட்டான்.
அதில் சிரித்தவள் மாட்டேனென்று சொல்ல, அவள் சிரிப்பையே மனதில் பதித்து, வர்கிறேன் என்று கிளம்ப, தன்னை விட்டுச் செல்பவனையே மனதில் நிறைத்தபடி புன்னகையுடன் பார்த்திருந்தாள் அவந்திகா.
மறுநாள் காலை டாக்டரை நேரில் சந்தித்த ஈஸ்வரி, சில விஷயங்களை பேச, சிறிது நேர மறுப்புக்குப் பின், சம்மதமாக தலையசைத்தார். அதன்படி அன்றே நேத்ரா அந்த மருத்துவமனையில் செவிலி வேலைக்குச் சேர்ந்தாள்.
அதற்கு மறுநாள் வனஜாவும், கௌஷிக்கும் வர அவர்களை கொன்று தின்று விடுவதுபோல் பார்த்த ஈஸ்வரியை, அலட்சியப்படுத்தி அலட்டாமல் அவந்தியினருகில் சென்று நலம் விசாரித்தனர்.
அவந்திகா, ஈஸ்வரியின் ஆச்சர்யப் பார்வையைக் கண்டதும், ‘இதுதானே வேண்டும்’ என்று அந்த ஆச்சர்யத்தை அதிகப்படுத்தினார்கள் தாயும் மகனும். “எங்களை மன்னிச்சிரு அவந்தி” என்று வனஜா கேட்டார்.
‘மன்னிப்பு கேட்கிறது அத்தையா?’ வாயடைத்துப்போய் ஈஸ்வரியைப் பார்த்தாள் அவந்தி.
அவரோ அவர்களை ஒட்டி பேசச்சொல்லி சைகை செய்ததும், “என்னத்தை மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க?”
‘உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று எனக்குத் தலையெழுத்தா என்ன. வேறவழியில்லாம கேட்குறேன். இல்லன்னா உன்னை வீட்டுக்கு கூட்டிட்டுப்போக முடியாதே. வீட்டுக்கு கூட்டிட்டுப் போனாதான, நான் நினைச்சதை நடத்த முடியும். வீடு போறவரைக்கும்தான் இதெல்லாம்’ என மனதில் எண்ணங்கள் ஓட, வெளியே, “இல்லமா நாங்க பண்ணின தப்பாலதான் நீ ஹாஸ்பிடல் வரை வரவேண்டியதா போயிருச்சி” என்று வராத கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்தார்.
“ஐம் சாரி அவந்தி. நான் உன்கிட்ட ரொம்ப சீப்பா பிஹேவ் பண்ணிட்டேன். இனிமேல் இதுமாதிரி நடக்காது. நீ நம்ம வீட்டுக்கே வந்திரு” என்றான்.
அதன்பின் தான் இருவருக்குமே புரிந்தது, ‘எலி ஏன், ஹாஸ்பிடல் தேடி வந்து டான்ஸ் ஆடுகிறதென்று.”
“இல்லத்தை நான் வீட்டுக்கு வரலை” என அவந்திகா மறுக்க,
சட்டென்று கோவம் வந்தாலும் அதை வெளிக்காட்ட மனமில்லாமல் அடக்கி, “ஏன்மா கார்த்திக் வீட்டுக்குப் போகப்போறியா?” என்று ஈஸ்வரியின் புறம் பார்த்தார்.
“இல்லத்தை. என்னால எந்த உரிமையில அங்க போக முடியும்னு நினைக்கிறீங்க. அதான் எங்க உறவுக்கான ஆதாரத்தையே இல்லாமல் செஞ்சிட்டானே, உங்க பிள்ளை.” வந்த அழுகையை அடக்கி, “அதனால நான் எதாவது லேடீஸ் ஹாஸ்டல்ல போயி தங்கிக்கிறதா முடிவு பண்ணிட்டேன்.”
மனதினுள் ‘அச்சோ!’ என்றலறிய வனஜா பின் நிதானித்து “எ...என்ன பேசுற அவந்தி? அவன் பண்ணினது தப்புத்தான் அதுக்காக வீட்டைவிட்டுப் போவியா. வேணும்னா இவன் வீட்டைவிட்டுப் போகட்டும்” என்றார்.
கௌஷிக், “அம்மா” என்றலற,
“விடுடா. உன்னை விரட்டுற அளவுக்கு அவந்தி மோசமானவ கிடையாது. நான் அப்படிலாம் அவளை வளர்க்கலை” என்றாரே பார்க்கலாம்,
ஈஸ்வரி வந்த சிரிப்பை அடக்க முடியாது, வகை தொகையில்லாமல் மாட்டிக் கொண்டார்.
“என்ன சிரிப்பு? அவளை நான் வளர்க்காம, நீயா வளர்த்த?” என கேட்டதும், வாய் மூடியபடி, ‘நீங்க பேசுங்க’ என கையசைத்து வெளியே சென்றார்.
“சொல்லு அவந்தி. நம்ம வீட்டுக்கு வர்றதான? வரமாட்டேன்னு சொல்லிராத. இனிமேல் இதுமாதிரி எதுவும் நடக்காம பார்த்துக்கறேன்.”