- Joined
- Aug 31, 2024
- Messages
- 916
- Thread Author
- #1
13
வீட்டில் அழைப்பு மணியை அழுத்த நாற்பத்தெட்டு மதிக்கத்தக்க நடுத்தர வயது மனிதர் கதவு திறந்து, “யார் நீங்க? யாரைப் பார்க்கணும்?” என்றார்.
“நான் ராசி. இந்த வீட்டு ஓனர் மீனலோஜினியோட பேத்தி. இப்ப தெரியுதா யாரைப் பார்க்கணும்னு? இப்ப உள்ள வரலாம்ல?” என்று நிமிர்வாகவே கேட்டாள்.
இவளின் வரவை எதிர்பார்த்திராத அந்த மனிதர் வேறு வழ்யில்லாது, “வாங்க” என்று வரவேற்று, அதன் பின்னரே தன் தவறை உணர்ந்தார். அவரே அவள் வீடு என்பதுபோல் வரவேற்று விட்டாரே என்றுதான்.
உள்ளே நுழைந்தவளுக்கு பழைய நினைவுகள் போட்டி போட கண்கலங்கியது. அதை அவள் உணர்ந்தாளோ இல்லையோ, அவளின் நிமிர்வான பேச்சைக் கேட்டு அவளையே பார்த்திருந்த சரத் உணர்ந்தான். ஆறுதல் சொல்ல எழுந்த கை இடமறிந்து மடங்கியது.
உள்ளிருந்து வந்த அவரின் மனைவியும் இதை எதிர்பார்க்கவில்லை. வாரிசு இல்லா சொத்துதானே. பத்து வருடமாகக் குடியிருந்த தாங்களே உரிமையாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு. பேத்தி என்று ஒருத்தி வரவும் முதலில் விழித்தவர்கள், அதன்பின் சுதாரித்து, “எதுக்காக வந்தீங்க?” என்றாள் குடித்தனப்பெண்.
“எதுக்காகன்னு உங்களுக்குத் தெரியாது?” என்று பதில் கேள்வி கேட்டாள் ராசி.
“தெரியாது” என பட்டென்று சொன்னதும் கோபம் வர அதை அடக்கி, “சரி வீட்டை எப்ப காலி பண்றீங்க? வீட்ல கொஞ்சம் வேலையிருக்கு. சீக்கிரம் காலி பண்ணினா நல்லது” என்றாள் பொறுமையாக.
“அதை உங்க வீட்ல பண்ண வேண்டியதுதான. இங்க வந்து ஏன் சொல்ற?”
“என்னது! உங்க வீடா?” என்று கோபத்தில் சத்தமிட்டவளை... எங்கே அடித்து விடுவாளோ என்று பயந்து கைபிடித்து நிறுத்தி, “ராசி கூல்” என்று அவர்களிடம் திரும்பி, “அப்ப நீங்க வீட்டை காலி பண்ண மாட்டீங்க. அப்படித்தான?” என்றான்.
“எங்க வீட்டைக் காலிபண்ணச் சொல்ல நீ யாருடா?” என்று சரத்தைப் பார்த்துக் கேட்க,
“என்னது! டாவா!” என்றபடி ஆத்திரத்தில் அவர்களை என்ன செய்திருப்பாளோ தெரியாது... சரத்தின் “ராசி ப்ளீஸ். நான் பேசிட்டிருக்கேன்ல. நான் பார்த்துக்கறேன்” என்றான்.
“அதுக்காக ‘டா’ சொல்வாங்களா? நீங்களும் கேட்டுட்டு அமைதியாயிருக்கீங்க.”
“ராசி கொஞ்சம் பொறுமையாயிரு” என அவளை அமைதிப்படுத்தி, “என்ன சார்? நான் யார்னு தெரியணும் அவ்வளவு தான. இந்த வீட்டுப் பையன் நான்” என... ராசி அவனை விழிவிரித்துப் பார்க்க.. அவளைப் பார்த்து கண்ணடித்தான்.
சரத் அப்படிச் சொல்ல வேண்டுமென்று சற்று முன்கூட எண்ணியதில்லை. ஆனால், அவனுக்கு ஏதோ ஒரு பந்தம் அங்கு இழுத்துப் பிடித்தது போலிருந்தது. ஏதோ தனக்கும் இந்த வீட்டிற்கும் ஒரு சொந்தம் போல்.
“இந்த வீட்டு பையனா? எங்கிருந்து திடீர்னு முளைச்சான்?’ குடித்தனப்பெண் கேலியாக கேட்க...
“லோஜிம்மாவுக்கு பையனோ, பொண்ணோ இல்லாமலா பேத்தி வருவா. ராசி என் அம்மாவோட பேத்தி. அப்ப நான் உரிமைக்காரன் தான” என்றவன் தொடர்ந்து, “அப்புறம் நியாயத்தைத் தட்டிக்கேட்க உரிமை தேவையில்லை மனசு இருந்தாலே போதும். உங்க வீடுன்றீங்கள்ல பத்திரத்தைக் காட்டுங்க பார்க்கலாம்” என்றான் சற்றே அதிகார தோரணையில்.
“அதுக்கென்ன நீ போய் எடுத்துட்டு வா சரளா” என்று மனைவியை அனுப்ப...
“பத்திரம் பத்திரமாய் என்னிடம் இருக்கும் போது.. இதெப்படி?” என்று புரியாமல் பார்த்தவளை... “நான் பார்த்துக்கறேன்” என்று கண்களால் சமாதானப்படுத்த, பத்திரத்தைக் கொண்டு வந்த சரளா சரத்திடம் கொடுத்து படிக்கச் சொல்ல, இரண்டு பத்திரங்களும் அந்த வீட்டை உரிமை கொண்டாடின.
சட்டென்று போனை எடுத்தவன், “டேய்! நீ மதுரையில தாலுகா ஆஃபீஸ்ல எந்த போஸ்டிங்ல இருக்க?”
“லூசாடா நீ. அதுக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்?” என்று பதில் கேள்வி மணி கேட்டான்.
“தாசில்தாரா இருக்கியா. ரொம்ப நல்லதா போச்சி. நீ தாசில்தார்னா பத்திரம் ரீசன்டா பதிஞ்சது, பழையதுன்னு அடையாளம் தெரியும்தான?”
“என்னடா விளையாடுறியா? சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேட்குறியே. யார்கிட்டயாவது என்னை ஓட்டுறதுக்கு பெட் கட்டுனியா?”
“ஆமாடா. இங்க ஒரு பிரச்சனை எங்க வீட்ல இருந்துட்டு போலி பத்திரம் வேற வச்சிட்டு காலி பண்ணமாட்டேன்றாங்க.”
“போடா லூசு. எங்க வரணும்னு சொல்லு வந்து தொலைக்கிறேன். இல்ல வந்து நடிக்கிறேன்.”
“ஓ நீ வர்றியா. போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்கலாம்ன்றியா. ஓகேடா தேங்க்ஸ்” என்று வீட்டு அட்ரஸைச் சொல்லி வைத்தவன் அவர்களிடம் திரும்பி, “நான் பேசினது கேட்டதுல்ல. வருவான் வந்ததும் அவன்கிட்டேயே பேசுங்க. என்ன ராசி ஏன் அப்படி நின்னிட்டிருக்க? இது உன்னோட வீடு. அந்த உரிமையோட உட்காரு” என்றதும்... அங்கிருந்த தங்களின் பழைய உணவு மேஜை மேல் ஏறியவள், “நீங்களும் வாங்க சரத்” என்று அவனையும் அமரவைத்தாள்.
“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா மிஸ்டர் அன்ட் மிஸஸ்? சரத் ஒரு டிடெக்டிவ் ஆபீஸர். நீங்க என்ன கோல்மால் பண்ணினாலும் ஒரே நாள்ல வெளிய தெரிஞ்சிரும்” என்றதும் அவர்களின் முகம் பயத்தில் வேர்க்க ஆரம்பித்தது. “இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப்போகல உண்மையை ஒத்துக்கிட்டா இரண்டு நாளாவது வீட்டைக்காலி செய்ய டைம் குடுப்போம். இல்லையா வீட்டைப் பூட்டிட்டுப் போய்ட்டேயிருப்போம்.”
ஏற்கனவே தாசில்தார் போலீஸ் என்று மிரண்டிருந்தவர்கள் டிடெக்டிவ் என்றவுடன் பயந்து, “ஐயோ வேண்டாம்மா. நாங்க பண்ணினது தப்புதான் வாரிசு இல்லன்ற எண்ணத்துல தப்பு பண்ணிட்டோம்” என அலற ஆரம்பிக்க...
மேஜையிலிருந்து இறங்கி அவர்களிடம் வந்தவள், “வாரிசு இல்லன்னா என்ன வேணா பண்ணுவீங்களா? வீடுன்னு இருந்தா அதுக்கு சொந்தக்காரங்க இல்லாம இருப்பாங்களான்ற அடிப்படை அறிவு வேண்டாம். வாரிசு இல்லன்னா அவங்களுக்குப் பிடிச்சவங்களுக்கு கொடுக்ககூடாதுன்னு எதுவும் இல்லையே. உங்களை மாதிரி ஒரு சிலர் இருக்கிறதாலதான் வீட்டு ஓனருங்க அவ்வளவு கண்டிஷன் போடுறாங்க போல. வீட்டு ஓனர் தொல்லையில்லாம இருக்கிறதே இப்போதைக்கு பெரிய குடுப்பினை தெரியுங்களா! அதை அனுபவிக்காம வீட்டையே அனுபவிக்க கணக்கு போடுவீங்களா? அங்கங்க ஹவுஸ் ஓனர் தொல்லையால எத்தனை குடும்பங்கள் சிக்கி சீரழியுது தெரியுமா உங்களுக்கு? தெரியும். தெரியாம எப்படியிருக்கும். தெரிஞ்சே தப்பு பண்றவங்களுக்கு அது பெரிய விஷயமாகவே தெரியாது பாருங்க” என்று தன் ஆத்திரம் தீர திட்டி, “இந்த பத்திரம் மட்டும்தானா. வேறெதுவும் இருக்கா?” என்றாள் சத்தமாக.
“இது மட்டும்தான்மா ஜெராக்ஸ் கூட கிடையாது. எங்களுக்கு ஒரு மாசம் டைம் கொடுமா வீட்டைக் காலி செய்ய” என்றார் அந்த மனிதர்.
“ப்ச்..ப்ச் அதெல்லாம் முடியாது. ஒரு வாரம்தான். அதுவே நீங்க பண்ணின காரியத்திற்கு ஜாஸ்தி.”
அதேநேரம் மணி வர, “பிரச்சனை முடிஞ்சதும் எண்ட்ரியாகுறியேடா நண்பா” என்றான் கிண்டலாக.
“வேற வழி. புலி இருக்கிற இடத்துல பூனைக்கு என்னடா வேலை வச்சிருக்கப்போற” என்றவன் “கல்யாணத்துக்கு வர முடியலடா கோவிச்சுக்காத. எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுதான” என்றவன் கண்ஜாடையால் சரத்தை தனியே பேச அழைத்தான்.
“பெர்பெக்டா முடிஞ்சது. நீ வரலன்னா என்ன ஒரு விஐபி கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க” என்று ராசியைப் பார்க்க... அவனறியாமல் அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். அவனின் பார்வை தன்புறம் திரும்பவும் வந்த வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைத்து வேறுபுறம் திரும்பி வெளியில் சென்றாள்.
வீட்டிலிருந்து வெளியே வந்தவளை, “பாப்பா நீ ஹரிப்ரியா தான?” என்ற கேள்வியில், ராசியும், சரத்தும் ஒருங்கே திரும்பினர்.
‘ராசி பெயர் ஹரிப்ரியாவா!’ ஆச்சர்யத்தில் பார்த்தவன் வினாடிகளில் தனக்கு வந்த சந்தேகத்தை நண்பனிடம் தெளிவுபடுத்திக் கொள்ள அவனுடன் தனியே சென்றான்.
“மஞ்சு சித்தி நல்லாயிருக்கீங்களா? சித்தப்பா தம்பி எப்படியிருக்காங்க?”
“எல்லாரும் நல்லாயிருக்கோம். பத்து வருஷம் கழிச்சி இப்பத்தான்டா உன்னைப் பார்க்கிறேன். அழகுடா பாப்பா நீ. எங்க அத்தா...” என பேச ஆரம்பித்தவளை...
“ஸ்... சித்தி அவங்க எனக்கு மாமா. மாமா மட்டும்தான். அப்பா ஸ்தானம். வேற எதாவது உறவுமுறை சொல்லி அசிங்கப்படுத்திராதீங்க” என்றாள் வேகமாக. அதை சரத் கேட்டுவிட்டானோ என்று அவனையும் ஒரு பார்வை பார்த்தவளுக்கு இல்லையென்றவுடன் மனதில் நிம்மதி எழுந்தது.
“அச்சோ! நானே அப்படிச் சொல்வேனாடா. அத்தான் இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்கன்னு சொல்ல வந்தேன்.”
“சாரி சித்தி நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. ராசி எப்பவாவது இப்படித்தான் சொதப்புவா.”
“யாருமா அது ராசி?”
“சித்தீ நான்தான் அது” என சிரித்தபடி முறைக்க...
“ஹான்.. இப்பத்தான் ராசி பாப்பா அழகாயிருக்கா. சரிமா அத்தையை எங்க காணோம்?”
“அம்மாஆச்சிக்கு உடம்பு சரியில்ல சித்தி. அதான் நான் மட்டும் வந்தேன்.”
“ஓ... சரிமா. நான் போன் பண்ணி கேட்டுக்கறேன். இப்ப நாம போய் பேசிட்டு வரலாம் வா. நான் மட்டும் போனாதான ஏடாகூடம் பேசுறாங்க. நீ வந்தா வாயைத் திறக்க மாட்டாங்கள்ல.”
“ஃப்ரண்ட் வந்திருந்தாங்க சித்தி. அவங்களோட சேர்ந்து வீட்டுப் பிரச்சனையை சால்வ் பண்ணியாச்சி. இன்னும் ஒரு வாரத்துல காலி பண்ணிருவாங்க. சாவி வாங்கிட்டு போன் பண்ணுங்க. ப்ரண்ட் ஒருத்தவங்களோட வந்தேன். டைம் ஆகிருச்சி கிளம்பட்டுமா?” என்றாள்.
“அடி பிச்சிருவேன் பிச்சி. இத்தனை வருஷம் கழிச்சி வந்திருக்க. வீட்டுக்குள்ள வராம போயிரலாம்னு நினைப்பு வேறயா. ஒழுங்கா உள்ள வா.”
“சித்தி! சிங்கம் சிங்கிளா வரல டபுளா வந்திருக்கு. இப்ப ஒரு பூனை சேர்ந்ததால ட்ரிபிள் ஆகிருச்சி” என்றாள் சுடிதாரில் காலர் தூக்குவதுபோல் செய்து.
“என்னமா சொல்ற?” எனும்போதே... மணி அருகில் வந்து “ஹாய் சிஸ்டர்! நான் கிளம்பறேன். ஊருக்குப் போயிட்டு நைட் கிளம்பி வர்றேன்” என்றான்.
“பாப்பா இதுல சிங்கம் யாரு? பூனை யாரு?” என்ற தனது அரிய சந்தேகத்தை மஞ்சு கேட்க...
“அச்சோ! சித்தி” எனும்போதே...
“நல்ல ப்ரண்டுடா உனக்கு” என்று தான்தான் பூனை என்பதை மணி நிரூபிக்க... அதைக்கேட்ட மற்றவர்கள் சிரித்தனர்.
“சாரிண்ணா சும்மா ரைமிங்கா லைன்ஸ் விட்டா, டைமிங்ல சித்தி போட்டுக் குடுத்துட்டாங்க” என ராசி சொன்னதும்... பெரிதாகச் சிரித்தவன், “நோ ப்ராப்ளம் சிஸ்டர். லைக் யுவர் க்யூமர்சென்ஸ்” என்று நண்பனிடம் காதில் ஏதோ சொல்லி விடைபெற்று கிளம்பினான்.
என்னவென்று ராசி கண்களால் வினா தொடுக்க...
அந்த வினாவிற்கு விடை தெரியாமல்தான் திணறிக் கொண்டிருந்தான். நண்பன் சொன்னதில் நிறைய குழப்பத்தில் இருந்தவனால் அவளை வேண்டாமென்று ஒதுக்கவும் முடியவில்லை. அவளின் கேள்விக்கு ‘ஒன்றுமில்லை’ என்பதை தோள்குலுக்கி சொன்னான்.
“இரண்டாவதா வந்த சிங்கம் இவர்தானா!” மஞ்சு ஆரம்பிக்க... “ஹையோ சித்தி! வேண்டாம் விட்டுருங்க” என்று வாய் பொத்தி... சரத்திடம் ‘சாரி’ என்று கெஞ்சலாக கண்களால் கேட்க, அதில் முழுவதும் வீழ்ந்தான்.
ராசியின் “சாப்பிட்டுட்டுத் தான் போகணும்னு அடம் பிடிக்கிறாங்க. என்ன பண்ணலாம்?” என்றதில், தன்னிலை அடைந்து... “அவ்வளவு தான. எத்தனையோ வருஷம் கழிச்சி வந்திருக்க. அவங்க ஆசையையும் நிறைவேற்றிட்டுப் போகலாம்.”
நன்றி சொல்லி உள்ளே அழைத்துச் சென்ற மஞ்சு, மற்ற உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தி அவர்களிடம் பேசி கிளம்ப மதியம் பனிரெண்டைத் தாண்டியது.
செல்லும் வழியெல்லாம் சரத் மௌனத்தை மொழியாக்கி வந்தாலும் ராசியின் பேச்சில் மற்றதைத் தூக்கியடித்து, தங்கள் படிப்பு, வேலையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும் போதே, விராலிமலை டோல்கேட் தாண்டிய அந்த இடம் வர கார் தன்னாலேயே நின்றது.