• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
12


இரண்டாம் முறை போன் எடுக்கப்பட்டதும் அதை உணர்ந்தவன், “அவந்தி எப்படியிருக்க? அங்க ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே? என்னமா என்மேல கோவமாயிருக்கியா? நியாயமான கோவம்தான் என்கிட்ட பேசமாட்டியா?” என அடுக்கிக்கொண்டே போனான்..

“நீ பண்ணின காரியத்துக்கு எப்படிடா பேசுவா?” என்ற தாயின் எரிச்சல் குரலில்,

“அம்மா” என அவன் அதிர்வது தெரிந்தது.

“என்னடா அம்மா? உன்னால அவ இப்ப ஹாஸ்பிடல்ல இருக்காடா. ஏன்டா மறைச்ச எங்ககிட்ட இருந்து?” என்று தாய் மேலே மேலே பேசிக்கொண்டே செல்ல,

ஹாஸ்பிடலில் இருக்கிறாள் என்றதும், வேலை செய்ய மறுத்த மூளை, ‘ஏன் மறைத்தாய்?’ என்ற விஷயத்தை உள்வாங்க மறுத்தது. எந்த சூழ்நிலையிலும் புன்னகை புரியும், அவன் மனைவி கண்முன் வந்து சென்றாள். கண்ணீர் அவன் கண்களையும், குரலையும் சேர்த்தே கட்டிப்போட்டது. அதை கார்த்திக் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.

“டேய்! என்னடா நான் சொல்றது எதாவது கேட்குதா? லைன்ல இருக்கிறியா? இல்ல திரும்பவும் ஊர் சுத்த போயிட்டியா?” தாயின் கோவ வார்த்தைகளில் நினைவு வந்தவன், கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்தி, “அவந்திக்கு என்னாச்சிம்மா?” என கேட்டான்.

“சொல்றதுக்கு முன்னாடி, நீ ஏன்டா எங்ககிட்ட இருந்து மறைச்ச? எதையும் சொல்றதே இல்ல.”

“எதைச் சொல்றீங்கன்னு புரியலம்மா. எதுவா இருந்தாலும் புரியுற மாதிரி பேசுங்க” என்றான் இப்பொழுதே அங்கு செல்லத்துடித்த கால்களை நிறுத்தி.

“ம்... உன் கல்யாணம் நடந்த விஷயத்தை” என்றார் கோவமாக.

“எப்படி தெரிஞ்சது? அவந்தி சொன்னாளா?”

“ம்... சொன்னா. அதுகூட அவளா சொல்லல. ஒரு இக்கட்டான தருணத்துல வேற வழியில்லாம சொன்னா” என்றவர் அவன் கட்டிய தாலியை கௌஷிக் பறித்ததைச் சொல்லவில்லை. சொன்னால் கொள்ளைக்காரன் என்ற பட்டத்தில் ருப்பவன், கொலைகாரன் என்ற பட்டமும் பெறுவது உறுதி” என்பதால் மறைத்தார்.

“இக்கட்டான தருணமா? ஆமா. ஹாஸ்பிடல் போற அளவு என்ன நடந்தது? இப்ப அவ எப்படியிருக்கா?”

“இன்னைக்குப் பேப்பர் கிடைச்சா வாங்கிப் படிச்சிட்டு, நான் சொல்ற ஹாஸ்பிடலுக்கு வா. எதுவா இருந்தாலும் நேர்ல பேசிக்கலாம்” என்று போனை வைத்தார்.

வெளியே வந்தவன், அருகிலிருந்த பெட்டிக்கடையில் செய்தித்தாள் கேட்டு வாங்கி, தேடிப்பிடித்து படித்து அதை அவரிடமே ஒப்படைத்து, கலங்கிய கண்களுடன் ரோட்டின் மறுபுறமிருந்த ரத்தனிடம் வந்தான்.

அவனின் கலக்கத்தைக் கண்டு ரத்தன் விசாரிக்க, தன் மனைவி மருத்துவமனையில் இருப்பதைச் சொல்லி, “எப்படி போய் பார்க்கிறதுன்னே தெரியலன்ணே. போனா போலீஸ்ல மாட்டிருவோம்னு பயமாயிருக்கு” என்று கதறியழுதான்.

ஏனோ தெரியவில்லை கார்த்திக்கை ரத்தனுக்கு மிகவும் பிடித்தது. அவனது திறமையா, அல்லது நேர்மையா தெரியாது. கார்த்திக்கின் சார்பாக யோசித்த ரத்தன், “உனக்கு எங்க இருக்காங்க என்ற வழி தெரியுமா?” சம்மதமாய் கார்த்திக் தலையாட்ட, தனக்குச் சொந்தமான பணத்தை எடுத்துக் கொடுத்து, “போயி ஒரு டைம் பார்த்துட்டு வந்திரு. நான் அதோ அந்த ரோட்டோரக் கும்பலோட படுத்திருக்கேன். முடிந்தளவுக்கு ஒருமணி நேரத்துல வரப்பாரு. கையில பணம் வேற இருக்கு. யாரோ ஒருத்தர் மாட்டினால்கூட காட்டிக் கொடுக்கக்கூடாது” என்று எச்சரித்தான்.

“ஐயோ அண்ணே! தொழில் துரோகம் எப்பவும் பண்ணமாட்டேன்ணே!”

“உன்னை நம்புறேன் போயிட்டுவா” என்று அவனை அனுப்ப, ஆட்டோ பிடித்துச் சென்ற கார்த்திக், ஆட்டோவை சந்து பொந்தெல்லாம் நுழைத்து கடைசியில் மருத்துவமனைக்கு முன் வந்து இறங்கி, ஆட்டோவிற்கு பணமளித்தான். அவனுக்குத் தெரியும் ரத்தன் தன்னை வேவுபார்க்க ஆட்களை அனுப்பலாம் என்று. அதனாலேயே இந்த சுத்தல் பயணம். இப்பொழுது மனைவியை நிம்மதியாக, எந்தவித மனகிலேசமும் இல்லாமல் சந்திக்கச் சென்றான்.

மருத்துவமனை நுழைவாயிலை அடைந்தவனுக்கு அது விசிட்டர் நேரமில்லை என்று தெரியும் ஆதலால், தன் தொழிலுக்கேயான குயுக்தியுடன் உள்ளே வந்து தாய் சொன்ன அறை எண் 12 ஐத் தட்டினான்.

கதவைத் திறந்த ஈஸ்வரி மகனைத்திட்ட வாயைத் திறக்குமுன், “அம்மா ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க” என மண்டியிட்டான்.

அவனை முழுமையாக பார்த்தவருக்கு பாவமாகத்தான் இருந்தது. ‘ஏன் இந்த பிழைப்பு?’ என்று நினைத்தாலும், ஏற்கனவே நொந்திருப்பவனை மேலும் நோகடிக்க மனமில்லாமல், “ப்ச்... போடா. உன்னால அவள் படுற அவஸ்தையை கண்கொண்டு பார்க்க முடியலடா. இன்னும் முழுசா நினைவு வராத நேரத்திலும், ஏதோ ஸ்லோகம் சொல்றமாதிரி உன்பெயரை சொல்லி புலம்பிட்டிருக்கா.”

தாய் சொல்லை காதில் வாங்கியபடி, படுத்திருந்த மனைவியை கண்களால் வருடினான்.

“ஒருவேளை தாலியை அறுத்ததால உனக்கு எதுவும் ஆகிருமோன்ற மன பயத்துல இப்படியிருக்கிறாளோ என்னவோ” என தனக்கே சொல்லிக் கொள்வது போல் சொல்லிவிட்டார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும், “என்னம்மா சொன்னீங்க? யார் இந்த வேலையைப் பார்த்தது?” என வெகுண்டெழுந்தவன், “கௌஷிக்கா” என கண்களில் வெறியுடன் கேட்க, தாயின் மௌனம் சம்மதத்தைச் சொன்னது. “அவந்தி வீட்ல, என்ன நடந்தது முழுசா சொல்லுங்க” என்று சிங்கமாய் சிலிர்த்தபடி நின்றவனிடம்,

கார்த்திகேயன் ஜெயிலுக்குப்போன அன்றிலிருந்து இன்றுவரை, நடந்த அனைத்தையும் சொன்னார்.

‘அச்சோ! என் அழகி அந்த டைம் எப்படி துடிச்சிருப்பா. மனசளவுலயும், உடலளவுலயும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா.’ அவளின் கஷ்டத்தை மனதளவில் தான் உணர்ந்தான் கார்த்திக். “என்னமா நீங்க இருந்துமா?” என்றவன் கண்கள் அவந்தியை பார்த்தபடி, “அவங்களைப் பற்றித் தெரிஞ்சதாலதான, உங்களை அவளுக்கு துணையா இருக்கச் சொல்லிப் போனேன்” என்றதும் தாய் குற்றவுணர்வில் துடித்து தலைகுனிந்தார்.

அதைப் பொறுக்காதவன், கைகளால் தாயின் முகத்தை உயர்த்தி, “எங்கம்மா எப்பவும் கம்பீரமா தலை நிமிர்ந்துதான் இருக்கணும். இதுதான் நடக்கணும்னு இருந்தா யாராலம்மா தடுக்க முடியும். நீங்க கவலைப்படாதீங்கம்மா எல்லாத்தையும் சீக்கிரமே சரிபண்ணிரலாம். சரி உங்களுக்குத் துணையா யாரும் இல்லையா?”

“சந்தோஷும், அவந்தி மாமாவும் இருந்தாங்க. ஹாஸ்பிடல்ல ஒருத்தர்தான் இருக்கணும் என்பதால நான் கூட இருக்கேன். ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. ரெத்தம் நிறைய போயிருச்சிடா. இரண்டு பாட்டில் இரத்தம் ஏத்தியிருக்கு. இப்போதைக்கு அவளுக்கு நீ மட்டும்தான் ஆறுதலா இருக்க முடியும். என்ன இருப்பதான?” என கேட்டார்.

“சாரிம்மா. என்னால கூடவே இருக்க முடியாது. இன்னும் ஒரு மணிநேரத்துல கிளம்பிருவேன்” என்றான் குற்றவுணர்வுடன்.

“ப்ச்...போடா. இதுக்கு நீ வராமலே இருந்திருக்கலாம். அவ கொஞ்ச நேரம் உன்னை எதிர்பார்த்து வரலன்னதும் மனசைத் தேத்தியிருப்பா. கருமம் இப்படி குடும்பத்தை அவஸ்தைப்படுத்துற இந்த தொழில் வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன் கேட்கிறியா? அது பின்னாடி ஓடாதடா. திரும்பிப் பார்த்தா யாரும் இருக்கமாட்டாங்க.”

“யார் இருந்தாலும், இல்லைன்னாலும் நீங்களும், அவந்தியும் இருப்பீங்கம்மா!” உணர்ந்து உள்ளார்ந்த வார்த்தையுடன் கூறி தாயின் கைபிடிக்க...

“தப்பேப் பண்ணினாலும், உன்னை ஏனோ கடிந்து பேச முடியலடா. ஆனா, கண்டிப்பா அந்த கௌஷிக் தண்டனை அனுபவிக்கணும். ஏன்டா இவங்க மருமகளைத் தொட்டோம்னு, நினைச்சி நினைச்சி வருத்தப்படணும். அந்த தண்டனை அளவு குறையாம, அப்படியே அந்த வனஜாவும் அனுபவிக்கணும்” என்றார் கண்களில் வெறியுடன்.

“கண்டிப்பா. கூடிய சீக்கிரமே அதை நான் நடத்திக் காட்டுறேன்மா” என்று சபதமே செய்தான்.

“சரி நீ அவந்திகிட்ட இரு. நான் வெளியில வெய்ட் பண்றேன். பார்த்துட்டு முடிஞ்சா பேசிட்டு சீக்கிரம் கிளம்பு. அப்புறம் கார்த்திக் அனாவசியமா வெற்று நம்பிக்கையை அவளுக்குக் கொடுக்காதே. கொடுத்தா மீறக்கூடாது. இல்ல கொடுக்கவே கூடாது.

தாய் வெளியே சென்றதும் மனைவியின் அருகில் வந்தமர்ந்தவன், ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி அவள் தலைகோத, இந்த மூன்று நாளில் அவளின் உடல்மெலிவும், அவள் வேதனையின் அளவும் முகத்திலும் தெரிந்தது.

“கார்த்திக்” என மயக்கத்திலும் முனகலாய் தன் பெயர் உச்சரிக்கப்படுவதை கேட்டவன், அதில் உருகி கண்கலங்கியபடி “உன்னோட கார்த்திக் தான்டா. உனக்கே, உனக்கான கார்த்திக்!”

கண் திறவாமலேயே, “ம்... என்னோட கார்த்திக்தான். எனக்கே எனக்கான கார்த்திக்” என்றாள் புன்னகைத்து.

எந்த நிலையிலும் மனைவயின் புன்னகை முகம் மாறாமலிருப்பதை எண்ணியவன், அதை அவளுக்கு நிரந்தரமாக்க நினைத்தான்.

நினைப்பது வேறு நடப்பது வேறல்லவா! அந்த புன்னகை இனிமேல் காணாமல் போவதை அறிவானா கார்த்திக்? அதற்கும் அவனே காரணமாகப் போவதையும்!

அவனின் தொடு உணர்ச்சியில், மெல்ல கண்விழித்த அவந்திகா, “யா...யார் நீங்க?” என்று வராத குரலில் வக்கணையாக கேட்டவளை, முறைத்த கார்த்திக், “கட்டின புருஷனை யார்னு கேட்கிறா பாரு லூசு” என்றதும் அவன் குரல் கேட்டு சந்தோஷத்தில் “கார்த்திக்” என்று எழபோக,

“ஹேய் அழகி! ட்ரிப்ஸ் ஏறுது பாரு .சைலன்டா படுத்துக்கோ, படுத்திருந்தும் பேசலாம்” என்றான் அன்றைய நினைவில் சரசமாக.

அவனின் குரல் வேற்றுமையை உணர்ந்தவள், “ம்... ஆசைதான்” என்று நொடிப்பதுபோல் நடித்து, “கார்த்திக்! நீங்க ஏன் இப்படிப் பண்ணுனீங்க? என்னால தாங்க முடியல தெரியுமா? அந்த கௌ...ஷிக் தாலியை” என ஆரம்பிக்க, அவளின் வாயை மூடி, “தெரியும்” என்றான்.

அவன் கையை நகர்த்தி, “அவன் அப்படி செஞ்சதும் உங்களுக்கு எதாவது ஆகிருமோன்னு பயந்தே போயிட்டேன். மனசெல்லாம் உயிர்போற வலி. என்னால அதைத் தடுக்க முடியாமல் போயிருச்சே.” அதை நினைத்ததுமே உடல் அதி,ர அந்த வேதனையை இப்பொழுது முகத்தில் கொண்டு வந்தாள்.

“சாரிமா. நான் இதை எதிர்பார்க்கல. ஒரே மன்னிப்புல எல்லாமே சரியாகிடாதுதான். இனிமேல் இந்தமாதிரி நடக்காம பார்த்துக்கலாம்” என்றான் உள்ளார்ந்த குரலில்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“அதுசரி. இதென்ன அடையாளமே தெரியாம, கைலி கட்டிட்டு அழுக்கா, தலையெல்லாம் கலைஞ்சி, ஏதோ தெருவோரம் சண்டை போட்டு, மண்ணுல உருண்டுட்டு வந்தமாதிரி. கண்ணெல்லாம் வேற ரெட்டாயிருக்கு” என கேட்டாள்.

“ஏன்டி, உன்னை அழகின்னு எவ்வளவு அழகா கூப்பிட்டேன். ஆனா, நீ என்னை அழுக்குப் பையனாக்கிட்டியே?”

அவனின் பாவனையில் சிரித்து, “ஆமா நீங்க அப்படி அழுக்குப் பையனாகத்தான் இருக்கீங்க.” கார்த்திக்கைக் கண்டதும் எவ்வளவோ கேள்விகள் கேட்க எண்ணி இருந்தவளுக்கு, கணவனை நேரில் கண்டதும் அனைத்தும் மாயமாய் மறைய, அவனை பழைய கார்த்திக்காகவே பாவித்து பேசிக்கொண்டிருந்தாள். “ஏன் இப்படி இருக்கீங்க, சரியா தூங்கலையா கார்த்திக்?” என்றாள் அக்கறையாக.

‘ம்...’ என சம்மதமாக தலையசைத்து, “நீ எப்படியிருக்க அவந்திமா? எல்லாம் என்னால வந்தது. உன்னோட இந்த நிலைமைக்கு நானே காரணமாகிட்டேனே.”

தனக்காக அவன் வருந்துவதில் வருத்தம் இருந்தாலும், அதையும் மீறிய சந்தோஷம் புன்னகையாக மலர, அவன் கலங்கிய கண்களை நேருக்குநேர் சந்தித்து, “இந்த நேரம் நடந்ததால உங்களை காரணம் காட்டலாம் கார்த்திக். ஆனா, என் திருமணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை எப்பவாவது நடந்திருக்கத்தான் செய்யும். அதை யாராலும் தடுத்திருக்கவும் முடியாது. ஐம் சாரி கார்த்திக்” என்றாள்.

“என்ன திடீர்னு சாரி கேட்கிற?”

முகம் முழுக்க வேதனையுடன், “அ...அது கௌஷிக் பற்றி நீங்க எவ்வளவோ சொல்லியிருந்தும், நான்தான் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். புருஷன் பேச்சைக் கேட்கலைல்ல. அதுக்குத்தான் இப்ப அனுபவிக்கிறேன்.”

அவளின் வேதனையை உணர்ந்தவன், “பரவாயில்ல விடு. அவனுக்குன்னு நான் வச்சிருக்கிற தண்டனையில் இருந்து என்னைக்குமே தப்பிக்க முடியாது” என்றபொழுது அவனின் முகத்தில் பழிவாங்கத் துடிக்கும் வேகம் இருந்தது. அந்த பழிவுணர்ச்சி தனக்கானதுதான். இருந்தாலும் கணவனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்ற பயமும் அவளைப் பிடித்தது.

“என்னடா அழகி முகமெல்லாம் வெளிறிப் போச்சி? தையல் போட்ட இடம் வலிக்குதா?” என்று கட்டுப் போட்டிருந்த இடத்தை மயிலிறகாய் வருட, அந்த மென்மையை மௌனமாக அனுபவித்தாள். அவனே தொடர்ந்து “ப்ச்... வலிக்காம என்ன. நான் பாரு கேனத்தனமா கேள்வி கேட்கிறேன். நீ பேசாம தூங்குமா? இன்னைக்குத்தான் திரும்பவும் ஸ்டிச் பண்ணியிருக்கு” என்றான்.

“இந்த வலியோட, இங்கதான் ரொம்ப வலிக்குது கார்த்திக்” என்று தன் இதயம் தொட்டுக் காண்பித்தாள்.

அவளின் மனவலியை, மரணவலியாக தன்னுள் உணர்ந்தவனால், மறந்தும் அவள் உடல் வலியை தன்னுள் வாங்க முடியாமல் தவித்தான்.

அவனை உணர்ந்தவளாய், “நீங்க போலீஸ்ல மாட்டினதுக்கு காரணம் நான்தான கார்த்திக்? உங்களை அன்னைக்கு நான் போகச் சொல்லலன்னா, நீங்க ஒண்ணு என்னோடவே இருந்திருப்பீங்க. இல்ல என்னைப் பார்க்க வராமலே போயிருந்தா, உங்களோட ப்ளான் சொதப்பாம இருந்திருக்கும்தான?” என கேட்டாள்.

அவளின் பேச்சில் குற்றவுணர்வு அதிகமாக எழும்பாத குரலில், “நான் போனது திருடுறதுக்குமா” என்றான் அவளின் காதலன். “திருடன்னு தெரிஞ்சும்...” என குரல் அடைக்க நிறுத்தியவனை,

மேலே தொடரவிடாமல் “ம்... தெரிஞ்சும்தான்” என்றாள் தலைதிருப்பி வந்த கண்ணீரை அடக்கியபடி.

“தெரிஞ்சும் என்மேல கோவம், வெறுப்புன்னு எதுவும் வரலையா அவந்தி?”

“கோவமில்லை கார்த்திக். வருத்தம்தான். உங்களை என்னால சரியான பாதையில கொண்டு போக முடியும் என்ற நம்பிக்கை இருக்கு. அதுக்கு முன்னாடி, உங்களுடைய தப்பு எண்ணிக்கை அதிகமாகுது கார்த்திக். அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல” என்று சில வினாடிகள் பேச்சை நிறத்தியவள், அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி, “அன்னைக்குத் தரமுடியாதுன்னு சொன்னதை இன்னைக்கு முழுமனசோட தர்றேன். எடுத்துக்கோங்க கார்த்திக்” என்றவள் முகத்தில் எந்தவித சலனங்களும் இல்லை.

“ஆனா, ப்ளீஸ் போலீஸ்ல சரணடைஞ்சி, கொடுக்கிற தண்டனையை முடிச்சிட்டு, சீக்கிரமே என்கிட்ட வந்திருங்க கார்த்திக். எனக்காக! உங்க அவந்திக்காக!” என்றாள் கண்களில் ஏக்கத்துடனும், எதிர்பார்ப்புடனும்.

அவளின் இந்த அன்பில் மூச்சுமுட்ட, சட்டென்று அவளிடமிருந்து விலகி எழுந்தவன், “ஏன்டி என்னை உன் அன்பால கொல்ற? பேசாம நீ என்னை ரெண்டு அடி அடிச்சி, வாய்க்கு வந்ததை பேசியிருந்தா, மனசு சந்தோஷப்பட்டிருக்குமோ என்னவோ. உன்னோட பாசம் என்னை, என்னைப் படுத்தி எடுக்குதுடி. உனக்குன்னு நான் எதுவும் செய்யலையே? உன்னை வருத்தியதைத் தவிர...”

அவள் அருகில் அமர்ந்து அவளின் கைபிடித்து, “உன்னோட மனசு, எந்தளவு எனக்காக யோசிச்சிருக்குன்னு, என்னால புரிஞ்சிக்க முடியுதுமா. என்னை இந்த நிலையிலயும் ஏத்துக்க உன்மனசை பக்குவப்படுத்திக்கிட்டன்னு தெரியுது. நீ இவ்வளவு இறங்கி வர்றளவுக்கு, அருகதை எனக்கில்லமா. உன் அன்புக்கு நான் தகுதியானவன் தானான்னு, என்னையவே நிறைய முறை கேட்டுக்கிட்டேன். இனிமேல் இந்த மாதிரி எடுத்துக்கோங்கன்னு, உன்னை நீயே சமாதானப்படுத்தி சங்கடப்பட்டு கேட்காதடி. மனசுக்கு கஷ்டமாயிருக்கு. விதியிருந்தா, நாம முறையா வாழ்க்கையில ஒண்ணு சேரும் போது, கேட்காமலேயே எடுத்துக்கறேன்” என்றவன் குரல் கமற, “அதுவும் இந்தமாதிரி நிலைமையில எப்படிமா? நான் அந்தளவுக்கு மோசமானவன் கிடையாதுடா. எது உன்னை இப்படில்லாம் கேட்க தூண்டிச்சி? உன் அளவில்லாத அன்பு உன்புறம் முழுசா எனை அடியோடு சாய்க்குது” என்றவனின் வார்த்தைகளில் எல்லையில்லாத வருத்தமிருந்தது.

அதை உணர்ந்தவள், “இல்ல கார்த்திக் நான் என்ன சொல்ல வர்றேன்னா...” என்றவளைத் தடுத்து, “அன்னைக்கு உன் மறுப்பாலதான் நான் மனசுடைஞ்சி போயி மாட்டிக்கிட்டேன்னு நினைக்கிறியா? இல்லடா. அந்த ஆஃபீஸர் எந்த நேரமானாலும் காத்திருந்துப் பிடிச்சிருப்பான். அது அவங்களோட கடமை. அதைத் தடுக்க முடியாதே.”

“அப்ப நீங்க திரும்பி வரமாட்டீங்களா கார்த்திக்?” என்றாள் குரலில் ஏமாற்றத்தைக் காண்பித்து.

“உனக்கு அர்த்தமில்லாத வெற்று நம்பிக்கையைக் கொடுக்க, நான் தயாராயில்ல அவந்தி. நான் புதைகுழியில கால் வச்சிருக்கேன். அது கொஞ்சம் கொஞ்சமா, என்னை உள்ளே இழுக்குது. தெரிஞ்சிதான் போறேன் இல்லன்னு சொல்லல. நான் வெளியே வர்றதும், அப்படியே உள்ளேயே போ...”

முடியுமுன் அவந்தியின் கை அவன் வாய்மூடி தலையசைத்து, “ப்ளீஸ் சொல்லாதீங்க கார்த்திக்” என இறைஞ்சியவள், “எனக்கு நம்பிக்கையிருக்கு நீங்க திரும்பி வருவீங்கன்னு.”

அவந்திகாவின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் ‘கார்த்திக்’ என்ற தன் பெயர் உச்சரிக்கப்படுவதை அப்பொழுதுதான் கவனித்தான். ‘இவளோட காதல் என்மேலயா? இல்ல கார்த்திக் என்ற பெயர் மேலயா?” என்ற பெரிய சந்தேகம் அவனின் மூளையில் தோன்ற ஆரம்பித்தது.

பின் ஒரு சிரிப்புடன் அதைத் தட்டிவிட்டு, முதல்முதலாக தன்னைப் பார்த்து திருமணத்திற்கு கேட்டது முதல் உண்டான அன்பை எந்த நிலையிலும் தடுமாறாமலும், தடம் மாறாமலும் பாதுகாத்து வைத்திருந்த அவன் அழகியின் காதலில், இன்றும் கர்வம் கொண்டது அவனின் ஆண்மனம். இந்த நிலையிலும் எனக்காக, தன்னைத் தரத் தயாராயிருக்கும் அவனின் அழகியை இந்த நிலைக்கு ஆளாக்கிய கௌஷிக்கை, எப்படி லாக் செய்து அவனுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்க வேண்டுமென்று மனக்கணக்கு போட்டான்.

அவனுக்குத் தெரியவில்லை. கௌஷிக் சாது போலிருக்கும் ஒரு சாத்தான். இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் பெரிய தில்லாலங்கடி பேர்வழி என்று.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top