• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
916
12


சரத்தினால் சலனத்திலிருந்தவளை ஆசுவாசப்படுத்தவென்று வந்த போனை எடுத்தவள் முகம் “ஃப்ரண்ட்அம்மாஆச்சி” என மலர...

“என்னடா ராசி ஹேப்பியா இருக்க போல. சாயங்காலம் பேசின பிறகு, ஊருக்குப் போயிட்டு போன் பண்ணுவன்னு நினைச்சேன். போனே வரல. அதான் கொஞ்சம் பயம் வந்திருச்சி. நல்லபடியா போயிட்ட தானடா?” என்றார் கவலையுடன் சேர்ந்த அக்கறையுடன்.

“இல்ல அம்மாஆச்சி. சாரி நான் இன்னும் மதுரை போகல. மேலூர்ல ஃப்ரண்ட் வீட்ல இருக்கேன்.”

“மேலூரா? உனக்கு அங்க யாரைத் தெரியும் ராசி? மேலூர்ல எங்க அக்கா ஒருத்தவங்க இருந்தாங்க. ஆனா, அவங்க கூட அங்கதான் இருக்காங்களா தெரியாது. தெரியாதவங்க வீட்டுக்குப் போயிராதடா தங்கம்” என்றார் பயத்தில்.

“ஹேய் அம்மாஆச்சி! என்னை பார்த்தா எப்படித் தோணுது. யார் கூப்பிட்டாலும் பின்னாடியே போற பாப்பான்னா. யூ நோ டார்லிங் மீ ராசி ஓகே. என்னைப் பார்த்துத்தான் எல்லாரும் பயப்படுவாங்க.”

“சரி சரி.. யார் அந்த ப்ரண்ட்?” என்றதும் நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லி, “நம்ம சேவியர் அண்ணா வீட்டு பிரச்சனையை சால்வ் பண்ணினவர்” என்றாள்.

‘ஓ...’ என்றவர் “எப்ப கிளம்பற?”

“மூணு நாள் இருக்கச் சொல்றாங்க அம்மாஆச்சி.’”

“அத்தனை நாளா? சரிம்மா நீ அங்க இருக்கிற பெரியவங்ககிட்ட போனை கொடு நான் பேசணும்” எனவும் சாந்தியிடம் போனை நீட்டி “அம்மாஆச்சி பேசணுமாம்” என்றாள்.

சாந்தி வேகமாக போனை வாங்கி ‘வணக்கம்’ சொல்லி ஆரம்ப நலவிசாரிப்புகள் முடித்து, “என் பொண்ணோட கல்யாணம் காலையில உங்க பேத்தி ரெண்டு நாள் எங்களோட இருக்கட்டுமே. நீங்க என்னம்மா சொல்றீங்க?” என்றார் மறுத்து விடக்கூடாதே என்ற எதிர்பார்ப்புடன்.

அதை உணர்ந்த மீனலோஜினி சிரித்தபடி, “அவ மூணு நாள் சொன்னா உனக்கு இரண்டு நாள் போதுமா” என கேலியாய் கேட்டவரிடம் “ரொம்ப நன்றிமா” என்றார்.

“நல்லா பார்த்துக்கோங்க. அவளுக்குன்னு எதுவும் வாய்திறந்து கேட்க மாட்டா. மத்தவங்களுக்கு பார்த்து பார்த்து செய்வா” என்று இன்னும் ஒரு சில ராசி புராணங்கள் பாடியே வைத்தார்.

போனை கையில் வாங்கியவள், “என்னம்மா அம்மாஆச்சி ரொம்ப ப்ளேடு போட்டாங்களா? என்னைப்பற்றி ஓவரா புகழ்ந்திருப்பாங்களே. அதையெல்லாம் நம்பாதீங்க. எனக்குப் புகழ்ச்சிப் பிடிக்காதுன்னா இந்த லோஜி கேட்கிறதே இல்லை” என்று தற்பெருமை அடித்தாள்.

அவளையே அமைதியாக பார்த்தபடி, “உன்னைப் பற்றி ஒண்ணும் சொல்லலையேமா. எதாவது சொல்லணும்னு எதிர்பார்க்குறியா?” என்று வந்த சிரிப்பை உள்ளடக்கி சொல்ல...

“ஹான்! ஒண்ணுமே சொல்லலையா? நிஜமா ஒண்ணுமே சொல்லலையா?” என்று பாவமாய் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பை வெளியிட்டு, “நான் தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு உளறிட்டேன் போல” என்றாள்.

சட்டென்று வாய்விட்டுச் சிரித்த சாந்தியை அனைவரும் வியப்புடன் பார்த்திருக்க அவர்களையறியாமல் கண்கள் கலங்கியது. நீண்ட வருடங்களுக்குப் பின்னான சாந்தியின் சந்தோஷச் சிரிப்பில்.

ராசியை அணைத்து “சும்மா சொன்னேன்மா. முழுக்க முழுக்க உன்னோட புராணம் தான் போதுமா!”

“அதான பார்த்தேன். என்னடா பாசத்தைப் பிழிஞ்சி லோஜியை கவுத்து வச்சிருக்கோமே. எப்படி என்னைப்பற்றி பேசாமல் இருக்கலாம். ஊர்ல வந்து வச்சிக்கிறேன்னு மனசுக்குள்ள திட்டக்கூட செஞ்சிட்டேன் தெரியுமா!” என்று ஒரு அப்பாவி லுக் விட்டாள்.

அதில் இன்னுமே சிரித்த சாந்தியின் கண்கள் கலங்கியது. அவர் கண்ணீரைக் காணவும், “என்னாச்சிம்மா? நான் சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன்” என்று பதற...

அவளை நெருங்கிய தீபா, “அது ஆனந்த கண்ணீர். ரொம்ப வருஷம் கழிச்சி மனம் விட்டுச் சிரிச்சதால வந்தது. தேங்க்ஸ்” என்றாள் ராசியை அணைத்து.

“ஹேய்! ஹலோ! எங்க லோஜியைக் கவுக்க எனக்கு பத்து வருஷமாச்சி. உங்களை கவுக்க பத்து நிமிஷம் போதும் போலிருக்கு. இவ்வளவு இளகின மனசாவா இருக்கிறது. வெரி பேட். இந்த உலகம் ரொம்ப பொல்லாதது புரிஞ்சிக்கோங்க. ஸோ பீ கேர்ஃபுல் ஓகே” என்று அந்த சூழ்நிலையை தன் கு(ழந்தை)றும்புதனத்தால் கலகலப்பாக்கினாள்.

அதில் சிரித்தாலும், “ஆமா, பத்து நிமிஷத்துல நீ யாரை கவுத்தன்னு சொல்லி இவ்வளவு பில்ம் ஓட்டுற?” என்று ஒருமையில் கலாய்த்த தீபாவிடம்...

“அப்ப நீங்க யாரும் கவுரலையா? என்னை நானே டேமேஜ் பண்ணிக்கிட்டேனா? சே... இது தெரியாம என்னோட ஃபுல் எனர்ஜியை வேஸ்ட் பண்ணிட்டேன் போல” என்றதில் மறுபடியும் ஒரு சிரிப்பலை ஆரம்பித்தது.

“சரி வா போய் படுக்கலாம். இல்ல காலையில எனக்கு கணவராகப் போறவர் சாயங்காலம் தான் தாலிகட்ட முடியும்.”

“ஏன்?” என புரியாமல் விழித்தவளிடம், “தூக்கத்துல நான் கும்பகர்ணி லேட்டா தூங்கி.. லேட்டா எழுந்தா! ம்.. சொல்லு?”

“ஓகே. அப்ப ராசி பேசலை” என்றதும்...

“யார் ராசி?” என்றாள் தீபா.

“நான் தான் ராசி” என்றாள் இவள்.

“இல்ல அப்ப...” ‘ஹரிப்ரியா’ என்று சொன்னதை அவளிடம் கேட்க வந்தவளை சாந்தி தடுத்து, “சீக்கிரம் படுத்து தூங்குங்கம்மா. காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்” எனறு அனுப்பினார்.

தீபாவுடன் அவளின் படுக்கையறைக்குள் நுழையப் போன ராசிக்கு, திரும்பிப் பார்க்கச் சொல்லி தன்னைத் துளைத்த பார்வையின் வீரியத்தில் திரும்ப... அவள் திரும்பியும் தன் பார்வையை மாற்றவில்லை சரத். அந்தப் பார்வை ஆசையாலோ, காமத்தாலோ அல்ல. ஒரு நன்றி, புதிதாக ஒருவரைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளத்தோன்றும் ஆர்வம். அதையும் தாண்டி ஒரு ஏக்கப் பார்வை.

‘அந்த பார்வைக்கு அர்த்தம் என்ன?’ என மனதினுள் கேட்க, வினாடிகள் நிமிடங்களாக பார்வைகளும் மாறாதிருந்தது.

தீபாவின் “என்ன அங்கேயே நின்னுட்ட? உள்ளே வா” என்ற அழைப்பில் கலைந்து உள்ளே சென்றாலும், அவனின் பார்வை தன்னைத் தொடர்ந்து உடல் சிலிர்த்து, உயிருள் ஊடுருவுவதை உணர்ந்தாள். ‘என்ன பார்வைடா இது!’ என்றது அவளின் குறும்பு மனது.

தோழிக்கு உதவுகையில் பொறுப்பான பெண்ணாக, கோவிலில் கோபக்காரியாக, காஃபி ஷாப்பில் சண்டைக்காரியாக பார்த்த ராசியை... மாடியிறங்கி வந்ததிலிருந்து தன் குடும்பத்தினருடன் அவளடித்த வாயாடல், தன் அக்காவை மனம்விட்டு சிரிக்க வைத்தது, அவளின் குழந்தைத்தனமான, குறும்புத்தனமான பேச்சி, சீரியஸான பேச்சை சிரிப்பாக மாற்றியது என அனைத்தையும் ரசித்திருந்தான்.

முன்னரும் அவள் மேல் ஈடுபாடு இருந்தது. அதை உணர்ந்தாலும் தனக்கும் அதுக்கும் செட்டாகாது என்று ஒதுங்கியிருந்தான். ஆனால், இப்பொழுது அவள் தனக்கே தனக்கு வேண்டுமென்ற எண்ணம் தோன்றி ஒருவித ஏக்கத்தை உண்டு பண்ண அவளையே பார்த்திருந்தான். தன் பாதிப்பு அவளுள்ளும் இருக்கிறது என்பதை அவளின் பார்வை உணர்த்தியது. அதை அவள் உணர்ந்திருப்பாளா என்ற ஆராய்ச்சிக்கு செல்லவில்லை சரத். அவள் உள்ளே சென்றதும் சற்று நேரத்தில் தூங்கச் சென்றான்.

மறுநாள் காலை அங்குள்ள மண்டபத்தில் திருமண நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தன. காலையிலேயே மணமகளுடன் ராசியும் எழுந்து கிளம்ப, பயணத்திற்கு சுடிதார் மட்டுமே எடுத்து வந்திருந்தாள். ‘சே... நேத்து கட்டியிருந்த சேலையை இன்னைக்கு எடுத்து வச்சிருக்கலாம்.’ மனதில் தோன்றினாலும் சுடிதாரை அணியப் போனவளை சாந்தி தடுத்து தீபாவிற்காக வாங்கிய புது பட்டுப்புடவையை கொடுத்து அணியச் சொன்னார்.

தீபாவிற்கு தைத்திருந்த ஜாக்கெட்டில் சின்னச் சின்ன அட்ஜெஸ்ட் செய்து அந்த காலை நேரத்தில் சாந்தி தைத்துக் கொடுத்ததோடில்லாமல் அதற்கு ஏற்றாற்போல் நகைகளும் கொடுக்க... மறுத்தவளை மல்லுக்கட்டி சம்மதிக்க வைத்தார். இந்த நேரத்தில் இது அவருக்குத் தேவையில்லாத வேலைதான். இருந்தாலும் அவரால் ராசியை வேற்றாளாகப் பார்க்க முடியவில்லை. தன் பெண்ணே அவளுருவத்தில் வந்ததாகவே எண்ணினார்.

விடியற்காலையிலேயே சரத் மண்டபம் செல்ல மணப்பெண்ணுடன் வந்திறங்கிய ராசியையே நிறைய பேர் வைத்தகண் வாங்காமல் பார்க்க... சரத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன? அவளைப் பார்த்து அயர்ந்தவன் கண்களாலேயே அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளைவிட்டு நகரமாட்டேன் என அடம்பிடித்த மனதை தடுக்க வழியில்லாமல் தடுமாறினான்.

தீபாவோ, “ப்ரியா எல்லாரும் கல்யாணப் பொண்ணான என்னைப் பார்க்கலை. உன்னைத்தான் பார்க்கிறாங்க. ஒருவேளை நீதான் பொண்ணுன்னு நினைச்சிட்டாங்களோ!”

“தீபா ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? எனக்கு ஏற்கனவே சங்கோஜமா இருக்கு. உங்களைத் தவிர என்னை வேற யாருக்கும் தெரியாது. அவங்களையும் எனக்குத் தெரியாது நானே எப்படிடா தெரியாத இடத்தில் இருக்கிறதுன்னு சங்கடப்பட்டுட்டு இருக்கேன். நீங்க வேற” என்றாள்.

“ஹேய் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். ஆனா, உண்மையிலேயே நீ ரொம்ப அழகாயிருக்க” என்றாள் மனதார.

“இல்ல நீங்க தான் அழகு என்னைவிட.”

“இப்ப என்ன அழகுப் போட்டியா வைக்கப்போறோம். வா உள்ளே போகலாம்” என... பெண்ணழைப்பு முடித்து பெண்ணை மேடையில் அமரச் செய்ய... ராசியை தன்னுடனேயே நிற்கச் சொல்லிவிட்டாள் தீபா.

யோகேஷ் தீபாவிடம் குனிந்து, “இவங்க எங்க இங்க?” என்றான் மெதுவாக.

“உங்களுக்கு அவளை முன்னாடியே தெரியுமா?” தீபா ஆச்சர்யமாய் கேட்டாள்.

“ஏன் தெரியாது. அன்னைக்கு உங்க மாமாகிட்ட பேசிட்டு போன பொண்ணுதான?” என்றான் கூலாக.

“மாமாகிட்ட பேசிட்டு போன பொண்ணா எப்ப?” என்றாள் புரியாதவளாய்.

“என்னமா மறந்துட்டியா? நம்ம பர்ஸ்ட் மீட்டிங்கப்ப உங்க மாமா மேல தெரியாம சுடுதண்ணீர் ஊத்தி மன்னிப்பு கேட்டுட்டுப் போனாளே. அது இந்தப் பொண்ணுதான்” என்றான்.

அன்று காஃபி ஷாப்பில் சரத்திடம் குனிந்து பேசுகையில் தாயும் மகளும் கவனிக்கவில்லை என்றாலும் யோகேஷ் உரிமையாய் சரத்திடம் பேசியவளைப் பார்த்திருந்தான். அதனால் பார்த்ததும் அவளை இனம் கண்டுகொண்டு சொன்னான்.

‘ஓ...’ என்றபடி சட்டென்று சரத்தைப் பார்க்க அவனோ வேறெங்கோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்க, ‘மாமா யாரைப் பார்க்கிறாங்க?’ என்று பார்த்தவள் இன்பமாய் அதிர்ந்தாள்.

அங்கோ ராசி தன் தந்தையிடம் வாயாடிக் கொண்டிருந்தாள். ‘அடப்பாவி மாமா! நேத்து நைட் மேரேஜ் பத்தி கேட்டப்ப அவ்வளவு பிகு பண்ணி ஓடிட்டு, இப்ப என்னடான்னா பப்ளிக்கா சைட்டடிக்கிறீங்களா! இந்த பொண்ணும் தான் மாமாவைத் திரும்பிப் பார்த்தால் என்ன’ என்றும் தோன்றியது. ‘இருங்க உங்களை அப்புறம் பார்த்துக்கறேன்’ என்றவளுக்கு அதற்கு பிறகு நேரமே கிடைக்கவில்லை யோகேஷிற்கு மனைவியானதால்.

ராசியைப் பற்றி விசாரித்தவர்களுக்கு இல்லாத தங்கையை வரவழைத்து, தங்கை மகள் தன் மகள் என்றார் சாந்தி. ராசிக்கோ நேற்றுத்தான் அவர்களை முதன்முறையாக சந்தித்தோம் என்ற நினைவே இல்லை. தன் வீடு போல் அனைத்து வேலைகளிலும் பங்கெடுத்தாள். மாப்பிள்ளை ஊர் உள்ளுரே என்பதால் பெண்ணழைப்பு மாப்பிள்ளை அழைப்பு, சீர் அது இதென்று எல்லாம் முடிய மூன்று நாளாகியது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
916
லோஜிக்கு போன் செய்து அவ்வப்பொழுது நடக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் சொல்லி, “நல்லா என்ஜாய் பண்றேன் அம்மாஆச்சி” என்றாள் குதூகலமாக.

“நீ சந்தோஷமா இருக்கிறல்லடா?”

“ரொம்ப!” என்றாள் மனம் மகிழ்வாக.

“எனக்கும் அது தான் வேணும்மா” என்றார் மனதார.

“ஆனா, அம்மாஆச்சி ஐ மிஸ் யூ அன்ட் ஐ லவ் யூ சோ மச்” என்று போனில் முத்தமிட்டாள்.

“ஏய்! சீ.. எச்சில் பண்ணாத” என்றார் கிண்டலாக.

“ஆங்! என் லோஜிக்கு நான் முத்தம் கொடுக்குறேன் உங்களுக்கென்ன வந்தது. கொடுத்தா வாங்கிட்டு சைலண்ட்டா போகணும். நான் அப்புறம் பேசுறேன் பை” என்று சிரித்த முகமாக திரும்பியவளை யாரோ கைபிடித்து இழுக்க, அதன் வேகத்திலேயே கண்டுபிடித்தாள் இது சரத்தின் வேலையென்று. “உங்களுக்கு இதே வேலையா போச்சி” என்று கோபத்தில் திரும்பியவள் தன்னைத் தாண்டிச் சென்ற பாம்பைப் பார்த்து பயத்தில் அவனை இறுக்கியணைத்து கண்மூடினாள்.

“பயப்படாத ராசி. ஒண்ணும் பண்ணாது போயிருச்சி.”

ஸ்ஸ்... என மெல்ல கண்திறந்தவள், தன்னிலை உணர வெட்கம் அழையா விருந்தாளியாய் வர, சட்டென்று அவனை விட்டு விலகி “சாரி” என்றவள், பின் “ஆமா அது என்ன பாம்பு?”

“முதல்ல இங்க ஏன் வந்த சொல்லு?”

“நா..னா!” என்றவள் அப்பொழுதுதான் தான் நின்றிருந்த இடத்தைப் பார்த்தாள். வாசலிலிருந்து நடந்தபடியே பேசி, வீட்டிற்கு வெளியே உள்ள காட்டுச் செடிகளின் அருகில் நின்றிருந்தாள். “தேங்க்யூ சார். நான் போன் பேசினபடி வந்திருக்கேன். அதான் கவனிக்கல.”

தன்னை மறந்து போன் பேசுற அளவுக்கு யாரோட பேசிட்டிருந்திருப்பா. அதுவும் அவன் கடைசியாக கேட்ட, ‘ஐ மிஸ் யூ! ஐ லவ் யூ’ அவனைக் குழப்பியது. “யார்கிட்ட பேசிட்டிருந்த?” என்றான் ஒருமாதிரிக் குரலில். உள்ளுக்குள் அது ஒரு ஆணாகவோ, காதலனாகவோ இருந்துவிடக் கூடாதென்ற ப்ரார்த்தனை இருந்தது.

அவன் குரலின் வித்தியாசத்தை உணராமல், “ஏன் எங்க அம்மாஆச்சிகிட்ட தான் பேசினேன்.” அவன் முகம் பார்த்து “ஏன் கேட்குறீங்க?” என்றாள்.

‘ஷப்பா’ என்று சரத் நிம்மதிப் பெருமூச்சிவிட... அவனை கேள்வியாய் பார்த்தவளை கண்டுகொள்ளாமல், “ஏன் கேட்டேன்னு காரணம் சொன்னா என்னை கொன்னுரமாட்டாளா!” நினைத்தவன், “இல்ல சும்மாதான். ஐ லவ் யூன்னு கேட்டுச்சி. அதான்” என்றான் சாதாரணமாக கேட்பது போல்.

அவன் சாதாரணமாக அதைச் சொன்ன போதிலும், அதில் ஏதோ இருப்பதை உணர்ந்தவள், அதை அதிகம் நோண்டாமல், “சரி நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலையே” என்றாள்.

‘என்ன கேட்டா?’ என அவன் விழிக்க.. “அதுக்குள்ள மறந்தாச்சா? மண்டு மண்டு. அது என்ன பாம்பு கேட்டேனே” என நினைவு படுத்தினாள்.

“ஓஹ்... அதுவா! அது சாதாரண விஷப்பாம்பு தான்மா பயப்பட ஒண்ணுமில்லை” என்றான் நல்லவனாக வந்த சிரிப்பை அடக்கி.

“என்னது விஷப்பாம்பா? அதுல என்ன சாதாரணம் வந்தது?” என அதிர்ந்தவள் அவனின் அடக்கிய சிரிப்பைக் கண்டு, “பொய்தான?” என்றாள் முறைப்போடு.

“மண்டுங்களுக்கு விவரம் தெரியாதே பேபி” என்றான் பாவமாய்.

“ச்சே... உங்களைப் போய் கேட்டேன் பாருங்க என்னைச் சொல்லணும்” என்றவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க... அவளின் கையைப் பிடித்தவன் “முழுசா கேட்டுட்டுப் போ ராசி” என்று கூறியும் கோவத்தில் அவள் திரும்பாமலிருக்க... “அது சாதாரண தண்ணிபாம்பு தான்” என்றான்.

அதில் கோபம் குறைந்து அவன்புறம் திரும்பி, “அப்ப அது கடிக்காதா!” என்றாள் ஆச்சர்யமாய்.

“கடிச்சாலும் விஷமிருக்காது. தழும்பு மாதிரி வரும். அதுக்கு எதாவது மருந்து எடுத்துக்கிட்டா போதும். இல்லன்னா பச்சிலை கட்டினால் போதும். இன்னும் டீடெய்லா சொல்ல இப்ப டைம் இல்ல. ஸோ.. உள்ள போகலாம்” என்று அவளை அழைத்துச் சென்றான்.

காலை ஆறு மணிக்கெல்லாம் கருப்பும் சிவப்பும் சேர்ந்த சுடிதாரில் கிளம்பித் தயாராக வந்தவளை, ‘அதுக்குள்ளேயா?’ என்பதுபோல் பார்த்தவர்களுக்கு அவளை ஊருக்கு அனுப்பவே மனம் வரவில்லை. அதற்காக அவளை தங்களுடனா வைத்திருக்க முடியும். மனம் தன் ஆற்றாமையை பெருமூச்சாக வெளியிட்டது.

அவர்களின் பார்வையில், “ஏன் அப்படிப் பார்க்குறீங்க? நான் மதுரைக்குப் கிளம்பறேன். பஸ்ஸ்டாப் எங்கேயிருக்கு சொல்றீங்களா?”

“தனியாவா? அதான் நான் வர்றேன்னு சொல்லியிருந்தேனே ராசி?”

“நீங்க சொன்னீங்க தான். அதுக்காக உங்களை டிஸ்டர்ப் பண்ணனும்னு அவசியமில்லையே. நீங்க இருந்து வாங்க. நான் கிளம்பறேன் எனக்கு பயம்லாம் இல்லை” என்றவளை...

பாஸ்கர் இடைமறித்து, “எங்க பொண்ணுன்னா தனியா அனுப்புவோமா. இதுல பயம் பயம் இல்லன்றதுக்கு இடமே இல்லமா, இந்த மூணு நாளா என் பெரிய பொண்ணு எங்ககூடவே இருந்த ஒரு உணர்வு எங்களுக்கு” என்றார் ஆத்மார்த்தமாக. சரத்திடம் திரும்பி, “டேய் மாப்ள! நீ அவளோடவே கிளம்பு. சென்னைக்கு அவங்க வீட்ல விடுறதுவரை பாப்பா உன்னோட பொறுப்பு” என்றார் முடிவாய்.

“நான் ஒண்ணும் மாட்டேன்னு சொல்லலை. முதல்ல அவளை தனியா போறேன்னு சொல்ல வேண்டாம்னு சொல்லுங்க. நான் பத்து நிமிஷத்துல கிளம்பி வர்றேன்” என்று சற்று எரிச்சலில் மொழிந்து, சொன்னாற்போல் வந்தவன் அங்கு ஹரிப்ரியாவின் போட்டோவைப் பார்த்தபடி மெய்மறந்து நின்றிருந்த ராசியைக் கண்டான். சற்று நேரத்திற்கு முன் அவள் தனியாக செல்கிறேன் என்றதால் வந்த கோபத்தில் அவளை சரியாக கவனிக்கவில்லை.

கருப்பும், சிவப்புமான அந்த சுடிதார் அவளின் உடலுக்கும், அழகான முகத்திற்கும் எடுப்பாக இருக்க... அங்கு வந்த சாந்தி அவளுக்கு பூ வைத்து கையால் “அழகுடா” என்று திருஷ்டி சுத்த... ‘அந்த பூவாக நான் மாறக்கூடாதா’ என ஏங்க ஆரம்பித்தான் சரத். அவளையே பார்த்தபடி அருகில் நின்றவனை உணர்ந்தவள், “ரொம்ப அழகுல்ல சர...” முடிக்குமுன் சரத் அவளை எண்ணி ‘ம்..’ என.. “உங்க ஒய்ஃப்” என்று முடித்தாள் ராசி.

“வாட்?” என்றவனிடம்... “உங்க ஒய்ஃப் ரொம்ப அழகு சொன்னேன்” என்றாள் அவன்புறம் திரும்பியபடி.

அதுவரை அவளை மட்டுமே ரசித்திருந்தவன், ‘உங்க ஒய்ஃப்’ என்ற வார்த்தையில் அடிபட, “அவ என்னோட ஒய்ஃப் இல்ல. அக்கா பொண்ணு. அக்கா பொண்ணு மட்டும்தான். அதைத் தாண்டி எதுவுமில்லை. புரியுதா?” என்றபடி கோபத்துடன் பேக்கை எடுத்து காரில் சென்றமர்ந்தான்.

சரத்தின் வார்த்தையில் செல்லும் அவனையே புதிதாய்! புதிராய்! பார்த்தாள் ராசி.

சரத்தின் வார்த்தையைக் கேட்டவளினுள் ஏதோ ஒரு மாற்றம். ‘அக்கா பொண்ணு மட்டும்தான். ஒய்ஃப் இல்ல.’ இதே வார்த்தை பத்து வருடங்கள் முன் கிரி சொன்னது நினைவு வர மனதினுள் ஒருவித நிம்மதியும் சேர்ந்தே வந்தது. அவனைத் தொடர்ந்து பேக்கை எடுக்க, சாந்தி குங்குமம் வைத்ததும் விடைபெற்று காருக்கு வர, முன் கதவைத் திறந்தவன் முகம் இறுகியிருப்பதை உணர்ந்தவளுக்கு அவளைச் சமாதானப்படுத்தச் சொல்லி மனம் சொல்ல, “சாரி” என்றாள்.

அதை கண்டு கொள்ளாமல் அக்கா, மச்சானிடம் தலையசைத்து வண்டியை எடுத்தவன் மதுரை நோக்கிச் செல்ல... தன் மன்னிப்பை அவன் அலட்சியப்படுத்தவும் சட்டென்று அவளின் குழந்தைத்தனம் தலைதூக்க, “அதான்.. ராசி சாரி சொல்றாள்ல. அவளுக்கென்ன தெரியும் உங்க ரிலேஷன்ஷிப் பத்தி. மன்னிச்சா குறைஞ்சிரப் போறீங்களா? ராசி யார்கிட்டேயும் சாரி கேட்டதில்லை. அதுவும் இப்ப அவமேல தப்பே இல்லைன்னு தெரிஞ்சும் சாரி கேட்கிறா. நீங்க என்னடான்னா ரொம்பத்தான் பிகு பண்றீங்க. நீங்க காரை நிறுத்துங்க. நான் பஸ்ல போய்க்கிறேன்” என்று சிறுபெண்ணாய் கோபத்தில் வெடித்தாள்.

சட்டென்று சிரித்தவன் ஸ்டியரிங்கை ஒரு கையில் பிடித்தபடி, மறுகையால் அவளின் தலைகலைத்து, “லூசு! எவ்வளவு கோவம் வருது உனக்கு” என்றான்.

ராசி கோபத்திலிருந்ததால் சரத் அவளை ஒருமையில் அழைத்து, உரிமையாய் தலை கலைத்ததையோ! உணராமல், அவனின் லூசு என்ற வார்த்தையில், “நான் லூசா!” என்றாள் கோபம் குறையாமல்.

திடீரென்று வேகம் குறைத்து ஓரம் கட்டியவன் அவளையே பார்த்திருந்து, “ஆமா லூசுதான்” என்று காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.

“உன்னை! என்ன பண்றேன் பார்” என்று அவனை சரமாரியாக அடிக்க...

“ஹேய் ரோடுமா! போதும் நான் பாவம். அச்சோ.. ராசி இரு காரை நிறுத்துறேன் அப்புறம் என்ன வேணும்னா பண்ணு.” அவளின் அடியுனூடே காரை நிறுத்தியவன், அடித்துக் கொண்டிருந்தவளின் கைபிடித்து தடுக்க, முடியாமல் போனதும் இரு கைகளையும் சேர்த்து ஒரு கைக்குள் அடக்கி, “ராசி ஸ்டாப் ஸ்டாப்” என்று அவள் முகம் நிமிர்த்தி தன்னை நேராக பார்க்க வைத்ததும் தான்... தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று அவளுக்கே உரைத்தது.

பார்வையில் சிறு மிரட்சி தெரிய கைகளை அவனிடமிருந்து விடுவித்தபடி, “சாரிங்க” என்றாள்.

“எதுக்கு சாரி?”

“அ..அது” என்று திணறியவள் “சாரி” என்று மறுபடியும் சொல்லி ஜன்னல்புறம் திரும்பிக் கொண்டாள். மதுரை செல்லும் வரை “மொழியெல்லாம் ஊமையாக” அவரவர் யோசனையில் மூழ்கியபடி ஒருவர் காணாமல் ஒருவர் பார்த்துக்கொண்டு, இடையில் முகவரி மட்டும் கேட்டு மேலமாசி வீதியை வந்தடையும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

இருவருக்குள்ளும் தயக்கம். தங்களை மீறி எதுவோ நடப்பது போல் தோன்றியது. சரத்தின் வீட்டிற்கு சென்றதிலிருந்து எதுவோ ஒன்று அவனிடம் செல் பேசு என்று அசரீரியாக சொல்வது போலவும், அவளே கண்களைத் திருப்ப எண்ணினாலும் தன்னாலேயே சரத்தைச் சுற்ற ஆரம்பித்ததை நிறுத்த வழியில்லாமல் போனது ராசிக்கு. இதில் சிறிதும் மாறாமல் சரத்திற்கு தோன்றியது அவளையே பார்த்திருக்க வேண்டுமென்று.

இதுதான் ஆத்மாக்களின் வலிமையோ!
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top