- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
12
அவன் கண்களில் ‘எனைப் பிரியாதே’ என்ற குழந்தையின் ஏக்கமிருந்ததோ! அவனின்பால் மனம் தடுமாற, அத்தடுமாற்றம் தனக்கு நல்லதல்ல என்றுணர்ந்தவள் கையை விலக்கி, “பத்திரம் கொழுந்தன்” என்று தோழியின் கைபிடித்து சாமி சன்னதி நோக்கி நடக்க, அஞ்சுகாவும் அவர்களுடன் செல்ல, ஆண்கள் இருவர் மட்டுமே அங்கே!
படிகளில் மேலேறியதும் திரும்பிப் பார்த்த பூரணி கண்களில் தினகரன் வசீகரன் தோள் பிடித்து அமரவைப்பது தெரிய விழிகளில் அவளின் வசீகரனை நிறைத்துச் சென்றுவிட்டாள். அவளுக்குமே தன் செய்கைகள் சற்று அதிகப்படி என்று தோன்றுகிறது. கணவன் என்று வருகையில் அனைத்தும் தவிடுபொடியாகிவிடுகிறதே. அவளும்தான் என்ன செய்வாள்!
“அண்ணிகிட்ட எதாவது பேசுனியா? ஐ மீன் நீ குணமாகிட்டதை சொல்லிட்டியா? என்ன வசீண்ணா கேள்விக்குப் பதிலில்லை. அண்ணி திட்டிட்டாங்களா என்ன? ஆனா, அப்படித் தெரியலையே?” என்று அவன் முகம்காண, கலங்கிய கண்களை உதடுகடித்து அடக்கியபடி இருந்தவன் தெரிய, “வசீண்ணா?” என்று பதறிவிட்டான்.
“ரொம்ப அழவச்சிட்டேன்டா தினா. எப்படி என்மேல் இப்படியொரு அன்பு? என்னைப் பைத்தியம்னு சொன்னா அவளுக்கு என்னடா? பைத்தியம்தான நான். பைத்தியத்தைத்தான அவள் கல்யாணம் செய்ததும். இந்த நிலைக்கு அவளை ஆளாக்கியும் யார்கிட்டேயும் என்னை விட்டுக்கொடுக்காம எப்படிப் பேசுறா பாரு. அடிக்கப் போறாள்டா. அதுவும் இந்தப் பைத்தியக்காரப் புருஷனை பைத்தியம்னு சொன்னதுக்காக.”
“கல்யாணத்தப்ப அவள் கையில் களிமண்ணா இருந்திருக்கேன். என்னை எப்படி வேணும்னா அவளால செய்திருக்க முடியும். அவளுக்கான உரிமையா நான் இருந்தும் அப்பவும் நிதானமா எனக்காக, நான் குணமாகி வர்ற காலத்துக்காகக் காத்திருந்திருக்கா. ஆனா, எங்க வீட்டுல... அவளை இந்த நிலைக்குக் கொண்டு வந்த எல்லாரையும் சும்மா விடமாட்டேன்டா” என்றவன் கோவம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறியது.
மனதிலுள்ளதைக் கொட்டினால் அடுத்த சிந்தனை வரும் என்றுணர்ந்த தினா பேசவிட்டு அமைதிகாத்தான்.
“தாலியைக் கூட விட்டு வைக்கலைடா. அதுவும் என் கையாலயே...” வழிந்த கண்ணீரைத் துடைத்து, “இதைவிடப் பெருசா என்ன தண்டனைடா அவளுக்குக் கொடுக்க முடியும்? இதையெல்லாம் பார்க்கிறதுக்குப் பைத்தியமாவே இருந்திருக்கலாம் தோணுதுடா.”
“நீ சுயநலமா பேசுற வசீண்ணா. பிரச்சனையிலிருந்த தப்பிக்கப் பார்க்கிற” என்றான் பட்டென்று.
“தினா!”
“தினாவேதான். இப்ப நிலைக்கு எப்பாடுபட்டாவது அண்ணியைக் கன்வின்ஸ் பண்ணி உன்னோட வாழ வைக்க முடியும். இதே நீ பழைய மாதிரி இருந்திருந்தா, கடைசிவரை உன் நினைவுல வேற கல்யாணம் முடிக்காம தன்னந்தனியா வாழ்ந்திருப்பாங்க. அவங்க குடும்பமும் சொல்லிக்கிர மாதிரியில்லைன்றப்ப, அந்தத் தனிமையும் கொடுமையாதான் முடிஞ்சிருக்கும். அது அவங்களுக்குத் தண்டனையில்லையா?”
தம்பியின் வார்த்தையிலிருந்த உண்மை சுட, “சாரிடா தினா” என்றான் வருந்தி.
“விடு வசீண்ணா. நீ பேசு” என்றான்.
“எங்களைப் பற்றித் தெரிந்த எல்லாரும் சொல்றது என்ன தெரியுமா? இதுவரை ரொம்ப கஷ்டப்பட்டுட்டா, இனியாவது அவளை நல்லா பார்த்துக்கன்றதுதான். இவ்வளவு நடந்த பிறகும் என்னைத் திட்டலைடா. பேருக்குக் கூட என்கிட்ட கோவத்தைக் காட்டலை. அதைக் காட்டியிருந்தாலாவது கொஞ்சம் நிம்மதியாயிருந்திருக்கும். அதற்கு மாறா அவள் அன்பைக் கொட்டுறா. அதுவும் திகட்டத்திகட்ட. எனக்கு அவள் வேணும்! அவளோட மொத்தக் காதலையும் பக்கத்துலயிருந்து அனுபவிக்கிற உரிமை வேணும்! அதுக்காக எத்தனை முறைனாலும் அவளைத் தொல்லை செய்து என்கிட்ட வர வழி செய்வேன்” என்றான் ஸ்திரமாக.
“ஒரு சந்தேகம் கேட்கவா?” என்றவன் அண்ணனின் பதிலை எதிர்பாராது, “நீ சரியாகிட்டன்னு தெரிந்தாலும் அண்ணி வரமாட்டாங்க தோணுது. தப்பா எடுத்துக்காதண்ணா. அவங்க கண்ணுல, உடல் அசைவுல உனக்கான அன்பு, காதல், ஏக்கம் தெரியுது. அதையும் தாண்டி உன்னைத் தள்ளி வைக்குறாங்க. நீ அதை உணர்ந்தியா தெரியலை” என்றான்.
“இதே இடத்துல அவளைப் பார்த்த அன்னைக்கே நான் உணர்ந்துட்டேன்டா. அதனாலதான் இந்த நாடகமெல்லாம். இல்லைனா நான் ஏன்டா புலம்பிட்டிருக்கப் போறேன். சரி நாங்க இங்க வந்ததும் அங்க என்ன நடந்தது. சண்முகி உங்களோட வந்தா. எதுவும் பிரச்சனையில்லையே?”
“அதை ஏன்ணா கேட்கிற” என்று நடந்ததைச் சொல்லி, “அண்ணியே நம்ம வீட்டாளுங்களை மன்னித்தாலும் சண்முகி விடமாட்டா. அண்ணியை விட ஆயிரம் மடங்கு கோவத்துலயிருக்கா. என்னையும் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கமாட்டா” என்றான் சோகமாக.
“என்னடா சொல்ற?”
“விடுடா அண்ணா. அவள் சம்மதிக்கலைன்னா அப்படியே விட்டுருவேனா. அவளோட கோபத்தைத் தூண்டியாவது நம்ம வீட்டுச் சின்ன மருமகளாக்கிர மாட்டேன்.”
“ஓவர் ஆக்ட் பண்ணிராதடா தம்பிப்பையா. அப்புறம் மொத்தமா போயிரப்போகுது. இப்ப பைக்கை மெடிக்கல் வழியா விடு” என்றான்.
“அதானே பார்த்தேன். என்னை ஓவர் ஆக்ட் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டு நீதான் பண்ற” என்று தினகரன் கேலி செய்ய, அவனின் முதுகில் அடிபோட்டு “கிளம்புடா” என்றான் புன்னகை முகமாக.
“சார் கவுன்சிலர் குலசேகரன்களா?”
“ஆமா. நீங்க யாரு?”
“சார் ரோடு கான்ட்ராக்ட் டெண்டருக்கு அப்ளைப் பண்ணியிருந்தீங்க இல்லையா?”
“ஆமா. இரண்டு நாள் முன்னவே அனுப்பிட்டேனே. நாளைக்குதான டெண்டர் விடுறாங்க?”
“ஆமா சார். இன்னைக்கு சாயங்காலம் ஆறு மணியோட டெண்டர் டைம் முடியுது. நான் சொல்ல வந்தது, நேத்து நைட் உங்க கம்பெனி ஃபைலைத் திருட ஆள் வந்திருக்காங்க சார்” என்றான் தயங்கியபடி.
“என்ன.. என்ன சொல்றீங்க? யார் அது? கவர்மெண்ட் டெண்டரைத் திருடுற அளவா பாதுகாப்பில்லாம இருக்கீங்க?” என்று அவனைத் திட்ட,
“திருடன் பொலிட்டிஷியன் பேமிலியா இருந்தா என்ன சார் பண்றது? எத்தனை பாதுகாப்புப் போட்டாலும் அங்கங்க திருட்டு நடந்துட்டுதான இருக்கு.”
“சரி யாருன்னு தெரிஞ்சதா?” என கேட்டார்.
“சிசிடிவி வச்சிப் பார்த்தப்ப உங்க அண்ணன் கம்பெனி ஆளுன்னு தெரியுது. போலீஸ்ல ஒப்படைச்சிருவோம்னு மிரட்டினதும் அனுப்பினது யார்னு சொல்லிட்டான்.”
“யார்? யார் அது? அதுவும் எங்க அண்ணன் கம்பெனியிலிருந்து அவனுக்கேத் தெரியாம இந்த வேலையைப் பார்த்திருக்கானா? அவனை...” என்று பல்லைக்கடித்தார்.
“அ..அது சார். சொன்னா நம்பமாட்டீங்க. ஆதாரம் இருக்கிறதாலதான் நேரடியா போன் பண்ணினேன்.”
“சரி உன்னை நம்புறேன். நீ சொல்லு?” என்றார் குலசேகரன்.
அதில் தைரியம் வரப்பெற்றவன், “உங்க அண்ணன்தான் சார் ஆள் அனுப்பினது” என்றான்.
“ஏய்! வாயை மூடுடா. என் அண்ணன் அப்படிலாம் செய்யுற ஆளில்லை. அதுவும் என்கிட்ட... எங்களுக்குள்ள இருக்கிற சின்னப் பிரச்சனையை ஊதிப் பெருசாக்கி குளிர் காயலாம்னு நினைக்குறியா? அதுக்கு வேற ஆளைப்பாரு. யாருகிட்ட பணம் வாங்கிட்டு இப்படிப் பேசுற? யார் அனுப்பியது உன்னை?” என்றார் கோவமாக.
“ஹலோ சார் நிறுத்துறீங்களா? விட்டா பேசிட்டே போறீங்க? உங்களையே யாருன்னு எனக்குத் தெரியாது. அப்படியிருக்கிறப்ப உங்க குடும்ப விவகாரம் எப்படித் தெரியும்? உங்ககிட்ட சொல்லாமலே மறைக்கத் தெரியாதா?”
“அதானடா உன் ப்ளானே” என்றார் கோபம் குறையாது.
“நல்லதுக்கு எப்பவுமே காலமில்லை சார். டெண்டர் டைம் ஈவ்னிங் வரை இருக்கே. அதுக்குள்ள உங்களால முடிஞ்சா வேற கொட்டேஷன் அனுப்புவீங்களேன்ற நல்ல எண்ணத்துல, மேலிடத்துக்குத் தெரியாமல் உங்களுக்குக் கால் பண்ணினா, என்னையே பலிகடாவாக்குறீங்களா? நீங்க டெண்டர் கேட்டு கொட்டேஷன் அனுப்பியதுக்கான ஆதாரமே இல்லாம செய்தா என்ன பண்ணுவீங்க? போங்க சார் போயி உங்க அண்ணனை தலையில் தூக்கி வச்சிக் கொண்டாடுங்க. கொட்டேஷன் திருட ஆளை அனுப்பிய குற்றத்திற்காக உங்க அண்ணன்மேல ஆக்ஷன் எடுக்கப்போறோம். நீங்க வந்து அவரைக் காப்பாத்த முடிஞ்சா காப்பாத்திக்கோங்க. நான் வைக்கிறேன்” என்று போனை வைக்கப்போக,
“ஏய்.. ஏய் வச்சிராத வச்சிராத நான் பேசணும்” என்றார் வேகமாக.
“அதான் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சே சார். பின்ன என்ன?” என்றான் கடுப்பாக.
“நீ சொன்னது நிஜம்தானா?” என்றார் திரும்பவும்.
“நூத்துக்கு நூறு பெர்சன்ட் உண்மை சார். வேணும்னா நீங்க வந்து விசாரிச்சிப் பாருங்க. எனக்கு உங்களையும் தெரியாது. உங்க அண்ணனையும் தெரியாது. டெண்டர் விஷயமா சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு இன்பார்ம் பண்றது மட்டும்தான் நான். இனி நீங்களே பார்த்துக்கோங்க” என்று போனை வைக்க, குலசேகரனோ குழப்பம் தெளியாது நின்றிருந்தார்.
“தேங்க்ஸ் இமான் அண்ணா” என்றான் வசீகரன்.
“உங்க அப்பா பலே அள்தான்டா வசீ. துருவித்துருவி கேள்வி கேட்கிறார் மனுஷன். சந்தேகத்தைக் க்ளியர் பண்ண எப்படியும் இங்க ஆஃபீஸ் வருவார்.”
“வரட்டும்ணா. அதனாலதான பெரியப்பா மேனேஜர் மூலமா திருடுற மாதிரி செட் பண்ணி சிசிடிவி எடுத்திருக்கோம். மிஸ்டர்.குலசேகரன் வந்து கேட்டதும் அவன் பெரியப்பாவை கையைக் காட்டிருவான். அண்ணனும் தம்பியும் முட்டிக்கட்டும்” என்றவனுக்குக் கோவத்தோடு சேர்ந்து பழிவெறியும் குறையாதிருந்தது.
“எதுக்காகடா இதெல்லாம்? உன் அப்பா, பெரியப்பாடா? யாரோ மூணாவது மனுஷங்க கிடையாது.”
“அது வெளியில சொல்ல முடியாத வேதனை இமான் அண்ணா” என்றவன் குரலில் அளவில்லா வேதனை.
“என்னடா? அப்பா எதாவது இல்லீகல் அஃபேர் வச்சிருக்காரா? அதுக்கு உன் பெரியப்பா சப்போர்ட்டா?” வசீகரனின் வேதனையுணர்ந்து காரணம் இதுவாக இருக்கலாமென்று கேட்டான்.
“ப்ச்.. இல்லண்ணா. அதுவும் தப்புதான். அதையெல்லாம் விட இது பெரியது. சேர்ந்து இருக்கிறதாலதான என்ன செய்தாலும் வெளியில தெரியாம மறைத்து, தப்புக்கு மேல தப்புப் பண்றாங்க. இனிமேல் இவர் தப்பை அவரும், அவர் தப்பை இவரும் போட்டி போட்டு வெளியில சொன்னா?”
“சொல்வாங்கன்ற? ஒருத்தருக்கொருத்தர் காட்டிக்கொடுத்தா தனக்குத்தானே ஆப்புன்னு தெரியாதளவு முட்டாளாயிருப்பாங்க நினைச்சியா? அரசியல்வாதி எப்பவும் அலார்ட்டா இருப்பாங்கடா.”
“நீங்க சொல்றது சரிதான்ணா. வெளியில அலார்ட்டாயிருக்கலாம். வீட்டுக்குள்ள? எப்படியும் வீட்டுக்குள்ள புகைச்சல் கிளம்புமே! இதோ இரண்டு வருஷமா தேவை தவிர மற்ற பேச்சு வார்த்தை கிடையாது. வெளில பார்க்கிறவங்களுக்கு அண்ணன் தம்பி ஒற்றுமையா இருக்கோம்னு காண்பிச்சிட்டிருக்காங்க. இனி பகை அதிகமாகி பிரிவும் நடக்கும்” என்றான் உறுதியாக.
“ரிசல்ட் இன்னும் ஒருமணி நேரத்துல” என்று சிரித்தான் இமான்.
அடுத்த ஒருமணி நேரத்திற்கெல்லாம் வசீகரன், இமான் எதிர்பார்த்தாற்போல் அண்ணன் தம்பி இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அது இரு குடும்பத்திலும் தொடர, உறவுகளுக்குள் இனி சண்டை தொடர்கதைதானோ!