• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
11


நடப்புக்கு நடுவில்:

திருவள்ளுர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவில்:

கத்திக்குத்து நடந்து கார்த்திக்கின் அருகாமையில் மனம் முழுவதும் நிம்மதி நிறைய, இப்பொழுதே செத்தாலும் சுகமென்று சிரித்தவள், மருத்துவமனை செல்ல அவந்தியைத் தூக்க போனவனை, “கார்த்திக்” என்றழைத்தாள்.

“என்னடா? என்றான் கண்களில் நீருடன்.

அவன் கண்ணீர் துடைத்து, “இந்த முருகன் ரொம்ம்ம்பப சக்தி வாய்ந்தவராம். இப்ப இந்த நிமிஷம் கேட்கிறேன். எ..என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? எ..எனக்கு எதாவது ஆகிட்டா, நான் உ..உங்க ஒய்ஃபா செத்ததாதான் இருக்கணும்” என திக்கித் திணறியபடி சொன்னாள்.

“அவந்தி என்ன பேசுற?” என்று விஷ்ணு குறுக்கிட்டான்.

“உ..உன் ஃப்ரண்டோட க..கடைசி ஆசை விஷ்..விஷ்ணு. சொ..ல்லுங்க கார்த்திக் நான் உ..உங்களை க..கல்யா..ணம் பண்ணிக்கலை. நீ..ங்க என்னை க..கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” சிரித்தபடியே கேட்டாள்.

பழைய நினைவில் அவனுக்குமே மெல்லியதாக சிரிப்புவர, கண்ணீருடன் தலையசைத்தான். தாமு உடனே அங்கிருந்த ஐயரை வரவழைக்க, கடையில் இருந்து மஞ்சள் கயிறு வாங்கி வந்து, அதில் மஞ்சள் வைத்துக் கட்டப்போக, அதற்குள் அவந்திகா தன் பர்ஸிலிருந்து ஒன்றை எடுத்துக்கொடுத்தாள்.

ஆச்சர்யமாய் பார்த்தவர்களுக்கு, “அ..அம்மாவோடது கார்த்திக். மா..மா கொடுத்திருந்தாங்க. ஏனோ கையில வ..வச்சிருந்தா கூடவே இ..இருக்கிற மாதிரி ஒ..ரு ஃபீல். அதான் எப்பவும் எ..ன்கிட்டயே இருக்கும்.”

அருகில் நின்றிருந்த பெண்மணியோ “அம்மாவோடது பொண்ணுக்கு கட்டக்கூடாதுப்பா” என்று சொன்னார்.

‘ஆபத்துக்குப் பாவமில்லை’ என்று ஐயர் மந்திரம் சொல்ல, ஐயன் முருகனின் சந்நிதானத்தில், அவந்திகாவிற்கு தாலிகட்டி, மிஸஸ். அவந்திகா கார்த்திகேயன் ஆக்கிக் கொண்டான்.

அந்தப் பெண்மணி சொன்னதை முன்னரே கேட்டிருக்கலாமோ! அவன் கட்டிய தாலிக்கு ஆயுசு கம்மி என்று காலம் கடந்த பின்னரே தோன்றியது.

“இப்ப நான் மிஸ் இல்ல மிஸஸ்.கார்த்திக்” என்றாள் புன்னகையுடன்.

அவள் சொல்லி முடிக்க, “ஆக அவனுடைய தொழில் மாதிரியே, நீயும் திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட. நல்ல ஜோடிதான் போ” நக்கலாகவே சொன்னான்.

“லூசாடா நீ. கோவில்ல அத்தனை ஜனங்க முன்னாடி, தெய்வ சந்நிதானத்துல வச்சி நடந்த கல்யாணம் எங்களோடது” என்றவள் குரலில் அத்தனை பெருமை.

“அவந்தி நிஜமாகத்தான் சொல்றியா? இதை ஏன் எங்க யார்கிட்டேயும் சொல்லாம மறைச்சீங்க?”

“உண்மைதான் அத்தை. எனக்கும், உங்க பையனுக்கும் கல்யாணம் முடிஞ்சிருச்சி. வேணும்னு மறைக்கல. அந்த நேர பரபரப்புல மறந்திட்டோம். அப்புறம் நிதானமா சொல்லிக்கலாம்னு விட்டுட்டோம்.”

“ஏய்! என்னடி அத்தைன்ற. அந்த திருட்டுப்பய கார்த்திக்கோட அம்மாவா இவ?” என அதிர்ச்சியுடன் வனஜா வினவ...

“அத்தை வேண்டாம். ஈஸூமாவை மரியாதையில்லாமல் பேசுறதோ, கார்த்திக்கை திருட்டுப்பயல்னோ சொல்லக்கூடாது சொல்லியிருக்கேன்.”

“அப்படித்தான் பேசுவேன். என்ன கல்யாணம் முடிஞ்சிருச்சின்னா பயந்திருவோமா? அறுத்துக்கட்ட எவ்வளவு நேரமாகும்னு நினைச்ச” என்றார் வன்மம் மாறாது.

“அத்தை” என்று கத்தியவளுக்கு, வயிற்றுப் பகுதியில் சுருக்கென்று ஏதோ குத்துவது போல் தோன்ற, அந்த வலி முகத்தில் வந்து சென்றது.

“அவந்தி என்னாச்சி? வலிக்குதா?” என்ற ஈஸ்வரியிடம்,

“ஒண்ணுமில்லை அத்தை” என்றவள் வனஜாவிடம் திரும்பி, “நீங்க நினைச்சதும் கழட்டி விட்டெறிய இது கயிறு இல்ல தாலி”

“வசனம்லாம் நல்லாத்தான் பேசுற. ஆனா எங்களுக்குத்தான் அது பொருந்தலை. ஸோ... கழட்டிரு” என கௌஷிக் அவந்தியை நெருங்க,

அவனைத் தடுத்து சுந்தரேசன் நடுவில் வந்தார்.

“பேருக்காவது அப்பான்னு இருப்பீங்கன்னு நினைச்சிட்டிருக்கேன். நீங்க நகரல, உங்க மேலேயே கைவைக்க வேண்டியதா இருக்கும்” என்றான் கடுமையாக.

“நீ என்ன செஞ்சாலும், என்னைத் தாண்டிதான்டா அவகிட்ட போக முடியும்” என்றவரை, கோவத்தில் ஒரே தள்ளு தள்ளி, அவந்திகாவை நெருங்கி தாலியில் கை வைக்கபோக,

கோவத்தில் அவந்திகா அவனை அடிக்க ஓங்கிய கையை, மறித்துப் பிடித்து, இன்னொரு கையை தாலியில் வைத்தான்.

திரும்பவும் ‘ஆ’ என கௌஷிக்கின் அலறல் கேட்டது. ஆம் இப்பொழுது ஈஸ்வரி அவனை ஓங்கி அறைந்திருந்தார்.

“இவள் என்னோட மருமகள். என் பையன் தாலி கட்டியிருக்கான். தொட்ட கொன்னுருவேன்.” தான் அடித்த அடியில் கன்னத்தைப் பிடித்தபடி நின்றிருந்தவனிடம், “என்ன அடி வலிக்குதா? உன்னை மாதிரி எத்தனை பொறுக்கிங்களை என் லைஃப்ல பார்த்திருப்பேன். எத்தனை பஞ்சாயத்து பண்ணியிருப்பேன். பொண்ணுங்கன்னா ஈஸியா தள்ளிவிட்டு காரியம் சாதிக்கலாம்னு நினைச்சியா? உங்களை மாதிரி ஆண்களுக்கு உடல்ல பலம்னா, என்னை மாதிரி பெண்களுக்கு மனசுல பலமிருக்கு. அது தேவையான நேரத்திற்கு, இப்படித்தான் எதிர்பாராத விதமா வந்து அடியா விழும்” என்றவர் குரலில் அத்தனை ஆளுமை.

“ஏய்! என்னடி என் பையன் மேலயா கைவைக்கிற? உன்னை என்ன செய்றேன் பார்” என்று வனஜா நெருங்க,

“ஏன்? உன்மேல கூடதான் கைவைப்பேன் பார்க்கிறியா?” என ஆத்திரத்தில் கை ஓங்கிய ஈஸ்வரியைப் பார்த்து மிரண்ட வனஜா, தன்னுடைய திமிரைக் கைவிடாது, “எனக்கு இப்ப புரிஞ்சி போச்சிடா கௌஷிக். இப்பதான கல்யாணம் முடிஞ்சதும் சொத்து வரும்னு சொன்னோம். அதான் சொத்தோட வரப்போற மருமகளை சொந்தமாக்கிகிட்டா இவ” என்றார்.

“ஹா...ஹா சொத்தா! சொத்து எனக்கு முக்கியமா? உனக்கு எவ்வளவு சொத்து, எங்க வேணும்னு கேளு. நான் வாங்கித் தர்றேன். அதுவும் அரைமணி நேரத்துக்குள்ள. என்ன இவளால முடியுமான்னு பார்க்குறியா? என்னால முடியும்” என்றார் ஆவேசமாய்.

“எது உன்னோட பையன் கொள்ளையடிச்சானே. அந்த பணத்துலயா? அந்த மானங்கெட்ட பணம் எனக்கு எதுக்கு. இவளை நான் சின்ன வயசுல இருந்து வளர்த்தது, எதுக்குன்னு நினைச்ச? இந்த சொத்து இல்லன்னா, எப்பவோ அனாதை அசிரமத்துல சேர்த்திருப்பேன். கண்கொத்திப் பாம்பா நான் காவலுக்கு இருக்க, எங்கேயோ இருந்து பருந்து மாதிரி வந்து, நீங்க தூக்கிட்டுப் போறேன்னா, நான் விட்டுட்டு வேடிக்கை பார்ப்பேனா” என வனஜா அதற்கும் குதர்க்கமாக பதில் சொன்னார்.

இவர்களின் பேச்சை முழுசாகக்கூட கேட்க முடியாமல் அவந்தியின் வயிறு வலிக்க ஆரம்பித்தது. அவள் அருகில் வந்த கௌஷிக், “உனக்கு அவன் தாலி மட்டும்தான கட்டியிருக்கான். மற்றது எதுவும் நடக்கலைல?” என கேட்டான்.

அவந்திகா புரியாமல் பார்க்க, புரிந்த சுந்தரேசனும், ஈஸ்வரியும், ‘இந்த கேள்வி இப்பொழுது எதுக்கு கேட்கிறான்’ என நினைத்தபடி பார்க்க,

“புரியலையா? சரியான மரமண்டை. உங்களுக்குள்ள ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்குள்ள நடக்கிற ரிலேஷன்ஷிப் நடக்கலதான? எனவும் அவளின் அமைதியை சம்மதமாக எடுத்தவன், “அப்புறமென்னடி துள்ளுற?” என்றான்.

அப்பொழுதுதான் அவன் சொன்னதின் அர்த்தம் உணர்ந்தவள், அவனிடம் ஒரு கேவலமான பார்வையை செலுத்தி, எப்பொழுதும்போல் வலியின் ஊடே புன்னகையை வெளியிட்டு, “ஏன்டா, லூசுன்றதை நீயே நிரூபிக்கிற பாரு. அதையெல்லாம் பப்ளிக்ல சொல்லிட்டா பண்ணுவாங்க. உனக்கு ஒண்ணு தெரியுமா? அவங்க போலீஸ்ல மாட்டுறதுக்கு முன்னாடி நாள், இங்க வந்து என்னை பார்த்துட்டுத்தான் போனாங்க. அப்பவே எங்களுக்குள்ள எல்லாமே முடிஞ்சிருச்சி” என்றாள்.

கௌஷிக் அதிர,

கேள்வியாய் பார்த்த மாமியாரிடம் கண்ணடித்து, “சும்மா” என்று பிறர் அறியாமல் சொன்னாள்.

முதலில் அதிர்ந்த கௌஷிக், சில வினாடிகளுக்குள் என்னென்னவோ யோசித்துக் கணக்குப்போட்டு, “பரவாயில்ல அவந்தி. கெட்டுப்போன உனக்கு வாழ்க்கை கொடுக்கிறதா நினைச்சிக்கிறேன்” என்று பெருந்தன்மையாக சொல்ல,

“சே... இவ்வளவு மோசமானவனாடா நீ. அசிங்கமாயில்ல உனக்கு. கெட்டுப்போன பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்குறியா? அதை உண்மையிலேயே கெட்டுப் போனவளுக்கு போய்கொடு. எனக்கு அழகா, அம்சமா, ஆணழகனா என் கார்த்திக் இருக்காங்க. ஏதோ கண்டவன்கிட்...” என நிறுத்தியவள், “;உன்னை மாதிரி தரங்கெட்டத்தனமா பேச என்னால முடியாது. இன்னொருத்தன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும், இந்தளவுக்கு பேசுறியே நீயெல்லாம் என்ன ஜென்மம். உன் கூடவே வளர்ந்தவடா நான். அந்த பாசம்கூடவா உனக்கு இல்லாமல் போச்சி?” என்றாள் கண்களிலும், உடலிலும் வலியுடன்.

“இதெல்லாம் பார்த்தா சொத்து கிடைக்குமா?”

“சொத்தைவிட சொந்தம் பெருசுன்னு எப்ப உணரப்போற? அதுவுமில்லாம நீதான் நிறைய சம்பாதிக்கிறியே. அப்புறமென்ன வேணும் உனக்கு?”

“அ...அதெல்லாம் நிரந்தரமில்லை.” ‘அதுதான் பிரச்சனைக்குரிய தொழில் என்று தெரியுமே’ என நினைத்து, “நீதான் நிரந்தரம்னு தோணிச்சி. அதான். மத்தபடி உன்மேல எனக்கு தனி இன்ட்ரெஸ்ட்லாம் கிடையாது. அதே சமயம் நீ வேற யாருக்கும், குறிப்பா அந்த கார்த்திக்கிற்கு கிடைக்கக்கூடாது.”

“ச்சீய்... போடா!” என்றவளிடம், “அவந்தி நீ அதிகம் பேசக்கூடாது. உன் ரூம்கு போ” என ஈஸ்வரி கட்டளையிட,

“ஆனா அத்தை...” எதோ சொல்ல வந்தவளை மறித்து, “அதான் சொல்றேன்ல. நீ மாடிக்குப்போ. இவங்களை நான் பார்த்துக்கறேன்” என்று அதட்டல் போட்டதும், அவந்திகா சம்மதமாய் தலையாட்டினாள்.

இதையெல்லாம் பார்த்திருந்த சுந்தரேசனும், தன்னறைக்குச் செல்ல திரும்பினார்.

கௌஷிக் தாயிடம் ஈஸ்வரியின் கவனத்தை திருப்பச்சொல்லி தலையசைக்க, புரிந்த வனஜா வன்மமாய் சிரிக்க, இதை எதையும் அறியாத ஈஸ்வரியும் அவர்களின் சூழ்ச்சிக்கு இறையாகி, மருமகளை கவனிக்காமல் விட்டார்.

“ஓ... இதுல இதுவேறயா. எங்க வீட்லயிருந்து எங்களையே மிரட்டிட்டு இந்த இடத்தைவிட்டுப் போயிடுவியா? மரியாதையா இப்பவே வீட்டைவிட்டு வெளியில போ. இல்லன்னா கழுத்தைப் பிடிச்சி வெளிய தள்ளுவேன்” என்று வனஜா தன் நாடகத்தை ஆரம்பித்தார்.

நகர்ந்த சுந்தரேசன் மனைவியின் பேச்சில் அவளைத் தடுக்க வந்தார்.

இவர்களின் வாக்குவாதங்களுக்கு இடையில், அவந்திக்கு வயிற்றுவலி அதிகரித்து அறைக்கு செல்ல முடியாமல் உதடைக் கடித்துக் கட்டுப்படுத்தி நின்றிருந்தாள்.

பெரியவர்கள் இருவரின் சண்டைக்கு நடுவே அவந்திகாவிடம் வந்த கௌஷிக், அவள் கண்மூடி வலிதாங்கிய நேரம், இதுதான் சமயம் என்று தாலியைத் தன் பலம் கொண்டமட்டும் பிடித்து இழுத்துக் கையில் எடுத்தான். பழைய ஜெயின் என்பதால் அதுவும் அவன் கையோடு வந்திருந்தது.”

கண்மூடி திறக்குமுன் நடந்த அந்த செயலை எதிர்பார்த்திராத அவந்திகா, உச்சபட்சமான அதிர்ச்சியில், கௌஷிக்கை தடுக்கவும் முடியாமல், தண்டிக்கவும் முடியாமல் போராட, உணர்ந்து அவனை அடிக்க ஓங்கிய கைகள் காற்றில் கலந்ததுதான் மிச்சம். “அத்தை” என்று ஈஸ்வரியின் கவனத்தை தன்புறம் திருப்ப எண்ணியவள் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்க, சிக்கலை மீறி “அ...அத்தைய்ய்..” என்று கத்தியபடி சுவரோடு சாய்ந்தாள்.

வனஜாவிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி அவந்திகாவின் அலறலில் சட்டென்று திரும்பிப் பார்த்தார். கௌஷிக் கையில் தாலியுடனும், அவந்திகா மொத்த அதிர்ச்சியையும், வேதனையையும் முகத்தில் பிரதிபலித்தபடி கீழே விழப்போவது போல் நிற்க, அவள் போட்டிருந்த நைட்டியையும் மீறி, இரத்தம் வெள்ளமென பரவியது. ஈஸ்வரிக்கு நிலைமையின் தீவிரம் புரியவே சில வினாடிகளானது.

பின் சுதாரித்து, “அவந்தீஈஈ..” என ஓடிவந்து அவளைத் தாங்கினார்.

“கா...கார்த்...திக்” என்றபடி உணர்விழந்து விழுந்தாள்.

வனஜாவும், கௌஷிக்கும் கொஞ்சம் அதிர்ந்தாலும், சமாளித்து வேடிக்கை பார்த்தார்களே தவிர, உதவ முன்வரவில்லை.

சுந்தரேசனும் வனஜா பேசுவதில் கவனம் செலுத்தியதால் மருமகளைக் கவனிக்கவில்லை. மருமகளின் அருகில் ஓடிவந்து, அவளின் நிலையைப் பார்த்துக் கலங்கி, மகனிடம் திரும்பி, “நீ நல்லா இருக்க மாட்டடா கௌஷிக். பிள்ளைங்களுக்கு பெத்தவங்க கொடுக்கிற சாபம் பலிக்கும்னு சொல்வாங்க. கண்டிப்பா நீ இதுக்கெல்லாம் அனுபவிப்படா” என்று அவசர ஊர்திக்கு போன் செய்து, வந்ததும் அந்த ஓட்டுனர் துணையுடன் அவந்தியை ஏற்றினார்கள்.

அவசரத்திற்காகத் தான் வைத்திருந்த பணத்தை எடுக்க உள்ளே வந்த ஈஸ்வரி, தாய், மகனிடம் நெருங்கி, “அவந்திக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு கடவுளை நல்லா வேண்டிக்கோங்க. என் மருமகளுக்கு மட்டும் எதாவது ஆச்சிது. நீங்க ரெண்டு பேரும் கம்பி எண்ணுறது உறுதி. என்னைப் பற்றி முழுசா உங்களுக்குத் தெரியாது. நான் சொல்றதோட மட்டுமில்ல செஞ்சியும் காட்டுவேன்” என்றவரின் குரலிலிருந்த தீவிரம் ஆனாளப்பட்ட வனஜாவையே அரள வைத்தது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அவர்களை மிரட்டி பணம், செல்போன், ஏற்கனவே உள்ள டாக்டர் ரிப்போர்ட்டும் எடுத்து, அதே மருத்துவமனை தலைமை மருத்துவர் ரஞ்சனை தொடர்பு கொண்டு நிலைமையை சொல்லி, அவசர சிகிச்சைக்கு தயாராகச் சொன்னார்.

அதே நேரம் சுந்தரேசனும், விஷ்ணுவிற்கு சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி அலுவலகத்தைப் பார்த்துக்கொள்ள சொல்ல, அதற்குள் மருத்துவமனை வந்து, அவசர சிகிச்சைக்கு அழைத்துச் அழைத்துச் சென்றார்கள்.

மருத்துவரோ, அவர்களை வார்த்தைகளால் பிடிபிடியென்று பிடித்தார். “ஏற்கனவே சொல்லியிருந்தேனே. ஏன் இப்படிக் கேர்லெஸ்ஸா இருந்தீங்க? உங்களையெல்லாம்...” திட்டியபடியே அவசர சிகிச்சை அறைக்குள் நுழைந்து, இரண்டு மணிநேரமாக போராடி சிகிச்சை முடித்து வெளியே வந்தவர் நேரே சுந்தரேசனிடம் சென்றவர், “அப்படி என்ன ப்ராப்ளம் வீட்ல? தையல் முழுவதும் பிரிஞ்சி, ப்ளட் ப்ளீடிங் அதிகமாயிருக்கு. நல்லவேளை பி பாசிட்டிவ் ரெத்தம்ன்றதால ப்ராப்ளம் இல்ல. இந்த வகை ரெத்தம் இங்கவுள்ள ப்ளட் பேங்க்லயே கிடைச்சதால தப்பிச்சீங்க. கொஞ்சம் ரேர் க்ரூப்னா என்ன பண்ணியிருப்பீங்க? மயக்க மருந்து கொடுத்தும் உடல் கண்ட்ரோலுக்கு வரல. எதோ புலம்புறாங்க. திரும்பவும் ஒரு ஸ்லீப்பிங் இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். கண்முழிச்சதும் பார்க்கலாம். மத்தபடி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று சொல்லி முடித்து ‘இவர்களையெல்லாம் திருத்த முடியாது’ என்றெண்ணிபடி சற்று கோவத்துடனே சென்றார்.

ஈஸ்வரி கணவனுக்கும், சின்ன மகனுக்கும் போன் செய்து மருத்துவமனை வரவழைத்து விஷயம் சொல்ல, அதிர்ந்தனர் இரு ஆண்களும்.

“அந்த கௌஷிக்கை சும்மாவா விட்டீங்க? நான் போய் அவனை என்னன்னு பார்க்கிறேன்மா” என்று எகிறிய சின்ன மகனை தடுத்த ஈஸ்வரி, “அவனுக்கான தண்டனை இன்னும் வெகுதூரத்துல இல்ல. இப்போதைக்கு நமக்கு அவந்திதான் முக்கியம்” என்றார் முடிவாக.

தாயின் சொல்லில் அந்நேரத்திற்கு அடங்கினாலும், அவந்திகாவை அப்படிப் பார்த்த சந்தோஷிற்கு, கௌஷிக்கை எப்படியாவது அழவைக்கும் எண்ணம் எழாமல் இல்லை. அந்த தருணத்திற்காக காத்திருக்கும் பொறுமையும் அவனுக்கில்லை. தாயிடம் இருந்து மெல்ல நகர்ந்தவன், தெரிந்த நண்பனை கைபேசியில் அழைத்து, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து, “அம்மா நான் ஒரு ஒன் அவர்ல வந்திடுறேன்” என்று கிளம்பினான்.

அவனைத் தடுத்த ஈஸ்வரி, “உன்னைப்பற்றி எனக்குத் தெரியும். முதல்ல உன் ப்ரண்டுக்கு போன் செஞ்சி, எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லு” என்றார்.

தாயின் புத்திசாலித்தனம் ஏற்கனவே அறிந்தவன் ஆதலால், “அம்மா! அவனை அப்படியே விடச்சொல்றீங்களா?” என்றபடி பல்லைக் கடித்தவன் தாய் சொல்லை மீறாது நண்பனிடம் திட்டத்தை கைவிடச் செய்து, தன் இயலாமையை கைகளைச் சுவற்றில் குத்திக் காண்பித்தான்.

கணவரிடம் திரும்பியவள் அவரின் வேலையை மனதில் வைத்து, “நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க. நானும் சந்தோஷும் அவந்தியைப் பார்த்துக்கறோம்” எனவும், தன்னுடைய சூழ்நிலையை உணர்ந்தவர் சம்மதமாய் தலையசைத்து சென்றார்.

கார்த்திக்கிற்கு தகவல் தெரிவிக்க முயற்சித்து, முடியாமல் போனதை எண்ணி வருந்தினார் ஈஸ்வரி. “ஒரு வார்த்தை கல்யாணம் முடிஞ்சதைச் சொல்லியிருந்தா, போன தடவையே அவளை நம்ம வீட்டுக்கு உரிமையா கூட்டிட்டுப் போயிருப்பேனே. உன்னால மனசுல வலின்னா, அவ குடும்பத்தாரால உடம்புலயும் சேர்த்து வலியை அனுபவிக்கிறா. இதுக்கு என் பையன் காரணம்னு நினைச்சா மனசு வலிக்குது, எங்கடா போயிட்ட? சீக்கிரம் வாடா! இல்லன்னா உன்னோட வாழ்க்கையே இல்லாமல் போயிடும்” என மனம் நொந்து புலம்பிக் கொண்டிருந்தார் ஈஸ்வரி.

இதை எதையும் அறியாமல், தன் கணவன் அந்தஸ்தை இழந்ததுகூடத் தெரியாமல், அந்த போதை கடத்தல்காரனுடன் ஆந்திர காடுகளுக்கிடையே சுற்றிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

‘என்ன தம்பி? ரொம்ப சுத்தல்ல விடுறேனா?’

“விடுங்கண்ணே! பணம் சம்பாதிக்கணும்னா சும்மாவா. கொஞ்சமாவது நாமும் கஷ்டப்படணும்ல. ஒரு இடத்துல திருடனும்னா எத்தனை நாள் கண்காணிச்சி, அந்த வீட்டை ஸ்கெட்ச் போட்டு கரெக்டா செய்யுறேன். ரிஸ்க் இல்லன்னா எந்த வேலையும் செய்ய முடியாது.”

அவனின் பதிலிலிருந்த உண்மையை உணர்ந்த ரத்தனுக்கு, ‘சரியான ஆளைத்தான் பிடித்திருக்கிறோம்’ என்ற திருப்தி உண்டானது. “அதுசரி. உன் லவரைப் பார்க்கப் போகணும்னு சொன்னியே என்னாச்சி? புள்ள வேற அழகாயிருக்கும்னு சொல்ற வேற எவனாவது கொத்திட்டுப் போயிரப்போறான்பா?” என்றான்.

“அதெல்லாம் முடியாதுன்ணே. அவ இப்ப என்னோட பொண்டாட்டி. ஒரு இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி தாலி கட்டிட்டேன்” என்றான் கர்வமாக.

அவன் கட்டிய தாலிக்கு ஆயுள் கம்மியானதை அறிவானா கார்த்திக்!

“அடப்பாவி! இவ்வளவு நேரம் லவருன்னு சொன்ன?”

“ஆமாம்ணே. ‘மதல்ல லவராயிருந்து, இரண்டாவதுதான் கல்யாணமாச்சிது. அதான்” என சற்று வெட்கப்பட்டவனை,

வித்தியாசமாகப் “ஆம்பளப்புள்ள வெட்கப்பட்டு இப்பத்தான் தம்பி பார்க்கிறேன். அதுவும் நம்ம தொழில்ல வாய்ப்பேயில்ல” என்றான்.

“போங்கண்ணே. நீங்க என்னை கிண்டலடிக்கிறீங்க. ஆமா இப்ப எங்க போறோம்?”

“இப்ப நாம இருக்கிறது, தமிழ்நாடு, ஆந்திரா பார்டர் தாண்டி தடா போறவழியில உள்ள மலைக்காட்டுல. இங்கதான் வரச்சொல்லியிருந்தான். ஒருவேளை உன்னைப் பார்த்ததும் ஒழிஞ்சிக்கிட்டானோ” என்று யோசனையாய் தாடையைத் தடவிய ரத்தனிடம்,

“அண்ணே! நான் வேணும்னா இங்கேயே இருக்கேன். நீங்க போய் பார்த்துட்டு வாங்க. என்னால உங்களுக்கு கெட்ட பெயர் வந்திரக்கூடாது.”

கார்த்திக்கின் வார்த்தையில் அவன் மேலுள்ள நம்பிக்கை, இன்னும் ஆழமாக ரத்தன் மனதில் விழுந்தது.

‘நம்பிக்கை தானே எந்த தொழிலுக்கும் ஆதாரம்.’ அந்த நம்பிக்கையைத்தான் ரத்தனுக்கு தன் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் அளித்தான் கார்த்திக். ரத்தனுக்கு அவனின் தொழில் யுக்தி தெரிந்திருந்ததால், அவனைத் தன் தொழில் வாரிசாக்க முடிவு செய்தான். ஆனாலும், அவனை தன் சந்தேக லிஸ்டிலிருந்து முழுதாக எடுத்துவிடவில்லை. கார்த்திக்கின் அங்க அசைவுகள் முதல், அவனின் பார்வையின் அர்த்தங்கள் வரை, தன் லேசர் கண்களால் அவ்வப்பொழுது ஊடுருவினான் ரத்தன். இதுவரையில் தன் நம்பிக்கைக்கு ஏற்றவன் என்ற எண்ணமே தோன்றியது.

தன் எண்ணத்தை ஒதுக்கிய ரத்தன், “அட, நீ வேறப்பா. என்னை நம்புறவங்களுக்கு நான் தப்பான ஆளை கூட்டு சேர்க்கமாட்டேன்னு தெரியும். எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் நீ கவலைப்படாத.”

அதே நேரம் பார்க்க படு நாகரீகமான ஒருத்தன் இவர்களை நோக்கிவர... “இவன்தான் தமிழ்நாடு, ஆந்திரா ஏரியாவுக்கு சரக்கு சப்ளையர் ஜாக்” என்று கார்த்திக்கிற்கு அறிமுகப்படுத்தினான்.

“வணக்கம் சார்” என்று கார்த்திக் கைகொடுக்க, கேள்வியாய் பார்த்தவனிடம் கார்த்திக்கைப் பற்றிய விவரங்கள் சொல்லிய ரத்தன், கார்த்திக்கிடம் திரும்பி “மொத்த சரக்கும், இங்க சென்னையில இருக்கிற கம்பெனிக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டியது நம்ம வேலை. அங்க இருந்து பாண்டிச்சேரி, கேரளான்னு ஆல் இந்தியாவுக்கும் சப்ளையாகும். ஆனா, யார் எங்கயிருக்காங்க என்ற விவரமெல்லாம் நமக்கு சொல்ல மாட்டானுங்க. ஏன்னா நாம மாட்டினா அவனுங்களும் மாட்டிருவானுங்கன்ற பயம்” என்று கார்த்திக்கின் காதைக் கடித்தான் ரத்தன்.

“சரி நீ யாரை வேணும்னா வச்சிக்க. முதல்ல இந்த சரக்கை போலீஸ்லயோ, டோல்கேட்லயோ மாட்டாம கொண்டுபோய் சேர்க்கணும். வாங்குறவன் பெயர் சொல்லமாட்டேன். இந்தாங்க அவனோட நம்பர் எப்பவும் ஆன்லதான் இருக்கும். அவன்கிட்ட பேசும்பொழுது, ஒன் நாட் ஃபைவ்(105) சொல்லணும். அவன் ஃபைவ் நாட் ஒன்(501) சொல்லுவான். புது பையன்ற. பார்க்கவும் நல்லா வாட்டசாட்டமா இருக்கான். நீயே அவனுக்கு ட்ரெய்னிங் கொடுத்திரு. அவனோட திறமையைப் பார்த்து ஏரியா பிரிக்கலாம்” என்றதும் சம்மதித்து அவன் கையில் இருந்த சரக்கையும் வாங்கினான்.

“அப்புறம் ரத்தன் பணம் வாங்கும் போது, பணம் கரெக்டா இருக்கான்னு பார்த்து வாங்கு. இல்லன்னா, மேலிடத்துக்கு என்னால பதில் சொல்ல முடியாது. இப்ப கிளம்புங்க முடிஞ்சதும் எனக்கு இன்பார்ம் பண்ணுங்க” என்று அந்த டிப்டாப் ஆசாமி வேறுவழியில் நடந்தான்.

“சார்” என அவனிடம் ஓடிய கார்த்திக் அவன் தலையில் காக்கா எச்சமிருப்பதைச் சொல்ல, இடம் தெரியாமல் தடுமாறியவனிடம் தான் செய்வதாக சொல்லி சுத்தம் செய்தான்.

இருவரும் காட்டைவிட்டு வெளியேறி நடக்கும் பொழுது, “ஏன் தம்பி? இதுல எவ்வளவு சரக்கிருக்கு. அதோட பணமதிப்பு எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கணும்னு ஆசையில்லையா?”

“ஹி...ஹி இருக்குதுன்ணே. ஆனா, இது இன்னொருத்தருக்குப் போய்ச் சேர வேண்டியது. நம்மளை நம்பி கொடுத்திருக்காங்க. அதைச் சரியா போய்ச் சேர்க்கணும்னுதான் எண்ணம் இருக்கு. அப்புறம் நான் உங்களை நம்புறேன். நீங்க எனக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டீங்கன்னு.”

அவனின் வார்த்தையில் புளகாங்கிதம் அடைந்த ரத்தன், “இதுல கிட்டத்தட்ட ஐந்துகோடி மதிப்புள்ள சரக்கு இருக்கு. நான் வெய்ட் பார்த்தே கண்டு பிடிச்சிருவேன்” என்றான்.

கண்களில் ஒளி மின்ன, “அண்ணே நிஜமாவா? பார்க்க இத்துணூன்டு பைமாதிரி இருக்கு. உங்க லைன் புதுசா எல்லாமே வித்தியாசமா இருக்குன்ணே.”

“அதுசரி. நீ ஏன் டல்லாயிருக்க?”

“தெரியலண்ணே. என்னைச் சேர்ந்த யாருக்கோ ஆபத்துன்னு தோணுது. ஏற்கனவே என் பொண்டாட்டிக்கு, வயித்துல ஆபரேசன் பண்ணியிருக்கு. இன்னும் முழுசா குணமாகல. நான் அதுக்குல்ல மாட்டிக்கிட்டேன். ஹ்ம்... நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு குடும்பம்னு ஒண்ணு இல்லாமலே இருக்கலாம்ணே” என்றான் வருத்தமாய்.

“அதை இப்ப நினைச்சி என்ன பண்றது? இப்பவே இருட்டிருச்சி. இன்னும் ரெண்டு மணிநேரத்துல சென்னை போயிரலாம். இப்ப என் போன்லயிருந்து பேசுறியா?”

“அச்சச்சோ! என்னண்ணே நீங்க? நான் எங்க வீட்டுக்கு பேசப்போறேன். போலீஸ் என்னைத்தேடி வீட்டுக்குப்போயி விசாரிக்கையில, முதல்ல போனைத்தான பிடிப்பாங்க. எங்கெங்க யார்கிட்ட இருந்து போன் வந்ததுன்னு நம்மளை நாமே காட்டிக் கொடுத்தமாதிரி ஆகிராதா.”

“நீ சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தம்பி. நல்லவேளை நியாபகப்படுத்தினப்பா. குடும்பத்தை பணயமா வச்சித்தான் முதல்ல நம்மளைத் தேடுவாங்க. அதுக்கு நாமளே இடம் கொடுக்கக் கூடாதுதான். நீ புத்திசாலி என்பதை நிரூபிச்சி, என்னை அடிக்கடி புல்லரிக்க வைக்கிற. சென்னை போனதும் பப்ளிக் பூத்திலிருந்து பேசு. அப்புறம் இந்த சென்டிமெண்டை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கோ .அதுதான் நம்ம தொழிலுக்கும் நல்லது.”

“சரிண்ணே!” என்ற கார்த்திக்கின் மனதில் தன்னையறியாமல் ஒரு நிம்மதி தோன்றியது. ரத்தனின் நம்பரிலிருந்து போன் செய்தால் போலீஸிடம் மட்டுமல்ல, இங்கே எதாவது தவறு நடந்தால் இவர்களிடமும், தன் குடும்பம் மாட்டிவிடக்கூடாதே என்ற எண்ணம்கூட. என்னதான் பணம் கொழிக்கும் இடம் என்றாலும் சட்டத்திற்கு புறம்பான வேலையல்லவா.

திருட்டுத்தொழிலில், ஒருநாள் அல்ல ஒருநாள் வீடு திரும்பலாம் என்ற எண்ணமிருக்கும். ஆனால், இது புலிவாயில் மாட்டிய கதையாயிற்றே! சாவோமா! பிழைப்போமா! என்ற உறுதியில்லாத வாழ்வு. இது தன்னோடு போகட்டும் எச்சூழ்நிலையிலும் தன் குடும்பம் யாரின் கண்ணிலும் பட்டுவிடக் கூடாதென்பதில் தெளிவாக இருந்தான். மனைவியைப் பார்த்து வந்தபின், அதை ரத்தனிடமும் சொன்னான்.

அதனாலேயே கார்த்திக்கின் மேலிருந்த நம்பிக்கை ரத்தனுக்கு இன்னும் அதிகமாகியது என்றே சொல்லலாம். “தொழிலையும், குடும்பத்தையும் நல்லா மேனேஜ் பண்றயா” என்று ரத்தன் விளையாட்டாக சொன்னது வேறு கதை.

இரவு எட்டுமணிக்கெல்லாம் சென்னை வந்து, பொருளை ஒப்படைக்க வேண்டியவரிடம் ஒப்படைத்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ரத்தனின் அனுமதியுடன் பப்ளிக் பூத்திலிருந்து, தன் மனைவியின் செல்லுக்கு அழைக்க அது அடித்து முடித்து ஓய்ந்தது. குழம்பியபடியே திரும்பவும் முயற்சித்தான் கார்த்திக்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top