- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
11
நடப்புக்கு நடுவில்:
திருவள்ளுர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவில்:
கத்திக்குத்து நடந்து கார்த்திக்கின் அருகாமையில் மனம் முழுவதும் நிம்மதி நிறைய, இப்பொழுதே செத்தாலும் சுகமென்று சிரித்தவள், மருத்துவமனை செல்ல அவந்தியைத் தூக்க போனவனை, “கார்த்திக்” என்றழைத்தாள்.
“என்னடா? என்றான் கண்களில் நீருடன்.
அவன் கண்ணீர் துடைத்து, “இந்த முருகன் ரொம்ம்ம்பப சக்தி வாய்ந்தவராம். இப்ப இந்த நிமிஷம் கேட்கிறேன். எ..என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? எ..எனக்கு எதாவது ஆகிட்டா, நான் உ..உங்க ஒய்ஃபா செத்ததாதான் இருக்கணும்” என திக்கித் திணறியபடி சொன்னாள்.
“அவந்தி என்ன பேசுற?” என்று விஷ்ணு குறுக்கிட்டான்.
“உ..உன் ஃப்ரண்டோட க..கடைசி ஆசை விஷ்..விஷ்ணு. சொ..ல்லுங்க கார்த்திக் நான் உ..உங்களை க..கல்யா..ணம் பண்ணிக்கலை. நீ..ங்க என்னை க..கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” சிரித்தபடியே கேட்டாள்.
பழைய நினைவில் அவனுக்குமே மெல்லியதாக சிரிப்புவர, கண்ணீருடன் தலையசைத்தான். தாமு உடனே அங்கிருந்த ஐயரை வரவழைக்க, கடையில் இருந்து மஞ்சள் கயிறு வாங்கி வந்து, அதில் மஞ்சள் வைத்துக் கட்டப்போக, அதற்குள் அவந்திகா தன் பர்ஸிலிருந்து ஒன்றை எடுத்துக்கொடுத்தாள்.
ஆச்சர்யமாய் பார்த்தவர்களுக்கு, “அ..அம்மாவோடது கார்த்திக். மா..மா கொடுத்திருந்தாங்க. ஏனோ கையில வ..வச்சிருந்தா கூடவே இ..இருக்கிற மாதிரி ஒ..ரு ஃபீல். அதான் எப்பவும் எ..ன்கிட்டயே இருக்கும்.”
அருகில் நின்றிருந்த பெண்மணியோ “அம்மாவோடது பொண்ணுக்கு கட்டக்கூடாதுப்பா” என்று சொன்னார்.
‘ஆபத்துக்குப் பாவமில்லை’ என்று ஐயர் மந்திரம் சொல்ல, ஐயன் முருகனின் சந்நிதானத்தில், அவந்திகாவிற்கு தாலிகட்டி, மிஸஸ். அவந்திகா கார்த்திகேயன் ஆக்கிக் கொண்டான்.
அந்தப் பெண்மணி சொன்னதை முன்னரே கேட்டிருக்கலாமோ! அவன் கட்டிய தாலிக்கு ஆயுசு கம்மி என்று காலம் கடந்த பின்னரே தோன்றியது.
“இப்ப நான் மிஸ் இல்ல மிஸஸ்.கார்த்திக்” என்றாள் புன்னகையுடன்.
அவள் சொல்லி முடிக்க, “ஆக அவனுடைய தொழில் மாதிரியே, நீயும் திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்ட. நல்ல ஜோடிதான் போ” நக்கலாகவே சொன்னான்.
“லூசாடா நீ. கோவில்ல அத்தனை ஜனங்க முன்னாடி, தெய்வ சந்நிதானத்துல வச்சி நடந்த கல்யாணம் எங்களோடது” என்றவள் குரலில் அத்தனை பெருமை.
“அவந்தி நிஜமாகத்தான் சொல்றியா? இதை ஏன் எங்க யார்கிட்டேயும் சொல்லாம மறைச்சீங்க?”
“உண்மைதான் அத்தை. எனக்கும், உங்க பையனுக்கும் கல்யாணம் முடிஞ்சிருச்சி. வேணும்னு மறைக்கல. அந்த நேர பரபரப்புல மறந்திட்டோம். அப்புறம் நிதானமா சொல்லிக்கலாம்னு விட்டுட்டோம்.”
“ஏய்! என்னடி அத்தைன்ற. அந்த திருட்டுப்பய கார்த்திக்கோட அம்மாவா இவ?” என அதிர்ச்சியுடன் வனஜா வினவ...
“அத்தை வேண்டாம். ஈஸூமாவை மரியாதையில்லாமல் பேசுறதோ, கார்த்திக்கை திருட்டுப்பயல்னோ சொல்லக்கூடாது சொல்லியிருக்கேன்.”
“அப்படித்தான் பேசுவேன். என்ன கல்யாணம் முடிஞ்சிருச்சின்னா பயந்திருவோமா? அறுத்துக்கட்ட எவ்வளவு நேரமாகும்னு நினைச்ச” என்றார் வன்மம் மாறாது.
“அத்தை” என்று கத்தியவளுக்கு, வயிற்றுப் பகுதியில் சுருக்கென்று ஏதோ குத்துவது போல் தோன்ற, அந்த வலி முகத்தில் வந்து சென்றது.
“அவந்தி என்னாச்சி? வலிக்குதா?” என்ற ஈஸ்வரியிடம்,
“ஒண்ணுமில்லை அத்தை” என்றவள் வனஜாவிடம் திரும்பி, “நீங்க நினைச்சதும் கழட்டி விட்டெறிய இது கயிறு இல்ல தாலி”
“வசனம்லாம் நல்லாத்தான் பேசுற. ஆனா எங்களுக்குத்தான் அது பொருந்தலை. ஸோ... கழட்டிரு” என கௌஷிக் அவந்தியை நெருங்க,
அவனைத் தடுத்து சுந்தரேசன் நடுவில் வந்தார்.
“பேருக்காவது அப்பான்னு இருப்பீங்கன்னு நினைச்சிட்டிருக்கேன். நீங்க நகரல, உங்க மேலேயே கைவைக்க வேண்டியதா இருக்கும்” என்றான் கடுமையாக.
“நீ என்ன செஞ்சாலும், என்னைத் தாண்டிதான்டா அவகிட்ட போக முடியும்” என்றவரை, கோவத்தில் ஒரே தள்ளு தள்ளி, அவந்திகாவை நெருங்கி தாலியில் கை வைக்கபோக,
கோவத்தில் அவந்திகா அவனை அடிக்க ஓங்கிய கையை, மறித்துப் பிடித்து, இன்னொரு கையை தாலியில் வைத்தான்.
திரும்பவும் ‘ஆ’ என கௌஷிக்கின் அலறல் கேட்டது. ஆம் இப்பொழுது ஈஸ்வரி அவனை ஓங்கி அறைந்திருந்தார்.
“இவள் என்னோட மருமகள். என் பையன் தாலி கட்டியிருக்கான். தொட்ட கொன்னுருவேன்.” தான் அடித்த அடியில் கன்னத்தைப் பிடித்தபடி நின்றிருந்தவனிடம், “என்ன அடி வலிக்குதா? உன்னை மாதிரி எத்தனை பொறுக்கிங்களை என் லைஃப்ல பார்த்திருப்பேன். எத்தனை பஞ்சாயத்து பண்ணியிருப்பேன். பொண்ணுங்கன்னா ஈஸியா தள்ளிவிட்டு காரியம் சாதிக்கலாம்னு நினைச்சியா? உங்களை மாதிரி ஆண்களுக்கு உடல்ல பலம்னா, என்னை மாதிரி பெண்களுக்கு மனசுல பலமிருக்கு. அது தேவையான நேரத்திற்கு, இப்படித்தான் எதிர்பாராத விதமா வந்து அடியா விழும்” என்றவர் குரலில் அத்தனை ஆளுமை.
“ஏய்! என்னடி என் பையன் மேலயா கைவைக்கிற? உன்னை என்ன செய்றேன் பார்” என்று வனஜா நெருங்க,
“ஏன்? உன்மேல கூடதான் கைவைப்பேன் பார்க்கிறியா?” என ஆத்திரத்தில் கை ஓங்கிய ஈஸ்வரியைப் பார்த்து மிரண்ட வனஜா, தன்னுடைய திமிரைக் கைவிடாது, “எனக்கு இப்ப புரிஞ்சி போச்சிடா கௌஷிக். இப்பதான கல்யாணம் முடிஞ்சதும் சொத்து வரும்னு சொன்னோம். அதான் சொத்தோட வரப்போற மருமகளை சொந்தமாக்கிகிட்டா இவ” என்றார்.
“ஹா...ஹா சொத்தா! சொத்து எனக்கு முக்கியமா? உனக்கு எவ்வளவு சொத்து, எங்க வேணும்னு கேளு. நான் வாங்கித் தர்றேன். அதுவும் அரைமணி நேரத்துக்குள்ள. என்ன இவளால முடியுமான்னு பார்க்குறியா? என்னால முடியும்” என்றார் ஆவேசமாய்.
“எது உன்னோட பையன் கொள்ளையடிச்சானே. அந்த பணத்துலயா? அந்த மானங்கெட்ட பணம் எனக்கு எதுக்கு. இவளை நான் சின்ன வயசுல இருந்து வளர்த்தது, எதுக்குன்னு நினைச்ச? இந்த சொத்து இல்லன்னா, எப்பவோ அனாதை அசிரமத்துல சேர்த்திருப்பேன். கண்கொத்திப் பாம்பா நான் காவலுக்கு இருக்க, எங்கேயோ இருந்து பருந்து மாதிரி வந்து, நீங்க தூக்கிட்டுப் போறேன்னா, நான் விட்டுட்டு வேடிக்கை பார்ப்பேனா” என வனஜா அதற்கும் குதர்க்கமாக பதில் சொன்னார்.
இவர்களின் பேச்சை முழுசாகக்கூட கேட்க முடியாமல் அவந்தியின் வயிறு வலிக்க ஆரம்பித்தது. அவள் அருகில் வந்த கௌஷிக், “உனக்கு அவன் தாலி மட்டும்தான கட்டியிருக்கான். மற்றது எதுவும் நடக்கலைல?” என கேட்டான்.
அவந்திகா புரியாமல் பார்க்க, புரிந்த சுந்தரேசனும், ஈஸ்வரியும், ‘இந்த கேள்வி இப்பொழுது எதுக்கு கேட்கிறான்’ என நினைத்தபடி பார்க்க,
“புரியலையா? சரியான மரமண்டை. உங்களுக்குள்ள ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப்குள்ள நடக்கிற ரிலேஷன்ஷிப் நடக்கலதான? எனவும் அவளின் அமைதியை சம்மதமாக எடுத்தவன், “அப்புறமென்னடி துள்ளுற?” என்றான்.
அப்பொழுதுதான் அவன் சொன்னதின் அர்த்தம் உணர்ந்தவள், அவனிடம் ஒரு கேவலமான பார்வையை செலுத்தி, எப்பொழுதும்போல் வலியின் ஊடே புன்னகையை வெளியிட்டு, “ஏன்டா, லூசுன்றதை நீயே நிரூபிக்கிற பாரு. அதையெல்லாம் பப்ளிக்ல சொல்லிட்டா பண்ணுவாங்க. உனக்கு ஒண்ணு தெரியுமா? அவங்க போலீஸ்ல மாட்டுறதுக்கு முன்னாடி நாள், இங்க வந்து என்னை பார்த்துட்டுத்தான் போனாங்க. அப்பவே எங்களுக்குள்ள எல்லாமே முடிஞ்சிருச்சி” என்றாள்.
கௌஷிக் அதிர,
கேள்வியாய் பார்த்த மாமியாரிடம் கண்ணடித்து, “சும்மா” என்று பிறர் அறியாமல் சொன்னாள்.
முதலில் அதிர்ந்த கௌஷிக், சில வினாடிகளுக்குள் என்னென்னவோ யோசித்துக் கணக்குப்போட்டு, “பரவாயில்ல அவந்தி. கெட்டுப்போன உனக்கு வாழ்க்கை கொடுக்கிறதா நினைச்சிக்கிறேன்” என்று பெருந்தன்மையாக சொல்ல,
“சே... இவ்வளவு மோசமானவனாடா நீ. அசிங்கமாயில்ல உனக்கு. கெட்டுப்போன பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்குறியா? அதை உண்மையிலேயே கெட்டுப் போனவளுக்கு போய்கொடு. எனக்கு அழகா, அம்சமா, ஆணழகனா என் கார்த்திக் இருக்காங்க. ஏதோ கண்டவன்கிட்...” என நிறுத்தியவள், “;உன்னை மாதிரி தரங்கெட்டத்தனமா பேச என்னால முடியாது. இன்னொருத்தன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும், இந்தளவுக்கு பேசுறியே நீயெல்லாம் என்ன ஜென்மம். உன் கூடவே வளர்ந்தவடா நான். அந்த பாசம்கூடவா உனக்கு இல்லாமல் போச்சி?” என்றாள் கண்களிலும், உடலிலும் வலியுடன்.
“இதெல்லாம் பார்த்தா சொத்து கிடைக்குமா?”
“சொத்தைவிட சொந்தம் பெருசுன்னு எப்ப உணரப்போற? அதுவுமில்லாம நீதான் நிறைய சம்பாதிக்கிறியே. அப்புறமென்ன வேணும் உனக்கு?”
“அ...அதெல்லாம் நிரந்தரமில்லை.” ‘அதுதான் பிரச்சனைக்குரிய தொழில் என்று தெரியுமே’ என நினைத்து, “நீதான் நிரந்தரம்னு தோணிச்சி. அதான். மத்தபடி உன்மேல எனக்கு தனி இன்ட்ரெஸ்ட்லாம் கிடையாது. அதே சமயம் நீ வேற யாருக்கும், குறிப்பா அந்த கார்த்திக்கிற்கு கிடைக்கக்கூடாது.”
“ச்சீய்... போடா!” என்றவளிடம், “அவந்தி நீ அதிகம் பேசக்கூடாது. உன் ரூம்கு போ” என ஈஸ்வரி கட்டளையிட,
“ஆனா அத்தை...” எதோ சொல்ல வந்தவளை மறித்து, “அதான் சொல்றேன்ல. நீ மாடிக்குப்போ. இவங்களை நான் பார்த்துக்கறேன்” என்று அதட்டல் போட்டதும், அவந்திகா சம்மதமாய் தலையாட்டினாள்.
இதையெல்லாம் பார்த்திருந்த சுந்தரேசனும், தன்னறைக்குச் செல்ல திரும்பினார்.
கௌஷிக் தாயிடம் ஈஸ்வரியின் கவனத்தை திருப்பச்சொல்லி தலையசைக்க, புரிந்த வனஜா வன்மமாய் சிரிக்க, இதை எதையும் அறியாத ஈஸ்வரியும் அவர்களின் சூழ்ச்சிக்கு இறையாகி, மருமகளை கவனிக்காமல் விட்டார்.
“ஓ... இதுல இதுவேறயா. எங்க வீட்லயிருந்து எங்களையே மிரட்டிட்டு இந்த இடத்தைவிட்டுப் போயிடுவியா? மரியாதையா இப்பவே வீட்டைவிட்டு வெளியில போ. இல்லன்னா கழுத்தைப் பிடிச்சி வெளிய தள்ளுவேன்” என்று வனஜா தன் நாடகத்தை ஆரம்பித்தார்.
நகர்ந்த சுந்தரேசன் மனைவியின் பேச்சில் அவளைத் தடுக்க வந்தார்.
இவர்களின் வாக்குவாதங்களுக்கு இடையில், அவந்திக்கு வயிற்றுவலி அதிகரித்து அறைக்கு செல்ல முடியாமல் உதடைக் கடித்துக் கட்டுப்படுத்தி நின்றிருந்தாள்.
பெரியவர்கள் இருவரின் சண்டைக்கு நடுவே அவந்திகாவிடம் வந்த கௌஷிக், அவள் கண்மூடி வலிதாங்கிய நேரம், இதுதான் சமயம் என்று தாலியைத் தன் பலம் கொண்டமட்டும் பிடித்து இழுத்துக் கையில் எடுத்தான். பழைய ஜெயின் என்பதால் அதுவும் அவன் கையோடு வந்திருந்தது.”
கண்மூடி திறக்குமுன் நடந்த அந்த செயலை எதிர்பார்த்திராத அவந்திகா, உச்சபட்சமான அதிர்ச்சியில், கௌஷிக்கை தடுக்கவும் முடியாமல், தண்டிக்கவும் முடியாமல் போராட, உணர்ந்து அவனை அடிக்க ஓங்கிய கைகள் காற்றில் கலந்ததுதான் மிச்சம். “அத்தை” என்று ஈஸ்வரியின் கவனத்தை தன்புறம் திருப்ப எண்ணியவள் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்க, சிக்கலை மீறி “அ...அத்தைய்ய்..” என்று கத்தியபடி சுவரோடு சாய்ந்தாள்.
வனஜாவிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரி அவந்திகாவின் அலறலில் சட்டென்று திரும்பிப் பார்த்தார். கௌஷிக் கையில் தாலியுடனும், அவந்திகா மொத்த அதிர்ச்சியையும், வேதனையையும் முகத்தில் பிரதிபலித்தபடி கீழே விழப்போவது போல் நிற்க, அவள் போட்டிருந்த நைட்டியையும் மீறி, இரத்தம் வெள்ளமென பரவியது. ஈஸ்வரிக்கு நிலைமையின் தீவிரம் புரியவே சில வினாடிகளானது.
பின் சுதாரித்து, “அவந்தீஈஈ..” என ஓடிவந்து அவளைத் தாங்கினார்.
“கா...கார்த்...திக்” என்றபடி உணர்விழந்து விழுந்தாள்.
வனஜாவும், கௌஷிக்கும் கொஞ்சம் அதிர்ந்தாலும், சமாளித்து வேடிக்கை பார்த்தார்களே தவிர, உதவ முன்வரவில்லை.
சுந்தரேசனும் வனஜா பேசுவதில் கவனம் செலுத்தியதால் மருமகளைக் கவனிக்கவில்லை. மருமகளின் அருகில் ஓடிவந்து, அவளின் நிலையைப் பார்த்துக் கலங்கி, மகனிடம் திரும்பி, “நீ நல்லா இருக்க மாட்டடா கௌஷிக். பிள்ளைங்களுக்கு பெத்தவங்க கொடுக்கிற சாபம் பலிக்கும்னு சொல்வாங்க. கண்டிப்பா நீ இதுக்கெல்லாம் அனுபவிப்படா” என்று அவசர ஊர்திக்கு போன் செய்து, வந்ததும் அந்த ஓட்டுனர் துணையுடன் அவந்தியை ஏற்றினார்கள்.
அவசரத்திற்காகத் தான் வைத்திருந்த பணத்தை எடுக்க உள்ளே வந்த ஈஸ்வரி, தாய், மகனிடம் நெருங்கி, “அவந்திக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு கடவுளை நல்லா வேண்டிக்கோங்க. என் மருமகளுக்கு மட்டும் எதாவது ஆச்சிது. நீங்க ரெண்டு பேரும் கம்பி எண்ணுறது உறுதி. என்னைப் பற்றி முழுசா உங்களுக்குத் தெரியாது. நான் சொல்றதோட மட்டுமில்ல செஞ்சியும் காட்டுவேன்” என்றவரின் குரலிலிருந்த தீவிரம் ஆனாளப்பட்ட வனஜாவையே அரள வைத்தது.