• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
11



தாயிடம், “இவன் என்ன பண்ணியிருக்கான் தெரியுமாம்மா? கார் மோதப்போகுதுன்னு தெரிஞ்சும் தன்னை மட்டும் காப்பாத்திக்க குனிஞ்சிருக்கான். அந்த நேரம் அவளையும் காப்பாத்த முயற்சித்திருக்கலாம்ல?”

“என்னடா சொல்ற? நான் ஹாஸ்பிடல்ல நடந்ததை வச்சி மட்டும் தான் சொன்னேன். அதுக்கும் முன்னாடியே இதெல்லாம் நடந்திருக்கா? கல்யாணத்தன்னைக்கு பேசினப்ப கூட சொல்லலையேடா.”

“தேவியே சொல்லாதப்ப நான் எப்படி சொல்றதுன்னு விட்டுட்டேன். அன்னைக்கு அவ என்கிட்ட கேட்கிறா, ஆக்ஸிடண்டான போது ஏன் என்னையும் சேர்த்து காப்பாத்த முயற்சிக்காம உங்களை மட்டும் காப்பாத்திக்கிட்டீங்க. உங்க உயிர் முக்கியம், நான் யாரோன்னு விட்டுட்டீங்கதானன்னு. எனக்கு அதை கேட்கும் போது எப்படியிருந்தது தெரியுமா? அப்ப மட்டும் இவன் என் கையில மாட்டியிருந்தான் கொலையே பண்ணியிருப்பேன். ஏன்டா உன்னை நம்பி அனுப்பின பொண்ணை இப்படி அம்போன்னு விட்டுட்டியே. அப்படி என்னடா உன் உயிர் உசத்தி, அவளோட உயிர் மட்டம்? அப்படி என்னத்தை சாதிச்ச? சாதிக்கப் போற?” என்றான் கோவத்தில்.

“ஏய்! கையை எடு நானும் பார்த்திட்டுருக்கேன், ஓவரா பேசிட்டே போற? அந்த டைம் எனக்கு என்ன தோணிச்சிதோ அதைத்தான் செஞ்சேன். அதுக்கு பெயர் சுயநலம்னா இருந்துட்டுப் போகட்டும். நீ கூடத்தான் நான் சுபாவை வேண்டாம்னு சொன்னதும், நான் கட்டிக்கிறேன்டா அவளைன்னு சொன்ன. அதை செஞ்சியா? கண் தெரியாதவளை காலம் முழுக்க சுமக்க நான் தயாராயில்லன்னு நான் சொன்னேன். அவளுக்கு கண்ணா நான் இருப்பேன்டா சொன்ன? இப்ப அவளைவிட சூப்பரா ஒருத்தி கிடைச்சதும் வேற எதோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணியிருக்க? இவ்வளவுதான் உன்னோட சகிப்புத்தன்மையா? இல்ல இது தான் உன்னோட வீரமா? நீயெல்லாம் என்னைப்பற்றிப் பேசுற?” என்றான் பதிலுக்கு.

“அம்மாஆஆ... இவனை போகச் சொல்லுங்க. இவன் பேசுறதை தேவி கேட்டுட்டா எல்லாம் தப்பாகிப் போகிரும்மா.”

“நானே போயிருப்பேன் நீ அமைதியா பேசியிருந்தா. நான் வர்றேன் எதுக்கும் உன் தங்கைகிட்ட என்மேல இன்ட்ரஸ்ட் இருக்கா கேளு. அவ எனக்கு சப்போர்ட் பண்றதைப் பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது.”

“அடிச்செருப்பால நாயே! அவளுக்கு உன்மேல இன்ட்ரஸ்டா? பார்க்க லட்சணமா இருந்தா எல்லா பொண்ணுங்களும் உன்னைக்கண்டு மயங்கிருவாங்களா? நீ பத்திரிக்கை அடிச்சி கைபிடிக்கயிருந்தவளும் உன்கிட்ட மயங்கல. நீயா தேடிவந்து கட்டிக்கிறேன்னவளும் உன்கிட்ட மயங்கல. எங்க முடிவுதான் சாதனா முடிவு. அவ அக்கறைப்பட்டது வரச்சொல்லி அசிங்கப்படுத்திட்டோமேன்னு ஒரு ஃபீல்ல தான். கூடிய சீக்கிரமே என் தங்கையோட கல்யாணப் பத்திரிக்கை உன் ஆஃபீஸ் தேடி வரும்” என்றதும் ஒருவிதமாய் பார்த்துச் சென்றான் ஆனந்த்ராஜ்.

அவன் சென்றதும் “அம்மா சாதுக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பாருங்க. நல்ல பையன், நல்ல ஃபேமிலியா இருக்கணும். அவசரத்துல மாப்பிள்ளை தேடினாலும் அவன் நல்லவனா இருக்கணும்.”

“அதுக்கேன்டா தேடணும்? உனக்கு தெரிஞ்ச நல்ல பையன் அன்ட் ஃபேமிலி இருக்கே.”

“எனக்குத் தெரிஞ்ச பையனா? யாரைமா சொல்றீங்க?”

“ப்ரேம்! நல்ல பையன் இல்லையாடா ஜீவா?” என சோகமாய் முகம் வைத்தபடி கேட்க...

“அம்மா” என முகம் மலர தாயை தூக்கிச் சுற்றியவன் கீழே விட்டு “எப்படி எனக்குத் தோணாமல் போச்சி?”

“அதுக்கெல்லாம் மூளை வேணும்டா. உனக்குத்தான் கொஞ்சம் கம்மியாச்சே. மீதியிருக்கிற கொஞ்ச மூளையும் தேவின்ற பொண்ணு பின்னாடி சுத்துது.”

“அம்மா” என பல்லைக் கடித்தவன் பின் சிரித்தான்..

கணவனையே கவனித்துக் கொண்டிருந்த சுபாவிற்கும், அவளையும் மீறி மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்த்தது. தான் நினைத்ததையே மாமியாரும் நினைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டவளுக்கு, என்னதான் ராஜிடம் தனக்காக கணவன் சண்டையிட்ட போது மனம் ஏற்றுக்கொண்டாலும், அதையும் மீறி அவளின் கோபம் பளிச்சிட்டது.

இதுவரை சாதுவாக இருந்தவள். யாரிடமும் வம்பு, வழக்கென்று செல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டென்று இருந்தவள். கோபமா அப்படின்னா என் பொண்ணுக்கு என்னன்னே தெரியாது என பெற்றவர்களை பெருமை பேச வைத்தவள். இன்றோ முதல் கோபம் அதுவும், கணவன் இவன் தானென்று அறிய முடியாமல் போன கோபம். அதிலும் இன்னொருவனை கணவனாக எண்ணியிருந்த கோபம் அனைத்தும் அவளின் குணத்தை மாற்றியது.

“நான் தேவிகிட்ட பேசுறேன்மா. அவளுக்கு இஷ்டமிருந்தா மேல பேசலாம். சம்மதிச்சா அப்பா இன்னும் ரெண்டு நாள்ல வர்றாங்கள்ல அவங்களோடவே மாமா, அத்தையை வரச்சொல்லி பேசிக்கலாம். காரணம் எதுவாயிருந்தாலும் எப்படியோ அந்த ராஜ் கூட நம்ம வீட்டுப் பொண்ணுங்க ரெண்டு பேரும் சம்பந்தப்பட்டிருக்காங்க. அந்த கோபம் அவனுக்கு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எதுக்கும் சாது வேலைக்குப் போக வேண்டாம்மா.”

“அவனால அப்படி என்ன பண்ணிற முடியும்னு பயப்படுற?”

“பயமில்லம்மா. ரெண்டு டைம் தோத்தவனுக்கு இது இன்சல்டிங்கா இருக்கும். நல்லவனா இருந்தா பரவாயில்லை. இல்லன்னா கஷ்டம். சாதுவை அவனால ப்ரெய்ன் வாஷ் பண்ணி அவன் வழிக்கு வரவைக்க முடியாது. அதே டைம் கோபத்துல எதாவது பண்ணினான்னா? இப்பத்தான் தொட்டதுக்கெல்லாம் பழிவாங்குறேன்னு கிளம்புறாங்களே.”

“சரிடா நான் பார்த்துக்கறேன். நீ தேவிகிட்டப் பேசு போ” என மகனை உள்ளே அனுப்ப, அதற்குள் சுபா தங்களறைக்குள் சென்றிருந்தாள். கண்ணாடியைக் கழற்றிவிட்டு கட்டிலில் கண்மூடி சாய்ந்திருந்தவளருகில் வந்தவன் அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைக்க, கண் திறந்தவள் அவனையே பார்க்க, அவளின் பார்வையின் வசீகரிப்பில் பேச வாயெழாமல் ஜீவா பார்த்திருக்க... கையை மெல்ல அவனிடமிருந்து உருவியவள், “என்னாச்சி? யார் அவன்? அந்த ராஜ்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் உங்களுக்கு அவ்வளவு கோபம் அவன்மேல?”

மனைவியின் கேள்விக்கு இப்பொழுதாவது உண்மையை சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லியிருந்தால் ஒருவேளை அவன் செய்ததை மறக்க முயற்சி செய்து, சுமூகமாகவாவது பேசியிருப்பாள். ஆனால், இதுதான் நடக்க வேண்டுமென்றிருந்தால், விதியை மாற்ற யாரால் முடியும்.

“தேவி அவன் யார் என்னன்றதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம். நமக்கு இப்ப சாதுவோட ப்யூச்சர்தான் முக்கியம். அதுக்கு அம்மா ஒரு ஐடியா சொன்னாங்க. அதான் உன்னோட பெர்மிஷன் கேட்கலாம்னு...”

சற்று ஏமாற்றமாக உணர்ந்தவள், “உங்க போன்ல ப்ரேம் அண்ணா நம்பர் போட்டு தர்றீங்களா?”

ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தவன், சொன்னதைச் செய்து மனைவியின் கையில் கொடுக்க, ப்ரேம் ஹலோ சொல்வதற்குள், “அண்ணா நான்தான் குறுக்க பேசாத. இன்னும் ரெண்டு நாள்ல உனக்கும், சாதனாவுக்கும் நிச்சயதார்த்தம். அது முடிஞ்சி ஒரு மாசத்துக்குள்ள உங்களோட கல்யாணம். வீட்ல அப்பா, அம்மாகிட்ட சொல்லி சீக்கிரமா கிளம்பி வாங்க” என்று போனை வைத்தாள்.

“தேவி எப்படி நான் இதைத்தான் பேச வந்தேன்னு கண்டுபிடிச்ச?” என்றவனுக்கு ஒருவேளை தாங்கள் பேசியதைக் கேட்டுவிட்டாளோ என்ற எண்ணம் வர, அவன் முகம் மாறியது.

கணவனையே பார்த்திருந்தவள், அவனின் எண்ணம் உணர்ந்து, “நான் இதை ஏற்கனவே முடிவு பண்ணியிருந்தேன். நடுவுல இந்த ராஜ் வந்ததாலதான் பேசாம விட்டுட்டேன். அவன் நல்லவனில்லைன்ற பொழுது, இதைப்பற்றிப் பேசுறதுல தப்பில்லைன்னு தோணிச்சி. அதான் உங்களைக் கேட்காமலே முடிவெடுத்துட்டேன். ஒண்ணும் தப்பு பண்ணலையே?”

“நல்ல முடிவு தான். இருந்தாலும், உங்கண்ணன் கிட்ட கேட்காம ஆர்டர் போடுறியே. அவருக்கு இஷ்டமான்னு தெரிய வேண்டாமா?”

“இப்ப சாதனாவுக்கு மேரேஜ் பண்ணப்போறேன்னு அவகிட்ட சம்மதம் கேட்டீங்களா என்ன? இல்லைல? அதுமாதிரி தான் இதுவும். எங்கண்ணனைப் பற்றி எனக்குத் தெரியும். அவனுக்கு எது நல்லது, எது கெட்டதுன்னும் எனக்குத் தெரியும். அதனால நீங்க ஃபீல் பண்ண வேண்டிய அவசியமில்லை. அத்தை, மாமாகிட்டப் பேசி ஆகிற வேலையைப் பாருங்க.”

“சுப்பு” என கண்கள் பளபளக்க மனைவியை அணைக்கப் போனவனைத் தடுத்து, “உங்க கொஞ்சலை ஓரம்கட்டி, அத்தைகிட்ட போய் பேசுங்க” என விரட்ட...

முகத்தை சோகமாக வைத்து, “ஹ்ம்... அவ்வளவு தானா?” என்றவன் அவளறியாமல் கன்னத்தில் முத்தமிட்டு, “ஓகே செல்லம்” என்று வெளியேறினான்.

“இவங்களை...” என பல்லைக்கடித்தவள் பெருமூச்சை வெளியிட்டு, இந்த உண்மை தெரியாமலோ, இல்லை கடைசிவரை கண் தெரியாமலோ இருந்திருந்தால், ஜீவாவோடான தன் வாழ்வு நன்றாக இருந்திருக்குமென்றே தோன்றியது. கணவன் என்ற உரிமையுடன் சகஜமாக பழக முடியாமல், அவன் செய்த செயலால் தான் செய்யவிருந்த தப்பு கண்முன் தோன்ற முகம் இறுகிப்போனாள்.

திருமணத்திற்குப் பின் கணவனிடம் தன் எண்ணங்களை, ஆசைகளைப் பகிர்ந்து, எப்படி அந்நியோன்யமாக இருக்கவேண்டுமென்ற அவளின் ஆசைகள் அனைத்தும் கனவாகவே போவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது சுபாவால். அண்ணன் திருமணம் வரை மட்டுமே இந்த வீடும், உறவும் தனக்குச் சொந்தம். அதன் பின்னான தன் முடிவில் தெளிவாக இருந்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
சென்னையிலோ ப்ரேம் சந்தோஷமும், குழப்பமும் போட்டிபோட இருந்தான். நான்கு மாதம் கழித்து பேசலாமென்று காலையில் தான் பெற்றோரிடம் பேசியிருந்தான். அதற்குள் தங்கையிடமிருந்து போன் மூலம் உத்தரவு வருகிறது. ‘என்ன நடக்குது அங்க? சாதனா எதாவது லவ்ல மாட்டிக்கிட்டாளா? சே... சே... அப்படிப்பட்ட பொண்ணில்ல. அப்படியே இருந்தாலும் அவளை பாதுகாப்பது என் பொறுப்பு. என்ன பெரிய ப்ராப்ளம் இருக்கப்போகுது பார்த்துக்கலாம்’ என அசால்ட்டாக எடுத்து. உடனே அப்பா, அம்மாவிற்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

ஏன்? எதற்கென்ற கேள்விக்கே அங்கு வழியில்லை. மகள் சொன்னால் சரியாகத்தான் இருக்குமென்ற எண்ணம். உடனே விவேக்கிற்கு போன் செய்து விஷயத்தை பேசிமுடித்து, முக்கியமான ஒருசில உறவினர்களுடன் பெங்களுர் செல்ல முடிவெடுத்தார்கள்.

இரவு உணவிற்கு வரமாட்டேன் என்ற சாதனாவை பிடித்திழுத்து டைனிங் டேபிளில் அமர்த்த எழப்போனவள் கையை சுபா பிடிக்க அப்படியே அமர்ந்தாள். மகளுக்கு தட்டுபோட்டு டிபன் எடுத்து வைக்க, “எனக்கு டிபன் வேண்டாம்” என்றாள் வீராப்பாக.

‘ஆமா. இதுக்கொண்ணும் குறைச்சலில்லை’ என நினைத்து, “ஏன் சாதுமா அண்ணனும், நானும் இவ்வளவு சொல்றோமே, ஏன்னு யோசிக்க மாட்டியா?”

“புரியுது. உங்ககிட்ட எதோ பெரிய காரணம் இருக்குன்னு. அதுக்காக வீட்டுக்கு வந்தவங்களை இன்சல்ட் பண்ணுவீங்களா? நீங்க தான வீட்டுக்கு வந்தவங்க விரோதியாகவே இருந்தாலும், இன்முகத்தோட வரவேற்கணும்னு சின்னவயசுலயிருந்து சொல்லிக் குடுத்திருக்கீங்க?”

“ஆமா. இப்பவும் அதையே தான் சொல்லுவேன். விரோதியா இருந்தாலும் நம்ம வீட்டுவாசல்படி மிதிச்சா கண்டிப்பா வரவேற்கணும் தான். அது விரோதிக்கு நல்லா கேட்டுக்க சாதுமா அது விரோதிக்கு. இவன் விரோதி இல்ல துரோகி. விரோதிக்கும், துரோகிக்கும் மலையளவு வித்தியாசம் உண்டு. ஆயிரம் விரோதிகளை மன்னிக்கலாம். ஆனா, ஒரு துரோகியைக்கூட மன்னிக்கக்கூடாது.”

“வந்துமா விடுங்க அவ புரிஞ்சிப்பா அப்படித்தானே சாது?”

‘ஆமா. காரணமே சொல்லாம புரிஞ்சிப்பாளாம்.. புரிஞ்சிப்பா.’ மனதினுள் திட்டியபடி தோசையை பிய்த்து வாயில் வைக்க.

“ஏய்! சட்னி இல்லன்னா சாம்பார் தொட்டுக்கோடி.”

“எனக்குத் தெரியும்” என வீம்பாக சொல்லி, “சே... தொட்டுக்க இத்தனை ஐட்டம்ஸ் இருந்தும் எப்படி வெறும் தோசை வயித்துக்குள்ள போச்சி. சாது இது தப்பாச்சே. ரொம்ப எமோஷனல் ஆகுற. அதுக்கும் உனக்கும் செட்டாகாதே. டோன்ட் சென்டிமென்ட் செல்லம். வெளில மட்டும் கெத்தைக் காண்பிச்சிக்கோ” என்று தாராளமாகவே சாப்பிட ஆரம்பித்தாள்.

அவளின் கோபம் குறைந்ததைக் கண்டவர்கள் தாங்களும் உணவருந்தி முடித்து, அனைத்தையும் எடுத்து வைத்து ஹாலில் அமர, மாடியேறப்போன சாதனாவை, “சாதுமா உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும். இங்க வந்து உட்காரு” என தாய் அழைக்க...

“எனக்குத் தூக்கம் வருது. நான் படுக்கப்போறேன்.”

“பரவாயில்லை இங்க அம்மா மடியிலேயே படுத்துக்கிட்டு என்னன்னு கேளு.”

“கொஞ்ச நேரம் நிம்மதியாயிருக்க விடமாட்டீங்களா?” என்றபடி வந்தவளை... “அம்மா மடி இங்கயிருக்குடா.” வந்தனா அழைக்க...

முகத்தைச் சுழித்து “நீங்க ரெண்டுபேரும் வெரி பேட். நான் அண்ணி பக்கத்துலயே உட்கார்ந்துக்கறேன்” என்று சுபாவினருகிலமர... வந்த சிரிப்பை அடக்கி... “உனக்கு வர்ற வியாழக்கிழமை நிச்சயதார்த்தம்” என்றான் ஜீவா.

“வாட்!!!” என அதிர்ந்து எழுந்தவள், “என்ன உளர்றீங்க? யாரோ ஒருத்தன் வந்தான், வேண்டாம்னும் சொல்லியாச்சி. அப்புறமென்ன திடீர் கல்யாணம். அதுவும் இரண்டே நாள்ல. ஏதோ லவ் பண்ணின பையனோட ஊரைவிட்டு ஓடிப்போகப் போனவளுக்கு, அவன்கிட்டயிருந்து காப்பாத்தி திருட்டுக் கல்யாணம் செய்யுற மாதிரியில்லயிருக்கு நீங்க பண்றதைப் பார்த்தா. யாரைக்கேட்டு இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணுனீங்க? இந்த திடீர் மாப்பிள்ளை மட்டும் நல்லவனாயிருப்பான்னு எப்படி நம்புறீங்க?” என்று கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவளை...

“நூறு சதவீதம் நம்பலாம் நாத்தனாரே. உனக்குப் பார்த்திருக்கிற பையனுக்கு நான் அன்னைக்கு சொன்ன எல்லா தகுதியும் இருக்கு.”

“அண்ணி நீங்களுமா?”

“நீங்களுமா இல்லமா. இந்த சம்பந்தத்தைப் பேசி முடிச்சதே நான்தான்.”

“ஓ... அப்ப எல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்கீங்க?”

“பையன் நல்லவனாயிருந்தா எதையும் யோசிக்கத் தேவையில்லமா தாராளமா முடிச்சிக்கலாம்.”

“சரி யாரந்த அவசரத்துக்குப் பிறந்த சாரி அவசரத்துக்குக் கிடைத்த திடீர் மாப்பிள்ளை” என்று நக்கலுடன் கேட்க...

“ப்ரேம்! எங்கண்ணன் தான் நாங்க உனக்காகப் பார்த்த மாப்பிள்ளை. இப்ப சொல்லு பையன் ஓகேவா?” என்று சற்று நிமிர்வாகவே கேட்டாள் சுபா. அவளுக்குத் தெரியும் குறை சொல்ல எதுவுமில்லாதவன் தன் அண்ணன் என்று.

எப்படி மறுப்பாள். மறுக்க எந்த ஒரு முகாந்திரமும் இல்லாத பொழுது. அவனிடம் அதிகம் பழகவில்லையென்றாலும், அண்ணியின் வாயிலாக ப்ரேமின் பழக்கவழக்கங்களில் ஆரம்பித்து ஏ டூ இஸட் தெரிந்து வைத்திருக்கிறாளே. யோசனையிலிருந்தவள், “நல்ல பையன்தான். இருந்தாலும், இந்த திடீர் கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்லை” என்று எழுந்து வேகமாக மாடியேறினாள்.

“என்ன வந்துமா இவ இப்படிச் சொல்லிட்டுப் போறா?”

“விடுப்பா அவளுக்கு கோபம் இருக்கிறது நியாயம் தான. நீ எல்லாம் ரெடிபண்ணு அவ எதுவும் செய்யமாட்டா.”

“ஓகே” என்று தோள் குலுக்கியவன், “உங்களை நம்பித்தான் இறங்குறேன்.”

“நம்புடா நம்பு. நம்பிக்கை தான் நான். நான் தான் நம்பிக்கை” என்று பஞ்ச டயலாக் விட... சட்டென்று முக இறுக்கம் குறைந்து சுபா சிரித்தாள்.

“பாருங்கமா உங்க காமெடியைக் கேட்டு என் ஒய்ஃப் சிரிச்சிட்டா.”

“என்னது காமெடியா? டேய்! நான் சீரியஸா சொன்னேன்” என்றவரின் முகத்திலும் புன்னகையிருக்க...

“சாரி அத்தை கிண்டலா சிரிக்கல. நீங்க சொன்ன டோன்ல தன்னால சிரிப்பு வந்திருச்சி.”

“இதுக்கு ஏன் சாரி. சரி அப்பா, அம்மாகிட்ட பேசுனியா?”

“இல்லத்தை அதை அண்ணன் பார்த்துப்பான். நாம இங்க பார்க்க வேண்டிய வேலையை மட்டும் செய்யலாம்” என்று தெளிவாக சொன்னாள். தன் வீட்டினர் மேலுள்ள நம்பிக்கையில்.

இரவில் கணவன் வருமுன் படுத்துறங்க முயற்சிக்க, உள்ளே வந்த ஜீவா மனைவியினருகில் அமர்ந்து, மெல்ல அவள் கைபிடித்து, “தேங்க்ஸ்டா தேவிமா” என்றான்.

அதற்கு மேல் வெறுமனே கண்ணை மூடியிருப்பது சரியில்லையென்றுபட கண் திறந்தவள், “எதுக்கு?” என்றாள்.

அவளின் கண்கள் பார்த்து, “ஒரே போன்ல சாதுவோட பிரச்சனையை சால்வ் பண்ணினியே அதுக்கு.”

“ப்ச்... அவ என்னோட நாத்தனார். அவளுக்கு செய்யுறது என்னோட கடமையும் கூட. அவளுக்கு செய்யாமல் வேற யாருக்கு செய்யப்போறேன். அப்புறம் வேற எதாவது சொல்லணுமா?” அப்படியாவது அவர்கள் திருமணம் நடந்தவிதம் பற்றி, எதனால் அவனுக்கு தன்னைப் பிடித்தது என்பதைப்பற்றிச் சொல்வான் என எதிர்பார்த்து ஒரு வாய்ப்பு கொடுத்தாள்.

‘சொல்லிவிடலாமா?’ என ஒருகணம் நினைத்தவன், ‘தங்கைக்கு ப்ரேமை பேசியிருக்கும் இந்நேரம் சொன்னால் தப்பாகிவிடுமோ’ என நினைத்து, “கண்ணுக்கு மருந்து எடுத்துட்டு வர்றேன்மா” என்று ஜீவா சொல்லிச் சென்றான்.

மனம் சோர்ந்தாள் சுபா. தன் கல்யாண விஷயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மேலும் சொல்லொணாத கோபம் வந்தது. ‘எல்லாரும் இன்னும் எத்தனை காலத்துக்கு என்னிடமிருந்து மறைக்கிறதா உத்தேசம்?’ என நினைத்துக் கொண்டிருந்தவளருகில் வந்தமர்ந்தவன், “கண்ணு திற தேவி மருந்து விடலாம்” என்றான்.

கண் திறந்தவள் “மருந்தெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என்று கொஞ்சம் வேகமாகவே சொல்லிவிட, “என்னடா கோபம் உனக்கு? மருந்து போடலன்னா எப்படி குணமாகும். இன்னும் ஒரு வாரத்துல சென்னைக்கு செக்கப்கு வேற போகணும். முதல்ல கண்ணுக்கு மருந்து போடு” என்று அவளின் கண்களுக்கு மருந்திடச் சென்றவன் மனைவியின் பார்வை வீச்சில், அவள் கண்களில் என்ன இருக்கிறது என்பதை கணிக்க முடியாமல் திணறினான்.

கணவனை நேருக்கு நேராக குற்றப்பார்வை பார்க்க ஆரம்பித்தவள், நேரமாக ஆக ஒருவருள் ஒருவரைத் தேட...

மனைவியின் கண்ணில் தோன்றிய அந்த ஒளி வீச்சில் முழுவதும் மயங்கியவன், ‘இவளுக்குப் பார்வை தெரியாதுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா? எப்படி பார்த்தே மயக்குறா பாரு’ என சளைக்காமல் பதில் பார்வை பார்த்து அந்தக் கண்களில் குனிந்து முத்தமிட வந்தவனை, இன்னும் விழிவிரித்துப் பார்த்தாள்..

“சுப்பு உன் கண்ணு என்னவோ சொல்லுதுடி. ஆனா, எனக்குத்தான் புரியல” என்றபடி மனைவியின் கண்களில் முத்தமிட...

மயங்கும் நிலையில் சுபா இல்லாததால் அவனிட்ட முத்தத்தை ஏற்க மனமில்லாமல், ஒரு செகண்ட் அவனைத் தள்ளிவிட்டு ஓடிவிடலாமா? அல்லது, எனக்கு கண் தெரியும்டா என கத்தி ஆர்ப்பாட்டம் செய்யலாமா? என்று தோன்றியதை முயன்று தன்னைக் கட்டுப்பத்தினாள்.

அவனோ மருந்திட்டு, மெல்ல கன்னத்தில் முத்தமிட்டு, முகமெங்கும் வலம் வந்தபடி, “தேவி இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்” என்று கணவனாய் நெருங்கி அவளை அணைக்க...

கணவனின் இதழ் ஸ்பரிசத்தில், உடல் இசைந்தாலும், மனம் தடுத்து, “எ...எனக்கு கொஞ்சம் ஃபீவரிஷா இருக்கு. இன்னைக்கு வேண்டாமே?” என்றாள்.

சட்டென்று அவளிடமிருந்து விலகியவன், “ஜுரம் வர்ற மாதிரி இருக்கா? ஏன் என்கிட்ட சொல்லல? மழையில் நனையாம இருந்திருக்கலாம்லமா?”

‘ஆமாம். நனையாம இருந்திருக்கலாம். நனையாம இருந்திருந்தா, காலையில் தங்களுக்குள் நடந்ததை, நடக்காமலே தடுத்திருக்கலாம்.’ மனதில் எழுந்த எண்ணங்களைத் தள்ளி, “எனக்கு மழையில நனையனும்னு ஆசை அதான்” என்றாள்.

“சரி வா டாக்டர்கிட்டப் போகலாம்?”

“இல்ல வேண்டாம். ரொம்ப லேட்டாயிருச்சி காலையில பார்த்துக்கலாம்.”

“இரு டேப்லெட் எடுத்துட்டு வர்றேன்.”

‘கொஞ்சம் என்கிட்ட பேசாம, என்மேல அக்கறை எடுக்காம அமைதியா இரேன்’ என வாய்வரை வார்த்தைகள் வர அதை முழுங்கி... “இல்ல ஒரு ஃபீலிங் தான் ரெஸ்ட் எடுத்தா சரியா போகும். மற்றதைக் காலையில் பார்த்துக்கலாம்” என்றதும் அவளருகில் படுத்து மெல்ல தலைவருடி “தூங்கு தேவி” என்றான்.

‘ப்ளீஸ் லீவ் மீ அலோன்’ என்று கத்தி அவனின் கையைத் தட்டிவிட வேண்டும் போல் எண்ணம் எழ, அவளே அவளின் நினைப்பில் ஆடித்தான் போனாள். காலையில் தானிருந்த மனநிலைக்கும், இப்பொழுதைய மனநிலைக்கும் மலையளவு வித்தியாசம் உணர்ந்தவள், இது தனக்கு நல்லதா? கெட்டதா என தன்னைத் தானே கேட்டுக்கொண்டிருந்தாள். ‘நானா? நானா இப்படி?’ என்ற எண்ணம் மனதைப் பாடாய்ப்படுத்த கணவனுக்கு முதுகு காண்பித்து படுத்தவள், கண்ணீர் வரவேண்டாமென நினைத்தாலும், கண்ணீர் வந்தது.

மனைவியின் விட்டேற்றியான பேச்சு அவளின் உடல்நலக்குறைவால் என நினைத்தவன், அவள் இடையில் கைபோட்டு படுத்தான். எடுத்துவிட எழுந்த சுபாவின் கைகள் மனமில்லாமல் இறங்கியது. ‘ஏன் நான் இப்படியாகிட்டேன்? ஏன் என்னால இவங்களை ஏத்துக்க முடியலை?’ என்ற ஏக்கம் அவளுள். ‘நல்லவன் ரொம்ப நல்லவன் தான். நான் இருந்த நிலையில் யாரும் எடுக்காத முடிவு தான். அந்த ராஜிடம் சொன்னதுபோல் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்கிறான் தான். ஆனாலும், மனம் ஏற்க மறுக்கிறது. என் வாழ்க்கை இப்படியே போய்விடுமா? என் மனம் மாறாதா?’ நினைவுனூடே உறங்கினாள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top