• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
11



இனி இன்று மட்டுமே:

இருட்டிய வேளையில் சர்ரென்று இரு கார்கள் அடுத்தடுத்து வந்து முன்னுக்குப் பின்னாக நின்றது. அதிலிருந்து இறங்கிய சரத்தும், ராசியும் ஒரே இடத்தை வெறித்தபடி நின்றிருந்தார்கள். மனதினுள் இருவருக்குள்ளும் துக்க அலைகள். ‘தன்னால்தான் அக்கா மகளிற்கு இந்த முடிவு’ என்று சரத்தும், ‘தன்னால்தான் மாமாவிற்கு இந்த முடிவு’ என்று ராசியும் மனதினுள் போராடிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது வீசிய காற்று இருவர் மேனியையும் தீண்டிச்சென்று மேனிசிலிர்க்க வைத்து, இருவரின் தலை வருடிச் சென்றது. ஒரு வேளை ஆசீர்வதித்ததோ! இருக்கலாம். இருவரின் நலம் விரும்பிகளும் விதிவசத்தால் சாவின் விளிம்பில் இருந்த இடமல்லவா!

பத்து வருடங்களுக்கு முன் ஒன்றும் தெரியாத பதினைந்து வயதுச் சிறுமியாக இருந்தவள், இன்று இளம் பெண்ணாக பேரழகி இல்லையென்றாலும் பார்ப்பவர் கண்ணைக் கவரும் அழகில், கண்களில் மனிதர்களை எடைபோடும் தெளிவில், அதற்குத் தேவையான படிப்புடனும் இருந்தாள். பயணத்திற்காக காட்டன் புடவை அணிந்திருந்தாள். காரில் வந்ததால் கலைந்த தலைமுடி காற்றில் நர்த்தனம் ஆட, இடைவரை தொட்ட கூந்தலில் மல்லிகைப்பூ சற்று வாடியிருந்தது ராசியின் மனம்போல்.

இருபத்தியொரு வயது இளைஞனான சரத் முப்பத்தியொரு வயதில் முழுமையான ஆண்மகனாக நின்றிருந்தான். பார்க்கும் பெண்களின் கண்கள் அவனை ரசனையுடன் தழுவிச் செல்லும். அதற்காக பெண்களெல்லாம் மோசம், ஆண்கள் பின் அலைகிறார்கள் என்று அர்த்தமில்லை. ஒரு அழகான பொருளைப் பார்க்கும் பொழுது உண்டாகும் அந்த நேரத்து ரசனை.

ஹரிப்ரியாவின் மரணத்திற்குப் பின் மேலூர் வராமல் திருச்சியையும் விட்டு சென்னைக்கு சென்று, அங்கேயே படித்து தனக்கென்று தொழிலில் ஓரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டான் ஹரிசரத். எதாவது விசேஷம் என்றால் மட்டுமே ஊருக்கு வருவது. இதோ அக்காவின் சின்ன மகள் தீபலட்சுமிக்கு திருமணம் என்பதால் சென்று கொண்டிருக்கிறான்.

சில நிமிடங்களாக யாரோ அழைப்பது கேட்டு திரும்பிய ராசியின் அருகில் அவளின் ட்ராவல்பேக் வந்து விழுந்தது. அதில் அதிர்ந்து நிற்க... ராசியை அழைத்துப் பார்த்து திரும்பவில்லை என்றதும் பேக்கை தூக்கிப் போட்டுவிட்டு காரை எடுத்துச் சென்றிருந்தான் கால்டாக்ஸி டிரைவர்.

“ஹேய்! என்ன பண்றீங்க?” என ராசி கத்தியதில்... பழைய நினைவுகளிலிருந்து வெளி வந்து திரும்பிய சரத்திற்கு அவ்விடத்தில் ராசியைப் பார்த்ததும் முகம் பளிச்சிட, “ஹாய்! மிஸ்.ராசி” என்றான் சந்தோஷத்தில்.

‘யார்டா? நம்ம பெயரை இந்த காட்டுக்குள்ள கூப்பிடுறது?’ என்று திரும்பியவளும், “ஹலோ சரத் சார் நீங்களா? நீங்க எப்படி இங்க?” என்றாள் ஆர்வமாய்.

“அதையே தான் நானும் கேட்கலாம் தான. நீங்க எப்படி இங்க? அதுவும் தனியா எதுல வந்தீங்க?”

“அதை ஏன் சார் கேட்குறீங்க?” என அலுக்க...

“சரி கேட்கலை விடுங்க” என்றான் குறும்பாக.

“சார்ர்ர்... ஏன்? எதுக்கு?” என்றவள் அவன் சிரிப்பைக் கண்டு, “அட போங்க சார் நீங்க வேற. என்னன்னு தெரியல கால் டாக்ஸி டிரைவர் கூப்பிடக் கூப்பிட நிற்காம காரை எடுத்துட்டுப் போயிட்டான்” என்றாள் சலிப்பாக.

“ஓ... ஏன்? என்னாச்சி?” என அக்கறையாய் கேட்டு சுற்றிலும் பார்த்தவனுக்கு எதுவோ சரியில்லையென்று தோன்றியது. கார் போன திசையைப் பார்த்தவன் ராசியிடம் திரும்புகையில் ஏதோ ஒன்று அவளை நோக்கி பறந்து வர சட்டென்று சுதாரித்தவன் வேகமாக அவளைத் தன்புறம் பிடித்திழுத்தான்.

திடீரென்ற இழுப்பில் நிதானம் தவறியவள் அவன் மேல் மொத்தமாக விழ... அதே நேரம் பாட்டில் ஒன்று ‘ணங்’ என்ற சத்தத்துடன் மரத்தில் பட்டு வெடித்தது.

அந்த சத்தத்தில் அதிர்ந்து சரத்தை ஒண்டியவள் சில வினாடி சென்று தலைதூக்க, அவளின் தலையை நிமிரவிடாமல் செய்து தானும் குனிந்தபடியே மெல்ல கார் கதவைத் திறந்து, அப்படியே அவளின் பேக்கை எடுத்து உள்ளே போட்டு டிரைவர் சீட்டிற்கு சென்று ராசியை உள்ளே அழைத்தான்.

யோசனையாய் பார்த்தவளை, சரத் கைபிடித்து உள்ளே இழுக்க... அசையாமல் நின்றிருந்தவளை யாரோ பின்னிருந்து காருக்குள் தள்ளுவது போலிருந்தது. உள்ளே அமர்ந்ததும் சடாரென திரும்பிப் பார்க்க அங்கு எவருமில்லை. அவள் நிதானத்திற்கு வருமுன் கார் மதுரை ரோட்டில் திரும்பிச் சென்று கொண்டிருந்தது.

‘ஷப்பா’ என மூச்சை இழுத்து விட்டவன் ராசியின் குழப்ப முகம் பார்த்து, “என்னாச்சி ராசி? ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு?” என்றான் அக்கறையாக.

“இல்ல நீங்க என் கைபிடிச்சி உள்ள இழுத்தீங்க இல்லையா. அப்ப நான் வராமல்தான் நின்னேன். யாரோ என்னை பின்னாலிருந்து தள்ளி உள்ள போன்னு சொன்ன மாதிரி ஃபீல்” என்றாள்.

“அது எதாவது பிரமையாயிருக்கும் ராசி.”

‘ம்..’ என்று யோசனையாய் தலையசைத்தாலும், “சரி அதைவிடுங்க. அங்க என்ன நடந்தது? வந்து விழுந்த பாட்டில்ல ஆசிட் மாதிரி இருந்துச்சே? அந்த டிரைவர் ஏன் ஓடினான்?” என கேள்விக்கணை தொடுத்தாள்.

“ஹலோ மேடம் ஸ்டாப்! நானும் உங்களோட தான் இருந்தேன். ஏன் இவ்வளவு படபடப்பு? சம்திங் எதோ கலவரம்னு நினைக்கிறேன். பஸ்ஸையெல்லாம் நிறுத்திட்டிருக்காங்க. உங்க மேல பாட்டிலை வீசுறதைப் பார்த்துதான் பிடித்திழுத்து காருக்குள்ள வரவச்சேன். சாரி தப்பா எடுத்துக்காதீங்க?”

“நோ ப்ராப்ளம் சார். என்னைக் காப்பாத்தத்தான பண்ணுனீங்க. ஆனாலும், இது சரி கிடையாது சார்?”

“ஏங்க! எது சரி கிடையாது?”

“ஹ்ம்... அடிக்கடி வயசுப் பொண்ணை கைபிடிச்சி இழுக்கிறது.”

அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்தது. அவளை சந்திக்கும் பொழுது ஒருசில நேரம் கை பிடித்திழுத்தது நியாபகம் வர சிரித்தவன், “ஆமா கைபிடிச்சிழுத்தேன் சரி. அது யாருங்க வயசுப் பொண்ணு? நான் பார்க்கலையே? நீங்க பார்த்தீங்க?” என்றதுதான் தாமதம்...

“ஹலோ! என்னைப் பார்த்தா கிழவி மாதிரியா தெரியுது? முதல்ல காரை நிறுத்துங்க. நான் இங்கேயே இறங்கிக்கறேன். கிழவியோடல்லாம் நீங்க டிராவல் செய்ய வேண்டாம்” என்று படபடவென்று பொரிந்தாள்.

“ஷப்பா.. என்ன கோபம் வருது ராசி உங்களுக்கு. உங்களை சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் போல” என முணுமுணுக்க... “என்ன சொன்னீங்க? கொஞ்சம் சத்தமா பேசுங்க சார். புரியமாட்டேன்னுது.”

“ப்ச் ஒண்ணுமில்லங்க ஓடிப்போன டிரைவரைப் பற்றி யோசிச்சிட்டிருந்தேன்” என்ற சரத்தின் கேள்விக்கு,

“கலவரத்தைப் பார்த்துத்தான் பயந்து ஓடிட்டான் போல” என்றாள் பதிலாய்.

“கூட்டிட்டு வந்த பெண்ணை சரியான இடத்துல சேர்க்க முடியாதவன்லாம் ஏன் டிரைவரா இருக்கான். இடியட்” என திட்டியவனையே பார்த்தாள் ராசி.

“ஏன் அப்படிப் பார்க்கறீங்க ராசி?”

“இல்ல உங்ககூட பழகிய இத்தனை நாட்கள்ல, நீங்க அடிக்கடி கோபப்பட்டு பார்க்கிறேன். எப்பவும் எல்லார்கிட்டேயும் இப்படித்தான் இருப்பீங்களா?”

“இல்லங்க. உரிமை உள்ளவங்ககிட்ட மட்டும்தான். நல்லா யோசிச்சிப் பார்த்தா உங்களுக்கே புரியும்” என்றான்.

ஒவ்வொரு முறையும் அவளிடமோ அல்லது அவளுக்காகவோ சப்போர்ட் பண்ணி கோபப்பட்டிருக்கிறான் தான். அது எந்த உரிமையிலோ!

‘என்ன உரிமை?’ கேட்க வாயெடுத்தவள், அவன் ஏடாகூடமாக எதாவது சொல்லி வைக்கக் கூடாதே என்றெண்ணி வாயை மூடி, “ஏன் அவனைத் திட்டுனீங்க? கேட்டேன்.”

“ஏன்னா நானும் அக்கா கூட பிறந்திருக்கேனே. ஆமா எங்க போறீங்க? இந்த இடத்துல ஏன் இறங்குனீங்க?”

சற்று தயங்கியவள், “நான் மதுரை போறேன் சார். அங்க எங்களுக்குச் சொந்தமான வீட்ல ஒரு ஃபேமிலி ஒன்பது வருஷமா குடியிருக்காங்க. வீட்ல சின்னச் சின்னதா வேலையிருக்கு காலி பண்ணுங்க சொன்னா, இது எங்க வீடுன்னு உரிமை கொண்டாடுறாங்களாம். ஸோ, என்னன்னு பார்த்துட்டு வராலாம்னு தான் கிளம்பினோம். கடைசி நேரத்துல அம்மாஆச்சிக்கு உடம்பு சரியில்ல அதான் தனியா கிளம்பிட்டேன். இவன் என்னடான்னா இப்படிப் பண்ணிட்டான். ஆமா நீங்க எங்க போறீங்க? கேஸ் விஷயமா போறீங்களா?”

“இல்லங்க அக்கா பொண்ணு கல்யாணத்துக்கு மேலூருக்குப் போறேன்.”

“ஓ... அன்னைக்கு உங்களோட காஃபி ஷாப்ல இருந்தாங்களே அவங்களுக்கா?”

“ஆமா அவளுக்குத்தான். இப்பவே இருட்டிருச்சி. இன்னும் நீங்க அங்க போய் சேர ரொம்ப லேட்டாகிரும். போற வழிதான் எங்க ஊர் வந்துட்டு போங்களேன்.”

“இல்ல சார் உங்களுக்கு எதுக்கு தொந்தரவு. அம்மாஆச்சியை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிட்டு வந்ததால லேட்டாகிருச்சி. இல்லன்னா இந்நேரம் மதுரையில இருந்திருப்பேன்.”

“இந்த கலவரம் அங்க வரை இருக்காதுன்னு உங்களுக்கு தெரியுமா அதான்ங்க சொல்றேன். நாளைக்கு காலையில அக்கா பொண்ணு கல்யாணம். முடிஞ்சதும் நானே உங்களை மதுரைக்கு கூட்டிட்டுப் போறேன். எனக்கும் கேஸ் சம்பந்தமா ஒரு வேலை இருக்கு. உங்க வேலை சீக்கிரம் முடிஞ்சிதுன்னா என்னோடவே வந்திருங்க. ஏங்க என்னை நம்பலாம்ங்க. நான் நல்ல பையன் தான்” என்றான் அப்பாவியாய்.

அதில் சிரித்தவள் “நீங்க நல்ல்ல பையனா! நான் நம்பிட்டேன்” என்று அவன் கால்வார...

“நம்பமாட்டீங்களே! ஒருத்தன் தன்னைத்தானே நல்லவன்னா இந்த உலகம் நம்பாதுன்னு எங்க கொள்ளுக்கு கொள்ளுப்பாட்டி சொல்லியிருக்காங்க தெரியுமா?” என்றான் சோகமாக முகத்தை வைத்து.

ஹா..ஹா என சத்தமாக வாய்விட்டு சிரித்தவளையே, அழகாய் ரசித்திருந்த சரத், “நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகாயிருக்கீங்க” என்றான் வெளிப்படையாகவே.

“ப்ச்... விளையாடாதீங்க சரத். நான்லாம் அந்தளவு அழகில்லைன்னு எனக்கே தெரியும். சும்மா பேசணும்ன்றதுக்காக சொல்லக்கூடாது சார்” என்றாள்.

“சரத்னு சொன்னதே நல்லாத்தானிருக்கு. அப்புறம் சார் எதுக்குங்க ராசி?”

“சா..சாரி சார் நான் கவனிக்கல, பேச்சிவாக்குல சொல்லிருப்பேனா இருக்கும்.”

“திரும்பவும் சாரா? நேம் சொல்லியே கூப்பிடுங்க ராசி.”

“தப்பு சார் நீங்க என்னோட பெரியவங்களாச்சே. என்கூட வேலை செய்யுறவங்களைக் கூட நான் நேம் சொன்னதில்ல சார் தான்.”

“அவங்களும் நானும் ஒண்ணா ராசி?” என்றான் இறங்கிய குரலில்.

“யார் சொன்னது? அவங்களும் நீங்களும் ஒண்ணுன்னு. அவங்களோட உங்களை ஈக்வல் பண்ணாதீங்க சரத். அவங்க வேற நீங்க வேற. நீங்க எனக்...” ஒரு வேகத்தோடு சொல்லிக் கொண்டிருந்தவள், அவள் சொன்னதன் அர்த்தம் விளங்க திருதிருவென விழிக்க...

அப்படியே அணைக்கத் தூண்டிய மனதை அடக்கி, “நான் உங்களுக்குன்னு எதோ சொல்ல வந்தீங்க. ஏன் ராசி முடிக்காம விட்டுட்டீங்க? ஒரு வேளை மறந்துட்டீங்கன்னா நினைவு வரும்போது சொல்லுங்க. இப்ப நாம கல்யாணத்துக்குப் போகலாம்” என்றான் சந்தோஷமாக.

‘போகலாமா? வேண்டாமா?’ என்ற குழப்பமான மனநிலையில் இருந்தவள் “போகலாம் சார். காலையில் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணிட்டு நான் மட்டும் பஸ்ல மதுரை போயிடுறேன். நீங்க உங்க பேமிலி கூட கொஞ்சம் டைம் பாஸ் பண்ணுங்க” என்றாள்.

“ஹ்ம்... சரி விடுங்க. நாளைய பிரச்சனையை நாளைக்கு பார்த்துக்கலாம்” என்றவன் இளையராஜாவின் தொண்ணூறுகளில் வந்த பாடலை ஓட விட்டு தனது குடும்பத்தைப் பற்றி சின்னதாக இன்ட்ரோ கொடுத்தபடி வந்தான்.


அவர்களின் பேச்சுக்களில் அந்த இடத்திற்கு ஏன் வந்தாள்? ஏன் நின்றாள்? என கேட்டதை மறந்தான். கேட்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமோ!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
இரவு வீடு போய்ச்சேர பதினொன்று ஆனது. வீட்டு முன் பந்தலிட்டு இருபக்கமும் வாழைகள் நட்டு, தோரணங்கள் சீரியல் பல்புகள் என பெரிய ஊராகயிருந்தாலும் சற்று கிராம வாசனையுடன் இருந்த வீட்டிற்கு முன் காரை நிறுத்தி ஹாரன் அடித்தான்.

அந்த சத்தம் கேட்டு வேகவேகமாக காரினருகில் வந்து “தம்பி வந்திட்டியா. ஏன்டா இவ்வளவு லேட் பண்ணிட்ட? பத்து மணிக்கெல்லாம் வந்திருவேன்னு சொன்ன பிள்ளையைக் காணோமேன்னு பயந்துட்டேன் போ.”

“அ..அது அக்கா வர்ற வழியில...” என தடுமாறி தயங்கும் போதே... “அங்க இறங்கி நின்னுட்டு வர்றியா?” என்ற அக்காவின் கேள்வியில் ‘ஆம்’ என தலையாட்ட, ஒரு நிமிடம் அவருக்குமே கண் கலங்கியது.

“அக்கா என்னக்கா நீங்க?”

“ப்ச்... விடுடா நடந்து முடிஞ்சதை யோசிச்சி என்ன பண்றது. வேதனை தான் மிஞ்சும். சரி எப்படியிருக்க? சாப்பிட்டியா இல்லையா? இப்படி இளைச்சி போயிட்ட” என அக்கறையாய் கேட்க...

“அக்கா.. அக்கா என்னைப் பார்த்தா இளைச்ச மாதிரியா இருக்கு” என்றவன் காரிலிருந்து இறங்கி அருகில் வந்த ராசியிடம், “நீங்க சொல்லுங்க ராசி. மூணு மாசமா என்னை உங்களுக்குத் தெரியும் தான? முன்னாடியை விட நான் இளைச்சிருக்கேனா? இல்லைல்ல” என்றான் சாதாரணமாக.

அவனின் திடீர்க் கேள்வியில் அதிர்ச்சியுடன், ‘இவன் என்ன இப்படிக் கேட்கிறான்’ என நினைத்தாலும் அவனை சற்று எடைபோடத்தான் செய்தாள். தன்னைவிட கலர் தூக்கலாக இருக்க.. ஏதோ ஒரு வசீகரம் அவனிடத்தில் இருந்தது. அவனின் வளர்த்திக்கும், கம்பீரமான தோற்றத்திற்கும் ஆணழகன் போட்டியில் கலந்தால் ஈஸியாக வெல்வான் என்றே தோன்றியது. அவனைப் பார்க்காதே என மனம் சொன்னாலும், கண் அதை அலட்சியம் செய்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.

இதுவரை ராசியுடன் பழகியிருந்தாலும், அவளை நேருக்கு நேர் சந்தித்து பேசியிருந்தாலும், அவள் கண்களை மிக அருகில் பார்க்கும் பொழுதுதான் கண்டுகொண்டான் கண்களின் வித்தியாசத்தை. அன்று சேவியர் வீட்டில் நிலா வெளிச்சத்தில் வித்தியாசத்தை உணர்ந்தாலும் ஒன்றும் தெரியவில்லை. இன்று ஏனோ அவளின் பார்வையிலிருந்து தன்னை மீட்க முடியாமல் ஏதோ ஒன்று அவனை அழுத்தி அவளையே பார்த்திருக்க...

“யார்டா இந்தப் பொண்ணு?” என்ற சாந்தியின் ஆர்வமான கேள்வியில் இருவரும் சுயநினைவு வந்தனர்.

“அது அக்கா.. இவங்க என்னோட ப்ரண்ட். ஒரு கேஸ் விஷயமா மீட் பண்ணினப்ப பழக்கம். வர்ற வழியில ஒரு சின்ன கலவரம். இவங்க வந்த கால்டேக்ஸிக்காரன் பயந்துட்டு பாதியில விட்டுட்டுப் போயிட்டான். மதுரைக்கு போகணும்னாங்க, நான்தான் லேட் நைட்டாகிரும். அதுவுமில்லாம கலவரம் வர்ற வழியில இன்னும் ஒருசில இடத்துல நடக்கிறதைப் பார்த்தேன். மதுரையிலும் இருக்காதுன்னு என்ன நிச்சயம். அதான் கூட்டிட்டு வந்திட்டேன்கா” என்றான்.

தம்பியின் கண்களில் உண்மையிருந்தாலும் சற்றுமுன் அவர்கள் இருவரின் பார்வையும் பேசியதைப் பார்த்தவருக்கு புதியதாக ஒரு நம்பிக்கை வந்தது. “வாம்மா” என்றழைத்து “உள்ள வாடா. ஆமா நான் போன்...” என அக்காவும் தம்பியும் பேசியபடி செல்ல பின்னாடியே வந்தவள் வீட்டை சுற்றிலும் பார்வையிட்டாள். கிராமத்து பாணியிலேயே கட்டப்பட்ட வீடு ஆங்காங்கே போட்டோக்கள் வேறு. அதிலிருந்த பெண்ணின் கண்கள் ராசியை ஈர்க்க அங்கேயே நின்றிருந்தவளை தேடி வந்த சரத், “என்ன ராசி இங்கேயே நின்னுட்டீங்க? உள்ள வந்து சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுங்க. காலையில கல்யாணத்துக்கு ரெடியாகணும்.”

“இல்ல வேண்டாம் சாப்பிட்டுட்டேன்.”

“என்னமா நீ எப்ப சாப்பிட்டியோ? கொஞ்சமாவது சாப்பிடு” என்ற சாப்பிட வைத்து அறைக்குள் அடைந்து கிடந்த மகளை அழைத்து வர...

“ஹேய் கல்யாணப் பொண்ணு எப்படியிருக்க?” என்றான் உற்சாகமாய்.

“மாமா” என்று ஆசையாக வந்தவள், “போங்க மாமா. நான் உங்க மேல கோவமாயிருக்கேன். எல்லா ஏற்பாடும் நீங்க செஞ்சிட்டு கல்யாணத்துக்கு முந்தின நாள் அதுவும் லேட்டா வர்றீங்க.”

“சாரிமா. வேலையெல்லாம் முடிச்சிக் கொடுக்க டைம் ஆகிருச்சி.”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது.” தீபா சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரத் தோப்புக்கரணம் போட... “ஹையோ மாமா! இன்னும் சின்னப் பிள்ளைங்க தண்டனை தான் தருவாங்களா என்ன?” என புருவம் தூக்கி, “காஸ்ட்லி பனிஷ்மெண்ட்தான்” என்றாள்.

“காஸ்ட்லினா?”

“ம்.. உங்க லைஃப் லாங் தண்டனை உங்க மேரேஜ். பொண்ணு கூட ரெடி. பாருங்க! ஓகே பண்ணுங்க! கட்டுங்க! தூக்கிட்டுப் போங்க!” என்றதும்... சட்டென்று முகம் மாறியவன் “கல்யாணம் பண்ற ஐடியா எனக்கில்லை” என்று மாடியிலிருக்கும் தன்னறைக்குச் சென்று மறைந்தான்.

‘ப்ச்... இவன் மாறவே மாட்டானா. பழசையெல்லாம் எப்ப மறப்பான்னே தெரியலையே.’ மனம் குமைந்தது தாய்க்கும் மகளிற்கும். முதலில் வேடிக்கையாக பேசிக்கொண்டிருந்தவன் கல்யாணப் பேச்சை எடுத்ததும் கோபத்தில் உள்ளே சென்றதை புரியாமல் பார்த்திருந்தவளை, “வாம்மா வந்து உட்கார்” என்றவர். மகளிடம் திரும்பி “லட்சுமிமா இவளை இன்னைக்கு உன்னோட படுக்க வச்சிக்கோ” என்று உள்ளே செல்ல...

சம்மதமாக தலையசைத்த தீபா, “உங்க பெயர் என்ன?” என்று சகஜமாய் அருகிலமர்ந்தாள்.

“ஹரிப்ரியா” என்றாள் ராசி அவளையும் அறியாமல்.

அந்த பெயரைச் சொல்லுகையில் உள்ளே சென்று கொண்டிருந்த சாந்தி மற்றும் வெளியே வேலை முடித்து உள்ளே வந்த பாஸ்கர் காதிலும் விழுந்தது. தன் பெயரை எப்பொழுதும் யாரிடமும் ராசி என்றே சொல்பவள், இன்று தன் பிறப்புப் பெயரான ஹரிப்ரியாவை சொன்னது ஏனோ! அவளே அறியாள்!

“என்ன? இப்ப என்ன நேம் சொன்னீங்க?” என்று நம்பமாட்டாமல் திரும்பவும் தீபா கேட்டாள்.

“ஹரிப்ரியா. ஏன் பெயர் நல்லாயில்லையா?” என்று கண்சிமிட்டிக் கேட்டவளை அப்படியே அணைத்து “தேங்க்ஸ்” என்றாள் தீபா.

“பெயரைச் சொன்னதுக்கு எதுக்கு தேங்க்ஸ்? ஏன் எமோஷனல் ஆகுறீங்க?” என்று கேட்டு புரியாமல் விழித்தவளை...

“ஒண்ணுமில்லை ப்ரியா. எங்க அக்கா நேம் ஹரிப்ரியா தான். அவ இப்ப எங்களோட இல்ல.”

“ஏன்? கல்யாணம் முடிச்சி வெளிநாட்ல இருக்காங்களா? உங்க கல்யாணத்துக்கு வர முடியலைன்றதால ஃபீல் பண்றீங்களா?” என்றாள் யதார்த்தமாய்.

“ம்கூம்... எதுவுமில்லை. அவ இப்ப உயிரோட இல்லை. டென் இயர்ஸ் முன்னாடி நடந்த ஒரு இன்சிடன்ட்ல...” முடிக்கும் முன் கண்கலங்கியது.

“அச்சோ! நான் கேட்கல ப்ளீஸ் அழாதீங்க.”

“ப்ச்.. சின்ன நினைவுதான். அந்த போட்டோவுல இருக்கிறா பாருங்க அவள்தான். கண்விழி கூட உங்களை மாதிரிதான் ப்ரௌனா இருக்கும். மச்சம் மட்டும் மிஸ்ஸிங்.”

“ஓ... போட்டோ உள்ள வரும்போது பார்த்தேன்.”

“இவ பண்ணிய கூத்துல தான், இப்ப மாமா கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டேன்றாங்க.”

“எதுக்கு?” என்றவளுக்குள் இவளின் அக்காவிற்கும், சரத்தின் திருமணத்திற்கும் என்ன சம்பந்தமென்று எதுவோ முரண்டியது.

“பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு கட்டாயத்துனால மாமா எங்கக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க” எனும்போது ‘சரத் கல்யாணமானவனா!’ என அதிர்ந்தவள் அதை முகத்தில் காட்டாமல் மறைக்க சட்டென்று குனிய, பின் ‘அதுசரி. முகத்துல வயசு தெரியலன்னாலும், முப்பது வயசிலிருப்பவன் இன்னுமா பண்ணிக்காம இருப்பான். என்ன ராசி நீ!’ என்று மனம் கிண்டலடித்தது.

“ஆனா, ஒன் வீக்ல செத்துட்டா.”

சற்று அதிர்வுடன், “எ..எப்படி?” என்று சற்று திணறலாகவே கேட்க... “லட்சுமி இப்பதான் பர்ஸ்ட் டைம் வந்திருக்கிற பொண்ணுகிட்ட நல்லதைப் பகிர்ந்துக்கலாம். இப்படி எல்லாத்தையும் சொல்லி குழப்பாத” என்ற சாந்தி ராசியிடம் வந்து, “தெய்வாதீனமா என் பொண்ணோட பெயர்ல அவளோட தங்கை கல்யாணத்துக்கு வந்திருக்கமா. கண்டிப்பா கல்யாணம் முடிஞ்சி நாங்க சொல்லும் போதுதான் போகணும்.”

“இல்லம்மா. நான் நாளைக்கே கிளம்பணும்.”

“இப்ப என்ன சொல்லி கூப்பிட்ட? அம்மான்னு தான. நீ சொன்ன வார்த்தை மனசுலயிருந்து வந்திருந்தா நான் சொன்னதை கேட்கிற?” என்றார் அழுத்தமாக.

“கண்டிப்பா நீ இங்க தான்மா இருக்கணும்” என்று அவர்கள் பேசியதைக் கேட்டபடி பாஸ்கரும் வர, தீபா.. “எங்கப்பா” என்றாள் ராசியிடம்.

சில வினாடி யோனைக்குப் பின், சரியென்று சம்மதித்தாள்.

இதை எதையுமறியாமல் தன்னுடன் ஒரு பெண்ணை அதுவும் மனதுக்கு பிடித்த பெண்ணை அழைத்து வந்ததை மறந்து குழப்பத்துடன் தன்னறையில் நடை பயின்றான் சரத். கல்யாணம் என்றாலே ஏனோ அலர்ஜியாகிப் போனது. ஒரு வழியாக தன்னைத் தானே தேற்றி கீழே வர... ராசி தன் குடும்பத்தினரின் நடுவில் அமர்ந்து பேசிச் சிரித்துக் கொண்டிருக்க, தன்னை மறந்து சில நிமிடங்கள் விழியகற்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சரத்.

ராசிக்கு மனதில் ஏதோ தோன்றி சட்டென்று திரும்பி மாடியைப் பார்க்க... அவளையே பார்த்திருந்த சரத்தின் பார்வையுடன் தன் விழிகள் மோத... வினாடி நேரத்தில் தன் பார்வையை மாற்றி புன்னகைத்தபடி கீழே அவர்களுடன் வந்தமர்ந்தான்.

அதுவரை அனைவரிடமும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தவளுக்கு என்ன முயன்றும் இயல்பாக இருக்க முடியவில்லை. அவனின் பார்வை தன்னை ஏதோ செய்வதை உணர்ந்தாள். இதுவரையில் சலனப்படாத மனதில் சரத் எறிந்த கல் சரியான இலக்கை அடைந்திருந்தது. அவ்விடத்தில் ஒன்ற முடியாதிருந்தவளை அவசரமாக அழைத்தது கைபேசி.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top