- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
11
வெள்ளிக்கிழமையானால் அருகிலிருக்கும் அம்மன் கோவில் சென்று வருவது பூரணியின் வழக்கம். உடன் எப்பொழுதும் சண்முகி துணை வருவாள். இதோ இன்றும் காலையிலேயே கோவில் முன் வந்தாகிற்று. சண்முகி கிளம்பி வருகையில் தெரிந்த பெண்மணி பேச பிடித்துக்கொள்ள, பத்து நிமிடம் கழித்து வருவதாகத் தகவல் அனுப்பிவிட்டாள்.
“ப்ச்.. ஊரு முழுக்க ஃப்ரண்ட் பிடிக்காத சொன்னா கேட்கிறாளா? ஐந்து நிமிடம் நடந்து வர்றதுக்குள்ள ஐந்தாறு பேர் வழிமறிச்சிருவாங்க.” மனதிற்குள் புலம்பியபடி உள் செல்லாமல் வாசலருகிலேயே காத்திருக்கலானாள் பரிபூரணி.
“அண்ணி” என்ற குரலில் ‘யாரோ யாரையோ’ என நின்றிருக்க, “அண்ணி உங்களைத்தான்” என்றதில் ஏதோ நினைவில் நிமிர்ந்து பார்த்தவள் ‘நம்மையில்லை’ என்பதாய் குனிந்து போனைப் பார்க்க, “என்ன அண்ணி நீங்க? பக்கத்துல நிற்கிறவனை விட்டுட்டு எதிர்ல பார்த்துட்டு குனிஞ்சிட்டீங்க” என்ற குற்றப்பத்திரிக்கையுடன் அவள் முன் நிற்க, அப்பொழுதுதான் ‘தன்னைத்தானோ’ என்று நிமிர அன்று மெடிக்கலில் வம்பு செய்தவன் நின்றுகொண்டிருந்தான்.
“யா...” என அவள் ஆரம்பிக்கையில், “நோ.. நோ அண்ணி. யார் நீன்னு மட்டும் கேட்டுராதீங்க. நான்தான் தினகரன். உங்க பெரிய மாமனாரோட கடைக்குட்டி” என்று தன்னை அறிமுகப்படுத்தினான்.
“ம்... கோவில்ல மொட்டைத்தலையோட வந்தவரா?” கேட்டதும் ஆமென்று தலையசைக்க, “அப்ப மெடிக்கலுக்கு வந்தது தெரிந்தேதான் இல்லையா? ஏன் அப்படி செய்தீங்க?” என்றாள் குரலில் கடுமையைக் காட்டி.
“அது சாரி. வீட்டைவிட்டு அனுப்பிய கோபத்தில் என்கிட்டப் பேசமாட்டீங்கன்னு அப்படி செய்துட்டேன்” என்றான் தயங்கியபடி.
“அதுக்கு பெண்கள் இருக்கிற இடத்தில் என்ன வேணும்னா பேசலாமா? ஆட்கள் யாராவது இருந்திருந்தா எவ்வளவு அசிங்கம்? பப்ளிக்ல அசிங்கப்படுத்துற மாதிரி செய்யுறது என்ன விதமான பழக்கம்?” கோபம் குறையாது கேட்டாள்.
“சாரி அண்ணி சாரி. அங்க உங்களைப் பார்த்த சந்தோஷத்துல என்கிட்டப் பேச வைக்கணும்னு என்ன பேசணும்னு தெரியாம ஏதேதோ.. சாரி அண்ணி” என்று கெஞ்சலாக மன்னிப்பைக் கேட்டான்.
“ப்ச்.. நான் உங்களுக்கு அண்ணி கிடையாது. இனி அப்படிக் கூப்பிடாதீங்க” என்றாள் அழுத்தமாக.
“அதெப்படி அண்ணி இல்லைன்னு சொல்வீங்க? எங்க வசீக்கு நீங்க மட்டும்தான் மனைவி. அதை எப்பவும் மாற்ற முடியாது.” அவனும் அதே அழுத்தத்துடன் உரைத்தான்.
“தினகரன்! கோவில் முன்னாடி காமெடி பண்ணிட்டிருக்கீங்க. ப்ராக்டிகலா பேசுங்க. என்னை அண்ணின்னு சொன்னதை உங்க வீட்டுல உள்ளவங்ககிட்ட சொல்லிப்பாருங்க. ஆக்ஷன் ரியாக்ஷன்னு பெரிய படமே காட்டுவாங்க” என்றவள் குரலில் நக்கல் வழிந்தது.
“யார் என்ன சொன்னாலும் அண்ணின்ற உறவு மாறாது. அண்ணி அம்மா மாதிரியாம் வேணும்னா சொல்லுங்க அம்மா கூப்பிடுறேன்” என்றான் அதிரடியாக.
“என்னது அம்மாவா?” என அதிர,
“ஆமா. அம்மா சில சமயம் கோபத்துல நீ என் பிள்ளையே கிடையாதுடான்னு சொல்வாங்க. அதுக்காக அவங்க என் அம்மாயில்லைன்னு ஆகிருமா? அம்மாவே அண்ணி! அண்ணியே அம்மா!” என தத்துவம் பேசி,
அண்ணி அண்ணி எந்தன் ஆருயிரே
நீயும் தாயும் இல்லை வேறுயிரே!
அவன் பாடிக்கொண்டே போக, “அச்சோ நிறுத்துங்க” என்றாள் அப்பாடல் கொடுமை தாளாது.
சுவற்றின் உட்புறமிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த வசீகரன் சத்தமாகச் சிரித்துக் கொண்டிருந்தான். அச்சத்தத்தில் அருகிலிருந்தோர் தன்னைக் கேலியாய் பார்த்ததைச் சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை வசீகரன்.
“ஏன் தினகரன் என்னை தர்மசங்கடப்படுத்துறீங்க? முடிந்த உறவை புதுப்பிக்க வேண்டாம்” என்றாள் அமைதியாக.
“முடிந்த உறவுன்னு உதடு மட்டும்தான் சொல்லுது. அந்த உள்ளம் மிஸஸ்.பரிபூரணி வசீகரன்னு சொல்லுதே அண்ணி. என் அண்ணன் உறவை நீங்க விடாதப்ப, நான் எப்படி என்னோட உரிமையான அழைப்பை விடமுடியும்?” என்று உரிமைச் சண்டையிட்டான்.
“இந்த அக்கறை எங்க கல்யாணத்துக்கு முன்ன இருந்திருக்கணும். உங்க அண்ணன் அப்படின்னு தெரிஞ்சும் கல்யாணத்தை எப்படி நடத்த விட்டீங்க?” பதிலுக்கு அவளும் வாதம் செய்ய,
“வசீண்ணாவுக்குக் கல்யாணம்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா சண்டை போட்டாவது நிறுத்தியிருப்பேன் அண்ணி. அவனுக்குப் பொண்ணு பார்க்கிறோம்னு சொன்னப்பவே சட்டப்படி அது தப்புன்னு அவ்வளவு சண்டை போட்டேன். அதனாலதானோ என்னவோ, நான் பத்துநாள் கேம்ப் போன கேப்ல கல்யாணத்தை முடிச்சிட்டாங்க. கோவிலுக்கு வந்தப்பதான் அவங்க செய்த சதி தெரியும். முதல்ல அதிர்ச்சிதான். அடுத்து செய்ய ஒண்ணுமில்லைன்னு விட்டுட்டேன். அப்படி விட்டிருக்கக்கூடாதுன்னு பின்னதான் புரிஞ்சது. அடுத்து நடந்த எதுவும் என் கவனத்துக்கு வரவிடலை. தெரிந்து உங்களைப் பார்க்க முயற்சித்தப்ப நீங்க அங்கேயில்லை” என்றான் வருத்தக்குரலில்.
“ஓ.. இப்ப இங்கேயிருக்கிறதா யார் சொன்னாங்க?”
“யாரும் சொல்லலை அண்ணி. இந்தக் ஊர்ல ஃப்ரண்ட் ஒருத்தனுக்கு பெண் விசாரிக்க வந்தப்பதான் உங்களைப் பார்த்தது. இன்னைக்குக் காலையில இங்கவச்சி முறையா பெண் பார்க்கிறாங்க. கோவில்லன்னு சொன்னதால வசீயையும் கூட்டிட்டுப் போயி சாமி கும்பிடு. அப்படியாவது உன் அண்ணனுக்குப் புத்தி வருதான்னு பார்க்கலாம்னு என்னோட அனுப்பி வச்சிட்டாங்க சித்தி” என எதுவுமறியாதவனாய் நின்றானவன்.
“அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்கீங்களா? எங்கே இருக்காங்க? தனியா விட்டுட்டு இங்க என்ன கதையடிச்சிட்டிருக்கீங்க?” என்று பதறிப்போனாள்.
“எதுக்காக அண்ணி இந்தப் பதற்றம்? இப்பதான் உறவேயில்லைன்னு சொன்னீங்க. பார்த்தா அப்படித் தெரியலையே?” என்றான் கேலியாக.
“நங்குன்னு ஒரு கொட்டு கொட்டினேன்னா மண்டையில் கொண்டை முளைச்சிரும். ஆளைப்பாரு. புத்திசுவாதீனமில்லாத மனுஷனைத் தனியா விட்டுட்டு வந்துட்டீங்கன்னு கேட்டா... எங்க அவங்க?” என்றதும்தான் அண்ணனுக்குக் குணமானது அண்ணிக்குத் தெரியாதென்பதே ஞாபகம் வந்தது.
“உள்ளதான் இருக்கான்” எனும்போது...
“கொடுமையைப் பார்த்தியாமா பார்க்க லட்சணமா நிறைய படிச்சவன் மாதிரியிருக்கான். அந்தப் புள்ளைக்குப் பைத்தியம்னா கடவுளைத்தவிர யாரைக் குறை சொல்றது?”
“ம்மா செல்போன்ல இல்லைனா காதுல ப்ளுடூத் வச்சிகூடப் பேசிட்டிருக்கலாம். அப்படியிருந்தா நமக்குத் தெரியாது.”
“அதெல்லாம் பார்த்துட்டேன். உங்கம்மா கம்ப்யூட்டர் டீச்சர்ன்றதை மறந்திராத” என்ற வார்த்தைகள் காதில் விழ, அடுத்த நொடி உள்ளே விரைந்து அவளின் வசீகரனைத் தேடவாரம்பித்தாள்.
சுற்றிலும் பார்க்க வலதுபுறம் திரும்புகையில் மனம் நிறைந்தப் புன்னகையோடு பூரணியைப் பார்த்தவாறு நின்றிருந்தான் வசீகரன்.
வேகமாகக் கணவனருகில் வந்து கையிலிருந்த அர்ச்சனைப் பொருளை சுத்தமான இடமாகப் பார்த்து வைத்து, இரு கைகளாலும் அவன் முகம் பிடித்து சில நொடிகள் வார்த்தைகள் வராது தடுமாறி, “குட்டிக்கண்ணா!” என்றாள் கண்ணீரை மறைத்த புன்னகையுடன்.
அவளை அணைக்கவோ ‘நானிருக்கிறேன்’ என ஆறுதலளித்துத் தேற்றவோ தோன்றிய எண்ணத்தை வலுக்கட்டாயமாக அடக்கி நின்றிருக்க... “நீங்க நல்லாயிருக்கீங்கதான? எ..என்னை ஞாபகமிருக்கா? மறந்துட்டீங்கதான?” எனும்போது கண்களிலிருந்து வரப்பார்த்தக் கண்ணீரை திரும்பி சுண்டிவிட்டு, “நான் பரி. உங்க பரி வசீகரா!” ‘தன்னை மறந்துவிட்டானே’ என்ற ஆதங்கம் அவள் குரலில் கொட்டிக்கிடந்தது.
அக்குரலிலுள்ள வலியில், அதிலிருந்த காதலில் கண்கரிப்பது போலிருக்க அதை அடக்கி புன்னகை மாறாதிருக்கப் பெரும்பாடுபட்டான் என்றால் அது மிகையில்லை.
“இப்படிதான் யாருமில்லாத மாதிரி தனியா விட்டுட்டு வருவீங்களா கொழுந்தன்? கூட்டிட்டு வந்த நீங்கதான பொறுப்பாகவும் பார்த்துக்கணும். யாரோ ஒருத்தர் என் வசீகரனைப் பைத்...” வார்த்தைகள் திக்க, “இதுதான் நீங்க பார்த்துக்குற லட்சணமா?” விட்டால் அடித்துவிடுவாள் போல கோபமாகக் கேட்டாள்.
“அண்ணி நான் ஓரமா நிற்கச் சொல்லிட்டு வந்தேன்.”
“ஒரு உண்மையைச் சொல்லுங்க? பொண்ணு பார்க்க வந்தது உங்க நண்பனுக்கா? இல்லை உங்க இந்த அண்ணனுக்கா?” வார்த்தையில் கோபம் கொப்பளித்தது.
“நிஜமா நண்பனுக்குதான் அண்ணி. அண்ணனுக்குதான் நீங்க இருக்கீங்களே.”
“உங்க குடும்பத்தை எப்பவும் நம்பமுடியாது. கொஞ்ச நாள் முன்ன அஞ்சுகான்ற பெண்ணைப் பார்க்க இதே கோவிலுக்கு உங்கண்ணனைக் கூட்டிட்டு வந்திருந்தாங்க. அது தெரியுமா மிஸ்டர் கொழுந்தன்?” என்றாள் பல்லைக்கடித்தபடி.
“ஹாய் பூரணி!” திடீரெனக் கேட்ட பெண் குரலில் அனைவரும் யாரென்று பார்க்க, “என்னடா என் பெயர் அடிபடுதே யார்டான்னு பார்த்தேன். ஆமா யார்கிட்டப் பேசிட்டிருக்கீங்க?” என்று பார்த்த அஞ்சுகா, “இவனா? இந்தப் பைத்தியத்துக்கிட்ட ஏன் நிற்குறீங்க பூரணி?” என்றாள் முகம் கோணியபடி.
“பைத்தியம்னு சொல்லாதீங்க.” பூரணி, தினகரன் இருவரும் சேர்ந்தாற்போல் அதட்டலிட்டார்கள்.
“என்ன நடக்குது பூரணி? நீங்கதான் உங்க அக்கா வாழ்க்கையைக் கெடுத்தவன்னு என்கிட்டச் சொல்லி கல்யாணத்தை நிறுத்தினது ஞாபகமிருக்கா?”
“நல்லாவே இருக்கு. எது எப்படியோ பைத்தியம்னு மட்டும் சொல்லாதீங்க.”
“பூரணி ஆர் யூ ஆல் ரைட்?” கேள்வியாய் அவளைப் பார்க்க..
“நான் எப்பவும் ரைட்டாதான் இருக்கேன்” என்றாள் பட்டென்று.
அதிவேகப் பதிலில் வசீகரனுக்கு சிரிப்பு வர அதை மறைத்தவாறு அவர்களைப் பார்த்திருந்தான்.
“பார்த்தா தெரியலையே பூரணி. சொந்த பெரியப்பா பொண்ணை கல்யாணம்ன்ற பெயர்ல குடும்பமே ஏமாத்தியிருக்காங்க. அந்தப் பொண்ணோட வாழ்க்கையே கேள்விக்குறியா இருக்கிறப்ப, அதுக்குக் காரணமான இந்த லூஸைப் பைத்தியம்னு சொன்னா உனக்கேன் கோபம் வருது? இவங்களுக்கு நீ யாரு?” மரியாதையைக் கைவிட்டு கோபமாகவே கேட்டாள் அஞ்சுகா.
“நான் யாரா வேணும்னா இருந்துட்டுப் போறேன். நீங்க அப்படிச் சொல்லாதீங்க. உங்களுக்குத் தப்பா எதுவும் நடக்கக்கூடாதுன்னுதான் உண்மையைச் சொன்னேனே தவிர, நீங்க இப்படிப் பேசுறதுக்காகக் கிடையாது.” ஒருவித பிடிவாதம் அவள் குரலில்.
“ஓ.. பார்றா! ஒரு கன்னத்துல அடிச்சா மறு கன்னத்தைக் காட்டுற இயேசுபிரான் பரம்பரை. ஆனால், நான் அப்படிக் கிடையாதுமா. எவ்வளவு தைரியமிருந்தா ஒரு பைத்தியத்தை என் தலையில் கட்டப்பார்த்திருப்பாங்க? இப்ப நினைச்சாலும் அவ்வளவு ஆத்திரம் வருது. எல்லாம் இந்தப் பைத்தியத்துக்காகத்தானே!” என்று ஆத்திரத்தில் வார்த்தைகளை விட...
“அஞ்சுகா!” என்று கோபத்தில் அடிக்கக் கை ஓங்கியவள் பாதியிலேயே நிறுத்தி, “உங்களுக்கும் அவங்களுக்குமானது முடிந்துபோன ஒண்ணு. அதுக்காக பொதுயிடத்தில் இதெல்லாம் தப்பு” என்றாள் அழுத்தமாக.
“என்னை விடு பாதிக்கப்பட்டது உன் குடும்பம்தான். அப்படியிருந்தும் இவனை ஒண்ணு சொன்னா கோபம் வருதா?”
“ஆமா வரும்” என்றாள் அவளும் அடமாக.
“லூசு நீ” என்று அவளையும் அடப்பைத்தியமே என்றிருந்தாள்.
வாக்குவாதம் அதிகமாகிக் கொண்டே செல்வதில் பூரணி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருக்க, “ஆமா லூசுதான்” என்றாளவள்.
“பரி! உன் அக்கா பூரணி” என்று அஞ்சுகா இன்னுமே உணர்ச்சிவசப்பட வைக்க...
“பரி என் அக்கா கிடையாது” என்றவள் கண்களில் ஒரு சீற்றம்.
“ஒரு பைத்தியத்துக்காக பரியை உன் அக்காவே கிடையாது சொல்வியா? உனக்கும் இவனுக்கும்...”
“ஏய்!” என குரல் உயர்த்தி சத்தமிட, இவர்களைத் தவிர சுற்றியுள்ள ஒன்றிரெண்டு நபர்களில் அப்படியே நிற்க, “இன்னொரு வார்த்தை பேசின..” என விரல் நீட்டி, “நான் மிஸஸ்.பரிபூரணி வசீகரன். பரியும் நான்தான். பூரணியும் நான்தான். இவங்க என்னோட வசீகரன். புரியுதா? நாங்க ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப். நீங்க வாங்க வசீகரா” என்று கணவனின் கைபிடித்தவள் தினகரனை நோக்கி, “நாங்க தெப்பக்குளம் படிக்கட்டுல உட்கார்ந்திருக்கோம். பத்து நிமிஷம் கழித்து உங்கண்ணனைக் கூப்பிட வாங்க” என்று அஞ்சுகாவை முறைத்துவிட்டுச் சென்றாள்.
“ப்பா.. என்ன லவ்வுடா சாமி” என்று தினகரனும், அஞ்சுகாவும் சேர்ந்தாற்போல் சொல்லி, அதை உணர்ந்ததும் சிரிக்க, “நல்லவேளை கொரோனா புண்ணியத்துல கோவில்ல ஆளுங்க கம்மியாயிருக்காங்க. நாம தப்பிச்சோம்” என்றான் தினகரன்.
“எது கொரோனாகிட்ட இருந்தா?” கேலியை மறைத்துப் புன்னகையுடன் கேட்டாள்.