• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
11



வெள்ளிக்கிழமையானால் அருகிலிருக்கும் அம்மன் கோவில் சென்று வருவது பூரணியின் வழக்கம். உடன் எப்பொழுதும் சண்முகி துணை வருவாள். இதோ இன்றும் காலையிலேயே கோவில் முன் வந்தாகிற்று. சண்முகி கிளம்பி வருகையில் தெரிந்த பெண்மணி பேச பிடித்துக்கொள்ள, பத்து நிமிடம் கழித்து வருவதாகத் தகவல் அனுப்பிவிட்டாள்.

“ப்ச்.. ஊரு முழுக்க ஃப்ரண்ட் பிடிக்காத சொன்னா கேட்கிறாளா? ஐந்து நிமிடம் நடந்து வர்றதுக்குள்ள ஐந்தாறு பேர் வழிமறிச்சிருவாங்க.” மனதிற்குள் புலம்பியபடி உள் செல்லாமல் வாசலருகிலேயே காத்திருக்கலானாள் பரிபூரணி.

“அண்ணி” என்ற குரலில் ‘யாரோ யாரையோ’ என நின்றிருக்க, “அண்ணி உங்களைத்தான்” என்றதில் ஏதோ நினைவில் நிமிர்ந்து பார்த்தவள் ‘நம்மையில்லை’ என்பதாய் குனிந்து போனைப் பார்க்க, “என்ன அண்ணி நீங்க? பக்கத்துல நிற்கிறவனை விட்டுட்டு எதிர்ல பார்த்துட்டு குனிஞ்சிட்டீங்க” என்ற குற்றப்பத்திரிக்கையுடன் அவள் முன் நிற்க, அப்பொழுதுதான் ‘தன்னைத்தானோ’ என்று நிமிர அன்று மெடிக்கலில் வம்பு செய்தவன் நின்றுகொண்டிருந்தான்.

“யா...” என அவள் ஆரம்பிக்கையில், “நோ.. நோ அண்ணி. யார் நீன்னு மட்டும் கேட்டுராதீங்க. நான்தான் தினகரன். உங்க பெரிய மாமனாரோட கடைக்குட்டி” என்று தன்னை அறிமுகப்படுத்தினான்.

“ம்... கோவில்ல மொட்டைத்தலையோட வந்தவரா?” கேட்டதும் ஆமென்று தலையசைக்க, “அப்ப மெடிக்கலுக்கு வந்தது தெரிந்தேதான் இல்லையா? ஏன் அப்படி செய்தீங்க?” என்றாள் குரலில் கடுமையைக் காட்டி.

“அது சாரி. வீட்டைவிட்டு அனுப்பிய கோபத்தில் என்கிட்டப் பேசமாட்டீங்கன்னு அப்படி செய்துட்டேன்” என்றான் தயங்கியபடி.

“அதுக்கு பெண்கள் இருக்கிற இடத்தில் என்ன வேணும்னா பேசலாமா? ஆட்கள் யாராவது இருந்திருந்தா எவ்வளவு அசிங்கம்? பப்ளிக்ல அசிங்கப்படுத்துற மாதிரி செய்யுறது என்ன விதமான பழக்கம்?” கோபம் குறையாது கேட்டாள்.

“சாரி அண்ணி சாரி. அங்க உங்களைப் பார்த்த சந்தோஷத்துல என்கிட்டப் பேச வைக்கணும்னு என்ன பேசணும்னு தெரியாம ஏதேதோ.. சாரி அண்ணி” என்று கெஞ்சலாக மன்னிப்பைக் கேட்டான்.

“ப்ச்.. நான் உங்களுக்கு அண்ணி கிடையாது. இனி அப்படிக் கூப்பிடாதீங்க” என்றாள் அழுத்தமாக.

“அதெப்படி அண்ணி இல்லைன்னு சொல்வீங்க? எங்க வசீக்கு நீங்க மட்டும்தான் மனைவி. அதை எப்பவும் மாற்ற முடியாது.” அவனும் அதே அழுத்தத்துடன் உரைத்தான்.

“தினகரன்! கோவில் முன்னாடி காமெடி பண்ணிட்டிருக்கீங்க. ப்ராக்டிகலா பேசுங்க. என்னை அண்ணின்னு சொன்னதை உங்க வீட்டுல உள்ளவங்ககிட்ட சொல்லிப்பாருங்க. ஆக்ஷன் ரியாக்ஷன்னு பெரிய படமே காட்டுவாங்க” என்றவள் குரலில் நக்கல் வழிந்தது.

“யார் என்ன சொன்னாலும் அண்ணின்ற உறவு மாறாது. அண்ணி அம்மா மாதிரியாம் வேணும்னா சொல்லுங்க அம்மா கூப்பிடுறேன்” என்றான் அதிரடியாக.

“என்னது அம்மாவா?” என அதிர,

“ஆமா. அம்மா சில சமயம் கோபத்துல நீ என் பிள்ளையே கிடையாதுடான்னு சொல்வாங்க. அதுக்காக அவங்க என் அம்மாயில்லைன்னு ஆகிருமா? அம்மாவே அண்ணி! அண்ணியே அம்மா!” என தத்துவம் பேசி,

அண்ணி அண்ணி எந்தன் ஆருயிரே

நீயும் தாயும் இல்லை வேறுயிரே!

அவன் பாடிக்கொண்டே போக, “அச்சோ நிறுத்துங்க” என்றாள் அப்பாடல் கொடுமை தாளாது.

சுவற்றின் உட்புறமிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த வசீகரன் சத்தமாகச் சிரித்துக் கொண்டிருந்தான். அச்சத்தத்தில் அருகிலிருந்தோர் தன்னைக் கேலியாய் பார்த்ததைச் சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை வசீகரன்.

“ஏன் தினகரன் என்னை தர்மசங்கடப்படுத்துறீங்க? முடிந்த உறவை புதுப்பிக்க வேண்டாம்” என்றாள் அமைதியாக.

“முடிந்த உறவுன்னு உதடு மட்டும்தான் சொல்லுது. அந்த உள்ளம் மிஸஸ்.பரிபூரணி வசீகரன்னு சொல்லுதே அண்ணி. என் அண்ணன் உறவை நீங்க விடாதப்ப, நான் எப்படி என்னோட உரிமையான அழைப்பை விடமுடியும்?” என்று உரிமைச் சண்டையிட்டான்.

“இந்த அக்கறை எங்க கல்யாணத்துக்கு முன்ன இருந்திருக்கணும். உங்க அண்ணன் அப்படின்னு தெரிஞ்சும் கல்யாணத்தை எப்படி நடத்த விட்டீங்க?” பதிலுக்கு அவளும் வாதம் செய்ய,

“வசீண்ணாவுக்குக் கல்யாணம்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா சண்டை போட்டாவது நிறுத்தியிருப்பேன் அண்ணி. அவனுக்குப் பொண்ணு பார்க்கிறோம்னு சொன்னப்பவே சட்டப்படி அது தப்புன்னு அவ்வளவு சண்டை போட்டேன். அதனாலதானோ என்னவோ, நான் பத்துநாள் கேம்ப் போன கேப்ல கல்யாணத்தை முடிச்சிட்டாங்க. கோவிலுக்கு வந்தப்பதான் அவங்க செய்த சதி தெரியும். முதல்ல அதிர்ச்சிதான். அடுத்து செய்ய ஒண்ணுமில்லைன்னு விட்டுட்டேன். அப்படி விட்டிருக்கக்கூடாதுன்னு பின்னதான் புரிஞ்சது. அடுத்து நடந்த எதுவும் என் கவனத்துக்கு வரவிடலை. தெரிந்து உங்களைப் பார்க்க முயற்சித்தப்ப நீங்க அங்கேயில்லை” என்றான் வருத்தக்குரலில்.

“ஓ.. இப்ப இங்கேயிருக்கிறதா யார் சொன்னாங்க?”

“யாரும் சொல்லலை அண்ணி. இந்தக் ஊர்ல ஃப்ரண்ட் ஒருத்தனுக்கு பெண் விசாரிக்க வந்தப்பதான் உங்களைப் பார்த்தது. இன்னைக்குக் காலையில இங்கவச்சி முறையா பெண் பார்க்கிறாங்க. கோவில்லன்னு சொன்னதால வசீயையும் கூட்டிட்டுப் போயி சாமி கும்பிடு. அப்படியாவது உன் அண்ணனுக்குப் புத்தி வருதான்னு பார்க்கலாம்னு என்னோட அனுப்பி வச்சிட்டாங்க சித்தி” என எதுவுமறியாதவனாய் நின்றானவன்.

“அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்கீங்களா? எங்கே இருக்காங்க? தனியா விட்டுட்டு இங்க என்ன கதையடிச்சிட்டிருக்கீங்க?” என்று பதறிப்போனாள்.

“எதுக்காக அண்ணி இந்தப் பதற்றம்? இப்பதான் உறவேயில்லைன்னு சொன்னீங்க. பார்த்தா அப்படித் தெரியலையே?” என்றான் கேலியாக.

“நங்குன்னு ஒரு கொட்டு கொட்டினேன்னா மண்டையில் கொண்டை முளைச்சிரும். ஆளைப்பாரு. புத்திசுவாதீனமில்லாத மனுஷனைத் தனியா விட்டுட்டு வந்துட்டீங்கன்னு கேட்டா... எங்க அவங்க?” என்றதும்தான் அண்ணனுக்குக் குணமானது அண்ணிக்குத் தெரியாதென்பதே ஞாபகம் வந்தது.

“உள்ளதான் இருக்கான்” எனும்போது...

“கொடுமையைப் பார்த்தியாமா பார்க்க லட்சணமா நிறைய படிச்சவன் மாதிரியிருக்கான். அந்தப் புள்ளைக்குப் பைத்தியம்னா கடவுளைத்தவிர யாரைக் குறை சொல்றது?”

“ம்மா செல்போன்ல இல்லைனா காதுல ப்ளுடூத் வச்சிகூடப் பேசிட்டிருக்கலாம். அப்படியிருந்தா நமக்குத் தெரியாது.”

“அதெல்லாம் பார்த்துட்டேன். உங்கம்மா கம்ப்யூட்டர் டீச்சர்ன்றதை மறந்திராத” என்ற வார்த்தைகள் காதில் விழ, அடுத்த நொடி உள்ளே விரைந்து அவளின் வசீகரனைத் தேடவாரம்பித்தாள்.

சுற்றிலும் பார்க்க வலதுபுறம் திரும்புகையில் மனம் நிறைந்தப் புன்னகையோடு பூரணியைப் பார்த்தவாறு நின்றிருந்தான் வசீகரன்.

வேகமாகக் கணவனருகில் வந்து கையிலிருந்த அர்ச்சனைப் பொருளை சுத்தமான இடமாகப் பார்த்து வைத்து, இரு கைகளாலும் அவன் முகம் பிடித்து சில நொடிகள் வார்த்தைகள் வராது தடுமாறி, “குட்டிக்கண்ணா!” என்றாள் கண்ணீரை மறைத்த புன்னகையுடன்.

அவளை அணைக்கவோ ‘நானிருக்கிறேன்’ என ஆறுதலளித்துத் தேற்றவோ தோன்றிய எண்ணத்தை வலுக்கட்டாயமாக அடக்கி நின்றிருக்க... “நீங்க நல்லாயிருக்கீங்கதான? எ..என்னை ஞாபகமிருக்கா? மறந்துட்டீங்கதான?” எனும்போது கண்களிலிருந்து வரப்பார்த்தக் கண்ணீரை திரும்பி சுண்டிவிட்டு, “நான் பரி. உங்க பரி வசீகரா!” ‘தன்னை மறந்துவிட்டானே’ என்ற ஆதங்கம் அவள் குரலில் கொட்டிக்கிடந்தது.

அக்குரலிலுள்ள வலியில், அதிலிருந்த காதலில் கண்கரிப்பது போலிருக்க அதை அடக்கி புன்னகை மாறாதிருக்கப் பெரும்பாடுபட்டான் என்றால் அது மிகையில்லை.

“இப்படிதான் யாருமில்லாத மாதிரி தனியா விட்டுட்டு வருவீங்களா கொழுந்தன்? கூட்டிட்டு வந்த நீங்கதான பொறுப்பாகவும் பார்த்துக்கணும். யாரோ ஒருத்தர் என் வசீகரனைப் பைத்...” வார்த்தைகள் திக்க, “இதுதான் நீங்க பார்த்துக்குற லட்சணமா?” விட்டால் அடித்துவிடுவாள் போல கோபமாகக் கேட்டாள்.

“அண்ணி நான் ஓரமா நிற்கச் சொல்லிட்டு வந்தேன்.”

“ஒரு உண்மையைச் சொல்லுங்க? பொண்ணு பார்க்க வந்தது உங்க நண்பனுக்கா? இல்லை உங்க இந்த அண்ணனுக்கா?” வார்த்தையில் கோபம் கொப்பளித்தது.

“நிஜமா நண்பனுக்குதான் அண்ணி. அண்ணனுக்குதான் நீங்க இருக்கீங்களே.”

“உங்க குடும்பத்தை எப்பவும் நம்பமுடியாது. கொஞ்ச நாள் முன்ன அஞ்சுகான்ற பெண்ணைப் பார்க்க இதே கோவிலுக்கு உங்கண்ணனைக் கூட்டிட்டு வந்திருந்தாங்க. அது தெரியுமா மிஸ்டர் கொழுந்தன்?” என்றாள் பல்லைக்கடித்தபடி.

“ஹாய் பூரணி!” திடீரெனக் கேட்ட பெண் குரலில் அனைவரும் யாரென்று பார்க்க, “என்னடா என் பெயர் அடிபடுதே யார்டான்னு பார்த்தேன். ஆமா யார்கிட்டப் பேசிட்டிருக்கீங்க?” என்று பார்த்த அஞ்சுகா, “இவனா? இந்தப் பைத்தியத்துக்கிட்ட ஏன் நிற்குறீங்க பூரணி?” என்றாள் முகம் கோணியபடி.

“பைத்தியம்னு சொல்லாதீங்க.” பூரணி, தினகரன் இருவரும் சேர்ந்தாற்போல் அதட்டலிட்டார்கள்.

“என்ன நடக்குது பூரணி? நீங்கதான் உங்க அக்கா வாழ்க்கையைக் கெடுத்தவன்னு என்கிட்டச் சொல்லி கல்யாணத்தை நிறுத்தினது ஞாபகமிருக்கா?”

“நல்லாவே இருக்கு. எது எப்படியோ பைத்தியம்னு மட்டும் சொல்லாதீங்க.”

“பூரணி ஆர் யூ ஆல் ரைட்?” கேள்வியாய் அவளைப் பார்க்க..

“நான் எப்பவும் ரைட்டாதான் இருக்கேன்” என்றாள் பட்டென்று.

அதிவேகப் பதிலில் வசீகரனுக்கு சிரிப்பு வர அதை மறைத்தவாறு அவர்களைப் பார்த்திருந்தான்.

“பார்த்தா தெரியலையே பூரணி. சொந்த பெரியப்பா பொண்ணை கல்யாணம்ன்ற பெயர்ல குடும்பமே ஏமாத்தியிருக்காங்க. அந்தப் பொண்ணோட வாழ்க்கையே கேள்விக்குறியா இருக்கிறப்ப, அதுக்குக் காரணமான இந்த லூஸைப் பைத்தியம்னு சொன்னா உனக்கேன் கோபம் வருது? இவங்களுக்கு நீ யாரு?” மரியாதையைக் கைவிட்டு கோபமாகவே கேட்டாள் அஞ்சுகா.

“நான் யாரா வேணும்னா இருந்துட்டுப் போறேன். நீங்க அப்படிச் சொல்லாதீங்க. உங்களுக்குத் தப்பா எதுவும் நடக்கக்கூடாதுன்னுதான் உண்மையைச் சொன்னேனே தவிர, நீங்க இப்படிப் பேசுறதுக்காகக் கிடையாது.” ஒருவித பிடிவாதம் அவள் குரலில்.

“ஓ.. பார்றா! ஒரு கன்னத்துல அடிச்சா மறு கன்னத்தைக் காட்டுற இயேசுபிரான் பரம்பரை. ஆனால், நான் அப்படிக் கிடையாதுமா. எவ்வளவு தைரியமிருந்தா ஒரு பைத்தியத்தை என் தலையில் கட்டப்பார்த்திருப்பாங்க? இப்ப நினைச்சாலும் அவ்வளவு ஆத்திரம் வருது. எல்லாம் இந்தப் பைத்தியத்துக்காகத்தானே!” என்று ஆத்திரத்தில் வார்த்தைகளை விட...

“அஞ்சுகா!” என்று கோபத்தில் அடிக்கக் கை ஓங்கியவள் பாதியிலேயே நிறுத்தி, “உங்களுக்கும் அவங்களுக்குமானது முடிந்துபோன ஒண்ணு. அதுக்காக பொதுயிடத்தில் இதெல்லாம் தப்பு” என்றாள் அழுத்தமாக.

“என்னை விடு பாதிக்கப்பட்டது உன் குடும்பம்தான். அப்படியிருந்தும் இவனை ஒண்ணு சொன்னா கோபம் வருதா?”

“ஆமா வரும்” என்றாள் அவளும் அடமாக.

“லூசு நீ” என்று அவளையும் அடப்பைத்தியமே என்றிருந்தாள்.

வாக்குவாதம் அதிகமாகிக் கொண்டே செல்வதில் பூரணி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருக்க, “ஆமா லூசுதான்” என்றாளவள்.

“பரி! உன் அக்கா பூரணி” என்று அஞ்சுகா இன்னுமே உணர்ச்சிவசப்பட வைக்க...

“பரி என் அக்கா கிடையாது” என்றவள் கண்களில் ஒரு சீற்றம்.

“ஒரு பைத்தியத்துக்காக பரியை உன் அக்காவே கிடையாது சொல்வியா? உனக்கும் இவனுக்கும்...”

“ஏய்!” என குரல் உயர்த்தி சத்தமிட, இவர்களைத் தவிர சுற்றியுள்ள ஒன்றிரெண்டு நபர்களில் அப்படியே நிற்க, “இன்னொரு வார்த்தை பேசின..” என விரல் நீட்டி, “நான் மிஸஸ்.பரிபூரணி வசீகரன். பரியும் நான்தான். பூரணியும் நான்தான். இவங்க என்னோட வசீகரன். புரியுதா? நாங்க ஹஸ்பண்ட் அன்ட் ஒய்ஃப். நீங்க வாங்க வசீகரா” என்று கணவனின் கைபிடித்தவள் தினகரனை நோக்கி, “நாங்க தெப்பக்குளம் படிக்கட்டுல உட்கார்ந்திருக்கோம். பத்து நிமிஷம் கழித்து உங்கண்ணனைக் கூப்பிட வாங்க” என்று அஞ்சுகாவை முறைத்துவிட்டுச் சென்றாள்.

“ப்பா.. என்ன லவ்வுடா சாமி” என்று தினகரனும், அஞ்சுகாவும் சேர்ந்தாற்போல் சொல்லி, அதை உணர்ந்ததும் சிரிக்க, “நல்லவேளை கொரோனா புண்ணியத்துல கோவில்ல ஆளுங்க கம்மியாயிருக்காங்க. நாம தப்பிச்சோம்” என்றான் தினகரன்.

“எது கொரோனாகிட்ட இருந்தா?” கேலியை மறைத்துப் புன்னகையுடன் கேட்டாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“இந்த நக்கல்தான வேண்டாம்ன்றது.”

“சும்மா ஒரு கேலிக்குதான். ஒருவழியா உங்க அண்ணன் அண்ணி சேர ஆஞ்சநேயரா மாறிட்டீங்க டாக்டரே. குட் ஜாப்” என்று கைதட்ட,

“அட நீங்க வேறங்க. அண்ணி கையை ஓங்கினதும் ஒரு செகண்ட், ஐயோ இந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வந்து அவமானப்படுத்துற மாதிரி ஆகிருச்சேன்னு திகைச்சிப் போயிட்டேன்” என்றான் தினகரன்.

“நானும் அந்நேரம் உங்களைப் பார்க்கதான் செய்தேன். இரண்டு பேர் முகத்திலும் ஈயாடலை. எங்க வசீகரன் உணர்ச்சிவசப்பட்டு உளறிருவாரோன்னு பயந்துட்டேன். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கலை” என்றவள், “ஒரு உண்மையைச் சொல்லட்டுமா டாக்டர் சார்? உங்களை மாதிரி தம்பி கிடைக்க அவர் கொடுத்து வச்சிருக்கணும். நீங்க சான்ஸேயில்லை. நீங்...”

“ஹலோ ஹலோ போதும். என்னைப்பற்றிய எதாவது இமேஜின் பண்ணிக்காதீங்க” என்றான் வேகமாக. ஏனெனில் அப்பொழுதுதான் சண்முகி கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

“புரியலை? என்ன இமேஜின் பண்ணப்போறேன்?” அஞ்சுகாவிற்கு அவனின் வேகம் பதற்றம் எதனாலென்று புரியாது கேட்டிட,

“இல்லங்க இந்தக் காதல், லவ், ப்யார், ப்ரேமம்” என்கையில் அஞ்சுகா அவனை முறைக்க, அதை உணராது, “எனக்கு இதோ இவங்க இருக்காங்க. பெயர் சண்முகி” என்றான் தன்னைத் தாண்டிச் சென்ற சண்முகியைப் பார்த்து.

தோழியைக் கண்களால் தேடியபடி வந்தவளுக்கு தன் பெயர் அடிபடவும் திரும்பி யாரென்று பார்த்தவள் யோசித்துப் பின் அடையாளம் கண்டு, “ஏய்! நீ மெடிக்கல் வந்து பூரணிகிட்ட வம்பு பண்ணினவன்ல? என் பெயர் உனக்கெப்படிடா தெரியும்?” என்றவள் குரலில் அடித்துவிடுவேன் என்ற பாவனை.

“என்னங்க நீங்க? நீங்கதான் சாரோட காதல், லவ், ப்யார், ப்ரேமம்னு சொல்லிட்டிருக்கார். நீங்க என்னடான்னா...” இழுத்து நிறுத்தித் தினகரனைப் பார்த்து, ‘எப்படி?’ என்றாள் புருவம் உயர்த்த,

‘நல்லா செய்யுறம்மா’ என்று அவளை முறைத்து சண்முகியைப் பாவமாய்ப் பார்த்தான்.

“என்னது காதலா? இவன் சொன்னா நீங்க நம்பிருவீங்களா? லூசா இவன். டேய்! முதல்ல என் பெயர் உனக்கெப்படித் தெரியும்னு சொல்லு?” குரலுயர்த்திச் சண்டைக்குப் போவதுபோல் கேட்டாள்.

மருத்துவனான தன்னை டா போட்டு மரியாதையில்லாமல் பேசுவது சற்று கோபத்தை உண்டாக்கியதென்னவோ உண்மைதான். இருந்தாலும் முதல்முறை பார்க்கும் பெண்ணிடம் அப்படி நடந்துகொண்டதும் தவறுதானே என்று அமைதிகாத்தான்.

‘சே.. இவள்தான் நம் வருங்காலம்னு தெரிஞ்சிருந்தா வேற கன்டெண்ட் எடுத்திருந்திருக்கலாம்’ என்றெண்ண, பதிலுக்காக சண்முகி இன்னும் முறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன், “எங்க அண்ணி சொன்னாங்க” என்றான்.

“அண்ணியா? எவ அவ? நீயே இப்படின்னா, அவள்...” மேலே சொல்லுமுன், “அண்ணியைப் பற்றித் தப்பாப் பேசாதீங்க. அப்புறம் நீங்கதான் வருத்தப்படுவீங்க” என்றான்.

“இவளா உன் அண்ணி. இவளுக்கெப்படி என் பெயர் தெரியும்? என்ன சீட்டிங் பண்றீங்களா?” என்று அஞ்சுகாவிடம் பாய...

“ஏய்ய்ய்! அவங்கயில்லை. மிஸஸ்.பரிபூரணி வசீகரன்! என்னோட அண்ணி.” எங்கே கோபத்தில் அஞ்சுகாவை அடித்து விடுவாளோ என்று பயந்து வேகமாய் சொன்னான்.

‘எவ அவ’ என கேட்க வந்தவள் மூளையில் மின்னலடிக்க, “பூரணியா?” என்றாள்.

“ஆமா. உங்க பெஸ்ட் ஃப்ரண்ட் பூரணிதான் என் அண்ணி.”

“அவருக்குத் தம்பி கிடையாதே” என யோசித்தவள், “ஓ.. பெரியப்பா குடும்பத்துப் பையனா? அப்ப சரி. நீங்க இப்படியிருக்கிறதில் தப்பேயில்லை” என்றாள் முகம் சுளித்தபடி.

“அண்ணி சொல்லிட்டாங்களா?” என்றான் கன்றிய குரலுடன்.

“சொன்னா சொன்னா” என அலட்சியமாகச் சொல்லி, “அது சரி. அதென்ன காதல் கீதல்னு சீன் கிரியேட் பண்ற? ஒருத்தி உன் குடும்பத்துல சிக்கினது பத்தாதா? அடுத்த பலி நானா?” என்றாள் கோபமாக.

“சண்முகி அவங்க செய்ததுக்கு நான் பொறுப்பில்லை. நான் தப்பானவன் கிடையாது. நீ என்னை நம்பி வா” என்று தயக்கத்தை உதறி தன் எண்ணத்தை சொல்லிவிட்டான்.

“உன்னை நம்பியா? யோவ்! போயா எதாவது சொல்லிரப்போறேன். உன் குடும்பத்துல மட்டும் நான் இருந்திருந்தேன்.. என் பூரணியை டார்ச்சர் பண்ணினதுக்கு, அத்தனை பேரையும் உண்டு இல்லைன்னு பண்ணியிருப்பேன்.”

“அதைச் செய்யதான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேன். உரிமையா வா. வந்து என்ன தோணுதோ செய். உன்னைத் தடுக்கவே மாட்டேன்” என்றான்.

“எங்க தடுத்துதான் பாரேன்” என்றதும் தினகரன் அஞ்சுகா சிரிக்க, அப்பொழுதுதான் என்ன பேசுகிறோம் என்பதையே உணர்ந்தாள். தன்னை அவர்கள் பேச வைப்பது புரிய கோபத்தில், “ஏய்! என்னை ஏமாத்துறியா?” என்று சீற...

“ஏமாத்தல சண்முகி. உன்னை நம்பவைக்க முயற்சிக்கிறேன்” என்றானவன்.

“இரண்டுக்கும் வித்தியாசமில்லை. ப்ச்.. போடா” என்று விலகி நடக்கப்போனவள் கைபிடித்து, “அண்ணி அவங்க தோழியில்லாமல் எங்க வீட்டுக்கு வரமாட்டேன் சொல்லிட்டாங்க” என்றான் மென்குரலில்.

“நானே வரமாட்டேன்றப்ப அவளை எப்படி அனுப்புவேன்? அதுவும் அந்த வீட்டுக்குச் சான்ஸேயில்லை.”

“நான் பார்த்துக்குறேன்மா” என்றான் கனிவாய்.

“மிஸ்டர் உங்களுக்கு நடந்த எல்லாமே தெரிய வாய்ப்பில்லை. அப்படித் தெரிஞ்சிருந்தா அந்த நரகத்துக்குக் கூப்பிடமாட்டீங்க” என்றவள் கண்களில் அப்படியொரு வெறி.

சண்முகி இந்தளவு கோபங்கொள்ள தங்கள் வீட்டில் என்ன நடந்ததென்று அரியத்துடித்தது மனம். தற்பொழுது அவளின் கோபம் குறைக்கும் பொருட்டு, “ஹேய்! ரிலாக்ஸ் சண்முகி. வசீண்ணாவுக்குத் தெரிஞ்சிருந்து அவன் பார்த்துக்கிட்டா போதும்ல.” புன்னகையுடன் சொன்னான்.

“அவரால் எப்படிப் பார்த்துக்க முடியும்? அவருக்குதான்...” மூளையில் திரும்பவும் மின்னலடிக்க, “நிஜமாவா?” என்றாள் மிகுந்த எதிர்பார்ப்புடன்.

“என்மேல் சத்தியமா நிஜம்தான். இந்தக் கோவில்ல வச்சிச் சொல்றேன். என்னை சாரி எங்களை நம்பலாம்” என்று தனக்குத் தெரிந்தவரை சொன்னான்.

“கடவுள் இருக்கார்ல” என்ற சண்முகியின் கண்களில் கண்ணீர் கட்டியது.

“கண்டிப்பா இருக்கார். அண்ணியை இனி வசீண்ணா பார்த்துப்பான். இனியாவது உங்க வாழ்க்கையைப் பார்க்கலாம்ல” என்றதும் திடுக்கிட்டுப் பார்க்க, “எனக்கு எல்லாம் தெரியும். உங்க அப்பாகிட்ட வசீண்ணா பேசி தெரிஞ்சிக்கிட்டான்.”

‘ஓ...’ என்றவள், “அதுக்காக என்கிட்ட அட்வான்டேஜ் எடுக்கிறதெல்லாம் வேண்டாம். எனக்கேத்த எள்ளுருண்டையோ, இலந்தைப்பழமோ கிடைக்கும். உங்களை மாதிரி ஊத்தப்பம் வேண்டாம்” என அவனைப் புறக்கணித்து, “சரி பூரணி எங்க?” என்றவள் அவன் அதிர்வை கண்டுகொள்ளாது பதிலுக்காகக் காத்திருக்க,

‘ஊத்தப்பமா? தான் அப்படியில்லையே’ என்ற எண்ணங்களில் அவன் சுழல...

“மிஸ்டர்.ஊத்தப்பம் சாரி மிஸ்டர்.தினகரன் இப்ப ஷாக்ல இருக்காப்ல. உங்க ஃப்ரண்ட் வசீகரனை தெப்பக்குளம் கூட்டிட்டுப் போயிருக்காங்க. கொஞ்ச நேரங்கழித்து போங்க.” தினகரனின் நிலையை எண்ணி வந்த சிரிப்பையடக்கி சண்முகிக்குப் பதிலளித்தாள் அஞ்சுகா.

“ம்.. நான் பார்த்துக்குறேன்” என்றவள் தினகரனின் முகம் பார்த்து, ‘இப்போதைக்கு இந்த ஊத்தப்பம் ஊதிப்போன அப்பமா அடுப்புலதான் இருக்கும். கருகுறதுக்குள்ள நம்ம வேலையைப் பார்ப்போம்’ என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

சண்முகி சென்றதும் அதுவரை அதிர்ச்சி என்ற பெயரில் அடக்கியிருந்த மூச்சை இழுத்துவிட்டான் தினகரன்.

“அடி ரொம்ப பலம்போல டாக்டர்?” முகம் முழுக்கப் புன்னகையுடன் கேலியாகவே கேட்டாள் அஞ்சுகா.

“ரொம்பவேங்க” என்றான் அப்பாவியாக.

“சண்முகி உங்க வீடு வந்தா தினமும் இதுபோல சிலபல சுவாரசியமான சம்பவங்களைப் பார்க்கலாம். என்னாலதான் பார்க்க முடியாது” என்று பாவம்போல் சொல்ல..

“என்னவொரு வில்லத்தனம்” எனவும் அஞ்சுகா சிரிக்க உடன் தினகரன்.

வசீகரன்-பரிபூரணி இருவரும் அருகருகே அமர்ந்து தண்ணீரைப் பார்த்தபடி, அந்நேரத்து இனிமையை இதத்தை மனதால் உணர்ந்து அமைதியாக இருந்தார்கள்.

“குட்டிக்கண்ணா! உங்களுக்கு எப்ப சரியாகும்? மத்தவங்க உங்களை இப்படிச் சொல்லும்போது மனசுக்கு எவ்வளவு வேதனையாயிருக்கு தெரியுமா? கோபம் கோபமா வருது. என் புருஷனைப் பைத்தியம் சொல்ல இவங்க யாரு? சொல்றவங்கதான் பைத்தியம். இனி யாராவது சொல்லட்டும் அப்புறம் இருக்கு” என்றவளின் ஆத்திரம் குறையாதிருக்க, திடீரென்று தன் தோளில் சுமையேற என்னவென்று பார்த்தவள் கணவன் தலை தன் மீதிருப்பதை உணர்ந்த நொடி, மனதிலிருந்த பாரமெல்லாம் தன்னாலேயே விலக இதழில் மென்னகை ஒட்டிக்கொண்டது.

இதை எதிர்பார்த்துதான் அவளின் தோள்சாய்ந்தானோ!

கைகள் கணவனவன் கேசம் வருடிவிட, மனைவியின் துன்பம் அத்தனைக்குமாக அவளைக் கட்டிக்கொண்டு ‘நான் இருக்கையில் வேண்டாம் இந்த கோபம்’ என ஆறுதலளித்திட எழுந்த எண்ணத்தைக் கட்டுப்படுத்தி, அவளின் தலைகோதலை, அந்த அன்பைக் கண்மூடி ரசித்தபடியிருந்தான்.

கோவில் மணியோசை சத்தத்தில் கனவிலிருந்து வெளிவந்த பூரணி நேரம் பார்க்க, அரைமணி நேரத்தைக் கடந்திருந்தது. “ச்சோ தேடப்போறாங்க” என்று தனக்குத்தானே சொல்லி கணவனின் தலை நிமிர்த்த மாறா புன்னகை அவனிடம். “அழகு வசீகரா நீங்க. அதுவும் சிரிக்கும்பொழுது இன்னுமே அழகு. எப்பவும் சிரித்த முகத்தோட இருக்கணும்” என்று நெற்றியில் முத்தமிட, அம்முத்த ஈரத்தை உணர்ந்து, ஆழ்ந்து அதைத் தன்னுள் இழுத்துக்கொண்டான் வசீகரன்.

வசீகரனை ஒப்படைக்க தினகரனைத் தேட, இவர்கள் பார்வையில் படும்படி சற்று தூரத்தில் நிற்பது தெரியவும் கையசைத்து அவனைக் கூப்பிட, அவனுடன் அஞ்சுகா சண்முகி வர, “என்னை ரொம்ப நேரமா தேடுறியா சண்மு? சாரிடி” என்றாள்.

“அதைவிடு இவர்தான் என் மச்சானா? ஹலோ மச்சான் சார்” என்று கைநீட்ட...

“சண்மு நான்தான் இவங்களைப் பற்றிச் சொல்லியிருக்கேன்ல. முதல்ல கையை இறக்கு” என்று தோழியைக் கண்டித்து தினகரனிடம், “நீங்க பத்திரமா அழைச்சிட்டுப் போங்க கொழுந்தன்” என்றவள் அஞ்சுகாவைப் பார்த்து, “சாரிங்க” என்றதும் அஞ்சுகா எதோ சொல்லவர, “இந்த சாரி நான் உங்ககிட்ட அநாகரீகமா நடந்துக்கிட்டதுக்கு மட்டும்தான். அந்த வார்த்தை சொன்னது ரொம்பவே தப்பு அஞ்சுகா. திருத்திக்கோங்க. இவங்க விஷயத்தில் நான் எப்பவும் இப்படியே இருப்பேன்னு சொல்ல முடியாது” என்றாள்.

“சாரி பூரணி. ஏமாறயிருந்த கோபத்துல நானும் கொஞ்சம் அதிகமாதான் பேசிட்டேன். அடுத்து வசீகரனோட அவங்க வீட்டுக்குப் போகப்போறீங்களா?” என்றவள் முகத்தில் ஒருவித எதிர்பார்ப்பு.

“இல்லைங்க. அது எப்பவும் நடக்காது” என்றதில் சணமுகி தவிர மற்றவர்கள் அதிர, “ஏன்?” என கேட்டபின்னேதான், தான் அதிகப்படி பேசுகிறோமோ என்றெண்ணி “சாரி” என்றாள் அஞ்சுகா.

“என் லைஃப் பற்றி யோசிக்காம நீங்க கிளம்புங்க அஞ்சு. எல்லா விஷயத்தையும் வெளிப்படையா சொல்லிரமுடியாது. எல்லாமே சொல்லக்கூடியதாவும் இருக்காது. வா சண்மு போகலாம்” என்று நகர, வசீகரன் மனைவியின் கை பிடித்திழுத்திருந்தான்.

“என்ன வசீகரா? நீங்க உங்க தம்பி கூட வீட்டுக்குப் போங்க” என்று தன்னைப் பிடித்திருந்த கையை விலக்கி நகர, திரும்பவும் அவள் கைபிடிக்க, நிமிர்ந்து அவன் கண்பார்த்தவளுக்கு ஏதோவொன்று அவளைத் தடுக்க என்னவென்றறியா நிலை!
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top