• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
1௦


அங்கே சரண், இன்ஸ்பெக்டர் முகிலன், சேகர், ராகவன் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்க, ஏற்கனவே நடந்த விஷயங்களை கைபேசி மூலம் பேசிவிட்டதால், அடுத்து செய்யப் போவதை தீர்மானிக்கவே இந்தச் சந்திப்பு.

“சார் என்ன பண்ணலாம்? என்று சரண் பேச்சை ஆரம்பிக்க,

“நீங்க கொடுத்தத தகவல் எவ்வளவு முக்கியமானதுன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். யாருக்கும் தெரியாம போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு இருக்கிறவனுங்க, எங்க இருக்காங்க? என்ன வேஷத்துல திரியுறாங்க? யார்கிட்ட வாங்கி யாருக்கு சப்ளை பண்றாங்க. இந்த மாதிரி ஆட்களைக் கண்டுபிடிக்கிறதே பெரிய வேலை. இப்போதைக்கு இவனுங்க நாலு பேர். ஒருத்தனை அரெஸ்ட் பண்ணினா மத்தவங்க அலார்ட் ஆகிரூவாங்க. சோ, நாம நாலு பேரையும் சேர்த்து அரஸ்ட் பண்ற மாதிரி இருக்கணும். இந்த விஷயம் வெளிய லீக்காகிரக் கூடாது.”

“கிரிமினல்ஸ் எப்பவும் நம்மளை விட புத்திசாலித்தனமா யோசிப்பான். அவனுடைய நேரம் சரியில்லன்னா, அவனையும் மீறி விட்டுட்டுப் போற தடயங்களால் தான் அவனைப் பிடிக்க முடியும். இல்லன்னா, வருஷக்கணக்கா தேடினாலும் கண்ணுல சிக்காம தலைமறைவா ஆகிருவாங்க. எனக்கு உங்க மூணு பேருடைய ஒத்துழைப்பும் வேணும்.”

“கண்டிப்பா சார்” என்று மூவரும் சொல்ல, “சரண் நாளைக்கு அவன் ப்ளான் பண்ணின மாதிரி, வடபழனி முருகன் கோவில்ல வச்சே அவனைப் பிடிச்சிரலாம். பர்ட்டிகுலரா இந்தப் பொண்ணை ஏமாத்துறான்னா, எதாவது காரணம் இருக்கனும். அதை அவன் பிடிபட்ட பிறகு விசாரிச்சிக்கலாம்.”

“சார்...” என்று சரண் தயங்கியபடி கூப்பிட,

“என்ன சரண்? ஏன் தயங்குறீங்க?”

“இல்ல சார். தனு... சாரி ஆராதனாவிற்கு எதுவும் ஆகாதுல்ல? எந்தப் பிரச்சனையும் இல்லாம அவளைக் காப்பாத்திரலாம்ல?” என்றான்.

“என்ன சரண் லவ்வா?” என்று முகிலன் நேரடியாக கேட்க,

“சார்!” என்று அதிர்ந்தான்.

“அதான் உங்க கண்ணுல தெரியுதே சரண். அந்தப் பொண்ணுக்காக நீங்க தவிக்கிற தவிப்பு. அந்தப் பொண்ணுக்கு உங்களைத் தெரியுமா தெரியலை. ஆனா, உங்க மனசுக்கு எல்லாமே நல்லபடியாவே நடக்கும். அந்தப் பொண்ணு மேல சின்னதா கீறல் கூட இல்லாம காப்பாத்திரலாம். மிஸ்டர்.சேகர் நீங்க அந்தப் பொண்ணை கோவிலுக்கு கூப்பிட்டு வந்திருங்க. மற்றதை அங்க பார்த்துக்கலாம்.”

“சார் அந்தப் பொண்ணு வருவாளா? ஏமாத்திட்டான்னு தெரிஞ்சும் அவனைப் பார்க்க எப்படி வருவா?” என்றார் கேள்வியாய்.

“கண்டிப்பா வருவாங்க. நீங்க மூணு பேரும் சொல்றதை வச்சிப் பார்த்தா, எதையும் நேருக்கு நேர் பேசித் தீர்க்கிற பொண்ணு அவங்க. அதனால, தன்னை ஏமாத்தினவனைப் பார்க்கக் கண்டிப்பா வருவாங்க. அவங்க சார்புல அவனுக்கு என்ன தண்டனையோ?” என்று சிரித்தான்.

“நீங்க சொல்றது நூறு பெர்சன்ட் உண்மை சார். சரியான திருநெல்வேலி ரௌடி அவ” என்று சற்று முகம் மலர்ந்தான் சரண்.

அவனின் முகமலர்ச்சி அடுத்தவர்களையும் தொற்ற, “ராகவன் நீங்க நாளைக்கு சாதாரணமா வர்ற மாதிரி வந்து, அவன்கிட்டப் பேச்சிக் கொடுங்க. ட்ரக்ஸ் கொடுத்தியே எனக்கு வேணும். எவ்வளவு பணம்னாலும் தர்றேன்னு பேரம் பேசுங்க போதும் .மத்ததை நாங்க பார்த்துப்போம்.”

ராகவன் சரி சொல்லியதும், “அப்புறம் சரண் .அந்தப் பொண்ணுக்குத் தெரியாமல் தான் ரிஜிஸ்டர் பண்றது, தாலி கட்டுறதுன்னு செய்வான். நீங்க அவங்க பின்னாடி, அவங்க கண்ணுல படாம போற மாதிரி பார்த்துக்கோங்க. அதேநேரம் எங்க ஆளுங்களும் குடும்பமா கோவிலுக்கு வர்ற மாதிரி செட் பண்ணிருவோம். இவனுங்க மாட்டினா இந்தப் போதை மருந்து விற்கக் காரணமா இருக்கிறவங்க எல்லாரையும் பிடிச்சிருவோம்.”

“ம்... ஓகே சார். நான் பார்த்துக்கறேன். நான் அருகில் இருக்கும் போது என்னை மீறி அவளை யாரும் தொடக்கூட முடியாது” என்று ஆணித்தரமாக சொன்னான்.

“இப்ப நாம கிளம்பலாம். நடுவில் எதாவது ப்ளான்ல மாற்றம் இருந்தா நான் உங்களைக் காண்டாக்ட் பண்றேன்” என்றான்.

அன்று மாலையே சரண் வடபழனி முருகன் கோவில் சென்று ஒரு காரியம் செய்தான். சரவணன் பதிந்ததில் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்துவிட்டு வந்தான்.

இரவு எப்பொழுதும் போல் அனைவரிடமும் சகஜமாகப் பேசி ,தங்கையின் நிச்சயதார்த்த வேலை எந்த அளவில் இருக்கிறது. அதில் தன்னுடைய பங்கு என்ன என்று அப்பாவிடம் விசாரித்துப் பின் சாப்பிட்டதும் தன்னறைக்கு வந்தான்.

அமைதியாக அம்மாவிடம் பேச ஆரம்பித்தான். “அம்மா உங்க மருமகளுக்கு ஒரு பிரச்சனை. அது சின்னதா பெரியதான்னு இப்பவரை தெரியலை. ஆனா, எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், அவளை என் உயிரைக் கொடுத்து காப்பாத்துவேன். அம்மா நீங்க என் கூடவே இருக்கணும். எங்கேயும் போகக் கூடாது சரியாம்மா? என்னடா மருமகள்னு சொல்றானேன்னு பார்க்கறீங்களா? என்னைக்கு இருந்தாலும் உங்க மருமகள் அவதான்மா.”

தாயிடம் பேசிக் கொண்டிருந்தவன், பீரோவைத் திறந்து, அதன் உள் அறைப் பகுதியில் இருந்து ஒரு பெட்டி ஒன்றை எடுத்து கதவை மூடினான். தன் தாயின் படத்தருகே அமைதியாக அமர்ந்து பெட்டியைத் திறக்க, அவன் தாயின் தாலி இருந்தது. தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து, சின்ன டப்பாவை எடுத்து அதில் இருந்த செயினை எடுத்தவன், அதில் தாயின் தாலியைக் கோர்த்தான்.

பின்னர் சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தவன், அருகில் இருந்த மேஜையில் அதை வைத்துவிட்டு யோசனையில் மூழ்கினான். ‘தான் செய்வது சரியா?’ தங்கை சொன்ன ஜாதகம் தேவையில்லாமல் கண்முன் வந்தது. ‘எதாவது நடந்திருமா? இல்லை. என்னை மீறி எதுவும் நடக்காது. நான் அந்த அளவு பலவீனமானவன் கிடையாது.’

‘அப்புறம் ஏன் கோவிலிலும், வீட்டிலும் அந்த ஏற்பாடு செஞ்ச?’ என்று மனசாட்சி கேள்வி எழுப்ப,

‘அது நடக்காது. இருந்தாலும் தற்காப்புக்கு இருக்கட்டுமேன்னு...’

“தற்காப்புக்கு கத்தி, அருவான்னு எடுத்துக்க வேண்டியதுதானே? ஏன் தாலி எடுக்கிற?’ என்று கேட்ட மனசாட்சிக்கு,

‘அ... அது தப்பா ஒண்ணுமில்லை. எதுவும் நடக்காது. இது நடக்காமலே பிரச்சனையை முடிச்சிருவேன்’ என்று மனச்சாட்சிக்கு சொல்வது போல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

சரணின் குழப்பத்துடனும், ஆராதனாவின் தெளிவுடனும் வெள்ளிக்கிழமை இனிதே விடிந்தது.

சஷ்டியை நோக்க சரவண பவனார்

சிஷ்யருக்குதவும் செங்கதிர் வேலோன்

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாட கிண்கிணியாட

காலை நான்கு மணிக்கெல்லாம் ஆராதனாவின் கைபேசியில் ரிங்டோன் அடித்து ஓய்ந்தது. திரும்பவும் அடிக்க, முதலில் எழுந்த வேதவல்லி தூக்கத்திலேயே ஆராதனாவைத் தட்டி, “ஏய்! போன் அடிக்குது பாரு” என்றாள்.

“ப்ச்... தூங்குடி. நைட்ல போயி நை...நைன்னு எழுப்புற என்று திரும்பிப் படுத்தாள்.

திரும்பவும் கைபேசி இசைக்க வேதவல்லி எழுந்து கண்ணைக் கசக்கிவிட்டு மணி பார்க்க நான்கு ஐந்தைக் காட்டியது. “இந்த நேரத்துல யாரு? ஒரு வேளை வீட்ல யாருக்கும் உடம்பு சரியில்லாம போயிருச்சோ. மை காட்! ஆரு... ஆரு எழுந்திரு” என்று அடித்து எழுப்பி, பெயர் நம்பர் பார்க்காமல் அழைப்பை ஏற்க, “ஆரா நான் சரவணன்” என்றதும் பதற்றத்தில் கைபேசியை நழுவ விட்டுப் பின் விழாமல் பிடித்தவள், ஸ்பீக்கரில் போட்டாள்.

“என்ன ஆரு? ஒரு ஹாய் கூட சொல்ல மாட்டியா? நான் உன் அத்தான் தான? சின்னதா ஒரு தப்பு பண்ணிட்டேன். இனிமேல் அப்படிக் கேட்க மாட்டேன்டா ஆரு” என்று அவன் அந்தக் காலை வேளையில் குழைந்தது, ஆராதனாவிற்கு ஆத்திரத்தைக் கிளப்பியது.

‘எனக்கு அத்தான் நீயாடா? இதுல ஆரு வேற கருமம். வாலே உனக்காகத்தான் காத்திட்டிருக்கேன். ஓவரா குழையுற ராஸ்கல். எனக்கே தெரியாம என் லைஃப்ல விளையாடுறியா? எங்கேயோ உயிரோட இருக்கிற என் அத்தை குடும்பத்தை சாகடிச்சிட்டல்ல? உன்னை ஒரு கை பார்க்கிறேன்டா’ என்று மனதினுள் அவனை கரித்துக் கொட்டினாள்.

“என்னடா ஆரு. அமைதியா இருக்க?” என்றதும், வேதவல்லி தோழியைத் தொட்டு, “எதாவது பேசு” என்று வாயசைத்துச் சொன்னாள். பல்லைக் கடித்துப் பொறுமையாக, “ஒண்ணுமில்ல அத்தான். நீங்க பீல் பண்ண வேண்டாம்” என்று அத்தானுக்கு அழுத்தம் கொடுத்தாள்.

அதைக் கவனிக்காத சரவணன், “நான் உன்கிட்ட கல்யாணம் பற்றி பேசினது மனசை அறுக்குது ஆரு. உன்கிட்ட நேரடியா மன்னிப்பு கேட்கணும். கோவிச்சிக்காம இன்னைக்கு உன்னோட பேவரிட் வடபழனி முருகன் கோவில் வந்துருறியா?”

“இல்ல வரலை” என்று வெளியில் சொன்னாலும், ‘நீ பண்ற ப்ராடு வேலைக்குப் பலிகடா ஆக்க என்னைத் தேடுறியாடா. வர்றேன். வருவேன். உனக்கு ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன். இவளை எதுக்கு ஏமாத்த நினைச்சோம்னு லைஃப் முழுக்க வருந்தணும்டா. என்னதான் மத்தவங்க உன்னைப் பிடிச்சாலும், என் தண்டனைனு உனக்கு தனியா ஸ்பெஷலா இருக்குடா’ என்று பல்லைக் கடித்தாள்.

“இல்ல ஆரு. கண்டிப்பா வரணும்” என்று அவளின் நினைவைக் கலைத்தான்.

“நான் தான் பரவாயில்லைன்னு சொல்லிட்டேனே. அப்புறம் என்ன?”

“நீ வரணும் ஆரு. ப்ளீஸ் என் மன திருப்திக்காக. இந்த ஒரு டைம் மட்டும் தான் கடைசி முறையா வந்திரு ஆரு. ஐந்து முப்பதிலிருந்து ஆறுக்குள்ள வந்திரு. கார் அனுப்பவா?” என கேட்டான்.

அவனின் குழைவான பேச்சை சகிக்க முடியாமல், “கார்லாம் வேண்டாம். கடைசியாதான கேட்குறீங்க. கடைசின்னா கண்டிப்பா வந்து தான ஆகணும். நான் வர்றேன்” என்று கைபேசியை வைத்தாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“கரெக்டா சொன்னடா. கடைசி தான்டா இன்னையோட உனக்கு. என்ன திமிரு பாரு வள்ளி அவனுக்கு” என்று பல்லைக் கடித்தாள்.

“ஹா ஹா ஆரு. அவன் உன்னை ஆருனு சுருக்கி செல்லமா கூப்பிட்டான் பாரு. அது செம. அதற்கு உன் முகம் போனது பாரு. அப்படியே எனக்கு அதான் நியாபகம் வந்திச்சி.”

“எதுடி? சிடுமூஞ்சியா?”

“நோமா. அதான் முகம் கடுகடுன்னு இருந்தா ஜிஞ்சர் ஈட்டிங் மங்கின்னு....”

அவளுக்கு இரண்டு அடி கொடுத்து, “வேதா! என்னைப் பற்றித் தெரியாம, அவனே வலிய வந்து மாட்டுறான் பாரு. அதான் கொஞ்சம் பிகு பண்ணிட்டு ஓகே சொன்னேன்.”

“இருந்தாலும் ஆரு கொஞ்சம் கேர்புல்லா இரு. அவன் பக்கா கிரிமினல். எதுக்கும் அஞ்சமாட்டான். எனக்கு உன் சேப்டி தான் முக்கியம். பி கேர்புல்டா” என்றாள் நல்ல தோழியாய்.

“ம்... புரியுது. நானும் முடிஞ்ச அளவு ஜாக்கிரதையாகவே இருக்கேன்” என்று சேகருக்கு போன் செய்ய, மறுமுனை உடனே எடுக்கப்பட்டது.

“அங்கிள் சீக்கிரம் எழுந்தாச்சா? இங்க ஒரு ஐந்து முப்பதுக்கெல்லாம் வர்றீங்களா?”

“ஏன்மா கோவிலுக்குப் போகப் போறியா? வேண்டாம்மா. அவன் ரொம்ப மோசமானவன்” என்றார்.

“அதை நான் நேர்ல பார்த்து, நேர்ல பேசிக்கிறேன் அங்கிள்” என்று தெளிவாக, தீர்மானமாகச் சொன்னவளை மனதினுள் பாராட்டியவர், ‘சரண் சொன்ன மாதிரி, ஒரு குட்டி ரௌடி தான்’ என நினைத்து, “நான் வர்றேன்மா” என்று அழைப்பைத் துண்டித்தவர், சரணுக்கு அழைத்து விவரம் சொன்னார்.

அவனும் சிரித்து பின் தீவிர பாவனையில், “ஒரு சின்ன தவறும் கூட நடந்திரக்கூடாது அங்கிள். அவனுக்கு உங்களை அடையாளம் தெரியும். அதனால, நீங்க உள்ள வந்தா சந்தேகப்படுவான். அவனுங்க நாலு பேரையும் உங்களுக்குத் தான் அடையாளம் தெரியும். அத்தனை படையையும் தாண்டி வந்தா, நீங்க பிடிச்சிருங்க” என்றான்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ சீக்கிரம் கிளம்பி வா.”

“சரி” என்று அழைப்பைத் துண்டித்த நிமிடம், முகிலன் அவனை அழைத்து, “எல்லா ப்ளானும் பக்காவா இருக்கு சரண். போலீஸ் கோவிலைச் சுற்றி மப்டியில் இருக்காங்க. பேமிலி மாதிரி செட் பண்ணி நாலைந்து குடும்பமா நிப்பாட்டியிருக்கேன். கோவில்ல பாதுகாப்புக்காக இருக்கிற போலீஸ் கூட, தூங்கி வழியுற மாதிரி இருப்பாங்க. நீங்க அந்தப் பொண்ணுக்குத் தெரியாம ரொம்ப இடைவெளி இல்லாம அவங்களை பாலோ பண்ணுங்க. அவங்களுக்கு முன்னாடி, உங்களுக்குப் பின்னாடின்னு எங்க ஆட்கள் இருப்பாங்க. இருந்தாலும் கேர்புல். கோவில்ல உள்ள நுழைஞ்சதும் போனை ஆன்லயே வச்சிருங்க. ஓகேவா?”

“கண்டிப்பா சார்” என்று கைபேசியை வைத்தவன், குளித்துத தயாராகி விழாக்களுக்குப் போடுவது போல் நல்ல ஆடையாக அணிந்து, தாயிடம் சொல்லி நகர்ந்தவன் கண்களில் தாலி பட, அதை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

எல்லா ஏற்பாடுகளும் முடிந்து அனைவரும் கோவிலுக்கு வர காலை ஐந்தரை ஆனது. ஒவ்வொருவரும் வர வர இன்ஸ்பெக்டர்.முகிலன் அவர்களை வழிநடத்திக் கொண்டிருந்தார்.

அந்த இருள் பிரியாத காலை வேளையில், சரவணனை நம்ப வைப்பதற்காகவும், கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பதாலும்… ஆராதனா அழகான வேலைப்பாடுகள் அமைந்த புடவை அணிந்து, எப்பொழுதும் அலங்காரத்தை விட, சற்று தூக்கலாகப் போட்டு, கண்ணுக்கு அழகாக பளிச்சென்றுக் கிளம்பினாள்.

வேதவல்லியும் தோழிக்குத் துணையாக, அவளுக்கு இணையாகக் கிளம்பினாள். ஆராதனாவிடம், “ஏன் இந்த ட்ரஸ்?” என்ற கேள்விக்கு,

“தெரியல. பண்ணிக்கனும்னு தோணிச்சி” என சாதாரணமாகச் சொல்லி, கைப்பையில் அதிகப்படியாக சில பொருட்கள்…,முந்தைய தினம் வாங்கியவை இடம் பிடிக்க, ஆட்டோ வந்ததும் கிளம்பினார்கள்.

ஆராதனாவினுள் ஒரு சந்தேகம் குடைந்தது. ‘நேத்தே பிடிச்சிரலாம்னு சொன்னவங்க ஏன் பிடிக்கல? இன்பார்ம் பண்ணின சேகர் அங்கிளே வந்து கூப்பிட்டுப் போறார்னா, அவனைப் பிடிக்க போலீஸ் இருக்குமோ? யார் இருந்தா என்ன? என் கையில அவன் சிக்கினா போதும். அவனை கவனிக்கிற விதத்தில் கவனிச்சிக்கிறேன்.’

ஆராதனாவைக் கவனித்த சேகர், “எப்படிம்மா இவ்வளவு தைரியமா வர்ற? நான் பயந்த அளவு கூட உன்னிடம் பயமில்லையே” என கேட்டார்.

மென்மையாகச் சிரித்தவள், “இந்த விஷயத்துக்காகலாம் மூட் அப்செட்டானா, லைஃப்ல இன்னும் எத்தனையோ நல்லது, கெட்டது வரும். அதையும் சந்திக்கணுமே. விடுங்க அங்கிள். நான் பார்த்துக்கறேன். அதோட என் படைத்தளபதி வேதவல்லி அம்மையார் இருக்காங்க. எனக்கென்ன பயம்” என்று தோழி அடித்த அடிகளையும் வாங்கிக் கொண்டாள்.

“கோவில்ல எது நடந்தாலும் சரின்னுட்டு செஞ்சிட்டுப் போமா. அங்க அவனால எதுவும் பண்ண முடியாது?” என்று சொல்லிக் கொண்டு கோவில் வாசலில் வந்து நிறுத்தினார்.

அவர்கள் வருவதற்கு கால்மணி நேரம் முன்னதாகவே வந்த சரண் தன் காரிலேயே அமர்ந்திருந்தான்.

“ஆட்டோவிலிருந்து அவள் இறங்கியதைப் பார்த்த சரண் இமைக்க மறந்து அவளையே பார்த்திருந்தான். கண்களுக்கு தேவதையாகக் காட்சி அளித்தவளைக் கண்கொட்டாமல் பார்த்து, பார்த்ததை படம் பிடித்துக் கொண்டான் தன் கைபேசியில். தோழியிடம் பேசிச் சிரித்துக்கொண்டு வருவதைப் பார்த்தவன், அவளின் சிரிப்பில் மொத்தமும் தொலைந்தான்.

‘என்ன சிரிப்புடா அவள் சிரிப்பு? உன்னோட அந்த தெத்துப்பல் சிரிப்புக்காகவே என்ன வேணும்னாலும் செய்யலாம் தனுமா. எந்த காரணத்திற்காகவும் உன்னை நான் விட்டுற மாட்டேன். நீதான் என்னோட சரிபாதி. நீதான் என்னோட தேவதை. ஐ லவ் யூ.’

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அப்பொழுது தான் அவள் அருகில் வந்து நின்றவனைக் கவனித்தான். மற்ற மூவருக்கும் சிக்னல் கொடுத்து மறைந்து இருக்கச் சொன்னதையும் கவனித்தான். ஆராதனாவைத் தொட கையைக் கொண்டு செல்கையில், இறங்கி அவன் கையை வெட்டும் அளவு வெறி வந்தது.

அதற்குள் வேதவல்லி, “வாங்க சரவணன்” என்றழைக்க,

ஆராதனா படக்கென்று திரும்ப, தன்னைத் தொட வருவது போல் வைத்திருந்த அவன் கையைப் பார்த்ததும் முறைத்தாள்.

“ஹி..ஹி சாரி மாமா பொண்ணுன்ற நினைப்பு வந்திருச்சி” என்றான் அசடுவழிய.

“இனிமேல் இந்த மாதிரி பண்ணினா, எனக்கு ஒரு அத்தை பேமிலி இருந்ததையே மறக்க வேண்டி வரும்” என்றாள் பட்டென்று.

“இல்லயில்ல. இனி நான் இப்படிச் செய்ய மாட்டேன். கோவிலக்குள்ள போகலாமா”?

“ம்... போகலாமே. அப்படியே அர்ச்சனைக்கு வாங்கணும்.”

“நான் வாங்கிட்டு வர்றேன்” என்று வேகமாக சென்று வாங்கி வந்தான்.

“எதுக்கு ரெண்டு மாலை?” என்ற ஆராதனாவின் கேள்விக்கு,

“இன்னைக்கு கோவில்ல விஷேசமாம் ரெண்டு வாங்கிப் போட்டா நல்லாயிருக்கும்னு சொன்னாங்க. அதான் வாங்கிட்டு வந்துட்டேன்.”

“ஏதோ சொல்றீங்க” என்று அவனுடன் சென்று விநாயகரைத் தரிசிக்க ஆரம்பித்தாள்.

(ஹாய்! இந்த திருமண சீன்ஸ் எல்லாம் கதாசிரியரான என் கற்பனை மட்டும்தான். தயவு செஞ்சி யாரும் கோவில்ல இப்படில்லாம் நடக்குதான்னு சந்தேகம் கேட்டுறாதீங்க. அப்புறம் நடக்கிறதுக்கு, நான் பொறுப்பில்லை. அந்த முருகரும் பொறுப்பில்லை.)

சரண் அவர்கள் உள்ளே சென்றதும், சேகரிடம் வந்து, “என்ன அங்கிள்… என்ன சொல்றாங்க மேடம்?” என கேட்டான்.

“என்ன சொல்றாளா? அந்தப் பொண்ணு எனக்குத் தைரியம் சொல்றாப்பா.”

‘என்னதான் தைரியம் இருந்தாலும், இப்ப நாம தான் அவளோட தைரியம். வர்றேன் அங்கிள்.”

விநாயகர் தரிசித்து விட்டு, முருகரை தரிசிக்கச் செல்ல அந்த காலை வேளையில் கூட்டம் அதிகமில்லை. பொது ஜனங்கள் ரொம்ப கம்மியே. ஆனால், காவல் துறை குடும்பமாக வந்தவர்கள் அதிகம்.

பொது ஜனங்களை ஒரு பக்கமாக அனுப்பிவிட்டு, காவல்துறை சம்பந்தப்பட்டவர்களே இவர்களுடன் உள்ளே சென்றார்கள். முதலில் காவல் துறையினரும், அதன்பின் சரவணனின் ஆட்கள் இருவர் செல்ல, ஆராதனா, அவளுக்குப் பின் சரவணன், அவனைத் தொடர்ந்து வேதவல்லி, சரண், சரவணின் ஆள் ஒருவன் தொடர மற்றவர்கள் அனைவரும் காவல்துறையினர்.

சரணுக்குப் பின் நின்றிருந்தவன் முன்னே வர முயற்சிக்க, அவனை ஒரு நூலிடை அளவு கூட முன்னே வர விடாமல் தடுத்தான். வரிசையில் செல்லும் போதே அர்ச்சனைச் சீட்டு வாங்குமிடத்தில், ஆராதனாவிற்கு முன் சென்றவர்களிடமும் கையெழுத்து வாங்கி, அராதனாவிடமும் கையெழுத்து போடச் சொல்ல, “ஏன்? எதுக்கு கையெழுத்து? எந்தக் கோவில்ல கையெழுத்து வாங்குறாங்க?” என்று கேள்விகள் கேட்க,

“இன்னைக்கு முருகருக்கு விசேஷமான நாள். ஆறு மணிக்குள்ள வர்றவங்ககிட்ட கையெழுத்து வாங்கி உடனே அர்ச்சனைக்கு அனுப்பி வைச்சிருவோம். தனக்கு முன்னே சென்றவர்கள் சரவணனின் ஆட்கள் என்று தெரியாத, ஆராதனாவும் கையெழுத்துப் போட்டு அவளுக்கேத் தெரியாமல் மணமகள் ஆனாள்.

பின்னால் வந்த சரவணன் மிகவும் சந்தோஷத்துடன் கையெழுத்துப் போடத தயாராக, வேதவல்லியின் பின்னால் இருந்து அசுர வேகத்தில் இருவரையும் பின் தள்ளி, தன்னுடைய எழுதுகோல் எடுத்து, மணமகன் பெயர் அருகில் கையெழுத்து போட்டு ,சட்டப்படி மணமகன் ஆனான் சரண்.

பின்னால் வந்த சரவணனுக்கு அதிர்ச்சியோடு ஆத்திரமும் வர, சரணின் சட்டையைப் பிடித்தான். “எதுக்கு சார் சட்டையைப் பிடிக்கறீங்க? எனக்கு ஒரு அவசர வேலையிருக்கு. ஆறு மணிக்கெல்லாம் ஸ்பெஷல் பூஜைக்கான கையெழுத்து முடிஞ்சிரும்னு சொன்னாங்க. அதான் வந்து போட்டுட்டேன்” என்றான் சரவணனின் மொத்த திட்டத்தையும் பாழ்படுத்தி.

அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, “மேடம் நீங்க வாங்க. கையெழுத்து போடுங்க” என்று வேதவல்லியைக் கையெழுத்து போடச் சொல்ல, கையெழுத்திட குனிந்தவள் அதிர்ந்தாள்.

இரண்டு வகையான அதிர்ச்சி. மணமகள் - மணமகன் என்றும் சாட்சிக் கையெழுத்தும் இருக்க, ஒரு நிமிடம் வேதவல்லிக்கு மூச்சித் திணறியது. இருவரின் கையெழுத்தையும் பார்த்து, சரணையும் பார்த்த பார்வையில், திருமணத்திற்குப் பதிந்ததை அவள் கண்டுபிடித்து விட்டாள் என்பதை உணர்ந்த சரண், “சீக்கிரம் கிளம்புங்க மேடம். பின்னாடி உள்ளவரும் சைன் பண்ணனும்ல. எவ்வளவு துடிக்கிறாரு பாருங்க” என்று அவளை நகர்த்தினான்.

இதை எதையும் அறியாமல் சென்ற தோழியின் மீது கோவத்துடன், வருத்தமும் வந்தது. அவர்கள் இருவரும் முன்னே நடக்க, சரவணன் வேறு வழியில்லாமல் சாட்சிக் கையெழுத்தானான்.

இதை எதிர் வரிசையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ராகவன் தன் கைபேசியில் எதிரில் நடப்பதைத் தெளிவாகப் பதிந்தார். சரணை நினைக்கையில் ராகவனுக்கு ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் இருந்தது. அப்பொழுதே கையில் இருந்த மாலையில் உள்ள பூக்களை உதிர்த்து, அவருக்கு முன்னால், பின்னால் உள்ளவர்களுக்குக் கொடுத்து, சரணையும், ஆராதனாவையும் காண்பித்து, “இப்ப இவங்க கல்யாணம் நடக்கப் போகுது. அவங்க நல்லாயிருக்கணும்னு வாழ்த்தி ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கொடுத்தார்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top