- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
10
மத்திய சிறைச்சாலை சென்னை:
நேரடியாக நீதிபதியிடம் ஒப்படைத்ததால், காவல் நிலையம் வாசமில்லாமல், நேரடியாகவே ஜெயிலில் அடைக்கப்பட்டான் கார்த்திக். அவனின் நினைவுகள் அனைத்தும் அவந்திகாவே இடம் பிடிக்க, எப்பொழுதும் அவளைப்பற்றிய நினைவில் யோசனையிலே இருந்தான். எப்பொழுதும் போல் அவள் அன்பை எண்ணி மனதில் சந்தோஷமே எழுந்தது. ‘சே... ஒரு நிமிஷம் நிதானிச்சிருந்தா இன்னும் கொஞ்சநேரம் அவளோட முகத்தையாவது பார்த்துட்டு இருந்திருக்கலாம். லூசுத்தனமா அவள்கிட்ட ஓவரா உரிமையெடுத்ததால, எல்லாம் தப்பாகிருச்சி. கொஞ்சம் லேட் பண்ணியிருந்தா, மாட்டியிருக்க மாட்டேனோ என்னவோ!’
‘நீங்க போயிருங்க கார்த்திக்’ கடைசியாக அதிர்ச்சியும் கலக்கமுமாக சொன்னவளின் முகம் நினைவு வந்தது. அதில் தன்னைத்தானே நொந்தவன், “சாரிடா. நான் தப்பான எண்ணத்துல வரல. ஆனா உன்னைப் பார்த்ததும் சித்தம் தடுமாறிட்டேன். இனிமேல் இந்தமாதிரி நடக்காது. எங்க நடக்கிறது நான் பண்ணின வேலைக்கு நீ என் முகம்கூட பார்ப்பியோ என்னவோ! பார்க்காம எங்க போகப்போற” என இன்னொரு மனம் நினைக்க அவனையும் மீறி முறுவல் தோன்றியது.
‘ஆனா, நான் உனக்கு மேட்ச் இல்ல அவந்தி. இந்த தொழில்ல எப்ப எங்க இருப்பேன்னே தெரியாது. உன் ப்ரொபோசலை ஏத்துக்காம இருந்திருக்கணும் அவந்தி. தப்பு பண்ணிட்டேன். அதனால உனக்கு மிஞ்சியது வேதனை மட்டும்தான்.’
‘என்னை விட்டுப்போறியா கார்த்திக்? நீயில்லன்னா நான் என்னாவேனோ!’ அவந்திகாவின் குரல், காதில் நுழைந்து மனதைப் பிசைந்து ரணமாக்கியது. ‘அச்சோ! இந்த நியூஸ் அவளுக்குப் போயிருக்குமே. அவளோட அத்தை அவளை வார்த்தையாலேயே கொன்னுருவாங்களே! என் அழகி அவஸ்தைபடப் போறா. அதுக்கு நானே காரணமாகிட்டேனே. என்னதான் வெளியில தைரியமான பெண்ணா இருந்தாலும் உள்ளுக்குள் குழந்தையாச்சே அவள்’ என்று மனம் பலவற்றையும் எண்ணிக் குழம்பியது.
‘அடுத்து என்ன செய்யலாம்? மாட்டியாச்சி. இனி ஸ்ட்ரெய்ட்டா தண்டனைதான். எத்தனை வருஷம் போடுறாங்களோ தெரியலையே. இல்ல கூடாது நான் தப்பிக்கணும், சீக்கிரமே இங்கிருந்து தப்பிச்சி, அழகியைக் கூட்டிட்டு எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போயிரணும்.’ கண்மூடியபடியே எப்படி தப்பிப்பது என்று தப்பாக யோசிக்க ஆரம்பித்தான் கார்த்திக்.
அதுவரை அவனது முகபாவனையை பார்த்திருந்த ஜெயில்மேட், அவன் அருகில் வந்து, “என்ன தம்பி? ரொம்ப யோசிக்கிறபோல. இங்கிருந்து தப்பிக்கலாம்னா?” என கேட்டான்.
திடுக்கிட்டு விழித்த கார்த்திக், அவன் சொன்னதை யாராவது கேட்டுவிட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தவன் அப்படியில்லை என்றதும், மூச்சை சீராகவிட்டு, “ஏன்ணே யாராவது கேட்டுறப் போறாங்க” என்றவன் “நான் இப்படித்தான் யோசிக்கிறேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான் திணறியபடி.
அவனது பயத்துடன் சேர்ந்த பரபரப்பை கண்களால் அளவிட்டு, “அதான் நவரசத்தையும் முகத்துல காட்டுனியே. அதுலதான் தெரிஞ்சிது. அதுசரி என்ன தப்பு பண்ணின? என்னோட உன்னை போட்டிருக்காங்கன்னா, பெரிய கேஸாதான் இருக்கும். கொலையா? கிட்னாப்பிங்கா என்ன கேஸ்?”
அது ஒண்ணுமில்ல. கடந்த ஆறுமாசமா, சென்னையில் பெரும்புள்ளிங்க வீட்ல திருடினதுக்கான திருட்டு தடயமே கிடைக்கலன்னு இருந்தாங்கள்ல. அது நான்தான். நேத்து என்வரையில கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்தேனா அதான் மாட்டிக்கிட்டேன்” என்றான்.
“அட அது நீதானா!” என ஆச்சர்யமாக கேட்டு, “நானே யோசிப்பேன் யார்டா அந்த அப்பாடக்கர்? போலீஸ்காரனுக்கே கல்தா குடுக்கிறான்னு. என்ன பொண்ணால மாட்டினியா? உன்னோட தொழிலுக்கு பொண்ணுங்க சகவாசம் இருக்கக்கூடாதே” என கேள்வியாய் முடித்தான்.
“பரவாயில்லையே பொண்ணாலதான்னு கண்டுபிடிச்சிட்டீங்களே. நீங்க அனுபவசாலிண்ணே. என்ன பண்றது ஏதோ என்னோட பெர்சனாலிட்டிக்கு நம்மளைத்தேடி ஒரு பொண்ணு வருதேன்னு நினைச்சேன். அப்புறம்தான் தெரியுது என் மனசுல ஒரு இதை அதான்ணே ஃபீலை உண்டாக்கிட்டா” என வெட்கத்துடன் சொல்ல,
“எவ்வளவு பெரிய திருடன் நீ. ஒரு பெண்ணோட லவ்வுல மாட்டிட்டியேப்பா. இப்ப என்ன பண்றதா இருக்க?”
“என்ன பண்றதுன்னு தெரியல. இங்கேயே இருந்தா எத்தனை வருஷ ஜெயில் வாசமோ. தப்பிக்கலாம்னா சான்ஸ் கம்மியாயிருக்கு. ஆமா “நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க?”
“நானா! நான் போதை மருந்து சேல் பண்ணினேன்னு பிடிச்சிப்போட்டானுங்க. நான் பண்ணலன்னா வேற எவனையாவது வச்சி பண்ணப்போறான். என்னதான் அடிச்சிக் கேட்டாலும் நம்ம சீக்ரெட்டெல்லாம் சொல்லிர முடியுமா?”
“அதுதானண்ணே நம்மள மாதிரி தொழில்காரங்களுக்கு நல்லது. நான் என் லவர்கிட்டக்கூட இதுவரைக்கும் சொன்னதில்ல. இன்னைக்கு பேப்பர் பார்த்துதான் தெரிஞ்சிருக்கும்.”
“அதான் கவலையாக்கும். மத்தபடி பிடிபட்டதுல எந்த கவலையும் இருந்த மாதிரித் தெரியலையே?”
‘ஹி...ஹி’ என அசட்டு சிரிப்பொன்றை வெளியிட்டு, “எப்படியும் தப்பிச்சி போயிருவேன்ற நம்பிக்கைதான்ணே.”
“அடப்பாவி! மாட்டும் போதே எப்படி தப்பிக்கிறதுன்னும் தெரிஞ்சே வந்திருப்பபோல. அதுசரி நானும் உன்கூட வரலாமா?”
“அட நீங்க வேற. நான் சிங்கிளா தப்பிக்கிறதே பெரிய காரியம். இதுல உங்களை வேற எப்படி கூட்டிட்டு அழையுறது? நீங்க தனி ட்ராகல போங்க. நான் என் ட்ராக்ல போறேன்” என்றான்.
அந்த ஜெயில்மேட் யோசிக்க ஆரம்பித்தான். “பய நல்ல திறமையானவன். இப்படி உருகி வழியிற பொண்ணுகிட்டயே உண்மையைச் சொல்லலன்னா, தொழிலுக்கு நேர்மையானவன். இவனை பேசி கரெக்ட் பண்ணி, நம்ம தொழிலுக்கு இழுத்துக்கலாம். என்ன கொஞ்சம் சென்டிமெண்ட் டைப்பா இருக்கான். அதை சரிபண்ணனும். நாம நினைச்சா நடக்காம போயிருமா என்ன? நடத்திரலாம்’ என்றெண்ணி, “சரி தம்பி என்னோட வர்றியா? நான் உன்னை கூட்டிட்டுப் போறேன். என்ன கொஞ்ச நாளைக்கு, உன் லவரை மறந்துட்டு என்னோட தொழில்ல உன் திறமையைக் காட்டணும். நீ இந்த ஆறுமாசம் சம்பாதிச்சதை நான் ரெண்டே நாள்ல தருவேன்” என்று ஆசை காட்டினான்.
பணத்தைப் பற்றிப் பேசியதும் கார்த்திக்கின் கண்கள் மலர, பணத்தின்மேல் அவனுக்கிருந்த ஆசையை உணர்ந்த ஜெயில்மேட் ரத்தன், “இன்னும் இரண்டு நாள்ல கிளம்பறோம்” என்றதும் இருவரும் கைகொடுத்து மர்மமாகப் புன்னகைக்கத்தனர்.
அந்நேரம் தாய், தந்தை, தம்பி, அவந்திகா என அனைவரையும் மறந்தான். அவ்விடத்தில் பணம் என்ற பேய் மட்டுமே ஆட்சி செய்தது. இடம் நேரம் அனைத்தும் வேவு பார்த்து, இரண்டாம் நாள் தப்பிக்கும் பொழுது, தடுக்க வந்த இரண்டு காவலர்களை, கார்த்திக் அடித்து உதைக்க, இருவரும் தப்பித்திருந்தார்கள்.
பணத்தின் மேல் வந்தக் காதலால், தன் மனதில் வந்த சொந்தக் காதலை, தீக்கறையாக்கினான் கார்த்திகேயன்.
மறுநாள் காலையிலேயே ‘போதைமருந்து கடத்தல்காரன் ரத்தனுடன், திருட்டு கேஸில் கைதுசெய்யப்பட்ட, கார்த்திகேயன் தப்பியோட்டம்’ என்ற செய்தி வெளியாக, அவந்திகாவின் வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்து, அதற்குள் அவந்தியைத் தள்ளியது. வழக்கம்போல் இந்த குட்டையும் கௌஷிக்கே உடைக்க, வனஜா வனபத்ரகாளியானாள்.
ஏற்கனவே கார்த்திக்கினால் குழம்பி, அவனைப்பற்றிய எந்த முடிவுக்கும் வரமுடியாமல், திண்டாடிக் கொண்டிருந்த அவந்திகா, அடுத்தடுத்த அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்தாள். அவளுக்குத் தெரியாததா, ஜெயிலிலிருந்து தப்பியவன் திரும்ப மாட்டினால் தண்டனையின் விகிதம் இரட்டிப்பாகி, தண்டிக்கும் விகிதமும் அதிகரிக்கும் என்பது.
“ஏன் கார்த்திக் இப்படிப் பண்ணிட்டீங்க? தப்பு மேல தப்பு பண்றீங்களே? ஐயோ! என்னால இதைத் தாங்க முடியலையே. உங்களைப்பற்றி கேள்விப்படுற எல்லாமே தப்பாகவே இருக்கே” என மனதினுள் குமைந்து கொண்டிருந்தவளிடம்,
“என்ன அவந்தி? உங்காளு ஜெயில்லயிருந்து தப்பிச்சிட்டானாமே. அதுவும் தனியா இல்ல. அங்கிருந்த போதை மருந்து கடத்துறவனோட ஜோடியா. நல்ல ஜோடிப்பொருத்தம்ல” என்று நக்கலாக கேட்டான்.
“வேண்டாம் கௌஷிக். நான் ஏற்கனவே நொந்து போயிருக்கேன். என்னை மேலும் மேலும் நோகடிச்சி, உன்னோட ஆம்பளைத்தனத்தைக் காட்டாத” என்றாள் கண்டிப்புடன்.
“என்னடி? என் பிள்ளையை பார்த்து ஆம்பளையான்னு கேட்குறியா? அதுக்குத்தான் அவனைக் கல்யாணம் பண்ணி தெரிஞ்சிக்கோன்னு சொல்றேனே” என்று நாக்கில் விஷத்துடன் வார்த்தைகளை வனஜா வீச,
‘ச்சீய்...’ என அருவருத்துப் போனாள் அவந்திகா.