- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
10
ஹரிப்ரியா பணத்தை எடுத்து வீட்டை விட்டு வெளியேறும் பொழுது, பின்புறம் கதவு பூட்டியிருக்கிறதா என்று பார்த்து வந்த சாந்திக்கு முன்புற கதவு பூட்ட வரும்பொழுது தாவணிக்கு மேல் போட்ட சட்டையுடன் தூரத்தில் யாரோ செல்வது தெருவிளக்கில் தெரிய சந்தேகத்தில் வேகமாக மகள்களிருக்கும் அறையில் பார்த்தவளுக்கு சின்னவள் மட்டும் உறங்குவதைப் பார்த்ததும், பெரியவள் தம்பியைத் தேடி செல்கிறாள் என்பது புரிந்தது.
வேகமாக கணவனை எழுப்பி விஷயத்தை சொல்ல உடனடியாக எழுந்து சட்டையைப் போட்டபடி, “நீ பக்கத்துல தேடு நான் பஸ்ஸ்டாண்ட் போய் பார்க்கிறேன். இல்லன்னா தம்பி ஹாஸ்டல் போய் பார்க்கிறேன்” என வேகமெடுத்தவர் போகிறபோக்கில் “ஹரிக்கு போன் பண்ணி சொல்லுமா” என்று நிற்காமல் சென்றார்.
தம்பிக்கு போன் செய்த சாந்தி எங்கேயிருக்கிறான் என கேட்டதும்... அவனோ நண்பனைப் பார்த்துவிட்டு பத்து நிமிடத்திற்கு முன்னர்தான் கிளம்பி திருச்சி சென்று கொண்டிருப்பதாகச் சொன்னான். உடனே சாந்தி ப்ரியாவைப் பற்றி சொல்ல...
“அவளை ஏன்கா தனியா விட்டீங்க? இருங்க நான் வர்றேன்” என்றவன் கண்டக்டர் டிரைவரிடம் கேட்க கண்ட இடத்தில் நிறத்த மாட்டோம் என்றவர்களின் கையில் காலில் விழுந்து இறங்கி திரும்பவும் மேலூர் வந்தான். நால்வரும் தேடி அலுத்துப்போன வேலையில் போன் வர எடுத்துப் பேசிய சாந்தி “ஐயோ” என தலையிலடித்துக் கொண்டு இரவோடு இரவாக திருச்சிக்குப் பயணமானார்கள்.
மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து இருவரும் பிழைக்க வழியில்லையென்று டாக்டர்கள் கைவிரித்து, காவல் துறையினரிடம் “உங்களுக்குத் தேவையானதைக் கேட்டுக்கோங்க” என்று சென்றார்கள். இருவருமே அவரவர் குடும்பத்தைக் காண உயிரைக் கையில் பிடித்திருக்க கிரி முடிந்த மட்டும் போலீஸ்கு வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருந்தான்.
கிரிதரன் - ஹரிப்ரியா இருவர் படுக்கையும் அடுத்தடுத்து இருக்க, “ஐயோ!” என்ற கதறலுடன் ஹரிப்ரியாவின் குடும்பம் உள்ளே வந்தது. “இப்படி ஆகிருச்சேடி. மூணுமாசம்னு சொன்னாரே.. ஒரே மாசத்துக்குள்ள இப்படியாகிருச்சே. என் பொண்ணு வாழ்றதுக்கு முன்னாடியே சாவோட விளிம்புல நிற்கிறாளே” என்று தாய் கதற...
“அம்மா அழாதீங்க” என்ற வார்த்தையை தெளிவாகச் சொன்னாள் ப்ரியா. சாந்தியைப் பிடித்திருந்த பாஸ்கர் வேதனையுடனும், கண்ணீருடனும் மகளைப் பார்த்து “இப்படிப் பண்ணிட்டியேமா. ஒரு வார்த்தை எங்ககிட்ட சொல்லியிருந்திருக்கலாமே. நாங்க உன்னை தனியா விட்டிருக்க மாட்டோமே” என்றார் கண்ணீர்க்குரலில்.
“சொல்லியிருந்தா என்னப்பா பண்ணியிருப்பீங்க? சாவுன்றது உறுதியான பிறகு, என்னை எத்தனை நாள் கூடயிருந்து பார்த்துக்க முடியும் உங்களால்?” அவர்களின் அதிர்ந்த முகமே இன்னும் தனக்குத் தெரியுமென்பதை ஹரி சொல்லவில்லை என்பது புரிந்தது.
“தெரியுமா? தெரிஞ்சுமா பாப்பா” என்று வருத்தத்துடன் மகளைப் பார்க்க... டாக்டர்களால் கைவிடப்பட்டு சாகும் தருவாயில் இருந்தவளின் முகமும்; குரலும் அணையப்போகும் ஜோதியாய் ஒளிர்ந்தது. முகத்தில் அவ்வளவு பிரகாசம். குரலில் அவ்வளவு தெளிவு. இவள் சாகப்போகிறாளா என்றால் யாரும் நம்பமாட்டார்கள். ஏற்கனவே டீன்ஏஜ் அழகுப்பெண். கடைசி நிமிடங்களில் இன்னுமே பிரகாசித்தாள். வந்தவர்களிடம் தெளிவாகப் பேசினாள். தன்னைக் காப்பாற்ற வந்தவர் தன்னால் உயிர் விடப்போவதை எண்ணி சில நொடிகள் கலங்கினாள்.
லட்சுமி என்ற தீபலட்சுமி, “அக்கா என்னைவிட்டுப் போயிராதக்கா? நான் உன்கிட்ட சண்டை போட மாட்டேன்கா. உன்னை இனி அக்கான்னு மட்டும் கூப்பிடுவேன். பெயர் சொல்லி கூப்பிட மாட்டேன்கா. நீயில்லன்னா எப்படிக்கா? ப்ளீஸ்கா வந்திருக்கா” என அனைத்திற்கும் “அக்கா” என்ற வார்த்தையை சொல்லி அழுதவளை ஆறுதலாக மெல்ல தலைகோதியவளின் பார்வை அவளையும் தாண்டிச் சென்றது தன் மாமனைத் தேடி.
அந்த அறையின் வாசலில் கதவோரம் சாய்ந்திருந்திருந்தவன் கண்களிலிருந்த கண்ணீர் கண்ணை மறைக்க, மெல்ல அவளிடம் நடந்து வந்து, “இப்படி பண்ணிட்டியே பா.. பாப்பா” என்று சொல்ல வந்தவன் ப்ரியாவின் கண்டிப்பு நினைவு வர, “சாரிமா” என்றான்.
இவர்கள் வந்ததிலிருந்து பார்த்திருந்த கிரிதரனுக்கு ‘நல்ல குடும்பம். வாழக்குடுத்து வைக்காத பெண்’ என எண்ணும்போதே வாசலைப் பார்க்க, ராசாத்தி ஒரு பையன் அருகில் நின்றிருந்தாள். அவர்கள் இருவரையும் சேர்த்துப் பார்த்த கிரிக்கு, ‘அவளுக்காகத் தான் மாப்பிள்ளை பார்த்திருந்தால் இதே போல்தான் பார்த்திருப்பேன்’ என்ற எண்ணம் வர, அவர்களிருவரையும் ஜோடியாகப் பார்க்க ஆசை வந்தது. அவன் முன்னேறி ப்ரியாவின் புறம் வந்ததும்தான், அவன்தான் அவளது மாமா என புரிந்து தன் கற்பனையை நினைத்து நொந்து, பின் ‘ஏன் நடந்தால் என்ன?’ என்ற எண்ணம் தோன்றியது.
“என்னைத் தேடி கிளம்பி வந்து இப்படி... ஏன்மா இப்படிப் பண்ணின? நீ என்னமா பாவம் பண்ணின சாகுறதுக்கு?” அழுதவன் கண்ணீர் துடைத்து, “டாக்டர்கிட்ட விசாரிச்சிட்டேன்மா உனக்கு ஒண்ணும் இல்லையாம் சொன்னாங்க. அப்படியே போலீஸ்கிட்டயும் கேட்டேன். அவனுங்களுக்கு நீங்க குடுத்த தண்டனை சரிதான்” என்றாலும், தான் வளர்த்த பெண் தன்னாலேயே சாகப்போகிறாளே என்று குலுங்கி அழுதவனையே ஆசைதீர கண்களுக்குள் நிரப்பிக் கொண்டவள்...
“எனக்கு ஒண்ணும் இல்லன்னு எங்ககிட்டேயும் டாக்டர் சொல்லியாச்சி மாமா” என மெல்ல சிரித்தவள், ஹரியினருகில் நின்றிருந்த பெண்ணைப் பார்த்தாள். அதுவரை ஹரியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த கண்கள் அவனை ஒட்டினாற்போல் நின்றிருந்த பெண்ணைப் பார்த்ததும், ‘நல்ல அழகுப்பெண்’ என நினைக்கையிலேயே அவளின் கண்கள் தன்னைப்போல் தெரிய முகம் பளீரிட “ஹரிப்ரியா” என வாய் முணுமுணுத்தது.
ஆம். ஹரியினருகில் கிரியின் படுக்கைக்கு வலது பக்கத்தில் ராசாத்தி என்றால் ஹரிப்ரியாவின் இடதுபுறம் ஹரி நின்றிருந்தான். அருகருகே இருந்த படுக்கையாதலால் ஹரியும், ராசாத்தியும் ஜோடியாக நின்றது படுக்கையிலிருந்த அந்த இரு ஜோடி கண்களுக்கும் நிறைவாக இருந்தது! நிறைவேற வேண்டுமென்றும் இருந்தது.
அழுகைக் குரல் கேட்டு தாயின் புறம் திரும்பிய கிரிதரன், “அம்மா சொன்னா கேளுங்க அழாதீங்க. நீங்க அழுதா பாருங்க பாப்பா அழறா” என்றவன் அவளிடம் திரும்பி, “பாப்பா அழக்கூடாது சொல்லியிருக்கேன்ல?” என்றான்.
வேகமாக கண்களைத் துடைத்து, “நான் அழல மாமா. பாருங்க. கண்ணீர் அதுவா வருது. என்னால ஸ்டாப் பண்ண முடியல” என்று கண்ணைக் காண்பிக்க... அவளருகில் நின்றிருந்த ஹரிக்கும் இந்த பதில் சற்று சிரிப்பை வரவழைத்தது. ஆனால் யாரென்று பார்க்கவோ, ஆராயவோ முன்வரவில்லை.
“இந்த பாட்டிதான் தூங்கிட்டிருந்த என்னை எழுப்பி அழுதுட்டே வர்றாங்க. காரை எவ்வளவு ஸ்பீடா ஓட்ட வச்சாங்க தெரியுமா?” என்றாள் உதடுபிதுக்கி.
அதில் புன்னகைத்தவன் தாயை அருகே அழைத்து, “நான் பிறக்கிறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு பொண்ணு பிறந்திருந்தா, இப்ப கல்யாணம் முடிஞ்சி பாப்பா அளவுக்கு ஒரு பெண் இருப்பாள்லம்மா?” என்றதும் மகன் சொல்ல வருவதன் அர்த்தம் புரிய, ‘ம்...’ என தாய் தலையசைக்க... “சந்தர்ப்பவசத்தால நான் இவளுக்கு புருஷன்னாலும், எப்பவும் அவளுக்கு அப்பா ஸ்தானம் தான். தாய்மாமா கூட தாய் தானம்மா” என்றான்.
கிரியிடமிருந்து வந்த வார்த்தையிலிருந்த உண்மை படுக்கையிலிருந்த ஹரிப்ரியாவின் முகத்திலடித்தது போலிருந்தது. இதை ஹரி சொல்லும் பொழுது தன்னைத் தட்டிக்கழிக்கச் சொல்கிறான் என நினைத்தவளுக்கு, அதையே கிரிதரன் யாரோ ஒரு பெண்ணிற்காகச் சொல்லும் பொழுது, தன் கூடப்பிறந்த அக்கா பெண்ணை ஹரி சொன்னது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையென்று புரிந்தது. மனதிலிருந்த ஏதோ ஒரு பாரம் தன்னைவிட்டு விலகியது போலிருந்தது ஹரிப்ரியாவிற்கு.
மாமாவிற்காக தான் செதுக்கிய காதல் சிற்பம், அது காதலால் கட்டியதல்ல அவனின் காவலால் கட்டியதென்று உணர்ந்த நிமிடம் காதல் சிற்பம் காவல் காக்கும் தெய்வமானது அவள் மனதினுள்.