• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
10



“அம்மா பணம் கொடுக்கச் சொன்னாங்க சித்தி” என்று ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை நீட்டினான்.

அதை வாங்காமல் அவன் அளவு முட்டிபோட்டு அமர்ந்தவள், “உங்கம்மா கொஞ்சம் முன்னாடி நிறைய கொடுத்தாங்கடா செல்லம். சித்திகிட்ட பணம் இருக்குது பாரு” என்று தன்னிடமுள்ளதைக் காண்பித்து, “வேலைக்குப் போனப்ப வாங்கின சம்பளத்துல கொஞ்சமே கொஞ்சம் சித்திகிட்டயும் இருக்கு. நீ வச்சிருக்கிற பணத்தை உங்கம்மாகிட்ட திருப்பிக் கொடுத்து, சித்தி இங்க வாழத்தான் வந்தாங்களாம். அதுவே இல்லைன்றப்ப, இந்தப் பிச்சைப்பணம் வேண்டாமாம்.. அதோட சித்தப்பாவுக்கு இப்படி விலை வைக்க வேண்டாம்னு நான் சொன்னதா சொல்லிரு” என்றவள் கண்கள் கலங்க திரும்பி கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“சரிங்க சித்தி. நீங்க எப்ப வருவீங்க?”

“வரணுமா என்ன?”

“சித்தப்பா இருக்கிற இடத்துலதான சித்தி இருக்கணும். அப்பாவும் அம்மாவும் அப்படித்தான இருக்காங்க?” என்றான் கேள்வியாய்.

“நீ ரொம்ப அறிவுடா செல்லம். ஆனா பாரு இந்த வீட்டுல உள்ளவங்களுக்கு அது தெரியலை. நிறைய படி. அதைவிட நல்லவனா வளரு. சரியா?”

“நான் எப்பவும் குட் பாய்தான் சித்தி. சரி வர்றேன்” என்று நகரப்போனவனை நிறுத்தி, “சி..சித்தப்பாவை நல்லா பார்த்துக்கணும். சித்திக்காக செய்வியா?” என்றாள் கெஞ்சலாக.

“செய்யுறேன் சித்தி” என்றதும் அவன் தலைவருடி, “போ” என்றனுப்பி நிற்காது நடந்துவிட்டாள்.

அவள் செல்வதை அழுதபடி பார்த்திருந்த ஐஸ்வர்யாவின் தோளணைத்த கணவன் மார்பில் சாய்ந்து, “பாவம் செய்துட்டேன்ங்க. பேசக்கூடாததைப் பேசி அவளை...”

“ஐஸ்மா! அதைப் பாவம்னு ஏன் சொல்ற? நீ செய்தது ஆயிரம் புண்ணியத்திற்குச் சமம். அந்தப் பொண்ணை பாதுகாத்திருக்க. இதைவிட அவளுக்கு யாரும் நல்லது செய்திட முடியாது. அழுதுட்டுப் போனாலும் வேறுவித தொந்தரவுகள் இல்லாமல் நிம்மதியாயிருப்பாள்.” மனைவியின் செயலில் தவறில்லை என்று ஆறுதலுரைத்தான்.

“உங்க தம்பி இல்லாம அவள் எப்படிங்க நிம்மதியாயிருப்பா?”

“காலம் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டதுமா. அவளும் மாறி வேற வாழ்க்கையை ஏத்துப்பா” என்றான் யதார்த்தவாதியாய்.

“இன்னொரு வாழ்க்கையா? அவள் வரையில் அது கஷ்டம்தான் தோணுது. வசீ மேல அவ்வளவு நேசம் அவளுக்கு. எங்கயிருந்தாலும் அவள் நல்லாயிருந்தால் போதும்” என்றாள் மனதார.

“வீட்டைவிட்டு வெளியில வந்த பிறகு என்னாச்சி பூரணி?” தோழியின் துக்கத்தில் மனம் வருந்த கேட்டாள் சண்முகி.

“என்னாகும்.. பஞ்சாயத்துதான். அங்கே நடந்த எதையும் வீட்டுல சொல்லலை. அவங்கப்பா வந்தவர் தன்னோட பையன் மனநிலை சரியில்லாதவன்னு உளற, எங்கப்பா அதைப் பிடிச்சிக்கிட்டு தனக்காகப் பேச ஆள் கூட்டிட்டு வந்து அவங்க வீட்டுல பேசன்னு கடைசியில பதினைந்து லட்ச ரூபாய் பணமா கொடுத்திருங்க. இல்லைன்னா போலீஸ்ல போயி பேசிக்கலாம்னு எங்கப்பா கூட்டிட்டு வந்த ஆள் பேச...”

“அங்க அவங்க சைட் வக்கீல்கிட்டப் பேசி கவுன்சிலர் பதவியில இருக்கும்போது கேஸ் அது இதுன்னா பெயர் கெட்டுப் போகும். அதோட பொண்ணு விஷயம்ன்றதால பதவி விலக வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன பண்றதுன்னு சொல்ல, வேறு வழியில்லாமல் பனிரெண்டு லட்சம் பேசி கமுக்கமா வெளில தெரியாம விஷயத்தை முடிச்சிட்டாங்க. பஞ்சாயத்து வந்தவங்களுக்குக் கொடுத்த இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து, அவுட்டோர் ஏரியாவா பார்த்ததுல இங்க கிடைக்க வீட்டோட சேர்ந்த இடமா வாங்கி கோழிப்பண்ணை வைத்து சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டார்.”

“அவரால எப்படி பூரணி முடிந்தது? அவர் பொண்ணு நீன்றது கூடவா ஞாபகமில்லை? கிட்டத்தட்ட உன்னை வைத்து சம்பாதிச்சிருக்கார். நீ தடுக்கலையா?”

“தடுத்தா நிற்கிற ஆளா எங்க வீட்டுல உள்ளவங்க? ம்கூம்.. அவங்க வீட்டுல தாலியைக் கேட்டு வந்தாங்க. பையனைக் கூட்டிட்டு வாங்க தர்றேன்னு அவங்க அம்மாகிட்டச் சொல்லிட்டேன். உடனே முடிச்சிரணும்னு நினைச்சாங்களோ என்னவோ, அன்னைக்கு சாயங்காலமே வசீகரனைக் கூட்டிட்டு வந்து கேட்டாங்க. மத்தவங்க அனுமதியோட ரூம்குள்ள கூட்டிட்டுப் போய் தாலியைக் கழட்டிக் கொடுத்துட்டேன்.”

“பூரணி!”

“ஏய்! ரொம்ப ஷாக்காகாத. எப்படியும் தாலி கேட்பாங்கன்னு தெரிந்தேதான், அவங்க வர்றதுக்கு முன்னக்கூட்டியே அரை பவுன்ல தங்கத்தாலி வாங்கி, மஞ்சள் கயிறுல கட்டி வச்சிருந்தேன். அப்புறமென்ன சின்ன சாமிப்படம் வச்சி திரும்பவும் தாலிகட்ட வச்சிட்டேன்” என்றாள் கூலாக.

“அடிப்பாவி!” என வாயில் விரல் வைக்க,

வசீகரன் மீதான என்னோட உரிமையை பொதுவுல வேணும்னா விட்டுக்கொடுத்திருக்கலாம் சண்மு. ஆனா, எனக்குள்ள இதுவரை விட்டுக்கொடுத்ததில்லை. என் அந்தரங்கம் என் வசீகரன் மட்டுமே!” என்றவள் குரலில் அவ்வளவு உறுதி.

தோழியின் மனம் புரிந்தவளாய் ஆறுதலாய் அணைத்து, “அப்புறம்?” என்றாள்.

அன்றைய நிலையில் கணவனைக் கடைசியாய்ப் பார்த்த நினைவு வர, பழைய தாலியை அவன் கையில் கொடுத்து, “ஐ லவ் யூ வசீகரா. இந்தக் குட்டிக்கண்ணாவை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்.” கட்டியணைத்து நெற்றியில் இதமாக முத்தமிட்டு, “இதை அம்மாகிட்டக் கொடுத்துட்டு, அம்மா சொல்றதைக் கேட்டு நடந்துக்கணும். ம்.. போங்க” என்றாள்.

அவளை விட்டு சற்றே நகர்ந்தவன் என்ன நினைத்தானோ திரும்பவும் அவள் முன் வந்து, நெற்றி முத்தத்தோடு நில்லாமல், இரு கன்னத்திலும் முத்தமிட்டு “சீக்கிரம் வீட்டுக்கு வந்திரு” என்று கிளம்பிவிட்டான். அவனாய் கொடுத்த முத்தத்தில் அதிர்வுதான் பூரணிக்கு! ஆனால் இம்சையான அதிர்வு!

“ஹான்!” என்ற தோழயின் குரலில் சிறிதாக வெட்கம் எழுந்தாலும் அதை மறைத்து, அதைத் தோழி கண்டுகொண்டது தெரிந்தாலும் கண்டுகொள்ளாது, “என்னோட வித்தியாசமான கல்யாணத்தை நீ வந்ததும் சொல்லத் தோணலை சண்மு. அந்தப் பணத்துல வாங்கின வீடுன்றதால இங்கயிருக்கக்கூடப் பிடித்ததில்லை. வேற வழியில்லையே! இங்க வந்த பிறகு எதாவது செய்தால் நல்லாயிருக்கும்னு தோணி, உன்கிட்ட உங்கப்பாகிட்டன்னு பேசி மெடிக்கல் ஷாப்பும் வச்சிட்டோம்” என்றாள்.

“ஏன் அண்ணி? அவள்கிட்டக் கெட்ட பெயர் எடுத்தீங்க? உண்மையைச் சொல்லியே அனுப்பியிருக்கலாமே?” என்றவன் குரலில் ஆற்றாமை பொங்கி வழிந்தது. தனக்காக என்று இவர்கள் பார்த்திருக்க, தான் சுயநினைவில்லாமல் இருந்ததை என்னவென்று சொல்வது!

“உண்மையைச் சொல்லியிருந்தா உங்களைவிட்டுப் போயிருக்கமாட்டா வசீ.”

“அண்ணீ!”

“ஆமா கண்டிப்பா போயிருக்கமாட்டா. இனிமேல் ஜாக்கிரதையா இருந்துக்குறேன்னு சொல்லியிருப்பா. புருஷன் நீ பக்கத்துல இருக்கும்போதே, உன் மனைவியை அவர் தப்பா பார்க்கிறார்னா, அதுக்குமேல அந்த வீட்டுல அவளுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும் சொல்லு? அதான் ரூடா பிஹேவ் பண்ணி அனுப்பினேன்.”

“உங்களோட இந்த உதவிக்கு, உதவின்னு கூட சொல்ல முடியாது. ஒருத்தியோட நல்லதுக்காக அவள் உறவையே வெட்டிவிட்ட தியாகத்துக்கு, எத்தனை நன்றி சொன்னாலும் தகும் அண்ணி. ஒரு தாய் இடத்திலிருந்து நீங்க செய்திருக்கீங்க. உண்மையிலேயே உங்களை மருமகளாகப் பெற எங்க குடும்பம் கொடுத்து வச்சிருக்கு” என்றவன் குரல் கரகரத்திருக்க மனமெல்லாம் நன்றியுணர்வு மட்டுமே!

“பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம் வசீ. அவள் எனக்குத் தங்கை முறை. என் தங்கச்சிக்கு ஒண்ணுன்னா பார்த்துட்டு இருப்பேனா? இப்ப உங்களுக்குக் குணமாகிருச்சி. இனியாவது பூரணிக்கு ஒரு நல்ல லைஃப் கிடைக்கும்னுதான் எல்லாத்தையும் சொன்னேன். அவளை விட்டுராதீங்க வசீ” என்றாள் கெஞ்சலாக.

“விடுறதாயிருந்தா உங்ககிட்டக் கேட்டிருக்கவே மாட்டேன் அண்ணி. அதை விடுங்க. இந்த அண்ணன் தம்பி அதிகமா உறவாடிக்கிறதில்லையே என்ன காரணம்?”

“அதுவா? ஏற்கனவே தனசேகரன் மாமா கவுன்சிலர் ஆகணும்னு நினைச்சிருந்திருப்பார் போல. அதை வெளியில சொல்லலை. ஒரே கட்சின்றதால சீட்டை தம்பிக்குக் கொடுத்ததும் உள்ளுக்குள்ளேயே கோபம் இருந்திருக்கு. அந்தக் கோபம் உனக்கு பஞ்சாயத்து பேசினப்ப பதினைந்து லட்சம்கிட்டக் காலிபோல.”

“அந்தப் பொண்ணு குடும்பத்துக்குக் கேட்கவே ஆளில்லைன்னீங்க? இப்ப என்னடான்னா எவனெவனோ வந்து பஞ்சாயத்துன்ற பெயர்ல கோர்ட் கேஸ்னு நிற்கிறான்னு உங்கப்பா பொண்ணு பார்த்துக் கட்டிவச்ச அண்ணனைக் கேள்வி கேட்க...”

“நான் என்னடா பண்ணுனேன்? வேணும்னு செய்த மாதிரி சொல்றன்னு... பேச்சி வார்த்தை முற்றிப்போய் ராமர் லட்சுமணனுக்குள்ள பிரிவு வந்திருச்சி. சேர்ந்திருந்தா... ஷப்பா.. நினைத்தேப் பார்க்க முடியலை” என்றாள் மலைப்பாக.

“பிரிவை நிரந்தரமாக்கிரலாம் அண்ணி” என்றவன் மனது அப்பொழுதே என்ன செய்யலாமென்று யோசிக்க ஆரம்பித்தது.

“பணம் வாங்கினதுக்கும் பூரணிக்கும் சம்பந்தம் இருக்காது வசீ. அவளைத் தப்பா...”

“தெரியும் அண்ணி. அப்புறம் அண்ணி அப்பா அப்படிச் செய்தது கடைசிவரை அவளுக்குத் தெரியவர வேண்டாம். அது காலத்துக்கும் அவளை வாழவிடாது. அந்த உறுத்தலே எங்களைச் சேரவும் விடாது” என்றான்.

“நம்ம மூணுபேரைத் தவிர யாருக்கும், எந்த காலத்திலும் தெரியவராது வசீ. இது என்மேல சத்தியம்!” என்று தன் தலையில் கைவைத்தாள்.

“அச்சோ அண்ணி! நான் உங்க வார்த்தையை நம்புறேன். அதுக்கெதுக்கு சத்தியம்லாம்.”

“உங்க நம்பிக்கைக்கு தேங்க்ஸ். அடுத்து என்ன செய்யப்போறீங்க?”

“வெய்ட் அன்ட் வாட்ச் அண்ணி” என்று அட்டகாசமாகச் சிரித்தவனுக்கோ, இப்பொழுது நினைத்தாலும் தன் அப்பா மீது கோபம் வருகிறதுதான். இருந்தாலும் பொறுமை காப்பதற்குக் காரணம் அவனின் மிஸஸ்.பரிபூரணி வசீகரன்!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“அதுக்குப்பிறகு உன் வசீகரனைப் பார்த்தியா பூரணி?”

“இப்ப ஒரு கல்யாணத்தை நிறுத்தப்போனேனே அது யாரோடதுன்னு நினைச்ச?” என்றவள் கண்கள் சந்தோஷத்தில் பளபளத்தது.

“அது உன் வீட்டுப் பக்கத்துல... ஏய்! மாப்பிள்ளை வசீகரனா? அடிப்பாவி! அதுக்காகதான் அவ்வளவு துடிச்சியா?” என்றாள் வேகக்குரலில்.

“அதுவும் ஒரு காரணம். என்னை மாதிரி இன்னொரு பெண் பாதிக்கக்கூடாதுன்ற எண்ணத்திலும்தான் சண்மு.”

“புரியுது பூரணி. கடைசிவரை இப்படியே இருக்கப்போறியா என்ன? உனக்குன்னு வே...”

“சண்மு ப்ளீஸ். வேண்டாம். அதுக்குமேல ஒரு வார்த்தை சொல்லிராத. அதைக் கேட்டுக்கேட்டு... ஐயோ!” என காதை மூடிக்கொண்டவள், “ஒவ்வொருத்தனையும் பற்றிச் சொல்லும்போது அப்படியே... ப்ச்.. என் வீட்டுல இருக்குறவங்களுக்குதான் என் மனசு தெரியாது. தெரிந்தாலும் அப்படித்தான் செய்வாங்கன்றது வேற. இவ்வளவு சொல்லியும், நீயும் அ...”

“மன்னிச்சிக்க பூரணி. உன் நிலை தெரிந்தும் அப்படிப் பேசியிருக்கக்கூடாது. ரொம்பவே சாரி” என்று மனதார மன்னிப்புக் கேட்டாள்.

“ஒண்ணுக்கு இரண்டு முறை என் வசீகரனைக் கல்யாணம் செய்துருக்கேன். முதல்முறை ஊரார் பார்க்க! இரண்டாம் முறை உற்றவனுடன் மட்டும்! யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு வாய்ப்பு?”

“ஒருவேளை உன் வசீகரனுக்குக் குணமாகி உன்னைத்தேடி வந்தா என்ன பண்ணுவ?”

“சாத்தியமில்லாத ஒண்ணைக் கற்பனையில் கூட நினைக்குறதில்லை சண்மு. இப்படி ஒருத்தி அவங்க வாழ்க்கையில் இருந்தாள்னு யாரும் சொல்லியிருக்கமாட்டாங்க.” மரத்துப்போன குரலில் உரைத்தவள், “அவங்க குணமாகணும் என்பதுதான் என்னுடையத் தினப்படி வேண்டுதல். அப்படிக் குணமானதும் இன்னொரு கல்யாணம் செய்து பொண்டாட்டி பிள்ளைன்னு சந்தோஷமாயிருந்தா இன்னும் சந்தோஷம்தான்.”

எந்த அர்த்தத்தில் சொல்கிறாள் என்று அவள் முகத்தையேப் பார்த்திருந்த சண்முகி, “தியாகியாகப் போறீங்களோ?” என்றாள் நக்கலாக.

“இல்லை சண்மு. குணமாகி ஏதோ ஒரு கட்டத்துல அவங்களே என்னைத்தேடி வந்தாலும் நாங்க சேர்ந்து வாழ்றது முடியாத ஒண்ணு. எனக்காக அவங்க வாழ்க்கைப் பாழாகக்கூடாது” என திடமாக உரைத்தாள்.

“ஹ்ம்.. அவ்வளவு லவ்ஸ்.”

“ம்.. நிறைய” என்றவள் கண்களில் வசீகரனுக்கான வசீகரமே!

தோழியை இதுவரைப் பார்த்தது போலில்லாமல், ஒருவித தேஜஸ் அவள் கணவனை நினைக்கையில் வருவதை உணர்ந்த சண்முகிக்கு, ‘இவளின் காதல் கிடைக்கப்பெற்றவன் அதிர்ஷ்டசாலி. இந்நேரம் குணமாகியிருந்தா, சீக்கிரமே வந்து உங்க மனைவியை அழைச்சிட்டுப்போங்க வசீகரன்! அப்பதான் உங்க வாழ்க்கை வெளிச்சமாகும்’ என்றெண்ணியவள் சூழ்நிலையைக் கலைக்கும் பொருட்டு, “வேலை நேரத்துல கற்பனைக்குப் போய் டூயட் போட்டுராதடி. நம்ம கடை தாங்காது” என்ற தோழியை முறைக்க, “ஓய் என்ன முறைப்பு? அது சரி மச்சானோட போட்டோ இருக்கா?” என கேட்டாள்.

“மச்சானா? ஏய்! அண்ணா சொல்லு. ஃப்ரண்டோட ஹஸ்பண்டை அண்ணாதான் சொல்வாங்க?”

“எல்லார் மாதிரியும் நானும் கூப்பிட்டா என்னடி கிக் இருக்கு. இதுல கிடைக்கும் பார் கிக்கோ கிக்” என்று கண்ணடிக்க,

சட்டென்று ஐஸ்வர்யா நினைவு வந்தது பூரணிக்கு. அவளும் இப்படித்தான் மற்றவர்கள் போல ஏன் சொல்லணும் என கேட்பவளாகிற்றே! ‘சே.. அவங்க நினைப்பு இப்ப எதுக்கு’ என்று அதை உதறி, “உன்னை வச்சேன்னா பாரு” என்று தோழியை அடிக்க, அவ்விடம் சற்று கலகலப்பாய் மாறிப்போனதோ!

“டேய் வசீண்ணா! என்ன சொல்லு எங்கண்ணி சூப்பர்தான்” என்றபடி வந்தான் தினகரன்.

“தேங்க்ஸ்டா தினா. உன் அண்ணியாதான் இருக்காளா? இல்லை மலையரசன் பொண்ணா இருக்காளான்ற சந்தேகம் போயிருச்சி.”

“உனக்கு அவங்களைக் கல்யாணம் செய்தது சின்னதாகூட நினைவில்லையாண்ணா?”

‘ம்கூம்’ என்று வசீகரன் தலையசைக்க, “உங்க கல்யாணத்தோட நான் இங்கயில்ல. கோவில்ல வச்சிதான் முதல்முறை பார்த்தேன். முதல்ல பயந்தவங்க உறவுன்னு சொன்னதும் உரிமையா பேசினாங்க. எங்க வீட்டுல உள்ளவங்க அவங்களை அலட்சியம் செய்தப்ப, சத்தமில்லாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாங்களே தவிர, தன் எதிர்ப்பை முகத்தில் கூட காண்பிக்கலை.”

“உன்னைவிட்டு ஏன் போனாங்கன்னு வீட்டுல கேட்டதுக்கு, அண்ணியை அவங்க தப்பா சொன்னாலும், எனக்கு இதுவரை அப்படித் தோன்றியதில்லை. நிஜக்காரணம் தெரியலைனாலும், நம்ம குடும்பத்தைப் பற்றிதான் நமக்குத் தெரியுமே வசீண்ணா. ஸ்வாதி அண்ணி அம்மாகிட்ட உளறியதைக் கேட்ட பிறகுதான் நடந்தது தெரிஞ்சது. எனக்கென்னவோ இதையெல்லாம் தாண்டி வேறெதோ இருக்குன்னு தோணுது” என்றான்.

தம்பியின் கண்டுபிடிப்பில் சற்று அதிர்ந்தாலும், “கண்டுபிடிக்கலாம்டா” என்றவன், “ஆமா பரியை விசாரிக்கச் சொன்னா கடைசியில் வேற யாரையோ வம்பிழுத்துட்டிருக்க?” என்று பேச்சை மாற்றினான்.

“ஐயோ வசீண்ணா! அவளா? அவ்வ்வ்.. என்ன வாய் பேசுறா. நான் மரியாதையா பேசுறேன். அவள் என்னை வாடா போடா சொல்றா.”

“டேய்! அவளென்ன சாதாரண விஷயத்துக்கா சண்டை போட்டா? நீ பண்ணன வேலை அப்படி.”

“ஹிஹி அது கொஞ்சம் சர்ச்சைக்குரியதுதான். அதுக்கு இந்தளவு கூட கோபப்படலைனாதான் தப்பு. அண்ணிக்கு ஒண்ணுன்னா மத்தவங்களை ஒருவழி பண்ணிருவா போலண்ணா.”

“தினா! நீ கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு கலராயிருக்கணும்னு எதாவது பாலிஸியிருக்கா?” என்றான் திடீரென்று.

“ஏன் சம்பந்தமேயில்லாம பேசுற? இருந்தாலும் மனசுக்குப் பிடிக்க முகலட்சணம் போதும்ணா. கலர், பேரழகு மாதிரிலாம் தேவையில்லை.”

“பேசாம அந்தப்பொண்ணை கல்யாணம் செய்துக்கோடா” என்றான் பட்டென்று.

“என்னது?” மொத்த அதிர்வையும் முகத்தில் காட்டி, பின் சத்தமாகச் சிரித்தவன், “காமெடி பண்ணாத வசீண்ணா. ஒருத்தன் தனியாயிருந்தா கோர்த்துவிடப் பார்க்கிறதே உங்களை மாதிரி ஆளுங்களுக்கு வேலையா போச்சி” என்றான்.

“நான் சீரியஸா பேசுறேன் தினா” என்றான் குரலில் அழுத்தத்தைக் கொடுத்து.

“சரிண்ணா. ஏன் இந்தத் திடீர் எண்ணம்? அதுவும் நம்ம வீட்டைப்பற்றித் தெரிந்தும்?” என்று யோசனையாக நிறுத்தினான்.

“நீ அவளை நல்லா பார்த்துப்ப தினா. இதுவரை அவளுக்கு வந்த நல்ல வரனையெல்லாம் தட்டிவிட்டிட்டுருக்கா. அதுவும் பரிக்காக” என்றான்.

“அவளே வேண்டாம் சொல்றாளா? அதுவும் அண்ணிக்காக. ஏன்?”

“நட்பு என்ற மூன்றெழுத்துக்காக!”

“நட்புக்காகவா! ஆச்சர்யம்தான்ணா.”

“ம்.. நட்புக்காக மட்டுமே! இன்னைக்கு நீ போய்ப் பேசினதாலதான், எங்க கல்யாண விஷயம் அவளுக்குத் தெரியும்னு சண்டை போட்டது பொய்.”

“அப்புறம்” என்று ஆர்வமானான் தினகரன்.

“என்னை விட்டுப்போன கொஞ்ச நாள்லயே தெரியும்.”

“அப்புறம் ஏன் தெரியாத மாதிரி நடிக்கணும்? அதைவிட இதெப்படி உனக்குத் தெரியும்?”

“மிஸ்டர்.சண்முக சுந்தரம்! சண்முகியோட அப்பா! எங்க பஞ்சாயத்தெல்லாம் முடிந்து இந்த ஊர் வந்ததும், சேர்ந்து மெடிக்கல் வைக்கலாம்ன்ற தன்னோட ஐடியாவைத் சண்முகிகிட்டச் சொல்ல, அவள் அவங்க அப்பாகிட்டச் சொல்ல, அவருக்கும் அது சரின்னு பட விசாரிச்சு சொல்றேன்னு முடிச்சிட்டார்.”

“அது சம்பந்தமா மிஸ்டர்.மலையரசன் கிட்டப் பேசிப் பார்த்தப்பதான் பரியோட நிலையே தெரிஞ்சிருக்கு. பொண்ணு விஷயத்துல இப்படியா செய்வீங்கன்னு திட்டிட்டு வந்தவர், வீட்டுல வந்து பொண்ணுகிட்ட சொல்ல, தோழிகிட்டக் கேட்கப்போறேன்னு நின்னவளைத் தடுத்து சமாதானப்படுத்தி, பரி இருக்கிற ஏரியாவுல கொஞ்சம் தள்ளி வாங்கிப்போட்ட நிலத்தில் வீடு கட்டிக் குடி வந்து, அவர் மூலமாவே பேங்க் லோன் போட்டு, அப்பதான் ஆரம்பிக்கவிருந்த ஹாஸ்பிடல் பக்கத்துல மெடிக்கல் வச்சிக்கிட்டாங்க.”

“சண்முகிக்காக அவங்க அப்பா கொண்டு வந்த சம்பந்தமெல்லாம் தட்டித்தட்டிப் போகவும் சந்தேகம் வந்து விசாரிச்சப்ப, அதுக்கு மகள்தான் காரணம்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கு. பொண்ணு கருப்பாயிருக்கிறதால, குறிப்பிட்ட வயசு தாண்டினா மாப்பிள்ளை அமையுறது கஷ்டம்ன்றது பொது விதி மாதிரி. அதில் அவருக்குப் பயம். ஏன் இப்படி செய்யுறன்னு பொண்ணுகிட்ட அவர் நேரடியா கேட்டதுக்கு, பூரணிக்கு எதாவது நல்லது நடக்கட்டும்பா. அப்புறமா நான் முடிச்சிக்குறேன்னு சொல்லியிருக்கா. அம்மா இலலாத பொண்ணு வேற. எப்படிக் கரையேத்துறதுன்னு அவர் யோசிக்க, அதுக்கு அவசியமே இல்லைன்னு பிடிவாதமாயிருக்காளாம்.”

“அவங்கப்பா பொண்ணை நினைச்சி ரொம்ப கவலைப்படுறார். அதுக்குக் காரணம் தான்தான்னு தெரியாம சண்முகி சொல்ற, மாப்பிள்ளை அமையலைன்ற பொண்ணை நம்பிட்டிருக்கா உன் அண்ணி. முதல்ல அந்தப் பொண்ணுக்கு எதாவது நல்லது செய்து சண்முக சுந்தரம் சார் மனசைக் குளிர வைக்கணும். அதுதான் அவங்க செய்த எல்லாத்துக்குமான நன்றிக்கடன்னு தோணிச்சிதுடா. முதல்ல உன்னை யோசிக்கலை. இப்ப மனசுல தோணினதும் கேட்டுட்டேன். பிடிக்கலைன்னாலும் வற்புறுத்தமாட்டேன் தினா. நான் வேற பார்க்கிறேன்” என்றான்.

இவ்வளவு பேசியும் தம்பியானவன் வாய் திறக்காதிருக்க, ஏனென்று கேட்டுவிட்டான் வசீகரன். அப்பொழுதும் தம்பியின் அமைதி தொடர, “ஏன்டா? பொண்ணு கருப்பாயிருக்காள்னு பார்க்குறியா? இல்ல படிப்பும் வசதியும் கம்மின்னு யோசிக்குறியா?" என்றான் பதற்றமாக.

அவனைப் பொருத்தவரை தினா என்றால் சண்முகியை நன்றாகப் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை. எந்த கெட்டபழக்கமும் அவனுக்குக் கிடையாது. மருத்துவருக்கே உரிய பொறுமைசாலித்தனம் அவனிடமுண்டு. அதனாலேயே கேட்டுவிட்டான். இன்னொரு மறைமுக காரணம், மனைவியின் கஷ்டகாலத்தில் துணையிருந்தவளை, கடைசிவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு தனக்கிருப்பதாய் எண்ணினான்.

“நான் கலராயிருக்கிறதால வர்றவ கருப்பாயிருந்தால் தப்பில்லை வசீண்ணா. டாக்டர் நர்ஸ் கிசுகிசுவை மாற்றி, டாக்டர்-மெடிக்கல்காரி! இடையே நடப்பது என்ன? அப்படின்ற கிசுகிசுவை ஓட விடலாம். எப்படி வசதி?” என்று கண்ணடித்துச் சிரிக்க,

“தினா! நிஜமா சம்மதிக்குறியா?” என்றவன் குரலில் அளப்பறிய சந்தோஷம்.

“ஆமாடா அண்ணா. எனக்குப் பிடிச்சிருக்கு. அவள் நோ சொன்னாலும் எனக்குதான் போதுமா” என்றான் புன்னகை மாறாது.

“தேங்க்ஸ்டா தம்பி. பெரிய மனச்சுமை இறங்கின மாதிரியிருக்கு. இருந்தாலும் வீட்டுல சம்மதிக்கமாட்டாங்களே? இப்பவே டாக்டர் பையனுக்கு ஹாஸ்பிடல் ஓனரா இருக்கிற மாதிரிப் பொண்ணா பார்க்கிறாங்க.”

“அவங்க அங்க பார்க்கட்டும். நான் சண்முகியைப் பார்க்கிறேன்” என்றான் கூலாக.

“தினா சீரியஸ்லி இதனால நிறைய பிரச்சனை வரும். உன்னைவிட சண்முகிக்கு அதிகம் வரும். அதையெல்லாம் தாண்டிதான் உங்க கல்யாணம் நடக்கும்.”


“உன் அனுபவம் எனக்கு முன்ன இருக்குதே வசீண்ணா. அது ஹெல்ப் பண்ணும். நான் பார்த்துக்குறேன் ப்ரோ. பி கூல்” என்று தோளில் கைபோட... “வசீ ஹேப்பி ப்ரோ” என்றான் வசீகரன்.
 
Last edited:

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top