- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
10
“அம்மா பணம் கொடுக்கச் சொன்னாங்க சித்தி” என்று ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை நீட்டினான்.
அதை வாங்காமல் அவன் அளவு முட்டிபோட்டு அமர்ந்தவள், “உங்கம்மா கொஞ்சம் முன்னாடி நிறைய கொடுத்தாங்கடா செல்லம். சித்திகிட்ட பணம் இருக்குது பாரு” என்று தன்னிடமுள்ளதைக் காண்பித்து, “வேலைக்குப் போனப்ப வாங்கின சம்பளத்துல கொஞ்சமே கொஞ்சம் சித்திகிட்டயும் இருக்கு. நீ வச்சிருக்கிற பணத்தை உங்கம்மாகிட்ட திருப்பிக் கொடுத்து, சித்தி இங்க வாழத்தான் வந்தாங்களாம். அதுவே இல்லைன்றப்ப, இந்தப் பிச்சைப்பணம் வேண்டாமாம்.. அதோட சித்தப்பாவுக்கு இப்படி விலை வைக்க வேண்டாம்னு நான் சொன்னதா சொல்லிரு” என்றவள் கண்கள் கலங்க திரும்பி கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
“சரிங்க சித்தி. நீங்க எப்ப வருவீங்க?”
“வரணுமா என்ன?”
“சித்தப்பா இருக்கிற இடத்துலதான சித்தி இருக்கணும். அப்பாவும் அம்மாவும் அப்படித்தான இருக்காங்க?” என்றான் கேள்வியாய்.
“நீ ரொம்ப அறிவுடா செல்லம். ஆனா பாரு இந்த வீட்டுல உள்ளவங்களுக்கு அது தெரியலை. நிறைய படி. அதைவிட நல்லவனா வளரு. சரியா?”
“நான் எப்பவும் குட் பாய்தான் சித்தி. சரி வர்றேன்” என்று நகரப்போனவனை நிறுத்தி, “சி..சித்தப்பாவை நல்லா பார்த்துக்கணும். சித்திக்காக செய்வியா?” என்றாள் கெஞ்சலாக.
“செய்யுறேன் சித்தி” என்றதும் அவன் தலைவருடி, “போ” என்றனுப்பி நிற்காது நடந்துவிட்டாள்.
அவள் செல்வதை அழுதபடி பார்த்திருந்த ஐஸ்வர்யாவின் தோளணைத்த கணவன் மார்பில் சாய்ந்து, “பாவம் செய்துட்டேன்ங்க. பேசக்கூடாததைப் பேசி அவளை...”
“ஐஸ்மா! அதைப் பாவம்னு ஏன் சொல்ற? நீ செய்தது ஆயிரம் புண்ணியத்திற்குச் சமம். அந்தப் பொண்ணை பாதுகாத்திருக்க. இதைவிட அவளுக்கு யாரும் நல்லது செய்திட முடியாது. அழுதுட்டுப் போனாலும் வேறுவித தொந்தரவுகள் இல்லாமல் நிம்மதியாயிருப்பாள்.” மனைவியின் செயலில் தவறில்லை என்று ஆறுதலுரைத்தான்.
“உங்க தம்பி இல்லாம அவள் எப்படிங்க நிம்மதியாயிருப்பா?”
“காலம் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டதுமா. அவளும் மாறி வேற வாழ்க்கையை ஏத்துப்பா” என்றான் யதார்த்தவாதியாய்.
“இன்னொரு வாழ்க்கையா? அவள் வரையில் அது கஷ்டம்தான் தோணுது. வசீ மேல அவ்வளவு நேசம் அவளுக்கு. எங்கயிருந்தாலும் அவள் நல்லாயிருந்தால் போதும்” என்றாள் மனதார.
“வீட்டைவிட்டு வெளியில வந்த பிறகு என்னாச்சி பூரணி?” தோழியின் துக்கத்தில் மனம் வருந்த கேட்டாள் சண்முகி.
“என்னாகும்.. பஞ்சாயத்துதான். அங்கே நடந்த எதையும் வீட்டுல சொல்லலை. அவங்கப்பா வந்தவர் தன்னோட பையன் மனநிலை சரியில்லாதவன்னு உளற, எங்கப்பா அதைப் பிடிச்சிக்கிட்டு தனக்காகப் பேச ஆள் கூட்டிட்டு வந்து அவங்க வீட்டுல பேசன்னு கடைசியில பதினைந்து லட்ச ரூபாய் பணமா கொடுத்திருங்க. இல்லைன்னா போலீஸ்ல போயி பேசிக்கலாம்னு எங்கப்பா கூட்டிட்டு வந்த ஆள் பேச...”
“அங்க அவங்க சைட் வக்கீல்கிட்டப் பேசி கவுன்சிலர் பதவியில இருக்கும்போது கேஸ் அது இதுன்னா பெயர் கெட்டுப் போகும். அதோட பொண்ணு விஷயம்ன்றதால பதவி விலக வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன பண்றதுன்னு சொல்ல, வேறு வழியில்லாமல் பனிரெண்டு லட்சம் பேசி கமுக்கமா வெளில தெரியாம விஷயத்தை முடிச்சிட்டாங்க. பஞ்சாயத்து வந்தவங்களுக்குக் கொடுத்த இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து, அவுட்டோர் ஏரியாவா பார்த்ததுல இங்க கிடைக்க வீட்டோட சேர்ந்த இடமா வாங்கி கோழிப்பண்ணை வைத்து சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டார்.”
“அவரால எப்படி பூரணி முடிந்தது? அவர் பொண்ணு நீன்றது கூடவா ஞாபகமில்லை? கிட்டத்தட்ட உன்னை வைத்து சம்பாதிச்சிருக்கார். நீ தடுக்கலையா?”
“தடுத்தா நிற்கிற ஆளா எங்க வீட்டுல உள்ளவங்க? ம்கூம்.. அவங்க வீட்டுல தாலியைக் கேட்டு வந்தாங்க. பையனைக் கூட்டிட்டு வாங்க தர்றேன்னு அவங்க அம்மாகிட்டச் சொல்லிட்டேன். உடனே முடிச்சிரணும்னு நினைச்சாங்களோ என்னவோ, அன்னைக்கு சாயங்காலமே வசீகரனைக் கூட்டிட்டு வந்து கேட்டாங்க. மத்தவங்க அனுமதியோட ரூம்குள்ள கூட்டிட்டுப் போய் தாலியைக் கழட்டிக் கொடுத்துட்டேன்.”
“பூரணி!”
“ஏய்! ரொம்ப ஷாக்காகாத. எப்படியும் தாலி கேட்பாங்கன்னு தெரிந்தேதான், அவங்க வர்றதுக்கு முன்னக்கூட்டியே அரை பவுன்ல தங்கத்தாலி வாங்கி, மஞ்சள் கயிறுல கட்டி வச்சிருந்தேன். அப்புறமென்ன சின்ன சாமிப்படம் வச்சி திரும்பவும் தாலிகட்ட வச்சிட்டேன்” என்றாள் கூலாக.
“அடிப்பாவி!” என வாயில் விரல் வைக்க,
வசீகரன் மீதான என்னோட உரிமையை பொதுவுல வேணும்னா விட்டுக்கொடுத்திருக்கலாம் சண்மு. ஆனா, எனக்குள்ள இதுவரை விட்டுக்கொடுத்ததில்லை. என் அந்தரங்கம் என் வசீகரன் மட்டுமே!” என்றவள் குரலில் அவ்வளவு உறுதி.
தோழியின் மனம் புரிந்தவளாய் ஆறுதலாய் அணைத்து, “அப்புறம்?” என்றாள்.
அன்றைய நிலையில் கணவனைக் கடைசியாய்ப் பார்த்த நினைவு வர, பழைய தாலியை அவன் கையில் கொடுத்து, “ஐ லவ் யூ வசீகரா. இந்தக் குட்டிக்கண்ணாவை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்.” கட்டியணைத்து நெற்றியில் இதமாக முத்தமிட்டு, “இதை அம்மாகிட்டக் கொடுத்துட்டு, அம்மா சொல்றதைக் கேட்டு நடந்துக்கணும். ம்.. போங்க” என்றாள்.
அவளை விட்டு சற்றே நகர்ந்தவன் என்ன நினைத்தானோ திரும்பவும் அவள் முன் வந்து, நெற்றி முத்தத்தோடு நில்லாமல், இரு கன்னத்திலும் முத்தமிட்டு “சீக்கிரம் வீட்டுக்கு வந்திரு” என்று கிளம்பிவிட்டான். அவனாய் கொடுத்த முத்தத்தில் அதிர்வுதான் பூரணிக்கு! ஆனால் இம்சையான அதிர்வு!
“ஹான்!” என்ற தோழயின் குரலில் சிறிதாக வெட்கம் எழுந்தாலும் அதை மறைத்து, அதைத் தோழி கண்டுகொண்டது தெரிந்தாலும் கண்டுகொள்ளாது, “என்னோட வித்தியாசமான கல்யாணத்தை நீ வந்ததும் சொல்லத் தோணலை சண்மு. அந்தப் பணத்துல வாங்கின வீடுன்றதால இங்கயிருக்கக்கூடப் பிடித்ததில்லை. வேற வழியில்லையே! இங்க வந்த பிறகு எதாவது செய்தால் நல்லாயிருக்கும்னு தோணி, உன்கிட்ட உங்கப்பாகிட்டன்னு பேசி மெடிக்கல் ஷாப்பும் வச்சிட்டோம்” என்றாள்.
“ஏன் அண்ணி? அவள்கிட்டக் கெட்ட பெயர் எடுத்தீங்க? உண்மையைச் சொல்லியே அனுப்பியிருக்கலாமே?” என்றவன் குரலில் ஆற்றாமை பொங்கி வழிந்தது. தனக்காக என்று இவர்கள் பார்த்திருக்க, தான் சுயநினைவில்லாமல் இருந்ததை என்னவென்று சொல்வது!
“உண்மையைச் சொல்லியிருந்தா உங்களைவிட்டுப் போயிருக்கமாட்டா வசீ.”
“அண்ணீ!”
“ஆமா கண்டிப்பா போயிருக்கமாட்டா. இனிமேல் ஜாக்கிரதையா இருந்துக்குறேன்னு சொல்லியிருப்பா. புருஷன் நீ பக்கத்துல இருக்கும்போதே, உன் மனைவியை அவர் தப்பா பார்க்கிறார்னா, அதுக்குமேல அந்த வீட்டுல அவளுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும் சொல்லு? அதான் ரூடா பிஹேவ் பண்ணி அனுப்பினேன்.”
“உங்களோட இந்த உதவிக்கு, உதவின்னு கூட சொல்ல முடியாது. ஒருத்தியோட நல்லதுக்காக அவள் உறவையே வெட்டிவிட்ட தியாகத்துக்கு, எத்தனை நன்றி சொன்னாலும் தகும் அண்ணி. ஒரு தாய் இடத்திலிருந்து நீங்க செய்திருக்கீங்க. உண்மையிலேயே உங்களை மருமகளாகப் பெற எங்க குடும்பம் கொடுத்து வச்சிருக்கு” என்றவன் குரல் கரகரத்திருக்க மனமெல்லாம் நன்றியுணர்வு மட்டுமே!
“பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம் வசீ. அவள் எனக்குத் தங்கை முறை. என் தங்கச்சிக்கு ஒண்ணுன்னா பார்த்துட்டு இருப்பேனா? இப்ப உங்களுக்குக் குணமாகிருச்சி. இனியாவது பூரணிக்கு ஒரு நல்ல லைஃப் கிடைக்கும்னுதான் எல்லாத்தையும் சொன்னேன். அவளை விட்டுராதீங்க வசீ” என்றாள் கெஞ்சலாக.
“விடுறதாயிருந்தா உங்ககிட்டக் கேட்டிருக்கவே மாட்டேன் அண்ணி. அதை விடுங்க. இந்த அண்ணன் தம்பி அதிகமா உறவாடிக்கிறதில்லையே என்ன காரணம்?”
“அதுவா? ஏற்கனவே தனசேகரன் மாமா கவுன்சிலர் ஆகணும்னு நினைச்சிருந்திருப்பார் போல. அதை வெளியில சொல்லலை. ஒரே கட்சின்றதால சீட்டை தம்பிக்குக் கொடுத்ததும் உள்ளுக்குள்ளேயே கோபம் இருந்திருக்கு. அந்தக் கோபம் உனக்கு பஞ்சாயத்து பேசினப்ப பதினைந்து லட்சம்கிட்டக் காலிபோல.”
“அந்தப் பொண்ணு குடும்பத்துக்குக் கேட்கவே ஆளில்லைன்னீங்க? இப்ப என்னடான்னா எவனெவனோ வந்து பஞ்சாயத்துன்ற பெயர்ல கோர்ட் கேஸ்னு நிற்கிறான்னு உங்கப்பா பொண்ணு பார்த்துக் கட்டிவச்ச அண்ணனைக் கேள்வி கேட்க...”
“நான் என்னடா பண்ணுனேன்? வேணும்னு செய்த மாதிரி சொல்றன்னு... பேச்சி வார்த்தை முற்றிப்போய் ராமர் லட்சுமணனுக்குள்ள பிரிவு வந்திருச்சி. சேர்ந்திருந்தா... ஷப்பா.. நினைத்தேப் பார்க்க முடியலை” என்றாள் மலைப்பாக.
“பிரிவை நிரந்தரமாக்கிரலாம் அண்ணி” என்றவன் மனது அப்பொழுதே என்ன செய்யலாமென்று யோசிக்க ஆரம்பித்தது.
“பணம் வாங்கினதுக்கும் பூரணிக்கும் சம்பந்தம் இருக்காது வசீ. அவளைத் தப்பா...”
“தெரியும் அண்ணி. அப்புறம் அண்ணி அப்பா அப்படிச் செய்தது கடைசிவரை அவளுக்குத் தெரியவர வேண்டாம். அது காலத்துக்கும் அவளை வாழவிடாது. அந்த உறுத்தலே எங்களைச் சேரவும் விடாது” என்றான்.
“நம்ம மூணுபேரைத் தவிர யாருக்கும், எந்த காலத்திலும் தெரியவராது வசீ. இது என்மேல சத்தியம்!” என்று தன் தலையில் கைவைத்தாள்.
“அச்சோ அண்ணி! நான் உங்க வார்த்தையை நம்புறேன். அதுக்கெதுக்கு சத்தியம்லாம்.”
“உங்க நம்பிக்கைக்கு தேங்க்ஸ். அடுத்து என்ன செய்யப்போறீங்க?”
“வெய்ட் அன்ட் வாட்ச் அண்ணி” என்று அட்டகாசமாகச் சிரித்தவனுக்கோ, இப்பொழுது நினைத்தாலும் தன் அப்பா மீது கோபம் வருகிறதுதான். இருந்தாலும் பொறுமை காப்பதற்குக் காரணம் அவனின் மிஸஸ்.பரிபூரணி வசீகரன்!